13 செப்டம்பர் 2019

ம.இ.கா. – ம.சீ.ச. கொடிகள் எங்கே?

(தமிழ் மலர் - 13.09.2019)

அம்னோவும் பாஸ் கட்சியும் நாளை சனிக்கிழமை ஒரே கூட்டணியாக இணைகின்ற நிகழ்ச்சி. அம்னோ தலைமையகத்தில் நேற்று முதன் முறையாக பாஸ் கட்சியின் அந்தப் பச்சைக் கொடி அம்னோ கொடிக்கு மேலே பறந்தது.

பாரம்பரிய கிரிஸ் கத்தியைக் கொண்ட அம்னோ கொடியும் பாஸ் கொடிகளும் முதன் முறையாக ஒன்றாகப் பறக்கின்றன. 


நீண்ட நாட்களாக அம்னோவுடன் தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளாக இருந்த பல தேர்தல்களில்  ஒன்றாகப் பயணித்த ம.சீ.ச. – ம.இ.கா.வின் கொடிகள் கூட அம்னோ தலைமையக கட்டடத்தில் இதுவரை பறந்ததாகச் சரித்திரம் இல்லை.

அம்னோ தலைமையகத்தில் ம.இ.கா.வின் தேசிய மாநாடுகள் நடைபெறும் பொழுது கூட ம.இ.கா.வின் கொடி கட்டத்தைச் சுற்றிதான் பறக்க விடப்படும். புதிய இணைப்பான பாஸ் கட்சியின் கொடி அம்னோ கட்டடத்தின் உச்சியிலே பறக்கின்றது.

இந்த இரு கட்சி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் அம்னோவின் சார்பில் அமாட் ஸாஹிட் ஹமிடியும் பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் கையெழுத்திட இருக்கிறார்கள்.

புத்ரா வாணிப மையத்தில் உள்ள அம்னோ தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்தப் பேரணி ஒரு குறிப்பிட்ட இனத்திற்கான நிகழ்ச்சி அல்ல. அனைவரும் பங்கு பெறலாம் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ம.இ.கா. – ம.சீ.ச. கட்சிகளும் இதில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் ம.இ.கா. – ம.சீ.ச. ஒரு தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.

அம்னோ கட்டடத்தின் உச்சியில் நாளை உதிக்கப் போகும் கூட்டணி கட்சியான பாஸ் கட்சியின் கொடி கம்பீரமாக பறக்கின்ற வேளையில்...

பாரிசான் நேசனல் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் பங்காளிக் கட்சிகளான ம.இ.கா. – ம.சீ.ச. கட்சிகளின் கொடி அதற்கு ஈடாக பறக்க விடப்படவில்லை என்பது...

தேசிய முன்னணியில் இந்த இரு கட்சிகளின் இன்றைய நிலையை வெளிப் படுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக