15 அக்டோபர் 2022

ஜேம்சு புரூக்

(மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்; தமிழாசிரியர்களின் பயன்பாட்டிற்காக சரவாக் மாநிலத்தைப் பற்றி 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தயாரித்துத் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்துள்ளேன். அங்கிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக் கட்டுரை 22.05.2022-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.)

(ஜேம்சு புரூக் கட்டுரையின்
முகவரி: https://ta.wikipedia.org/s/b667 )

சர் ஜேம்சு புரூக் (ஆங்கிலம்: Sir James Brooke; மலாய்: Raja Putih Sarawak) (பிறப்பு: 29 ஏப்ரல் 1803 – இறப்பு: 11 சூன் 1868), என்பவர் போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் சரவாக் சுல்தானகம் எனும் சரவாக் இராச்சியத்தை (Raj of Sarawak) உருவாக்கியவர்.


சரவாக் மாநிலத்தில், வெள்ளை இராஜா (Rajah of Sarawak) எனும் புரூக் பரம்பரையைத் தோற்றுவித்தவர்; அதன் முதல் ராஜாவாக சரவாக் இராச்சியத்தில் கோலோச்சியவர்; 1841-ஆம் ஆண்டில் இருந்து 1868-ஆம் ஆண்டு, அவர் இறக்கும் வரையில் சரவாக் இராச்சியத்தை ஆட்சி செய்தவர்.

இந்தியாவில் கம்பெனி ஆட்சி (Company Raj) நடைபெற்ற போது மேற்கு வங்காளம், ஹூக்லி மாவட்டத்தில் ஜேம்சு புரூக் பிறந்தார்.[1]

இங்கிலாந்தில் சில வருடங்கள் கல்வி கற்ற பிறகு, 1819-ஆம் ஆண்டில், வங்காள இராணுவத்தில் (Bengal Army) பணியாற்றினார். 1825-ஆம் ஆண்டில் முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரில் மிக மோசமாகக் காயமடைந்தார்.

முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்

இந்தப் போர் பிரித்தானியப் பேரரசுக்கும், கோன்பவுங் வம்சத்தின் பர்மியப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற போராகும். ஜேம்ஸ் புரூக் உடனடியாக இங்கிலாந்திற்குத் திருப்பி அனுப்பப் பட்டார்.

1830-ஆம் ஆண்டில், ஜேம்ஸ் புரூக் மீண்டும் சென்னைக்கு வந்தார். ஆனால் பழைய இராணுவப் பிரிவில் மீண்டும் சேர மிகவும் தாமதமாகி விட்டது. பின்னர் தன் இராணுவ வேலையை ராஜினாமா செய்தார். மீண்டும் இங்கிலாந்து நாட்டிற்கே திரும்பினார்.


கூச்சிங்கில் ஜேம்சு புரூக் மாளிகை - 1848

புரூணை அரண்மனையில் 18 டிசம்பர் 1846-ஆம் தேதி; ஜேம்சு புரூக் - புரூணை சுல்தான் பேச்சுவார்த்தை.

இடையில், தான் ஒரு வணிகராக வேண்டும் என விருப்பப் பட்டார். தூரக்கிழக்கு நாடுகளில் வணிகம் செய்ய முயற்சிகள் செய்தார். பலன் அளிக்கவில்லை.

1835-ஆம் ஆண்டில் அவருடைய தந்தையார் இறந்ததும் வாரிசு சொத்து என £30,000 பெற்றார். அந்தப் பணத்தைக் கொண்டு அவர் 142-டன் எடை கொண்ட ஒரு கப்பலை வாங்கினார். அந்தக் கப்பலின் பெயர் ராயலிஸ்ட் (Royalist).[2]

புரூணை சுல்தான் உமர் அலி சைபுதீன்

1838-ஆம் ஆண்டில் போர்னியோ தீவில் கூச்சிங்க் நகரை வந்தடைந்தார். அப்போது புரூணை சுல்தானுக்கு எதிரான கிளர்ச்சிகள் போர்னியோவில் பரவலாக இருந்தன. அந்த எதிர்ப்புகளை சமாதான முறையில் தீர்த்து வைக்கலாம் என ஜேம்ஸ் புரூக் விரும்பினார்.


புரூணை சுல்தானின் மாமா பெங்கிரான் மூடா அசீமை (Pangeran Muda Hashim) கூச்சிங்கில் சந்தித்தார். கிளர்ச்சியை நசுக்க உதவினார். இதன் மூலம் புரூணை சுல்தான் உமர் அலி சைபுதீன் II (Omar Ali Saifuddin II) அவர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

சுல்தான் உமர் அலி சைபுதீன் II; புருணையின் 23-ஆவது சுல்தான் ஆவார். இவர் 1841-இல் புரூக் செய்த உதவிக்கு ஈடாக சரவாக்கின் கவர்னர் பதவியை புரூக்கிற்கு வழங்கினார்.

புரூணை மலாய் பிரபுக்கள்

அந்தக் காலக் கட்டத்தில் சரவாக் கல பகுதிகளில் கடற்கொள்ளைகள் பரவலாக இருந்தன. அந்த கடற்கொள்ளைகளை அடக்குவதில் ஜேம்சு புரூக் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.

இருப்பினும், அப்போது புரூணையில் இருந்த மலாய் பிரபுக்கள் சிலர், திருட்டுக்கு எதிரான புரூக்கின் தீவிரமான நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சி அடையவில்லை. அவை அவர்களுக்குப் பாதகமாக இருந்தன.


புரூணை சுல்தானின் மாமா பெங்கிரான் மூடா அசீமையும் (Pangeran Muda Hashim) மற்றும் அவரின் ஆதரவாளர்களையும் கொலை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள்.

பிரித்தானிய இராணுவத்தைக் கொண்டு, ஜேம்சு புரூக் அந்த முயற்சியை அடக்கினார். புரூணை ஆட்சியைச் சுல்தான் உமர் அலி சைபுதீனிடமே (Omar Ali Saifuddin II) மீட்டுக் கொடுத்தார்.

லபுவான் ஆளுநராக ஜேம்சு புரூக்

1842-ஆம் ஆண்டில், சுல்தான் உமர் அலி சைபுதீன், சரவாக்கின் முழு இறையாண்மையையும் ஜேம்சு புரூக்கிற்கு விட்டுக் கொடுத்தார். 1842 ஆகஸ்டு 18-ஆம் தேதி சரவாக் ராஜா என்ற பட்டம் ஜேம்சு புரூக்கிற்கு வழங்கப்பட்டது.

1844-இல் ஜேம்சு புரூக், தன் மேற்பார்வையில் இருந்த லபுவான் தீவை பிரித்தானிய அரசாங்கத்திற்கு வழங்கினார். 1848-இல் ஜேம்சு புரூக், லபுவானின் ஆளுநராகவும் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

சொந்த வாழ்க்கை

ஜேம்சு புரூக்கிற்குச் சட்டப்படியாக முறையான திருமணம் எதுவும் நடைபெறவில்லை என்று அறியப் படுகிறது. இருப்பினும் இங்கிலாந்தில் அவருக்கு ஒரு மகன் இருந்ததாகவும் தெரிய வருகிறது.


மனைவியின் அடையாளம் அல்லது மகனின் அடையாளம்; அல்லது அவர்களின் பிறந்த தேதிகள் தெளிவாகக் கிடைக்கப் பெறவில்லை.[3]

இருப்பினும் மகனின் பெயர் ரூபன் ஜார்ஜ் வாக்கர் (Reuben George Walker) என்றும்; அந்தப் பெயர் ஜார்ஜ் புரூக் (George Brooke) என மாற்றம் கண்டதாகவும் சொல்லப் படுகிறது.[4]

பெங்கீரான் அனாக் பத்திமா

ஆனாலும் ஜேம்சு புரூக்கிற்கு முஸ்லீம் முறைப்படி ஒரு முறை திருமணம் நடைபெற்று உள்ளது. புரூணை நாட்டைச் சேர்ந்த பெண்மணி பெங்கீரான் அனாக் பத்திமா (Pengiran Anak Fatima) என்பவரை முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிரான்சிஸ் வில்லியம் டக்ளஸ் (1874-1953) (Francis William Douglas) என்பவர், நவம்பர் 1913 முதல் சனவரி 1915 வரை, புரூணை மற்றும் லபுவான் பகுதிகளின் துணை ஆளுநராக (Acting Resident for Brunei and Labuan) பணி செய்தவர்.

அவர் 19 ஜூலை 1915-ஆம் தேதி லண்டனில் உள்ள பிரித்தானிய வெளியுறவு அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் அந்தத் திருமணத்தைப் பற்றி குறிப்பிட்டு உள்ளார்.[5]

ஜேம்சு புரூக்கிற்குப் பிறந்த மகள்

பெங்கீரான் அனாக் அப்துல் காதிர் (Pengiran Anak Abdul Kadir) என்பவரின் மகளும், புருணையின் 21-ஆவது சுல்தானான சுல்தான் முகம்மது கன்சுல் ஆலாம் (Sultan Muhammad Kanzul Alam) என்பவரின் பேத்தி பெங்கீரான் அனாக் பத்திமா. இந்தத் திருமணம் ஐரோப்பாவில் செல்லுபடி ஆகாது.

இந்தத் திருமணத்தின் மூலமாக அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். 1864-இல் பிரான்சிஸ் வில்லியம் டக்ளஸ் என்பவரால் இந்தப் பெண்மணி, நேர்காணல் புரூக்கின் மகள் செய்யப் பட்டார்.

அத்துடன் மருத்துவர் டாக்டர் ஓகில்வி (Dr Ogilvie) என்பவர் புரூக்கின் மகளை 1866-இல் சந்தித்ததாகவும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் டக்ளஸ் குறிப்பிட்டு உள்ளார்.[6]

வாரிசு

ஜேம்சு புரூக்கிற்கு முறையான பிள்ளைகள் இல்லாததால், 1861-இல் அவர் தன் சகோதரியின் மூத்த மகனான கேப்டன் ஜோன் புரூக் ஜான்சன் புரூக் (Captain John Brooke Johnson Brooke) என்பவரைத் தன் வாரிசாகப் நியமித்தார்.

இருப்பினும் இருவருக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டன. வாரிசு பட்டியலில் இருந்து ஜோன் புரூக் தவிர்க்கப் பட்டார். இவருக்குப் பதிலாக, இவரின் ஜோன் புரூக்கின் இளைய சகோதரர், சார்லஸ் அந்தோனி ஜான்சன் புரூக் என்பவரைத் தன் வாரிசாக நியமித்தார்.

இறப்பு

ஜேம்சு புரூக்கின், இறுதி கட்டத்தின் பத்து ஆண்டுகளில், மூன்று முறை பக்க வாதத்தால் பாதிக்கப் பட்டார்.

1868-ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள டார்ட்மூர், டெவன்சையர் (Dartmoor, Devonshire) நகரில் இறந்தார். செயிண்ட் லியோனர்ட் தேவாலயத்தின் (St Leonard's Church) கல்லறையில் அடக்கம் செய்யப் பட்டார்.

சான்றுகள்:

1. Barley, Nigel (2002), White Rajah, Time Warner: London. ISBN 978-0-316-85920-2.

2. Cavendish, Richard, "Birth of Sir James Brooke", History Today. April 2003, Vol. 53, Issue 4.

3. Jacob, Gertrude Le Grand. The Raja of Saráwak: An Account of Sir James Brooks. K. C. B., LL. D., Given Chiefly Through Letters and Journals. London: MacMillan, 1876.

4. Wason, Charles William. The Annual Register: A Review of Public Events at Home and Abroad for the Year 1868. London: Rivingtons, Waterloo Place, 1869. pp. 162–163.

5.
Rutter, Owen (ed) Rajah Brooke & Baroness Burdett Coutts. Consisting of the letters from Sir James Brooke to Miss Angela, afterwards Baroness, Burdett Coutts 1935.

6. Doering, Jonathan. "The Enigmatic Sir James Brooke." Contemporary Review, July 2003.





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக