19 ஜூலை 2017

மூட நம்பிக்கை - முதுகில் மிதித்தல்

விரதம் இருந்து சாமி வேடம் போட்டு... பக்தர்களின் முதுகில் நடந்து வந்தால் அது பெரும் பாக்கியம். 



இது தமிழ்நாட்டு மேல்மலையனூரில் சிறப்பு. அவர்களின் பாதம் நம் மீது பட்டால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் போய்விடுமாம்... நல்ல ஒரு நம்பிக்கை... 


போங்க போங்க... போய் செஞ்ச பாவங்களை எல்லாம் தீர்த்துட்டு வாங்க... 



சொறி பிடித்த கால்களால் நல்லா மிதிபட்டு வாங்க... உங்க சாமி நம்பிக்கையில் ஒரு வரம்பு வேண்டாமா...

18 ஜூலை 2017

எம்.ஜி.ஆர் - பிரபாகரன் 1

செத்தும் கொடுத்தார் சீதக்காதி
செத்துக் கொண்டு இருந்ம் கொடுத்தார் எம்.ஜி.ஆர்


மரணத்தின் விளிம்பில் சயனித்த போதும் மனிதநேயத்தை அவர் மறுக்கவில்லை.  மரணத்தை அணைத்துக் கொண்ட போதும் அவர் தமிழ் ஈழ மக்களை மறக்கவில்லை.

தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்காகக் கடைசி வரை நின்று போராடியவர். தனி ஈழம் மலர்ந்தால் மட்டுமே ஈழத்துச் சோகம் நீங்கும் என்று அசை போட்டு அசை போட்டு வாழ்ந்த ஒரு நல்ல மனிதர். அவர் தான் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் கடைசி மூச்சு நிற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட தன் சேமிப்பில் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை ஈழத் தமிழர்களுக்குக் கொடுக்க ஆசைப் பட்டார். பிரபாகரனை வரச் சொல்லி ஆளையும் அனுப்பி வைத்தார்.

அந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆரால் அதிகம் பேச முடியவில்லை. மூச்சுத் திணறல். மருந்து கொடுத்து இருக்கிறார்கள். மயக்கமான நிலை. இருந்தாலும் கடைசி நிமிடம் வரை ஈழத் தமிழர்களை அவர் மறக்கவில்லை. எப்படியாவது அவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்.



எம்.ஜி.ஆர். உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும் நேரத்தில் பிரபாகரன் போர் முனையில் இருந்தார். எம்.ஜி.ஆர். அழைத்தும் போக முடியவில்லை. பிரபாகரன் சார்பில் அவரின் தளபதிகளில் ஒருவர் போய் இருக்கிறார். அந்தத் தளபதி தான் வழக்கமாக எம்.ஜி.ஆரைப் பார்த்து உதவித் தொகையைப் பெற்று வருபவர்.

அந்தச் சமயத்தில் அந்தத் தளபதிகூட கூப்பிடும் தூரத்தில் இல்லை. அவரும் வேறு ஒரு போர்முனையில் இருந்து இருக்கிறார். அதனால் எம்.ஜி.ஆருக்குப் பழக்கம் இல்லாத வேறொரு புதிய ஆளை அனுப்பி இருக்கிறார்கள்.

புதிதாக வந்த மனிதரிடம் பணம் கொடுக்க எம்.ஜி.ஆருக்கு விருப்பம் இல்லை. கொடுக்கப் போவது பெரிய தொகை.

“எப்போதும் வாங்கிச் செல்வாரே… அவரையே அனுப்பி வையுங்கள்” என்று எம்.ஜி.ஆர். சொல்லி இருக்கிறார். கடைசியில் அந்தப் பழைய ஆளைத் தேடிப் பிடித்து சென்னைக்கு அனுப்பி வைத் இருக்கிறார்கள். அவர் வந்து சேர்வதற்குள் காலதேவன் எம்.ஜி.ஆரைக் கொண்டு சென்று விட்டான். 



இருந்தாலும் எம்.ஜி.ஆரின் உதவியாளர் மூலமாக பணம் ஈழத்து மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இருக்கிறது. மொத்தம் 21 கோடி ரூபாய். அந்தக் காலத்துப் பணம். 1985ஆம் ஆண்டில் எவ்வளவாக இருக்கும். நீங்களே ஒரு கணக்குப் போட்டுப் பாருங்கள்.

இந்தப் பணத்தைக் கொண்டு தான் தமிழ் ஈழத்தில் 18 முதியோர் காப்பகங்கள், நான்கு மருத்துவமனைகளைக் கட்டி இருக்கிறார்கள். மேலும் இரண்டு சின்ன கப்பல்களையும் வாங்கி இருக்கிறார்கள்.

இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். இது மட்டும் இல்லை. இன்னும் இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.

எம்.ஜி.ஆர். ஒரு சாமான்யராகப் பிறந்தார். மூன்றாம் வகுப்பு வரை தான் படித்தார். ஒரு மேடைக் கலைஞராக வளர்ந்தார். உலக நடிகராக உயர்ந்தார். உண்மை தான். இருந்தாலும் ஒரு நடிகர் என்பதைத் தாண்டிய நிலையில் ஒரு மனிதநேய மாந்தராக மறைந்து போனார் என்பது தான் உண்மையிலும் பெரிய உண்மை. 


அரசியலையும் விட்டு விடுங்கள். ஆயிரத்தில் ஒருவன் சினிமாவையும் விட்டு விடுங்கள். இந்த இரண்டையும் இங்கே சேர்க்க வேண்டாம். தமிழ் மக்களுக்கு அவர் செய்த நல்லவற்றை பார்ப்போம். அவற்ரை மனிதத் தன்மையுடன் பார்ப்போம். ஈழத் தமிழ் மக்கள் மீது வற்றாத வாஞ்சை காட்டிய பொன்மனச் செம்மலாக வாழ்ந்தாரே அந்த மனிதர் அது எப்படி என்றும் பார்ப்போம். சரிங்களா.

எம்.ஜி.ஆர். பிறப்பால் ஒரு தமிழர் அல்ல. இருந்தாலும் ஒரு தமிழராய்ப் பிறக்காமலேயே ஒரு தமிழராக வாழ்ந்து காட்டி இருக்கிறாரே; உலகத் தமிழர்களின் சரித்திரத்தில் சாதனைகள் செய்து காட்டி இருக்கிறாரே; வேறு என்னங்க வேண்டும். சொல்லுங்கள்.

அது தானே மிகப் பெரிய விசயம். இன்றைக்கு அவரைப் பற்றிப் பேசுகிறோம் என்றால் அதற்கு அவர் செய்த நல்ல காரியங்கள் தானே நமக்கு முன்னால் வந்து நிற்கின்றன. அந்த நல்ல காரியங்கள் தானே அவரை முன் நிறுத்தி அடையாளப் படுத்துகின்றன.

எம்.ஜி.ஆரை ஒரு மலையாளி என்று சொல்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். ஒரு தமிழன் செய்யாததை எம்.ஜி.ஆர். செய்து விட்டுப் போய் இருக்கிறாரே. அதைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள். சொல்லுங்கள். எம்.ஜி.ஆர். ஒரு மலையாளியாகவா வாழ்ந்தார். இல்லீங்க. ஒரு தமிழராக வாழ்ந்தார். ஒரு தமிழராக வாழவில்லை. ஒரு தமிழராக வாழ்ந்து காட்டினார்.

என்னய்யா தமிழன்; என்னய்யா மலையாளி; எல்லாருமே ஒரே தாய்மடி உறவுகள் தான்யா. ஒரே இரத்தத்தில் ஊறிய மட்டைகள் தான்யா. சில ஆளவந்தான்களும் சில சோளவந்தான்களும் செய்த குசும்புகள் குறும்புகள். அதனால் தமிழ்நாட்டு அரசியலில் அடுக்கடுக்கான குளறுபடிகள். 



எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு தமிழகத்தை ஆள் வந்த ஆளவந்தான்கள் எல்லாரும் சேர்ந்து பிரபாகரனை அம்போ என்று கழற்றி விட்டார்களே. ஒட்டு மொத்த ஈழ மக்களையும் காவுக் குழிக்குள் இறக்கி விட்டார்களே. அதைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள். அதுதான் இப்போது மனசுக்குள் ரணவேதனையாக இருக்கிறது.

இந்த நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றியும் சொல்ல வேண்டி இருக்கிறது. அவர் நடித்த ஒரு படத்தின் ஊதியத்தை அப்படியே தமிழ் ஈழ மக்களுக்குக் கொடுத்து இருக்கிறார். 14 இல்ட்சம் என்று நினைகிறேன்.

தமிழ் ஈழ மக்களுக்குத் தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் உதவிகள் செய்யச் சொல்லி சிவாஜி கணேசன் வற்புறுத்தி இருக்கிறார்.

தமிழ் ஈழ மக்களுக்கு சிவாஜியின் படம் என்றால் உயிர். அவர் நடித்த வசந்த மாளிகை திரைப்படம் யாழ்ப்பாணத்தில் ஒரே தியேட்டரில் மட்டும் ஒரு வருடம் ஓடி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு சின்னக் கேள்வி. தமிழ்நாட்டின் தமிழ்த் தலைவர்களில் எத்தனைப் பேர் எம்.ஜி.ஆரைப் போல ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்து இருக்கிறார்கள். சொல்லுங்கள். விரல்விட்டு எண்ணி விடலாம். 



தொடக்கத்தில் நம்ப தமிழ்க் கலைஞர் உதவிகள் செய்தார். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவற்றில் சொந்த நலன்கள் கொஞ்சமாய் கலந்து மறைந்து நின்றன. சான்றுகள் இருக்கின்றன. எம்.ஜி.ஆரைப் போல சுயநலம்  கலக்காத உதவிகள் அல்ல.  மன்னிக்கவும். உண்மையைச் சொல்கிறேன்.

ஒரு சில கட்டங்களில் எம்.ஜி.ஆர். ஒரு சர்வாதிகாரியைப் போல நடந்து கொண்டு இருக்கிறார். இல்லை என்று சொல்லவில்லை. தன்னைச் சீண்டிப் பார்த்த சினிமாக்காரர்களைத் தீண்டிப் பார்த்து இருக்கிறார். தன்னை நோண்டிப் பார்த்த அரசியல் சித்துகளைத் தாண்டிப் போய் இருக்கிறார்.. உண்மைதாங்க.

ஆக இது எல்லாம் அரசியல் சினிமாவில்  சகஜமுங்க என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியது தான். ஆனால் இங்கே நாம் எம்.ஜி.ஆரின் மனித நேயத்தைத் தான் பார்க்கின்றோம்.

எம்.ஜி.ஆருக்குப் பிள்ளைகள் இல்லை. அதனால் பிரபாகரனைத் தன் மகனாக நினைத்தார். பழகினார். தான் ஒரு முதலமைச்சர் எனும் பார்வையில்  பார்க்கவில்லை. ஒரு தகப்பன் நிலையில் நின்று ஒரு மகனாகத் தான் பிரபாகரனைப் பார்த்துப் பழகி இருக்கிறார். 



ஆக பிரபாகரனுக்குப் பண உதவிகள் செய்தார் என்றால் அதைத் தனிப்பட்ட வகையில் பார்க்க வேண்டும். ஒரு மகனுக்கு ஒரு தகப்பன் செய்யும் உதவியாகவே நினைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கட்டத்தில் உமா மகேஸ்வரன், சபாரத்தினம் போன்ற மற்ற மற்றப் போட்டித் தலைவர்களின் பக்கம் கலைஞரின் பார்வை திரும்பியது.

பிரபாகரன் சென்னைக்கு வரும் போது எல்லாம் எம்.ஜி.ஆரைச் சந்திப்பார். ஆனால் கலைஞரைச் சந்திப்பது இல்லை. ஒரே ஒரு முறைதான் சந்தித்துப் பேசி இருக்கிறார்.

அதனால் கலைஞருக்குப் பிரபாகரன் மீது வருத்தம். இரண்டு பேருக்கும் இடையே லேசான விரிசல். கலைஞரிடம் நல்ல நோக்கம் இருந்து இருக்கிறது.

தமிழ் ஈழ் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்து இருக்கிறது. இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே தொக்கித் தொங்கி நின்ற அரசியல் பிணக்குகள் தான் விரிசலுக்குப் பெரிய காரணமாக அமைந்து விட்டன. அந்த விரிசலில் பிரபாகரன் ஒரு சொக்கட்டான் காயாக மாறிப் போனது தான் வேதனையான விசயம்.




ஆக கலைஞர் தன் பிணக்கு விரிசல் ஆதங்கத்தை வெளிப்படுத்த திராவிடக் கழகத் தோழர்களிடம் நன்கொடைகளைத் திரட்டினார். திரட்டிய தொகையை அப்படியே கொண்டு போய் உமா மகேஸ்வரன், சபாரத்தினம், பாலக்குமார் போன்ற போட்டித் தலைவர்களிடம் கொடுத்து இருக்கிறார்.

எவ்வளவு தொகை என்று தெரியவில்லை. ஆனாலும் 60 இலட்சம் ரூபாய் என்று நம்பகரமான வட்டாரங்கள் சொல்கின்றன. அந்தக் கட்டத்தில் எம்.ஜி.ஆர். இரண்டு கோடி ரூபாயைப் பிரபாகரனுக்குக் கொடுத்து இருக்கிறார்.
(சான்று: http://tamilveangai.blogspot.my/2013/01/blog-post_6935.html)

சரி. அடுத்து தமிழகத்தின் மற்ற மற்றத் தலைவர்கள் ஈழ விடுதலைக்கு தொடர்ந்து உதவிகள் செய்தார்களா. இல்லை என்றுதான் பதில் வருகிறது.

ஏன் என்றால் போட்டிக் குழுத் தலைவர்கள் தமிழகத்தின் தலைவர்களைத் தேடி வரவில்லை. அந்தத் தலைவர்களும் சரியான ஆளாகப் பார்த்து அனுப்பி வைக்கவில்லை. 



ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ஈழ விடுதலைக் குழுக்களுக்கு இடையே பிரிவு பிளவுத் தன்மை ஏற்படுவதற்குத் தமிழகத் தலைவர்களின் போட்டி மனப்பான்மையே முக்கியக் காரணமாக இருந்து இருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. இது உலகத் தமிழர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டிய ஒரு விசயம்.

ஆக யாழ்ப்பாணப் போராளிக் குழுக்களுக்குள் போட்டிப் பூசல்கள் வளர்ந்து விரிந்து போனதற்குத் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் தான் மூல காரணமாக இருந்து இருக்கிறார்கள். இது என் கருத்து. இருந்தாலும் இதை எவராலும் மறுக்க முடியாது என்று என்னால் சொல்லவும் முடியாது.

ஏன் தெரியுங்களா. எம்.ஜி.ஆருக்கு யார் நண்பனோ அவன் கலைஞருக்கு எதிரி.. கலைஞருக்கு யார் நண்பனோ அவன் எம்.ஜி.ஆருக்கு எதிரி. அந்த நேரத்தில் நடந்த கயிறு இழுக்கும் போட்டி.

இப்படித் தான் அப்போது அங்கே போட்டியும் பொறாமைகளும் பரத நாட்டியம் ஆடி இருக்கின்றன. ஆக யாழ்ப்பாணத்து அரசியல் மேடையில் தமிழ்நாட்டு அரசியலும் நுழைந்து கண்ணாமூச்சி விளையாடி இருக்கிறது.

அதனால் பாதிக்கப் பட்டது ஒட்டு மொத்த ஈழத்துத் தமிழர்கள் தான். சந்தோஷப் பட்டது தமிழகத்தின் சில தானைத் தலைவர்கள். இப்போது வருந்தி என்ன பயன். வெள்ளம் அணையை உடைத்துக் கொண்டு போய் விட்டதே. என்ன செய்வதாம்.

தமிழகத்தில் வாழும் தமிழ்ச் சகோதரர்கள் கடைசி நேரத்தில் வந்து உதவி செய்வார்கள் என்கிற ஏக்கத்தில் தமிழக மண்ணைப் பார்த்தவாறே பல்லாயிரம் ஜீவன்கள் யாழ்ப்பாணத்தில் உயிரை விட்டு இருக்கின்றன.

அப்போது எம்.ஜி.ஆர். மேலே இருந்தார். கீழே இறங்கி வர முடியாது. கலைஞர் கீழே இருந்தார். ஆனால் அவர் இறங்கி வரவே இல்லை. பிடித்த முயலுக்கு மூன்றே முக்கால கால் என்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வது. 



துயிலரங்கில் ஓர் உண்ணாவிரதம். இது உலகம் அறிந்த விசயம். என் மீது வழக்குப் போடலாம். ஆனால் எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் ஜெயிக்க முடியாது. அதையும் சொல்லி விடுகிறேன்.

அந்த மனுசன் நினைத்து இருந்தால் மறுபடியும் சொல்கிறேன்; அந்த மனுசன் நினைத்து இருந்தால் தமிழ் ஈழத்தின் வரலாற்றை மாற்றி எழுதி இருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. பரவாயில்லை. என்ன செய்வது. அவரால் முடியவில்லை.

ஒன்று மட்டும் உண்மை. பல்லாயிரம் உயிர்களின் சப்தநாடிகள் இன்னும் ஈனக் குரல்களை எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. அந்தப் பாவம் யாரையும் சும்மா விடாது. துரோகம் செய்தவர்களையும் அவர்கள் சார்ந்த வாரிசுகளையும் அழித்துவிடும். 



ஓர் உயிர் ஈருயிர்கள் இல்லைங்க. இரண்டு லட்சம் உயிர்கள். அத்தனையும் மனித உயிர்கள். தமிழர்களின் உயிர்கள். ஆக இப்போது உலக இரத்தங்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து அழுகின்றன.

அழுது என்ன பயன். காப்பாற்ற வேண்டிய நேரத்தில் காப்பாற்றாமல் இப்போது ஒப்பாரி வைத்து என்ன நன்மை. ஒரு சொட்டு விளக்கெண்ணையும் கிடைக்கப் போவது இல்லை.

இந்திரா காந்தி என்ன உதவிகள் செய்தார் என்பதைப் பற்றி நாளைய கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

(தொடரும்)

15 ஜூலை 2017

கர்மவீரர் காமராஜர்

காலங்கள் மறக்காத ஒரு கருப்புத் தங்கம்
ஞாலங்கள் மறக்காத ஒரு சத்தியச் சிங்கம்

 

கர்ம வீரர் காமராஜர் இந்தியாவிற்கு இரு பிரதமர்களை உருவாக்கித் தந்த ஓர் இந்தியச் சிங்கம். படிக்காத மேதையாய் வாழ்ந்து மறைந்த ஒரு காந்தியச் சங்கம்.

ஆறாம் வகுப்பு வரை படித்தவர். ஆங்கிலம் அறவே தெரியாது. ஆனாலும் அவரிடம் பார் புகழும் பவித்திரமான மனிதநேயம் மட்டும் மறையாமல் வாழ்ந்து வந்தது.

அப்போது தமிழகத்தின் முதல்வராகக் கோலோச்சிய சாமானிய மனிதர். இப்போது பட்டி தொட்டிகள் எல்லாம் புகழப்படும் ஓர் ஏழைப் பங்காளர்.

இறக்கும் போது இரு கதர் வேட்டிகள். இரு பருத்திச் சட்டைகள். வெறும் 83 ரூபாய் ரொக்கம். சுத்தத்திலும் சுத்தமான கரங்கள். கர்மவீரர் காமராஜர் என்பவர் பொன் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு வரலாற்று நாயகன். கைகூப்புகிறோம் காமராஜரே!



மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதரும் தங்களின் பிறப்பிற்கான அடையாளத்தைப் பதித்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வகையில் தன்னுடைய பிறப்பையும் தன்னுடைய செயலையும் அர்த்தம் உள்ளதாக மாற்றி அமைத்துக் காட்டியவர் தான் பெருந்தலைவர் காமராஜர்.

இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்பதை நம்பாத ஒரு தலைமுறையும் வந்து விட்டது. அந்த நிலையில் ஓர் அரசியல்வாதி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்து வாழ்ந்தவர் இந்த அருந் தலைவர் காமராஜர்.

உலக அரசியலைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். நாட்டைப் பார்த்துக் கொள்வதற்குப் பதிலாகத் தங்கள் சொந்தங்களை மட்டுமே பார்த்துக் கொள்ளும் அரசியல் தலைவர்கள் தான் நிறையவே தெரிய வருவார்கள்.

பதவி புகழ் சுயநலம் இந்த மூன்றுமே ஒரே குட்டையில் ஊறிய தொற்று நோய்கள். நல்ல அரசியலைச் சேதப் படுத்தும் நோய்க் கிருகிகள் என்றும் சொல்லலாம். 



அந்த மாதிரியான கிருமிகளுடன் அன்றாட வாழ்க்கை நடத்தும் தலைவர்கள் வாழும் காலத்தில் அத்திப் பூத்தால் போல ஒரு சில கோகினூர் வைரங்களும் தோன்றி மறைவது உண்டு. பொதுநலத்தை மட்டுமே உயிராகப் போற்றி உச்சி முகர்ந்து பார்ப்பதும் உண்டு.

அரசியலில் லஞ்சம், அதிகாரத்தில் ஊழல், சுயநலத்தில் பொதுநலப் போர்வைகள். அப்படிப்பட்ட வக்கிரமான இடத்தில் காமராஜரைப் போல ஒரு சுத்தமான மாமனிதர் வாழ்ந்து இருக்கிறார் என்பது அதிசயத்திலும் அதிசயம்.

ஆறாம் வகுப்பு வரை படித்த ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான கதையைக் கேட்டு இருக்கிறீர்களா. உண்மையிலேயே அதிசயம். அந்தக் கதையை இப்போது கேளுங்கள்.

காமராஜர் இருக்கிறாரே இவர் ஆங்கில மொழியே தெரியாமல் அரசியல் நடத்தியவர். 



மூத்தத் தலைவர்கள் அரசியலில் நீண்ட நாட்களுக்குப் பதவிகள் வகிக்கக் கூடாது என்று சொல்லி ஒரு சட்டத்தையும் கொண்டு வந்தவர். அதற்கு ஓர் உதாரணமாக தன் முதலமைச்சர் பதவியையே விட்டுச் சென்றவர். நம்ப முடிகிறதா.

கல்வியே ஒரு தேசத்தின் கண்களைத் திறக்கும் என்று கூறி பட்டித் தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர். எல்லா ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்குப் போக வேண்டும் என்று புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர்.

முதலமைச்சராக இருந்த போது வறுமையில் வாடிய தன் தாய்க்குச் சிறப்புச் சலுகைகள் தராதவர். சினிமாவில் தான் இது போன்ற கதாபாத்திரங்களைப் பார்க்க முடியும். ஆனால் தமிழகத்திலும் நடந்து இருக்கிறது.

நம்ப முடியாத நேர்மை நிலைப்பாட்டில் வாழ்ந்து இருக்கிறார். அதனால் இறவாப் புகழும் பெற்றார். அந்த உன்னத மனிதர் தான் கர்மவீரர் காமராஜர்.



காமராசரைப் போன்றத் தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து இருந்து இருந்தால் தரணிப் போற்றும் அளவுக்கு மனிதநேயம் உயர்ந்து போய் இருக்கலாம். சிகரம் பார்த்து இருக்கலாம் என்பது என் கருத்து.

கர்ம வீரர் காமராஜர் என்கிற அந்த மனிதர் சாமான்ய ஆசாபாசங்களைக் கடந்து போனவர். கடைசி காலத்தில் இரண்டே இரண்டு வேட்டிகள் மட்டும் அவரிடம் இருந்தனவாம். அவற்றை இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். என்னே மனிதம். என்னே இலட்சியம்.

ஒரு செருகல். 1990களில் சிங்கை வானொலியில் நண்பர் அழகிய பாண்டியன் பணியாற்றிய காலத்தில் வானம் வசப்படும் எனும் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அதில் இருந்து காமராஜரைப் பற்றிய சில அரிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.

இன்றும்கூட கிங் மேக்கர் என்று உன்னதமாய் அழைக்கப் படுகிறார் காமராஜர். 1903-ஆம் ஆண்டு ஜுலை 15ஆம் தேதி தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் - சிவகாமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். 



ஐந்து வயதில் திண்ணைப் பள்ளியில் சேர்க்கப் பட்டார். ஏனாதி நாயனார் வித்யாலாயா தொடக்கப் பள்ளியில் பயின்றார். இளம் வயதில் கபடி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

இளம் வயதிலேயே அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டார். தலைவர்களின் உரைகளைக் கேட்பதில் அதிக ஆர்வம். 1909 ஆம் ஆண்டு காமராஜருக்கு ஆறு வயது. 

அப்போது காமராஜரின் தந்தையார் காலமானார். தந்தையை இழந்த காமராஜர் தன் 12-வது வயதில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை. அதன் பின்னர், ஒரு ஜவுளிக் கடையில் காமராஜர் வேலை பார்த்தார்.

இளம் வயதிலேயே தீவிரமான நாட்டுப்பற்று. நாட்டின் விடுதலைக்காக இந்திய மக்கள் போராடி வந்தார்கள். அவர்களை வெள்ளையர்கள் சிறை பிடித்தார்கள். கொடுமைப் படுத்தினார்கள்.

இந்த நிலையில்தான் 1920-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நடத்திய ஒத்துழையாமை இயக்கம்; சட்ட மறுப்பு இயக்கங்களில் தீவிரம் காட்டினார்.



திருமணம் செய்து வைத்தால் காமராஜர் குடும்பத்தைக் கவனிப்பார். காமராஜருக்குப் பொறுப்பு வரும் என அவருடைய தாயார் சிவகாமி அம்மாள் நினைத்தார். காமராஜரின் தாய்வழி மாமனாருடன் சேர்ந்து திருமண ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்.

இதனை அறிந்த காமராஜர் தனக்குத் திருமணமே வேண்டாம் என மறுத்து விட்டார். திருமண விசயத்தில் அவர் மிகவும் உறுதியாக இருந்ததால் அவருடைய வாழ்க்கையில் திருமணம் எனும் சொல்லே அடிபட்டுப் போனது.

1930-ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகம். அதில் கலந்து கொண்டார். சத்தியம் சிணுங்கியதால் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம். அதன் பிறகு மேலும் ஐந்து முறை சிறைவாசங்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் எட்டு ஆண்டுகள் சிறைவாசம்.

1940-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப் பட்டார். அந்தப் பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப் பட்டார். 



அடுத்த வந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதல் முறை.

இருந்தாலும் தலை சிறந்த தலைமைத்துவத்தைத் தமிழகத்திற்கு வழங்கினார். அவருடைய காலக் கட்டத்தில் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவிலேயே மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கப் பட்டது. பெருமையாக இருக்கிறது. இப்போது பாருங்கள். எல்லாமே தலைகீழாக மாறிப் போய் விட்டது

முதலமைச்சர் ஆனதும் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி. சுப்பிரமணியம், எம். பக்தவத்சலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரைவையில் சேர்த்துக் கொண்டார். அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அப்போது அவர் தன் அமைச்சர்களுக்குச் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா.

“பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள். அவை எவ்வளவு சின்னதாக இருந்தாலும் பரவாயில்லை. அதனைத் தீர்ப்பதற்கான வழி முறைகளைத் தேடுங்கள். மக்கள் நிச்சயமாக மனநிறைவு அடைவார்கள்”




அவருடைய ஆட்சிக் காலத்தில் கல்வித் துறையிலும் சரி; தொழில் துறையிலும் சரி; தமிழ்நாடு துரிதமான வளர்ச்சிகளைக் கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய புதிய பள்ளிகளைக் கட்டுவதற்குத் திட்டங்களை வகுத்தார். நிறைவேற்றியும் காட்டினார்.

பழைய பள்ளிகள் சீர் செய்யப் பட்டன. ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தொடக்கப் பள்ளி. ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஓர் உயர்நிலைப் பள்ளி. 11-ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி. ஏழைச் சிறுவர்கள் பசியால் வாடக் கூடாது. அதனால் மதிய உணவு வழங்கும் உன்னதமான திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.

சாதி வகுப்பு, ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. அந்த வகையில் எல்லாப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார். பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழைப் போதனா மொழியாக்கினார். அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார்.

அரசாங்க அலுவலகங்களில் தமிழ் தட்டச்சு இயந்திரங்களை அறிமுகம் செய்தார். நீதிமன்றங்களில் வழக்குகளைத் தமிழில் நடத்த ஊக்குவிப்பு செய்தார்.

அவரின் ஆட்சியின் போது விவசாயம் அபிரிதமான வளர்ச்சி கண்டது. வைகை அணை, மணிமுத்தாறு அணை, கீழ் பவானி அணை, பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டுத் திட்டங்கள் உருவாகின.



தொழில் துறையிலும் முத்திரை பதித்தார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி, சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை, சென்னை இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என சில பல தொழில்கள் தமிழகத்தில் உருவாக்கம் கண்டன. சிறந்த ஆட்சி.

அதனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்து எடுக்கப் பட்டார். அடுத்து அவர் செய்தது அரசியலுக்கே ஒரு புதிய இலக்கணம். புதிய பரிமாணம்.

மூத்தத் தலைவர்கள் அனைவரும் தங்களின் அரசியல் பதவிகளைச் துறப்பு செய்ய வேண்டும். கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். அப்படி ஒரு திட்டத்தைக் காமராஜர் கொண்டு வந்தார். பிரதமர் நேருவிடம் சிபாரிசு செய்தார்.

அதைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, ஜெகஜீவன்ராம், மொரார்ஜி தேசாய், எஸ்.கே. பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்கள் பதவி விலகினார்கள்.

அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு காமராஜருக்கு வழங்கப் பட்டது.



அதற்கு அடுத்த ஆண்டு நேரு மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்.

சாஸ்திரியும் இரண்டே ஆண்டுகளில் மரணத்தைத் தழுவினார். நேருவின் மகள் இந்திரா காந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர். அப்போது இந்திரா காந்திக்கு 48 வயது.

அந்த இரண்டு தலைமைத்துவ மாற்றங்களையும் அவர் மிகச் சரியாக மிக நேர்த்தியாக செய்து முடித்ததால் காமராஜரை “கிங்மேக்கர்” என்று பத்திரிக்கையாளர்களும் அரசியல்வாதிகளும் புகழாரம் செய்தனர். 

இப்படி தமிழ்நாட்டில் மெச்சத் தக்க ஆட்சியைத் தந்த காமராஜர் தன்னுடைய கடைசி மூச்சு வரை சமூகத் தொண்டிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார். வாழ்ந்தார்.



1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி தம் 72-ஆம் வயதில் காந்தி பிறந்த நன்னாளில் காமராஜர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். அதற்கும் அடுத்த ஆண்டு இந்திய அரசு அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருதை வழங்கிச் சிறப்பு செய்தது.

மக்கள் தொண்டையே மகேசன் தொண்டாக நினைத்து வாழ்ந்தவர் காமராஜர். அதனால் தனக்கென ஒரு குடும்பத்தை அவர் அமைத்துக் கொள்ளவே இல்லை. அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.

தவிர சிறு வயதிலேயே கல்வியைத் தொடர முடியாததை நினைத்துப் பல முறை வருந்தி இருக்கிறார். அவர் சிறைக்குச் சென்ற போன சமயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்களை வாசிக்க கற்றுக் கொண்டு இருக்கிறார்.

காமராஜர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். இருந்தாலும் அவருடைய தாயார் விருதுநகரில் அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு வீட்டில் வாழ்ந்தார் என்றால் பெரும் வியப்பு இல்லீங்களா.

தன் குடும்பம் என்றாலும் தன் தாயாருக்குக் கூட எந்தச் சலுகையும் அவர் வழங்கவில்லை. கடைசி காலத்தில் அவர் தனக்கென வைத்து இருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா...



இரு கதர் வேட்டிகள் இரு சட்டைகள். சில புத்தககங்கள். அவ்வளவுதான். இதை எழுதும் என் மனம் கலங்குகிறது. இப்படியும் ஒரு மனிதரா. இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்து இருக்கிறாரா.

முதலமைச்சர் எனும் பதவிக்கு உரிய பந்தா அவரிடம் கொஞ்சமும் இருந்தது இல்லை. எந்த நேரத்திலும் எவரும் அவரைச் சந்தித்துப் பேச முடியும். அதனால்தான் அவரைக் கர்ம வீரர் என்றும் கருப்பு காந்தி அன்றும் இன்றும் தமிழக வரலாறு போற்றுகிறது. இனியும் போற்றும்.

அந்த மாதிரியான ஒரு கண்ணியமான ஒரு நேர்மையான ஒரு சுத்தமான இன்னொரு தலைவரைத் தமிழக வரலாறு மட்டும் அல்ல இந்த உலக வரலாறும் இனி சந்திக்குமா. தெரியவில்லை.

காமராஜர் எனும் கர்மவீரர் மறக்க முடியாத ஒரு தமிழர். தமிழர்களின் வரலாற்றில் அவர் ஒரு சகாப்தம்.