11 ஏப்ரல் 2020

கொரோனா துரித பரிசோதனைக் கருவி

(Rapid Testing Kit)
(Reverse Transcription Polymerase Chain Reaction (RT-PCR)


கொரோனா வைரஸ் நம் உடலில் இருக்கிறதா இல்லையா என்பதைத் துல்லியமாகக் கண்டுப்பிடிக்க உதவும் கருவியின் பெயர் ரேபிட் டெஸ்ட் கிட் (Rapid Testing Kit). தமிழில் துரித பரிசோதனைக் கருவி. 

 

ஒருவர் வைரஸ் அல்லது பாக்டீரியா கிருமியால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அந்த ஒருவரின் உடலில், கொரோனா வைரஸ் கிருமியின் மரபணுவில் உள்ள டி.என்.ஏ. (DNA); அல்லது ஆர்.என்.ஏ. (RNA); மூலக்கூறுகள் இருக்கிறதா இல்லையா என்பதை இந்த ரேபிட் டெஸ்ட் கிட் (Rapid Testing Kit) கருவியின் மூலமாகக் கண்டு அறிய முடியும்.

இப்போது இந்தக் கருவிக்கு உலகம் எங்கும் ரொம்பவுமே கிராக்கி. இதன் பயன்பாடு மருத்துவமனைகளுக்கு மட்டும் எனும் கட்டுப்பாட்டில் உள்ளது. சென்ற ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. நிறையவே போலிகளும் சந்தையில் கலந்து விட்டன.

விரைவில் பொதுமக்களுக்கும் எளிதில் கிடைக்கலாம். மலேசிய சுகாதார அமைச்சு போலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சரி.

ஒரு வைரஸ் கிருமியின் மரபுத் தொகுதிக்கு ‘ஜெனோம்’ (genome) என்று பெயர். கொரோனா தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமிக்கு SARS-CoV-2 என்று பெயர். 



ஆக இப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட SARS-CoV-2 வைரஸ் கிருமியின் ஜெனோம் மரபுத் தொகுதியையும்; ஏற்கனவே இருந்த சார்ஸ் (SARS); மெர்ஸ் வைரஸ் கிருமிகளின் மரபுத் தொகுதியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இரண்டிற்கும் 70 விழுக்காடு ஒற்றுமை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனால் தான் இப்போது உலகத்தை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் கிருமிக்கும் சார்ஸ் (SARS) எனும் பெயர் ஒட்டிக் கொண்டது. இப்போதைய இந்த கொரோனா வைரஸ் கிருமி முதன்முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப் பட்டது. எல்லோருக்கும் தெரிந்த விசயம்.

இந்தப் புதிய கொரோனா வைரஸ் கிருமியின் மரபு அணுக்களை ஆராய்ச்சியாளர்கள் பிரித்துப் பகுத்துப் பார்த்தார்கள். அதன் பின்னர் அந்த மரபு அணுக்களைத் துரித மூலக்கூறு மரபியல் பரிசோதனை (rapid molecular genetic tests) மூலமாக வடிவம் அமைத்தார்கள்.

மரபியல் பரிசோதனை என்பது குரோமோசோம்கள் (chromosomes), மரபணுக்கள் (genes) அல்லது புரதங்களில் (proteins) ஏற்படும் மாற்றங்களை அடையாளம் காணும் ஒரு வகை மருத்துவச் சோதனையாகும். 


(Genetic testing is a type of medical test that identifies changes in chromosomes, genes, or proteins)


இந்தப் பரிசோதனை தான் இப்போதைக்கு உலகம் எங்கும் பரவலாகக் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

கொரோனா வைரஸைப் பொறுத்த வரையில் அதற்கான மரபியல் பரிசோதனையை, அதன் மரபணுவில் உள்ள ஆர்.என்.ஏ. (RNA) மூலக் கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சி செய்கிறார்கள். ஏன் தெரியுங்களா.

எல்லா உயிர்களின் மரபணுக்களும் டி.என்.ஏ. (DNA); ஆர்.என்.ஏ. (RNA) எனும் மூலக் கூறுகளால் ஆனவை. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

மனிதனாக இருக்கலாம். மிருகமாக இருக்கலாம். காற்றில் பற்றக்கும் பட்டாம் பூச்சியாக இருக்கலாம். பரவி நிற்கும் பயிர் பச்சையாக இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம்.

ஓர் உயிர் என்றால் அதற்கு கண்டிப்பாக மரபணுக்கள் இருக்கும். இருக்க வேண்டும்.



மறுபடியும் சொல்கிறேன். அந்த மரபணுக்களில் டி.என்.ஏ. (DNA); ஆர்.என்.ஏ. (RNA) எனும் மூலக் கூறுகள் இருக்கும். ஆக, டி.என்.ஏ.; ஆர்.என்.ஏ. மூலக் கூறுகள் இல்லாமல் மரபணுக்கள் இல்லை. மரபணுக்கள் இல்லாமல் செல்கள் இல்லை. செல்கள் இல்லாமல் உயிர்கள் இல்லை. அந்த உயிர்கள் இல்லாமல் நாம் மனிதர்களும் இல்லை. சரிங்களா.

ஆனாலும் கொரோனா வைரஸில் ஒரு பிடி இருக்கிறது. அதாவது ஒரு ’கேட்ச்’ இருக்கிறது. பெரும்பாலான வைரஸ் கிருமிகளின் மரபணுக்கள் ஆர்.என்.ஏ. (RNA) எனும் மூலக்கூற்றுகளால் மட்டுமே ஆனவை. கொஞ்சமாய் டி.என்.ஏ. இருக்கலாம்.

அந்த ஆர்.என்.ஏ. மரபணுத் தொகுதியில் தான் கொரோனாவின் இரகசியங்கள் அடங்கி இருக்கின்றன. கொரோனா வைரஸின் செயல்பாடுகள்; வடிவ அமைப்புகள்; தன்மைகள்; பண்புகள்; இயக்கங்கள் என எல்லாமே மூலக்கூறுகள் வடிவில் அதன் ஆர்.என்.ஏ.-வில் எழுதப்பட்டு இருக்கின்றன.

எடுத்துக் காட்டாக ஒன்றைச் சொல்லலாம். இப்போது நம்மை ஆட்டிப் படைக்கிறதே இந்த SARS-CoV-2 ; இந்த வைரஸ் ஒருவரின் உடலுக்குள் சென்றதும் என்ன வகையான புரதங்களைத் தயாரிக்க வேண்டும்; எப்படி தயாரிக்க வேண்டும்; மனித உடலின் மரபணுக்களை எப்படி உடைக்க வேண்டும் என்கிற வழிமுறைகள் எல்லாம் இந்த மரபணுக்களிடம் இருக்கும். 



அதாவது எழுதி வைத்தது போல இருக்கும். இந்த புரதங்கள் தான் கோரோனா கோவிட் நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படுவதற்கு காரணமாகவும் இருக்கின்றன.

மறுபடியும் நினைவு படுத்துகிறேன். புரதங்கள். எந்த மரபணுவாக இருந்தாலும் இந்தப் புரதங்கள் தான் சக்தி கொடுக்கும் பொருட்கள். ஆக கொரோனா வைரஸ்கள் அவற்றின் இந்தப் புரதங்களை வைத்துக் கொண்டே மனித மரபணுக்களைச் சாகடித்து விடுகின்றன. அது தான் அந்தக் கொரோனாவின் கேட்ச்.

ஒருவருக்குத் தொண்டை வலி அல்லது இருமல் அல்லது சளி அல்லது காய்ச்சல் வரலாம். உடல் சோர்ந்து போகலாம். அந்த மாதிரி அறிகுறிகள் வந்தால் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

அவரின் மூக்கு; தொண்டைப் பகுதிகளில் இருக்கும் திரவத்தைப் பஞ்சு மூலம் எடுத்து ஸ்வாப் (Swab) பரிசோதனை செய்வார்கள். 



அவ்வாறு எடுக்கப்படும் திரவ மாதிரிகள் பாலிமரேஸ் செயின் ரியாக்‌ஷன் (Polymerase chain reaction) எனப்படும் பி.சி.ஆர். (PCR) பரிசோதனைக்கு அனுப்பப்படும்.

இந்த பி.சி.ஆர். (PCR) பரிசோதனையின் மூலமாக கொரோனா வைரஸின் ஆர்.என்.ஏ. (RNA) மூலக் கூறுகள் உள்ளனவா என்று பார்க்கப்படும்.

அடுத்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த ஆர்.என்.ஏ. (RNA) மூலக் கூறுகள் எத்தனை மில்லியன்களாகப் பெருகிப் போகின்றன என்றும் கணக்கு போட்டுப் பார்ப்பார்கள் அதற்கும் ஒரு கணக்கு இருக்கிறது.

அப்படி எடுக்கப்படும் மூலக் கூறுகளின் எண்ணிக்கையில் ஆர்.என்.ஏ. இருந்தால் கொரோனா பாதிப்பு உள்ளது என்பது தெரிந்து விடும். அப்புறம் என்ன. உடனே அட்மிட் செய்து விடுவார்கள்.

இதை வைத்துத் தான் ஒருவருக்கு கொரோனா பாசிடிவ் இருக்கிறதா இல்லையா என்று முடிவு செய்கிறார்கள். இந்த விசயத்தில் கொரோனா கிருமியின் ஆர்.என்.ஏ. (RNA) மூலக் கூறுகள்தான் அந்தக் கிருமியையே காட்டிக் கொடுக்கின்றன.

இப்படித்தான் கொரோனா துரித பரிசோதனைக் கருவி (Rapid Testing Kit) செயல் படுகிறது. இது ஒரு நீண்ட விழிப்புணர்வுக் கட்டுரை. இதன் தொடர்ச்சி இன்னும் சில தினங்களில் முழுமையாகப் பத்திரிகையில் இடம் பெறும். நன்றி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.04.20220



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக