06 ஜனவரி 2022

மலேசியாவில் 527 தமிழ்ப்பள்ளிகள்; 80569 மாணவர்கள்; 8638 ஆசிரியர்கள்

1900-ஆம் ஆண்டுகளில் மலேசியத் தோட்டப் புறங்களில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல் கூறுகள் துன்பம் நிறைந்தவை. துயரங்கள் நிறைந்த துயரியல் காவியங்கள். நாடு விட்டு நாடு கடந்து வந்ததால், தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டன. தமிழர்களின் அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டன.


தமிழர்த் தொழிலாளர்கள் தோட்டத்திற்குள் அடங்கி வாழ வேண்டும். வெளியே போகக் கூடாது. அவர்களின் பிள்ளைகளும் தோட்டத்தை விட்டு வெளியே நகரக் கூடாது. வெளியே போனால் தமிழர்களின் பட்டறிவும் பகுத்தறிவும் வளர்ச்சி பெறும்.

அப்புறம் பின்நாட்களில் வெள்ளைக்காரர்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குவார்கள். இவை எல்லாம் காலனித்துவக் கடைச் சரக்குகளுக்குத் தெரியாமலா இருக்கும். நல்லா தெரிந்து நல்லா ‘பிளேன்’ போட்டுத்தான் காய்களை நகர்த்தி இருக்கிறார்கள்.

ஆக தோட்டத்திலேயே பள்ளிக்கூடங்களைக் கட்டிப் போட்டால் வெளியே போக மாட்டார்கள். ஆறாம் வகுப்பு அறிவு போதும். அதற்கு மேல் கூடுதலான படிப்பு அவசியம் இல்லை. இருந்தால் முதலாளிகளுக்கு ஆபத்து.


அதுதான் வெள்ளைக்காரர்களின் தலையாய நோக்கமாக இருந்தது. நரியை நனையாமல் குளிப்பாட்டும் கலையைக் கரைத்துக் குடித்தவர்களுக்குச் சொல்லியா தர வேண்டும்.

வெள்ளைக்காரர்களின் நோக்கம் எல்லாம் என்ன? மலாயாவில் ரப்பர் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். நாலு காசு பார்த்து நாற்பது காசாகப் பெருக்க வேண்டும். கல்லாவை நிரப்ப வேண்டும். நல்லபடியாக வீடு போய்ச் சேர வேண்டும். கிடைக்கிற கமிசனில் சுகமான வாழ்க்கையில் சொகுசாக வாழ வேண்டும்.

பொதுவாகவே அப்போது இருந்த பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள், தமிழ் ஆசிரியர்களை உருவாக்கும் தொழிற்சாலைகளாகவே இயங்கி வந்தன. பெரும்பாலான தமிழாசிரியர்கள் வெள்ளைக்காரர்களின் எடுபிடிகளாகவே இருந்தார்கள். மன்னிக்கவும்.


உண்மையைத் தான் எழுதுகிறோம். அப்போதைய தமிழ் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியாது. அவர்களைச் சொல்லி குற்றம் இல்லை. அப்படிப்பட்டச் சூழ்நிலை. அதனால் மாணவர்களுக்கும் ஆங்கிலம் சொல்லித்தர இயலாமல் போய் விட்டது. தமிழ் மாணவர்களுக்கும் ஆங்கில அறிவு குறைந்தும் போனது.

தோட்டப் புறங்களில் தமிழ்ப்பள்ளிகள் தொடங்கப்பட்ட காலக் கட்டத்தில் நகர்ப் புறங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. பெரும்பாலானவை தனியார் தமிழ்ப் பள்ளிகளாகும்.

1905-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. இந்தப் பள்ளியைத் ராஜசூரியா என்பவர் தோற்றுவித்தார். தம்புசாமி பிள்ளையின் பெயர் வைக்கப்பட்டது.


1905-ஆம் ஆண்டில் மலாயாவில் 13 அரசாங்கத் தமிழ்ப்பள்ளிகளும் ஒரு கிறிஸ்துவத் தமிழ்ப்பள்ளியும் இயங்கி வந்தன. 1908-ஆம் ஆண்டு நிபோங் திபாலில் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. பினாங்கு மாநிலத்தைப் பொருத்த வரையில் அதுதான் முதல் தமிழ்ப்பள்ளி.

1914-ஆம் ஆண்டு கோலாலம்பூர் துன் சம்பந்தன் (பிரிக்பீல்ட்ஸ்) சாலையில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. 1930-ஆம் ஆண்டு செந்தூல் இந்திய வாலிபர் சங்கத்தின் சார்பில் சரோஜினி தேவி தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. இருந்தாலும், 28 ஆண்டுகளுக்குப் பின்னர், 1958-ஆம் ஆண்டில் இந்தப் பள்ளி மூடப்பட்டது.

1937-ஆம் ஆண்டு  கோலாலம்பூர் பத்து சாலையில் சுவாமி ஆத்மராம் அவர்களின் முயற்சியில் அப்பர் தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது.

அதே காலக் கட்டத்தில் அரசாங்கமும் சில பள்ளிகளைக் கட்டிக் கொடுத்து இருக்கிறது. 1913-ஆம் ஆண்டில் கிள்ளான சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி; 1919-ஆம் ஆண்டில் செந்தூல் தமிழ்ப்பள்ளி; 1924-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் சான் பெங் தமிழ்ப்பள்ளி; 1937-ஆம் ஆண்டில் பங்சார் தமிழ்ப்பள்ளி போன்றவை குறிப்பிடத் தக்கவை. அரசாங்கம் கட்டிக் கொடுத்த பள்ளிகள். மலாயாவில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை:


1920-ஆம் ஆண்டில் 122.
1925-ஆம் ஆண்டில் 235.
1930-ஆம் ஆண்டில் 333
1938-ஆம் ஆண்டில் 524.
1942-ஆம் ஆண்டில் 644
1943-ஆம் ஆண்டில் 292
1950-ஆம் ஆண்டில் 888
1960-ஆம் ஆண்டில் 662
2018-ஆம் ஆண்டில் 525
2021-ஆம் ஆண்டில் 527

2018-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி மலேசியாவில் 525 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 527 தமிழ் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளில் 80,569 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். ஆசிரியர்கள் 8,638 பேர்.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கை:

ஜனவரி 2018 - 81,488 மாணவர்கள்

ஏப்ரல் 2018 - 81,635 மாணவர்கள்

ஜனவரி 2019 - 81,321 மாணவர்கள்

மே 2019 - 81,447 மாணவர்கள்

ஜனவரி 2020 - 80,569 மாணவர்கள்

ஜூன் 2020 - 80,743 மாணவர்கள்

ஜூன் 2021 - 80,434 மாணவர்கள்


2020-ஆம் ஆண்டு மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்கள்:

*ஜொகூர்* மாநிலத்தில் 70 தமிழ்ப் பள்ளிகள். 12,335 மாணவர்கள். 1,145 ஆசிரியர்கள்.

*கெடா* மாநிலத்தில் 60 தமிழ்ப் பள்ளிகள். 7,518 மாணவர்கள். 899 ஆசிரியர்கள்.

*கிளாந்தான்* மாநிலத்தில் 1 தமிழ்ப் பள்ளி. 36 மாணவர்கள். 9 ஆசிரியர்கள்.

*மலாக்கா* மாநிலத்தில் 21 தமிழ்ப் பள்ளிகள். 2,375 மாணவர்கள். 332 ஆசிரியர்கள்.

*நெகிரி செம்பிலான்* மாநிலத்தில் 61 தமிழ்ப் பள்ளிகள். 8,648 மாணவர்கள். 1097 ஆசிரியர்கள்.

*பகாங்* மாநிலத்தில் 37 தமிழ்ப் பள்ளிகள். 2,599 மாணவர்கள். 422 ஆசிரியர்கள்.

*பேராக்* மாநிலத்தில் 134 தமிழ்ப் பள்ளிகள். 11,645 மாணவர்கள். 1679 ஆசிரியர்கள்.

*பெர்லிஸ்* மாநிலத்தில் 1 தமிழ்ப் பள்ளி. 72 மாணவர்கள். 11 ஆசிரியர்கள்.

*பினாங்கு* மாநிலத்தில் 29 தமிழ்ப் பள்ளிகள். 5,397 மாணவர்கள். 554 ஆசிரியர்கள்.

*சிலாங்கூர்* மாநிலத்தில் 97 தமிழ்ப் பள்ளிகள். 26,506 மாணவர்கள். 2,155 ஆசிரியர்கள்.

*கோலாலம்பூர்* மாநகரத்தில் 15 தமிழ்ப் பள்ளிகள். 3,443 மாணவர்கள். 335 ஆசிரியர்கள்.

*திரங்கானு, சபா, சரவாக்* மாநிலங்களிலும்; *லாபுவான்; புத்திராஜெயா* கூட்டரசுப் பிரதேசங்களிலும் தற்போது தமிழ்ப்பள்ளிகள் இல்லை.


கல்விச் சட்டங்களின் பார்வையில் இதுவரையிலும் நான்கு திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

முதலாவது பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report).

இரண்டாவது பென் பூ அறிக்கை (Fenn-Wu Report).

மூன்றாவது ரசாக் அறிக்கை (Razak Report).

நான்காவது ரகுமான் தாலிப் அறிக்கை (Rahman Talib Report).

ரசாக் அறிக்கை வழியாக மலாய், ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தொடக்க நிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய், ஆங்கிலப் பள்ளிகள் மட்டுமே இடைநிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் தேசியப் பள்ளிகளாக அழைக்கப் பட வேண்டும்.

இதர ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகளாக அழைக்கப் பட்டன. அதுவே இன்னும் இந்த நாட்டின் கல்வி அமைவு முறையின் அடித்தளமாகவும் இருந்து வருகிறது. இயங்கி வருகிறது.

எல்லாப் பள்ளிகளுக்கும் அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்கப் பெறும். எந்தப் பள்ளியாக இருந்தாலும் ஒரே ஒரு பொதுவான தேசியக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்க வேண்டும்.


கல்வி தொடர்பில் சட்டத்தை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இருக்கிறது. முன்னாள் மலாயா தலைமை நீதிபதி தீர்ப்பு அளித்து இருக்கிறார். மகிழ்ச்சியான செய்தி. ஆக அந்த வகையில் 1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டம் 550-இன் கீழ் தேசிய மாதிரி பள்ளிகள் இயங்குவதற்கு உரிமை வழங்கப் பட்டது.

தேசிய மாதிரி பள்ளிகள் என்றால் ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் ஆகும். இங்கே ’மாதிரி’ எனும் சொல் வருவதைக் கவனியுங்கள். சரி. இந்த ரசாக் அறிக்கையில் ஓர் இறுதி குறிப்பு உள்ளது. அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

ரசாக் அறிக்கை 1956-இன் பரிந்துரையில் சீன, தமிழ் தாய்மொழிப் பள்ளிகள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என்பது தான் இறுதி குறிப்பு ஆகும். இதில் ஒளிவு மறைவு தேவை இல்லை. ரசாக் அறிக்கையை முழுமையாகப் படித்துப் பாருங்கள். உண்மை தெரியும்.

முன்னாள் பிரதமர் நஜிப் 2012 செப்டம்பர் 11-ஆம் தேதி மலேசிய கல்வி பெருந்திட்டம் (2013 - 2015) எனும் ஒரு முன்னறிக்கையை வெளியிட்டார். பலருக்கும் தெரிந்த செய்தி.

அந்தத் திட்டம் மூலமாக நாட்டின் கல்வித் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவது; கல்வியின் வழி தேசிய ஒற்றுமையை வளர்ப்பது; இந்த இரு நோக்கங்களைக் கொண்டதாக அறிவிக்கப் பட்டது.

அந்தக் கல்வி பெருந் திட்ட முன்னறிக்கையில் ஒரு முக்கிய அம்சம். சீன, தமிழ்ப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெருந்திட்ட அறிக்கையிலேயே சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால் அதைப் பற்றி எழுதுவதில் அச்சம் வேண்டாமே.

பெருந்திட்ட முன்னறிக்கை என்ன கூறுகிறது?

(Executive Summary E-7) - Range of schooling options are creating ethnically homogeneous environments.

2000-ஆம் ஆண்டில் சீனப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 92 விழுக்காடு. தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 47 விழுக்காடு.

2011-ஆம் ஆண்டில் சீனப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 96 விழுக்காடு. தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 56 விழுக்காடு.

இதில் தமிழ்ப் பள்ளிகளில் சேர்ந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்து இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தேசிய ஒற்றுமைக்குள் ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வரலாம். இந்த அடிப்படையில் தான், தாய்மொழிக் கல்வியை எதிர்ப்பவர்கள் சொல்லி வரலாம்.

இன்னும் ஒரு விசயம். தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவது தேச ஒற்றுமையைப் பாதிக்கலாம் என்பது அவர்களுக்குக் கவலை அளிக்கும் விசயமாகவும் இருக்கலாம். சரி.

பி.டி.என். (Biro Tata Negara) எனும் ஒரு தனிப்பட்ட துறையைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்தத் துறை இன ஒற்றுமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகளை நடத்துவதாகப் புகார்கள் வந்தன.

இந்த பி.டி.என். பயிற்சியின் விளைவு தான் இந்திய, சீன மாணவர்கள் அவர்களுடைய ஆசிரியர்களால் பல்வேறு வகைகளில் இழிவுபடுத்தப் படுவதற்கு வழி வகுப்பதாக அரசல் புரசலானக் கசிவுகள்.

பி.டி.என். பயிற்சியின் விளைவுகளைச் சிலாங்கூர் மாநில அரசாங்கம் புரிந்து கொண்டது. அதானால் பி.டி.என். பயிற்சிகளில் அந்த மாநில அரசு பணியாளர்களும் சரி; பள்ளி, கல்லூரி மாணவர்களும் சரி; கலந்து கொள்வதற்கு தடை விதித்தது. இந்த விசயம் பலருக்கும் தெரியாதது.

ஆக இந்த நாட்டில் வாழும் தமிழர்களே தமிழ்ப் பள்ளிகள் வேண்டாம் என்று சொன்னாலும் அது நடக்காத காரியம். நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப் பட வேண்டும். அந்தச் சட்டத்தை மேலவை ஏற்க வேண்டும். இன்னும் பெரிய பெரிய வேலைகள் எல்லாம் இருக்கின்றன. சரிபட்டு வராது.

தாய்மொழிப் பள்ளிகளை அகற்றுவது என்பது அல்வா கேசரி கிண்டும் அடுக்களைச் சமாசாரம் அல்ல. சட்டம், சடங்கு, சம்பிரதாயம், சனாதனம், சான்று என்று எவ்வளவோ இருக்கின்றன.

ஆக மலேசிய அரசியலமைப்பை அனைவரும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் அரசியல் பார்வையில் சத்தியம் வெல்லும். மலேசிய அரசியலமைப்பை அவமதிப்பது ஒரு தேச நிந்தனையாகும்.

இந்தக் கட்டத்தில் இந்த நாட்டின் வளப்பத்திற்காக மலேசிய இந்தியர்கள் செய்த அர்ப்பணிப்புகளை நினைவு கூறுவது ஒரு புறம் இருக்கட்டும். தாய்மொழிப் பள்ளிகளைப் பற்றி மலேசிய அரசியல் அமைப்பில் என்ன சொல்லப் படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

தாய்மொழி என்பது மனிதர்களின் பிறப்பு உரிமை. தமிழ்மொழி என்பது தமிழர்களின் தாய் உரிமை. மலேசியத் தமிழர்களுக்கு அதுவே சிறப்பு உரிமை. அந்த உரிமைக்குப் போராட வேண்டியது என்னுடைய கடமை. அனைவரின் கடமை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.01.2022

சான்றுகள்:

1. A Short History of Tamil Schools in Malaya/ Malaysia - https://grfdt.com/PublicationDetails.aspx?Type=Articles&TabId=7051

2. Global Research Forum on Diaspora and Transnationalism (GRFDT) http://www.grfdt.com/PublicationDetails.aspx?Type=Articles&TabId=7051

3. List of All Primary Schools in Each States in Malaysia, as at 31 Dec 2017. http://myschoolchildren.com/list-of-all-primary-schools-in-malaysia/#.W7mWmCQzbIU

4. Malaya Labour Ordinance in 1912 - https://lib.iium.edu.my/mom/services/mom/document/getFile/U0IAjWSBy5KgLs0Z0pwyhERuNbbFdcBr20070109162203671

5. First Tamil class was held in 1816 at the Penang Free School, founded by Reverend R.S. Hutchings, Colonial Chaplain of the Anglican Church. Formal Tamil schools were opened in the Straits Settlements by Christian missionary bodies in the first half of the 19th century.

 

05 ஜனவரி 2022

1850-ஆம் ஆண்டில் பினாங்கு மலாக்கா மாநிலங்களில் தமிழ்ப் பள்ளிகள்

தமிழ் மலர் - 05.01.2021

மலேசியாவில் ஆட்சிகள் மாறுகின்றன. அரசாங்கம் மாறுகின்றன. அரசியல்வாதிகளும் மாறுகிறார்கள். அமைச்சர்களும் மாறிக் கொண்டே போகிறார்கள். இன்றைக்கு இருக்கும் அமைச்சர் நாளைக்கு இருப்பாரா என்பது தெரியாத ஒரு நிலைமையில் அரசாங்கம் மாறிக் கொண்டே போகிறது.


அப்படி இருக்கும் போது ஒரு சாமானிய மனுசனுக்குத் தெரியுமா. பில்லியன் டாலர் கேள்வி. இதுதான் இப்போதைக்கு மலேசியாவின் அரசியல் இராக பாவ தாளங்கள்.

இந்த இராக பாவங்களினால் அரசியல்வாதிகளின் கொள்கைகள் மாறுமா. இனவாதக் கொள்கைகள் மாறுமா. அரசாங்கத்தின் செயல் திட்டங்கள் மாறுமா. அரசாங்கத்தின் நடைமுறைச் செயல் திறன்கள் மாறுமா. நடைமுறைப் பண்புகள் மாறுமா.

மாறும் ஆனால் மாறாது என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துக் கொள்ளலாம். மாறும் – மாறாது; இதில் எதை வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள். பிரச்சினையே இல்லை.


பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் அசன் அப்துல் கரீம் (Hassan Abdul Karim); ஊடகங்களில், பொருளாதாரச் சரிவை நோக்கி எனும் தலைப்பில் நேற்று ஒரு பதிவைப் பதிவு செய்து இருந்தார். அப்படியே வயிற்றில் புளியைக் கரைக்கிறார்.

அந்தப் பதிவுகளில் இருந்து:

1. தென் கொரிய ’ஹூண்டாய்’ நிறுவனம், ஆசிய பசிபிக் தலைமையகத்தை மூடிவிட்டு இந்தோனேசியாவிற்குச் செல்கிறது.

2. உலகப் பிரபலம் ’ஐ.பி.எம்’. குளோபல் டெலிவரி மையம். இந்த மையம் தன் தலைமையகத்தை மூடிவிட்டு சிங்கப்பூருக்குச் செல்கிறது.

3. ’ஷெல்’ என்கிற உலகளாவிய எண்ணெய் நிறுவனம். இந்தியாவிற்கு தனது செயல்பாடுகளை இடமாற்றம் செய்கிறது.

4. ’சிட்டி குரூப்’ வங்கிக் குழுமம். அதன் வங்கி வணிகத்தைச் சிங்கப்பூருக்கு மாற்றுகிறது.

5. ஜெர்மன் தொழில்நுட்ப நிறுவனம் ’டி-சிஸ்டம்’. தனது வணிகத்தை மூடுகிறது.

6. பேஸ்புக், லசாடா, டென்செண்ட், பைட் டான்ஸ், அலிபாபா போன்ற உலகப் பிரபலங்கள் தங்களின் தரவு மையங்களைச் சிங்கப்பூருக்கு மாற்றுகின்றன.

7. ’ஜூம்’ வீடியோ கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தன் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான புதிய தரவு மையத்தைச் சிங்கப்பூருக்கு மாற்றி உள்ளது.

இப்படி நிறைய புள்ளி விவரங்கள். மனசுக்கு வேதனையாக உள்ளது. நம் நாட்டுத் தலைவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள். மௌனம் ... மௌனம் என்கிற மனோபாவம் போதும். சமாளித்து விடலாம்.

மக்களின் தேவைகளை நிவர்த்திச் செய்வதற்காகத்தான் மக்கள் புதிய அரசாங்கத்தைத் தேர்வு செய்கிறார்கள். மக்களுக்காகத்தான் அரசாங்கம். மக்கள் தேர்வு செய்த அரசாங்கம் மக்களுக்காகத்தான். அரசியல்வாதிகளின் சுய விருப்பங்களுக்காக அல்ல.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் பழைய அரசாங்கத்தின் சில பல பழைய திட்டங்களை அப்படியே தூக்கிக் கொண்டு போய் ஊறுகாய் போட்டு விடுவார்கள். அனைவரும் அறிவோம். தெரிந்த விசயம்.

ஒரு டிரில்லியன் கடனில் நாடே தடுமாறிக் கொண்டு நிற்கிறது. இதில் பெரிய பெரிய மெகா திட்டங்கள் ரொம்ப முக்கியமா. தேவை தானா என்று சொல்லி எத்தனையோ திட்டங்களைத் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தி வைத்து விட்டார்கள். மகிழ்ச்சி.

பிரச்சினை இப்போது அது இல்லை. நம்முடைய தமிழ்ப் பள்ளிக்கூடங்களைப் பற்றியது தான் பிரச்சினை.

பொதுவாக ஒரு நாட்டில் ஆட்சி மாறும் போது புதிதாக வரும் அரசாங்கம் பழைய அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கையிலும் சரி; கல்விக் கொள்கையிலும் சரி; கைவைக்க மாட்டார்கள். அது எழுதப் படாத சாசனம். பல நாடுகளில் அப்படித்தான் நடக்கிறது. நடந்தும் வருகிறது.

நம் நாட்டைப் பொருத்த வரையில் கல்விக் கொள்கைகள் இன மொழி அடிப்படையில் தான் இயங்கி வருகின்றன. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து அப்படித்தான் நகர்ந்து வருகின்றன. உண்மையைச் சொல்வதில் தயக்கம் இல்லை.

புதிதாக எந்த ஓர் அரசாங்கம் வந்தாலும் சரி; வரையறுக்கப்பட்ட பழைய அரசாங்கக் கொள்கைகளில் சிற்சில மாற்றங்களை மட்டுமே செய்வார்கள். பெரிதாக எதையும் செய்ய மாட்டார்கள். செய்யவும் முடியாது.

பக்காத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், சொல்லி வைத்து 100 நாட்களில் அதைச் செய்வோம்; இதைச் செய்வோம் என்று ஒரு சாதனைப் பட்டியலையே தயாரித்துக் காட்டினார்கள். செய்ய முடிந்ததா. முடியாதுங்க. முந்திய அரசாங்கம் வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டவே விழி பிதுங்கிப் போய் நின்றார்கள். அப்புறம் எப்படி?

அதன் பின்னர் ஐயா மொகைதீன் வந்தார். எப்படி வந்தார். விடுங்கள். அப்புறம் இப்போது ஐயா இஸ்மாயில் சப்ரியின் அரசாங்கம். சிறப்பாகச் செயலாற்றி வருகிறார். வெள்ளப் பேரிடர் பிரச்சினையைக் கையாண்ட விதத்தில் இருந்தே நிர்வாகத் திறமைகள் தெரிகின்றன.

இன்னும் ஒரு விசயம். வீட்டுக்குள் வந்து நுழைந்து பார்த்த பிறகுதான் தெரிகிறது ஊழல் பெருச்சாளிகள் பேரன் பேத்தி எடுத்த கண்கொள்ளா காட்சிகள். ஓர் அரசாங்கம் போய் இன்னோர் அரசாங்கம் வந்தால், பழைய அரசாங்கத்தின் வண்டவாளங்கள் அவிழ்த்து விடுவதிலேயே பாதி நேரம் போய் விடுகிறது.

புதிதாகப் பதவி ஏற்ற அரசாங்கம், பதவி ஏற்று, பழைய கோப்புகளைத் தூசு தட்டிப் பார்த்தால் மில்லியன் பில்லியன் கணக்கில் தேய்மானங்கள் தெரிய வரும். ஓர் அமைச்சு இல்லை.

பெரும்பாலான அமைச்சுகளில் பெருவாரியான பணம் காணாமல் போய் இருக்கலாம். எப்படி ஏது என்று அலசிப் பார்ப்பதற்குள் புதிய தேர்தல் புதிய அரசாங்கம் வந்துவிடும். அப்புறம் நேரம் இல்லை.

அந்த எலிகளை ஒவ்வொன்றாகப் பிடித்துக் கூண்டுக்குள் அடைப்பதற்குள் இன்னொரு புதிய அரசாங்கம் வந்து விடுகிறது. ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை.

இந்தக் கோலத்தில் 72 அமைச்சர்கள்; துணை அமைச்சர்கள். அவர்களுக்குப் படி அளக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்ல. மக்கள் வாங்கி வந்த வரம். அரசியலில் இது எல்லாம் சகஜம்பா என்று நாமும் போய்க் கொண்டே இருக்கிறோம். அப்புறம் எப்படிங்க? சரி. நம்ப கதைக்கு வருவோம்.

மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தின் 152-ஆவது பதிவில் (Article 152 Federal Constitution) தமிழ் சீன மொழிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. சட்டப் படியான அங்கீகாரம். ஆகவே அந்த மொழிகளைப் பயன்படுத்த முடியாது அல்லது பயன்படுத்தக் கூடாது என்று சொல்ல எவருக்கும் எந்த உரிமையும் இல்லை.

அப்படிச் சொன்னால் அது சட்டப்படி குற்றமாகும். மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தை அவமதிப்பது போலாகும். அது ஓர் அரச நிந்தனையாகும். புரிந்து கொள்ளுங்கள்.

மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தில் மாற்றம் அல்லது திருத்தம் செய்யாமல் தாய் மொழிகளின் உரிமையில் தலையிட முடியாது. அந்த வகையில் அரசியலமைப்புச் சாசனத்தில் தாய் மொழிகளுக்குத் தனி உரிமை உண்டு. மறுபடியும் சொல்கிறேன்.

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் 152-ஆவது பதிவில், தாய்மொழி உரிமைகள் பற்றி நன்றாகவே தெளிவாகவே சொல்லப் பட்டு இருக்கிறது.

மலேசிய கல்விச் சட்டம் 1996 (The Education Act - Akta Pendidikan 1996). இதன் தற்போதைய வடிவம் 2012 ஜனவரி 1-ஆம் தேதி திருத்தி அமைக்கப்பட்டது. 16 பகுதிகள் 156 பிரிவுளைக் கொண்டது. 2 திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

200 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயா நாடு பிரிட்டிஷ் காலனியாக மாறியது. அப்போது மலாயாவில் நிறைய காபி, தேயிலை, கரும்புத் தோட்டங்கள். மலாயாவில் முதலில் தோன்றியவை காபித் தோட்டங்கள். அதன் பின்னர் அந்தி மந்தாரைக் காளான்களாக நூற்றுக் கணக்கான ரப்பர் தோட்டங்கள் பூக்கத் தொடங்கின. நன்றாகப் பூத்துக் குலுங்கின.

அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்குத் தென்னிந்தியாவில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் இங்கே கொண்டு வரப் பட்டார்கள். அப்படி வந்தவர்கள் தங்களுடன் கூடவே தங்களின் தாய் மொழியான தமிழ் மொழியையும் கொண்டு வந்தார்கள்.

மலாயாவில் முதன்முதலாகப் பினாங்கில் 1816-ஆம் ஆண்டில் ஒரு பள்ளி தொடங்கப் பட்டது. ஆது ஓர் ஆங்கிலப் பள்ளி. அதன் பெயர் பினாங்கு பிரீ ஸ்கூல். அதே பள்ளியில் ஐந்து ஆண்டுகள் கழித்து 1821-ஆம் ஆண்டில் ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது.

அந்தக் கட்டத்தில் பினாங்குத் துறைமுகத்தில் நிறைய தமிழர்கள் வேலை செய்து வந்தார்கள். அவர்களின் பிள்ளைகளுக்காக அந்தத் தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. இருப்பினும் ஆதரவு குறைந்து குன்றிப் போனதால் அந்தத் தமிழ் வகுப்பு மூடப் பட்டது.

1850-ஆம் ஆண்டில் பினாங்கிலும் மலாக்காவிலும் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. 1870-ஆம் ஆண்டுகளில் ஜொகூர், சிங்கப்பூர் போன்ற இடங்களில் தமிழ்ப் பள்ளிகள் தோன்றின.

அதன் பின்னர் 1895-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் ஆங்கிலோ தமிழ்ப்பள்ளி உருவானது. பின்னர் அந்தப் பள்ளி மெதடிஸ்ட் ஆங்கிலப்பள்ளி என்று உருமாற்றம் கண்டது.

1912-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். தோட்டத் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் சட்டம். ஒரு தோட்டத்தில் பத்துக் குழந்தைகள் இருந்தால் போதும்; ஒரு தமிழ்ப் பள்ளியை உருவாக்க வேண்டும் எனும் சட்டம். மறுபடியும் சொல்கிறேன்.

ஒரு தோட்டத்தில் 7 முதல் 14 வயது வரை பத்து குழந்தைகள் இருந்தால் போதும்; ஒரு தமிழ்ப்பள்ளியை உருவாக்க வேண்டும் என்கிற சட்டம்.

இந்தச் சட்டம் அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது. காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்கள் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தச் சட்டத்தை மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள்.

பத்துக் குழந்தைகள் இருந்தால் ஒரு தமிழ்ப் பள்ளி எனும் அந்தச் சட்டம் 1912-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போது பள்ளிகளை எந்த இடத்தில் தொடங்குவது; எப்படி நடத்துவது என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது.

தோட்டத்தில் இருந்த ஆயாக் கொட்டகைகள்; நாடக மண்டபங்கள்; பலசரக்குக் கடைகள்; கோயில்கள்; தொழிலாளர் வீடுகள் போன்றவற்றில் வகுப்புகளை நடத்தினார்கள். படித்துக் கொடுக்க ஆசிரியர்கள் வேண்டுமே. என்ன செய்வது. பார்த்தார்கள். வேறுவழி இல்லாமல் கோயில் பூசாரிகளைக் கொண்டு வந்து அவர்களை வாத்தியார்களாக மாற்றி விட்டார்கள்.

கோயில் பூசாரிகள் இல்லாத தோட்டங்களில் கங்காணிகளே வாத்தியார் வேலையைச் செய்தார்கள். கங்காணிகளுக்குப் பதிலாக சில இடங்களில் தோட்டத்துக் கிராணிமார்களும் வாத்தியார் வேலையைச் செய்து இருக்கிறார்கள். வாழ்த்த வேண்டிய விசயம்.

இப்படி கோயில் பூசாரிகளும் கங்காணிகளும் ஆசிரியர் வேலை செய்ததால் மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருக்கும். தரம் குறைவாக இருந்தது. ஒரு தேக்க நிலை. இங்கே ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது.

தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களுக்குக் கல்வி அறிவைக் கொடுக்க வேண்டும்; அவர்களை அறிவாளிகளாகவும் அறிவு ஜீவிகளாகவும் மாற்ற வேண்டும் என்பது எல்லாம் ஆங்கிலேயர்களின் நோக்கம் அல்ல. நிச்சயமாக அப்படி இருக்காது.

வெள்ளைக்காரர்களுக்கு அவர்கள் போட்டு இருக்கும் சட்டைதான் வெள்ளை. மனசு எல்லாம் சொக்கத் தங்கமாய் கறுப்பு. அப்போது அவர்களுக்கு பிடித்தமான பாடல் என்ன தெரியுங்களா. கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு.

படித்தவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களைக் கட்டி மேய்க்க முடியாது. அது ரொம்பவும் சிரமமான காரியம். கைநாட்டுப் போடுபவர்களுக்குக் கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். அப்படித்தான் வெள்ளைக்காரர்கள் நினைத்தார்கள். நம் இனத்தை ஒரு வழி பண்ணி விட்டார்கள். இப்போது கையேந்த வைத்து விட்டார்கள். நாளையும் இதன் தொடர்ச்சி இடம் பெறும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.01.2021
 
சான்றுகள்:

1. R. Kurinjivendhan. Malaya Thamizhar Sarithiram. p. 126. ISBN 978-81-234-2354-8.

2. Global Research Forum on Diaspora and Transnationalism (GRFDT) http://www.grfdt.com/PublicationDetails.aspx?Type=Articles&TabId=7051

3. List of All Primary Schools in Each States in Malaysia, as at 31 Dec 2017. http://myschoolchildren.com/list-of-all-primary-schools-in-malaysia/#.W7mWmCQzbIU

4. Malaya Labour Ordinance in 1912 - https://lib.iium.edu.my/mom/services/mom/document/getFile/U0IAjWSBy5KgLs0Z0pwyhERuNbbFdcBr20070109162203671

5. The first Tamil class was conducted in Penang Free School on Oct 21, 1816. https://www.pressreader.com/malaysia/the-star-malaysia/20161013/282071981418159



 

04 ஜனவரி 2022

மலேசியத் தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக நிதி சேகரிப்பு

தாய்மொழிப் மொழிப் பள்ளிகளின் சட்டப்பூர்வமான தன்மையை எதிர்த்து போராடும் ஓர் அரசு சாரா நிறுவனத்திற்கு உதவுவதற்காக, பெம்பேலா இஸ்லாம் (Pertubuhan-Pertubuhan Pembela Islam) அமைப்புகள், பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளைச் சேகரிக்க ஒரு நிதியைத் தொடங்கி இருக்கின்றது.


அதன் தலைவர் அமினுதீன் யஹாயா (Aminuddin Yahaya). அவர் கூறுகிறார்: ’இதுவரையில் அந்த அரசு சாரா அமைப்புகள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி வந்தன. அவர்களின் அந்தச் சுமையை இந்த நிதி, ஓரளவுக்கு குறைக்க முடியும்.’

’தாய்மொழிப் பள்ளிகளுக்குச் சவால் விடுக்கும் எங்கள் போராட்டத்திற்காக ஒரு நிதியைத் திறக்க வேண்டும் என்று பொது மக்கள் பலர் கேட்டுக் கொள்கிறார்கள்.’

"இந்த வழக்கு நீண்ட காலத்திற்கு நீடிக்கும். மேல்முறையீட்டு உயர் நீதிமன்றத்திற்குச் செல்லும். ஆகவே எங்களின் செலவுகளுக்காக ஒரு நிதியைத் திறக்க வேண்டிய அவசியத்தை நானும் என் தோழர்களும் உணர்கிறோம்’ என்கிறார் அமினுதீன் யஹாயா.

"குறைந்த பட்சம் எங்களின் நீதிமன்றச் செலவுகள், ஆவணங்கள் தயாரிப்புச் செலவுகள் மற்றும் இந்த வழக்கில் கடினமாக உழைத்துப் போராடி வரும் வழக்கறிஞர்களுக்கு ஒரு சின்ன பண உதவி போன்றவற்றை எங்களால் செய்ய முடியும்," என்று அமினுதீன் யஹாயா தன் பேஸ்புக் பதிவில் இன்று கூறினார்.

(மொழியாக்கம்: மலேசியம்)
04.01.2022

The Pembela Islam (Pembela) organizations will open a fund to collect donations from the public in an effort to help the non-governmental organization (NGO) in its struggle to challenge the legitimacy of vernacular schools.

Its chairman, Aminuddin Yahaya, said that with the contribution from the public, it could ease some of the burden borne by NGOs that previously used pocket money for operations.

Many ask, will the Defenders open a fund for the general public to contribute to our struggle to challenge the legitimacy of this vernacular school.

“As this case goes on for much longer, with the appeal process and possibly to a higher court, my comrades and I feel the need for us to open that space (fund).

"At least we can help cover court costs, documentation and also as a token to lawyers who are working hard to fight in this case," he said through his Facebook post, today.


https://malaysiagazette.com/2022/01/03/pembela-buka-tabung-tampung-perjuangan-cabar-keabsahan-sekolah-vernakular/?amp


The Pembela Islam (Pembela) organizations will open a fund to collect donations from the public in an effort to help the non-governmental organization (NGO) in its struggle to challenge the legitimacy of vernacular schools.

Its chairman, Aminuddin Yahaya, said that with the contribution from the public, it could ease some of the burden borne by NGOs that previously used pocket money for operations.

Many ask, will the Defenders open a fund for the general public to contribute to our struggle to challenge the legitimacy of this vernacular school.

“As this case goes on for much longer, with the appeal process and possibly to a higher court, my comrades and I feel the need for us to open that space (fund).

"At least we can help cover court costs, documentation and also as a token to lawyers who are working hard to fight in this case," he said through his Facebook post, today.




 

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் 2021 புள்ளிவிவரங்கள்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் 2021 புள்ளிவிவரங்கள்
(மாவட்ட வாரியாக மலேசியத் தமிழ்ப்பள்ளிகள்)

நகர்ப்புறம் (370 பள்ளிகள்) (70.21%)

கிராமப்புறம் (157 பள்ளிகள்) (29.79%)

அரசாங்க உதவி:

முழு உதவி (162 பள்ளிகள்) (30.74%)

பகுதி உதவி (365 பள்ளிகள்) (69.26%)

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கை:

ஜனவரி 2018 - 81,488 மாணவர்கள்

ஏப்ரல் 2018 - 81,635 மாணவர்கள்

ஜனவரி 2019 - 81,321 மாணவர்கள்

மே 2019 - 81,447 மாணவர்கள்

ஜனவரி 2020 - 80,569 மாணவர்கள்

ஜூன் 2020 - 80,743 மாணவர்கள்

ஜூன் 2021 - 80,434 மாணவர்கள்

(தயாரிப்பு: மலேசியம்)

சான்றுகள்: SENARAI SEKOLAH WEB KPM - JUN2020 - https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3547-senarai-sekolah-rendah-dan-menengah-jun-2020/file

 

பார்ன்ஸ் பென் பூ அறிக்கைகளில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகள்

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்று சொல்வர்கள். அது என்னவோ தமிழ், சீனப் பள்ளிகளுக்கு மிகச் சரியாகவே பொருந்தி வருகிறது. தாய்மொழிப் பள்ளிகள் வாங்கி வந்த வரமா இல்லை எழுதிச் சென்ற விதியின் சாசனமா தெரியவில்லை.


இனவாதிகளும் மதவாதிகளும் கூட்டுக் கட்டி குலுக்குச் சீட்டுப் போடுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். ஒரு வழி பண்ணாமல் விட மாட்டார்கள் போல தெரிகிறது.

தாய்மொழிப் பள்ளிகள் இந்த நாட்டின் அரசமைப்பு சட்டங்களுக்கு முரண்பாடாக இயங்குகின்றன என்று மூன்று மலாய் இயக்கங்கள் அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து இருந்தன. தமிழ் சீனப்பள்ளிகளுக்கு எதிராக வழக்கைத் தொடுத்த இயக்கங்கள் (வாதிகள்)

1. மலேசிய மலாய் மாணவர்கள் சங்கங்களின் சம்மேளனம் (Gabungan Pelajar Melayu Semenanjung (GPMS)

2. இஸ்லாமியக் கல்வி மேம்பாட்டு மன்றம் (Pembangunan Pendidikan Islam Malaysia (Mappim)

3. Gabungan Persatuan Penulis Nasional Malaysia எனும் Confederation of Malaysian Writers Association (Gapena)

இந்த வழக்கின் பிரதிவாதிகள். அதாவது இந்த வழக்கிற்கு எதிராக வாதாடியவர்கள்:

1. மலேசிய அரசாங்கம்
2. மலேசிய கல்வி அமைச்சு
3. மலேசிய கல்வி அமைச்சர்
4. ம.இ.கா.
5. ம.சீ.ச.
6. கெராக்கான்
7. மலேசிய பூமிபுத்ரா பெர்காசா கட்சி
8. மலேசிய தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பு
9. மலேசிய தமிழ் நெறி கழகம்,
10. மலேசியத் தமிழர்க் கழகம்
11. தமிழர் திருநாள் கழகம் (பேராக்)
12. தமிழ்ப்பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் நலச் சங்கம்
13. சீனக் கல்வியாளர் குழு Dong Zong
14. சீனக் கல்வியாளர் குழு Jiao Zong
15. மலேசியச் சீன மொழிக் கழகம் (Malaysian Chinese Language Council)
16. சோங் ஹுவா சீன உயர்நிலைப்பள்ளி (SMJK Chong Hwa)

சில அமைப்புகளின் பெயர்கள் விடுபட்டு இருக்கலாம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.


நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப தமிழ் - சீன மொழிப் பள்ளிகள் செயல் படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் (Mohd Nazlan Mohd Ghazali) தம் தீர்ப்பில் தெரிவித்து இருக்கிறார். தாய் மொழிப் பள்ளிகள் தொடர்ந்து நிலைத்து இருக்கும் என்பது வரலாற்றுப் பூர்வமான தீர்ப்பு.

இனங்களைக் கடந்து; மதங்களைக் கடந்து; நிறங்களைக் கடந்து; 200 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் மலேசியாவில் செயல்பட்டு வருகின்றன.

ஆனாலும் தாய்மொழிப் பள்ளிகள் அகற்றப்பட வேண்டும் என மலேசிய முஸ்லிம் ஆசிரியர்கள் சங்கம் கடந்த 2020 ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி கோத்தா பாரு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது.

நாட்டின் தேசிய மொழி இருக்கும் பொழுது தாய்மொழிப் பள்ளிகளில் மட்டும் தமிழ் மற்றும் சீன மொழிகளைப் போதனா மொழியாக பயன்படுத்தப்படுவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்பது வழக்கு தொடர்ந்த அமைப்புகளின் வாதம்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு. இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர், நாட்டில் 1,800 தாய்மொழிப் பள்ளிகளில் 500,000 மாணவர்கள் கல்வி பயில்வது சட்டப்பூர்வமாகவும் அரசியலமைப்புச் சட்டத்தில் கீழ் மேற்கொள்ளப் படுவதாகவும் நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி கூறினார்.

மேலும், கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் எழுதப் பட்டதைப் போல் இந்தப் பள்ளிகளில் மலாய் மொழி இடைநிலை மொழியாக பயன்படுத்தப்படும் என்றார். எனவே, தாய்மொழி பள்ளிகளான தமிழ் மற்றும் சீன பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்பதை அவர் தனது தீர்ப்பின் மூலம் உறுதிப் படுத்தினார்.

2020-ஆம் ஆண்டு மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 527 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. 80,569 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். 8,638 தமிழ் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

தாய்மொழிப் பள்ளிகள், குறிப்பாக தமிழ்ப் பள்ளிகள் ஒரு போதும் பிரிவினைகளை வளர்த்தது கிடையா. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில், மற்ற மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்பதைப் பதிவு செய்வதில் உறுதியாக இருக்கிறேன்.

இந்த வழக்கு தொடர்பாகத் துடிப்புடன் செயலில் இறங்கிய அமைப்புகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் நம்முடைய வாழ்த்துகள். ஏறக்குறைய 30 வழக்கறிஞர்களைத் திரட்டிப் போராடிய திரு. அருண் துரைசாமி அவர்களுக்குத் தனிப்பட்ட வகையில் வாழ்த்துகள். இருந்தாலும் தூவானம் இப்போதைக்கு விடாது போல தெரிகிறது.

பூமிபுத்ரா பெர்காசா மலேசியா (புத்ரா) கட்சியின் தலைவர் இப்ராகிம் அலி உடனடியாக ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். தாய்மொழிப் பள்ளிகள் இருக்கத் தான் வேண்டுமா? மேல் முறையீடு செய்யப்படும்; கவலைப் படாதீர்கள் என்கிற அறிக்கை.

மலேசிய ஒற்றுமைக்குத் தடையாக உள்ள தாய்மொழிப் பள்ளிகள் தொடர்பான சர்ச்சைக்கு மேல் முறையீடு நீதிமன்றம் தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன் என்கிறார் இப்ராகிம் அலி.

மேலும் அவர் கூறுகிறார். தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து இருப்பது; அவற்றில் தாய்மொழிகள் பயிற்று மொழிகளாக இருப்பது; தேசிய நலனுக்கு ஏற்றது அல்ல. அவை எல்லா இனங்களையும் சேர்ந்த பிள்ளைகள் ஒன்று படுவதற்குத் தடங்கலாக உள்ளன என்றும் கூறி இருக்கிறார். சரி. அது அவரின் கருத்து.

நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை; அந்தத் தாய்மொழிப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை; அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே ஒரு சிலரின் பார்வை. ஒரு சிலரின் வாதம்.

இவ்வளவு நாளும் இந்த நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் நல்லபடியாகத் தானே போய்க் கொண்டு இருந்தன. ஏன் திடீரென்று இந்த மாதிரி (அ)இடக்கு முடக்கான கேள்விகளைக் கேட்கிறார்கள். நீதிமன்றத்தில் மனு; வழக்காடல்கள்; மேல் முறையீடுகள். தேவையே இல்லை.

வேலை வெட்டி இல்லாத வெட்டிச் சரக்குகள். எதையாவது குழப்பி எப்படியாவது மீன் பிடிக்க வேண்டும். வேற வேலை இல்லை. எதையாவது சீண்டணும். பேர் வாங்கணும். அப்படியே நாலு காசு பார்க்கணும். ரூம் போட்டு டிசுகசன் பண்ணி வெட்டி முறிக்கணும்.

இந்தப் பிரச்சினை இன்று நேற்று தொடங்கிய பிரச்சினை இல்லை. நீண்ட காலமாகவே கொடிகட்டிப் பறக்கின்றது. அண்மைய காலங்களில் ரொம்பவுமே உயரத்தில் பறக்கின்றது.

இதற்கு எல்லாம் யாரோ பின்னால் இருந்து கொண்டு, சாவி கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்று பலரும் பலவாறாகப் பேசிக் கொள்கிறார்கள். யார் எவர் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

முன்பு 48 ஆண்டுகளுக்கு முன்பே இதைப் பற்றி ஒரு பெரிய சர்ச்சை ஏற்பட்டது. சீனத் தமிழ்ப் பள்ளிகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்று உத்துசான் மலேசியா மலாய் நாளிதழின் ஆசிரியர் மெலான் அப்துல்லா சொன்னார். 
 
1971-ஆம் ஆண்டு. அவர் மீது வழக்கு தொடரப் பட்டது. குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் பட்டது. அபராதமும் விதிக்கப் பட்டது. இது சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது.

(Melan bin Abdullah & Anor v. P.P. ([1971] 2 MLJ 280)

பின்னர் மற்றும் ஒரு பிரச்சினை. 1978-ஆம் ஆண்டு மார்க் கோடிங் (Mark Koding) என்கிற சபா நாடாளுமன்ற உறுப்பினர். தமிழ் சீனத் தாய்மொழிப் பள்ளிகளை மூடுங்கள் என்று சொன்னார். சிக்கிக் கொண்டார். 1978 அக்டோபர் 11-ஆம் தேதி.
அப்போது உசேன் ஓன் பிரதமராக இருந்தார். நாடாளுமன்றத்தில் பேசும் போது அதன் உறுப்பினர்களுக்குச் சட்ட விலக்களிப்பு (immunity) இருக்கும். இருந்தும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு அவர் இழுக்கப் பட்டார்.

(Public Prosecutor v Mark Koding ([1983] 1 MLJ 111)); (s 4(1)(b) of the Sedition Act 1948 (Revised 1969); (Section 3(1)(f) in the Sedition Act 1948);

மேலே சொன்ன அந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப் பட்டார். 1982-இல் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் பட்டது. பின்னர் ஈராண்டு நன்னடத்தை ஜாமீனில் தற்காலிக விடுதலை பெற்றார். இவர் 52-ஆவது வயதில் மாரடைப்பினால் காலமானார். சரி.

அண்மைய காலங்களில் அதிகமான புகைச்சல். ஓர் எடுத்துக்காட்டு. பாஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவர். சலாமியா மாட் நூர் (Ustazah Salamiah Mohd Nor). 2019 ஜுன் 22-ஆம் தேதி குவாந்தான் இந்திரா மக்கோத்தா அரங்கத்தில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 65-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம்.

அதில் அவர் சொன்னது: நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை. அந்தப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை. அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.

அதற்குப் பதிலாக அரபு மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று பேசி இருக்கிறார். உசுப்பி விட்டது நாயக்.

இந்த மாதிரி அடிக்கடி பிசுபிசுப்புகள். சரி. இதை இப்படியே கொஞ்ச நேரம் நிறுத்தி வைப்போம். மலேசிய அரசியல் அமைப்பில் கல்விச் சட்டம் என்ன சொல்கிறது. தமிழ்ப்பள்ளிகளைப் பற்றி என்ன சொல்கிறது. அதைப் பார்ப்போம்.

முதலில் ரசாக் திட்டம் வருகிறது. இந்தத் திட்டம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் இதைப் பற்றி கட்டுரை எழுதி இருக்கிறேன். இருந்தாலும் மறுபடியும் நினைவுபடுத்தினால் சிறப்பு.

1956-ஆம் ஆண்டு மலாயா கல்விக் கொள்கைக்காகத் தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கை தான் ரசாக் திட்டம். இதை ரசாக் அறிக்கை (Razak Report) என்றும் சொல்வார்கள். மலாயா கல்விக் கொள்கையில் ஒரு சீர்த்திருத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணைப் பிரிவு 3-க்குள் ரசாக் அறிக்கை ஒருங்கிணைக்கப் பட்டது. மலாயா கல்விக் கட்டமைப்பின் அடிப்படையாக அந்த ரசாக் அறிக்கை விளங்குகிறது. அதன் மூலம் சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப் பட்டது. இந்த இடத்தில் ஒன்றைக் கவனியுங்கள்.

சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் விதி என்பது 1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணைப் பிரிவு 3-க்குள் அடங்குகிறது. அதற்கு ரசாக் அறிக்கை வழிவகுத்துக் கொடுக்கிறது. சரிங்களா. ரசாக் அறிக்கை வருவதற்கு முன்னர் இரு வேறு அறிக்கைகள் இருந்தன. காலத்துவ பிரிட்டிஷார் ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட அறிக்கைகள்.

முதலாவது பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report).

இரண்டாவது பென் பூ அறிக்கை (Fenn-Wu Report).

இந்த இரு அறிக்கைகளில் முதலாவதாக வந்த பார்ன்ஸ் அறிக்கையைப் பெருவாரியான மலாய்க்காரர்கள் ஆதரித்தார்கள். சீனர்களும் இந்தியர்களும் ஆதரிக்கவில்லை.

இரண்டாவதாக வந்த பென் பூ அறிக்கையை மலாய்க்காரர்கள் ஆதரிக்கவில்லை. மாறாக சீனர்களும் இந்தியர்களும் ஆதரித்தார்கள். இரு தரப்பிலும் இணக்கச் சுணக்கங்கள். அதைச் சரி செய்யவே ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

சுருக்கமாகச் சொல்லப் போனால் ரசாக் அறிக்கை என்பது ஒரு சமரசக் கல்வி அறிக்கை ஆகும். இரு தரப்புகளையும் சமரசப் படுத்தும் ஒரு திட்டம் ஆகும். இந்தக் கட்டுரை நாளையும் தொடரும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.01.2022


1. Berci, Liqing Tao, Margaret; He, Wayne (23 March 2006). "Historical Background: Expansion of Public Education". The New York Times. ISSN 0362-4331.

2. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3295-senarai-sekolah-rendah-dan-menengah-jan-2020/file