01 செப்டம்பர் 2019

ரனு மண்டல்

அதிர்ஷ்ட தேவதையின் ஆராதனை

அதிர்ஷ்டக் காற்று எங்கே இருந்து வரும்… எப்படி வீசும் என்பது எவருக்கும் தெரியாது. வர வேண்டிய நேரத்தில் வரும். வந்து வாசல் கதவைத் தட்டும். சமயத்தில் இரயில் வண்டியில் ஏறி வரலாம். அல்லது இரயில் நிலைய பிளாட்பாரத்தில் தவழந்தும் வரலாம்.



ஓர் ஏழைப் பெண்மணியின் வாழ்க்கையிலும் இப்படித்தான் நடந்து இருக்கிறது. நடந்து ஒரு சில தினங்கள் ஆகின்றன. நல்ல ஓர் ஆச்சரியமான ஆனால் அதிசயமான கதை. பேஸ்புக் ஊடகம் வழியாக ஒருவரின் வாழ்க்கை தலைகீழாக மாறிப் போய் இருக்கிறது. நம்பவும் முடியவில்லை. நம்பால் இருக்கவும் முடியவில்லை.

ஒரு பத்து நாட்களுக்கு முன்னர் வரையில் இரயில் பெட்டிகளிலும் இரயில் நிலைய பிளாட்பாரத்திலும் பாட்டுப் பாடி யாசகம் செய்த பெண்மணி... மன்னிக்கவும்... பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த ஒரு பெண்மணி. இப்போது பாலிவூட்டில் பின்னணிப் பாடகியாக உருமாற்றம் அடைந்து உள்ளார். 


தமிழ் மலர் - 01.09.2019
உலகமே அவரைத் திரும்பிப் பார்க்கிறது. அதிர்ஷ்ட தேவதை எப்படி எல்லாம் வந்து அரவணைத்துக் கொஞ்சுகின்றார். பாருங்கள்.

அந்தப் பெண்மணி தான் இந்தியாவின் அடுத்த லதா மங்கேஷ்கர் என்று சொல்லும் அளவிற்குப் புகழின் உச்சயில் புன்னகை செய்கின்றார். லதா மங்கேஷ்கரின் குரல் ஆராதனைகளுக்குச் சவால் விடும் அளவிற்கு ஒரு மாற்றுக் குரலாகவும் ஆலாபனை செய்கின்றார்.

சிப்பிக்குள் இருக்கும் முத்து எந்த வடிவத்திலும் வரலாம் என்பதற்கு இந்தப் பெண்மணி ஒரு நல்ல சான்று.

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு இரயில் நிலையம். பெயர் ரனகத் (Ranaghat). அங்கே யாசகம் செய்து பிழைப்பை நடத்தி வந்தவர் ரனு மண்டல் (Ranu Mandal). இன்று புகழின் உச்சியில் சுவாசம் செய்கின்றார். வாழ்த்துவோம்.


ரனு மண்டல் - ஹிமேஷ் ரேஷ்மியா
ரனு மண்டல், மேற்கு வங்காளம், நாடியா மாவட்டத்தில் கார்த்திக் நாரா எனும் கிராமத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில், 1960 நவம்பர் 5-ஆம் தேதி பிறந்தவர். இவரின் அசல் பெயர் ரனு மரியா மண்டல் (Ranu Mariah Mandal). கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்.  வயது 59.

தகப்பனாரின் பெயர் ஆதித்தியா குமார். தள்ளு வண்டியில் உணவுப் பொருட்களை விற்று வந்தவர். ரனு மண்டல் சின்னப் பிள்ளையாக இருக்கும் போதே பெற்றோரை இழந்து விட்டார். 


ரனு மண்டல் - ஆதிந்திரா சக்கரவர்த்தி
1973-ஆம் ஆண்டு அவருக்கு 13 வயது. அந்தச் சின்ன வயதிலேயே பாபுல் மண்டல் (Babul Mandal) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த இரண்டே ஆண்டுகளில் கணவரும் இறந்து விட்டார். இவருக்கு இரு முறை திருமணம் நடந்ததாகவும் சொல்லப் படுகிறது. நான்கு குழந்தைகள் என்றும் சொல்லப் படுகிறது. உறுதி படுத்த முடியவில்லை.

இவருக்கு ஒரே ஒரு மகள். பெயர் சதி ராய். திருமணம் ஆனதும் கணவருடன் வேறு ஓர் இடத்திற்குப் போய் விட்டார். தாயார் ரனு மண்டல் தனித்து விடப் பட்டார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தாய்க்கும் மகளுக்கும் தொடர்பு இல்லாமல் போய் விட்டது. இருப்பினும் மகள் பக்கத்தில் இருக்கும் கிருஷ்ணா நகரில் தான் இன்றும் இருக்கிறார்.

ஒரு செருகல். சில தினங்களுக்கு முன்னர் இவருடைய மகள் சதி ராய் தன் தாயார் ரனு மண்டலைப் போய் பார்த்து இருக்கிறார்.

2009-ஆம் ஆண்டில் இருந்து ரனு மண்டல் தன்னந் தனியாக வாழ்ந்து வந்தார்.  ரனு மண்டலுக்குச் சொந்தமாக வீடு இல்லை. காலியாகக் கிடக்கும் வீடுகளில் போய் தங்கிக் கொள்வார்.



அவருக்கும் வயதாகி விட்டது. கவனித்துக் கொள்ள கணவரும் இல்லை. எட்டிப் பார்க்க பிள்ளையும் இல்லை. என்ன செய்வது. வேறு வழி இல்லை. பிச்சை எடுக்கும் அவலம்.

இரயில் நிலையத்தில் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடல்களைப் பாடி யாசகம் பெற்று வாழ்க்கையை ஓட்டி வந்தார்.

ஒரு மாதத்திற்கு முன்னர், அதாவது 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு முதலாம் தேதி ஆதிந்திரா சக்கரவர்த்தி (Atindra Chakraborty) என்பவர் ரனகத் இரயில் நிலையத்தில் ஒரு கடையில் தேநீர் அருந்திக் கொண்டு இருந்து இருக்கிறார். இவர் ஒரு பொறியியலாளர். வயது 26.

அப்போது ரனு மண்டல் பழைய இந்திப் பாடல்களைப் பாடுவதைக் கேட்டு அந்த இளைஞர் மெய்மறந்து போய் இருக்கிறார். இனிமையான குரல். தெய்வீகமான குரல். நல்ல ஒரு காந்தர்வமான குரல் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டார்.

அந்தப் பாடல்கள் ஆதிந்திரா சக்கரவர்த்தியும் அவருடைய நண்பர்களையும் பெரிதும் கவர்ந்து விட்டன. உடனே ரனு மண்டலை அழைத்து அவருக்குத் தேநீர், பிஸ்கட்கள் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்.


ரனு மண்டல் - ஹிமேஷ் ரேஷ்மியா
வேறு ஏதாவது ஒரு பாட்டு பாட முடியுமா என்று கேட்டு இருக்கிறார். உடனே ’ஏக் பியார் கா நக்மா ஹாய்’ (Ek Pyaar Ka Nagma Hai) எனும் பாடலை ரனு மண்டல் பாடி இருக்கிறார். 1972-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஷோர்’ இந்திப் படத்தில் முக்கேஷ்; லதா மங்கேஷ்கர் பாடிய பாடல்.

வாழ்க்கை என்பது ஒரு காதல் கதை...

அலைகள் பாயும் வாழ்க்கைக் கதை...

அதில் என் கதை உன் கதையைத் தவிர வேறு கதை இல்லை...

என்பதே அந்தப் பாடலில் பொருள்.

(யூடியூப்பில் அந்தப் பாடல்: https://www.youtube.com/watch?v=ST_WC13rNJo)

அந்தப் பாடலைக் கேட்டு மெய் சிலிர்த்துப் போனார் ஆதிந்திரா சக்கரவர்த்தி. அதை அப்படியே வீடியோ படம் எடுத்து தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அதோடு ஒரு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். யாராவது ரனகத் இரயில் நிலையத்திற்குச் சென்றால் அந்தப் பெண்மணிக்கு உதவி செய்யுங்கள் எனும் வேண்டுகோள்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதைச் சொல்ல வேண்டாமே... ரனு மண்டல் ஒரு வரலாறாக மாறிப் போய் விட்டார். சரி.

ரனு மண்டலின் பாடல் காணொலியை ஓர் அரசு சாரா இயக்கத்தினர் பேஸ்புக்கில் பார்த்து இருக்கிறார்கள். ரனு மண்டலின் குரலில் ஒரு வசீகரத் தன்மை. அவர்களையும் ரனு மண்டலின் குரல் வசப் படுத்தி விட்டது. ஆங்கிலத்தில் ’மெஸ்மரைஸ்ட்’ என்று சொல்வார்கள். அந்த மாதிரி தான்.


ரனு மண்டல் மகள் சதி ராய்
உடனே ரனகத் இரயில் நிலையத்திற்குப் போய் அவரைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள். அதோடு அப்படியே அவரைப் புதுடில்லிக்கு விமானத்தின் மூலமாக அழைத்து வந்து விட்டார்கள். இரயில் பயணங்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவருக்கு அதிர்ஷ்ட தேவதை விமானம் வழியாக வந்து இருக்கிறார்.

ரனு மண்டல் பாட்டுப் பாடிய ரனகத் நகரில் இருந்து புதுடில்லிக்கு 1479 கிலோ மீட்டர்கள் தொலைவு. அதையும் நினைவில் கொள்வோம்.

அந்தச் சமயத்தில் 'சூப்பர் ஸ்டார் பாடகர்’ (Superstar Singer) தொலைக்காட்சி நிகழ்ச்சி உச்சத்தில் இருந்த நேரம்.

ரனு மண்டலுக்குச் சிகை அலங்காரம்; ஒப்பனைகள் செய்து அந்த நிகழ்ச்சியில் ஒரு சிறப்பு விருந்தினராகப் பாடவும் செய்து விட்டார்கள். அந்தச் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர் ஹிமேஷ் ரேஷ்மியா (Himesh Reshammiya). இவர் ஒரு நடிகர், இசை அமைப்பாளர்.
 
ரனு மண்டல் குரலில் மயங்கிப் போன ஹிமேஷ் ரேஷ்மியா அவர் தயாரிக்கும் ’ஹெப்பி ஹார்டி ஹீர்’ (Happy Hardy and Heer) எனும் படத்திலும் ரனு மண்டலைப் பாட வைத்து விட்டார். அது ஒரு முன்னோட்டப் பாடல் (Theme Song). பாடலின் பெயர் ‘தெரி மெரி கஹானி’ (Teri Meri Kahani).

இந்தப் பாடல் இப்போது உலகப் புகழ் பெற்று விட்டது. இந்தப் பாடலுக்கு ஹிமேஷ் ரேஷ்மியா சில இலட்சங்களை ரனு மண்டலுக்கு வழங்கி இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.

அதே படத்தில் இன்னொரு பாடலுக்கும் சில தினங்களுக்கு முன்னர் ஒலிப் பதிவு செய்து இருக்கிறார்கள்.

அடுத்து அக்சாய் குமார் என்பவர் தயாரிக்கும் துர்கா பூஜா எனும் படத்திற்கு பின்புலப் பாடல் பாடுவதற்கும் ரனு மண்டலுக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது.

இரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தவர் ரனு மண்டல். இவரின் பாடும் திறனை உலகத்திற்கு கொண்டு சென்றவர் ஆதிந்திரா சக்கரவர்த்தி. அதையே உலகறியச் செய்தவர் ஹிமேஷ் ரேஷ்மியா. இருவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 


தமிழ் மலர் - 01.09.2019
இதற்கு இடையில் ஒரு வதந்தி. ரனு மண்டலுக்கு ரூ.55 லட்சம் மதிப்பிலான வீடு ஒன்றை நடிகர் சல்மான் கான் பரிசாக அளித்தார் எனும் செய்தி. அது உண்மை இல்லை என்று சல்மான் கான் மறுத்து விட்டார்.

இருந்தாலும் தற்சமயம் சல்மான் கான் நடித்து வரும் தபங் 3 (Dabangg 3) எனும் படத்தில் ரனு மண்டலுக்குப் பாட வாய்ப்பு அளித்து உள்ளதாகவும் தகவல்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் சில தினங்களுக்கு முன்னர் ரனு மண்டலைப் பேட்டி எடுத்தது. அதில் ரனு மண்டல் என்ன சொல்கிறார் என்பதையும் பாருங்கள்.

’கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்கு வார்த்தை தெரியவில்லை. ஒரு கனவு வாழ்க்கையில் வாழ வைத்து இருக்கிறார். நான் உடைந்து போன ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவள். எனக்கு என்று யாருமே இல்லை. சொந்த பந்தங்கள் எல்லோரும் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எல்லோரும் என்னை அனாதையாக ஒதுக்கி வைத்து விட்டார்கள். நான் பெற்ற மகளே என்னைத் தேடி வரவில்லை. ஆனால் கடவுள் மட்டும் என்னை கைவிடவில்லை.

மக்களிடம் இருந்து இவ்வளவு அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்று என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. பொது மக்கள் இவ்வளவு அன்பைப் பொழிகிறார்கள். இதற்கு மேலும் எனக்கு மகிழ்ச்சி தேவை இல்லை. இந்தச் சந்தோஷம் இறக்கும் வரையில் எனக்குப் போதும்.

இருண்டு போன கற்பனையில்கூட இப்படி ஒரு பெரிய மேடையில் ஏறிப் பாடுவேன்; பாலிவூட் திரைப் படத்தில் பாடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை.

நான் பாடுவதற்குப் பயிற்சி அளிக்கப் பட்டது இதுதான் முதல் தடவை. தொழிநுட்பங்கள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஹிமேஷ் ரேஷ்மியா ஐயா என்னைத் தன் குடும்பத்தில் ஒருவராகப் பார்த்துக் கொள்கிறார்.

பாடுவதற்கு நான் எங்கேயும் இதுவரையில் பயிற்சி எடுத்தது இல்லை. லதா மங்கேஷ்கர்; அனுராதா பவுத்வால் போன்ற புகழ்பெற்ற பாடகர்களின் பாடல்களில் ஈர்க்கப் பட்டேன். என் குரலுக்குப் பொருத்தமான பாடல்களைத் தேர்வு செய்து பாடி வந்தேன். காம ரசப் பாடல்கள் எனக்குப் பிடிக்காது.

லதா மங்கேஷ்கர் எனக்கு கடவுள் போன்றவர். அவருடைய எல்லாப் பாடல்களுமே இனிமையானவை என்கிறார் ரனு மண்டல்.

மும்பாய் நகரில் உள்ள ஓர் அரசு சாரா இயக்கம் ரனு மண்டல் தங்குவதற்கு வீட்டு வசதிகளைச் செய்து கொடுத்து இருக்கிறது.

ரனு மண்டலை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர் ஆதிந்திரா சக்கரவர்த்தி எனும் இளைஞர். அவர் அடிக்கடி வந்து ரனு மண்டலைப் பார்த்து விட்டுப் போகிறார். ரனு மண்டலிடம் கைப்பேசி இல்லை. ஆதிந்திராவின் கைப்பேசியைச் சமயங்களில் பயன்படுத்திக் கொள்கிறார்.

எட்டாத உயரத்தின் புகழ் மாடியில் ரனு மண்டல் இப்போது உச்சம் பார்க்கிறார். தங்குவதற்கு ஓர் ஒட்டுக் குடிசைகூட இல்லாமல் பிளாட்பாரத்தில் படுத்துக் கிடந்தவர். இப்போது ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப் படுகிறார். ஒழுங்கான சாப்பாடு கிடைக்காமல் யாசகம் கேட்டு இரயில் பெட்டிகளில் ஏறி இறங்கியவர்.

இப்போது மும்பாய் ஓட்டல் வேலையாட்கள் அவருடைய கட்டளைக்காகக் காத்து நிற்கிறார்கள். என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்டு சிரம் தாழ்த்துகிறார்கள்.

ரனு மண்டலின் வாழ்க்கை ஒரு கற்பனைக் கதை போல எனக்குத் தோன்றுகிறது. அவர் மனசில் என்ன ஓடிக் கொண்டு இருக்குமோ. நமக்குத் தெரியாது. இருந்தாலும் பழைய இரயில் நிலையப் பிளாட்பாரத்தில் தெரிந்த அவரின் அதே புன்னகை இன்றும் தொடர்கிறது. 

அதிர்ஷ்டம் வந்தால் ஒரே நாளில் ஒரு சாமானியன் கூட ஓர் இலட்சாதிபதி ஆகலாம். ஓர் ஏழை கோடீஸ்வரராக ஆகலாம். 

அதிர்ஷ்டம் கூரையைப் பெயர்த்துக் கொண்டு கொட்டும் என்று சொல்வார்கள். அது இப்படியும் இருக்கலாம். லதா மங்கேஷ்கர் குரல் வனத்திற்கு ஈடு கொடுக்கிறது ரனு மண்டல் குரல் வண்ணம். அந்தக் குரல் வதனத்தில் லயித்து அதிசயித்துப் போய் நிற்கிறேன். அதிர்ஷ்ட தேவதையின் ஆராதனைகளுக்குத் தலை வணங்குகிறேன்.

யூடியூப்பில் ரனு மண்டல் பாடல்:

https://www.youtube.com/watch?v=12K-gmK2b2I

மேலும் ஒரு பாடல்:

https://www.youtube.com/watch?v=DddMBIZzWi0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக