25 நவம்பர் 2020

தாகித்தி தீவில் தவித்த கன்னிகள் - 2

தமிழ் மலர் - 25.11.2020

வட அட்லாண்டிக் பெரும் கடலில் மேற்கிந்தியத் தீவுகள். ஏறக்குறைய 50 தீவுகள். அவற்றில் ஒன்று ஜமாய்க்கா. இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தெளித்த அழகு அழகான பச்சைக் கானகங்கள்.

பாய்ந்து படியும் பச்சைக்காட்டு மடிகளில் நிறைந்து போகும் கரும்புத் தோட்டங்கள். அங்கே மனித உரிமை மீறல்களின் அடிவானத்தில் அடிமைக் கறுப்பர்கள். அவர்களைச் சுற்றிலும் மேய்ச்சல் பாய்ச்சல்களின் தொடுவானத்தில் வெள்ளைத் தோல் அவதாரங்கள்.

அடிமைக் கறுப்பர்களுக்குச் சாப்பாடு போடுவது என்பது அந்த வெள்ளைத் தோல் அவதாரங்களுக்குப் பெரும் பிரச்னையாக இருந்தது. கறுப்பர்களின் கடுமையான உடல் உழைப்பு. அதனால் ரொம்பவும் சாப்பிட்டார்கள்.

எவ்வளவுதான் சாப்பாடு போட்டாலும் கட்டுபடி ஆகவில்லை. முதலாளிகளுக்கும் திண்டாட்டம் தொழிலாளிகளுக்கும் திண்டாட்டம்.

அந்தச் சமயத்தில் ஜேம்ஸ் குக் எனும் கடலோடி. பசிபிக் தீவுகளில் ஈரப் பலாக்காய் இருப்பதாகச் சொன்னார். அந்த ஈரப் பலாக்காய் கறுப்பர்களின் சாப்பாட்டுத் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம் என்றும் பரிந்துரை செய்தார்.

இந்த ஈரப் பலாக்காயின் கன்றுகளைக் கொண்டு வருவதற்கு இங்கிலாந்து அரசாங்கம், வில்லியம் பிளை (William Bligh) என்பவரைப் பசிபிக் கடலுக்கு அனுப்பி வைத்தது.

இந்த ஆய்வுப் பயணத்திற்குப் பவுண்டி (Bounty) எனும் பாய்மரக் கப்பல். 1787 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி அந்தக் கப்பல் பயணமானது. பசிபிக் மாக்கடலில் இருக்கும் தாகித்தி (Tahiti) தீவை நோக்கிப் பயணம். 46 பேர் கொண்ட குழு. கடல் பயணம் 306 நாட்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வழியாகத் தாகித்தி தீவை அடைந்தார்கள். வந்தவர்களுக்கு அசத்தலான வரவேற்பு.

கப்பல் சிப்பந்திகளும் தீவுக்குள் போய் பூர்வீக மக்களுடன் சந்தோசமாய்ப் பழகினார்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். கப்பல் சிப்பந்திகளுக்கு ஒரு முக்கியமான நிபந்தனை.

'எங்கே வேண்டும் என்றாலும் போங்க வாங்க... என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. பழகுங்க. உருளுங்க. புரளுங்க. ஆனால். உள்ளூர்ப் பெண்களின் விசயத்தில் மட்டும் கொஞ்சமாய் அடக்கி வாசிங்கடா சாமி. அப்புறம் அது விவகாரமான விசயமா மாறிடும்.

அப்புறம் வெட்டுக் குத்துக் கொலையில் போய் முடியும். வேண்டாங்கடா சாமி' என்று கப்பல் தலைவர் அவர்களுக்குப் படித்துப் படித்துச் சொன்னார். கேட்டார்களா.

கேட்டார்கள். கேட்டார்கள். கேட்ட மாதிரி பதுவுசாகப் பக்குவமாகப் பழகினார்கள். சுருக்கமாகச் சொன்னால் ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி பழகினார்கள். பெண்களைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி போய்க் கொண்டே இருந்தார்கள்.

அதையும் மீறி பாருங்கள். ஒரு மன்மதக் குஞ்சு போய் கலாட்டா பண்ணி விட்டது. மன்மதக் குஞ்சு இல்லை. மசாலா குஞ்சு. சொன்னது எல்லாம் அதன் மர மண்டையில் ஏறவில்லை. ராசாவைச் சொல்லிக் குற்றம் இல்லை. இள ரத்தம். கொஞ்சமாய் சூடேறி ரொம்பவுமாய் கொதித்து விட்டது.

இளைய ராசாவுக்கு 18 வயசு. பக்கத்தில் பச்சை மேனி கன்னிப் பெண். சாமுத்திரிகா இலட்சணத்தில் பால் வடியும் பால்கோவா. 16 வயசு. நம்ப ராசா கலங்கிப் போய் கலகலத்துப் போய் அவள் காலிலேயே விழுந்து விட்டார் போலும். என்ன செய்வது. இரண்டுக்குமே வயசு கோளாறு.

தென்னை மரத்தில் இருந்து ’கள்’ வரும். எல்லோருக்கும் தெரியும். அங்கே தாகித்தி தீவில் அதுவே காலம் காலமாக வரலாறு. நிறையவே கள் தோப்புகள். பல நூறு ஆண்டுகளாக கள் இறக்கி கள் குடித்து இருக்கிறார்கள். இந்தக் கள் சமாசாரம் உலகம் முழுமைக்கும் பரவி இருக்கிறது. இது ஒரு நல்ல சான்று.

தப்பாக நினைக்க வேண்டாம். சமயங்களில் எனக்கும் லகர ளகரப் பிரச்சினைகள் வந்து போகும். 'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே மொழி தோன்றிவிட்டது' என்பார்கள். அது எந்தக் கல் என்பதுதான் இங்கே கொஞ்சம் இடிக்கிறது. ஓர் எழுத்து பண்ணுகின்ற வேலையைப் பாருங்கள். பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

சரி. பானமும் வெள்ளை. மன்மத ராசாவின் மனசும் வெள்ளை. ஆக அந்த வெள்ளைப் பானத்தை மொக்கை முடிச்சுத் தெரியாமல் குடித்து இருக்கிறான். அந்த நேரம் பார்த்து அந்த மேனகா மோனகா அந்தப் பக்கமாய் வந்து இருக்கிறாள். என்ன செய்வது.

நம்ப மன்மதக் குஞ்சு கொஞ்சம் கூடுதலாகக் குடித்து மப்பு மந்தாராமாகிப் போனான். இயற்கை பானம் வஞ்சகம் இல்லாமல் வேலை செய்து இருக்கிறது. ராசாவும் ஒரு மனுசன் தானே. பாவம் அந்தப் பதின்ம வயசு மன்மத ராசா.

பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்ள... அந்த நேரம் பார்த்து… சிவ பூசையில் கரடி நுழைஞ்சது மாதிரி பெண்ணின் சொந்தக்காரன் பார்க்க... பார்த்த விசயத்தை வெளியே போய் சொல்ல... ஊரே பற்றிக் கொண்டது.

கிராமத்து மக்கள் அரிவாளைத் தூக்கிக் கொண்டு மனமத ராசாவை விரட்டி இருக்கிறார்கள். இருவரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எங்கே போவது என்று தெரியாமல் மன்மத ராசா திகைத்துப் போய் அப்படியே நின்று இருக்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு அந்த இடம் நன்றாக அத்துப்படி. அதனால் அங்குள்ள ஒரு குகைக்குள் அவனை இழுத்துக் கொண்டுப் போய் இருக்கிறாள். எங்கே ஒளிந்தால் எப்படியும் கண்டுபிடிக்க முடியாது என்பது அவளுக்குத் தெரிந்த விசயம்.

சுற்றிக் கிடந்த செடி கொடிகளைக் கொண்டு வந்து ஒரு மறைப்பு கட்டினாள். படுக்க ஒரு பச்சைப் பாய் தயார் செய்து கொடுத்தாள். இரண்டு பேருமே அன்றைக்கு இராத்திரி அங்கேயே தங்கி இருக்கிறார்கள்.

பொழுது விடிந்ததும் அவள் அந்தப் பக்கம் போக இவன் இந்தப் பக்கம் வர அவர்களின் மரத்தோன் ஓட்டம் ஒரு முடிவிற்கு வந்தது. பிறகு ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் கூடி சமாதானம் செய்து வைத்து இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் தப்பித்ததே பெரிய விசயம்.

இதில் ஒரு பெரிய வேடிக்கை என்ன தெரியுமா. ஊர்ப் பஞ்சாயத்து சமாதானம் செய்கிற மாதிரி சமாதானம் செய்தது. ஆனால், உள்ளுக்குள் ஒரு பெரிய திட்டம். அதாவது மன்மதக் குஞ்சைத் தீர்த்துக் கட்டுவது. அதற்கு மூன்று ஆட்களையும் ரெடி பண்ணி விட்டார்கள்.

விசயம் எப்படியோ அந்த இளம் பெண்ணுக்குத் தெரிந்து விட்டது. தன் உயிரைப் பணயம் வைத்து, இரவோடு இரவாகக் கடலில் நீந்திப் போய் இருக்கிறாள். கப்பலின் கயிறுகளைப் பிடித்து ஏறி விசயத்தைச் சொல்லி இருக்கிறாள்.

சுறா மீன்கள் நிறைந்த கடல் பகுதி அது. தான் விரும்பியவனுக்காகத் தன் உயிரையே பணயம் வைத்து ஆழ்கடலில் நீந்திப் போய் இருக்கிறாள். தன் உயிரைக் கூட அவள் பெரிதாக நினைக்கவில்லை.

தான் விரும்பியவனின் உயிர்தான் அவளுக்கு அப்போது பெரிதாகத் தெரிந்து இருக்கிறது. பாருங்கள். யார் யாருக்கு எங்கே எங்கே எல்லாம் எழுதி வைத்து இருக்கிறது. பாருங்கள்.

அவளுடைய பிடிவாதம்; அவளுடைய துணிச்சலான முடிவு, உள்ளூர் மக்களையே அசர வைத்து விட்டது. கட்டினால் அவனைத் தான் கட்டுவேன் இல்லை என்றால் செத்துப் போவேன் என்று மிரட்டி இருக்கிறாள்.

உடனே அவளைப் பிடித்துக் கொண்டு போய் ஒரு வீட்டுக்குள் அடைத்துப் போட்டு வைத்து இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் அங்கு இருந்து தப்பித்து விட்டாள்.

எப்படி தப்பித்தாள் என்பது ஊர் பஞ்சாயத்திற்கே பெரிய ஆச்சரியம். அவளை அடைத்து வைத்து இருந்த கதவை வெளியே இருந்து தான் திறக்க முடியும். உள்ளே இருந்து திறக்க முடியாது.

அப்படி என்றால் யார் திறந்து விட்டு இருக்க முடியும். யாராக இருக்கும் என்று அப்போது அவர்களிடம் இருந்த ’இண்டர்போல் போலீஸ்’ ஆராய்ந்து பார்த்தது. கடைசியில் கண்டுபிடித்து விட்டார்கள். யார் தெரியுமா.

நம்ப மாட்டீர்கள். அந்தப் பெண்ணின் தாயார் தான். ஏற்கனவே ஒரு முதியவருக்கு மூன்றாம் தாரமாக அந்தப் பெண்ணைக் கட்டிக் கொடுக்க ஏற்பாடுகள் நடந்து முடிந்து விட்டன. பெண்ணுக்கு வயது 16. முதியவருக்கு வயது 61. என்னே பொருத்தம். எண்களைத் திருப்பிப் போட்டுப் பார்த்து சந்தோஷப் படுங்கள்.

தாயாருக்கு அந்தக் கல்யாணம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் அடைபட்டு கிடந்த தன் மகளைத் திறந்து விட்டு கையில் கொஞ்சம் பொன் ஆபரணங்களையும் கொடுத்து ‘நீ ஆசைப் பட்டவன் கூடவே கண்காணாத இடத்திற்கு ஓடிப் போய் விடு’ என்று ஒரு படகையும் கொடுத்து இரவோடு இரவாக அனுப்பி வைத்து இருக்கிறாள்.

அந்தப் பெண் படகில் போய்க் கொண்டு இருக்கும் போது வழிமறிக்கப் பட்டாள். மீண்டும் கைதியானாள். அப்புறம் அதற்குள் நமப மன்மத ராசாவுக்கும் விசயம் எட்டி விட்டது. அவனும் சும்மா இல்லை.

தன் நண்பர்கள் இரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு தீவில் இறங்கி விட்டான். நூற்றுக் கணக்கான பூர்வீக மக்களின் ஆள்பலத்தை மூன்று பேர் எப்படிங்க சமாளிக்க முடியும். அதற்குள் கப்பலில் இருந்த சிலரும் களம் இறங்கி விட்டார்கள்.

வேறு வழி இல்லாமல், பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து இருவருக்கும் நல்லபடியாகக் கல்யாணத்தைச் செய்து வைத்தார்கள். இதுவும் ஆழ்கடலில் நடந்த ஓர் அதிசயம்தான்.

அந்த மன்மத ராசாவின் பெயர் குயிந்தால். கடத்தல் கும்பலில் ஆகச் சிறியவன். அப்போது அவனுக்கு வயது 18. இங்கிலாந்தில் புத்தகங்களைத் திருடியதற்காகச் சிறைக்குப் போனவன். அவனைப் பிடித்துக் கப்பல் பயணத்தில் அனுப்பி விட்டார்கள்.

நல்ல முக இலட்சணம். ஓரளவுக்குப் படித்தவன். போதாதா. அதுவே அவனுக்கு பிளஸ் பாய்ண்ட். அவன் காதலித்தப் பெண்ணுக்கு வயது 16. இருந்தாலும் கடைசியில் கணவன் மனைவியாக வாழ்ந்தார்களா?

இவர்களின் வாழ்க்கையில் விதி எப்படி விளையாடியது என்பதைப் பிறகு சொல்கிறேன். முதலில் ஒரு பீடிகை போட்டு விடுகிறேன். நிச்சயமாக உங்கள் மனசு ஈரமாகும். நிச்சயம் அழுது விடுவீர்கள். இது உண்மையாக நடந்த கதைங்க. தொடர்ந்து படியுங்கள்.

தாகித்தி தீவில் வாழ்ந்த பூர்வீகக் குடிமக்களில் பல பிரிவுகள். ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு தலைவன். அந்தத் தலைவன் ஒவ்வோர் ஆண்டும் தன் பெயரை மாற்றிக் கொள்வான். அதில் ஒருவன். பெயர் தீனா. மக்களுக்குத் தலைவன். இவனுடைய பழைய பெயர் ஊட்டு.

கப்பலுக்கு வந்த பூர்வீகத் தலைவன் தீனா, கூடவே தன் மனைவியையும் கூட்டி வந்தான். அவள் பெயர் இடாயா. கப்பலில் ஒரு கத்தரிக்கோலைப் பார்த்து விட்டான். அது தனக்கு வேண்டும் என்று ஒரேயடியாக அடம் பிடித்து இருக்கிறான்.

இருப்பதோ ஒன்றே ஒன்று. அதை வைத்துக் கொண்டு தான் எல்லாரும் தலைமுடியை வெட்டிக் கொள்ள வேண்டும். என்ன செய்வது. அவன் தொடர்ந்து அடம் பிடித்தான். இங்கே நம்ப பெண்கள் சமயங்களில் அடம் பிடித்துச் சிணுங்கிக் கொள்கிறார்களே. அந்த மாதிரி தான். மன்னிக்கவும் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

ஆக அவனுடைய ரௌசு தாங்க முடியாமல் ‘இன்னா சாமி படா பேஜாரா இருக்கே இந்தா எடுத்துக்கோ..’ என்று கத்தரிக்கோலைக் கொடுத்து விட்டார்கள். அதன் பின்னர் கப்பலிலேயே ஒரு பெரிய தடபுலனா விருந்து. பெரிய ஆட்டைப் பிடித்து வந்து பார்பர்கியூ செய்து இருக்கிறார்கள்.

தாகித்தி முறைப்படி ஆண்கள் தான் முதலில் சாப்பிட வேண்டும். அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை பெண்கள் பக்கத்திலேயே நின்று பார்த்துக் கொண்டு காத்து இருக்க வேண்டுமாம். மிச்சம் மீதியைத் தான் பெண்கள் சாப்பிட வேண்டுமாம். அப்படி ஒரு வழக்கம் இருந்து இருக்கிறது.

இருந்தாலும் இப்போது எல்லா இடத்திலும் காலம் மாறி விட்டது. மிச்சம் மீதியைக் கணவன்மார்கள் தான் சாப்பிடுகிறார்களாம். பாவம் பாரிட் கள்ளுக்கடை கந்தசாமி. புலம்பிக் கொண்டு திரிகிறார். சந்தேகம் இருந்தால் அவரிடம் போய் கேட்டுப் பாருங்கள். சரி.

திடீரென்று ஒருநாள் கப்பல் சிப்பந்திகள் மூவர் காணாமல் போய் விட்டார்கள். தேடிப் பார்த்ததில் துப்பாக்கிகள், மருந்துகள் போன்றவற்றைத் திருடிக் கொண்டு காட்டிற்குள் ஓடிப் போனது தெரிய வந்தது.

மீண்டும் இங்கிலாந்திற்குத் திரும்பிச் செல்ல அவர்களுக்கு விருப்பம் இல்லையாம். தாகித்தி ஒரு சொர்க்க லோகமாம். தடுக்கி விழுந்தாலும் சுகம் சுகமாய் இருக்கிறதாம். இருந்தாலும் சில நாட்களில் பிடிபட்டார்கள். ஆளாளுக்கு வக்கனையாகப் பத்துப் பதினைந்து கசையடிகள் கிடைத்தன.

அதில் மன்மத ராசா குயிந்தால் ஒருவர். ஆனால் தண்டனையில் இருந்து தப்பித்தான். எப்படி. இங்கே தான் அவனுடைய பூர்வீக மனைவி வருகிறாள். என் புருசன் என்னைப் பார்க்க வந்தார் என்று ஒரே சத்தம். ஒரே ஆர்ப்பாட்டம். ஊர் மக்கள் அடங்கிப் போனார்கள். இதன் தொடர்ச்சி நாளை இடம் பெறும்.

சொல்ல மறந்த செய்தி. இந்தக் கட்டுரை தமிழ் மலர் நாளிதழுக்கு மலாக்கா முத்துக்கிருஷ்ணன் எழுதும் 999-ஆவது கட்டுரை. அடுத்து 1000-ஆவது கட்டுரை இடம் பெறுகிறது. மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகில் ஒரு காலச்சுவடு, அந்தப் பெருமை தமிழ் மலர் நாளிதழைச் சாரும். இருகரம் கூப்பிச் சிரம் தாழ்த்துகிறேன். நன்றி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.11.2020





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக