28 ஏப்ரல் 2012

மலேசியாவின் வீரப் பெண்மணி அம்பிகா சீனிவாசன்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பெர்சே 3.0 எனும் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது.  அம்பிகா அவர்கள் தலைமை தாங்கினார். 




அதைப் பற்றிய மேல்  விவரங்கள்
http://www.themalaysianinsider.com/malaysia/article/ambiga-najib-cannot-ignore-massive-bersih-3.0-turnout/ 


28.04.2012

(இந்தக் கட்டுரையை எழுதும் போது பெர்சே 3.0 பேரணி கோலாலம்பூரில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ளும் அனைத்து மலேசியத் தோழர்களுக்கும் சமர்ப்பணம்.)

உலக நாடுகளில் சிறந்த விளங்கும் துணிச்சல்
மிக்க பெண்மணிகளுக்கான அமெரிக்க விருது.
அருகில் ஹில்லரி கிளிண்டன், மிச்சல் ஒபாமா

யார் இந்த அம்பிகா சீனிவாசன்?

இவர் மலேசியாவின் மிக விநோதமான ஆளுமை படைத்த பெண்மணி. மரணவாசலில் வீர வசனம் பேசும் துணிச்சலான தமிழ்ப்பெண். மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் தலைவராக இருந்தவர். இப்போது உலகப் பெண்களுக்கு மத்தியில் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்ற ஓர் ஜீவ நாடி. மதச் சகிப்புத்தன்மையை மக்களின் மனதில் விதைத்து வருகின்றார். அவருடைய இந்தச் சேவைகள் அவரை உலகின் சிறந்த பெண்மணியாக அடையாளம் காட்டுகிறது.


விருது பெற்ற ஏனைய உலகப் பெண்மணிகள்
அம்பிகா சீனிவாசன், மலேசியாவில் ஒவ்வொருவரும் உச்சரிக்கும் ஒரு உன்னதமான மந்திரச் சொல். இவரின் பின்னால் இலட்சக்கணக்கான மக்கள் அலை அலையாய் திரண்டு நிற்கின்றனர். இவரைத் தெரியாதவர் மலேசியாவில் யாரும் இருக்க முடியாது.

மலேசிய நாட்டில் சுத்தமான பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று போராட்டம் செய்து வரும்
அம்பிகா அவர்கள் ஓர் அற்புதமான அழகிய பெண்மணி. ஆற்றல்மிக்க அறிவாளி. அரசாங்கத்தின் அச்சுறுத்தலைக் கண்டு கலங்காமல், தூய்மையான அரசாங்கத்திற்காகப் போராடி வருகிறார். பல முறை கைது செய்யப்பட்டார். இப்போது அவருடைய உயிருக்கே விலை பேசப்படுகிறது.



கடந்த ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்தேறிய பெர்சே 2.0 பேரணிக்கு தலைமை வகித்து நடத்திய அம்பிகா சீனிவாசன் அவர்கள் யார் எனும் கேள்வி மலேசியா முழுவதும் பெரும் தாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசாங்கத் தொலைக்காட்சிகளில் ‘பெர்சே’வில் கலந்துகொள்ள கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கைகளும் விளம்பரங்களும் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன. அம்பிகா சீனிவாசனைச் சிறுமைப்படுத்தி பல குறுந்தகவல்கள் மலேசியா முழுமையும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.


பத்திரிகையாளர்களின் படயெடுப்பு

'இவர் ஒரு பயங்கரவாதி என்கின்ற ஓர் இந்துப் பெண்' என்று வகைப்படுத்தப் படுகிறது. 20,000 வழக்கறிஞர்களைக் கொண்ட மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக இருந்த டத்தோ அம்பிகா இப்போது கொச்சைப் படுத்தப்படுகிறார். வேதனையான விஷயம். அவருடைய பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே கூட்டுச் சதித் திட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அம்பிகாவின் பின்னால் அவருடைய ஆதரவாளர்கள்

2009 ஆம் ஆண்டு டத்தோ அம்பிகாவுக்கும் மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த எண்மருக்கும் சிறந்த துணிகரமிக்க பெண்மணிக்கான விருதுகள் அமெரிக்காவில் வழங்கப்பட்டன. அந்த விருது வழங்கும் நிகழ்வில்  ஹில்லரி கிலின்டன் டத்தோ அம்பிகாவைப் பற்றி இப்படி அடையாளப்படுத்தினார். “அம்பிகா மலேசியாவின் மிக விநோதமான ஆளுமை படைத்தவர். மலேசியச் சூழலில் அவருடைய வித்தியாசமான அடைவுகள் கவனிக்கத்தக்கவை. 

புதிய சட்ட சீர்த்திருத்தங்களையும் செயலாக்கங்களையும் உருவாக்கும் வல்லமை படைத்தவர். நிர்வாகத் திறமையிலும் நீதித்துறையிலும் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அம்பிகா தொடர்ந்து கடமையாற்றி வருவது மிகவும் பாராட்டத்தக்கது.

அம்பிகாவின் பெற்றோர்கள்
பெண்களுக்கு மத்தியில் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், மதச் சகிப்புத்தன்மையை எல்லோர் மனதிலும் விதைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அவருடைய இந்தச் சேவைகள் அவரை உலகின் சிறந்த பெண்மணியாக அடையாளப்படுத்துகிறது. 

ஆகையால் அவரின் பங்களிப்புகளையும் சேவைகளையும் அங்கீகரிக்கும் வகையில் அவர் இந்த மேடையில் கௌரவிக்கப்படுகிறார்.”

காவலர்களால் கைது செய்ய்ப்படும் அம்பிகா
1975-இல் தலைமை சட்ட மாணவியாக புக்கிட் நானாஸ் இடைநிலைப்பள்ளியில் அம்பிகா சீனிவாசன் அவர்களின் பயணம் தொடங்கியது. ஜூலை 2011-இல் அம்பிகா சீனிவாசனுக்கு அல்மா மாட்டெர் பல்கலைக்கழத்தால் சட்டத்துறைக்கான டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. 

ஒரு வழக்கறிஞராக அம்பிகா அவர்கள் தனது உயரிய சேவையை வழங்கியதற்காகவும் 3 ஆண்டுகள் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராகப் பணியாற்றியதற்காகவும் இந்த டாக்டர் விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

பெர்சே 3.0இன் குந்தியிருப்பு போராட்டச் சின்னம்

30 ஆண்டு காலம் வழக்கறிஞராகப் பணிப்புரிந்த அம்பிகா அவர்கள் வெவ்வேறு துறையிலும் சட்ட ஆலோசகராகச் சேவையாற்றிய அனுபவமுடையவர்.

அவர் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக இருந்தபோது, பல முஸ்லீம் மத அமைப்புகளையும் மீறி, ஷாரியா மற்றும் மத சுதந்திரம் உரிமைகள் தொடர்பான ஒரு கலந்துரையாடல் அரங்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பத்திரிகையாளர்களுக்கு பேட்டி. வெண் தாடியுடன் இருப்பவர்
மலேசியாவின் புகழ்பெற்ற மலாய் இலக்கியவாதி சமாட் சாயிட்

அம்பிகா சீனிவாசன் 2008 ஆம் ஆண்டில் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் என்ற முறையில், உலக மனித உரிமை ஆணையத்துடன் இணைந்து ஒரு குழுவை உருவாக்கினார்.

அதன் பிறகு, 1988 ஆம் ஆண்டு சட்ட ஒழுங்கில் ஏற்பட்ட சிதைவையும் தேக்கத்தையும் ஆராய்ந்து அறிக்கை விடப்பட்டது. மேலும் அதிகார மீறல்களைத் தொடர்ந்து கவனித்து கண்டிக்கவும் இந்தக் குழு செயல்பட்டது.

2007இல் ஜூன் 15 முதல் 17 ஆம் திகதி வரை மலாக்கா நகரத்தில் மலேசிய வழக்கறிஞர் மாநாடு நடந்தேறியது. அதில் கலந்துகொள்ள வந்த மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் அம்பிகா அவர்களை நேர்காணல் செய்யப்பட்டது.

கேள்வி : மார்ச் 2007க்குப் பிறகு இந்த மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற உங்களின் அனுபவம் எப்படி இருக்கிறது?

அம்பிகா: வேறு எதுவும் தலைமை பொறுப்புக்கான தகுதிகளை உருவாக்கிவிட முடியாது. அதனை ஏற்றுக்கொண்ட பிறகே தலைமைத்துவத்தைப் பழகிக்கொள்ள முடியும் என நினைக்கிறேன். என் வாழ்வின் பெரும்பான்மையான பகுதியை அது பிடுங்கிக் கொண்டது எனத்தான் சொல்ல வேண்டும்.

இருப்பினும் இதை நான் ஒரு புகாராக முன்வைக்கவில்லை. மாறாக இந்தத் தலைமை பொறுப்பு எனக்கு அதிகமான சவால்களையே கொடுத்திருக்கிறது. சவால்களை விரும்பக்கூடிய ஒரு மனபோக்கு உடைய எனக்கு அது பிரமிப்பையே தருகிறது.

இந்தப் பொறுப்பில் இருந்த காலக்கட்டத்தில் எத்தனையோ வகையான பிரச்சனைகளை நான் சந்தித்துவிட்டேன். ஒவ்வொன்றும் வித்தியாசனமானவை. ஒரு பிரச்சனையைப் போல் இன்னொன்று இருப்பதில்லை. ஆகையால் வெகு விரைவிலேயே நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியதன் சந்தர்ப்பங்கள் உருவாகின.

கேள்வி : மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக உங்கள் பொழுதுகள் எப்படி இருக்கின்றன?

அம்பிகா: எந்த நேரத்திலும் எப்பொழுதும் அழைக்கப்படலாம். ஆகவே தயார்நிலையில் இருக்க வேண்டிய சூழல். நான் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வேலையைப் பழகிக்கொண்டிருப்பதால் எனக்கு இது ஒரு பயிற்சியாக இருக்கிறது. நான் அலுவலகத்தில் இருப்பதைவிட தொலைப்பேசியின் வாயிலாகத் தொடர்புக் கொண்டு சில வேலைகளை முடித்துக் கொடுப்பதுதான் அதிகமாக நடக்கிறது.

இதில் இன்னும் கூடுதலான விசயம், பத்திரிக்கை, மீடியாக்களுக்கு அறிக்கை கொடுப்பதுதான். அவ்வப்போது பிரச்சனைகள் சார்ந்து முக்கியமான தகவல்களையும் அறிக்கைகளையும் அவர்களுக்குக் கொடுத்தாக வேண்டும். மீடியாக்களும் நாங்கள் நேர்மையான தீர்க்கமான கருத்துகளையும் தகவல்களையும் சொல்வோம் என நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

நாங்களும் அதைச் செய்வதில் முழுமையாகக் கடமைப்பட்டுள்ளோம். சட்டம் அல்லது சமூகம் சார்ந்த பிரச்சனைகள் எழும் போது, நீதியை நிலை நாட்ட குரல் எழுப்ப வேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கின்றது. இதைத் தவிர்த்து எனது பட்டறைகளுக்கும் மாநாடுகளுக்கும் உரைகளைத் தயார் செய்யும் பணியிலும் நான் ஈடுபட்டு வருகிறேன்.

இவற்றை எல்லாம் நிறைவாய்ச் செய்துவிட நீண்ட கால அவகாசம் தேவை. எனினும் இவற்றை எல்லாம் உரிய நேரத்தில் சரியாய்க் கையாளும் கலையை நான் அறிவேன்.

கேள்வி : செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் அறிக்கை விடுப்பதற்கும் உரைகளைத் தயார் செய்து கொடுப்பதற்கும் உங்களுக்கு யாராவது உதவி செய்கிறார்களா?

அம்பிகா: ஆமாம் செயலவைக் கூட்டத்தில் எனக்கு உதவுவதற்கு ஒரு சில முக்கியமானவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் சில வேளைகளில் பிரச்சனைகள் குறித்தும் வழங்கப்படவிருக்கும் உரைகள் குறித்தும் ஆய்வுகள் செய்து சிந்திப்பதற்கு நான் நேரத்தைச் செலவிடுவேன்.

செய்தியாளர்கள் சந்திப்பிலும் நான் சுயமாகச் சிந்தித்து சில விசயங்களில் கருத்துரைப்பேன். அது என் வழக்கமும் கூட. எடுத்துக்காட்டாக லீனா ஜாய் வழக்கு நிலவரத்தில் இரு தரப்பு தீர்ப்புகளையும் ஆழ்ந்து படித்து ஆய்வு செய்த பிறகே செய்தியாளர் சந்திப்பில் எனது கருத்தை முன்வைத்தேன்.

கேள்வி : இந்தத் தவணையில், உங்களின் முதன்மையான நடவடிக்கைகள் என்ன?

அம்பிகா: எங்கள் ஆலோசனைக் குழு தொழிற்துறை மேம்பாட்டு அணுகுமுறையை மறுசீரமைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும் நாங்கள் கட்டாயச் சட்டக் கல்வியை ஊக்குவித்து வருகிறோம். இதனைத் தவிர்த்து உறுப்பினர்களின் நலன் கருதியும் சிறந்த சேவையை வழங்கவும் எங்களின் அலுவலக நிர்வாகத்தை மேலும் நேர்த்தியாக்க முயற்சி செய்து உள்ளோம்.

எங்களின் மனித உரிமைக்கான செயற்குழு சில மனித உரிமை நிரல்களின் கீழ் செயல் படுத்துவதற்காக ஓர் அடிப்படை வரைவினை தயார் செய்து வருகின்றது. நடுநிலை சட்ட ஆணையமான IPCMC தொடர்பான, 1988 ஆம் ஆண்டு ஏற்பட்ட சட்ட நெருக்கடியை மறுபரிசீலனை செய்தல், உள்நாட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளை மறுசீரமைப்புச் செய்தல் போன்ற மிக இன்றியமையாத விவகாரங்களின் மீதும் நாங்கள் கவனம் செழுத்தி வருகிறோம்.

இதன் தொடர்பாக அண்மையில் உள்நாட்டு அரசாங்கத்தைப் பற்றிய கருத்தாடல் நிகழ்த்திய மலாக்கா மாநில வழக்கறிஞர் மன்றத்தை நான் இவ்வேளையில் பெரிதும் பாராட்டுகிறேன். இதன் மூலம், இந்தத் தவணையில் நாங்கள் பல ஆக்ககரமான செயற்பாடுகளில் கவனம் செழுத்தி வருவதை நீங்கள் அறியலாம்.

கேள்வி : மலேசிய வழக்கறிஞர் மன்றம் சந்திக்கும் முதன்மையான சவால்கள் என்னவாக இருக்கின்றன?

அம்பிகா: ஒவ்வொரு வருடமும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. வழக்குகளின் எண்ணிக்கையும் இந்த வருடம் அதிகரித்துள்ளன.

மேலும் புதிய பிரச்சனைகள், புதிய சிக்கல்களை ஒட்டி அரசாங்கம் எங்களுடன் பேச்சு வார்த்தைக்கும் கலந்துரையாடல் அணுகுமுறைக்கும் எப்பொழுதும் தயாராக இருக்கிறது. ஆகையால் நாங்களும் சிறந்த சேவையை வழங்கவே முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி : வழக்கறிஞர் கழகத்தில் உள்ள சில உறுப்பினர்கள் அக்கழகத்தில் அதிகமாக அரசியல் பேசப்படுவதால் அதிலிருந்து விலகியே இருக்கின்றனர். இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

அம்பிகா: நிஜம் தான். வழக்கறிஞர் கழகம் விமர்சனத்திற்கு பேர் போனது.ஆகையால் அங்கே சில கடுமையான விமர்சனங்கள் இருப்பது உண்டு. அங்கே முன்வைக்கப்படும் அனைத்துமே விமர்சனத்தைக் கண்டிப்பாக எதிர்க்கொள்ள வேண்டி இருக்கும். கழகம் அரசியலாக்கப்படும் நோக்கம் பல உறுப்பினர்களை தொண்டு செய்வதிலிருந்து மெல்ல மெல்ல அகற்றி இருக்கிறது.

ஆனாலும் இந்த நிலை போக போக மாறி ஆக்ககரமான சூழலை கழகத்தில் உருவாக்கும் என எதிர்ப்பார்ப்போம். நாம் அனைவரும் தொண்டர்கள் என்றும் நம் உறுப்பினர்களுக்காக முடிந்த வரை சேவை செய்வோம் என்பதையும் மனதில் நிறுத்தி கொள்ள வேண்டும்.

இங்கே தியோடோர் ரூசெவெல்ட் சொன்னது நினைவுக்கு வருகிறது.

“...இவ்வுலகில் உண்மையாய் வேலை செய்பவரே நினைவால் எண்ணப்படுபவர், விமர்சிப்பவரல்ல…’ அதாவது அவர் செய்யும் வேலை முழுமை அடையாமலும் கடினமானதாக இருந்தாலும் கூட அவரே, தான் வேலை செய்பவராக கருதப்படுவார். அதை எப்படி செய்வது என்று சொல்பவரோ எழுதுபவரோ அல்ல.

ஒரு நாட்டின் வழக்கறிஞர் கழகத் தலைவராக இருக்கும் அம்பிகா சீனிவாசன் இன்று அரசாங்கத்துக்குச் சவால்விடும் மிகப்பெரிய சக்தியாக உருமாறியுள்ளார்.

7000 போலீஸ்காரர்களை அரசாங்கம் சாலையில் நிறுத்தி வைத்தது.
3 கண்ணீர் புகை பாய்ச்சும் நீர் வண்டிகள் தயார் நிலையில் நிற்கின்றன.
நூற்றுக்கணக்கான கண்ணீர் புகை குண்டுகள் காத்திருக்கின்றன.
5 ஹெலிகோப்டர்கள்...
நான்கு K9 நாய் போலீஸ் குழுக்கள்
8 சாலைகள் முற்றாக மூடபட்டன...
50க்கும் மேற்பட்ட சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் தடுப்புகள்...
பொது போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டன.

சரியாக 2.00 மணிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாகப் கோலாலம்பூர் மாநகரத்திற்குள் படை எடுக்கத் தொடங்கினர். அரசாங்கம், பல தடைகளையும் மிரட்டல்களையும் மக்களுக்கு விதித்தும் ‘சட்டவிரோதப் பேரணி’ என்று முத்திரை குத்தியிருந்தபோதும் அவற்றையும் மீறி ஏறக்குறைய 50,000 மக்கள் கோலாலம்பூரில் ஒன்று திரண்டனர்.

ஒவ்வொருவரும் அவரவர் வாகனத்தை 10 கிலோமீட்டர் தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஒன்றுகூடும் இடத்திற்கு நடந்தே வந்து பெர்சே பேரணியை வெற்றியடைய வைத்தனர்.

அம்பிகா சீனிவாசன் தலைமையில் நடந்த 2.0 இப்பேரணி எட்டு கோரிக்கைகளை நேர்மையான தேர்தலுக்கு அடிப்படையாகக் கோருகிறது. அவை :

1. விரைவில் அகலா கருப்பு மையைப் பயன்படுத்தவேண்டும்.
2. குறைந்த பட்சம் 21 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒதுக்க வேண்டும்
3. தூய்மையான வாக்களிப்பு முறை.
4. அஞ்சல் ஓட்டுகள் முறையைச் சீரமைப்பது.
5. நேர்மையான, சுதந்திரமான ஊடகச் செயல்பாடு.
6. பொதுமக்கள் விழிப்புணர்வை அதிகரிப்பது.
7. ஊழலை ஒழிப்பது.
8. கறைப்படிந்த அரசியலை நிறுத்துவது.

அம்பிகாவின் இந்தக் கோரிக்கைகளுக்கு மலேசியாவின் பல்வேறு இன மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்ப்பு அரசியலின் ஆக்ககரமான தொடக்கமாகவே பெர்செ பேரணியின் வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது. இந்தக் கட்டுரையை எழுதும் போது பெர்சே 3.0 பேரணி கோலாலம்பூரில் நடைபெறுகிறது. உடல்நலக் கோளாறினால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால், என் மகன்கள் கலந்து கொள்கிறார்கள்.

நன்றி: http://www.vallinam.com.my/issue32/column2.html 
(வல்லினம் இணைய இதழில் கே.பாலமுருகன் அவர்கள் எழுதியதில் இருந்து தொகுக்கப்பட்டது.)

பிற இணைப்புகள்:

2 கருத்துகள்:

  1. gods own country என்று சொல்வார்கள் கேரளாவை.
    அதை தாண்டிய இயற்கை வளம் படைத்தது
    மலேஷியா.ஆனால் சிங்கப்பூர் வரும் டூரிஸ்டுகள்
    ஜோஹோர் செல்லவே அஞ்சுகின்றனர்.என்ன காரணம்?
    நம் தமிழ் சகோதரர்கள் செய்யும் அட்டூழியம்
    ஒன்ற இரண்டா? அதுவும் இந்தியாவிலிருந்து
    வந்த ஊழியர்கள் என்றால் இந்த தெருப்பொறுக்கி நாய்கள்
    கொடுக்கும் தொல்லை கொஞ்ச நஞ்சமல்ல.
    இந்த நாய்களுக்கு எதிராக எதையாவது புடுங்குவாரா
    உங்கள் அம்பிகா சீனிவாசன்? இந்த கொடுமை
    ஜோஹோரில் மட்டுமல்ல ஒட்டுமொத்த
    மலேசியாவிலும் இருக்கிறது.இந்த ஆணியை முதலில்
    புடுங்கட்டும் உங்கள் அம்பிகா சீனிவாசன்.

    பதிலளிநீக்கு
  2. very informative post for those who are outside malaysis

    பதிலளிநீக்கு