12 செப்டம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 72

அன்புள்ள நெஞ்சங்களுக்கு,
கடந்த ஒரு மாத காலமாக  இந்தியச் சுற்றுலா. போன இடங்களில் இணைய வசதிகள் மிகவும் குறைவு. அதனால், புதிய தகவல்களைச் சேர்க்க முடியவில்லை. 19.10.2010 அன்றுதான் மலேசியா திரும்பினேன். இன்னும் சில தினங்களில் அனைத்தும் வழக்க நிலைக்குத் திரும்பும். அது வரை பொறுத்து அருளவும்.


(இந்தக் கேள்வி பதில் அங்கம் 12.09.2010 மலேசிய நண்பன் நாளிதழில் வெளிவந்தது)




சுப்பிரமணியம் தயா <thayas1978@gmail.com>
கே: குழந்தைகளுக்குக் கணினி அறிவைப் புகட்ட வேண்டும் என்று சொல்கிறீர்கள். அப்படி சொல்லித் தரும் போது சிலருக்குக் கணினியின்  விளையாட்டுகளில்  பைத்தியம் பிடித்துப் போகிறது. அதை விட்டு வெளியே வர மாட்டேன் என்கிறார்கள். கண்டித்தால் அடம் பிடித்து அழுகிறார்கள். அவர்கள் பள்ளி வேலைகளையும் அவசரம் அவசரமாகச் செய்கிறார்கள். என்ன செய்யலாம்?

ப:
இந்த மாதிரியான பாரதப் போர் பல வீடுகளில் நடக்கின்றது. 'போதும் நிறுத்து' என்றால் அசைய மாட்டார்கள். 'போதும்டா கண்ணா' என்று கெஞ்சினால் நகர மாட்டார்கள். 'கண் கெட்டுப் போகும்' என்று பயமுறுத்தினால் கண்களைத் கசக்குவார்கள். 'ரோத்தான் எடுக்கிறேன்' என்றால் பத்து வீட்டுக்கு கேட்கிற மாதிரி கத்துவார்கள்.

மொத்தத்தில் மூன்றாம் உலகப் போர் வரப் போகிற மாதிரியான  நிலைமை. இதற்கு என்ன செய்யலாம். ஒரு மௌனமான நாடகம் இருக்கிறது.

நீங்களாகவே போய்க் கணினியைத் திறந்து விடுங்கள். 'உன் இஷ்டம் போல விளையாடு' என்று அன்பாகச் சொல்லுங்கள். அப்புறம் அவர்களிடம் எதையும்  பேச வேண்டாம். முடிந்த வரைக்கும் கண்டு கொள்ளவே வேண்டாம்.

எவ்வளவு நேரம் விளயாட முடியுமோ விளையாடட்டும். அவர்கள் பாட்டிற்கு விட்டு விடுங்கள்.

ஆனால், சாப்பிடுவதற்கு ஏதாவது கேட்டால் எதையும் கொடுக்க வேண்டாம். குடிக்கத் தண்நீர் கேட்டாலும் கொடுக்க வேண்டாம். தெரியாதது மாதிரி இருந்து விடுங்கள்.

ஒரு கட்டத்தில் போதும் போதும் என்று அவர்களே கணினியை அடைக்க முயற்சி செய்வார்கள். அதற்கு நீங்கள் கணினியை அடைக்க வேண்டாம்.

கணினியை விட்டு எழுந்திருக்க விடவும் வேண்டாம்.  இன்னும் விளையாட வேண்டும் என்று சொல்லுங்கள்.

இந்த மாதிரி இரண்டு மூன்று தடவை செய்து பாருங்கள். போகப் போக நிலைமை உங்களுக்குச் சாதகமாக அமையும். என் நண்பர் தன் பேரன் பேத்திகளிடம் பயன் படுத்திய ஒரு புதுமையான விளையாட்டு இது. நன்றாகத் தான் வேலை செய்தது.

இருந்தாலும் பாருங்கள். பேரனைத் திருத்துகிறேன் என்று சொல்லிக் கடைசியில் பேரனும் தாத்தாவும் நெருக்கமானக் கூட்டாளி ஆகிப் போனார்கள்.

அப்புறம் விடிய விடிய இரண்டு பேரும் போட்டிப் போட்டு விளையாட ஆரம்பித்து விட்டார்கள். வீட்டுக்காரப் பெண்ணுக்கு அப்பாவைத் திருத்துவதா இல்லை மகனைத் திருத்துவதா என்கிற நிலைமை. மூச்சுத் திணறல் வந்து மோசமாகிப் போனதுதான் மிச்சம்.

கன்னியப்பன்  kanniappan@gmail.com
கே: Facebook எத்தனை மொழிகளில் வெளிவருகிறது?

ப:
Facebook என்பதை முகநூல் என்று சொல்கிறார்கள். வதனப் புத்தகம் என்று சொல்கிறார்காள். கடைசியாக வதன நூல் என்றும் அழைக்கத் தொடங்கி விட்டார்கள். எது எப்படியோ நாம் பேஸ்புக் என்றே அழைப்போம்.

தமிழில் எதையாவது சொல்லப் போய் அதற்கு யாராவது பல்லவி பாடுவார்கள். செம்மொழி மாநாடு நடத்திய தமிழ்ப் புலவர்கள் ஒரு சொல்லை உருவாக்கித் தரட்டும். சரி.

வீட்டுக்கு வரும் வந்தாளியைச் 'சாப்பிட்டீங்களா' என்று கேட்கும் பழக்கம் இருந்தது. இப்போது 'பேஸ்புக்கி'கில் கணக்கு இருக்கிறதா You Tube பார்த்தீர்களா என்று கேட்கின்ற காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். கல்யாணம் காட்சியிலிருந்து காது குத்து வரை இளைஞர்களிடையே இந்தப் பேச்சு தான்.

இதில் நம்முடைய பொறுமைகளைச் சோதிக்கும் பெருமைப் பேச்சுகள். பேஸ்புக் எனும் சமூக வலைத் தளம் 70 மொழிகளில் வெளி வருகிறது. 400 மில்லியன் பயனர்கள் உள்ளனர்.

இவ்வளவு பேரும் வேலை வெட்டி இல்லாமல் பேஸ்புக்கில் போய் வெட்டி முறிக்கிறார்கள் என்று தவறாக நினைக்க வேண்டாம். அப்படிப் பார்த்தால் என்னையும் அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டி வரும்.

பயனர்கள் என்றால் Users. உலகத்திலேயே அதிகமான விசிறிகளைக் கொண்ட பிரபலம் நம்ப இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கு 1,546,536 மொத்தம் விசிறிகள்.

சசி <djsasee@gmail.com>
கே: சார், என்னுடைய Internet Explorer எனும் இணைய உலவி சில சம்யங்களில் நிலைக் குத்திப் போகிறது. வேலை செய்ய மறுக்கிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஏதாவது எளிய முறை இருக்கிறதா?

ப:
ஓர் எளிய முறை இருக்கிறது. இந்த முறை நன்றாகவும் வேலை செய்கிறது. நான் சொல்கிற மாதிரி செய்யுங்கள்.

Control Panel >> Intert Options  >> Advanced  என்பதைச் சொடுக்கி உள்ளே போய்  Reset  >> Reset என்பதைச் சொடுக்கி விடுங்கள். வெளியே வாருங்கள்.

கணினியை அடைத்து விட்டு மறுபடியும் திறந்து பாருங்கள். பிரச்னை தீர்ந்து இருக்க வேண்டும். இன்னும் பிரச்னை இருக்கிறதா? பிரச்னை இருக்கிறது என்றால் வெளியே தான் பிரச்னை. கணினிக்கு உள்ளே இல்லை.

வேதநாயகம், கூலாய், ஜொகூர்
கே: என் கணினியில் உள்ள Files எனும் கோப்புகளுக்கு கடவுச் சொல் கொடுத்து பாது காக்க வேண்டும். அதற்கு ஏதாவது இலவசமாக நிரலி கிடைக்குமா?

ப:
அண்மையில் இணையத்தில் தேடல் செய்யும் போது ஒரு புதுமையான நிரலி கிடைத்தது. நம்முடைய கோப்புகளைக் கடவு சொல் கொடுத்து பாது காக்க உதவுகிறது.

கீழ்காணும் இடத்தில் கிடைக்கிறது. போய் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://download.cnet.com/SafeHouse-Explorer/3000-2092_4-75219687.html

1 கருத்து: