27 செப்டம்பர் 2009

கணினியும் நீங்களும் – 13.09.2009

கேஸ்வரி, ஈப்போ - k_wary@hotmail.com
கே: Fire Fox எனும் புதிய வகையான உலவி வந்திருக்கிறதே. நன்றாகச் செயல் படுகிறதா. பிரச்னை இல்லையே?

ப: நல்ல கேள்வி. Fire Fox பற்றி யாராவது கேட்பார்களா என்று எதிர்பார்த்தேன். நீங்கள் கேட்டு விட்டீர்கள். என்பது ஓர் உலவி. அதாவது Internet Explorer போல ஓர் உலவி. இண்டர்நெட் எக்ஸ்புளோரர்ஐ மைக்ராசாப்ட் நிறுவனம் விற்று வருகிறது.

Fire Fox எனும் நரிப் பிழம்புMozilla நிறுவனம் இலவசமாகக் கொடுக்கிறது. இந்த நரிப் பிழம்பின் சாதனைகளை இங்கே சொல்ல வேண்டும். இணையத்தில் உலவ வேண்டும் என்றால் அதற்கு ஒரு நிரலி வேண்டும். அந்த நிரலிக்குப் பெயர்தான் உலவி. அந்த நிரலி கணினியில் இல்லை என்றால் நீங்கள் இணையத்திற்குள் நுழைய முடியாது.


விண்டோஸ் பயன்படுத்துபவர்களுக்குப் பிரச்னை இல்லை. அதைப் பயன்படுத்தாதவர்கள் என்ன செய்வார்கள். சிலர் விண்டோஸக்குப் பதிலாக Linux, Mac போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். தெரியும் தானே. இவர்களுக்காகச் செய்யப் பட்டதுதான் இந்த நரிப் பிழம்பு எனும் உலவி. இந்த உலவியைத் தயாரிக்க ஆரம்பித்ததும் உலகத்தில் உள்ள எல்லா தலை சிறந்த கணினி வல்லுநர்களும் உதவிக்கு வந்து விட்டார்கள்.


மலேசியாவில் ஒரு பத்து பதினைந்து பேர். உலக மக்கள் இலவசமாக அனுபவிக்கட்டுமே என்கிற ஒரு மனித நேயம்தான். மைக்ராசாப்ட் நிறுவனத்தின் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியின் நம்பகத்தன்மை குறையக் குறைய, இணையப் பயன்பாட்டிற்கு உலக மக்கள் வேறோர் உலவியை விரும்பினார்கள். ஆக, வேகமாகவும் பாதுகாப்பாகவும் அதே சமயத்தில் பற்பல புதிய நவீன வசதிகளைத் தரும் நரிப் பிழம்பு எனும் உலவி வடிவமைக்கப்பட்டது.


ஆயிரக்கணக்கான பொறியியல் வல்லுநர்கள் மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி செய் தார்கள். உலகம் முழுமையும் இந்த வல்லுநர்கள் அல்லும் பகலும் உழைத்தார்கள். சம்பளம், ஊதியம், விளம்பரம், புகழ்ச்சி  என்று எதுவுமே பார்க்கவில்லை. 


ஒரு சின்ன பிரச்னை என்றால் ஜப்பானில் இருந்து ஒருவர் ஒன்று சொல்வார். இன்னொருவர் இந்தியாவில் இருந்து ஒரு தீர்வைச் சொல்வார். இன்னொருவர் பிரான்சில் இருந்து  சொல்வார். மலேசியாவில் இருந்து நம்முடைய கருத்துகளைச் சொல்லுவோம்.

இப்படியே 22 ஆயிரம் bugs எனும் தடைகளை நிவர்த்தி செய்தார்கள். கடைசியில் கடந்த ஜூன் மாதம் 17
ஆம் தேதி வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. இதற்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

கூடுதல் பாதுகாப்பு, அதிவேக இயக்கம், தோற்றப் பொலிவு, user friendly எனும் பயன்படுத்துவோர் இலகுத் தன்மை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இது வெளியான நாள் அன்று கணினி உலகில் ஒரு சாதனை படைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றது.


ஒரே நாளில் 83 இலட்சம் பேர் பதிவிறக்கம் செய்தார்கள். எந்த நாடுகளிலிருந்து எவ்வளவு பேர் என்பதை http://www.spreadfirefox.com/enUS/worldrecord/ எனும் இணையத் தளத்திற்குப் போனால் தெரியும். உலகின் 46 மொழிகளில் கிடைக்கிறது. அந்தந்த மொழிகளில் செயல்படுகிறது.


தமிழில் செயல்பட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்த உலவி உண்மையிலேயே ஓர் அற்புதமானது. அத்தனை அதிசயமான சிறப்புகள். http://www.getfirefox.com எனும் இடத்தில் கிடைக்கிறது. ஒரு முறை பயன்படுத்திய பிறகு, அப்புறம் நீங்கள் அதிலிருந்து வெளியே வரவே மாட்டீர்கள். உலக மக்களுக்கு கிடைத்த ஓர் இணையச் சுரபி.


Kavi Nair Mahdevan <ka_v18@yahoo.com>
கே: நான் 4GB Apacer எனும் USB பயன் படுத்துகிறேன். கணினிக்குள் செருகியதும் ஒழுங்காக வேலை செய்கிறது. ஆனால், My Computer எனும் கோப்புறையைத் தட்டியதும் அந்த குறுந்தட்டகம் பிரச்னை பண்ணுகிறது. என்ன செய்வது?

ப: இதற்கு காரணம் உங்களுடைய USB எனும் உலகளாவிய நேரியல் பாட்டை. இதைக் கணினியிலிருந்து வெளியாக்கும் போது Safely Remove எனும் முறையைப் பயன்படுத்தி வெளியாக்கி இருக்க வேண்டும். கணினிக்குள் செருகினோம் பிடுங்கினோம் என்று இருக்கக்கூடாது. பாதுகாப்பாக வெளியாக்க வேண்டும். 

இது கணினிக்குள் செருகி இருக்கும் போது பட்டென்று பிடுங்கினால் இந்தப் பிரச்னை வரும். இந்தப் பிரச்னையத் தீர்க்க வேண்டுமானால், My Computer > Drive C > Properties > Tools > USB > Run Error Checking என்பதைச் சொடுக்கி விடுங்கள். பிரச்னை தீரும் என்று நினைக்கிறேன். அப்படியும் முடியவில்லை என்றால் www.quickonlinetips/archives/2005/08/fix-format-usb-flash-drivers/ எனும் முகவரிக்குப் போய்ப் பாருங்கள். விளக்கம் கிடைக்கும்.

Raju Murali <raju_pollathavan@yahoo.com>
கே: கணினித் துறையில் தமிழர்கள் சிறந்து விளங்க என்ன காரணம்? சிறுவர்கள் சின்ன வயதிலேயே கணினியை இயக்கக் கற்றுக் கொள்கிறார்களே. பெரியவர்களால் அப்படி முடியவில்லை. ஏன்?

ப: இந்தக் கேள்வி ஏற்கனவே கேட்கப்பட்டது. மறுபடியும் வருகிறது. பரவாயில்லை. பதில் சொல்கிறேன். உங்களுடைய முதல் கேள்விக்கு வருகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் திராவிடர் என்ற ஒரே ஓர் இனம் மட்டும் தான் இருந்தது. காலத்தின் தாக்கத்தால், சிலரின் ஆளாண்மையால் அந்த இனம்  பற்பல இனங்களாகப் பிரிந்து போனது.

ஆனால், திராவிடர்களின் பாரம்பரிய கணிதப் புலமை மட்டும் குறையவில்லை. இந்தப் புலமை இயற்கை அள்ளிக் கொடுத்த அமுதசுரபி. உலகத்திலேயே கணினித் துறையில் சிறந்தவர்கள் யார் என்று கேட்டால் அவர்கள்தான் இந்தியர்கள். சகோதரர் பில் கேட்ஸ் ஏன் இந்தியாவிற்கு வர வேண்டும். தமிழ் நாட்டைச் சேர்ந்த 21,000 பேரை வேலைக்குச் சேர்க்க வேண்டும். சம்பளத்தை அள்ளி அள்ளிக் கொடுக்க வேண்டும்.

சரி. உங்களுடைய அடுத்த கேள்விக்கு வருகிறேன். கற்றுக்கொள்ளும் ஆற்றல் வயது ஆக ஆகக் குறையும் என்பது உண்மைதான். ஆனால், அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஓர் ஆர்வம் இருக்க வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு பிடிவாத குணம் இருக்க வேண்டும். 

நம்ம காலத்தில் இந்த கம்பியூட்டர் இல்லை. இப்போது வந்திருக்கிறது. அதைக் கட்டிக் கொண்டு ஏன் மாரடிக்க வேண்டும் என்று ஒரு சில பெரியவர்கள் நினைக்கிறார்கள். அது தப்பு. வயதாகும் போது தனிமையை விரும்பும் தன்மையும் வரும். அதுவும் ஒரு காரணம் என்றும் சொல்லலாம்.

குடும்ப உறவுகளில் நல்லதைச் செய்யும் இந்தக் கணினியை ஒரு தெய்வமாக நினைக்க வேண்டும்! இன்னும் ஒரு விஷயம். இணையத்தை இருபத்து நான்கு மணி திறந்து விட்டால் படிக்கிற பிள்ளைகள் என்ன செய்வார்கள். Parental Control ஐப் பயன்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும்.

அதை விட்டு விட்டு என் பிள்ளைகள் படிக்கவில்லை. பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து கண்டதைக் கெட்டதைப் பார்த்துக் கெட்டுப் போகிறான் என்று பழி போடுவது நல்ல காரணமாக இருக்கிறதா. உங்கள் பிள்ளைகள் தப்பித்துக் கொள்வதற்காகக் கண்ட கண்ட சால்சாப்புகளைச் சொல்லலாம். அதை விடுங்கள்.

அவர்கள் சுதந்திரமாக இணையத்தில் வலம் வருவதில் பாதுகாப்புத் திரையைப் போடுங்கள். நீங்கள் இருபது வயதில் தெரிந்து கொண்டதை இப்போது உள்ள பிள்ளைகள் பத்து வயதில் தெரிந்து கொள்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

இணையத்தில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. உங்களுக்கு முன்னால் நல்லதைப் பார்க்கும் பிள்ளைகள், நீங்கள் போனதும் மற்றதைப் பார்க்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

வனஜா, vanajahm@yahoo.com
கே: மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எங்களுடைய கணினியைத் தர உயர்வு (Upgrade) செய்வதாகச் சொல்லி ஒருவர் வாங்கிச் சென்றார். விண்டோஸ் 2000 லிருந்து விண்டோஸ் XPக்கு தரம் உயர்வு செய்யப்பட்டது. இப்போது கணினி பிரச்னை செய்கிறது. “this copy of windows did not pass genuine window validation” எனும் எச்சரிக்கை வருகிறது. கேட்ட பணத்தைக் கொடுத்தும் எங்களுக்குப் பிரச்னை. ஐயா உதவி செய்யுங்கள்.

ப: சில கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள். ஒரு சிலரைத்தான் சொல்கிறேன். எல்லோரையும் சொல்லவில்லை. வாடிக்கையாளர்களை இளிச்சவாயர்களாக நினைப்பது ஒரு பாவச் செயல். ஓர் அசல் விண்டோஸ் XPயை RM180க்குள் வாங்கலாம். 

அப்படித்தான் உங்களுக்கு அசல் செயலியைப் பதித்துக் கொடுத்திருக்க வேண்டும். சில கடைக்காரர்கள் ஓர் அசல் செயலியை வைத்துக் கொண்டு, கள்ளத்தனமாக பல நூறு கள்ளச் செயலிகளை நகல் எடுத்து வைத்துக் கொள்வார்கள்.

அந்த வகையில் பார்த்தால் ஒரு கள்ளச் செயலியின் விலை RM1 தான். அதில் ஒன்றை உங்கள் கணினியில் பதித்துக் கொடுப்பார்கள். ஆக, கடைக்காரருக்கு RM220 லாபம். அவர் பதித்துக் கொடுத்த கள்ளச் செயலியுடன் கணினியை வீட்டுக்கு எடுத்து வந்து வருவீர்கள். சந்தோஷமாகப் பயன்படுத்துவீர்கள். 

நீங்கள் இணையத்தில் உலா வரும் போது, உங்கள் கணினி அமெரிக்காவிலுள்ள மைக்ராசாப்ட் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளும். இந்த விஷயம் உங்களுக்குத் தெரியாது.

மைக்ராசாப்ட் நிறுவனத்தில் உள்ள தலைமைக் கணினிகள் உங்கள் கணினியின் உண்மை நிலவரத்தைக் கண்டறியும். உங்களுடைய விண்டோஸ் அசலானதாக இருந்தால் சந்தோஷமாக உறவாடும். புதிய புதிய மென்பொருள்களைப் பதித்துக் கொடுக்கும். போலியானதாக இருந்தால் காரித் துப்பிவிடும். “this copy of windows did not pass genuine window validation” எனும் எச்சரிக்கையை உங்கள் கணினிக்குள் பதித்து எரிச்சலை உண்டு பண்ணும்.

சரி. இந்த மாதிரி நிறைய ஏமாற்று வேலைகள் நடந்து வருகின்றன. கடைக்காரரிடம் விவரத்தைச் சொல்லுங்கள். பணம் கட்டியதற்கான ரžது உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர் ஏமாற்றியது உண்மை என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். அருகாமையில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்யுங்கள்.

அப்புறம் http://www.mipc.gov.my/ எனும் முகவரிக்குப் போய் ஒரு புகார் செய்யுங்கள். அவ்வளவுதான். கடைக்காரரைத் தேடி சட்ட அமலாக்க அதிகாரிகள் வருவார்கள். செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்வார்கள். அப்புறம் வருமான வரி அதிகாரிகள் வருவார்கள். அவர்களும் அவர்கள் வேலைகளைச் செய்வார்கள். கடலிலிருந்து உப்பை எடுக்கலாம். ஆனால், தயவு செய்து உப்புக் கிண்ணத்தைத் தடவி கடலைத் தேடக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக