18 ஜூலை 2017

எம்.ஜி.ஆர் - பிரபாகரன் 1

செத்தும் கொடுத்தார் சீதக்காதி
செத்துக் கொண்டு இருந்ம் கொடுத்தார் எம்.ஜி.ஆர்


மரணத்தின் விளிம்பில் சயனித்த போதும் மனிதநேயத்தை அவர் மறுக்கவில்லை.  மரணத்தை அணைத்துக் கொண்ட போதும் அவர் தமிழ் ஈழ மக்களை மறக்கவில்லை.

தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்காகக் கடைசி வரை நின்று போராடியவர். தனி ஈழம் மலர்ந்தால் மட்டுமே ஈழத்துச் சோகம் நீங்கும் என்று அசை போட்டு அசை போட்டு வாழ்ந்த ஒரு நல்ல மனிதர். அவர் தான் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் கடைசி மூச்சு நிற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட தன் சேமிப்பில் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை ஈழத் தமிழர்களுக்குக் கொடுக்க ஆசைப் பட்டார். பிரபாகரனை வரச் சொல்லி ஆளையும் அனுப்பி வைத்தார்.

அந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆரால் அதிகம் பேச முடியவில்லை. மூச்சுத் திணறல். மருந்து கொடுத்து இருக்கிறார்கள். மயக்கமான நிலை. இருந்தாலும் கடைசி நிமிடம் வரை ஈழத் தமிழர்களை அவர் மறக்கவில்லை. எப்படியாவது அவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்.



எம்.ஜி.ஆர். உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும் நேரத்தில் பிரபாகரன் போர் முனையில் இருந்தார். எம்.ஜி.ஆர். அழைத்தும் போக முடியவில்லை. பிரபாகரன் சார்பில் அவரின் தளபதிகளில் ஒருவர் போய் இருக்கிறார். அந்தத் தளபதி தான் வழக்கமாக எம்.ஜி.ஆரைப் பார்த்து உதவித் தொகையைப் பெற்று வருபவர்.

அந்தச் சமயத்தில் அந்தத் தளபதிகூட கூப்பிடும் தூரத்தில் இல்லை. அவரும் வேறு ஒரு போர்முனையில் இருந்து இருக்கிறார். அதனால் எம்.ஜி.ஆருக்குப் பழக்கம் இல்லாத வேறொரு புதிய ஆளை அனுப்பி இருக்கிறார்கள்.

புதிதாக வந்த மனிதரிடம் பணம் கொடுக்க எம்.ஜி.ஆருக்கு விருப்பம் இல்லை. கொடுக்கப் போவது பெரிய தொகை.

“எப்போதும் வாங்கிச் செல்வாரே… அவரையே அனுப்பி வையுங்கள்” என்று எம்.ஜி.ஆர். சொல்லி இருக்கிறார். கடைசியில் அந்தப் பழைய ஆளைத் தேடிப் பிடித்து சென்னைக்கு அனுப்பி வைத் இருக்கிறார்கள். அவர் வந்து சேர்வதற்குள் காலதேவன் எம்.ஜி.ஆரைக் கொண்டு சென்று விட்டான். 



இருந்தாலும் எம்.ஜி.ஆரின் உதவியாளர் மூலமாக பணம் ஈழத்து மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இருக்கிறது. மொத்தம் 21 கோடி ரூபாய். அந்தக் காலத்துப் பணம். 1985ஆம் ஆண்டில் எவ்வளவாக இருக்கும். நீங்களே ஒரு கணக்குப் போட்டுப் பாருங்கள்.

இந்தப் பணத்தைக் கொண்டு தான் தமிழ் ஈழத்தில் 18 முதியோர் காப்பகங்கள், நான்கு மருத்துவமனைகளைக் கட்டி இருக்கிறார்கள். மேலும் இரண்டு சின்ன கப்பல்களையும் வாங்கி இருக்கிறார்கள்.

இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். இது மட்டும் இல்லை. இன்னும் இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.

எம்.ஜி.ஆர். ஒரு சாமான்யராகப் பிறந்தார். மூன்றாம் வகுப்பு வரை தான் படித்தார். ஒரு மேடைக் கலைஞராக வளர்ந்தார். உலக நடிகராக உயர்ந்தார். உண்மை தான். இருந்தாலும் ஒரு நடிகர் என்பதைத் தாண்டிய நிலையில் ஒரு மனிதநேய மாந்தராக மறைந்து போனார் என்பது தான் உண்மையிலும் பெரிய உண்மை. 


அரசியலையும் விட்டு விடுங்கள். ஆயிரத்தில் ஒருவன் சினிமாவையும் விட்டு விடுங்கள். இந்த இரண்டையும் இங்கே சேர்க்க வேண்டாம். தமிழ் மக்களுக்கு அவர் செய்த நல்லவற்றை பார்ப்போம். அவற்ரை மனிதத் தன்மையுடன் பார்ப்போம். ஈழத் தமிழ் மக்கள் மீது வற்றாத வாஞ்சை காட்டிய பொன்மனச் செம்மலாக வாழ்ந்தாரே அந்த மனிதர் அது எப்படி என்றும் பார்ப்போம். சரிங்களா.

எம்.ஜி.ஆர். பிறப்பால் ஒரு தமிழர் அல்ல. இருந்தாலும் ஒரு தமிழராய்ப் பிறக்காமலேயே ஒரு தமிழராக வாழ்ந்து காட்டி இருக்கிறாரே; உலகத் தமிழர்களின் சரித்திரத்தில் சாதனைகள் செய்து காட்டி இருக்கிறாரே; வேறு என்னங்க வேண்டும். சொல்லுங்கள்.

அது தானே மிகப் பெரிய விசயம். இன்றைக்கு அவரைப் பற்றிப் பேசுகிறோம் என்றால் அதற்கு அவர் செய்த நல்ல காரியங்கள் தானே நமக்கு முன்னால் வந்து நிற்கின்றன. அந்த நல்ல காரியங்கள் தானே அவரை முன் நிறுத்தி அடையாளப் படுத்துகின்றன.

எம்.ஜி.ஆரை ஒரு மலையாளி என்று சொல்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். ஒரு தமிழன் செய்யாததை எம்.ஜி.ஆர். செய்து விட்டுப் போய் இருக்கிறாரே. அதைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள். சொல்லுங்கள். எம்.ஜி.ஆர். ஒரு மலையாளியாகவா வாழ்ந்தார். இல்லீங்க. ஒரு தமிழராக வாழ்ந்தார். ஒரு தமிழராக வாழவில்லை. ஒரு தமிழராக வாழ்ந்து காட்டினார்.

என்னய்யா தமிழன்; என்னய்யா மலையாளி; எல்லாருமே ஒரே தாய்மடி உறவுகள் தான்யா. ஒரே இரத்தத்தில் ஊறிய மட்டைகள் தான்யா. சில ஆளவந்தான்களும் சில சோளவந்தான்களும் செய்த குசும்புகள் குறும்புகள். அதனால் தமிழ்நாட்டு அரசியலில் அடுக்கடுக்கான குளறுபடிகள். 



எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு தமிழகத்தை ஆள் வந்த ஆளவந்தான்கள் எல்லாரும் சேர்ந்து பிரபாகரனை அம்போ என்று கழற்றி விட்டார்களே. ஒட்டு மொத்த ஈழ மக்களையும் காவுக் குழிக்குள் இறக்கி விட்டார்களே. அதைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள். அதுதான் இப்போது மனசுக்குள் ரணவேதனையாக இருக்கிறது.

இந்த நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றியும் சொல்ல வேண்டி இருக்கிறது. அவர் நடித்த ஒரு படத்தின் ஊதியத்தை அப்படியே தமிழ் ஈழ மக்களுக்குக் கொடுத்து இருக்கிறார். 14 இல்ட்சம் என்று நினைகிறேன்.

தமிழ் ஈழ மக்களுக்குத் தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் உதவிகள் செய்யச் சொல்லி சிவாஜி கணேசன் வற்புறுத்தி இருக்கிறார்.

தமிழ் ஈழ மக்களுக்கு சிவாஜியின் படம் என்றால் உயிர். அவர் நடித்த வசந்த மாளிகை திரைப்படம் யாழ்ப்பாணத்தில் ஒரே தியேட்டரில் மட்டும் ஒரு வருடம் ஓடி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு சின்னக் கேள்வி. தமிழ்நாட்டின் தமிழ்த் தலைவர்களில் எத்தனைப் பேர் எம்.ஜி.ஆரைப் போல ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்து இருக்கிறார்கள். சொல்லுங்கள். விரல்விட்டு எண்ணி விடலாம். 



தொடக்கத்தில் நம்ப தமிழ்க் கலைஞர் உதவிகள் செய்தார். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவற்றில் சொந்த நலன்கள் கொஞ்சமாய் கலந்து மறைந்து நின்றன. சான்றுகள் இருக்கின்றன. எம்.ஜி.ஆரைப் போல சுயநலம்  கலக்காத உதவிகள் அல்ல.  மன்னிக்கவும். உண்மையைச் சொல்கிறேன்.

ஒரு சில கட்டங்களில் எம்.ஜி.ஆர். ஒரு சர்வாதிகாரியைப் போல நடந்து கொண்டு இருக்கிறார். இல்லை என்று சொல்லவில்லை. தன்னைச் சீண்டிப் பார்த்த சினிமாக்காரர்களைத் தீண்டிப் பார்த்து இருக்கிறார். தன்னை நோண்டிப் பார்த்த அரசியல் சித்துகளைத் தாண்டிப் போய் இருக்கிறார்.. உண்மைதாங்க.

ஆக இது எல்லாம் அரசியல் சினிமாவில்  சகஜமுங்க என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியது தான். ஆனால் இங்கே நாம் எம்.ஜி.ஆரின் மனித நேயத்தைத் தான் பார்க்கின்றோம்.

எம்.ஜி.ஆருக்குப் பிள்ளைகள் இல்லை. அதனால் பிரபாகரனைத் தன் மகனாக நினைத்தார். பழகினார். தான் ஒரு முதலமைச்சர் எனும் பார்வையில்  பார்க்கவில்லை. ஒரு தகப்பன் நிலையில் நின்று ஒரு மகனாகத் தான் பிரபாகரனைப் பார்த்துப் பழகி இருக்கிறார். 



ஆக பிரபாகரனுக்குப் பண உதவிகள் செய்தார் என்றால் அதைத் தனிப்பட்ட வகையில் பார்க்க வேண்டும். ஒரு மகனுக்கு ஒரு தகப்பன் செய்யும் உதவியாகவே நினைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கட்டத்தில் உமா மகேஸ்வரன், சபாரத்தினம் போன்ற மற்ற மற்றப் போட்டித் தலைவர்களின் பக்கம் கலைஞரின் பார்வை திரும்பியது.

பிரபாகரன் சென்னைக்கு வரும் போது எல்லாம் எம்.ஜி.ஆரைச் சந்திப்பார். ஆனால் கலைஞரைச் சந்திப்பது இல்லை. ஒரே ஒரு முறைதான் சந்தித்துப் பேசி இருக்கிறார்.

அதனால் கலைஞருக்குப் பிரபாகரன் மீது வருத்தம். இரண்டு பேருக்கும் இடையே லேசான விரிசல். கலைஞரிடம் நல்ல நோக்கம் இருந்து இருக்கிறது.

தமிழ் ஈழ் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்து இருக்கிறது. இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே தொக்கித் தொங்கி நின்ற அரசியல் பிணக்குகள் தான் விரிசலுக்குப் பெரிய காரணமாக அமைந்து விட்டன. அந்த விரிசலில் பிரபாகரன் ஒரு சொக்கட்டான் காயாக மாறிப் போனது தான் வேதனையான விசயம்.




ஆக கலைஞர் தன் பிணக்கு விரிசல் ஆதங்கத்தை வெளிப்படுத்த திராவிடக் கழகத் தோழர்களிடம் நன்கொடைகளைத் திரட்டினார். திரட்டிய தொகையை அப்படியே கொண்டு போய் உமா மகேஸ்வரன், சபாரத்தினம், பாலக்குமார் போன்ற போட்டித் தலைவர்களிடம் கொடுத்து இருக்கிறார்.

எவ்வளவு தொகை என்று தெரியவில்லை. ஆனாலும் 60 இலட்சம் ரூபாய் என்று நம்பகரமான வட்டாரங்கள் சொல்கின்றன. அந்தக் கட்டத்தில் எம்.ஜி.ஆர். இரண்டு கோடி ரூபாயைப் பிரபாகரனுக்குக் கொடுத்து இருக்கிறார்.
(சான்று: http://tamilveangai.blogspot.my/2013/01/blog-post_6935.html)

சரி. அடுத்து தமிழகத்தின் மற்ற மற்றத் தலைவர்கள் ஈழ விடுதலைக்கு தொடர்ந்து உதவிகள் செய்தார்களா. இல்லை என்றுதான் பதில் வருகிறது.

ஏன் என்றால் போட்டிக் குழுத் தலைவர்கள் தமிழகத்தின் தலைவர்களைத் தேடி வரவில்லை. அந்தத் தலைவர்களும் சரியான ஆளாகப் பார்த்து அனுப்பி வைக்கவில்லை. 



ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ஈழ விடுதலைக் குழுக்களுக்கு இடையே பிரிவு பிளவுத் தன்மை ஏற்படுவதற்குத் தமிழகத் தலைவர்களின் போட்டி மனப்பான்மையே முக்கியக் காரணமாக இருந்து இருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. இது உலகத் தமிழர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டிய ஒரு விசயம்.

ஆக யாழ்ப்பாணப் போராளிக் குழுக்களுக்குள் போட்டிப் பூசல்கள் வளர்ந்து விரிந்து போனதற்குத் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் தான் மூல காரணமாக இருந்து இருக்கிறார்கள். இது என் கருத்து. இருந்தாலும் இதை எவராலும் மறுக்க முடியாது என்று என்னால் சொல்லவும் முடியாது.

ஏன் தெரியுங்களா. எம்.ஜி.ஆருக்கு யார் நண்பனோ அவன் கலைஞருக்கு எதிரி.. கலைஞருக்கு யார் நண்பனோ அவன் எம்.ஜி.ஆருக்கு எதிரி. அந்த நேரத்தில் நடந்த கயிறு இழுக்கும் போட்டி.

இப்படித் தான் அப்போது அங்கே போட்டியும் பொறாமைகளும் பரத நாட்டியம் ஆடி இருக்கின்றன. ஆக யாழ்ப்பாணத்து அரசியல் மேடையில் தமிழ்நாட்டு அரசியலும் நுழைந்து கண்ணாமூச்சி விளையாடி இருக்கிறது.

அதனால் பாதிக்கப் பட்டது ஒட்டு மொத்த ஈழத்துத் தமிழர்கள் தான். சந்தோஷப் பட்டது தமிழகத்தின் சில தானைத் தலைவர்கள். இப்போது வருந்தி என்ன பயன். வெள்ளம் அணையை உடைத்துக் கொண்டு போய் விட்டதே. என்ன செய்வதாம்.

தமிழகத்தில் வாழும் தமிழ்ச் சகோதரர்கள் கடைசி நேரத்தில் வந்து உதவி செய்வார்கள் என்கிற ஏக்கத்தில் தமிழக மண்ணைப் பார்த்தவாறே பல்லாயிரம் ஜீவன்கள் யாழ்ப்பாணத்தில் உயிரை விட்டு இருக்கின்றன.

அப்போது எம்.ஜி.ஆர். மேலே இருந்தார். கீழே இறங்கி வர முடியாது. கலைஞர் கீழே இருந்தார். ஆனால் அவர் இறங்கி வரவே இல்லை. பிடித்த முயலுக்கு மூன்றே முக்கால கால் என்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வது. 



துயிலரங்கில் ஓர் உண்ணாவிரதம். இது உலகம் அறிந்த விசயம். என் மீது வழக்குப் போடலாம். ஆனால் எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் ஜெயிக்க முடியாது. அதையும் சொல்லி விடுகிறேன்.

அந்த மனுசன் நினைத்து இருந்தால் மறுபடியும் சொல்கிறேன்; அந்த மனுசன் நினைத்து இருந்தால் தமிழ் ஈழத்தின் வரலாற்றை மாற்றி எழுதி இருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. பரவாயில்லை. என்ன செய்வது. அவரால் முடியவில்லை.

ஒன்று மட்டும் உண்மை. பல்லாயிரம் உயிர்களின் சப்தநாடிகள் இன்னும் ஈனக் குரல்களை எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. அந்தப் பாவம் யாரையும் சும்மா விடாது. துரோகம் செய்தவர்களையும் அவர்கள் சார்ந்த வாரிசுகளையும் அழித்துவிடும். 



ஓர் உயிர் ஈருயிர்கள் இல்லைங்க. இரண்டு லட்சம் உயிர்கள். அத்தனையும் மனித உயிர்கள். தமிழர்களின் உயிர்கள். ஆக இப்போது உலக இரத்தங்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து அழுகின்றன.

அழுது என்ன பயன். காப்பாற்ற வேண்டிய நேரத்தில் காப்பாற்றாமல் இப்போது ஒப்பாரி வைத்து என்ன நன்மை. ஒரு சொட்டு விளக்கெண்ணையும் கிடைக்கப் போவது இல்லை.

இந்திரா காந்தி என்ன உதவிகள் செய்தார் என்பதைப் பற்றி நாளைய கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

(தொடரும்)

1 கருத்து:

  1. ஈழத்து இனத்தை கடவுளே வஞ்சித்துவிட்டான்! இல்லையென்றால் இப்படியெல்லாம் நடந்திருக்காது.

    பதிலளிநீக்கு