26 ஏப்ரல் 2020

இந்தோனேசியாவின் மாபெரும் மகாராணியார் சீமா

இந்தோனேசிய வரலாற்றிலேயே வரலாறு படைத்த மாபெரும் பெண்கள் பலர். அவர்களில் சிலர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள்.

மகாராணியார் சீமா

அனைவருமே மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய மாபெரும் பெண்ணரசிகள். இவர்களை வரலாறும் மறக்காது. வரலாற்று உலகமும் மறக்காது. வரலாற்று மைந்தர்களும் மறக்க மாட்டார்கள்.
இந்தோனேசியாவை ஆட்சி செய்த மகா பேரரசிகளின் (இந்து) பட்டியல்


1. மகாராணியார் சீமா சத்தியா (Queen Shima Satya); கலிங்கப் பேரரசு (கி.பி. 674)

2. இசையானா துங்கா விஜயா (Isyana Tunggawijaya); மேடாங் பேரரசு (கி.பி. 947)

3. ஆர்ஜெயா ஜெயகீர்த்தனா (Arjaya jayaketana); பாலி பேரரசு (கி.பி. 1200)

4. திரிபுவன விஜயதுங்கா தேவி (Tribhuwana Wijayatunggadewi); மஜபாகித் பேரரசு (கி.பி. 1328 - 1350)

5. சுகித்தா (Suhita); மஜபாகித் பேரரசு (கி.பி. 1429 - 1447)

6. மகாராணி ரத்னா காஞ்சனா (Queen Kalinyamat); கல்யாணமதா சிற்றரசு (கி.பி. 1549)



இந்தோனேசியா ஆச்சே பேரரசின் மகாராணியார்கள் பட்டியல்:


1. இனயாட் ஜக்கியாதுடின் ஷா (Inayat Zakiatuddin Syah); (கி.பி. 1678 - 1688)

2. நூருல் ஆலாம் நகியாதுடின் ஷா (Nurul Alam Naqiatuddin Syah); (கி.பி. 1675 - 1678)

3. தாஜ் உல் ஆலாம் (Taj ul-Alam); (கி.பி. 1641 - 1675) 

4. ஜைனுதீன் கமலதா ஷா  (Zainatuddin Kamalat Syah (கி.பி. 1688 - 1699)


இவர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்கிறேன். முதலில் வருபவர் மகாராணியார் சீமா. இவரின் பட்டத்துப் பெயர் ​​ஸ்ரீ மகாராணி மஹிசா சுரமாதினி சத்தியா புதிகேஸ்வரா (Sri Maharani Mahissasuramardini Satyaputikeswara).

கி.பி. 674-ஆம் ஆண்டில் இருந்து கி.பி 695-ஆம் ஆண்டு வரை கலிங்கத்துப் பேரரசியாக ஆட்சி செய்தவர்.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவின்
கலிங்கப் பேரரசை ஆட்சி செய்த மன்னர் கார்வேலன்

மகாராணியார் சீமா, ஸ்ரீ விஜய பேரரசில் சேவை செய்த ஒரு பண்டிதரின் மகள். கி.பி 611-ஆம் ஆண்டு முசி பன்யுவாசின் (Musi Banyuasin) எனும் இடத்தில் பிறந்தார். இவர் கலிங்கத்துப் பேரரசின் இளவரசர் கார்த்திகேய சிங்கா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கார்த்திகேய சிங்காவின் தந்தையார் கலிங்கத்து மன்னர் (Kalingga Kingdom).

கி.பி 648-ஆம் ஆண்டில் கார்த்திகேய சிங்காவின் தந்தையார் இறந்தார். கார்த்திகேய சிங்கா அரியணை ஏறினார். 



கலிங்கத்துப் பேரரசு இந்தோனேசியா ஜாவா தீவில் இருந்தது. ஜாவா தீவின் வடப் பகுதியில் மையம் கொண்ட பேரரசு

மத்திய ஜாவாவில் ஜெப்பாரா (Jepara Regency) எனும் மாநிலம் உள்ளது. அந்த மாநிலத்தில் கெலிங் (Keling) எனும் துணை மாநிலம் உள்ளது. கலிங்கப் பேரரசின் கலிங்கம் எனும் வேர்ச் சொல்லில் இருந்து தான் கெலிங் துணை மாநிலத்திற்கும் பெயர் வைத்து அழகு பார்க்கிறார்கள்.

கலிங்கம் அல்லது கலிங்கா எனும் சொல்லில் இருந்து கெலிங் எனும் பெயர் மாற்றம் கண்டது. அதை மறந்துவிட வேண்டாம். கெலிங் என்பது நல்ல வரலாற்றுச் சொல்.



கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 850-ஆம் ஆண்டு வரை 200 ஆண்டுகளாகக் கலிங்கப் பேரரசு ஜாவாவில் ஆட்சி செய்து இருக்கிறது. சீனர்கள் இந்த அரசை ஹெலிங் (Helíng) என்று அழைத்து இருக்கிறார்கள்.

நன்றாகக் கவனியுங்கள். சீனர்கள் கெலிங் என்று சொல்லவே இல்லை. ஹெலிங் என்று தான் சொல்லி இருக்கிறார்கள். இந்தோனேசியாவை ஆட்சி செய்த மிகப் பழமையான பேரரசுகளில் கலிங்கப் பேரரசும் ஒன்றாகும்.

இன்னும் ஒரு விசயம். நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். கலிங்கப் பேரரசு; கூத்தாய் பேரரசு; தர்மநகரா பேரரசு. இந்த மூன்று பேரரசுகளும் தான் இந்தோனேசியாவின் வரலாற்றில் மிக மிகப் பழமையான பேரரசுகள்.



1. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

2. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

3. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 650 – 850



கி.பி. 674-ஆம் ஆண்டில் சீமா சத்தியாவின் கணவர் கார்த்திகேய சிங்கா இறந்ததும் சீமா சத்தியா, கலிங்கத்துப் பேரரரசின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டார். இந்தக் கட்டத்தில் தான் மகாராணியார் சீமாவின் நேர்மையான அரசியல் வாழ்க்கையும் பரிணமித்தது. 



சீமா மகாராணியின் ஆட்சி கலிங்கா பேரரசிற்கு ஒரு பொற் காலமாக விளங்கியது. நல்ல நேர்மையான ஆட்சி. அதுவே மற்ற மற்ற பேரரசுகளின் மன்னர்களை மரியாதைக்கு உரியதாகவும் மாற்றிக் காட்டியது. ஆச்சரியமாக இல்லையா?

சீமா மகாராணியால் நானும் ஈர்க்கப் பட்டேன். ஏனென்றால் அவர் மாபெரும் கலிங்கத்து ராஜ்யத்தை மிகத் துணிச்சலுடன் வழிநடத்தி இருக்கிறாரே. அதற்காகத் தான். அவர் ஒரு பெண் என்பதற்காக அல்ல. சீமா மகாராணியின் வரலாற்றில் இருந்து ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகின்றது.

எல்லா காலத்திலும் பெண்கள் ஆண்களுக்குச் சமநிகர் சமமாக ஆட்சி செய்து இருக்கிறார்கள். அந்த உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. உடல் அளவில் பெண்கள் சற்று பலகீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனத்து அளவில் ஆண்களுக்கே புத்தி சொல்லும் திறமைசாலிகளாக வாழ்கின்றார்கள். 



சீமா மகாராணி ஒரு நேர்மையான, நியாயமான, கண்டிப்பான ராணியாக வாழ்ந்து இருக்கிறார் என்று வரலாறு சொல்கிறது.

இவர் திருடு கொள்ளைகளுக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்களை இயற்றியவர். நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று குடிமக்களைக் கேட்டுக் கொண்டவர்.

கலிங்க நாட்டு மக்களின் நேர்மையைப் பரிசோதிக்க ஒரு வெளிநாட்டு அரசர் ஆசைப் பட்டார். ஒரு பை நிறைய தங்கக் கட்டிகளைப் போட்டுக் கட்டி ஒரு முச்சந்தியில் வைத்து விட்டார். 



யாருமே அந்தப் பையைத் தொடவில்லை. தங்களுக்குச் சொந்தம் இல்லாத பொருள் என்று அதைத் திறந்து பார்க்க எவருக்கும் துணிவு வரவில்லை.

மூன்று ஆண்டுகள் கழித்து சீமா ராணியாரின் மகன் தெரியா தனமாய் அந்தப் பையை மிதித்து விட்டார். அவர் அந்த நாட்டின் இளவரசன். இருந்தாலும் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. ராணியார் தான் அந்தத் தண்டனையை வழங்கினார்.

அதாவது ஒரு தாயாரே ஒரு மகனுக்கு மரண தண்டனையை விதித்து இருக்கிறார். என்ன அக்கப் போர் என்று கேட்க வேண்டாம். 



அந்தக் காலத்து அரசாண்மைகளில் நேர்மைக்கும் நீதிக்கும் முதன்மை வழங்கப் பட்டது. அதற்கு இந்த மரணதண்டனை நல்ல ஓர் எடுத்துக்காட்டு.   

கலிங்கத்து ராணியார் சீமா அவர்கள் விதித்த மரண தண்டனையைப் பொது மக்களும் எதிர்த்தார்கள். அமைச்சர்களும் எதிர்த்தார்கள்.

இளவரசர் வேண்டும் என்றே தங்கக் கட்டிப் பையைத் தீண்டவில்லை. தெரியாமல் மிதித்து விட்டார். அதற்காக அவருக்கு மரணதண்டனை விதிப்பது என்பது நியாயம் அல்ல; நீதிக்குப் புறம்பானது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். இளவரசரை மன்னித்து விடும்படி மன்றாடினார்கள். 



இளவரசரின் கால் அந்தப் பையைத் தீண்டியதால் அந்தக் காலுக்குத் தண்டனை கொடுங்கள் என்று கட்டளை பிறப்பிக்கப் பட்டது.

அந்த வகையில் இளவரசரின் கால் துண்டிக்கப் பட்டது. அதனால் அவர் அடுத்த அரசராகப் பதவி ஏற்க முடியாமல் போனது. சீமா ராணியாருக்குப் பின்னர் அவருடைய பேரன் சஞ்சாயா என்பவர் தான் கலிங்கப் பேரரசை ஆட்சி செய்தார்.

இப்படிப்பட்ட நேர்மை நீதியுடன் அரசாட்சி செய்தவர்கள் தான் ஜாவா கலிங்கத்து அரசர்கள். சீமா மகாராணியாரைப் போல சீமைகள் போற்றும் மகாராணியார்கள் இனி கிடைப்பார்களா? கிடைக்கவே மாட்டார்கள். இது என் கருத்து.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.04.2020




சான்றுகள்:1. https://en.wikipedia.org/wiki/Shima_(queen)

2. The Wisdom of Tolerance: A Philosophy of Generosity and Peace, By Daisaku Ikeda, Abdurrahman Wahid

3.http://rumahbacagana.blogspot.com/2014/10/daughter-of-queen-of-honesty-shima.html?m=0

4. https://en.wikipedia.org/wiki/List_of_monarchs_of_Java

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக