19 ஜனவரி 2020

அல்தான்தூயா அமளி துமளிகள் - 1

தமிழ் மலர் - 17.01.2020

அல்தான்தூயா நல்ல ஓர் அழகிய பெண்மணி. அற்புதமாய் அழகு அழகாய் நடை பயின்ற பெண்ணோவியம். மங்கோலிய மண்ணின் மாதுளம் மடந்தை. மலேசிய வளாகத்தில் மாசு தூசு; அமளி துமளிகளை வாரி இறைத்த பெதும்பை. அரசியல்வாதிகள் சிலரைச் சொக்கட்டான் காய்களாக மாற்றிப் போட்ட பேரிளம்பெண். 




அதையும் தாண்டிய நிலையில் கோடிக் கோடியான பணத்திற்கு  ஆசைப் பட்டவர் என்றும் சொல்கிறார்கள். கத்தைகளுக்கு நடுவில் மெத்தையைத் தட்டிப் பார்த்தவர் என்றும் சொல்கிறார்கள். தலையணைக்கு மேலே  மர்மஜாலம் காட்டிய மாபெரும் மனிதப் பெண்ணகம் என்றும் சொல்கிறார்கள். நமக்குத் தெரியாது. சொல்பவர்கள் சொல்லட்டும்.

அல்தான்தூயா அற்ப வயதிலேயே ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார். பாவம். ஒரு பெரிய பெண் பாவம்.

அல்தான்தூயா பற்றி இணையத் தளங்களிலும், யூடியூப் சமூக ஊடகத்திலும் நூற்றுக் கணக்கான செய்திகள். நூற்றுக் கணக்கான படங்கள். நூற்றுக் கணக்கான காணொலிகள். எதைப் பார்ப்பது எதை விடுவது என்று தெரியவில்லை. எதைப் பற்றி விமர்சனம் செய்வது என்றும் தெரியவில்லை. 



எதையாவது இடக்கு முடக்காக எழுதப் போய் அப்புறம் பெரிய ஓர் இக்கட்டான நிலை ஏற்படலாம். நாடு போகிற போக்கில் நாளைக்கு என்ன நடக்குமோ எனும் புரியாத ஓர் அச்ச நிலை. ஆக ஒவ்வோர் எழுத்தையும் எடை போட்டு எடை நிறுத்தி எழுத வேண்டிய நிலை.

1 எம்.டி.பி. வழக்கு ஓடிக் கொண்டு இருக்கிறது. அந்தச் சாக்கில் இந்த அல்தான்தூயா பெயரும் அடிக்கடி தலை காட்டி விட்டுப் போகிறது. மக்களும் பேசுகிறார்கள். ஆக நாமும் கூட்டத்தோடு கூட்டமாய்க் கொஞ்சம் தூசு தட்டிப் பார்ப்போமே. சரிங்களா.




அல்தான்தூயா வாழ்க்கை வரலாறு வருகிறது. பாரபட்சம் இல்லாமல் எழுதி இருக்கிறேன். எந்த ஓர் அரசியல்வாதியையும் இதில் சம்பந்தப் படுத்திப் புண் படுத்துவது நம்முடைய நோக்கம் அல்ல. போதுமான சான்றுகளுடன் எழுதுகிறேன். இது ஒரு நடுநிலைமையான அலசல்.

அல்தான்தூயாவின் கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்படும் என்று இப்போதைய பிரதமர் சொல்கின்றார்.

சிலாங்கூர் ஷா ஆலாம், புஞ்சாக் ஆலாம் காட்டுப் பகுதியில் ஒரு பெண்ணின் உயிர் விலை பேரம் பேசப்பட்டு உள்ளது. அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதுவே அனைத்து நெஞ்சங்களின் எதிர்பார்ப்புகள்.




அல்தான்தூயாவின் பிறப்புப் பெயர் அல்தான்தூயா சாரிபூ பாயாஸ் காலன் (Altantuyaa Shaariibuu Bayasgalan). மங்கோலியா உலான் பத்தூர் நகரில் (Ulaan Bataar) 1979 பிப்ரவரி 26-இல் பிறந்தவர்.

குடும்பத்தின் மூத்த மகள். தந்தையாரின் பெயர் சாரிபூ செத்தெவ் (Shaariibuu Setev). இவர் ஒரு மருத்துவர். மங்கோலியா தேசியப் பல்கலைக்கழகத்தில் தகவல் கல்வித் துறை இயக்குநராகவும் மனோவியல் பேராசிரியராகவும் பணி புரிந்தவர். இப்போது மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டு இருக்கிறார்.

தாயாரின் பெயர் எஸ்.அல்தான் செத்தெக் (Sh Altantsetseg). இவர் மங்கோலியாவில் ரஷ்ய மொழி பயிற்றுவிக்கும் ஓர் ஆசிரியை. பெற்றோர்கள் ரஷ்யாவில் (St Petersburg) பணி புரிந்தவர்கள். அதனால் அல்தான்தூயாவிற்கு 12 வயதாகும் வரை ரஷ்யாவில் தங்கி, தொடக்கக் கல்வியைப் படித்து வந்தார். 




மங்கோலிய, ரஷ்ய, சீன, ஆங்கில, பிரெஞ்சு மொழிகளில் அல்தான்தூயா சரளமாகப் பேசக் கூடியவர்.

தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் மங்கோலியாவிற்குத் திரும்பினார். 1966-ஆம் ஆண்டில் மாடாய் (Maadai) எனும் மங்கோலியப் பாடகரைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது அல்தான்தூயாவிற்கு வயது 18. மாடாய்க்கு வயது 22.

மங்கோலிய மொழியில் கார் சார்னாய் (Khar Sarnai) (தமிழில்: கறுப்பு ரோஜா) எனும் இசைக் குழுவில் அல்தான்தூயாவின் கணவர் மாடாய் ஒரு பிரபலமான பாடகர். இவர்களின் திருமண வாழ்க்கை இரு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 




மாடாய் அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள். அதனால் குடும்ப உறவில் சலசலப்புகள் கலந்த விரிசல்கள். ஜூன் 1998-இல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பு அல்தான்தூயாவிடம் வழங்கப் பட்டது.

விவாகரத்திற்குப் பின் அல்தான்தூயா தன்னுடைய மகனுடன் பெற்றோரின் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் அவர் நவநாகரிகச் சமுதாயத்தின் நவீனத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 

சில மாதங்களில் எஸ். குனிக்கூ (S.Khunikhu) எனும் மங்கோலிய வடிவமைப்பாளரின் மகனின் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளில் மறுபடியும் ஒரு விவாகரத்தில் போய் முடிந்தது. ஆனால் குழந்தைகள் எதுவும் இல்லை. 




அதன் பின்னர் வேறு ஒரு மங்கோலிய ஆடவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் மூலமாக திருமணத்திற்கு அப்பாற்பட்டு இரண்டாவது குழந்தை. இரு குழந்தைகளும் அல்தான்தூயாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தனர்.

முதல் திருமணத்திற்குப் பின்னர் 1996 நவம்பர் மாதம் உலான் பத்தூரில் இருக்கும் ஒத்கோண்டெஞ்சர் (Otgontenger University) எனும் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பிற்காகப் பதிந்து கொண்டார். அந்தப் படிப்பையும் தொடரவில்லை.

வகுப்பிற்கு முறையாக வருவது இல்லை. தேர்வுகளையும் சரியாக எழுதுவது இல்லை. அந்தச் சமயத்தில் அவர் தாய்மை அடைந்து இருந்தார். அதனால் 1997 ஜனவரி மாதம் பல்கலைக்கழகத்தில் இருந்து விலகிக் கொண்டார்.




இரண்டாவது விவாகரத்திற்குப் பின்னர் அல்தான்தூயா வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்து போனார். அதை மறப்பதற்கு 2000-ஆம் ஆண்டு பாரிஸ் நகரத்திற்குச் சென்றார்.

அங்கு ஒரு மாடலிங் பள்ளியில் பதிந்து கொண்டார். இந்த முறை அக்கறையுடன் பயிற்சிகளை மேற்கொண்டு மாடலிங் துறையில் சான்றிதழைப் பெற்றார்.

பாரிஸ் நகரில் இருந்து மங்கோலியா திரும்பியதும் மாடலிங் துறையில் அவர் ஈடுபடவில்லை. மாறாக நெசவுத் துணி வியாபரத்தில் ஈடுபட்டார். சீனாவில் இருந்து துணிமணிகளை வரவழைத்தார்.

ஷாங்காய், பெய்ஜிங், ஹாங்காங், தைவான் போன்ற இடங்களுக்கு அடிக்கடி பயணங்களை மேற்கொண்டார். வணிகப் பிரபலங்களின் தொடர்புகளும் கிடைத்தன. மாடலிங் துறையில் புகழ்பெற வேண்டும் என்று அல்தான்தூயா தொடக்கக் காலத்தில் ஆசைப் பட்டார். ஆனால் கடைசி வரை அது நடக்காமல் போய் விட்டது.




பிரபலங்களின் தொடர்புகளினால் சீனா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று வந்தார். இவர் மலேசியாவிற்கு முதல் முறையாக 1995-ஆம் ஆண்டிலும் இரண்டாவது முறையாக 2006-ஆம் ஆண்டிலும் இரு முறைகள் வந்து இருக்கிறார்.

2004-ஆம் ஆண்டு ஹாங்காங் நகரில் நடைபெற்ற ஓர் அனைத்துலக வைரக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக அல்தான்தூயா அங்கு சென்று இருந்தார்.

அந்தக் கட்டத்தில் மலேசிய உத்திப்பூர்வ ஆய்வு மையத்தில் (Malaysian Strategic Research Centre), பாதுகாப்பு பகுத்தாய்வாளராக (Defense Analyst) இருந்த அப்துல் ரசாக் பாகிந்தா என்பவரின் அறிமுகம் கிடைத்தது.  அந்த அறிமுகம் நட்பாக மாறி கடைசியில் ஒரு நெருக்கமான உறவு முறைக்கும் வழிகோலியது.

மலேசியாவின் மூத்த அரசியல்வாதி ஒருவர், அல்தான்தூயாவை அப்துல் ரசாக் பாகிந்தாவிற்கு அறிமுகம் செய்து வைத்ததாகச் சொல்லப் படுகிறது. அதன் பின்னர் ரசாக் பாகிந்தாவுடன் அல்தான்தூயா பாரிஸ் நகரத்திற்குச் சென்றார். 




மலேசிய அரசாங்கம் பிரான்ஸ் நாட்டில் இருந்து இரு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் காலக் கட்டம். அப்போது அங்கே நடந்த பேச்சு வார்த்தைகளில் அல்தான்தூயா ஒரு மொழிப் பெயர்ப்பாளராகவும் பணி புரிந்தார்.

பாரிஸில் இருக்கும் போது அல்தான்தூயாவிற்கும் அப்துல் ரசாக் பாகிந்தாவிற்கும் நெருக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள். பின்னர் அல்தான்தூயா, ரசாக் பாகிந்தாவின் வைப்பாட்டியாகவே வாழ்ந்தார்.

1961-இல் பிறந்த அப்துல் ரசாக் பாகிந்தாவிற்கு (Abdul Razak Baginda) வயது 52. அல்தான்தூயாவிற்கு வயது 25. ’ஐந்தும் இரண்டும்’ எனும் எண்கள் விளையாடிய விளையாட்டைப் பாருங்கள்.

மலேசியாவின் பிரபலமான வலத் தளங்களில் ஒன்றான மலேசியா டுடே தளத்தில் அதன் ஆசிரியர் ராஜா பெத்ரா கமாருடின் (Raja Petra Kamaruddin), அல்தான்தூயாவின் இறப்பில் நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்டு உள்ளார் என்பதை முதன்முதலில் தெரிவித்தார். 

அதை நஜீப் துன் ரசாக் வன்மையாக மறுத்தார். மறுத்தும் வருகிறார். நஜீப் மீதான குற்றச்சாட்டை ராஜா பெத்ரா கமாருடின் பின்னர் மீட்டுக் கொண்டார்.




தவறான அறிக்கையை வெளியிட்டதற்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டதும் ராஜா பெத்ரா கமாருடின் தன் மனைவி பிள்ளைகளை மலேசியாவிலேயே விட்டுவிட்டு இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்றார்.

மலேசிய அரசாங்கம் 2002-ஆம் ஆண்டில் இரு ஸ்கோர்ப்பின் (Scorpene) நீர்மூழ்கிக் கப்பல்களை 4.7 பில்லியன் ரிங்கிட் செலவில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கியது. ஒரு பில்லியன் என்றால் ஆயிரம் மில்லியன்கள். அதாவது நூறு கோடி. 

அதில் 114 மில்லியன் யூரோ அதாவது மலேசிய ரிங்கிட்: 464 மில்லியன். முகவர் சேவைக் கட்டணமாக அர்மாரிஸ் எனும் ஸ்பானிய நிறுவனம் வழங்கியது. அதாவது கமிஷன்.

அர்மாரிஸ் (Armaris) நிறுவனம் என்பது நீர்மூழ்கிக் கப்பல்களின் விற்பனைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட நிறுவனம் ஆகும். அந்த முகவர் சேவைக் கட்டணம் ரசாக் பகிந்தாவின் கட்டுப்பாட்டில் இருந்த பெரிமேக்கர் (Perimekar) எனும் நிறுவனத்திடம் வழங்கப் பட்டது.

அதை அறிந்து கொண்ட அல்தான்தூயா தனக்கு 500,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்தால் இந்த முகவர் சேவைக் கட்டண விவகாரம் வெளியுலகிற்கு தெரிவிக்கப்பபட மாட்டாது என்று ரசாக் பகிந்தாவை மிரட்டிப் பணம் பறிக்க முயன்று இருக்கிறார்.

A letter written by Altantuyaa and found after her death shows that she had been blackmailing Mr. Baginda, seeking US$500,000 to remain silent about her knowledge of the deal.

சான்று: PI Bala’s lawyer to testify at Paris Scorpène tribunal,http://www.malaysia-today.net/mtcolumns/newscommentaries/58266-pi-balas-lawyer-to-testify-at-paris-scorpene-tribunal. Free Malaysia Today.

2006 அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி அல்தான்தூயா கடைசி முறையாக மலேசியாவிற்கு வந்தார். அவருடன் கூடவே இருவர் வந்தனர். ஒருவர் நமீரா கெரில்மா (Namiraa Gerelmaa) வயது 29 ; இன்னொருவர் உரிந்தூயா கால் ஒச்சிர் (Urintuya Gal-Ochir) வயது 29. இவர்களில் நமீரா என்பவர் அல்தான்தூயாவின் ஒன்றுவிட்ட சகோதரி ஆவார்.

ரசாக் பகிந்தாவைச் சந்தித்துப் பேசவே அல்தான்தூயா கோலாலம்பூருக்கு வருகை புரிந்ததின் முக்கிய நோக்கமாகும்.

கோலாலம்பூர், ஜாலான் ஹாங் லெக்கீர் சாலையில் இருக்கும் மலாயா ஓட்டலில் அவர்கள் தங்கினார்கள். ரசாக் பகிந்தா தங்கி இருக்கும் வீட்டைத் தேடிப் பிடிப்பதற்காக ஆங் சோங் பெங் எனும் தனியார் துப்பறிவாளரையும் சேவையில் அமர்த்திக் கொண்டார்கள்.

(தொடரும்)

சான்றுகள்:

1. Sirul ready to reveal all in Altantuya case - if he gets full pardon -  https://www.thestar.com.my/news/nation/2018/05/19/sirul-ready-to-reveal-all-in-altantuya-case---if-he-gets-full-pardon/

2. Altantuya married twice, had two kids - https://web.archive.org/web/20070912202145/http://thestar.com.my/news/story.asp?file=%2F2006%2F11%2F15%2Fnation%2F16020640&sec=nation

3. French court to consider Altantuya murder in Scorpene case - https://www.malaymail.com/news/malaysia/2013/08/13/lawyer-french-court-to-consider-altantuya-murder-in-scorpene-case/509049#sthash.aKDBgw6o.dpuf


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக