21 அக்டோபர் 2011

கணினியும் நீங்களும் – 117

[இந்த வாரக் ‘கணினியும் நீங்களும்’ ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களுக்கு காணிக்கை.]

ஸ்டீவ் ஜாப்ஸ். கணினி தொழில்நுட்பத்தில் ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுத்தவர். கணினியை ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு நவீனப் பரிமாணத்தைக் கொடுத்தவர்.


ஆப்பிள் கணினி நிறுவனத்தை உருவாக்கி அதனைப் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றவர். பில் கேட்ஸின் கணினிப் புலமைக்குச் சவால் விட்டவர்.

ஸ்டீவ் ஜாப்பின் மரணத்தை அவர் கண்டுபிடித்த இணையக் கைப்பேசி சாதனத்தின் மூலமாகத் தான் கோடானு கோடி உலக மக்கள் தெரிந்து கொண்டனர். அதைவிட பெரிய அஞ்சலி வேறு எதுவும் அவருக்கு இல்லை. ஸ்டீவ் ஜாப் கணினி உலகில் ஓர் அபூர்வமான அவதாரப் புருஷர்.


ஆப்பிள் கணினி நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில் ஐபாட், ஐபோன், தட்டைக் கணினி போன்ற நவீனக் கணினி தொழில்நுட்பத்தை உலகிற்கு அறிமுகம் செய்தார்.

2009 ஆம் ஆண்டில் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் நீண்ட காலமாக அவர் கணையப் புற்று நோயினால் அவதிப் பட்டார். கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 56.  அப்போது அவருடைய சொத்து மதிப்பு 2400 கோடி மலேசிய ரிங்கிட்.

இந்த உலகின் தலைசிறந்த கணினி மும்மூர்த்திகளில் முதலிடம் வகிப்பவர் திம் பெர்ணர்ட்ஸ் லீ. இவர் இணையத்தைக் கண்டுபிடித்து அதை இலவசமாக உலக மக்களுக்கு அர்ப்பணிப்பு செய்தார். அடுத்து வருபவர்  பில் கேட்ஸ். இவர் உலகின் மூலை முடுக்கு, பட்டி தொட்டிகளில் எல்லாம் கணினியைக் கொண்டு போய்ச் சேர்த்தவர்.
இளம் வயதில் ஸ்ஈவ் ஜாப்ஸ்
அதற்கு அடுத்து ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் கைப்பேசிக்குள் இணையத்தையும் அந்த இணையத்திற்குள் உலகத்தையும் கொண்டு வந்தவர். ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்து விட்டாலும் அவருடைய கணினிச் சாகசங்கள் சாகாவரம் பெற்றவை. அந்தச் சாகசச் சாதனைகள் ஊழி ஊழி காலத்திற்கும் சிருங்காரம் பாடி கொண்டே இருக்கும் என்பது வெள்ளிடைமலை.

1972 ஆம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் போது முதல் தவணைச் சோதனையில் தோல்வி கண்டார். அதனால் படிப்புக்கு முழுக்குப் போட்டார்.

அதன் பின்னர், படுக்கப் பாய் கூட இல்லாமல் அவருடைய நண்பரின் அறையில் கீழே வெறும் தரையில் படுத்துத் தூங்கினார். இது நம்ப முடியாத உண்மையாக இருக்கலாம். ஆனால், அது வரலாற்று உண்மை.


அவர் பிறந்தவுடன் அவருடைய பெற்றோர் அவரை  வேறு ஒருவருக்குத் தத்து கொடுத்து விட்டனர். மிகவும் சிரமமான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். அவர் தங்கியிருந்த இடங்களில் கிடைக்கும் காலி பாட்டில்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு போய் விற்று தன் வயிற்றைக் கழுவிக் கொண்டு வந்திருக்கிறார்.

ஒரேகான் மாநிலத்தில் போர்ட்லேண்ட் நகரில் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஆசிரமம் இருந்தது. அங்கே இரவு நேர இலவச உணவுகளைப் பெற்று வாழ்ந்து வந்தார். அந்தக் காலக் கட்டத்தில் ஒரு வேளைச் சாப்பிட்டிற்கே அலைமோதி அவதிப பட்டிருக்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

அதிர்ஷ்டவசமாக அத்தாரி எனும் நிறுவனத்தில் அவருக்குத் தொழில்நுட்ப உதவியாளராக வேலை கிடைத்தது. அங்கு வேலை செய்து கொஞ்சம் பணத்தைச் சேர்த்து கொண்டு தன் நண்பருடன் இந்தியாவுக்கு வந்தார்.

ஸ்டீவி ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனம்
1974ல் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுர காஞ்சி ஆசிரமத்தில் தங்கி இறை வழிபாடுகளில் ஈடுபட்டார். பின்னர், தலையைச் சுத்தமாக மொட்டை அடித்து, காவி உடை அணிந்து  புத்த மதத்தைத் தழுவி, அமெரிக்கா திரும்பினார்.

மறுபடியும் அத்தாரி நிறுவனத்தில் சேர்ந்து வேலை செய்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்தார். 1976ல் இரு நண்பர்களின் துணையுடன் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார்.

உலக கணினி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம். 1984ல் மெக்கிந்தோஸ் எனும் கணினி இயங்குதளத்தை உருவாக்கினார். இந்தக் கட்டத்தில் பில் கேட்ஸின் விண்டோஸ் இயங்குதளம் தாயின் வயிற்றுக்குள் தாலாட்டுப் பாடிக் கொண்டு இருந்தது.

ஆனால், 1986ல் ஆப்பிள் நிறுவனத்தில் சில பல பிரச்னைகள். ஸ்டீவ் ஜாப்ஸ் எளிதில் உணர்ச்சி வசப் படக் கூடியவர். தொட்டதற்கு எல்லாம் தொழிலாளர்கள் மீது எரிந்து விழுகிறார் எனும் புகார்கள்.  ஆப்பிள் நிறுவனத்தின் பங்குதாரர்கள்  அவரை அங்கிருந்து வெளியேற்றினர்.
1985ல் ஏழு மில்லியன் டாலரில் நெக்ஸ்ட் எனும் கணினி நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அங்கு இருந்தவாறு படிப்படியாகக் கணினித் தொழில்நுட்பங்களில் நவீனத் தன்மைகளை அறிமுகம் செய்தார்.  1986ல் பிக்சர் திரைப்பட நிறுவனத்தை 30 மில்லியன் ரிங்கிட்டிற்கு வாங்கினார்.

அந்த நிறுவனம் தான் பின்னர், Toy Story (1995), A Bug’s Life (1998), Toy Story2 (1999), Monsters (2001), Finding Nemo (2003), The Incredibles (2004), Cars (2006), Ratatouille (2007), WALL-E (2008), Up (2009), Toy Story3 (2010) ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்ட நிறுவனம் ஆகும்.

1996ல் ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்சை திரும்ப அழைத்துக் கொண்டது. 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை அவர் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகப் பணிபுரிந்தார். ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து அவர் விலகும் போது அவருடைய ஆண்டுச் சம்பளம் என்ன தெரியுமா? ஒரே ஓர் அமெரிக்க டாலர்தான். உண்மைதான்.

ஆனால், அப்போது அவருடைய சொத்து மதிப்பு, மலைக்க வேண்டாம்  2400 கோடி மலேசிய ரிங்கிட். அவர் அமெரிக்காவிலேயே 42வது பணக்காரராக விளங்கினார்.

இவருக்கு மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். அவர் இறந்ததும் ஆப்பிள் நிறுவனம் இப்படி இரங்கல் செய்தியை வெளியிட்ட்து. ‘Apple has lost a visionary and creative genius, and the world has lost an amazing human being.’ (ஆப்பிள் நிறுவனம் ஓர் உருவாக்க பேரறிவாளனை இழந்து விட்டது. ஆனால், இந்த உலகம் ஓர் அற்புதமான மனிதனை இழந்து விட்டது)

’நவீன உலகின் முகத் திரையில் மாற்றங்கள் செய்த மாமனிதர்’ இந்த ஸ்டீவ் ஜாப் என்று உலக நாளிதழ்கள் முதல் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளன.

படுக்கப் பாய் இல்லாமல் தவித்த ஒரு தனி மனிதன் உலகப் பணக்காரன் ஆனது ஒரு சரித்திரம் தானே!

ஸ்டீவ் ஜாப்ஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக