06 ஜூலை 2019

மாப்பசான்

உலகம் பார்த்த மாபெரும் சிறுகதை எழுத்தாளர் மாப்பசான் (Guy de Maupassant). 19-ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர். நவீனச் சிறுகதை இலக்கிய முன்னோடிகளின் தலைமகனாகக் கருதப் படுபவர். இன்று அவரின் நினைவு நாள்.



ஓர் அரிய மனிதரைப் பற்றி தெரிந்து கொள்வதில் சில நிமிட நேரம் ஒதுக்குங்கள்.

சிறுகதை உலகில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து மறைந்து விட்ட ஆளுமை இவரிடம் இன்றும் உள்ளது. இவர் ஒரு பிரெஞ்சு எழுத்தாளர். சின்ன வயதிலேயே மனநலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார்.

உலகச் சிறுகதை இலக்கியத்துடன் அதிகமாகத் தொடர்புப் படுத்தப்பட்ட பெயர் மாப்பசான். இவரின் முழுப்பெயர் Henri Rene Albert Guy de Maupassant.

1850 ஆகஸ்ட் மாதம் 5-ஆம் திகதி பிரான்ஸ் நார்மெண்டியில் பிறந்தவர். அப்பாவை 11 வயதிலேயே இழந்து அம்மாவின் அன்பில் மட்டுமே வளர்ந்தவர். இழக்கவில்லை. அப்பா விவாகரத்து செய்துவிட்டு போய் விட்டார்.




1876-ஆம் ஆண்டில் குஸ்தாவ் பிலாபெர் (Gustave Flauber) எனும் பிரெஞ்சு எழுத்தாளரின் நட்பு கிடைத்தது. அதுவே மாப்பசானின் எழுத்துலகப் பயணத்திற்குத் தூண்டுகோலாகவும் அமைந்தது.

1870-1871-ஆம் ஆண்டுளில் பிரான்ஸ் - புருசியா போர் (Franco-Prussian War). அதனால் மாப்பசான் படிப்பு தடைப்பட்டது. இவரும் அந்தப் போரில் ஒரு தன்னார்வலராக ஈடுபட்டார்.

பிரான்ஸ் நாட்டை நிலைகுலையச் செய்த அந்தப் போரைத் தன் கண்களால் கண்டவர். அதுவே அவரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. எழுதுவதற்கு ஊக்குவிப்பு செய்தது.

போருக்குப் பின்னர் பிரெஞ்சு கடற்படையில் ஓர் எழுத்தராகப் பணியில் அமர்ந்த மாப்பசான் நாளிதழ்களில் எழுதத் தொடங்கினார். அதுதான் அவரின் எழுத்துலகத் தொடக்கம்.

இந்தக் கட்டத்தில் எமிலி ஷோலா (Emile Zola); ஈவான் துர்கனிவ் (Ivan Turgenev) போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நட்பு கிடைத்தது.

போரில் கிடைத்த அனுபவம்; பின்னர் தன்னார்வப் பணியாளராகச் சேவை செய்த போது கிடைத்த அனுபவம்; இவற்றின் அடிப்படையில் கவிதைகள் எழுதினார்.

அந்தக் கவிதைகளில் சிருங்கார ரசத்தை ஏராளமாக அள்ளிக் கொட்டினார். அவரின் சிருங்காரமும் சிங்காரமும் பிரெஞ்சு இளம் சமுதாயத்தினரை வெகுவாகக் கவர்ந்தன.

அதன் பின்னர் சிறுகதை, நாவல், நாடகம் என பிரெஞ்சு இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

அவரின் படைப்புகள் பெரும்பாலும் ஆண் - பெண் பாலுறவு நெளிவு சுழிவுகள் சம்பந்தப் பட்டவையாக இருந்தன. அதனால் அவரின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றுக்கு பிரான்ஸ் நாட்டில் தடை விதிக்கப் பட்டது.

இருந்தாலும் ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் அவரைப் போற்றிப் பாராட்டினார்.

1880-ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட குண்டுப் பெண் என்கிற கதையின் மூலம் பிரெஞ்சு நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார். கதையின் சுருக்கம் வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் குண்டான விலை மாது ஒருத்தி இரயில் வண்டியில் பயணம் போகிறாள். அப்பொழுது எதிரி நாட்டு (புருசியா) இராணுவத் தளபதி அவளைத் தன்னுடைய ஆசைக்கு இணங்கச் சொல்கிறான். கதை இரயிலில் நடக்கிறது.

அதற்கு அவள் தன் தேசபக்தியோடு ஒப்பிட்டு மறுக்கிறாள். நீ எதிரி நாட்டுத் தளபதி. முடியாது என மறுக்கிறாள். இராணுவத் தளபதி இரயில் வண்டியைப் போக விடாமல் தடுக்கிறான்.

சக பிரயாணிகள் சத்தம் போடுகிறார்கள். இரயில் நகர வேண்டும். அதனால் அவளைச் சம்மதிக்கச் சொல்கிறார்கள். பயணிகளின் நன்மைக்கு குண்டுப் பெண் ஒப்புக் கொள்கிறாள்.

அவனின் ஆசை தீர்ந்து இவள் வெளியே வருகிறாள். பயணிகள் பலரும் அவளைக் கேவலமாகப் பார்க்கிறார்கள். வெறுப்புடன் விலகிச் செல்கிறார்கள். மற்றவர்களுக்காக ஓர் அர்ப்பணிப்பு செய்தும் அதைக் கேவலப் படுத்தி விட்டார்களே என்று அழுகிறாள்.

அந்தக் கதை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. படியுங்கள். உங்களுக்கும் அழுகை வரும். அப்பேர்ப்பட்ட எதார்த்தமான நடை.

ஏறக்குறைய ஒரு பத்தாண்டுகளில் 300 சிறுகதைகள்; நவீனங்களை எழுதினார். இன்னும் ஒரு விசயம்.

1960-ஆம் ஆண்டுகளில் மலேசியாவில் பல தமிழ் எழுத்தாளர்க்ளுக்கு இவருடைய தாக்கம் இங்கேயும் இருந்தது. மாப்பசான் பற்றி அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெறும். இவருடைய கதைகளை நானும் படித்து இருக்கிறேன். அந்தத் தாக்கம் இன்றும் எனக்குள் உள்ளது.

இவருடைய The Necklace (La Parure) எனும் சிறுகதை பிரசித்தி பெற்றது.

”அவள் ஓர் அழகிய, வசீகரமான ஆனால் விதியின் பிழையாலோ என்னவோ நடுத்தரக் குடும்பத்திலே பிறந்த பெண். கையில் காசு இல்லை. வசதி நிறைந்த உறவினர்க்கு அவள் வாரிசும் அல்ல; எனவே நல்ல பணக்கார இளைஞன் ஒருவனுக்கு அறிமுகம் ஆகி அவனால் காதலிக்கப்பட்டு அவனை மணந்து கொள்ள வழியே இல்லை; ஆகையால் கல்வித் துறை அலுவலகத்தின் சாதாரண எழுத்தர் ஒருவரைக் கைப்பிடித்துத் தொலைத்தாள்.”

இந்தக் கதையைக் கீழே உள்ள இணையத் தளத்தில் படிக்கலாம். சொ.ஞானசம்பந்தன் என்பவர் பிரெஞ்சு மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து இருக்கிறார்.

http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23830.html

மிக தீவிரமான கதையைக் கூட மிக மிகச் சுவாரசியமாக; மிக எளிமையாகக் சொல்லக்கூடிய ஆற்றல். மாப்பசான் கதைகள் தமிழிலும் மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளன.

Maupassant is considered a father of the modern short story. He delighted in clever plotting, and served as a model for Somerset Maugham and O. Henry in this respect. One of his famous short stories, "The Necklace", was imitated with a twist by both Maugham ("Mr Know-All", "A String of Beads") and Henry James ("Paste").

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அப்போது மாப்பசான் காலத்தில், ஆபாசக் கதைகள் பிரபலம். அந்த மாதிரி கதைகளை எழுதியவர்கள் விற்பனை நோக்கத்தில் மாப்பசான் பெயரைப் போட்டு விட்டார்கள்.

அதனால் பல மோசமான கதைகளில் மாப்பசான் பெயரும் நிலைத்துப் போனது. அந்த அவப் பெயரைக் கடைசி வரை அவரால் அழிக்கவே முடியவில்லை. சரி.

பாரிசில் ஈபில் கோபுரம் கட்டப்பட்ட நேரம். அப்போது பல பாரீஸ் மக்கள் அதை விரும்பவில்லை. வீணானச் செலவு என்று சபித்தார்கள். மாப்பசானும் அவர்களில் ஒருவர். ஆனாலும் அவர் அடிக்கடி அந்தக் கோபுரத்தில் இருந்த உணவகத்திற்குப் போவது வழக்கம். சாப்பிடுவதும் வழக்கம்.

”ஈபில் கோபுரம் தான் உங்களுக்குப் பிடிக்கவில்லை. அப்புறம் ஏன் அங்கே போய் சாப்பிடுகிறீர்கள்” என்று கேட்பார்கள். அதற்கு அவர் ”அங்கே உட்கார்ந்தால் தான் அந்தக் கோபுரம் கண்ணில் படாமல் இருக்கிறது” என்பாராம். இது எப்படி இருக்கு. மாப்பசான் நல்ல ஒரு கில்லாடி.

தன் 25-வது வயதிலேயே சிபிலிஸ் என்கிற பாலியல் நோயால் பாதிக்கப் பட்டார். இவருடைய தம்பிக்கும் அந்த நோய் இருந்ததால் அது ஒரு மரபு நோயாக இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

அந்த நோயின் தாக்கம் அவரின் எழுத்துகளிலும் வெளிப்பட்டன. நோய் சிகிச்சைக்கு மறுத்து விட்டார். அவருடைய தம்பியும் அதே நோயினால் தான் சின்ன வயதிலேயே இறந்து போனார்.

1880-இல் ஜோசப்பின் லிட்சல்மான் (Josephine Litzelmann) எனும் பெண்ணுடனும் பழகினார். கடைசியில் அவரையே மணந்தார். மாப்பாசானுக்கு மூன்று பிள்ளைகள். ஒரு மகன். இரு மகள் கள்.

1886-இல் கிசெல் எஸ்தோக் (Gisele Estoc) எனும் பெண்ணுடன் ஆறு ஆண்டுகள் நெருக்கமாகப் பழகினார்.

இவருடைய கதைகளைப் பத்திரிகைகள் போட்டிப் போட்டு பிரசுரித்தன. நல்ல வருமானம். ஆப்பிரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளுக்குச் சென்றார். பெண்கள் விசயத்தில் கொஞ்சம் வீக்.

மாப்பசான் தன்னுடைய முப்பது வயதுகளில் தனித்து வாழ்ந்தார். வாழ்க்கையில் வெறுப்பு. கடைசியாக அவர் விரும்பிய பெண்ணும் போய் விட்டாள். அந்த ஆதங்கம் வேறு. அடிக்கடி மனம் உடைந்து போனார். கண் பார்வை குன்றிப் போனது. அடிக்கடி தலைவலி.

02.01.1892-ஆம் தேதி தன் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். இருந்தாலும் காப்பாற்றப்பட்டு ஒரு மனநோய் காப்பகத்தில் அடைக்கப் பட்டார்.

தன் 42-ஆம் வயதில் உடல்; மனநலம் கெட்டு இறந்து போனார். உலகப் புகழ்பெற்ற ஒரு சகாப்தம் சின்ன வயதிலேயே சரிந்து போனது. இருந்தாலும் அவர் விட்டுச் சென்ற எழுத்துப் பொக்கிஷங்கள் இன்றும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

சான்றுகள்:
1. https://www.britannica.com/biography/Guy-de-Maupassant
2. https://en.wikipedia.org/wiki/Guy_de_Maupassant#Biography
3. https://www.gutenberg.org/ebooks/author/306



........................

பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்



Mageswary Muthiah எனக்கும் சிறு வயதில் இருந்தே வாசிப்பில் மிகுந்த ஆர்வம், அப்புறம் இடையில் ஒரு 15 வருடங்கள் தடை பட்ட பிறகு இப்பொழுது மீண்டும் துவங்கியுள்ளது, நீங்கள் எழுதுவதை மிக ஆர்வத்துடன் வாசிக்கிறேன்.
 
 
Muthukrishnan Ipoh படிக்கும் பழக்கம் நம் அறிவை வளர்க்கிறது... நிறைய படியுங்கள்...வாழ்த்துகள்...
 
 
 
Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh அப்போ நீங்க நிறைய எழுதுங்க ஐயா சார்.
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக