23 மே 2020

உடன்கட்டை ஏறுதல் - 1

தமிழ் மலர் - 21.05.2020

பெண்ணை ஒரு தெய்வமாகப் போற்றியது இந்திய மண். பெண்ணைப் பாரத மாதா என்று புகழ்ந்து பாடியது இந்திய மண். ஆனால் அதே அந்தப் புண்ணிய மண்ணில் வாழ்ந்த மனிதர்கள் தான், பெண்களுக்கு எதிராகப் பற்பல வன்கொடுமைகளை வாரி இறைத்துவிட்டுச் சென்று இருக்கிறார்கள்.

புண்ணியம் பார்க்கும் கங்கை கரை ஓரத்தில் ஒரு பொட்டல் காடு. பார்க்கிற திசை எல்லாம் மக்கள் கூட்டம். அங்கே ஒரு புனிதமான சடங்கு. பிழியப் பிழிய கதைகள் பேசிக் கொள்கிறார்கள். என்ன கதை. ஓர் இளம் பெண்ணை எரிக்கப் போகிறார்கள்.

இறந்து போன கணவனின் உடலோடு அவளும் நெருப்பில் விழுந்து சாகப் போகிறாள். அதுதான் அங்கே நடக்கப் போகும் புனிதமான காரியம். புனிதமான சமயச் சடங்கு. 




அப்போதைக்கு அங்கே தெரிவது எல்லாமே சமயச் சம்பிரதாயங்கள். செத்துப் போனவன் வயதாகிப் போன கணவன். அவனுக்கு வயது 82. போக வேண்டிய வயசு. போய்ச் சேர்ந்து விட்டான். உயிரோடு நெருப்பில் விழப் போகிறவள் அவனுடைய இளம் மனைவி. வாழ வேண்டிய வயசு. அவளுக்கு வயது 22.

சாவதற்கு ஆரத்தி எடுக்கிறாள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அங்கே மனுக்குலத்தின் மனிதம் சாகப் போவது நன்றாகவே தெரிகிறது. அதையும் தாண்டிய நிலையில் அங்கே சமயத்தின் பேரில் காலாவதியான சாதி சமயங்கள் அழகாகவே தெரிகின்றன. மன்னிக்கவும்.

ஒரு சமயத்தின் பேரைச் சொல்லி ஓர் உயிரை எரித்துக் கொல்வது பாவம் இல்லையா. புருசன் செத்ததும் பெண்சாதியும் உடன் சாக வேண்டுமா. அப்படி என்று எந்தச் சமயமாவது சொல்கிறதா. இல்லைங்க. எந்தச் சமயமும் அப்படிச் சொல்லவே இல்லை. 




ஒரு சமயத்தின் பலகீனங்களைச் சிலர் பலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவ்வளவுதான்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் துருக்கியில் இருந்து ஈரான் வழியாக, சில நாடோடிகள் இந்தியாவிற்குள் வந்தார்கள். அப்படி வந்தவர்கள் சிந்து சமவெளியில் குடியேறி சில சாதி சம்பிரதாயங்களை நன்றாக ஆணி அடித்து இறக்கி விட்டுப் போனார்கள்.

புருசன் செத்துப் போனதும் பொம்பளையும் சாக வேண்டும். உடனே கட்டின புடவையோடு கட்டை ஏற வேண்டும். அப்போதையச் சம்பிரதாயச் சவுக்கடிகளில் ஒன்று.

சொல்லில் மட்டும் இல்லை. எழுதி வைத்தும் சென்று விட்டார்கள். அதன் பின்னர் வந்தவர்கள், உடன் கட்டை ஏறுதலை ஒரு புனிதச் சடங்காகப் போற்றிப் புகழ்ந்தார்கள். புகழ்ந்தது யார். அந்தக் காலத்துச் சில பல பெரிசுகள். அதாவது வேலை வெட்டி இல்லாத வெள்ளை வேட்டிகள்.




பெண்களுக்கு ஏற்பட்ட அந்த வன்கொடுமையை நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே சமூக ஆர்வலர்கள் இந்தியாவில் அழித்து ஒழித்து விட்டார்கள். இருந்தாலும் சாகடிக்கப் பட்ட அந்த ஆயிரக் கணக்கான பெண்களை உயிரோடு திருப்பிக் கொண்டு வர முடியுமா. சொல்லுங்கள்.

போன உயிர் போனதுதான். அதைப் பற்றி என்ன சொல்வது. கொஞ்ச நேரம் அவர்களை நினைத்துப் பார்த்தாலே போதும். அதுதான் இன்றைய கட்டுரை. படித்த பிறகு அவர்களுக்காகக் கொஞ்ச நேரம் மௌனமாக அஞ்சலி செலுத்துவோம். அந்தப் பெண்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

1823-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி. கிட்டத் தட்ட ஒரு இருநூறு வருடங்களுக்கு முன்னால் நடந்தது. அந்தப் பெண் எப்படி உயிரோடு சாகடிக்கப் பட்டாள் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். இப்படி எல்லாம் நடந்து இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 




பழைய இந்தியாவில் உடன்கட்டை ஏறியவர்கள் பல இலட்சம் பெண்கள். பெரும்பாலும் இருபது முப்பது வயசு இளம் பெண்கள். படுக்கையில் கிடக்கும் பாட்டி மார்களையும் சமயச் சஞ்சீவிகள் விட்டு வைக்கவில்லை. பாடை கட்டி, மூட்டைக் கட்டி அப்படியே எரியும் நெருப்பில் தூக்கி வீசி இருக்கிறார்கள்.

இந்தக் கதையில் வரும் பெண்ணுக்கு வயது 22. பன்னிரண்டு வயதில் அவளுக்குத் திருமணம். குழந்தைகள் இல்லை. கணவனுக்கு 82 வயது. வயசைப் பார்க்க வேண்டாம். அந்தக் காலத்தில் 80-க்கு 20-ஐ தேடினார்கள். 30-க்கு 10-ஐ தேடினார்கள். அவை எல்லாம் அந்தக் காலத்து வக்கிரமான சந்தோஷங்கள். காலமாகிப் போன காமச் சுவாலைகள்.

அந்தப் பெண்ணின் கணவன், பசு மாடு முட்டி இறந்து போனான். எமன் எப்போதுமே காளை மாட்டில் ஏறி வருவான் என்று சொல்வார்கள். ஆனால் அன்றைக்கு என்னவோ காளை மாடு ’மெடிக்கல் லீவு’ போட்டு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் தான் பக்கத்தில் இருந்த பாவம் பசு மாடு மாட்டிக் கொண்டது போலும்.




ஆக அந்தக் காலத்து வழக்கப்படி கணவன் இறந்து போனால் மனைவியும் உடன் கட்டை ஏற வேண்டும். அதாவது நெருப்பில் விழுந்து சாக வேண்டும். அதை வடநாட்டுக்காரர்கள் சதி என்று சொன்னார்கள். தமிழ்நாட்டில் உடன் கட்டை ஏறுதல் என்று சொன்னார்கள். அந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சிதான் இப்போது அங்கே நடக்கப் போகிறது.

இந்தச் சடங்கு நடப்பதற்கு முதல்நாள், வெள்ளைக்கார நீதிபதியின் வீட்டுக்கு சாகப் போகிற அந்தப் பெண் போய் இருக்கிறாள். இறந்து போன கணவனுடைய உடலுடன் சேர்ந்து தானும் நெருப்பில் விழுந்து இறக்க வேண்டும். அனுமதி வேண்டும் என்று கேட்டு இருக்கிறாள். சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதி மறுத்து விட்டார். அந்தப் பெண் விடவில்லை. 




அனுமதி கொடுக்க மறுத்தால் நீதிபதியின் வீட்டிற்கு முன்னாலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்வேன் என்று நீதிபதியையே மிரட்டிப் பார்த்தாள். ‘உனக்கு பைத்தியமா’ என்ற நீதிபதி, அவளைத் திட்டி விரட்டி அடித்து விட்டார். திருநெல்வேலிக்கே அல்வா கொடுக்கப் பார்த்தாள். முடியவில்லை.

இருந்தாலும் ஒன்றை நாம் இங்கே மறந்துவிடக் கூடாது. சொந்த பந்தங்களின் நெருக்குதல் இல்லாமல் ஓர் இளம்பெண் அந்த அளவிற்குத் துணிந்து போய் இருக்க மாட்டாள். சொந்த பந்தங்கள் தான் அதற்கு மூல காரணம்.

நீதிபதியின் முடிவை குடும்பத்தார் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தப் பெண் விரும்பிய படியே சாக அனுமதிக்க வேண்டும். அதுதான் இந்து மத சம்பிரதாயம் என்று நீதிபதிக்கே சவால் விட்டார்கள். இந்து சமய விவகாரங்களில் தலையிடுவதற்கு வெள்ளைக்காரர்களுக்கு உரிமை இல்லை என்றும் மிரட்டிப் பார்த்தார்கள்.  




நீதிபதிக்கு வேறு வழி தெரியவில்லை. கடைசியில் ’எக்கேடு கெட்டாவது போய்த் தொலையுங்கள்’ என்று சொல்லி கைகழுவி விட்டார். பாவம், அவர்தான் என்ன செய்வார். ஓர் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்து பார்த்தார். சரிபட்டு வரவில்லை.

அவள் நெருப்பில் விழுந்து சாவதைப் பார்ப்பதற்காகக் கிராமத்து மக்கள் நூற்றுக் கணக்கில் கூடி நின்றார்கள். பற்றாக் குறைக்கு ஆயிரக் கணக்கில் வெளியூர் வாசிகள். இறந்து போன அவளுடைய கணவனின் உடல் சிதையில் வைக்கப் பட்டது. தீ மூட்டப் பட்டது.

அந்த இளம்பெண் 'ராம்... ராம்...’ என்று சத்தமாகக் கத்தியபடியே சிதையில் போய்ப் படுத்தாள். சில நிமிடங்களில் அவளுடைய உடலில் தீப்பற்றிக் கொண்டது. உடல் எரியத் தொடங்கியது. ஆனால் அடுத்த சில விநாடிகளில் யாரும் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. அவள் அலறி அடித்துக் கொண்டு, நெருப்பில் இருந்து வெளியே ஓடி வந்தாள். 




ஓடி வந்த அவளை ஒருவன் தடுத்து நிறுத்தினான். ஒரு பெரிய தடியை எடுத்து வந்து அவளைப் பலமாக அடித்தான். அப்படி அடித்தால் அவள் மயக்கம் போட்டு விழுவாள்.

அந்த மயக்கத்திலேயே அவளைத் தூக்கிக் கொண்டு போய் மறுபடியும் நெருப்பில் போடலாம் என்பதே அவனுடைய திட்டம். ஆனால் அவள் திமிறினாள். இருந்தாலும் அவன் விடவில்லை.

அந்தத் தடியை அழுத்திப் பிடித்து அப்படியே அவளை மீண்டும் நெருப்புக்குள் தள்ளி விட்டான். அவள் பயங்கரமாகக் கத்தினாள். தடியோடு சேர்த்து மற்றவர்களும் சேர்ந்து கொண்டு அவளை நெருப்புக்குள் அமுக்கினார்கள்.

அடுத்து சில விநாடிகளில் அந்தப் பெண் சிதையை விட்டுத் தாவி எழுந்தாள். எரியும் உடலோடு கங்கை நதியை நோக்கி ஓடினாள். 




'அவளை விடாதீர்கள். கொல்லுங்கள்... கொல்லுங்கள்...’ என்று உறவினர்கள் சத்தம் போட்டார்கள். நான்கு பேர் துரத்திக் கொண்டு ஓடினார்கள். அதற்குள் அந்தப் பெண் தண்ணீருக்குள் மூழ்கினாள்.

இரண்டு பேர் கரையில் நின்று கொண்டார்கள். இரண்டு பேர் அவளைத் தண்ணீரில் விரட்டிச் சென்றார்கள். கறுகிப் போன கூந்தலை இறுக்கிப் பிடித்து இழுத்து வந்தார்கள். அவளுடைய கை கால்களில் இருந்த தோல் பிய்ந்து பிய்ந்து விழுந்தது.

முகம் நெருப்பில் வெந்து, தோல் வழுக்கிச் சுருண்டு அலங்கோலமாகக் தொங்கியது. அப்போதும் அவர்கள் விடவில்லை. 




அவளிடம் கால்வாசி உயிர்தான் மிஞ்சி இருந்தது. இவ்வளவையும் பார்த்துக் கொண்டு நின்ற வெள்ளைக்கார நீதிபதிக்கு கோபம் வந்து விட்டது. அவளை விட்டு விடச் சொல்லிச் சத்தம் போட்டார். ஆனால் உறவினர்கள் மறுத்தார்கள்.

’அவள் மறுபிறவி எடுத்து விட்டாள். ஆகவே, அவளைக் கட்டாயப் படுத்திச் சாகடிக்க முடியாது. இனிமேல் அவளைக் காப்பாற்ற வேண்டியது என்னுடைய பொறுப்பு. எங்களுடைய கம்பெனியின் பொறுப்பு’ என்று நீதிபதி மறுபடியும் உரக்கக் கத்தினார்.

இறந்து கொண்டு இருந்த அவளை மீட்டு எடுத்தார். சொந்தக்காரார்கள் போட்ட தடைகளையும் மீறி, அவளைத் தன்னோடு அழைத்துச் சென்றார். அவளுடைய உடலில் பாதி எரிந்து விட்டது. முகமும் பாதி எரிந்து விட்டது. 




இருந்தாலும் உயிர் பிழைத்து விட்டாள். கடவுள் வெள்ளைக்காரன் வடிவத்தில் வந்து நீதி பேசி இருக்கிறார். அப்படித் தான் சொல்ல வேண்டும்.

மருத்துவர்கள் வந்தார்கள். உடனடியான முதலுதவிகளைச் செய்தார்கள். யாரும் அவளைத் தொல்லை பண்ணக் கூடாது என்று காவல் போடப் பட்டது. அந்தப் பெண் ஒரு மாதம் படுத்தப் படுக்கையாய்க் கிடந்தாள்.

பெண்ணைக் காப்பாற்றிய ஆங்கிலேய நீதிபதிக்கு எதிராகப் பல கண்டனக் கூட்டங்கள். பல கண்டனக் கடுதாசிகள். அவற்றை எல்லாம் நீதிபதி சட்டை செய்யவில்லை. அவர்களை மனித மாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகள் என்று திட்டித் தீர்த்ததுதான் மிச்சம்.

அந்தப் பெண் பின்னர் வேறு ஊருக்கு இரகசியமாக அனுப்பி வைக்கப் பட்டாள். அங்கே போய் கூலி வேலை செய்தாள். ஐம்பது வயது வரை உயிர் வாழ்ந்தாள். கடைசியில் ஓர் அனாதையாக இறந்தும் போனாள். இதை எழுதும் போது என் கண்கள் கல்ங்குகின்றன.




நாடு பிடிக்க வந்த ஒரு வெள்ளைக்காரனுக்கு இருந்த ஒரு மனிதம், ஒரு மனிதநேயம், ஓர் ஈவு இரக்கம், நம்ப சாதி சனங்களுக்கு இல்லாமல் போய் விட்டதே. வேதனையாக இருக்கிறது. சமயத்தின் பேரில் இப்படியும் ஓர் அநியாயமா. நெஞ்சு அடைக்கிறது.

பின்னர் சில நாட்கள் கழித்து அந்த நீதிபதி தம் வேலையை பதவிதுறப்பு செய்துவிட்டு இங்கிலாந்திற்கே போய்ச் சேர்ந்து விட்டார். இனிமேல் அந்த ஜென்மங்களின் கண்ணிலே படக் கூடாது என்று போயே போய்ச் சேர்ந்து விட்டார். நல்ல மனிதர்.

இந்த நிகழ்ச்சியை ஒரு வெள்ளைக்காரப் பெண் நேரில் பார்த்து இருக்கிறார். அதை அப்படியே ஒரு செய்தியாக இங்கிலாந்தில் உள்ள பத்திரிகைக்கு எழுதி அனுப்பியும் விட்டார். அந்தப் பத்திரிகை ஆவணம் இன்னும் இருப்பதால்தான் இந்தக் கதையையும் உங்களால் படிக்க முடிகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் அந்த ஆவணத்தைப் படித்து இருக்கிறேன். லண்டன் பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் முறையில் ஆவணப் படுத்தி வைத்து இருக்கிறார்கள். என்றைக்காவது ஒரு நாள் எழுத வேண்டும் என்று நினைத்தேன். இன்றைக்கு நினைப்பு வந்து விட்டது. 




சதி என்பதை உடன் கட்டை ஏறுதல் என்று சொல்வார்கள். அப்படி இல்லை. அது கொச்சையான மூடப் பழக்கம் என்றுதான் நான் சொல்வேன். அந்த மாதிரியான சமயப் பழக்கங்கள் எந்த அளவிற்கு இந்தியாவை ஆக்கிரமித்து இருந்து இருக்கின்றன பாருங்கள். மேலே சொன்ன அந்த ஒரு காட்டுமிராண்டி நிகழ்ச்சியே போதும்.

இந்தியாவைத் தவிர வேறு சில நாடுகளிலும் அந்த மாதிரியான பழக்கம் இருந்து இருக்கிறது. ஆனால் தூபம் போட்டது யார் தெரியுங்களா. சாட்சாத் இந்தியா. அந்தப் புனித மண்ணின் சமய ஜீவிகள்தான்.

இந்தியா என்கிற பாரத மாதாவைக் குறை சொல்ல வேண்டாம். வந்தாரை வாழ வைக்கும் புண்ணிய பூமி. ஆனால் அந்தப் புண்ணிய பூமியில் வாழ்ந்த சந்தர்ப்ப சமயவாதிகள் தான் அந்த மண்ணிற்கு மாசையும் மருவையும் சீதனங்களாகக் கொடுத்து விட்டுச் சென்று இருக்கிறார்கள்.

பெண்ணை ஒரு தெய்வமாகப் போற்றியது இந்திய மண். பெண்ணைப் பாரத மாதா என்று புகழ்ந்து பாடியது இந்திய மண். ஆனால் அதே அந்தப் புண்ணிய மண்ணில் வாழ்ந்த மனிதர்கள் தான், பெண்களுக்கு எதிராகப் பற்பல வன்கொடுமைகளை வாரி இறைத்துவிட்டுச் சென்று இருக்கிறார்கள்.

ஓர் ஆண்டு இல்லை. ஈராண்டுகள் இல்லை. பற்பல நூறு ஆண்டுகள். அந்தக் கொடுமைகள் தொடர்ந்து பயணித்து இருக்கின்றன. சொல்லில் மாளாது.

பல இலட்சம் பெண்கள் சின்ன வயதிலேயே சாகடிக்கப்பட்டு இருக்கின்றனர். எல்லாம் எதனால் வந்தது. தான் பாவித்த பொருளை அடுத்தவன் பாவிக்கக் கூடாது என்கிற அல்ப புத்தி. இன்னும் தெளிவாகச் சொன்னால் புரையோடிய சின்ன புத்தி. 

அந்த விசயத்தில் அந்தக் காலத்துப் பெரிசுகளைச் சும்மா சொல்லக் கூடாது. படும் போக்கரிகளாகப் பேர் போட்டு இருக்கின்றன. என்ன மாதிரியான கீழ்த்தரமான எண்ணங்கள்.

மொகலாயப் பேரரசர்கள் பாபர், ஹுமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜகான், ஔரங்கசிப் போன்றவர்கள், இந்த உடன் கட்டை ஏறுதலைக் கண்டித்து சட்டங்களைக் கொண்டு வந்தார்கள். அந்தச் சட்டங்கள்கூட செல்லுபடி ஆகாமல் போயின.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
21.05.2020

சான்றுகள்:

1. Sangari, K., & Vaid, S. (1981). Sati in Modern India.
2. Trinath, Mishra (2010). The Hindu book of the dead. Penguin Books.
3. The Commission of Sati (Prevention) Act, 1987.
4. Nagendra Kr. Singh(2000).
5. Saroj Gulati, Women and society: northern India in 11th and 12th centuries.
6. Goa Continuity and Change; Narendra K. Wagle. George Coelho. University of Toronto.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக