26 செப்டம்பர் 2020

எஸ்.பி. பாலா ஒரு சகாப்தம்

மூச்சு விடாமல் பாடிய பாலா ஐயா... இன்று மூச்சை நிறுத்திக் கொண்டாயே. உன் பாடல்கள் என்றைக்கும் எந்தன் சாகா மொழிகள். தனிமையில் வாடிய போது எல்லாம் என்னைத் தாலாட்டித் தூங்க வைத்து இருக்கின்றன. கோபம் வந்த போது எல்லாம் சாந்தப் படுத்தி சமாதானம் செய்து வைத்து இருக்கின்றன. அழுகை வந்த போது எல்லாம் அமைதிப் படுத்தி அழகு படுத்தி இருக்கின்றன.

எத்தனையோ பௌர்ணமிகள் உன் பாடல்கள் என்னை குளுமைப் படுத்தி இருக்கின்றன. எத்தனையோ அமாவாசைகள் உன் பாடல்கள் நிம்மதியான நித்திரைக்கு வழிவகுத்துக் கொடுத்து இருக்கின்றன. நீ இல்லா விட்டாலும் இனியும் தொடரும்.

நீங்கள் மறைந்தாலும் என் உயிர் உள்ளவரை உங்கள் குரல் எனக்குள் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கும். இனிமேல் சொர்க்கத்திலும் இன்னிசை மழை பெய்யும். அதைக் கேட்க நாங்களும் வருவோம். அமைதி கொள்வீர்கள் ஐயா.

இந்தியத் திரை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த பாடும் நிலா மறைந்து விட்டது. உலக ரசிகர்களை தன் பாடல்களால் மகிழ்வித்து வாழ்ந்தவர். தன்னுடைய பாடல்களால் பலரின் சோகங்களை மறக்கச் செய்தவர். கோடிக் கணக்கான ரசிகர்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு சென்று உள்ளார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கர்நாடகா அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது. அங்கு அரசு கட்டடங்களில் உள்ள தேசிய மூவர்ண கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்று தெரிவித்து உள்ளது.

16 மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளார். 6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது பெற்று உள்ளார்.

முறைப்படி கர்நாடக இசைப் பயிற்சி பெறவில்லை. இருப்பினும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் இடம் பெற்ற பாடலுக்காக இந்தியத் தேசிய விருது பெற்றார்.

இதுவரை இந்தியத் தேசிய விருதை 4 மொழிகளுக்காக பெற்ற ஒரே பாடகர் எஸ்.பி. பாலா அவர்கள் தான்.

பாடும் நிலா பாலு மறைந்தாலும் அவரின் ஆயிரக் கணக்கான பாடல்களால் ரசிகர்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார்.

இவர் ஒரு பாடகர் மட்டும் அல்ல. தென்னிந்திய மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 45-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.

பன்முகத்திறமை கொண்டவர். இவருக்கு இந்திய அரசு பத்ம ஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளை வழங்கி சிறப்பு செய்து உள்ளது. 2016-ஆம் ஆண்டில் இந்திய அனைத்துலகத் திரைப்பட விழாவில், இந்திய திரைப்பட சாதனையாளர் விருது வழங்கப் பட்டது.

பலமுறை தமிழக அரசின் விருதுகளைப் பல முறை பெற்று உள்ளார். ஆந்திரா அரசின் நந்தி விருதை 25 முறை பெற்று சாதனை படைத்து உள்ளார். 1981-ஆம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டு உள்ளது.

இதுவரை எந்த ஒரு பாடகரும் செய்யாத சாதனைகளை எஸ்.பி. பாலா செய்துள்ளார். 1981 பிப்ரவரி 8-ஆம் தேதி பெங்களூர் நகரில் உள்ள ஓர் ஒலிப் பதிவுக் கூடத்தில், கன்னட இசை அமைப்பாளர் உபேந்திர குமாருக்காக காலை 9 முதல் இரவு 9 மணி வரை, ஒரே நாளில் 21 பாடல்களைப் பாடி சாதனை படைத்தார்.

அது போல், தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும்; இந்தியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடி சாதனை படைத்து உள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 'மின்சார கனவு' என்ற படத்தில் இடம்பெற்ற 'தங்கத்தாமரை மகளே' என்ற பாடலுக்காக, தேசிய விருதை 6வது முறையாக பெற்றார்.

பாடும் நிலா பாலு நீங்கள் மறைந்தாலும் உங்களின் ஆயிரக் கணக்கான பாடல்களால் எங்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.09.2020

தகவல் துணை:

1. https://www.dinakaran.com/

2. https://www.bbc.com/tamil/arts-and-culture-54291955







25 செப்டம்பர் 2020

மலேசியாவில் வந்தேறிகள் யார்? - 1

தமிழ் மலர் - 25.09.2020

மலையூர் மலைநாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் வந்தேறிகளா? பக்கத்து நாடு கறுப்பா சிகப்பா என்று தெரியாமல் வாழ்கின்ற இப்போதைய மலேசியத் தமிழர்கள் வந்தேறிகளா? அல்லது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் புலம் பெயர்ந்த அப்போதைய மலேசியத் தமிழர்கள் வந்தேறிகளா? அல்லது பக்கத்து நாடுகளில் இருந்து கொல்லைப் புறமாக நுழைந்தவர்கள் வந்தேறிகளா?

இந்த நாட்டிலே பிறந்து; இந்த நாட்டிலே வளர்ந்து; இந்த நாட்டிலே வாழ்ந்து; இந்த நாட்டிலேயே மரித்துப் போனவர்களை வந்தேறிகள் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. என்ன நீதி இருக்கிறது. சத்தியத்திற்கு வாய் இருந்தால் மனிதம் செத்துப் போகிறது என்று சத்தம் போட்டுக் கத்தும்..

மலேசியா என்பது பச்சைப் பசும்தரை படர்ந்த நாடு. பொன்னும் மணியும் புதைந்து கிடக்கும் பொன்மணி நாடு. ஒரு புண்ணிய பூமி. ஒரு புண்ணியத் தளம். ஒரு புண்ணிய மண்.

அங்கே பல்லின மக்களின் கடின உழைப்பு. பல்லினச் சமுதாயத்தின் பகல் இரவு பாரா அர்ப்பணிப்புகள். உயர்வோம் உயர்ந்து காட்டுவோம் என்கிற ஒசத்தியான உணர்வுகள். அதில் அவர்களின் வியர்வைத் துளிகள். அவர்களின் இரத்தக் குமிழ்கள். அத்தனையும் கலந்து கரைந்து உரைந்து உச்சம் பார்க்கும் ஒரு சிகரம். அதுதான் மலேசியா.

அப்படிப்பட்ட ஓர் அழகிய மண்ணிலே வந்தேறி எனும் சொல் அர்த்தம் இல்லாத சொல்லாகி விட்டது. திரும்பிப் போ என்கிற கூப்பாடு நீண்டு நெடிந்து ஒடிந்து விழுகிறது. அதனால் பலருக்கும் வேதனைகள். விசும்பல்கள்.

இந்த வந்தேறி எனும் சொல்லுக்கு இந்த நாட்டிலே முதன்முதலாகச் சூடம் சாம்பிராணி போட்ட பெருமை யாருக்குச் சேரும் தெரியுங்களா. சாட்சாத் ஓன் பின் ஜாபார். அவர் பயன்படுத்திய அந்தச் சொல் இன்றும் சுனாமி அலைகளாய் ஆர்ப்பரித்துக் கொண்டு வருகின்றன.


ஓன் பின் ஜாபார் என்பவர் நம் நாட்டின் மூன்றாவது பிரதமர் ஹுசேன் ஓன் அவர்களின் தந்தையார். அமைச்சர் ஹிசாமுடின் அவர்களின் தாத்தா. 1946-ஆம் ஆண்டில் மலாயன் யூனியன் உருவான காலத்தில், மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதற்காக வந்தேறி எனும் சொல்லை அவர் பயன்படுத்தினார். அதற்கு முன்னர் அந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை.

அதன் பின்னர் அந்தச் சொல்லைத் துங்கு அப்துல் ரஹ்மான் பயன்படுத்தி இருக்கிறார். நம்ப தேசத் தந்தை துங்கு தான். அவரும் பயன்படுத்தி இருக்கிறார். இதைச் சொல்லும் போது பலருக்கு வேதனையாக இருக்கலாம்.

சீனர்களும் இந்தியர்களும் இல்லாத இடங்களில்; கூட்டங்களில்; துங்கு அவர்கள், வந்தேறி எனும் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார். ஆச்சரியமாக இருக்கலாம். உண்மை. அதன் பின்னர் மகாதீர் முகமது பயன்படுத்தினார். இப்போது அந்தச் சொல் அவருக்கு ஒரு பழக்கத் தோசமாகி விட்டது.

எங்கோ படித்த ஞாபகம். புதிய இடத்தில் பழைய இடத்தைக் கொச்சைப் படுத்துவது பெரிய பாவம். வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறேன்.

அவருக்குப் பின்னர்... அப்புறம் சொல்லவே வேண்டாம். மற்ற மற்ற குட்டித் தலைவர்கள் சிலர் வாய்க்கரிசி போடுகிற மாதிரி வசை பாடுகிறார்கள். பசார் மாலாம் இரவுச் சந்தையில் கூட பழைய சொல்லாகி விட்டது போலும். அந்த அளவுக்கு அந்தச் சொல் ரொம்பவும் மலிவாகி விட்டது.

இப்படிச் சிலர் சொல்கிறார்களே இவர்கள் மட்டும் என்னவாம். அங்கே மட்டும் என்ன வாழுதாம். அந்தச் சொல்லைச் சொன்னவர்களும்; சொல்லிக் கொண்டு இருப்பவர்களும் வந்தேறிகள் என்பதை மறந்துவிட்டு அவர்கள் பாட்டுக்கு கதை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

வந்தேறிகள் என்று சொல்பவர்களும் வந்தேறிகள் என்பது பாலர் பள்ளியில் படிக்கும் பச்சைச் சிசுவிற்குக்கூட தெரியும். ரொம்ப வேண்டாம். மண்ணில் ஊர்ந்து போகிறதே புழு பூச்சிகள்; அவற்றுக்குக்கூட வந்தேறிகள் என்று சொல்பவர்களின் வரலாற்றுப் பின்னணி தெரியும்.

ஆனால் இவர்கள் என்னவோ முதல் நாள் முளைத்த முள்ளங்கி மாதிரியும்; முந்தா நாள் குதித்த வான்கோழி மாதிரியும்;  மற்றவர்களைப் பார்த்து திரும்பிப் போ என்கிறார்கள்.  

முன்னாள் பிரதமர் நஜிப் சார். அவர் பகிரங்கமாகவே தாம் இந்தோனேசியா, சுலாவாசி தீவில் இருந்து வந்தவர் என்று தம் பூர்வீகத்தை ஒப்புக் கொண்டார். அப்படி நாடு விட்டு நாடு வந்த ஒருவர் தான் நாட்டின் பிரதமராக இருந்தார். நல்ல மனிதர் தான். ரோசாப்பூ ரோசம்மாவின் பேச்சைக் கேட்டு ரொம்பவுமே வேதனைப்பட்டு விட்டார். என்ன செய்வது. அவர் நினைத்தது ஒன்று. எழுதிச் செல்லும் விதியின் கைகள் வேறு மாதிரி எழுதிச் சென்று விட்டது.

அதற்கு முன்னர் மலாயா வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். அப்போது தான் மலேசியாவில் உண்மையான வந்தேறிகள் யார் என்பது பின்னர் புலப்படும். அத்துடன் மலாயா வரலாற்றைத் தெரிந்து கொண்டது போலவும் இருக்கும். சரிங்களா.

மலாயாவின் வரலாறு 200,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடங்குகிறது. மலேசியாவின் பேராக் மாநிலத்தில் லெங்கோங் எனும் ஊர். 1938-ஆம் ஆண்டில் அங்கே ஒரு மனித எலும்புக் கூட்டைக் கண்டுபிடித்தார்கள். அதற்கு பேராக் மனிதன் எலும்புக் கூடு (Perak Man).

பேராக் மனிதனின் எலும்புக் கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது எனக் கணக்கிடப்பட்டு உள்ளது (Neolithic New Stone Age). 8,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக் கூடும் (Perak Woman) அதே இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. தீபகற்ப மலாயாவில் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புக் கூடுகளில் இவை இரண்டும் தான் மிக மிகப் பழமையானவை.

கி.மு. 4,000-ஆம் ஆண்டுகளில் ஒரு கண்டுபிடிப்பு. பேராக் மாநிலத்தில் தம்பூன் எனும் ஊர். ஈப்போ மாநகருக்கு மிக அருகாமையில் இருக்கிறது. இங்கே ஒரு பழமை வாய்ந்த குகை. இந்தக் குகையில் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப் பட்ட பழமையான ஓவியங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

கி.மு. 3,000 - இந்தோனேசியா, மேலனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு மனிதர்கள் புலம் பெயர்ந்து இருக்கிறார்கள். இந்த மனிதர்கள் ஆப்பிரிக்கா, இந்தியா, மியன்மார், சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள். மலாயாவைத் தங்கிச் செல்லும் ஓர் உறைவிடமாகப் பயன் படுத்திக் கொண்டார்கள். தொல்பொருள் ஆய்வுகளில் இருந்து இந்த உண்மை தெரிய வருகின்றது.

(The migration came from Africa via India, into Southeast Asia and what are now islands in the Pacific)

கி.மு. 2,500 - மலாயாவில் முதன்முதலில் குடியேறியவர்களுக்கும் பாப்புவா நியூகினி பூர்வீகக் குடிமக்களுக்கும் பல உடல் ஒற்றுமைகள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அந்த முதல் ஆதிவாசிகள் குகைகளில் வாழ்ந்தனர். கற்களால் ஆயுதங்களைச் செய்தனர். இவர்கள் கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் தென் மேற்குச் சீனாவில் இருந்து வந்தவர்கள். மலாயாவில் குடியேறியவர்கள்.

கி.மு. 2,000 - இந்தக் கால கட்டத்தைக் கற்காலம் என்று மலாயா வரலாறு சொல்கிறது. இவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். இவர்களிடம் வளர்ப்பு பிராணிகளும் இருந்து உள்ளன. இவர்கள் மண்பாண்டங்கள் தயாரிப்பதிலும் ஆடை ஆபரணங்கள் தயாரிப்பதிலும் சிறந்து விளங்கி இருக்கின்றனர். குகைகளில் ஓவியங்கள் வரைவதிலும் தங்கள் திறமைகளைக் காட்டி உள்ளனர்.

கி.மு. 1,000 - வெண்கலக் காலம் (Bronze Age). இந்த வெண்கலக் காலக் கலாசாரங்கள் மலாயாவிலும் காணப் படுகின்றன. இந்தக் கலாசாரத்தை டோங் சோன் கலாசாரம் (Dong Son culture) என்றும் அழைக்கின்றனர். இந்தக் கலாசாரம் இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருந்தும் இந்தோசீனாவின் வியட்நாமில் இருந்தும் வந்தது.

(The Malay Peninsula became the crossroads in maritime trades of the ancient age. Seafarers who came to Malaysia's shores included Indians, Javanese and Chinese among others. Ptolemy named the Malay Peninsula the Golden Chersonese.)

ஒன்றை இங்கே மறக்க வேண்டாம். டோங் சோன் கலாசாரம் என்பது வியட்நாமில் 3000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தோன்றிய கலாசாரம். ஆனால் அது எப்படி இந்தோனேசியாவில் இருந்து மலாயாவிற்கு வந்தது என்பது தான் வரலாற்று அறிஞர்களுக்கு இன்றும் ஒரு புதிராகவே இருக்கிறது.

டோங் சோன் கலாசாரம் என்றால் என்ன? முறையாக நெல் சாகுபடி செய்தல்;  நெல் பயிரிட எருமை மாடுகளை முறையாகப் பழக்குதல்; அதிகமான மாமிசம் தரும் விலங்குகளை வளர்த்தல்; வலை பின்னி மீன் பிடித்தல்; பாய்மரங்களைக் கட்டிப் படகு விடுதல்; மரத்தைக் குடைந்து படகுகளைச் செய்தல்.

கி.பி.200 - கி.பி.300 - கி.பி. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் வந்தது இருப்புக் காலம். இரும்பு காலம் என்பதைத் தான் இருப்புக் காலம் என்கிறோம். ஜொகூர் மாநிலத்தில் உள்ள கோத்தா திங்கி எனும் இடத்தில் ஐரோப்பா ரோமாபுரியில் இருந்து கொண்டு வரப் பட்ட பாசி மணிகள் கண்டு எடுத்து இருக்கிறார்கள்.

அந்தக் காலக் கட்டங்களில் ரோமாபுரியில் இருந்து வணிகர்கள் மலாயாவுக்கு வாணிகம் செய்ய வந்து இருக்கிறார்கள். பலர் அங்கேயே குடியேறியும் இருக்கிறார்கள். கோத்தா திங்கியில் இன்றும் அகழ்வாராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ரோமாபுரி வணிகர்கள் விட்டுச் சென்ற வரலாற்றுச் சான்றுகளும் சேகரிக்கப் பட்டு வருகின்றன.

(The migration came from Africa via India, into Southeast Asia and what are now islands in the Pacific)

கெடா கடாரத்தில் 4-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியர்கள் குடியேறினார்கள். பேராக் மாநிலத்தில் கோலா செலின்சிங் எனும் இடத்தில் இந்தியர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், தங்க ஆபரணங்கள், கண்ணாடி மணிகள், சிப்பி ஆபரணங்கள் போன்றவை கண்டு எடுக்கப் பட்டுள்ளன. இவை எல்லாம் 2200 ஆண்டுகள் பழைமையானவை.

(Archaeological discoveries of 200BC coastal settlement in Pulau Kelumpang, Matang, Perak)

இந்தியர்களின் ஆதிக்கம் கொண்ட இந்து; புத்த மத அரசாங்கங்கள் இந்தோனேசியாவில் இருந்தன. அவற்றில் ஒன்று ஸ்ரீ விஜய அரசு. இந்த அரசு மலாயாவின் இலங்காசுகம், கெடா, கிளந்தான், திரங்கானு, பகாங் போன்ற இடங்களை ஆட்சி செய்து உள்ளது.

கி.பி. 1300-ஆம் ஆண்டுகளில் மினாங்கபாவ் எனும் சுமத்திரா மலாய் அரசு மலாயாவில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சி செய்து உள்ளது. இவர்கள் தான் மலாயாவிற்குள் இஸ்லாம் சமயத்தை முதன்முதலில் கொண்டு வந்தவர்கள்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.09.2020

சான்றுகள்:

1.  Lekenvall, Henrik. LATE STONE AGE COMMUNITIES IN THE THAI-MALAY PENINSULA. Journal of Indo-Pacific Archaeology 32 (2012)

2. Dr. Martin Richards. "Climate Change and Postglacial Human Dispersals in Southeast Asia". Oxford Journals.

3. The HUGO Pan-Asian SNP Consortium (11 December 2009). "Mapping Human Genetic Diversity in Asia".

24 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்கள் வந்தேறிகளா?

தமிழ் மலர் - 24.09.2020

ஏதோ ஒரு காலம். ஏதோ ஒரு காரணம். எங்கோ ஓர் இடம். அங்கே ஓர் இனத்தவர் குடியேறுகிறார்கள். குடியேறிய இடத்தில் தங்களைத் தக்கவாறு நிலைப் படுத்திக் கொள்கிறார்கள். பின்னர் அதே இடத்தில் மற்ற மற்றக் குழுவினர்களும் வந்து குடியேறுகிறார்கள்.

அவர்களைப் பார்த்து ஏற்கனவே வந்தவர்கள் சிலேடையாகப் பரிகசிப்பது; சில்மிசமாய் ஏளனம் செய்வது. அதற்குப் பெயர் என்ன தெரியுங்களா. எகதாளச் செருக்கு. இது ஓர் உலகளவிய கருத்து உடன்பாடு. எந்த ஓர் இனத்தையும் எந்த ஒரு நாட்டு மக்களையும் குறிப்பிட்டுச் சொல்வதாக அமையாது.

(Melvin Ember, Carol R. Ember and Ian Skoggard, (2004). Encyclopedia of Diasporas: Immigrant and Refugee Cultures Around the World. Volume I: Overviews and Topics; Volume II: Diaspora Communities.)

இதில் முதலில் வந்த வந்தேறி; லேட்டாய் வந்த வந்தேறி என்பது எல்லாம் கிடையாது, வந்தேறி என்றால் எல்லாரும் வந்தேறிகள் தான். என்ன. முதலில் வந்த வந்தேறிக்கு நினைப்பு கொஞ்சம் அதிகமாய் இருக்கும். அவ்வளவுதான்.

கொஞ்ச காலம் முன்னாடி வந்த வந்தேறிகளுக்கும்; கொஞ்ச காலம் பின்னாடி வந்த வந்தேறிகளுக்கும்; பெரிய வித்தியாசம் எதுவும் இல்லீங்க. இரண்டுமே வந்தேறிகள் சபையில் பங்காளிகள் தான். இரண்டுமே வந்தேறி குட்டையில் ஊறிய சின்ன பெரிய வந்தேறி மட்டைகள் தான்.

ஆக ஒன்றை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். தங்களின் சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்த அனைத்து மக்களுமே வந்தேறிகள் தான். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அப்படி வந்தவர்கள் மீன்பிடி படகுகளில் வந்து இருக்கலாம். கட்டுமரங்களில் வந்து இருக்கலாம். இடுப்பில் கோவணம் கட்டி வாழ்ந்து இருக்கலாம்.

வந்த இடத்தில் மரவெள்ளிக் கிழங்குகளைச் சுட்டுச் சாப்பிட்டு இருக்கலாம். ஆற்றில் கிடைத்த மீன்களைப் பொசுக்கிச் சாப்பிட்டு இருக்கலாம். மரத்துப் பட்டைகளைச் சட்டைகளாகத் தைத்து இடுப்பில் கட்டி இருக்கலாம். அது இயற்கை. இந்த மாதிரி கதைகள் வரலாற்றில் நிறையவே இருக்கின்றன.  யாரையும் எவரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

இப்படி ஏலேலே ஐலசா பாடி வந்தவர்கள் அடுத்து வந்து குடியேறியவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொன்னால்; அப்படிச் சொல்பவர்களை எதில் கொண்டு போய் சேர்ப்பதாம்.

அவர்கள் என்ன மண்ணைப் பிளந்து கொண்டு வந்தார்களா. அல்லது ஆகாசத்தில் இருந்து அல்லாக்காய்க் குதித்து வந்தார்களா. இல்லையே. அப்புறம் எப்படி மற்றவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்லலாம். சரி.

மலேசியத் தமிழர்களின் மூதாதையர் வந்தேறிகளா? தியாகிகளா? அல்லது கூலிக்கு மாரடித்தவர்களா? அண்மைய காலங்களில் சமூக ஊடகங்களில் பரவலாகி வரும் ஒரு கேள்வி.

இப்போதைய மலேசியத் தமிழர்களின் மூதாதையர் தியாகிகள் என்பதை ஒரு தரப்பினர் ஆதரிக்கிறார்கள். மறு தரப்பினர் மறுக்கிறார்கள். தியாகிகள் என்று சொல்பவர்கள் சிலரின் கருத்துகள் ரொம்பவுமே அழுத்தமானவை. உணர்வுகளைக் கொப்பளிக்க வைக்கும் பதிவுகள்.

ஆனாலும் மலேசியத் தமிழர்களின் மூதாதையர் தியாகிகள் அல்ல. அவர்கள் கூலிக்கு மாரடித்தவர்கள் என்று சொல்பவர்கள் என்ன மாதிரியான காரணங்களைச் சொல்கிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம்.

மலேசியத் தமிழர்களின் மூதாதையர் கூலி வேலை செய்வதற்காக மலாயாவுக்கு அழைத்து வரப் பட்டவர்கள். செய்த வேலைக்கு கூலி வாங்கினார்கள். வாங்கிய கூலிக்கு வஞ்சகம் இல்லாமல் வேலை பார்த்தார்கள். ஆகவே செய்த வேலைக்கு கூலி வாங்கியவர்களைத் தியாகிகள் என்று எப்படிச் சொல்ல முடியும் என்று வாதிடுகிறார்கள்.

மலேசியத் தமிழர்களின் மூதாதையர் வந்தார்கள்; வாழ்ந்தார்கள்; வீழ்ந்தார்கள். அப்படி இருக்கும் போது அவர்களை எப்படி தியாகிகள் என்று சொல்ல முடியும் என்று திருப்பிக் கேட்கிறார்கள்.

காட்டை வெட்டினோம்; ரோட்டைப் போட்டோம்; கம்பிச் சடக்கு போட்டோம்; கித்தா மரம் நட்டோம் என்று இன்னும் எத்தனை நாளைக்குத் தான் சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறோம். எத்தனை தடவை தான் அதையே திரும்பத் திரும்ப பாராயணம் பாடிக் கொண்டு இருக்கப் போகிறோம்.

அமெரிக்கா நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு காலத்தில் இங்கிலாந்து நாட்டின் காலனி நாடாக இருந்தது. இப்போது பாருங்கள். அமெரிக்கா ஒரு மாபெரும் வல்லரசு. ஒரு காலத்தில் அமெரிக்காவை ஆட்சி செய்த இங்கிலாந்து நாடு இப்போது வாய்பொத்தி அடங்கிப் போய்க் கிடக்கிறது.

உலகப் போலீஸ்காரர் என்று பேர் எடுத்தாலும்; பதினாறு பட்டி கட்டப் பஞ்சாயத்து செய்து உலக நாடுகளையே கட்டிப் போட்டு வைத்து இருக்கிறார்கள்.

மலேசியத் தமிழர்கள் கூலிக்கு மாரடித்தவர்களா? யார் சொன்னது. எந்த விளக்கெண்ணெய் சொன்னது. என்னிடம் வரச் சொல்லுங்கள். நன்றாகக் கேள்வி கேட்டு அனுப்புகிறேன் என்று ஆத்திரம் ஆவியாகி கண்களில் அனல் பறக்க கொப்பளிக்கிறார் ஓர் அன்பர். சோறு போட்ட கைக்கு சூடு போடுகிறவர்கள் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள கொஞ்சமும் லாயக்கு இல்லாதவர்கள் என்று குமுறுகிறார்.

மலேசியத் தமிழர்கள் ஆயிரம் ஆயிரம் வேதனைச் சோதனைகளைக் கடந்து வந்தவர்கள். மலாயாத் தோட்டத் தமிழர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்கும் மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது. எப்படி மறக்க முடியும். எப்படிங்க மறைக்க முடியும்.

மலாயா தமிழர்கள் இந்த மண்ணில் எத்தனையோ நூறாண்டுகளுக்கு முன்னரே கால் பதித்து விட்டார்கள். இது ஒரு வரலாற்று உண்மை. அது மட்டும் அல்ல. உலக வரலாற்றில் தவிர்க்க முடியாத உண்மையுங்கூட.

மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய நிலைமை. என்ன தான் வரலாற்றுப் படிவங்களைச் சிதைத்துப் போட்டாலும்; மறைத்துப் போட்டாலும்; மலாயாத் தமிழர்களின் வரலாற்று உண்மைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். என்றைக்கும் அவை வரலாறு பேசும் வாய்மையான உண்மைகள்.

வரலாற்றை வரலாறாகப் பார்க்கும் பக்குவம் வேண்டும். வரலாற்றை வரலாறாகப் பார்க்கும் நல்ல எண்ணமும் வேண்டும். வரலாற்றை முறையாகப் படிக்காமல் அறியாமையில் சொல்வது மிகவும் தப்பு.

கடந்த 200 - 250 ஆண்டு காலமாக இந்த நாட்டிற்காக உழைத்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்களைத் வந்தேறிகள் என்று சொல்வது ரொம்பவும் தப்பு. கூலிக்கு மாரடித்தார்கள் என்று சொல்வது பெரிய தப்பு. அவர்கள் வந்தேறிகள் அல்ல.

விதை சத்தம் இல்லாமல் முளைக்கிறது... மரம் சத்தத்தோடு முறிகிறது... அவ்வளவு தான்.

இந்த நாட்டில் தமிழ்ர் இனம் சில நூற்றாண்டுகளுக்கும் மேலாக சத்தம் இல்லாத விதைகளாய்த் தான் இருந்தார்கள். ஆனால் இப்போது ஏற்பட்டு உள்ள அரசியல் குளறுபடிகளைச் சலவை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக் கோரிக்கைகளாக முன் வைக்கிறார்கள். அதில் என்ன தப்பு. இடையில் புகுந்து மலேசியத் தமிழர்கள் கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள்; வந்தேறிகள் என்கிற ஜிங்கு ஜிக்கான் எகதாளங்கள் தேவையே இல்லை.

முன்னுக்கு பின் முரணான சுய விளக்கம் ஒரு தெளிவு இல்லாத சிந்தனையைக் குறிக்கும். இந்த நாட்டுத் தமிழர்கள் அவர்கள் செய்த வேலைக்கு மட்டும் கூலி பெற்று விட்டார்கள் என்று சொல்வது தப்பு. அவர்களை வந்தேறிகள் என்று முத்திரை குத்தினால் அது தப்பிலும் பெரிய தப்பு.

ஒருவர் ஆன்மீகவாதியாக இருக்கலாம். நாத்திகராக இருக்கலாம். பிரச்சினை இல்லை. ஆனால் இந்த நாட்டில் தமிழர்கள் பட்ட அவலங்களின் மேல் அக்கறைக் காட்டாமல் இருப்பது பெரிய ஓர் அலட்சியம் ஆகும்.

காலை எட்டு மணிக்கு வேலைக்குப் போய் மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்புவர்களுக்கு வேண்டும் என்றால் மலேசியத் தமிழர்கள் கூலிக்கு மாரடித்தவர்கள் எனும் கூற்று பொருந்தி வரும்.

ஆனால் தமிழ் நாட்டில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்களைக் கொத்தடிமைகளாகக் கொடுமைப் படுத்தினார்கள். அதிகாலை தொடங்கிச் சூரியன் மறையும் வரை துன்புறுத்தி வேலை வாங்கினார்கள்.  20, 30 காசு சம்பளத்திற்காக நாள் முழுதும் சிறைப் பட்டு சிதைக்கப் பட்டார்கள். அது தியாகம் இல்லையா? இவர்களையா வந்தேறிகள் என்று சொல்வது.

எத்தனை இன்னல் வந்தாலும் பொறுமையோடும் சகிப்புத் தன்னையோடும் நாளும் செத்து செத்து வாழ்ந்தார்களே அது தியாகம் இல்லையா? இவர்களையா வந்தேறிகள் என்று சொல்வது.

முதலில் அவர்களது அயராத உழைப்புக்கு தருந்த ஊதியம் கொடுக்கப் பட்டதா? அதற்கு எவராலும் பதில் சொல்ல முடியுமா? இன்று இந்த நாட்டில் மலிந்து கிடக்கும் மற்ற நாட்டுக்காரர்களுக்கு யாருங்க காரணம்.

திறமை இல்லா விட்டாலும் பெரிய சம்பளம் வேண்டும். உடல் உழைப்பு வேலைகள் வேண்டாம் என்கிற பிடிவாதம் இங்கே பலருக்கும் உண்டு. தகுந்த வேலை கிடைக்கும் வரை வேறு வேலைகளில் நாட்டம் இல்லாமல் போவது இப்போதைக்குப் பல பட்டதாரிகளின் நடப்பு விவகாரம். அது போன்ற காரணங்களைக் கூறி விரல் நீட்டலாம்.

ஆக உடலை வருத்தி உழைக்காமல்; சொகுசாய் வாழ்பவர்களைத் தியாகிகளாய் கருதும் காலத்தில் தான்; நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அன்று மலாயாவாக இருந்த நாட்டை மலேசியாவாக மாற்றி அமைக்க அரும்பாடு பட்டவர்கள் மலேசியத் தமிழர்கள்.

தனக்காக யோசிக்கத் தெரியாமல் நாட்டுக்காக நிறையவே ஆசா பாசங்களை இழந்த தமிழர்களைத் தியாகிகள் என்று சொல்வதில் என்ன தவறு? வந்தேறிகள் என்று அழைப்பது தான் தப்பு. படிப்பது இராமாயணம்... இடிப்பது பெருமாள் கோயிலாக இருக்கக் கூடாது.

ஆக சில காலக் கட்டங்களில் சில அறைகுறை கூஜா தூக்கிகளும் வருவார்கள். போவார்கள். அவர்களின் சுய லாபத்திற்காக எதையாவது உளறி விட்டுச் செல்வார்கள். இவர்களுக்கு ஜால்ரா போடுவதற்காகவே சில வெங்காயச் சட்ணிகளும் இருக்கவே செய்வார்கள்.

மலேசியத் தமிழர்கள் நேற்று முந்தா நாள் மலாயாவுக்கு வந்த விருந்தாளிகள் அல்ல. அவர்கள் உண்மையிலேயே தியாகிகள். கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள் அல்ல.

அவர்கள் உழைச்சுப் போட்டுப் போன சுகத்தில் தான் இப்போது நாம் சொகுசாய்க் கால் மேல் கால் போட்டு சீரியல் பார்க்கிறோம். சொகுசாய்ச் சவடால் பேசிக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் இல்லை என்றால் நீங்களும் இல்லை. நானும் இல்லை. இதை மறக்க வேண்டாமே.

மலேசியத் தமிழர்கள் இந்த மலையகத்தைத் தங்கள் உழைப்பால் உயர்த்தி உலகமே உற்றுப் பார்க்கும் அளவுக்கு கெளரவப் படுத்தி இருக்கிறார்கள். மலையூர் மண்ணில் மண்ணாய்க் கலந்து; கித்தா மரங்களோடு கித்தா மரங்களாய்க் கலந்து, தகரக் கொட்டாய்களில் கரைந்து போன மலேசியத் தமிழர்களை நினைத்துப் பார்ப்போம். காலா காலத்திற்கும் நன்றி சொல்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.09.2020



23 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்கள்: கோலா குராவ் ஜின் ஹெங் தோட்டம் 1935

1900-ஆம் ஆண்டுகளில் பேராக், கோலா குராவ் பகுதியில் நிறையவே ரப்பர் தோட்டங்கள். அதற்கு முன்னர் 1870-ஆம் ஆண்டுகளில் அங்கே பெரும்பாலும் காபி கரும்புத் தோட்டங்கள். இந்தக் காபி கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழ் நாட்டில் இருந்து தமிழர்கள் அழைத்து வரப் பட்டார்கள்.

1895-ஆம் ஆண்டுகளில் அனைத்துலக அளவில் காபியின் விலை குறைந்தது. காபிச் செடிகளுக்கும் அடுத்தடுத்து நோய்கள். அதனால் கப்பி தோட்ட முதலாளிகள் ரப்பர் பயிர் செய்வதில் தீவிரம் காட்டினர்.

காபி கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய வந்த மலாயா தமிழர்கள் ரப்பர் தோட்டங்களுக்குள் புலம் பெயர்ந்தனர்.

அந்த வகையில் கோலா குராவ் வட்டாரத்தில் பல ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப் பட்டன. அப்போது உருவானது தான் கோலா குராவ், ஜின் ஹெங் தோட்டம் (Jin Heng Estate, Kuala Kurau, Perak). இந்தத் தோட்டம் பினாங்கில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ளது. நீராவிக் கப்பல்கள் பயன்படுத்தப் பட்டன. ஐந்து மணி நேரப் பயணம்.

Jin Heng estate, owned solely by Mr. Heah Swee Lee, member of the State Council, Perak, is situated on the right bank of the Kurau river, in the Krian district of the State of Perak, Federated Malay States.

It is distant about 40 miles from Pinang, with which there is daily communication by steam launch, the passage each way taking about five hours.

இந்தத் தோட்டம் நீர் நிலைகள் நிறைந்த பகுதியில் இருந்த தோட்டம். அதனால் அங்கே பல வகையான பறவைகள். குறிப்பாக உள்ளான் குருவிகள். அந்தக் குருவிகளைச் சுட்டுப் பார்ப்பது வெள்ளைக்காரர்களுக்கு நல்ல ஒரு பொழுது போக்கு.

ஆளாளுக்குத் துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு நூற்றுக் கணக்கில்; ஆயிரக் கணக்கில் உள்ளான் குருவிகளைச் சுட்டுத் தள்ளி இருக்கிறார்கள். மகிழ்ச்சி.

அவர்களின் பறவை சேட்டைகளுக்கு... மன்னிக்கவும் வேட்டைகளுக்கு உதவியாக இருந்தவர்கள் நம்முடைய தமிழ்ப் பையன்கள் தான். தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு நன்றாகவே ‘போஸ்’ கொடுத்து இருக்கிறார்கள். 1935-ஆம் ஆண்டு எடுத்த படம். மலாயா வரலாற்றில் இதுவும் ஒரு காலச் சுவடு.

சிங்கப்பூர் வரலாற்று ஆய்வாளர் ஜெயமலர் கதிர்தம்பி (Jeyamalar Kathirithamby) எழுதி இருக்கும் Nature and Nation: Forests and Development in Peninsular Malaysia எனும் நூலில் பக்கம்: 195-இல் அந்தப் பக்கம் இடம்பெற்று உள்ளது.

சான்றுகள்:

1. Nature and Nation: Forests and Development in Peninsular Malaysia Pag: 195
By Jeyamalar Kathirithamby-Wells

2. Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources Page 423

22 செப்டம்பர் 2020

வியட்நாம்: 2000 ஆண்டு சம்பா பூர்வீக இந்து மக்கள்

இந்த உலகில் இந்தியர் அல்லாத பூர்வீக இந்து மக்கள் இரண்டே இடங்களில் தான் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். பழைமை வாய்ந்த இந்தியக் கலாச்சாரத்துடன் 2,000 ஆண்டுகளாக இந்து மதத்தைப் பின்பற்றியும் வருகின்றார்கள்.

Cham people visit this one of the oldest Hindu temples in Vietnam

இந்தோனேசியா பாலி தீவில் ஒரு பிரிவினர். இவர்கள் பாலினிய இந்துக்கள் (Balinese Hinduism). அடுத்த பிரிவினர் வியட்நாம் நின் துன் மாநிலத்தில் (Ninh Thuan Province) பலமான் சாம் (Balamon Cham) எனும் பூர்வீக இந்து மக்கள். இவர்கள் சாம் இந்துக்கள் (Cham Hindus) என்று அழைக்கப் படுகிறார்கள்.[#1]

[#1]. Balamon Cham, one of only two surviving non-Indic indigenous Hindu peoples in the world, with a culture dating back thousands of years.

[#1]. Parker, Vrndavan Brannon (April–June 2014). "Cultures: Vietnam's Champa Kingdom Marches on". Hinduism Today.

Cham women performing a traditional dance in Nha Trang, Vietnam

சம்பா அல்லது சியோம்பா அரசு (Champa or Tsiompa) என்பது முன்பு காலத்தில் வியட்நாமில் இருந்த சின்னச் சின்ன அரசுகளின் ஒரு கூட்டு அரசாகும். பாண்டியர்கள் அமைத்த அரசு. அதுவே பின்னாட்களில் பல்லவர்களின் ஒரு பெரிய பேரரசாக மாறியது. சம்பா பேரரசு (Kingdom of Champa: கி.பி. 192 – கி.பி. 1832). சம்பா என்றால் சமஸ்கிருத மொழியில் சண்பகம் (campaka).[#2]

[#2]. Champa, Sanskrit Dictionary for Spoken Sanskrit". spokensanskrit.org.

சம்பா அரசைத் தோற்றுவித்தவர் பத்திரவர்மன் (Bhadravarman). இவரின் ஆட்சிக்காலம் கி.பி. 349 - கி.பி. 361. இவர்தான் சிம்மபுரம் (Simhapura - Lion City) எனும் நகரத்தை உருவாக்கியவர். இப்போது இந்த நகரம் Tra Kieu என்று அழைக்கப் படுகிறது. பத்திரவர்மன் தன் கடைசி காலத்தில் இந்தியாவிற்குச் சென்று கங்கை நதிக்கரையில் வாழ்ந்ததாகச் சொல்லப் படுகிறது.[#2.1]

[#2.1] Badravarman built a number of temples, conquered his rivals, ruled well and in his final years abdicated his throne and spent his last days in India on the banks of the Ganges River.

Onam celebration in Saigon fetes Indian diversity

சண்பக மண் என்று பெயர் வைத்து இருக்கலாம். இன்னும் ஒரு விசயம். இவருக்கு முன்னதாகவே பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. அவர்களில் முதலாவதாக ஆட்சி செய்தவர் திருமாறன் பாண்டியன் என்று வியட்நாமிய வோ-கான் கல்வெட்டு (Vo Canh inscription) சொல்கிறது.[#3]

[#3]. The oldest Sanksrit inscription discovered in Vietnam mentions the name of Sri Maran. The inscription is known as the Vo-Canh inscription.

தென்கிழக்கு ஆசியாவில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான சமஸ்கிருத கல்வெட்டு. Vo Canh கல்வெட்டு ஆகும். 1885-ஆம் ஆண்டில் வியட்நாமின் நா திராங் (Nha Trang) நகரில் இருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள வோ-கான் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[#4]

[#4]. The Vo-Canh inscription is the oldest Sanskrit inscription ever found in Southeast Asia, discovered in 1885 in the village of Vo-Canh, about 4 km from the city of Nha Trang, Vietnam

Celebrating the rainy season’s three-day Kait Festival

அந்தக் கல்வெட்டில் இப்படி ஒரு வாசகம் வருகிறது.
"the ornament... by that which is the joy of the family of the daughter of the grandson of King Sri Mara... has been ordained"

இதன் பொருள்: ஆபரணம் ... ஸ்ரீ மாறனின் பேரன் மகளின் குடும்பத்தின் மகிழ்ச்சி... இதன் மூலம் உறுதி செய்யப் படுகிறது. இந்தக் கல்வெட்டைப் பற்றி, பின்னர் பத்திரிகையில் விளக்கமாக ஒரு கட்டுரை எழுதுகிறேன்.

இந்தோனேசியாவின் மஜபாகித்; ஸ்ரீ விஜயம்; சிங்காசாரி; மத்தாரம் போன்று சம்பா பேரரசும் அந்தக் காலக் கட்டத்தில் பெரிய ஓர் அரசு. இந்தியாவும் சீனாவும் இதனிடம் பிரச்சினை பண்ணாமல் சற்றே ஒதுங்கி இருக்கின்றன.  

இன்றைய மத்திய வியட்நாம்; தெற்கு வியட்நாம் கடற்கரை முழுவதும் கி.பி 2-ஆம் நூற்றாண்டு தொடங்கி 19-ஆம் நூற்றாண்டு வரையில் சம்பா பேரரசு வியாபித்து இருந்து உள்ளது.

1. சம்பா பேரரசு முதலாவது தலைநகரம் சிம்மபூரம் (Simhapura - 4th century to the 8th century CE)

2. சம்பா பேரரசு இரண்டாவது தலைநகரம் இந்திரபுரம் (Indrapura கி.பி 875 – கி.பி 978)

3. சம்பா பேரரசு மூன்றாவது தலைநகரம் அமராவதி விஜயா (Amaravat Vijaya கி.பி 978 – கி.பி 1485)

4. சம்பா பேரரசு (கௌதாரம் சிற்றரசு - Kauthara Polity) நான்காவது தலைநகரம் கௌதாரம் (Kauthara கி.பி 757 - கி.பி 1653)

5. சம்பா பேரரசு (பாண்டுரங்கா சிற்றரசு - Panduranga Polity) ஐந்தாவது தலைநகரம் பாண்டுரங்கா (Panduranga கி.பி 757 - கி.பி 1832)

1832-ஆம் ஆண்டு சம்பா பேரரசு இப்போதைய வியட்நாமிய அரசாங்கத்துடன் இணைக்கப் பட்டது. இந்து மதம் எப்படி இங்கே வந்தது.

கி.பி 4-ஆம் நூற்றாண்டில் அண்டை நாடான பூனான் (Funan) அரசு சம்பா மீது தாக்குதல் நடத்தி சம்பாவைக் கைப்பற்றியது. அதன் பின்னர் இந்து மதம் சம்பாவில் அரசாங்க மதமானது. பல நூற்றாண்டுகளாகச் சம்பா சாம்ராச்சியத்தின் கலை, கலாசாரங்களில் இந்தியச் சாரங்கள் பரிணாமம் பெற்று உள்ளன. சம்பா இந்துக்கள் சிவனை வழிபடும் சைவ சமயத்தைப் பின்பற்றி வருகிறார்கள்.

கி.பி 4-ஆம் நூற்றாண்டிற்கு முன்னதாகவே சம்பா அரசு இருந்து உள்ளது. அப்போது அதன் துறைமுக நகரம் காதிகரம் (Kattigara).[#5]

[#5]. (Champa was a formidible Hindu kingdom, renowned for its immense wealth and sophisticated culture. Its major port was Kattigara.)

பல இந்துக் கோயில்கள்; பல சிவப்புச் செங்கல் கோயில்கள் சம்பா நிலங்களில் கட்டப்பட்டன. முன்பு காலத்தில் மை சான் (My Son) எனும் நகரம் முக்கிய இந்து மத மையமாக விளங்கி உள்ளது. இங்கே நிறைய இந்துக் கோயில்கள் கட்டப்பட்டு உள்ளன. அதற்கு அருகாமையில் ஹோய் ஆன் (Hoi An) எனும் ஒரு துறைமுக நகரம். இப்போது இந்த இரு இடங்களுமே உலக பாரம்பரியத் தளங்களாக (UNESCO World Heritage Sites) அறிவிக்கப்பட்டு உள்ளன.[#6]

[#6]. Champa legacy is the red-brick temples, or Cham towers, the oldest found dating to the seventh and eighth centuries. The temple city of My Son, near Hoi An, preserved as a UNESCO World Heritage site, has nearly 70 individual structures.

Nearly 2,000 years ago, Claudius Ptolemy wrote of Cattigara and outlined it on his map of the world. Modern scholarship has confirmed Cattigara as the forerunner of Saigon (modern day Ho Chi Minh City.

மீகோங் ஆறு. கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதில் வரும் கோங் எனும் கடைச் சொல் கங்கை நதியைக் குறிக்கின்றது.[#7]

[#7]. Cattigara was the main port at the mouth of the Mekong River, a name derived from Mae Nam Khong, the Mother Water Ganga.

10-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மதம் பரவியது. அதன் பின்னர் பிரஞ்சுக்காரர்களின் கிறிஸ்துவ மதம் வந்தது. இருந்தாலும் அங்கு வாழ்ந்த பலர் தங்களின் பழைய இந்து நம்பிக்கைகள், இந்து சடங்குகள் மற்றும் இந்து பண்டிகைகளைக் கைவிடவில்லை. இன்னும் தக்க வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள்.

வியட்நாமில் இப்போது 60,000 பூர்வீக இந்துக்கள் வாழ்கின்றார்கள். இவர்களின் திருமணம்; காதணி விழா; திருவிழாக்கள் எல்லாம் இந்து மதம் சார்ந்தவையாக உள்ளன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
22.09.2020
© 2020 https://ksmuthukrishnan.blogspot.com. All rights reserved

சான்றுகள்:

1. Thurgood, Graham (1999). From Ancient Cham to Modern Dialects.

2. Ralph Bernard Smith (1979). Early South East Asia: essays in archaeology, history, and historical geography. Oxford University Press. p. 447.

3. Chatterji, B. (1939). JAYAVARMAN VII (1181-1201 A.D.) (The last of the great monarchs of Cambodia). Proceedings of the Indian History Congress. - www.jstor.org/stable/44252387

4. Hindus of Vietnam - Hindu Human Rights Online News Magazine". www.hinduhumanrights.info.

5. India's interaction with Southeast Asia, Volume 1, Part 3 By Govind Chandra Pande, Project of History of Indian Science, Philosophy, and Culture, Centre for Studies in Civilizations (Delhi, India).

6. https://en.wikipedia.org/wiki/Võ Cạnh inscription