15 ஜனவரி 2021

மலாக்கா பலேமிசுலாவின் மல்லாக்கா கதை

ரொம்ப நாளைக்கு முன்னால் மலாக்கா பெர்த்தாம் நதிக் கரையோரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஓர் ஒண்டிக் கட்டை காட்டுச் சருகு மான். அதை எதிர்த்து நாலைந்து வேட்டை நாய்கள். அங்கே ஒரு குட்டிச் சண்டை. அதில் ஒரு நாய் மல்லாக்காக ஆற்றில் விழுந்தது. சகுனம் நல்லா இருக்கிறது என்று சொல்லி அந்த இடத்திற்கு மலாக்கா என்று பெயர் வைத்தார் ஒரு ராஜா.

அந்த ராஜா தான் பரமேஸ்வரா என்கிற ராஜா. முன்பு காலத்தில் ஆயாக் கொட்டகை பிள்ளைகளுக்குத் தெரிந்த விசயம். இப்போது பல்கலைக்கழகத்தில் படிக்கிற பிள்ளைகளுக்குத் தெரியுமா என்பது பில்லியன் டாலர் கேள்வி. எல்லாம் வரலாற்றுக் கோளாறுகள் தான்.

ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு மாட்டைத் தூக்கி மந்தையில் போடுவது பழைய கதை. இப்போது அப்படி எல்லாம் இல்லை. ஆட்டைத் தூக்கி ஆற்றில் போட்டு; மாட்டைத் தூக்கிக் குளத்தில் போட்டு; மனுசனைத் தூக்கி எருமை மாட்டில் கட்டி மேய்க்கிற கதை தான். என்ன செய்வது. ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி அதிசரத்தையும் அபேஸ் பண்ணிட்டாங்க. கோல்மால் பட்டியல் நீண்டு போகும்.  

மல்லாக்கா என்ற சொல்லில் இருந்து மலாக்கா வந்ததா. அல்லது மலாக்காவில் இருந்து மல்லாக்கா வந்ததா தெரியவில்லை. அதை மல்லாக்கா படுத்துக் கொண்டு தான் ஆராய்ச்சி பண்ண வேண்டும். குப்புறப் படுத்துக் கொண்டு யோசித்தால் கிணற்றுத் தவளை மாதிரி யோசிக்க வேண்டி வரும்.

அப்படித் தானே சிலர் யோசித்து வரலாற்றுப் பாடப் புத்தக்ங்களை எல்லாம் எழுதிச் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார்கள். எங்கே என்று கேட்க வேண்டாம். அப்புறம் வில்லங்கம் விபரிதமாய் கதகளி ஆடிவிடும்.

பரமேஸ்வரா மலாக்காவை ஆட்சிப் புரிந்த காலத்தில் அவரைப் பலமேசுலா என்றே சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள். அழைத்தும் வந்தார்கள். இப்போதும்கூட மலேசியச் சீனர்கள் பலேமிசுலா… பலேமிசுலா… என்றுதான் அழைக்கிறார்கள். நமக்கும் வாய் தவறி பலேமிசுலா என்று வந்துவிடுகிறது.

சரி விடுங்கள். அவரைச் சீனர்கள் இஸ்கந்தார் ஷா என்று அழைக்கவே இல்லை. பலமேசுலா என்றுதான் அழைத்து இருக்கிறார்கள்.

(சான்று: Zhong-yang Yan-jiu yuan Ming Shi-lu, volume 12, page 1487 - 1489)

இந்திய நாட்டவர்கள் பரம ஈஸ்வரா அழைத்து இருக்கிறார்கள். அராபிய நாட்டு வணிகர்கள் பரமோ ஈஸ்வரா என்று அழைத்து இருக்கிறார்கள். பின்னர் வந்த சீன வணிகர்கள் பல மோஸ் லா என்று அழைத்து இருக்கிறார்கள். ரகரம் ஒரு லகரமாக மாறுவதைக் கவனியுங்கள். அங்கே தான் சரித்திரம் அழகாக வீணை வாசிக்கின்றது.

சரி. மறுபடியும் சீன நாட்டின் மிங் அரச குறிப்பேடுகளுக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.  மலாக்கா நாட்டின் அரசர் பலேமிசுலா (Bai-li-mi-su-la, the king of the country of Melaka) என்றுதான் சீனப் பழஞ்சுவடிகள் சொல்கின்றன. ஆக மலாக்கா வரலாற்றின் கதாநாயகன் பரமேஸ்வராவின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா.

அவர் இறக்கும் போது பரமேஸ்வரா எனும் பெயரில் தான் இறந்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது எப்படி இஸ்கந்தார் ஷா என்பவர் வந்தார். சுல்கார்னாயின் என்பவர் எங்கே இருந்து வந்தார். தெரியவில்லை. பரமேஸ்வராவின் பெயரைத் தங்கள் வசதிக்கு மாற்றிக் கொண்டார்கள். போதுங்களா. எங்கே வருகிறேன். புரிந்து கொள்ளுங்கள்.

இதில் இன்னும் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா. மகா அலெக்ஸாந்தரின் பெயர் தான் சுல்கார்னாயின். இவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர். அவர் லங்காவி தீவிற்கு வந்து அங்குள்ள ஒரு சுதேசிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாராம். தலை சுற்றுகிறது

இந்தியாவிற்கு வந்த மகா அலெக்ஸாந்தர் கி.மு. 326-ஆம் ஆண்டு போரஸ் மன்னனோடு சண்டைப் போட்டார். அதன் பின்னர் அப்படியே சிந்து நதி வழியாகப் பாரசீகம் போய்ச் சேர்ந்தார். அவர் இங்கு மலையூர் பக்கம் தலையைக் காட்டவே இல்லை.

ஆனால் மகா அலெக்ஸாந்தர் லங்காவிக்கு வந்தாராம். அங்குள்ள பெண்ணைக் கல்யாணம் பண்ணினாராம். பிள்ளைகள் பெற்றுக் கொண்டாராம். அவரின் வாரிசுதான் பரமேஸ்வராவாம். என்னங்க இது. ரீல் விடுவதற்கும் ஓர் எல்லை வேண்டாமா?

1400-ஆம் ஆண்டில் அதாவது மகா அலெக்ஸாண்டருக்குப் பின்னர் 1730 ஆண்டுக்குன் பிறகு தான் பரமேஸ்வரா மலாக்காவைத் தோற்றுவித்தார். உச்சந்தலைக்கும் உச்சங்காலுக்கும் முடிச்சு போடுவதிலும் நியாயம் வேண்டாமா?

பரமேஸ்வரா சமய மாற்றம் செய்து கொண்டாரா இல்லையா என்பது இப்போதைக்கு நம்முடைய வாதம் அல்ல. இருந்தாலும் அவர் இறக்கும் போது அவருடைய பெயர் என்ன என்பதே இப்போதைக்கு நம்முடைய வாதம்.

அதைப் பற்றித்தான் சில மலேசிய வரலாற்றுக் கத்துக்குட்டிகள் வரிந்து கட்டி நிற்கின்றன. மல்லுக்கு நின்றாலும் பரவாயில்லை. மீசையில் மண் ஒட்டிக் கொண்டதையும் கண்டு கொள்ளவில்லை. அதான் வேதனையாக இருக்கிறது.

பரமேஸ்வரா இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பரமேஸ்வரா என்றே அழைக்கப்பட்டு இருக்கிறார். வேறு எந்தப் பெயரிலும் அவர் அழைக்கப் படவில்லை. அதைச் சீன வரலாற்றுக் குறிப்புகள் உறுதி படுத்துகின்றன. வலுவான ஆதாரங்களும் உள்ளன. இப்போது தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.

1414-ஆம் ஆண்டு பரமேஸ்வரா தன்னுடைய 70 ஆவது வயதில் காலமானார். அவருடய உடல் நெகிரி செம்பிலான், போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் எனும் இடத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் அல்லது சிங்கப்பூரில் உள்ள கென்னிங் மலையின் அடிவாரத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

மலாக்காவைப் பரமேஸ்வரா என்பவர் தான் தோற்றுவித்தார். இருப்பினும் அண்மைய காலங்களில் அவருடைய பெயர் வரலாற்றில் இருந்து இரட்டடிப்புச் செய்யப் படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாட நூல்களில் இருந்தும் பரமேஸ்வரா காணாமல் போய் வருகிறார். உண்மை மறைக்கப்படக் கூடாது என்பதே நம்முடைய ஆதங்கம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.01.2021


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக