29 ஆகஸ்ட் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 70


31.08.2010 - மலேசியாவின் 53-ஆவது சுதந்திர தினம்

(இந்தக் கேள்வி-பதில் 29.08.2010 மலேசிய நண்பன் நாளிதழ் - ஞாயிறு மலரில் பிரசுரிக்கப் பட்டது)


மாரியாயி <maari79@yahoo.com>
கே: சில பேராங்காடிகளில், புகழ் பெற்ற துணிக் கடைகளில் இரகசிய காமிரக்கள் நமக்குத் தெரியாமல் இருக்குமாம். நாம் உடை மாற்றும் போது நம்மைப் படம் பிடித்து வைத்துக் கொள்ளும் என்று கேள்வி பட்டேன். உண்மையா?

ப: எல்லாக் கடைகளிலும் இல்லை. ஆயிரத்தில் இலட்சத்தில் ஒன்று இரண்டு  இருக்கலாம். அதற்காக எல்லாரையும் ஒட்டு மொத்தமாகக் குறை சொல்லக் கூடாது. நம்முடைய இந்தியர்களின் கடைகளில் பெரும்பாலும் நல்ல நாணயமான ஊழியர்கள் பணி புரிகிறார்கள். வக்கிரப் புத்தி படைத்த சில சில்லறைகள் அங்கே இங்கே இருக்கத்தான் செய்கின்றன.

ஆடைகளை மாற்றிப் பார்க்கிறேன் என்று பெண்கள் சிலர் விலை உயர்ந்த உள்ளாடைகளை மாற்றிக் கொள்வது உண்டு. பணம் கட்டாமல் கம்பி நீட்டுவதும் உண்டு. அதைத் தவிர்க்க சில நிறுவனங்கள் இரகசியக் காமிராக்களைப் பொருத்தி வைத்து இருக்கின்றன.

பெண்கள் உடைகள் மாற்றுவதைக் காமிராவில் கவனிக்க வேண்டியது சில பெண் ஊழியர்களின் வேலை. காமிராவில் பதிவானது கணினியிலும் பதிவாகும் அல்லவா.

சரி. கணினியில் பதிவானதை அங்கே வேலை செய்யும் மற்ற ஆண்களும் அவர்களுடைய வசதியைப் போல பார்க்கலாம் இல்லையா.  

நீங்கள் ஆடை மாற்றும் அறைக்குள் நுழைய கதவைத் திறந்ததும் இரகசியக் காமிரா வேலை செய்ய ஆரம்பித்து விடும். நீங்கள் உடை மாற்றுவதை வீடியோ படம் எடுக்கும்.

அதன் பிறகு அந்த வீடியோ படங்கள் இணையத்தில் உலா வரலாம். உலகம் பூராவும் உள்ள கைப்பேசிகளுக்குள் தஞ்சம் போகலாம். அந்தக் கயவன் உங்களையே மிரட்டிப் பிணைப் பணம் கேட்டாலும் கேட்கலாம். சரி.

இரகசியக் காமிரா இருப்பதை கண்டு பிடிக்க ஒரு வழி இருக்கிறது. உடை மாற்றும் அறைக்குள் நுழைந்ததும் உங்கள் கைப்பேசியைக் கொண்டு யாரையாவது சும்மா அழைத்துப் பாருங்கள். அழைக்க முடிந்தால் சரி. அந்த அறையில் இரகசியக் காமிரா இல்லை என்று அர்த்தம்.

அழைக்க முடியா விட்டால் தெரிந்து கொள்ளுங்கள் காமிரா இருக்கிறது என்று. இந்த இரகசியக் காமிராவில் Fiber Optic எனும் ஒலி ஒளி நுண்ணிழைகள் உள்ளன. இவை கைப்பேசியின் ஒலி அலைகளை வெளியே போக விடாமல் தடுத்து விடும்.

நம்முடைய மனைவி, பிள்ளைகள், அக்கா, தங்கை, உற்றார் உறவினர் அனைவரிடமும் இந்த வழியைச் சொல்லிக் கொடுங்கள்.

பெண்மையைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. இந்தக் காமிராக்கள் ரிங்கிட் 320 லிருந்து 1200 வரை சந்தையில் கிடைக்கின்றன.

அகிலன் merrickraja@yahoo.com
கே: Defragment எனும் சுத்திகரிப்புச் செய்வதால் கணினிக்கு என்ன பயன்?
விளக்கம் கொடுக்க முடியுமா?

ப: கணினிக்குள் ஒரு நிரலியைப் பதிப்பு செய்கிறோம். அல்லது ஓர் ஆவணத்தைச் சேமித்து வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். கணினியின் வன் தட்டில் அந்த ஆவணங்கள் நிரந்தரமாகப் பதிவு செய்யப் படுகின்றன.

வன் தட்டு என்றால் Hard Disk. பதிவு செய்யப் படும் போது அந்த ஆவணங்கள் தொடர்ச்சியாகவும் சீராகவும் பதிவு செய்யப் படுவது இல்லை.

ஆவணங்கள் என்றால் Files, Folders அல்லது Documents. பதிப்பு நேரத்தை மிச்சப் படுத்த கணினியும் ஒரு குறுக்கு வழியைக் கடைபிடிக்கிறது.

வன் தட்டில் எந்த எந்த இடங்களில் அப்போது காலியான இடம் இருக்கிறதோ அங்கே தகவல்களைக் கொண்டு போய் அவசரம் அவசரமாகப் பதித்து வைக்கிறது.

வேலையைச் சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்பது கணினியின் செயல்பாடு. அது கணினிக்குள் உட்செலுத்தப் பட்ட  தாரக மந்திரம்.

பின்னர் நாம் அந்த ஆவணத்தை அல்லது நிரலியைப் பயன் படுத்தக் கேட்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். கணினி என்ன செய்கிறது தெரியுமா.

அதை எடுத்துக்கொடுக்க, பதிப்பு செய்த இடங்களில் அலைந்து திரிகிறது. தகவல்களை வலை போட்டுத்  தேடுகிறது.

அப்புறம் அவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்க்கிறது.  நம்மிடம் கொண்டு வந்து காட்டுகிறது. நமக்கு என்னவோ பார்க்க ரொம்ப சிம்பிள். பாவம் கணினி, அதற்கு ரொம்ப சிரமம்.

தகவல்களைத் தேட கணினிக்கு  அதிக நேரமும் செலவாகிறது. இந்தப் போராட்டம் உள்ளே நடக்கும் போது கணினி மெதுவாக வேலை செய்வதாக நமக்கு ஒரு பிரமையும் தோன்றுகிறது.

முட்டைப் போட்ட வேதனை கோழிக்குத் தெரியும். மூட்டைத் தூக்கிய சோதனை முது குக்குத் தெரியும் என்பார்கள். அந்த மாதிரி அவரவர் அவஸ்தை அவர் அவருக்குத் தானே தெரியும்.

சரி. Defragment எனும் சுத்திகரிப்பு செய்கிறோம். உள்ளே என்ன நடக்கிறது தெரியுமா. உடைந்து போன ஆவணங்கள், நொறுங்கிப் போன செய்திகள், சிதறிப் போன தகவல்கள், சிதைந்து போன படங்கள் எல்லாம் சீராகச் சிறப்பாக அடுக்கப் படுகின்றன.

அப்புறம் வேடிக்கையைப் பாருங்களேன்.  தொண்டைத் தண்ணி காயந்து போன தொண்டனுக்கு தயிரும் மோரும் கிடைத்த மாதிரி மின்னல் வேகத்தில் வேலை நடக்கும். சுத்திகரிப்பு செய்வது எப்படி என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

கணினியின் முகப்புத் திரையில் My Computer எனும் சின்னம் இருக்கிறது. தெரியும் தானே. அதை வலது சொடுக்குச் செய்யுங்கள்.அதில் Manage என்பதைச் சொடுக்கினால் இடது பக்கம் Disk Defragmenter என்பது வரும்.

அதைச் சொடுக்குங்கள். வன் தட்டின் பிரிவுகள் தெரியும். அவற்றை ஒன்று ஒன்றாகச் சுத்திகரிப்புச் செய்யுங்கள். அவ்வளவுதான். சில சமயங்களில் அதிக நேரம் பிடிக்கலாம்.

வாரத்திற்கு ஒரு முறை சுத்திகரிப்புச் செய்யுங்கள். போதும். காலா காலத்திற்கும் கணினி உங்களைக் கை எடுத்துக் கும்பிடும்.

மா. இளவேணன், சிரம்பான் ஜெயா
கே: நான் ஒரு பள்ளி ஆசிரியர். என் மாணவர்கள் எழுதிய கட்டுரைகளை Audio CD ஆக மாற்ற முடியுமா? அதாவது நாம் எழுதியதை ஒலியாக்கம் செய்ய முடியுமா?

ப:
நல்ல கேள்வி. உங்கள் கேள்விக்குப் பதில் முடியும். மாணவர்கள் எழுதியதைப் படித்துக் காட்டும் ஒரு நிரலி இருக்கிறது. இலவசமாகவும் கிடைக்கிறது. அந்த நிரலியை Speaking Notepad என்று சொல்வார்கள்.

http://www.4shared.com/file/-orY3_K4/Speaking_Notepad_v51.html எனும் இணையத் தளத்திற்குப் போக வேண்டும். அங்கே Muat Turun Sekarang என்பதைச் சொடுக்க வேண்டும். அல்லது
http://rapidshare.com/files/285112981/Speaking_Notepad_6.0.rar

எனும் இணையத் தளத்தில் கிடைக்கும்.

பதிவிறக்கம் செய்ததும் அதை உங்கள் கணினியில் பதிப்பு எனும் Install செய்யுங்கள். அதன் பின்னர் நீங்கள் தட்டச்சு கட்டுரையின் இடத்தைக் காட்டுங்கள். நிரலியில் Reading என்பதைச் சொடுக்குங்கள். கட்டுரை படிக்கப் படும்.

இதில் 12 குரல்கள் உள்ளன. ஆண்குரல் வேண்டுமா பெண்குரல் வேண்டுமா. எந்தக் குரல் வேண்டுமோ அதைத் தேர்வு செய்யுங்கள். பிறகு அதை எம்.பி.3 வடிவத்திற்கு மாற்றி குறுந்தட்டாகத் தயாரித்துக் கொள்ளலாம்.

பிரச்னை இருந்தால் 012-5838171 எனும் என்னுடைய கைப்பேசி எண்களுக்கு அழையுங்கள்.

திருமதி. ஜமீலா பகருதீன், செந்தூல் டாலாம், கோலாலம்பூர்
கே: Blackberry எனும் கைப்பேசிகளின் விற்பனையைப் பல நாடுகளில் தடை செய்கிறார்கள். ஏன்? மலேசியாவில் தடை செய்யப் படுமா? நீங்கள் எந்த வகையான கைப்பேசியைப் பயன் படுத்துகிறீர்கள்?

ப:
முன்பு வந்த கைப்பேசிகளில் குறும் செய்திகளை மட்டும் அனுப்ப முடிந்தது. இப்பொழுது வரும் கைப்பேசிகளில் பெரும்பாலானவை 3G கைப்பேசிகள். இந்தக் கைப்பேசிகள் அசுரத் தனமான செயல் ஆற்றல் கொண்டவை.

இவற்றில் குறும் செய்திகள், மின்னஞ்சல்கள், இணைய வசதிகள், காணொளி, புகைப்படக் கருவி, வீடியோ கருவி, வங்கியில் இருந்து பணம் எடுக்கும் கொடுக்கும் வசதி, கணினியும் கைப்பேசியும் உறவாடிக் கொள்ளும் வசதி என்று பல வசதிகள் உள்ளன.

இதில் மிக மிக முக்கியமானவை இணைய வசதி, மின்னஞ்சல் அனுப்புவது, மின்படங்கள் அனுப்புவது, வீடியோ படங்களை அனுப்புவது.

பொதுவாக மற்ற வகையான கைப்பேசிகளில் அனுப்பும் போது அரசாங்கம் இடை மறித்து அந்தத் தகவல்களைப் படிக்க முடியும். நாட்டின் தற்காப்பு, பாது காப்பு முறைகளுக்கு பாதகமானவற்றைத் தடை செய்ய முடியும். அனுப்பியவர்களைக் கண்டு பிடிக்க முடியும். தண்டிக்கவும் முடியும்.

ஆனால், இப்போது வரும் Blackberry எனும் கைப்பேசிகளில் அனுப்பப் படும் தகவல்களை அரசாங்கத்தால் இடை மறிக்க முடியாது.

அதாவது ஒட்டு கேட்க முடியாது. ஏன் என்றால் இந்தக் கைப்பேசி அனுப்பும் தகவல்கள் Encryption எனும் இரகசிய முறையில் அனுப்பப் படுகிறது. அனுப்புவருக்கும் பெறுவருக்கும் மட்டுமே இரகசியம் தெரியும். மற்ற எவருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை.

ஆனானப் பட்ட அரசாங்கத்தாலும் தெரிந்து கொள்ள முடியாது. ஆக, இந்தக் கைப்பேசிகள் பயங்கரவாதிகளின் கைகளுக்குப் போனால் என்ன ஆகும். ஒரு நாட்டின் நிலைமை என்ன ஆகும்.

அதை முன்னிட்டு அந்தக் கைப்பேசிகளில் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னார்கள். தயாரிக்கும் RIM எனும் கனடிய நிறுவனம் ஏற்றுக் கொள்ள வில்லை. அதனால் தான் தடை செய்கிறார்கள்.

மத்திய கிழக்கு நாடுகளில் முதல் தடை வந்து இருக்கிறது. அடுத்து இந்தியாவும் இந்தோனாசியாவும் போர்க் கொடிகளைத் தூக்கி உள்ளன.

இனிமேல் தான் முடிவுகள் வரலாம். இந்தக் கைப்பேசிகளுக்கு மலேசியாவில் தடை செய்யப் பட வில்லை. நான் பயன் படுத்துவது நோக்கியா 3G வகை.

ஜெ.தர்மசீலன், சிகாம்புட், கோலாலம்பூர்
கே: கணினியின் சேவை இல்லாமல் எதிர்காலத்தில் மனித இனம் பேர் போட முடியாது என்கிறார்களே. என்ன சார் கதை?

ப:
கதை இல்லை சார், கண்ணுக்கு முன்னால் நடந்து கொண்டு இருக்கிற மாயா ஜாலம். புரிகிறதா. போகிற போக்கைப் பார்த்தால் கணினி மனிதனை அடிமை ஆக்கி விடும் போல தெரிகிறது.

இந்த அழகான  குட்டி தெய்வம் இருக்கிறதே இது வந்த பிறகு மனிதன் ரொம்பவும் சோம்பேறி ஆகி விட்டான். உண்மைதாங்க. இப்பவே மனிதனின் வேலைகளில் பாதியைக்  செய்கிறதே. இன்னும் கொஞ்ச நாளில் அதற்கு கல்யாண ஆசை வந்தாலும் வரலாம். யார் கண்டது.

இன்னும் ஒரு விஷயம். கணினி ஜோசியம் பார்க்கிறது அய்யா. ஜோசியம் பார்க்கிறது. அதுவும் நூற்றுக்கு 90 விழுக்காடு சரியாகவும் இருக்கிறது.

ஒரு காசோலையை எழுதி வங்கியில் உள்ள ஒரு பெட்டியில் போடுகிறோம். அது என்னடா என்றால் அந்தக் காசோலையைச் சரி பார்த்து பணத்தைக் கொடுத்தும் விடுகிறது. இத்தனைக்கும் மனித வேலை என்று எதுவுமே  அங்கே இல்லை.

2 கருத்துகள்:

  1. திரு.முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு,
    ஆடை மாற்றும் இடங்களில் உள்ள ரகசிய கேமிராக்களை செல்போனை உபயோகித்து கண்டுபிடிக்கலாம் என்று கூறியுள்ளீர்கள். ஹோட்டல் ரூம்களில் உள்ள கேமிராக்களையும் இவ்வாறே கண்டுபிடிக்க முடியுமா?

    கம்பி மூலம் இணைக்கப்பட்ட கேமிராக்களுக்கும் இந்த முளை பயன்படுமா?

    பதிலளிநீக்கு
  2. நன்றி டாக்டர். தங்கள் கேள்விக்கு முடியும் என்பதே நம்முடைய பதில். கம்பி மூலம் இணைக்கப் பட்ட காமிராக்களும் இன்னும் தெளிவான படங்களைக் கொடுக்கும். மேலும் பதில்கள் வேண்டும் என்றால் நம்முடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். பதில் அனுப்புகிறேன். நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு