20 பிப்ரவரி 2013

கிளியோபாட்ரா தெரியாத இரகசியங்கள்

இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 17.02.2013 நாளிதழில் எழுதப்பட்டது.

இந்த உலகில் மனுக்குலம் இருக்கும் வரையில் மறக்க முடியாத ஒரு கலா ஓவியம் கிளியோபாட்ரா. அந்த உயிர் ஓவியத்தை அவர் என்று அழைக்கலாமா இல்லை அவள் என்று அழைக்கலாமா. கொஞ்ச நேரம் தடுமாறித்தான்  போகின்றேன். அவள் என்று அழைக்கும் போது உரிமை தடுமாறிப் போகின்றது.


கிளியோபாட்ரா பல கோடி உயிர்களைத் தன் பக்கம் கவர்ந்து இழுத்த ஒரு மகா தேவதை அல்லவா. ஆக, அவர் என்றே அழைப்போம். அந்தப் பெண்மைக்கு பெருமை சேர்ப்போம்.

கிளியோபாட்ரா பெண்மையின் நளினத்திற்கு வல்லினம் வாசித்தவர். ரோமாபுரி நாயகர்களின் ஆளுமைகளைத் துகில் உரித்து மெல்லினம் பார்த்தவர். அவர் இறந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன.


அவரைப்பற்றி இன்றும் சலசலப்புகள். புதிய தகவல்கள். புதிய இரகசியங்கள். அண்மைய காலங்களில் புதிய கசிவுகள் வேறு. சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கிளியோபாட்ரா ஒவ்வொரு நாளும் கழுதைப் பாலில் குளித்ததாகச் சொல்வார்கள். உண்மைதான். அதற்குச் சான்றுகளும் இருக்கின்றன. அவருடைய உடல் செம்மண்ணில் பூத்த நீலமலர்களைப் போன்றது. சாக்லேட் நிறம் என்று சொல்கிறார்களே. அந்த மாதிரி. உடல் நிறத்தை வெண்மையாக மாற்ற வித்தியாசமான குளியலைத் தேடினார். 





அவர் தேடிப் பிடித்த சித்தவகைக் குளியல்தான் இந்தக் கழுதைப்பால் குளியல். ஆக, கழுதைப்பாலில் குளித்தால் உடல் மினுமினுக்கும், தோல் ஜொலி ஜொலிக்கும் என்று அவர் நம்பினார். அதற்காக நீங்கள் அந்த மாதிரிப் போய்க் குளிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

அப்படியே ஆசைப்பட்டால்… ம்ம்ம்… அதற்கு நான் பொறுப்பு ஆக முடியாது. முதலில் காட்டில் திரியும் கழுதையை விரட்டிப் பிடியுங்கள். அப்புறம் மற்ற கதையைப் பேசுவோம்.


கழுதைப்பாலில் குளிக்க வேண்டும் என்பதற்காக,  கிளியோபாட்ரா தன்னுடைய அரண்மனைக்கு அருகில் ஒரு பெரிய கழுதைப் பண்ணையே வைத்து இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அது மட்டும் இல்லை. அந்தப் பாலில் குங்குமப் பூவும் கலக்கப்பட்டது.

குங்குமப் பூவும் தமிழர்களும் ஒன்றிணைந்து போனது என்பது வரலாறு. ஆனால், குங்குமப் பூவை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்கள் தமிழர்கள் அல்ல. பாரசீகத்தைச் சேர்ந்த ஈரானியர்கள்தான். அதை நாம் மறந்துவிடக்கூடாது. அடுத்து வருபவர்கள் எகிப்தியர்கள். இவர்கள்தான் குங்குமப்பூவை அன்றாட வாழ்க்கையில் முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டவர்கள்.


குங்குமப்பூவைக் கழுதைப்பாலில் கலந்து குளித்ததால் கிளியோபாட்ரா வெள்ளை நிறத்திற்கு மாறினாரா என்பது தெரியவில்லை. இருந்தாலும் ஜூலியஸ் சீசரை மணந்து

கொண்டு,  கிளியோபாட்ரா ரோமாபுரிக்குச் சென்றார். அப்போது அவருடைய உடலின் வெண்மஞ்சள் நிறத்தைப் பார்த்து ரோமாபுரி மக்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன. இதை ஆங்கிலத்தில் Argument from Silence என்று சொல்கிறார்கள்.



இங்கே ஒரு கொசுறுச் செய்தி. கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூவைக் பாலில் கலந்து குடித்து வந்தால் பிறக்கும் குழந்தை சிகப்பாகப் பிறக்கும் என்பது தமிழர்களின் ஒரு பரவலான நம்பிக்கை. 

ஆனால், அறிவியல் அந்த மாதிரி இல்லை என்று சொல்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு குங்குமப்பூ உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். குழந்தை பிறப்பதில் இலகுவை ஏற்படுத்தும். ஆனால், குழந்தை சிகப்பாகப் பிறக்காது என்று சொல்கிறது.

வானத்தில் இருந்து வன தேவதை கீழே குதித்து வந்தாள். உங்களுக்கு ஒரு கோடி ரிங்கிட் கொடுத்தாள் என்று யாராவது சொன்னால் அதைகூட நம்பலாம். ஆனால், குங்குமப்பூவைச் சாப்பிட்டு குழந்தை சிவப்பாக பிறந்தது என்று யாராவது சொன்னால், அதை நம்ப முடியாது. அது எல்லாம் சும்மா கதை.

ஒரு குழந்தையின் நிறத்தைத் தீர்மானிப்பது ஓர் அப்பா, ஓர் அம்மாவின் நிறங்கள்தான். நீங்கள் கோடிக் கோடியாகக் கொட்டிக் குங்குமப்பூவை வாங்கிச் சாப்பிட்டாலும் சரி...

இல்லை லோரி லோரியாக ஆட்டுப்பால் போட்டுக் குளித்தாலும் சரி... பிறக்கிற குழந்தை அப்பா மாதிரிதான் பிறக்கும். இல்லை அம்மா மாதிரிதான் பிறக்கும். புரிகிறதா.

ஆர்க்டிக் துருவத்தில் இருக்கின்ற பனி மனுஷன் மாதிரியோ இல்லை... உகாண்டாவில் இருக்கின்ற உத்தாண்டா மாதிரியோ பிறக்கப் போவது இல்லை. அப்படியே தப்பித் தவறி பிறந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் வேறு வினையே வேண்டாம். சொல்லாமல் கொள்ளாமல் வனவாசம் போய்விடுவதே மேல். சரி. நம் கதைக்கு வருவோம்.

அசல் சுத்தமான குங்குமப்பூ கிடைப்பது என்பது மிக மிகச் சிரமம். அசலான குங்குமப்பூவைச் சிலர் பார்த்து இருக்கலாம்; பலர் பார்த்து இருக்க முடியாது. விலையோ தங்கத்தின் விலையைத் தாண்டி நிற்கிறது. ஒரு கிலோகிராம் குங்குமப்பூவின் விலை 68,000 ரிங்கிட். ஒரு புரோட்டோன் காரின் விலை. 

சில சமயங்களில் ஓர் இலட்சத்தையும் தாண்டிப் போய் நிற்கிறது. அதாவது ஒரு சின்ன புளியங்கொட்டை அளவு கொண்ட குங்குமப்பூவின் விலை 1000 ரிங்கிட் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தங்கத்தின் விலையும் கிட்டத்தட்ட அவ்வளவுதானே.

ஈரான், ஈராக், காஷ்மீர் பகுதிகளில் குங்குமப்பூ மிகுதியாகக் கிடைக்கிறது. ஆக, உண்மையான, அசலான குங்குமப்பூவைத் தான் நாம் வாங்குகிறோமா என்பது, அது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

கிளியோபாட்ரா எனும் பெயரில் ஏழு கிளியோபாட்ராக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இந்தக் கட்டுரையின் கதாநாயகி இருக்கிறாரே, இவர் எகிப்திய மகாராணிகளில் ஏழாவது கிளியோபாட்ரா (Cleopatra VII).

அந்தக் காலத்தில் உடன்பிறந்த சகோதரர்களையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் எகிப்திய அரச பாரம்பரியத்தில் இருந்தது. அண்ணன், தம்பி அக்காள், தங்கை உறவு முறைகளில் திருமணம் செய்து கொண்டார்கள்.  அரச குடும்பத்தின் இரத்த வழித்தோன்றல் அரச இரத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக உடன்பிறப்புத் திருமணங்கள் அனுமதிக்கப்பட்டன. 

அதனால், எகிப்திய அரச குடும்பத்தில் அங்கவீனமானக் குழந்தைகள் பலர் பிறந்தனர் என்பது வேறு கதை. இப்போதைய நம்முடைய சமூகப் பார்வையில் அது வேறு மாதிரியாகத் தெரியலாம். ஆனால், அப்போதைய எகிப்திய அரச முறை என்பது வேறு. வாழ்க்கை முறை என்பது வேறு. அதை நாம் மறந்துவிடக் கூடாது.

கி.மு. 51இல் பதினெட்டாவது வயதில் கிளியோபாட்ரா தன்னுடைய பத்து வயது Ptolemy XIII எனும் தம்பியைத் திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணம் வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. எகிப்தின் மீது படையெடுத்து வந்த ஜூலியஸ் சீசரின் படைகளினால் பொத்தெலாமி கொல்லப்பட்டார்.
[சான்று: http://www.thejohnsongalleries.com/093.htm]

ஜூலியஸ் சீசரை எதிர்ப்பது என்பது முடியாத காரியம் என்பதை கிளியோபாட்ரா உணர்ந்தார். ஜூலியஸ் சீசர் அப்போது அலெக்சாண்டிரியாவில் போர் வீரர்களுடன் கூடாரம் போட்டு இருந்தார். அந்தச் சமயத்தில் கிளியோபாட்ரா ஒரு தந்திரம் செய்தார். தன் வேலைக்காரியிடம் தன்னுடைய உடலை ஒரு பட்டுக் கமபளத்தில் சுருட்டி வைக்கச் சொன்னார்.

ஜூலியஸ் சீசரின் முன்னால் அந்தக் கம்பளம் விரிக்கப்பட்டது. உள்ளே இருந்த கிளியோபாட்ராவைப் பார்த்த சீசருக்கு அப்போதே ஓர் இனம் தெரியாத கிரக்கம். சும்மா சொல்லக் கூடாது. கண்டதும் காதல் என்று சொல்வார்களே. அந்த மாதிரியான மயக்கம். விரைவில் இருவரும் காதலர்கள் ஆனார்கள்.

அப்புறம் கிளியோபாட்ராவின் இன்னொரு தம்பி Ptolemy XIV நாட்டின் மன்னர் ஆக்கப்பட்டார். இவர் ஏற்கனவே கிளியோபாட்ராவிற்கு இரண்டாவது கணவராக மணமுடிக்கப்பட்டவர் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

கிளியோபாட்ரா ஓர் அழகி என்று சொல்வதைவிட, அவர் மிகச் சிறந்த ஓர் அறிவாளி என்று சொல்வதே சரியாக இருக்கும். அவருக்கு ஒன்பது மொழிகள் தெரியும்.

வானவியல், தாவரவியல் என்று பல துறைகளில் அவர் சிறந்து விளங்கினார். இவருடைய உடலில் கொஞ்சம் மகா அலெக்சாந்தரின் கிரேக்க இரத்தமும் கலந்து ஓடியது. மகா அலெக்சாந்தர் ஒரு காலத்தில் எகிப்தை ஆட்சி செய்தவர்தானே.

கிளியோபாட்ராவிற்கும் சீசருக்கும் ஒரு குழந்தை பிறந்தது. பொத்தெலாமி சீசர் என்று பெயர் சூட்டினார்கள். ஜூலியஸ் சீசர் ரோமாபுரிக்கு திரும்பியதும் அவருடன் கிளியோபாட்ராவும் சென்றார். அவரை அங்குள்ள மக்கள் விநோதமாகப் பார்த்தனர். கிளியோபாட்ராவின் நீலநிறக்கண்கள் அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

உள்நாட்டைக் கவனிக்காமல் எகிப்தின் மீதும்,  கிளியோபாட்ராவின் மீதும் அதிக நேரம் செலவிடுகிறார் என்பது கிரேக்க மக்களின் ஆதங்கம். கிளியோபாட்ரா ரோமாபுரிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே சீசரும் கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர், வேறு வழி இல்லாமல் எகிப்திற்கே கிளியோபாட்ரா திரும்பி போக வேண்டிய கட்டாய நிலைமை.

அப்போது கிளியோபாட்ராவின் இரண்டாவது கணவரும் இரண்டாவது தம்பியுமான Ptolemy XIV என்பவர் எகிப்தை ஆட்சி செய்து வந்தார். கிளியோபாட்ரா எகிப்திற்கு திரும்பிய கொஞ்ச நாளில் அவரும் மர்மமான முறையில் இறந்து போனார்.

கிளியோபாட்ராதான் அவரை விஷம் வைத்து கொன்று இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் சீசருக்குப் பிறந்த மகனையே எகிப்து நாட்டின் மன்னராக பிரகடனம் செய்தார்.

ஜூலியஸ் சீசரின் இறப்பிற்குப் பின்னர் ரோமாபுரியில் உள்நாட்டுக் கலவரம். ரோமானியப் பேரரசு இரண்டாகப் பிரிந்தது. ஒரு பகுதி மார்க் அந்தோனிக்கும் இன்னொரு பகுதி ஒக்டேவியாவிற்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது.  அதன் பின்னர்தான் ரோமாபுரியில் பெரும் பெரும் அதிர்ச்சிகள்.

தங்களின் எதிரியான ஜூலியஸ் சீசருக்கு உடந்தையாக இருந்த கிளியோபாட்ராவின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்தக் கட்டத்தில்தான் வரலாறு வேறு பக்கமாகப் பயணிக்கத் தொடங்கியது. கிளியோபாட்ராவைப் பார்த்த அந்தோனிக்கும், அவள் மீது மயக்கம் கிரக்கம் ஏற்பட, அதுவே ஒரு பெரிய வரலாற்றுக் காதலாகவும் மாறியது.

உண்மையில், கிளியோபாட்ராவிற்கு சகோதர உறவுகளின் மூலமாக இரு கணவர்கள் இருந்தார்கள் என்றாலும், அது ஒரு சம்பிரதாயச் சடங்கு உறவு முறைதான். மற்றபடி வேறு எதுவுமே இல்லை. தாம்பத்தியம் என்ற பேச்சிற்கே அங்கே இடமில்லாமல் போய்விட்டது.

ஏற்கனவே இருந்த ராணிகளுக்கு தங்கள் அண்னன் தம்பிகளைத் திருமணம் செயது குழந்தைகள் பிரந்தனர் என்பது ஊனமைதான். அந்தக் குழந்தைகளில் சிலர் உடல் குறையுடன் பிறந்தார்கள் என்பதும் உண்மைதான். இருந்தாலும் நம்முடைய கிளியோபாட்ரா விஷயத்தில் தம்பி உறவு முறையில் தாம்பத்தியம் அடிபட்டுப் போனது என்பதுதான் உண்மை.

கொஞ்ச நாள்களுக்குப் பிறகு, மார்க் அந்தோனியும் கிளியோபாட்ராவும் திருமணம் செய்து கொண்டார்கள். இதை அறிந்த ஒக்டேவியா சினம் அடைந்தான். 

ஏன் என்றால் ஒக்டேவியாவின் தங்கையைத்தான் மார்க் அந்தோனி ஏற்கனவே திருமணம் செய்து இருந்தார். அதனால், தங்கைக்கு துரோகம் செய்த மார்க் அந்தோனியைப் பழி வாங்க எகிப்தின் மீது ஒக்டேவியா படை எடுத்து வந்தான். ஒரு பெரிய போரே நிகழ்ந்தது.

அந்தப் போரில் மார்க் அந்தோனிக்கும் கிளியோபாட்ராவுக்கும் படுதோல்வி ஏற்பட்டது. அதை ஒரு வரலாற்றுப் போர் என்று சொல்வார்கள். Battle of Actium  என்று பெயர். கி.மு.31இல் நடந்தது.

அந்தப் போரில் கிளியோபாட்ரா இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டதும், மனம் உடைந்து போன மார்க் அந்தோனி தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டார்.  அதாவது தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார்.

கிளியோபாட்ரா இன்னும் இறக்கவில்லை என்று இன்னொரு செய்தி வந்தது. அப்போது அந்தோனி உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தார். இருந்தாலும் கிளியோபாட்ராவைத் தேடிப் போய் அவரின் காலடிகளிலேயே விழுந்து இறந்தும் போனார்.

காதல் என்றால் இதுதான்யா காதல். அந்தோனி ஒரு நாட்டின் அரசன். ஒருத்தி இல்லை என்றால் ஓராயிரம் பேரை அந்தரப்புரத்திற்கு இழுத்து வர முடியும். ஆனால், அந்தோனி அப்படிச் செய்யவில்லையே. காதலித்தவளையே கடைசி வரை நினைத்துப் பார்த்தவன் இந்த அந்தோனி. தாஜ்மகால் கதாநாயகன் ஷாஜகான் நினைவிற்கு வருகிறார்.

அந்தோனியின் இறப்பிற்குப் பின் கிளியோபாட்ராவும் மனம் உடைந்து போனார். அவரும் அந்தோனியைப் போல தற்கொலை செய்து கொண்டார். அந்தத் தற்கொலையிலும் ஒரு பெரிய சரித்திரம் இருக்கிறது. தெரியாத இரகசியமும் இருக்கிறது.

ஓர் அழகிய பூஞ்சட்டியில் கொடிய விஷம் உள்ள ASP எனும் எகிப்திய நல்ல பாம்பு வைக்கப்பட்டது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு, அதில் கையைவிட்டார் கிளியோபாட்ரா.

பாம்பின் விஷப் பற்கள் பாய்ந்து ஒரு சில நிமிடங்களில் இறந்து போனார். பாம்பை மார்பில் கடிக்க வைத்து இறந்து போனார் எனும் செய்தியும் இருக்கிறது. ஆனால், அது தவறு என்று வரலாற்று அறிஞர்கள் இப்போது கண்டுபிடித்துச் சொல்கின்றார்கள். இதுவும் நமக்குத் தெரியாத ஒரு இரகசியமே.

கிளியோபாட்ராவின் ராசி கன்னி ராசியாகும். வைரமுத்து சொல்வது போல அவர் ஐம்பது கிலோ இருக்க முடியாது. கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்க வேண்டும். ஏன் என்றால் எகிப்திய பெண்கள் தடித்த உடலைக் கொண்டவர்கள்.

எது எப்படியோ, இந்த மனுஷி உலகின் அறுநூறு கோடி பேரையும் திரும்பிப் பார்க்கச் செய்து விட்டாரே, அது ஒரு பெரிய சாதனை தானே. அவர் வரலாற்றுச் சுவடுகளில் மறக்க முடியாத வசந்தமாய் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

மனுக்குலத்திற்கு மாபெரும் வரலாற்றுத் தடயங்களை விட்டுச் சென்று இருக்கிறார். சிங்காரத்தின் புன்னகைக்கு பல கலைச்சுவடிகளையும் எழுதிச் சென்று இருக்கிறார்.

கிளியோபாட்ராவைவிட பெரிய பெரிய அழகிகள் எல்லாம் வந்து போய் இருக்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. இருந்தாலும்  கிளியோபாட்ரா எனும் கிளி மட்டும் இன்னும் மனித மனங்களில் வீணை வாசித்துக் கொண்டு இருக்கிறது. 

மனித வரலாற்றில் கிளியோபாட்ராவைப் போல அழகான ஆழமான வடுக்களை விட்டுச் சென்றவர்கள் மிகவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். உலகம் இருக்கும் வரையில் அந்தக் கிளி, தேன் கலந்த தெம்மாங்கு பாடல்களைப் பாடிக் கொண்டுதான் இருக்கும்.

3 கருத்துகள்: