06 ஜூலை 2020

ஜப்பானில் பெண்சாய்தேன் சரஸ்வதி வழிபாடு

தமிழ் மலர் - 05.07.2020 

உலகின் பல நாடுகளில் பல வகையான சரஸ்வதி வழிபாடுகள். அவற்றில் மிகப் பழமையான ஒரு வழிபாட்டு

முறை ஜப்பான் நாட்டில் உள்ளது. இன்றும் சரஸ்வதி தேவிக்காகக் கோயில்கள் கட்டி வழிபட்டு வருகிறார்கள். அந்தக் கோயில்களில் ஒன்றை ஜப்பான் நாட்டின் தேசிய வரலாற்றுத் தளமாகப் பிரகடனம் செய்து இருக்கிறார்கள். 


ஜப்பானில் சரஸ்வதி தெய்வத்திற்கு மட்டும் நூற்றுக் கணக்கான ஆலயங்கள் உள்ளன. தோக்கியோ மாநகரத்தில் ஓர் ஆலயத்தில் ஒரு பெரிய சரஸ்வதி சிலை உள்ளது. அதே போல ஒசாகா மாநகரத்தில் உலகிலேயே மிகப் பெரிய சரஸ்வதி சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் செய்தி பலருக்கும் தெரியாதது.

இந்தியாவின் மாபெரும் நதிகள் கங்கை, யமுனை, சரஸ்வதி. இவை புனிதமான நதிகள். அந்த வகையில் ஜப்பானில் உள்ள சில பல நீர்நிலைகள், குளங்கள் போன்றவற்றை சரஸ்வதி கடவுளாக நினைத்து ஜப்பானியர்கள் வணங்கி வருகிறார்கள். 


ஜப்பானில் சரஸ்வதி தேவியை பெந்தேன் (Benten) என்றும் பெண்சாய்தேன் (Benzaiten) என்றும் அழைக்கிறார்கள். இந்து தெய்வமான சரஸ்வதியில் இருந்து தோன்றிய ஜப்பானிய புத்த தெய்வம். இந்துக்கள் வழிபடும் கலைமகள். சரஸ்வதியின் மறு வடிவம்.

பெண்சாய்தேன் சரஸ்வதி வழிபாடு 6-ஆம் நூற்றாண்டு; 8-ஆம் நூற்றாண்டுகளில் ஜப்பானுக்கு வந்தது. ஏறக்குறைய 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சரஸ்வதி வழிபாடுகள் அங்கே தொடங்கி விட்டன.

சீனாவின் தங்க ஒளி காப்பியத்தின் (Sutra of Golden Light) சீன மொழிபெயர்ப்புகள் வழியாக ஜப்பானுக்கு வந்தது. தங்க ஒளி காப்பியத்தை சுவர்ணபிரபாச சூத்திரம் என்றும் அழைப்பார்கள். அதில் சரஸ்வதி தேவிக்காக ஓர் அத்தியாயத்தையே ஒதுக்கி இருக்கிறார்கள்.


சற்று தெளிவாகச் சொல்கிறேன். சுவர்ணபிரபாச சூத்திரம் என்பது ஒரு புத்த மகாயான நூல். இந்தியாவில் எழுதப் பட்டது. சீனாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.

இந்த நூல் இப்போது சீனாவில் வழக்கில் இல்லை. இருந்தாலும் பாருங்கள்.

சீனாவில் இருந்து ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நூல் ஜப்பானில் மிகவும் பிரபலமாகி விட்டது. சதுர் மகாராஜாக்கள் நாட்டை நன்முறையில் ஆளும் அரசனைக் காப்பதாக இந்த நூலில் கூறப்பட்டு உள்ளது.

அதைக் கருத்தில் கொண்டு இந்த நூல் நாட்டைக் காப்பதற்காகப் பொது இடங்களில் போதிக்கப்பட்டது. அதாவது பாராயணம் செய்யப்பட்டது. 


முதன் முதலில் இந்தச் சூத்திரம் கி.பி. 660-ஆம் ஆண்டில் ஜப்பானிய அரசவையில் பாராயணம் செய்யப்பட்டது. இந்தக் காலக் கட்டத்தில் சீனாவும் கொரியாவும் ஜப்பானுக்கு அச்சுறுத்தலாக இருந்தன. நல்ல வேளையாக போர் எதுவும் வரவில்லை.

அதனால் கி.பி 741-ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டு சக்கரவர்த்தி ஷோமு (Emperor Shōmu) நாடு முழுவதும் பல பௌத்த மடங்களை நிறுவினார். இந்த வகையில் தான் சரஸ்வதியின் வழிபாடு ஜப்பானில் பரவியதாகக் கருதப் படுகிறது.

தவிர இந்தியாவில் இருந்து தனிப்பட்ட வகையில் ஜப்பான் நாட்டிற்குச் சென்ற பௌத்த துறவிகள் அங்கு சரஸ்வதி தேவியின் வழிபாட்டை அறிமுகம் செய்து இருக்கின்றனர்.

இரு வகைகளில் சரஸ்வதி தேவி ஜப்பானுக்குச் சென்று இருக்கிறார். முதலாவதாக சீனாவின் தங்க ஒளி காப்பியத்தின் வழியாக சென்று இருக்கிறார். அடுத்து இந்தியாவில் இருந்து ஜப்பான் நாட்டிற்குச் சென்ற பௌத்த துறவிகள் வழியாகவும் அவருடைய பயணம் அமைந்து இருக்கிறது.


ஜப்பானில் தாமரை சூத்திரம் எனும் சமய நூல் (Lotus Sutra). அந்த நூலில் ஜப்பானிய வீணையைக் கொண்டு சித்தரிக்கப் படுகிறார். ஜப்பானிய வீணையை பிவா (Biwa) என்று அழைக்கிறார்கள். இந்த நூலை 'சித்தம்' எனும் பெயரில் ஜப்பானியர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

இந்து மதத்தில் கல்வி, ஞானத்திற்கு தெய்வமாகக் கருதப் படுகிறவர் சரஸ்வதி தேவி. அதே அந்த சரஸ்வதியைப் புத்த மதத்திலும் வழிபடுகிறார்கள். ஞானம் வழங்கும் பெண் தெய்வமாக வழிபடுகிறார்கள். இந்து தெய்வ வழிபாட்டில் சரஸ்வதி தேவி வீணையைப் பயன்படுத்துகிறார்.

இந்தியாவில் இருந்து ஜப்பான் நாட்டிற்கு புத்த மதம் பரவிய காலக் கட்டத்தில், இந்த சரஸ்வதி தேவி வழிபாடும் அங்கு காலூன்றியது. சரஸ்வதி தேவியை ஒரு தெய்வமாக ஏற்றுக் கொண்டனர். இன்றும் ஜப்பான் நாட்டு மக்கள் வழிபடுகின்றனர்.

ஜப்பானியர்கள் கருட பகவானை 'கருரா' என அழைக்கிறார்கள். வாயு பகவான், வருண பகவான் போன்ற தெய்வங்களுக்கு ஜப்பானில் சிலைகள் உள்ளன.


ஜப்பான் நாட்டின் தலையாய மதங்களாக இருப்பவை ஷிந்தோ மதம்; புத்த மதம். இந்த இரு மதங்களும் இந்தியாவில் இருந்து வந்த துறவிகளால் ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டவை.

ஜப்பானிய பௌத்த மதத்தில் இசையின் மூலமாக சொற்பொழிவுகள்; இசைக் கவிதைகள் படைக்க பிவா எனும் கருவியைப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கருவி முதலில் சீனாவில் தான் பிரபலமாக இருந்தது. பின்னர் கிழக்கு ஆசியா முழுவதும் பரவியது.

உலகின் பல நாடுகளில் சரஸ்வதி வழிபாடுகள் உள்ளன. கிரீஸ், இத்தாலி, ஆப்பிரிக்க நாடுகள்; மத்திய கிழக்கு நாடுகள்; கொரியா; ஜப்பான்; இந்தோனேசியா; மலேசியா நாடுகள்.

இருந்தாலும் பெண்சாய்தேன் வழிபாடு ஜப்பானின் ஷிந்தோ (Shinto) பயன்பாட்டுடன் ஒத்துப் போகிறது. அதனால் ஜப்பானின் பாரம்பரிய மதத்தினர் ஷிந்தோக்களும் சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர்.


ஜப்பான் நாட்டுப் பெண்சாய்தேன் சரஸ்வதி தேவி கையில் வீணை வைத்து இருப்பதைப் போல தந்தி மீட்டும் இசைக் கருவியை வைத்து இருக்கிறார். அந்த வடிவத்தில் பல சிற்பங்களும் பல ஓவியங்களும் அங்கே இருக்கின்றன.

ஜப்பான் நாட்டு மக்கள் தங்களின் பிள்ளைகள் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கவும்; கல்வித் தேர்வுகளில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறவும் பெண்சாய்தேன் சரஸ்வதி தேவி கோயில்களுக்குச் சென்று வழிபடுகிறார்கள்.

அவர்களின் பாரம்பரிய விழாக் காலங்களின் போது, பெண்சாய்தேன் சரஸ்வதி தேவிக்கு சிறப்பான சடங்குகளைச் செய்து வழிபடுகிறார்கள்.

ஜப்பானிய சமூக நம்பிக்கைகளில் அதிர்ஷ்டத்திற்கு ஏழு தெய்வங்கள் உள்ளனர். அவர்களில் ஒருவராக சரஸ்வதி தேவி இடம் பிடித்து இருக்கிறார். அந்த அதிர்ஷ்ட தேவதைக்கு புகுஜின் (fukujin) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.


இந்தப் புகுஜின் தேவதையை திரிமூர்த்தி தேவதை என்றும் சொல்கிறார்கள். திரிமூர்த்தி தேவதை என்றால் சரஸ்வதி; லெட்சுமி; பார்வதி.

இந்து சமயத்தின் சரஸ்வதி; லெட்சுமி; பார்வதி தெய்வங்களுக்கு அங்கே ஜப்பானில் புகுஜின் தெய்வங்கள் என்று பெயர் சூட்டி சிறப்பு செய்கிறார்கள். மனசுக்குள் ஒரு தடுமாற்றம்.

பெண்சாய்தேன் தெய்வத்தை நீர், நேரம், வார்த்தைகள், பேச்சு, சொற்பொழிவு, இசை, அறிவு போன்றவற்றைப் பிரதிபலிக்கும் தெய்வமாக ஜப்பானியர்கள் பார்க்கிறார்கள்.

சரஸ்வதியின் சீன மொழிப் பெயர் பியான்கைட்டியன் (Biancaitian). பெண்சாய்தேன் சரஸ்வதி தேவி மிகவும் சக்தி பெற்ற தெய்வமாகவும், அதே சமயத்தில் ஜப்பான் நாட்டையே காக்கும் தெய்வமாகவும் போற்றப் படுகிறார்.

(Benzaiten is the goddess of everything that flows: water, time, words, speech, eloquence, music and by extension, knowledge)


ஜப்பானில் ஏராளமான இடங்களில் அவருக்குச் சின்னச் சின்ன கோயில்கள் உள்ளன. இருப்பினும் பெரிய ஆலயங்களும் உள்ளன.

சாகாமி விரிகுடாவில் (Sagami Bay) உள்ள எனோஷிமா தீவு (Enoshima Island); பிவா (Lake Biwa) ஏரியிலுள்ள சிகுபு தீவு (Chikubu Island); செட்டோ கடலில் (Seto Inland Sea) உள்ள இட்சுகுஷிமா தீவு (Itsukushima Island); ஆகிய தீவுகளில் சரஸ்வதிக்குப் பெரிய பெரிய ஆலயங்களைக் கட்டி இருக்கிறார்கள்.

சிகுபு தீவில் உள்ள சரஸ்வதி ஆலயத்தை ஜப்பான் நாட்டின் இயற்கை அழகு; தேசிய வரலாற்றுத் தளமாகப் பிரகடனம் செய்து இருக்கிறார்கள். (It is a nationally designated Place of Scenic Beauty and Historic Site).

மெலும் ஒரு செய்தி. தோக்கியோவில் உள்ள கோகோகுஜி கல்லறைகளில், சமஸ்கிருத எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. மறைந்து போனவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் அந்த எழுத்துகளை அழிக்காமல் வைத்து இருக்கின்றனர். 


இந்தியாவில் பயன்பாட்டில் இல்லாத சித்தம் எனும் நுால் ஜப்பானில் உள்ளது. கோயாசன் நகரில் இந்து சமயத்தைக் கற்றுத் தரும் ஓர் இந்து சமயப் பள்ளிக்கூடமே உள்ளது. அந்த வகையில் ஜப்பான் இந்தியா இரு நாடுகளுக்கும் இந்து மதம், இந்து கடவுள் வழிபாடுகளில் தொடர்புகள் உள்ளன.

ஜப்பானிய இலக்கியங்களின் படி, இந்தியாவில் இருந்து வந்த பௌத்த துறவிகள் தங்களின் கலாசார ஆன்மீகக் கருத்துகளை உள்நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

இந்து - பௌத்த சமயங்களின் நம்பிக்கைகள்; தத்துவங்கள் நிறையவே இன்றும் ஜப்பானில் பரவலாகப் பின்பற்றப்படுகின்றன.

கல்வி ஞானம் பற்றி உலகத்திற்கு முதன்முதலில் எடுத்துச் சொன்ன நாடு இந்தியா. அங்கு பல புண்ணிய சீலர்கள் தோன்றினார்கள். பல தத்துவ உபதேசங்களை வழங்கினார்கள். அவர்களின் அந்த ஞான உபதேசங்கள் கடல் கடந்து போயின. இப்போது வீணையின் தந்திகள் வழியாக ஆனந்த பைரவிகளை இசைக்கின்றன. 


ஜப்பான் நாட்டில் இந்து சமயம் சார்ந்த சரஸ்வதி தெய்வத்தைப் போற்றிப் புகழ்கிறார்கள். உலகத்தில் வாழும் இந்துக்கள் எல்லாம் திரும்பிப் பார்க்கிறார்கள். திரும்பிப் பார்க்காமலேயே என் மனதிற்குள் இனம் தெரியா மகிழ்ச்சி.

சான்றுகள்:

1. Ludvik, Catherine. “Uga-Benzaiten: The Goddess and the Snake.” Impressions, no. 33, 2012, pp. 94–109. JSTOR, JSTOR, www.jstor.org/stable/42597966.

2. Saraswati meets Buddha, SHAILAJA TRIPATHI, The Hindu, March 21, 2016

3. Pye, Michael (2013). Strategies in the study of religions. Volume two, Exploring religions in motion. Boston: De Gruyter. p. 279.

4. https://en.wikipedia.org/wiki/Hinduism_in_Japan





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக