18 ஜூலை 2014

ஆழ்ந்த அனுதாபங்கள் MH17

[இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 19.07.2014 நாளிதழில் பிரசுரிக்கப் பட்டது.]



பட்ட காலிலே படும். சுட்ட கையிலே சுடும். அந்த மாதிரி தான் நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதி, எம்எச்370 விமானம் மாயமாய் மறைந்து போனது. அந்தச் சோகம் மறைவதற்குள், இன்னும் ஒரு சோகம்.


நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசியாவின் எம்எச்17 விமானம், ரஷ்ய - உக்ரைன் எல்லைக்கு அருகில் சுட்டு வீழ்த்தப் பட்டது. விமானத்தில் பயணித்த 298 பேரும் பலியாகி விட்டனர். அவர்களில் 283 பேர் பயணிகள். 15 பேர் விமானச் சிப்பந்திகள். 132 நாட்களில் மறுபடியும் ஒரு சோக நிகழ்ச்சி. மலேசிய வரலாற்றில் மற்றும் ஒரு சோக வடு.


கிழக்கு உக்ரைன் பகுதியில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினருக்கும், உக்ரைன் அரசுப் படையினருக்கும் பல மாதங்களாகச் சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான விமானங்கள், ஹெலிகாப்டர்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினர் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். தவறான நேரத்தில் தவறான இடத்தில் எம்எச்17 விமானம் சிக்கிக் கொண்டது.


எம்எச்17 விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது, சுட்டு வீழ்த்தப்பட்டது. தரையில் இருந்து வான் நோக்கிச் செலுத்தப்படும் ஏவுகணையின் மூலமாக அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நான்கு மாதங்களுக்கு முன்பு, எம்எச்370 விமானம் காணாமல் போனது. அந்த விமானத்திற்கு என்னதான் ஆனது என்று இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில், தற்போது எம்எச்17  விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் உயிரிழந்த சம்பவம் மலேசிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிழக்கு உக்ரைனில் தோனேஸ்க் மாவட்டம் ரஷ்ய எல்லைக்கு அருகில் இருக்கிறது. அந்த மாவட்டத்தின் தலைநகர் ஷாக்டார்ஸ்க். அந்த நகரின் மீது விமானம் பறந்து கொண்டு இருந்த போது, சுட்டு வீழ்த்தப் பட்டது. விமானம் நடுவானில் சிதறி தீப்பிழம்பாக எரிந்து கீழே விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாம்பூர் விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்றால், எல்லா விமானங்களும் உக்ரைன் நாட்டைக் கடந்துதான் வர வேண்டும். அதுவும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினர் தீவிரமாக இயங்கி வரும் தோனேஸ்க் மாவட்டத்தைக் கண்டிப்பாகக் கடக்க வேண்டும்.


அந்த இடத்தில் தான் இப்போது ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினருக்கும், உக்ரைன் அரசுப் படையினருக்கும் தீவிரமாகச் சண்டைகள் நடந்து வருகின்றன. அந்தப் பகுதியைக் கடக்கும் போதுதான் விமான விபத்து நடந்தது.

எம்எச்17 விமானம், 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது, புக் ரக ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தப் பட்டது. உக்ரைன் அரசுக்கு எதிராக போராடி வரும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் தான் சுட்டு வீழ்த்தினர் என்று உக்ரேனிய அதிபர் பெட்ரோ போரோசென்கோ கூறுகின்றார்.

அது எல்லாம் இல்லை. அந்த மாதிரியான ஏவுகணைகள் எங்களிடம் இல்லை என்று ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினர் கூறுகின்றனர். ஒருவரை ஒருவர் மாறி மாறிக் குற்றம் சாட்டுகின்றனர். இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.

நேற்றைக்கு முன்தினம், அதாவது ஜூலை 16-ஆம் தேதி,  ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள், உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான எஸ்.யு&25 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தினர். அந்தப் போக்குவரத்து விமானம் அப்போது 21,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது. ஆக, ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள் சொல்வதைப் போல ’அந்த மாதிரியான ஏவுகணைகள் எங்களிடம் இல்லை’ என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதற்கும் ஒரு வலுவான சான்றை முன் வைக்கிறேன். எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள் தங்களுடைய இணையப் பக்கத்தில், ஒரு விமானத்தைச் சுட்டு வீழ்த்தி விட்டோம் என்று உடனடியாகப் பதிவு செய்து விட்டனர். ஆனால், சுட்டு வீழ்த்தியது ஒரு பயணிகள் விமானம் என்று தெரிந்ததும், உடனடியாக அந்தப் பதிவை அழித்து இருக்கின்றனர்.

இணையத்தில் நீங்கள் பதிவு செய்ததை அழித்து விடலாம். ஆனால், இணையப் பதிவகத்தில் இருந்து அதை அழிக்கவே முடியாது. விமானத்தைச் சுட்டு வீழ்த்தி விட்ட மகிழ்ச்சியில், உடனடியாகப் பதிவு செய்து விட்டார்கள். ஆனால், தவறு செய்து விட்டதை உணர்ந்ததும், பதிவு செய்ததை அழித்து இருக்கிறார்கள். இருந்தாலும் பதிவின் அசடுகள் இருக்கவே செய்யும். நியாயத்திற்குப் போராடும் போது இந்தப் பதிவுகள் நிச்சயமாக பலன் தரும்.


எம்எச்17 விமானத்தைச் சுட்டு வீழ்த்துவதற்காகப் பயன்படுத்தப் பட்ட ஏவுகணைகள் போன்ற ஆயுதங்கள், தங்களிடம் இல்லை என்று ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள் சொல்லி வரலாம். ஆனால், மூன்று வாரங்களுக்கு முன்னால், நடந்த ஒரு நிகழ்ச்சி.

உக்ரைன் தோனேஸ்க் விமானப் படைத் தளத்தை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றினர். அந்தத் தளத்தில் இருந்து சில புக் ரக ஏவுகணைகளையும் கைப்பற்றி இருக்கின்றனர். அதை ரஷ்யாவின் வெஸ்டி தொலைக்காட்சி நிலையம், செய்தியாகச் சொல்லிச் சொல்லி விளம்பரம் செய்து இருக்கிறது. தோனேஸ்க் வான் பரப்பை இப்போது புக் ரக ஏவுகணைகள் பாதுகாக்கின்றன என்று சொல்லிப் பெருமை பட்டு இருக்கிறது.


புக் ரக ஏவுகணைகள் 72,000 அடி உயரத்தில் பறக்கும் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் ஆற்றலைப் பெற்றவை. இந்த ஏவுகணைகளை 9K35 Strela-10 என்று அழைக்கிறார்கள். எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்ட அன்றைய தினம், சினிஸ்னே எனும் உக்ரேனிய நகரில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்களின் ஏழு வாகனங்கள், புக் ஏவுகணைகளை ஏற்றிச் சென்றதைப் பார்த்ததாக அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகை நிருபர்  கூறுகிறார். தவிர, ரஷ்யாவின் லைப் நியூஸ் தொலைக்காட்சியும் அதைப் படம் பிடித்து இருக்கிறது.

எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப் படும் போது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எஸ்கியூ 351 விமானமும், ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏஐ113 விமானமும் 25 கி.மீ. தூரத்திற்கு அப்பால் பயணம் செய்து இருக்கின்றன. நல்லவேளையாக, அந்த விமானங்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.


இந்த எம்எச்17 விமான விபத்திற்குப் பிறகு, உலகின் பல விமான நிறுவனங்கள் அந்த விமானப் பாதையைத் தவிர்த்து விட்டன. அவற்றில் லுப்தஹான்சா, ஏர் பிரான்ஸ், துருக்கிய விமான நிறுவனம், டெல்டா ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், ஏரோபுலோட், ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேய்ஸ், கேஎல்எம் போன்ற நிறுவனங்களும் அடங்கும்.

உண்மையில், 2014 ஜூலை 8-ஆம் தேதியில் இருந்தே, தோனேஸ்க் வான்பகுதி விமானப் போக்குவரத்திற்கு மூடப் பட்டது. ஆனால், 25,900 அடி உயரத்திற்கும் மேலே பறக்கும் விமானங்கள், அந்த வான்பகுதிப் பாதையைப் பயன்படுத்தலாம் என்று அனைத்துலக விமானச் சம்மேளனம் அறிவித்து இருந்தது.

எம்எச்17 விமானத்தை அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம் தயாரித்தது. அது அந்த நிறுவனம் தயாரித்த 84-வது விமானம் ஆகும். இது ஒரு போயிங் 777 ரக விமானம் ஆகும். ஒரு விமானத்தின் விலை 260 மில்லியன் அமெரிக்க டாலர்கள். நம் மலேசிய ரிங்கிட்டில் 860 மில்லியன்கள். அதாவது 86 கோடி ரிங்கிட். இன்னும் கொஞ்சம் தெளிவாக இப்படிச் சொல்லலாம்.


முன்பு, ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்னால், 1985-இல், பினாங்கு பாலத்தைக் கட்டினார்களே, தெரியும் தானே. அப்போது அதைக் கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆனதோ, அதே செலவுதான், போயிங் 777 ரக விமானத்தை வாங்குவதற்கும் செலவாகும். இருந்தாலும், அவ்வளவு காசைக் கொடுத்து ஒரே ஓர் உயிரை வாங்கி விட முடியுமா. நம்முடைய மனித உயிர் இருக்கிறதே, அதற்கு விலையே பேச முடியாது.

1997 ஜூலை 17-ஆம் தேதி, முதன்முதலாக வெள்ளோட்டம் கண்டது. பின்னர், 1997 ஜூலை 29-ஆம் தேதி, மலேசிய நிறுவனத்திடம் அதிகாரப் பூர்வமாக ஒப்படைக்கப் பட்டது. இந்த விமானம் ரால்ஸ் ராய்ஸ் 800 ரக இயந்திரங்களைப் பயன்படுத்தியது. இந்த விமானத்தில் 282 பேர் பயணம் செய்ய முடியும். விபத்து நடந்த அன்றைய தினம், எல்லா இருக்கைகளும் நிரம்பி இருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக