09 ஜூன் 2019

நெகாராகூ வரலாறு

சுல்தான் அப்துல்லா முகமட் ஷா பேராக் மாநிலத்தின் 26-ஆவது சுல்தான் (தோற்றம்: 1842; மறைவு: 1922). இவர் தான் நம்முடைய தேசிய கீதமான நெகாராகூ பாடல் தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்தவர். இதுவும் ஒரு நீண்ட கதை. தொடர்ந்து படியுங்கள்.

1875-ஆம் ஆண்டில் பேராக் மாநிலத்தின் பிரிட்டிஷ் ஆலோசகராக ஜேம்ஸ் பர்ச் (British Resident JWW Birch) என்பவர் இருந்தார். அவர் பாசிர் சாலாக் எனும் இடத்தில் 1875 நவம்பர் 2-ஆம் தேதி மகாராஜா லேலே என்பவரால் கொலை செய்யப் பட்டார். படித்து இருப்பீர்கள்.

அந்தக் கொலைச் சம்பவத்தில் சுல்தான் அப்துல்லா முகமட் ஷாவிற்கும் தொடர்பு இருந்ததாகச் குற்றம் சாட்டிய ஆங்கிலேய அரசாங்கம் அவரைச் செய்சீல்ஸ் தீவிற்கு நாடு கடத்தியது. செய்சீல்ஸ் தீவு இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவிற்குக் கிழக்கே 1500 கி.மீ. தொலைவில் உள்ளது.

அந்தத் தீவில் 19-ஆம் நூற்றாண்டில் லா ரொச்சலே (La Rosalie) எனும் ஓர் இனிமையான பாடல் புகழ்பெற்று விளங்கியது. பிரெஞ்சு நாட்டுக் கவிஞர் பியரி ஜீன் பெராஞ்சர் (Pierre Jean de Beranger) என்பவர் எழுதிய பாடல். அந்தப் பாடலில் பிரெஞ்சு வரிகள்;

la rosalie assise par sa fenêtre
j’entend la pluie qui verse sur son dos
son petit coeur qui répose a son aise
et le mien qui n’a point de repos


செய்சீல்ஸ் தீவு மக்கள் மிகவும் விரும்பிய பாடல். அந்தப் பாடலின் புகழ், இந்தியப் பெருங்கடலையும் கடந்து தென்கிழக்கு ஆசியா வரை புகழ் பாடியது. அதே சாயலில் அந்தப் பாடல் பல நாடுகளிலும் புகழ் பாடியது.

முதலில் டச்சுக்காரர்கள் அவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டார்கள். இந்தோனேசியாவில் தெராங் புலான் (Terang Boelan - Indonesia) என்று மாற்றி அமைத்தார்கள்.

ஹவாய் தீவில் மாமுலா மூன் (Mamula Moon  - Hawaii) என்று மாற்றம் கண்டது. பின்னர் சீன மொழியிலும் மொழிபெயர்க்கப் பட்டது. 150 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதையைச் சொல்கிறேன்.

இந்தக் கட்டத்தில் தான் அதே அந்த செய்சீல்ஸ் தீவிற்கு 1877-ஆம் ஆண்டு சுல்தான் அப்துல்லா முகமட் ஷா நாடு கடத்தப் பட்டார். அங்கு இருந்த போது சுல்தான் அவர்கள் அந்தப் பாடலின் இனிமையில் ஈர்க்கப் பட்டார். அவரும் ஓர் இசைப் பிரியர். அந்தப் பாடல் அவர் மனத்தில் நீங்க இடம் பிடித்துக் கொண்டது.

அந்த இசைச் சுமையுடன் 1883-ஆம் ஆண்டு அவர் தாயகம் திரும்பினார். மலாயாவிற்கு வந்ததும் அதே அந்தப் பாடலை இறைவன் ’சுல்தானின் ஆயுளை நீட்டிப்பாராக’ (Allah Lanjutkan Usia Sultan) எனும் தலைப்பில் மலாய் மொழியில் மொழியாக்கம் செய்தார்.

அதையே பேராக் மாநிலக் கீதமாகவும் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். இன்று வரையில் அந்தப் பாடல் தான் பேராக் மாநிலக் கீதமாக விளங்கி வருகிறது. சரி.

1957-ஆம் ஆண்டு மலாயா சுதந்திரம் அடைந்த போது மலாயாவில் இருந்த 11 மாநிலங்களுக்கும் சொந்தமாக மாநிலக் கீதங்கள் இருந்தன. ஆனால் கூட்டரசு மலாயாவிற்கு மட்டும் தேசிய அளவில் ஒரு கீதம் இல்லை. அதாவது தேசிய கீதம்.

அப்போது கூட்டரசு மலாயாவின் முதலமைச்சராகத் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் இருந்தார். மலாயாவுக்கு ஒரு தேசிய கீதம் எழுதும் போட்டி உலகளாவிய நிலையில் நடத்தப் பட்டது. போட்டிக்கு 514 பாடல் பதிவுகள் உலகம் முழுமையில் இருந்தும் வந்தன. ஆனால் எதுவுமே சிறப்பாக, பொருத்தமாக அமையவில்லை.

உலகப் புகழ் கவிஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டது. அவர்களில் ஒருவர் ஜுபிர் சையிட் (Zubir Said). இவர் தான் பின்னாட்களில் சிங்கப்பூரின் தேசிய கீதமான மாஜுலா சிங்கப்பூரா பாடலை எழுதியவர். இவருடைய பாடலும் சரியாக அமையவில்லை.

கடைசியில் பேராக் மாநிலக் கீதத்தின் இனிமையான மென்மை பிடித்துப் போகவே அதையே நம் மலேசிய நாட்டின் தேசிய கீதமாக மாற்றி அமைத்தார்கள்.

1990-களில் நெகாராகூ கீதத்தின் இசை இந்தோனேசியா நாட்டுப் பாடலான தெராங் புலான் பாடலில் இருந்து மருவியது என இந்தோனேசியா பிரச்சினை பண்ணியது. பெரிய பிரச்சினையாகவும் உருவானது.

கடைசியில் வரலாற்றுச் சான்றுகள் முன் வைக்கப் பட்டன. அதோடு இந்தோனேசியா கப்சிப். அடங்கிப் போனது. இதுதான் நம்முடைய தேசிய கீதத்தின் வரலாறு. இது ஒரு வரலாற்றுத் தகவல்.

லா ரொச்சலே பாடலின் இந்தோனேசிய இசை மருவல் (தெராங் புலான்)

https://www.youtube.com/watch?v=9nwu3MB2Uwg

லா ரொச்சலே பாடலின் சீன காண்டனீஸ் மொழியாக்கம்

https://www.youtube.com/watch?v=7I0WBQ-gE_s








 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக