01 மே 2022

செஜாரா மெலாயு காப்பியத்தில் கோத்தா கெலாங்கி

தமிழ் மலர் - 01.05.2022

(காணாமல் போன கோத்தா கெலாங்கி ஆய்வு நூலின் 17-ஆவது அத்தியாயம்)

செஜாரா மெலாயு (Sejarah Melayu) என்பது பழம் பெரும் மலாய் இலக்கிய மரபு நூல். மலாயாவின் பண்டைய கால வரலாற்றுப் பதிவுகளைக் கொண்ட ஒரு மலாய் வரலாற்றுக் காப்பியம்.

1500-ஆம் ஆண்டுகளில், மலாக்காவைச் சுல்தான்கள் ஆட்சி செய்த போது உரைநடை வடிவில் எழுதப்பட்டது. மலாய் மொழியின் மிகச் சிறந்த இலக்கிய வரலாற்றுப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது.

செஜாரா மெலாயுவின் அசல் பெயர் ‘சுலாலத்துஸ் சலாடின்’ (Sulalatus Salatin - Genealogy of Kings). அதன் முக்கிய கருப்பொருள் மலாக்காவின் மகத்துவத்தைப் பேணிக் காப்பது; மலாக்காவின் மேன்மையைப் போற்றுவது. மலாய் இலக்கியத்தின் மேன்மைகளைப் பொது மக்களுக்கு அறியச் செய்வது. (UNESCO (2001)

தவிர, மலாக்கா சுல்தான்கள் வரலாறு; மலாயா மன்னர்கள் வரலாறு; இவர்களின் பரம்பரைக் காலக் கோடுகள் (Time Line) போன்றவற்றை செஜாரா மெலாயு வரிசைப் படுத்திப் பட்டியலிடுகிறது.

மலாக்கா சுல்தானகம்;

மலாயா மீதான படை எடுப்புகள்;

மலாயா அரசர்களின் திருமண உறவுகள்;

மலாயா அரசர்களின் அரச தந்திர உறவுகள்;

மலாக்கா அரசர்களின் மேன்மைகள்;

பெண்டஹாரா துன் பேராக் (Bendahara Tun Perak)

மலாக்கா சுல்தானக வீரர் லக்சமனா ஹாங் துவா (Laksamana, Hang Tuah)

போன்றவர்களின் மாட்சிமைகளையும் பதிவு செய்கிறது. (UNESCO 2012, p. 219)

_செஜாரா மெலாயுவில் குறிப்பிடத்தக்கப் பதிவுகள்_

1. ராஜா இஸ்கந்தர் சுல்கர்னைன் (Raja Iskandar Zulkarnain) வரலாறு; சங் சபுர்பா (Sang Sapurba) என்பவரின் பரம்பரைத் தோற்றம்; புக்கிட் செகுந்தாங் (Bukit Seguntang); தோற்றம்; இவை முதல் பதிவில் வருகின்றன.
(Abdul Samad Ahmad 1979, p. 8)

2. பலேம்பாங் பகுதியில் இருந்து துமாசிக் வரையிலான நீல உத்தமன் சாகசங்கள்; சிங்கப்பூரா ஆளுமையை நிறுவுதல்; சிங்கப்பூருக்குப் பெயர் வந்த கதை; இவை இரண்டாம் பதிவு.
(Ibid., 30)

3. படாங் (Badang) எனும் மாவீரரின் புராணக் கதை; அவரின் அசாதாரண வலிமையை ஸ்ரீ ராணா விக்ரமாவின் (Sri Rana Wikrama) சிங்கப்பூர் அரசவையில் வெளிப்படுத்தியது; இவை மூன்றாம் பதிவு.
(Ibid., 47)

4. சிங்கப்பூராவின் கடற்கரை திருக்கை மீன்களால் ஆக்கிரமிக்கப் பட்டது. அந்தக் கட்டத்தில் ஹங் நாடிம் (Hang Nadim) எனும் சிறுவனின் சாகசத் துணிச்சல். இவை நான்காம் பதிவு.
(Ibid., 67)

5. சிங்கப்பூர் மஜாபாகித் அரசிடம் வீழ்ந்தது; சிங்கப்பூரின் கடைசி ஆட்சியாளர் ஸ்ரீ இஸ்கந்தர் ஷா (பரமேஸ்வரா) தப்பிச் சென்றது. இவை ஐந்தாம் பதிவு.
(Ibid., 62–71)

6. மலாக்காவின் உருவாக்கம்; மலாக்காவின் சட்டங்கள் மற்றும் மலாக்காவின் ஒழுங்கு முறைகள் மலாக்கா நிர்வாகத்தின் அடிப்படையாக மாறியது; மலாக்காவிற்கு எப்படி மலாக்கா என்று பெயர் வந்தது; இவை ஆறாம் பதிவு.
(Ibid., 71–73)

7. துன் பேராக்; மலாக்காவின் இரண்டாவது சக்தி வாய்ந்த மனிதரான கதை; இது ஏழாம் பதிவு.
(Ibid., 89–111)

8. ஹங் துவா மற்றும் அவரின் தோழர்களின் கதை. மலாக்கா அரசவையில் நடந்த கைகலப்பில் ஹங் துவா தன் தோழர்களில் ஒருவரான ஹங் ஜெபாட்டைக் கொன்றது; இது எட்டாம் பதிவு.
(Australian National University, N/Tuah)

9. புத்திரி குனோங் லேடாங் புராணக்கதை; இது ஒன்பதாம் பதிவு.
(Abdul Samad Ahmad 1979, pp. 212–215)

10. போர்த்துகீசியர்கள் மலாக்காவைக் கைப்பற்றியது. மலாக்கா நகரத்தின் மீதான முதல் நாள் தாக்குதல்; இரண்டாவது நாள் தாக்குதலில், மலாக்கா போர்த்துகீசியர்களிடம் வீழ்ந்தது. இவை 10-ஆம் பதிவு.
(Ibid., 271)

செஜாரா மெலாயுவின் பதிவுகளில் கோத்தா கெலாங்கியைப் பற்றி சில குறிப்புகள் உள்ளன. இருப்பினும் புராணக் கதைகளும் அந்த நூலில் பல இடங்களில் மேற்கோள்களாகக் காட்டப் படுகின்றன.


எடுத்துக் காட்டாக கடாரத்தின் பூஜாங் சமவெளி பற்றிய பதிவுகள். இக்காயாட் மெரோங் மகாவங்சா (Hikayat Merong Mahawangsa) எனும் நாட்டுப்புறக் கதையில் வரும் ராஜா பெர்சியோங் (Raja Bersiong) என்பவரைத் தொடர்பு படுத்திச் சொல்கிறது. இராஜேந்திர சோழன் படை எடுத்ததைப் பற்றியும் சொல்கிறது.

மலாக்கா வரலாற்றை ஆதியில் இருந்து அந்தம் வரையில் முழுமையாகச் சொல்லிச் செல்கிறது. ஆனால் பரமேஸ்வரா எனும் பெயர் அதன் பயன்பாட்டில் இல்லை. பரமேஸ்வராவை இஸ்கந்தர் ஷா (Iskandar Shah) என்று மேற்கோள் காட்டுகிறது.
(C.M. Turnbull 2009; pp. 21–22)

மலேசியா, கிளந்தான் மாநிலத்தின் கிராமப் புறங்களில் பல வரலாற்றுப் புராணக் கதைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, புக்கிட் மாராக் (Bukit Marak) எனும் குன்றுப் பகுதியைச் சார்ந்த பழங்காலத்துக் கதை. புக்கிட் மாராக் குன்றுப் பகுதி, கிளந்தான் மாநிலத் தலைநகரமான கோத்தா பாரு நகரத்தில் இருந்து 24 கி.மீ. தெற்கே உள்ளது.

அந்தக் குன்றுப் பகுதி, புராணக் கால இளவரசி சாடோங் (Puteri Saadong) என்பவரின் வரலாற்றுச் செயல்பாடுகளுடன் இணைக்கப் படுகின்றது. இளவரசி சாடோங் நீராடியதாக நம்பப்படும் ஒரு பிரபலமான குளம் புக்கிட் மாராக் பகுதியில் உள்ளது.

புக்கிட் மாராக் குன்றின் உச்சியில் மூன்று கல் பாறைகள் உள்ளன. அந்தக் கல் பாறைகள் இளவரசி சாடோங்கிற்குப் பிடித்தமான இசைக் கருவியைப் போன்று அமைந்து உள்ளன என்று பொது மக்கள் நம்புகிறார்கள்.

இளவரசி சாடோங் என்பவர் கிளந்தான் வரலாற்றில் புராணக் கால ராணி. இவருக்கு இளவரசி விஜய மாலா (Puteri Vijaya Mala) எனும் ஒரு பெயரும் உண்டு. 1667-ஆம் ஆண்டில் அவரின் 15-ஆவது வயதில், கிளந்தான் ஜெம்பால் (Queen Regnant of Kelantan, Jembal 1663 - 1667) அரசின் அரசியானார்.

சயாம் - கிளந்தான் போரில் சயாமிய அரசர் நாராய் (King Narai of Siam) என்பவரின் அரண்மனைக்குப் பிணையாகக் கொண்டு செல்லப் பட்டார். விடுதலையாகித் திரும்பி வரும் போது, அவருடைய கணவர் ராஜா அப்துல்லா வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து இருப்பதை அறிந்து சினம் அடைந்தார்.

தன் தலையில் செருகி இருந்த குண்டூசியால் தன் கணவனைக் கொன்றாள். அதன் பின்னர் கிளந்தானில் இருந்து காணாமல் போய் விட்டார். இவை செஜாரா மெலாயுவில் காணப்படும் பதிவுகள். (Puteri Saadong, 2020)

அதே போல சரவாக் சாந்துபோங் மலையைப் பற்றியும் ஒரு கதை உள்ளது. அந்த மலையின் புராணக் கதையுடன் இரண்டு இளவரசிகளின் கதைகளும் வருகின்றன. இளவரசி சந்துபோங் (Puteri Santubong); இளவரசி செசிஞ்சாங் (Puteri Sejinjang) ஆகியோரின் கதைகளும் செஜாரா மெலாயுவில் இடம்பெற்று உள்ளன.


அந்த வகையில் கிளந்தான் இளவரசி சாடோங்; சரவாக் இளவரசி சாந்துபோங்; இளவரசி செசிஞ்சாங்; குனோங் லேடாங் இளவரசி; ஆகியோரின் புராணக் கதைகளின் தோழமைகள் செஜாரா மெலாயுவில் உள்ளன. (Abdul Samad Ahmad 1979, p. 216 - 217)

கோத்தா கெலாங்கி போன்ற பழங்கால இடிபாடுகளுக்கு செஜாரா மெலாயு மிகச் சரியான விளக்கத்தை வழங்கி இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும் என்பது வரலாற்று ஆசிரியர்கள் பலரின் கருத்து. பொதுவாக, புனைவுக் கதைகள் மட்டுமே இதுகாறும் கோத்தா கெலாங்கியின் நிலைப்பாட்டை நியாயப் படுத்தி வந்துள்ளன.

1511-ஆம் ஆண்டில், மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றினார்கள. அப்போது, அசல் ‘செஜாரா மெலாயு’ மலாக்கா சுல்தான் மகமுட் ஷாவிடம் இருந்தது. அதை எடுத்துக் கொண்டுதான் சுல்தான் மகமுட் ஷா, பகாங்கிற்குத் தப்பிச் சென்றார். சுல்தான் மகமுட் ஷா என்பவர் மலாக்கா சுல்தானகத்தின் கடைசி சுல்தான் ஆகும்.

அதே அந்த அசல் செஜாரா மெலாயு, பின்னர் 1528-ஆம் ஆண்டில் சுமத்திராவில் இருக்கும் கம்பார் நகரத்திற்குக் கொண்டு செல்லப் பட்டது. பின்னர், சிறிது காலத்திற்குப் பின்னர் ஜொகூர் சுல்தானிடம் ஒப்படைக்கப்பட்டது. (Leyden 1821, p. 1)

1536-ஆம் ஆண்டில், ஜொகூர் சுல்தான் தன் புதிய நகரத்தை ஜொகூர் லாமா பகுதியில் நிறுவி இருந்தார். அந்த ஜொகூர் லாமாவின் மீது போர்த்துகீசியர்கள் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது தான், செஜாரா மெலாயு அசல் கையெழுத்துப் பிரதி போர்த்துகீசியர்களால் கைப்பற்றப்பட்டது. (Abdul Samad Ahmad 1979, p. xxiv)


அந்த அசல் பிரதி இந்தியாவின் போர்த்துகீசிய கோவா நகருக்குக் கொண்டு செல்லப் பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கூறுகிறார்கள். அது தவறு என்றும் சிலர் சொல்கிறார்கள். மலேசியா, பகாங் மாநிலத்தின் கோலா லிப்பீஸ் பகுதியில் உள்ள கெலாங்கி குகைக்குக் கொண்டு சொல்லப் பட்டது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் சொல்கிறார்கள். (Roolvink 1967, pp. 310)

இருப்பினும், மலேசிய வரலாற்று ஆசிரியர் அப்துல் சமாட் அகமட் (Abdul Samad Ahmad) வேறு ஒரு மாற்றுக் கருத்தைச் சொல்கிறார். செஜாரா மெலாயு கையெழுத்துப் பிரதி இந்தியாவின் கோவாவிற்கு எடுத்துச் செல்லப்படவில்லை. மாறாக இந்தோனேசியா சுலவாசி (Sulawesi) தீவில் இருந்த கோவா (Gowa) எனும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது என்று பரிந்துரைக்கிறார். (Abdul Samad Ahmad 1979, p. xxv)

அப்துல் சமாட் அகமட் கருத்து வாதம் கீழ்க்கண்டவாறு அமைகின்றது:



ஒரு காலக் கட்டத்தில் மலாக்கா துறைமுகம் ஒரு முக்கியமான நுழைவாயிலாக இருந்தது. அப்போது, சுலவாசி கோவா உட்பட பல நாடுகளுடன் மலாக்கா அரசு வலுவான வர்த்தக; அரசதந்திர உறவுகளை கொண்டு இருந்தது.

போர்த்துகீசியர்கள் மலாக்காவிற்கு வருவதற்கு முன்னதாகவே செஜாரா மெலாயுவின் சில பிரதிகள் சுலவாசி தீவிற்குக் கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என்று அப்துல் சமாட் அகமட் சொல்கிறார். (Abdul Samad Ahmad 1979, p. xxv)

கோவா (Goa) என்பதை குஹா அல்லது குவா (Guha or Gua) எனப் பார்க்க வேண்டும் என்று வில்லியம் லைன்ஹான் (William Linehan) வாதிடுகிறார். கோவா என்பது பகாங், கோலா லிப்பிஸ் நகருக்கு வடக்கே அமைந்து உள்ள குவா என்ற இடமாக இருக்கலாம்.


அங்கு செஜாரா மெலாயுவின் ஒரு சில பிரதிகள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு இருக்கலாம். அதன் பின்னர் 1612-ஆம் ஆண்டில் ஜொகூருக்கு கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்கிறார் வில்லியம் லைன்ஹான்.  (Linehan, 1947a: 112-16; Abdul Rahman Ismail, 1998: 7-20; Roolvink 1967, pp. 310)

போர்த்துகீசியர்களிடம் அந்த ‘செஜாரா மெலாயு’ கொஞ்ச காலம் இருந்தது. பின்னர், ஜொகூரின் அரசப் பிரதிநிதியான ஓராங் காயா சாகோ (Orang Kaya Sogoh)  என்பவரிடம் ஒப்படைக்கப் பட்டது. அதுதான் அசல் பிரதி. ஆனால், பழுது அடைந்து போய் இருந்தது. (Leyden 1821, p. 1)

உண்மையில், அசல் செஜாரா மெலாயு பல மாற்றங்களுக்கு உட்பட்டு உள்ளது. அதன் மிகப் மிகப் பழமையான பதிப்பு ’1612 மே மாதம்’ என தேதி குறிக்கப்பட்டு உள்ளது. (Roolvink 1967, pp. 310)

சேதம் அடைந்த செஜாரா மெலாயு மீண்டும் எழுதப்பட வேண்டும் என அப்போதைய ஜொகூர் சுல்தான் ராஜா அப்துல்லா அவர்கள் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார்.


அந்த வகையில் அந்த வரலாற்று நூலைச் செப்பனிட்டு, சில மாற்றங்களையும் செய்தனர். பத்திரமாகப் பாதுகாத்தும் வந்தனர். துன் ஸ்ரீ லானாங் (Bendahara Tun Sri Lanang) என்பவர்தான் செப்பனிடும் பொறுப்பை ஏற்று இருந்தார். (Leyden 1821, p. 2)

1612-ஆம் ஆண்டில் ஜொகூர் அரச நீதிமன்றத்தின் பெண்டஹாராவாக இருந்தவர் துன் ஸ்ரீ லானாங். பெண்டஹாரா பதவி என்பது பிரதமர் பதவிக்குச் சமமான ஒரு பதவியாகும்.

துன் ஸ்ரீ லானாங், ஜொகூர் அரச நீதிமன்றத்தில் சேவை செய்து வந்தார். அவரிடம் செஜாரா மெலாயு திருத்தப் படுவதற்காகக் கொடுக்கப் பட்டது. திருத்தங்கள் செய்யப்பட்டன. (Abdul Samad Ahmad 1979, p. xxvii)

துன் ஸ்ரீ லானாங் மதிப்பிற்குரிய மனிதர். சிறந்த கல்வியாளர். அவர் அவருடைய காலத்திற்கு ஏற்ற வகையில், அவரின் ஞான அறிவின்படி செஜாரா மெலாயு காப்பியத்தில் திருத்தம் செய்து உள்ளார். (edited and revised, according to conventional wisdom). தப்பாகச் சொல்லவில்லை. அவருடைய பணியை அவர் மிகச் சரியாகச் செய்து உள்ளார் என்றுதான் சொல்ல வருகிறேன்.


ஜொகூர் சுல்தான்கள் மட்டும் இல்லை என்றால் ‘செஜாரா மெலாயு எனும் காப்பியம் இல்லாமல் போய் இருக்கும். அந்த ‘செஜாரா மெலாயு’வின் அசல் பிரதியில் கோத்தா கெலாங்கி பற்றிய குறிப்புகள் உள்ளன.

செஜாரா மெலாயுவில் கோத்தா கெலாங்கி என்பது ஒரு கருங்கோட்டை நகரம் (Kota Batu Hitam; The Black Stone Fort’) என்று சொல்லப் படுகிறது.

ஜொகூர் ஆற்றின் வடக்குப் பகுதியில், கோத்தா கெலாங்கியின் பிரதான கோட்டை இருந்தது. அந்தக் கோட்டை கரும் கற்களால் நிர்மாணிக்கப்பட்டு இருந்தது என்றும் செஜாரா மெலாயு சொல்கிறது.

கெலாங்கி எனும் சொல் ஒரு தாய்லாந்துச் சொல்லாக இருக்கலாம் என்றும் செஜாரா மெலாயு குறிப்புகள் சொல்கின்றன.


ஆனாலும், ‘செஜாரா மெலாயு’ (Sejarah Melayu) வேறு கோணத்தில் வேறு மாதிரியாகப் பதிவு செய்கிறது.

கோத்தா கெலாங்கி அரசர் சூளவர்மன், சோழர்களின் படைகளைக் கோட்டைக்கு அப்பால், பத்து மைல்களுக்கு அப்பால், நேருக்கு நேர் மோதினார் என்று ‘செஜாரா மெலாயு’ பதிவு செய்து இருக்கிறது.

‘செஜாரா மெலாயு’ காலக் குறிப்புகள் நம்பகத் தன்மையைத் தாண்டிப் போகின்றன என்பது வரலாற்று ஆசிரியர்கள் சிலரின் கருத்து.

வரலாற்று நினைவுச் சின்னங்களின் கட்டமைப்புகள், தரையில் இருந்தவாறு பிரமாதமாக வானில் உயர்ந்து நிற்கலாம்.


ஆனாலும் அந்தக் கட்டமைப்புகளை உருவாக்கிய பண்டைய பேரரசுகள் மண்ணுக்கு அடியில் தொந்தரவு இல்லாமல் தூங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. வரலாற்று ஆசிரியர் ஸ்டீவர்ட் வேவல் சொன்ன வாசகங்கள் நினைவுக்கு வருகின்றன. (Stewart Wavell). But while these monumental structures of spectaculation rise magnificently above the ground, the ancient kingdoms themselves remain undisturbed below.’’)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.05.2022

குறிப்புகள்:

1. Moens, Ir. J. L. (trans, R. J. de Touche), ‘Srivijaya, Yava en Kataha’, Journal of the
Malayan Branch of the Royal Asiatic Society, 17(2), 1939.

2. UNESCO 2001, p. 7; Memory of the World: Sejarah Melayu (The Malay Annals)

3. (Chand Chirayu Rajani M.C. 1971). Memory of the World: The treasures that record our history from 1700 BC to the present day.

4. (Raimy Che Ross, December 2003). Kota Gelanggi, lying deep in the jungles at the southern end of the Malay Peninsula, allegedly raided by Raja Rajendra Cholavarman I (AD 1014~44) of the South Indian Chola Dynasty at the dawn of the last millennium, Kota Gelanggi (or Kota Batu Hitam, that is The Black Stone Fort) is mentioned by name in the Sejarah Melayu and may hold the key to the riddle of Srivijaya’s triumvirate polities.

5. (Chithra Madhavan, D K Printworld, 2007). Kota Gelanggi’s precise location and thus its very existence has been the subject of much speculation over the past century of modem archaeological and historical research Winstedt (1932) and Gardner (1932) both suggest that the site may lie somewhere along, the upper reaches of the Johor River.

6. (Swettenham (1885) and Linehan (1936, 1947a and 1947c), on the other hand, equate Kota Gelanggi with the cave complex of the same name in Pahang.

7. (Guy, 1, ‘Tamil Merchant Guilds and the Quanzhou Trade’, in A. Schootenhammer (ed.). In the absence of substantial opposition over the issue, the Kota Gelanggi cave complex of Pahang has since been recognized as ‘the’ Kota Gelanggi, despite the highly circumstantial and unconvincing evidence put forth to support the claim.

8. (Turnbull C.M., 2009). The name Parameswara is not found in the Malay Annals, which tell a romanticized history of the kingdoms of Singapura and Malacca. However, the name Parameswara is found in Portuguese sources such as Suma Oriental, and written Paramicura or Parimicura. Parameswara is a Hindu name derived from the Sanskrit word.

9. (Baker, Christopher; Phongpaichit, Pasuk (2014). It gives the name Iskandar Shah as the last ruler of Singapura and founder of Malacca. Iskandar is Persian for "Alexander", after Alexander the Great, and Shah the Persian title for a king. It has been conjectured that Iskandar Shah of the Malay Annals is the same person as Parameswara based on commonalities in their biographies.

10. (Hervey, D. F. A., ‘A Trip to Gunong Blumut’, Journal of the Straits Branch of the Royal Asiatic Society, 3, 1879, pp. 85-115.) Puteri Saadong or Mariam was the queen regnant of Kelantan from 1663 until 1667. She was the adopted daughter of Siti Wan Kembang (Che Siti), the legendary Queen of Kelantan. Her full title is Tuan Puteri Saadong binti Raja Loyor, Puteri Vijaya Mala, Raja of Jembal, daughter of Raja Loyor bin Raja Sakti, Raja of Jembal.

11. (Raimy Che Ross, December 2003) On Sunday, 13 May 1612, during the reign of Alauddin Riayat Shah III in Pekan Tua, the regent of Johor, Yang di-Pertuan Di Hilir Raja Abdullah also known as Raja Bongsu, had commissioned the rewriting and compilation work of the manuscript to the Bendahara Tun Sri Lanang.

12. (Malay Annals: Thomas Stamford Raffles, Sir). Johor capital of Batu Sawar was sacked by the Acehnese invaders and Alauddin Riayat Shah, and his entire court, including Tun Sri Lanang and Raja Abdullah was captured and exiled to Aceh. Although Tun Sri Lanang manage to worked a bulk of the Annals in Johor, he completed the work during his captivity in Aceh.

13. Nilakanta Sastri, K. A., The Colas, Madras: University of Madras, Madras, 1955.

14. Malay Annals: Thomas Stamford Raffles, Sir; John Leyden; Publisher: London, Longman, Hurst, Rees, Orme, and Brown, 1821. OCLC Number: 5792218. Language Note: Translated from the Malay language.



 

4 கருத்துகள்:

  1. பெயரில்லா1/5/22, PM 2:40

    மிகச் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  2. தேவிசர1/5/22, PM 2:42

    மிகச் சிறப்பு...மிக்க நன்றி..🙏

    பதிலளிநீக்கு
  3. செல்வகுமார்2/5/22, PM 8:54

    அருமை அருமை

    பதிலளிநீக்கு
  4. செல்வகுமார்2/5/22, PM 8:56

    மற்ற பல சரித்திர குறிப்புகளை பகிரவும்

    பதிலளிநீக்கு