07 ஜூலை 2020

ரியூனியன் தமிழர்கள் - 1

தமிழ் மலர் - 07.07.2020

உலகின் எந்த ஓர் இடத்திற்குச் சென்றாலும் அங்கே ஒரு தமிழரைப் பார்க்கலாம். பாரதியாரைப் பற்றி பேசுவார். பாரதிதாசனைப் பற்றி பேசுவார். மணிக் கணக்கில் லுமேரியா கண்டத்தைப் பற்றியும் பேசுவார். ஆனால் தமிழர் நாடு என்று பேசுவதற்கு அங்கே இடம் இருக்காது. 



இருப்பதைத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு இல்லாததைப் பற்றி பேசு என்றால் எப்படிங்க. தமிழன் வாழாத நாடு இல்லை! ஆனால் அவனுக்கு என்று ஒரு நாடும் இல்லை! சந்தோஷம்.

ஆர்க்டிக் வட துருவத்தில் இக்ளு பனிக்கட்டிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அட்லாண்டிக் தென்துருவத்தில் ரோஸ் பனிக்கட்டிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

அமேசான் காட்டுத் தலைவெட்டிக் கும்பல்களுடன் வாழ்கிறார்கள். அனாகொண்டா பாம்புகளுடன் கட்டிப் பிடித்து கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும் தமிழர்களும் இருக்கவே செய்கிறார்கள்.



ஆனால் தமிழர்கள் வாழும் இடங்களில் தமிழ் மொழி பேசுகின்றார்களா? தமிழ் கலாசாரத்தோடு வாழ்கின்றார்களா? தமிழ்க் கலாசாரத்தைப் பின்பற்ற அவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இருக்கின்றனவா? அதுவே இப்போதைக்கு ஒரு பெரிய கேள்வி.

ஆனாலும் நம்மில் பலரும் அறியாத ஓர் அழகிய தீவில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். ஏறக்குறைய 300 ஆண்டுகளாக வாழ்கிறார்கள்.

ரொம்ப நாட்களாக வாழ்ந்து அங்கு உள்ள உள்நாட்டு மக்களுடன் ஐக்கியமாகிப் போய் விட்டதால் தமிழையும் மறந்து கொண்டு வாழ்கிறார்கள். அவர்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை தொடர். மூன்று பாகங்களைக் கொண்டது. 



கிழக்கு ஆப்பிரிக்கா பகுதியில் மொரிசியஸ் தீவிற்கு அருகே ரியூனியன் என்கிற ஒரு தீவு இருக்கிறது. மிக மிக அழகிய தீவு. உலகத்திலேயே அழகான தீவுகளின் பட்டியலில் இந்தத் தீவிற்கு ஓர் இடம் உள்ளது.

இங்கே தான் இலட்சக் கணக்கான தமிழர்கள் இன்றைய வரைக்கும் வாழ்ந்து வருகின்றார்கள். தமிழர்களாக வாழ்ந்தும், தமிழ் மொழி சரி வரத் தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பற்றித் தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

ரியூனியன் தீவு (Reunion) ஆப்பிரிக்கா கண்டத்திற்குக் கிழக்கே இந்தியப் பெருங்கடலில் உள்ளது. அருகில் மொரிசியஸ் தீவு (Mauritius). 



ரியூனியன் தீவின் மொத்தப் பரப்பளவு 2500 சதுர கி.மீ. மலேசியாவில் பினாங்கு; மலாக்கா மாநிலங்களைச் சேர்த்தால் எவ்வளவு வருமோ அவ்வளவு பரப்பளவு. ரியூனியன் தீவு சின்ன ஒரு நாடு தான்.

ஏறக்குறைய எட்டரை இலட்சம் பேர் வாழ்கிறார்கள். அவர்களில் தமிழர்கள் 2 இலட்சம் பேர். 18-ஆம் நூற்றாண்டில் இருந்து தமிழர்கள் இந்தத் தீவில் குடியேறி வருகிறார்கள்.

1797-ஆம் ஆண்டில் இந்தத் தீவின் மொத்த மக்கள் தொகை 56,800. 1850-ஆம் ஆண்டில் மக்கள் தொகை 110,891 பேர். வருடத்தைக் கவனியுங்கள். அவர்களில் வெள்ளைக்காரர்கள் 10,400 பேர்; அடிமைகள் 44,800 பேர். அப்போது அங்கே இருந்த தமிழர்கள் அனைவருமே அடிமைகளைப் போல நடத்தப் பட்டார்கள். அதையும் நினைவில் கொள்ள வேண்டும்.



இந்தத் தமிழர்கள் பாண்டிச்சேரியில் இருந்து கொண்டு போகப் பட்டவர்கள். 1848-ஆம் ஆண்டு வரை பல ஆயிரம் தமிழர்கள் கொண்டு போகப் பட்டார்கள்.

வேலை செய்யுங்கள். சம்பளம் தருகிறோம் என்று சொல்லித் தான் அழைத்துக் கொண்டு போனார்கள். ஆனால் அங்கே போனதும் அவர்களை அடிமைகளைப் போல நடத்தி இருக்கிறார்கள். வேதனையிலும் வேதனை.

இங்கே மட்டும் என்னவாம். அஞ்சு வெளியும் பத்து வெள்ளியும் கித்தா மரத்தில் குலை குலையா காய்ச்சு தொங்கும். அதை பொறுக்கி எடுக்கிற வேலை. இரண்டு வருசம் வேலை செஞ்சா போதும். அப்புறம் பதினாறு பட்டிக்கும் தலைப்பா கட்டலாம் என்று சொல்லித் தானே அழைத்து வந்தார்கள். 



அப்படியா நடந்தது. எங்கு இருந்தோ வந்த வந்தேறிகள் எல்லாம் அவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்லும் நிலைக்குப் போய் விட்டது. விடுங்கள். வயிற்றெரிச்சல்.

2010-ஆம் ஆண்டு கணக்குப்படி ரீயூனியனின் மொத்த மக்கள் தொகை ஐந்தரை இலட்சம். இதில் இரண்டு இலட்சம் பேர் தமிழர்கள். இந்தத் தீவு இன்றைய வரைக்கும் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

180 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டுக்கு அருகில் இருக்கும் பாண்டிச்சேரி பிரெஞ்சு நாட்டுக் காலனித்துவத்தின் கீழ் இருந்தது. அப்போது தான் ரியூனியன் தீவில் இருந்த கரும்புத் தோட்டங்களில் பணிபுரிவதற்கு பாண்டிச்சேரி தமிழர்கள் அழைத்து செல்லப் பட்டார்கள்.



ஆனாலும் அவர்கள் அங்கே மிக மோசமாக அடிமைகளைப் போல நடத்தப் பட்டார்கள். பின்னர் காலத்தில் அவர்களுக்குப் பிரான்ஸ் நாட்டுக் குடியுரிமை கிடைத்தது.

மனிதத் தன்மையுடன் பார்க்கப் பட்டார்கள். மெல்ல மெல்ல அவர்களின் வாழ்வியல் நிலையும் உயர்ந்தது. இப்போது ஓரளவிற்கு நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மலேசியத் தமிழர்களைவிட பரவாயில்லை ரகம். பெருமைப் படுவோம். சரி.

ரியூனியன் தீவில் வாழும் தமிழ் மக்கள்; பிரெஞ்சு - தமிழ்க் கலாசாரக் கலவையுடன் வாழ்ந்து வருகிறார்கள். அண்மைய காலங்களில் தமிழர்களின் மக்கள் தொகை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. 



இருந்தாலும் தங்களால் இயன்ற வரை தமிழ்க் கலாசாரத்தைக் கட்டிக் காப்பதற்கு முயற்சிகள் செய்து வருகிறார்கள்.

ரியூனியன் தீவு மடகாஸ்கர் தீவிற்கு வடக்கே 480 கி.மீ. தொலைவிலும் மொரிஷீயஸ் தீவிற்குத் தென் மேற்கே 200 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. மொரிஷீயஸ் தீவை விடக் கொஞ்சம் பெரியது. ரியூனியன் தீவின் தலைநகரம் செயிண்ட் டெனிஸ் (Saint-Denis).

மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடலில் ஒரு பெரிய எரிமலை (Piton des Neiges) வெடித்தது. அந்த எரிமலை கக்கிய குழம்பால் உருவானதுதான் இந்த ரியூனியன் தீவு.

பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை மலைகள்; பச்சை ஆறுகள்; அருவிகள்; குளங்கள்; குட்டைகள்; இனம் மொழி பெயர் தெரியாத தாவர இனங்கள். 



சுருக்கமாகச் சொன்னால் இந்தத் தீவு சொர்க்கத்தில் இருந்து கிள்ளிக் கொண்டு வரப்பட்ட ஓர் அழகுச் சொப்பனம்.

ரியூனியன் தீவு இப்போது பிரான்ஸ் நாட்டின் கடல் கடந்த ஓர் உறுப்பு நாடாக இயங்கி வருகிறது. அதாவது பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலோருக்குப் பிரெஞ்சுக் குடியுரிமை உள்ளது. பிரான்ஸ் நாட்டுத் தேர்தல்களில் வாக்கு அளிக்கிறார்கள்.

ரியூனியன் தீவு மாசில்லா மண்வளமும் தூசில்லா மழைவளமும் கொண்ட அழகிய தீவு. அதிகக் குளிரும் இல்லை. அதிக வெப்பமும் இல்லை. மிதமான தட்ப வெப்ப நிலை.

சுற்றிலும் நீல நிறக் கடல். தீவிச் சுற்றிலும் மலைகள். பச்சைக் காடுகள். எப்போதுமே மூலிகைத் தாவரங்களின் மணம். ஆங்காங்கே தாதுப் பொருட்கள் கலந்த நீர் ஊற்றுகள். 



அந்தத் தீவை இயற்கை அன்னை அமைத்துக் கொடுத்த மூலிகைப் பூங்கா என்றும் தாராளமாகச் சொல்லலாம். அவ்வளவு மூலிகைப் பொருட்கள் மலிந்து கிடக்கின்றன. அதனால் உலகின் பல பகுதிகளில் இருந்தும் மூலிகை வைத்தியத்திற்கு இந்தத் தீவைத் தேடிச் செல்கிறார்கள்.

ரியூனியன் தீவு 1520-ஆம் ஆண்டு டியோகோ பெரேரா (Diogo Fernandes Pereira) எனும் போர்த்துக்கீசியரால் கண்டுபிடிக்கப் பட்டது. அடுத்து 1509-ஆம் ஆண்டில் லோபஸ் டி செக்குயிரா (Lopes de Sequeira) அங்கு சென்றார்.

லோபஸ் டி செக்குயிரா என்பவரைத் தெரியும் தானே. மலாக்காவில் காலடி எடுத்து வைத்த முதல் போர்த்துகீசியர். இவர் வந்த நேரமோ என்னவோ தெரியவில்லை. இரண்டே ஆண்டுகளில் மலாக்கா வரலாறே மாறிப் போனது. இவர் இங்கு வந்த பின்னர் தான் மலாக்காவிற்கு வந்தார். 



அதன் பிறகு ரியூனியன் தீவு ஆங்கிலேயர்களிடமும் பிரெஞ்சுக்காரர்களிடமும் மாறி மாறி வந்தது. ஆகக் கடைசியாக 1816-ஆம் ஆண்டில் இருந்து பிரெஞ்சுக்காரர்களிடம் நிரந்தரமாகவே வந்துவிட்டது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதித் தமிழர்கள் இந்திய மாக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று இருக்கிறார்கள். அப்போது ரியூனியன் தீவைப் பார்த்து இருக்கலாம். தங்கி இருக்கலாம். இளைப்பாறி இருக்கலாம்.

ஆனாலும் தமிழர்களோ மற்ற மற்ற இந்தியர்களோ 17-ஆம் நூற்றாண்டு வரை இந்தத் தீவில் நிரந்தரமாகக் குடியேறவில்லை. அதற்கான சான்றுகளும் இல்லை. 



பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சுக்கார முதலாளிகள் (French East India Company) ரியூனியன் தீவிற்கு வந்தார்கள்.

இந்தத் தீவைப் புனரமைக்க வேலையாட்கள் தேவைப் பட்டார்கள். ஆப்பிரிக்காவின் காப்பிரி இன மக்களையும் மடகாஸ்கர் தீவின் பழங்குடி மக்களையும் அடிமைகளாக கொண்டு வந்தார்கள். கரும்பு, சோளத் தோட்டங்களை உருவாக்கி அங்கு அவர்களை வேலை வாங்கினார்கள்.

மலாயாவில் ஆங்கிலேயர்கள் எப்படி தமிழர்களின் உயிர்களை வாங்கி வதைத்தார்களோ அதே போலத்தான் பிரெஞ்சுக்காரர்கள் ரியூனியன் தொழிலாளர்களையும் கசக்கிப் பிழிந்து எடுத்து இருக்கிறார்கள்.



சர்க்கரை ஆலைகளைக் கட்டி அங்கேயும் வேலை வாங்கினார்கள். 1848-ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் அடிமை முறை ஒழிக்கப் பட்டது. அதனால் வேறு வழி இல்லாமல் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டி வந்தது. எதிர்பாராத இந்தத் தாக்கத்தினால் ரியூனியன் தீவின் பொருளாதாரம் ஒடிந்து போனது. 

கரும்பு உற்பத்தியைப் பெருக்கிச் சர்க்கரை விற்பனையில் லாபம் சம்பாதிக்கலாம் என்று நினைத்த பிரெஞ்சு முதலாளிகளை அடிமை ஒழிப்புச் சட்டம் திக்குமுக்காடச் செய்தது.

அதனால் இந்தியாவின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற நகரங்களில் இருந்து தமிழர்களை ரியூனியன் தீவிற்கு ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் சென்றார்கள். 



தவிர 1828-ஆம் ஆண்டில் சிலர் இந்தியாவில் இருக்கும் கோவா பகுதியில் இருந்தும் அடிமைகளாக போய் இருக்கிறார்கள். அதே ஆண்டில் ஆந்திராவில் இருந்தும் 15 பேர் போய் இருக்கிறார்கள். இவர்கள் தான் ரியூனியனுக்குப் போன முதல் ஆந்திரா மக்கள்.

ஆக அந்த வகையில் பார்த்தால் 1848-ஆம் ஆண்டிற்கு முன்னர் அங்கு இருந்த இந்தியர்களின் எண்ணிக்கையே மொத்தம் 4200 பேர் தான். இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும் சரி; அவர்கள் அனைவரையும் தமிழர்கள் என்றே அப்போது அழைத்தார்கள்.

அதற்குக் காரணம் இருந்தது. அந்தக் காலக் கட்டத்தில் காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தமிழ் ஒப்பந்தக் கூலியாட்களே எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்தார்கள். 



அவர்களே கரும்புத் தோட்டங்களிலும் சர்க்கரை ஆலைகளிலும் அதிகமாக வேலை செய்தார்கள். முதலாளிகளின் வீடுகளில் சமையல்; எடுபிடி வேலைகளையும் செய்து வந்தார்கள்.

இவை 1848-ஆம் ஆண்டிற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகள். எல்லா இடங்களிலும் தமிழர்களே இருந்ததால் புதிதாகப் போன இந்தியர்களையும் தமிழர்கள் என்றே அழைத்து இருக்கிறார்கள். இப்படித்தான் ரியூனியன் தீவில் தமிழர்களின் வரலாறு தொடங்குகிறது.

உலகத்தில் தன்மானத்திற்கு என்று இயக்கம் கண்டவர்கள் தமிழர்கள் என்று சொல்வார்கள். இன்று பாருங்கள். உலகின் பல நாடுகளில் ஒதுக்கப்பட்ட சின்னமாக வாழ்கின்றார்கள்.

ஈ எறும்புகளுக்கு இரையாக இருக்கட்டுமே என்று அரிசி மாவில் கோலம் போட்டவர்கள் தமிழர்கள். இப்போது பாருங்கள், அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி நிற்கும் நிலைமை.

கோட்டை கட்டி ஆண்ட ஓர் இனம் சில நாடுகளில் கோணித் துணி கட்டித் தூங்குகின்ற அலங்கோலம். சரியாகவே அமைகின்றது. ரியூனியன் தமிழர்கள் என்ன என்ன கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

சான்றுகள்:

1. Tabuteau, Jacques (1987). Histoire de la justice dans les Mascareignes (in French). Paris: Ocean editions. p. 13. ISBN 2-907064-00-2.

2. Beesoon, Sanjay; Funkhouser, Ellen; Kotea, Navaratnam; Spielman, Andrew; Robich, Rebecca M. "Chikungunya Fever, Mauritius, 2006". 14 (2): 337–338.

3. Bollee, Annegret (2015). "French on the Island of Bourbon (Reunion)". Journal of Language Contact. 8 (1): 91. doi:10.1163/19552629-00801005.

4. Reunion - The severe island - Official French website (in English)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக