25 ஜூலை 2021

ரந்தாவ் லின்சம் தோட்டத் தமிழர்கள் கண்ணீர் வரலாறு - 1870

தமிழ் மலர் - 25.07.2021

1870-ஆம் ஆண்டுகளில் மலாயா, நெகிரி செம்பிலான், ரந்தாவ், லின்சம் தோட்டம் (Linsum Estate); மலாயாவிலேயே மிகப் பழமையான தோட்டமாக விளங்கியது. மலாயாவின் முன்னோடித் தோட்டங்களில் ஒன்றாகவும் திகழ்ந்தது. கூட்டாட்சி மலாய் மாநிலங்களில் (Federated Malay States) இருந்த காபி ரப்பர் தோட்டங்களில் மிகவும் பிரபலமான தோட்டமாகவும் வரலாறு படைத்து உள்ளது.

முதன்முதலில் ரந்தாவ், லின்சம் தோட்டத்தில் காபி பயிர் செய்தார்கள். லாபகரமாக அமையவில்லை. அதனால் காபி தோட்ட உரிமையாளர்கள் தங்கள் கவனத்தை ரப்பரின் பக்கம் மாற்றிப் பார்த்தார்கள்.


1870 - 1900-ஆம் ஆண்டுகளில் அந்தப் பகுதிகளில் நிறையவே மரவெள்ளி, சர்க்கரைவல்லி, காபி, வாழைத் தோட்டங்கள் இருந்தன. ஆண்டுகளைக் கவனியுங்கள்.

காபி ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்னர் அங்கு மரவெள்ளி, சர்க்கரைவல்லி உணவுப் பயிர்கள் பயிர் செய்யப்பட்டன. தென்னை, அன்னாசி, கரும்பு, கொக்கோ, மிளகு தோட்டங்களும் இருந்தன. அந்தத் தோட்டங்களில் மலாயா தமிழர்கள் தான் வேலை செய்து இருக்கிறார்கள்.

1900-ஆம் ஆண்டில் பேராக், கிரியான் (Kerian); புரவின்ஸ் வெல்லஸ்லி (Province Wellesley) மாவட்டங்களில் 260,000 ஹெக்டர் கரும்பு பயிர் செய்யப்பட்டது. அதையும் நினைவில் கொள்வோம்.


மலாயாவைப் பற்றி ஆங்கிலேயர்கள் எழுதிச் சென்ற வரலாற்று நூல்களில் ரந்தாவ், லிங்கி, லுக்குட், போர்டிக்சன் பற்றி அதிகமாகவே எழுதி இருக்கிறார்கள். மலாக்கா நீரிணையைப் பயன்படுத்திய படகுகள்; கப்பல்கள்; சிங்கப்பூரில் இருந்து பினாங்கிற்குச் செல்லும் போது லிங்கி, லுக்குட், போர்டிக்சன் படகுத் துறைகளை அதிகமாகப் பயன்படுத்தி இருக்கின்றன.

லிங்கி முகத்துவாரம் அதிக அலைகள் இல்லாத இடமாக இருந்து உள்ளது. பாய்மரக் கப்பல்கள்; நீராவிக் கப்பல்கள்; அதன் பின்னர் வந்த டீசல் கப்பல்கள்; அணைவதற்கு லிங்கி லுக்குட் பகுதிகள் பாதுகாப்பான படகுத் துறைகளாக விளங்கி உள்ளன. ஒரு செருகல்.


முதன்முதலில் மலாக்காவில் மலாக்கா சுல்தானகம் ஆட்சியில் இருந்த போது மாட்டு வண்டிகள் மலாயாவில் அறிமுகம் செய்யப் பட்டதாகச் சொல்லப் படுகிறது.

1900-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப் பட்டதும் திரவ ரப்பர் பாலையும்; உலர்ந்த ரப்பர் பொருள்களையும் கொண்டு செல்வதற்கு மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் படம் எடுத்து இருக்கிறார்கள்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பழஞ்சுவடிக் காப்பகம்; சிங்கப்பூர் பல்கலைக்கழகப் பழஞ்சுவடிக் காப்பகம்; நெதர்லாந்து லெய்டன் பல்கலைக்கழகப் பழஞ்சுவடிக் காப்பகம் போன்ற பழம்சுவடி காப்பகங்களில், மலாயா காபி ரப்பர் தோட்டங்களைப் பற்றிய சில அரிய படங்கள் உள்ளன. அந்தப் பல்கலைக்கழகங்களில் ஓர் ஆய்வாளராகப் பதிவு செய்து அந்தப் படங்களை மீட்டு எடுத்து உள்ளேன். 


அண்மைய காலங்களில் வாட்ஸ் அப்; பேஸ்புக் ஊடகங்களில் மலாயா தமிழர்களைப் பற்றிய அரிய வரலாற்றுப் படங்கள் வைரலாகி வருவதைப் பார்த்து இருக்கலாம். அவற்றில் பெரும்பாலான படங்களை அடியேன் மீட்டு எடுத்த படங்கள். பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த வகையில் நமக்கு மேலும் ஒரு படம் கிடைத்து உள்ளது. அபூர்வமான வரலாற்றுப் படம். எடுக்கப்பட்ட இடம், நெகிரி செம்பிலான், லிங்கி, லுக்குட் தோட்டம். கொண்டு செல்லப்படும் பொருள்கள் மரவெள்ளிக் கிழங்குகள். காலவெளி: 1870 - 1900. அந்தப் படத்தைப் பார்க்கும் போது மனசு ரொம்பவும் வேதனைப் பட்டது.

முதுகு எலும்பு முறிந்த தமிழர்கள்; இடுப்பு எலும்பு நகர்ந்த தமிழர்கள்; கழுத்து எலும்பு தகர்ந்த தமிழர்கள்; கறுப்புத் தோல் கிழிந்த தமிழர்கள். இடுப்போடு ஒட்டிய வேட்டி. மேலே சட்டை இல்லை. சப்பாத்து இல்லாத வெறும் கால்கள்.

வேட்டிக் கோவணங்களில் ஓட்டை விழுந்து; விழுந்தோம் கவிழ்ந்தோம் என்று படகுப் பாலங்களில் நடந்து; முக்கால் பீக்கள் மூட்டைகளைச் சுமக்கும் காட்சி. 


இன்று நேற்று நடந்தது அல்ல. மலாயாவில் கித்தா மரங்கள் வருவதற்கு முன்னதாகவே மலாயா காடுகளில் அரங்கேற்றம் கண்ட உழைப்புகளின் உயிர்த் தோரணங்கள்.

நல்ல வேளை. இவர்களை வைத்துப் படம் பிடித்து; காணொலி தயாரித்து; மித்ராவிடம் பேரம் பேசி; பணம் சம்பாதிக்கும் தமிழ்ப் பெருமகனார்கள் அப்போது இல்லாமல் போய் விட்டார்கள்.

அஞ்சு கிலோ அரிசி. இரண்டு கிலோ சீனி. ஒரு கிலோ உப்பு. ஒரு போத்தல் சமையல் எண்ணெய். பத்து பாக்கெட் மெகி மீ. அம்புட்டுத்தான். பத்து வீட்டுக்குக் கொடுத்து; இருபது படங்கள் எடுத்து; முப்பது வாட்ஸ் அப் குழுக்களில் போட்டு; பெருமை பேசும் கொரோனா காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். போதாத காலம். விடுங்கள்.

ஆனால் உண்மையாக வெளிச்சம் விளம்பரம் இல்லாமல்; அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல்; சொந்தக் காசைப் போட்டு உதவி செய்யும் நல்ல நல்ல மனிதர்களும் நம்முடன் பயணிக்கின்றார்கள். புடம் போட்ட தங்கங்கள். இவர்களுக்கு முதல் மரியாதை. 


வாட்ஸ் அப்; பேஸ்புக் ஊடகங்களில் ’என்னையும் பாருங்கள் என் அழகையும் பாருங்கள்’ என்று செல்பி எடுத்துப் போடும் முகக் கவரிகளுக்கு இரண்டாம் மரியாதை. மன்னிக்கவும்.

1900-ஆம் ஆண்டில் லிங்கி ஆற்றில்; படகுகள் அணையும் இடத்தில் எடுக்கப்பட்ட வரலாற்றுப் படத்திற்கு வருகிறேன். காபி மரவெள்ளி மூட்டைகளைப் படகுகள் மூலமாகப் போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து நிற்கும் கப்பல்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

லுக்குட் தோட்டத்தில் வேலை செய்த தமிழர்கள் குழுக்கள் குழுக்களாக வேலை செய்தார்கள். ஒரு குழுவினர் விளச்சல் பொருள்களை மாட்டு வண்டிகளில் ஏற்றி ஒரு குறிப்பிட்ட இடம் வரைக்கும் கொண்டு செல்வார்கள்.

பின்னர் அந்தப் பொருள்களை மாற்றும் இடம் வரும். அது ஒரு பாலம்; ஒரு முச்சந்தி; ஓர் ஆலயம்; ஓர் ஆறு போன்ற இடமாக இருக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட இடம் வரையில் ஒரு குத்தகையாளரின் பொறுப்பு. அடுத்த இடம் வேறு ஒரு குத்தகையாளரின் பொறுப்பு. பொதுவாகத் துறைமுகம் அல்லது ஆற்றங்கரைகளில் படகுகள் அணையும் இடமாக இருக்கும்.

மாட்டு வண்டிகளில் கொண்டு வரப்படும் பொருள்கள் படகுகளில் ஏற்றப்பட்டு பின்னர் போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து இருக்கும் கப்பல்களில் ஏற்றப்படும்.

1905-ஆம் ஆண்டில் லுக்குட் தோட்டக் குழுமம் புனரமைப்பு செய்யப் பட்டது. லிங்கி தோட்டங்கள் என்ற பெயரில், பெரிய அளவில் ரப்பர் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் காபி சாகுபடி செய்வதும் நிறுத்தப் பட்டது. 1906-ஆம் ஆண்டில் ரப்பர் உற்பத்தி தொடங்கியது.

1876-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களைக் கொண்டு வருவதற்கு  இந்தியாவின் பிரிட்டிஷ் அரசாங்கமும்; மலாயாவின் பிரிட்டிஷ் அரசாங்கமும் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டன.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1878-ஆம் ஆண்டில் தமிழர்கள் மலாயா காபி தோட்டங்களில் வேலை செய்ய வந்தனர். அதற்கு முன்னர் 1840-ஆம் ஆண்டுகளிலேயே ஆண்டுக்கு 2000 பேர் அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கு எல்லாம் முன்பாக 1780-ஆம் ஆண்டுகளில் பினாங்கு, சிங்கப்பூர் தீவுகளில் காடுகளை அழிக்கவும்; சாலைகள் அமைக்கவும் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டார்கள். பலருக்கும் தெரியாத விசயமாக இருக்கலாம்.

இந்த உண்மையைச் சொல்வதற்கு பிரான்சிஸ் லைட் இப்போது இல்லை. ஆழ்ந்த உறக்கம். தட்டி எழுப்ப வேண்டும். அப்படியே அவர் எழுந்து வந்தாலும் அவரைப் பாதி வழியிலேயே மறித்து மண்டையைக் கழுவி விடுவார்கள்.

உலகின் மூத்த குடிமக்களின் மூத்தத் தலைவர் என்று புகழாரம் சூட்டி, அங்கேயே வரலாற்றை மாற்றி விடுவார்கள். உலகில் பல இடங்களில் நடக்கும் கோல்மால் குளறுபடிகளைத் தான் சொல்ல வருகிறேன். சிலருக்கு கோப தாபங்கள் வரலாம். பொறுப்பு நான் அல்ல. பிரான்சிஸ் லைட்.

1870-ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் நெகிரி செம்பிலான் லுக்குட் லிங்கி தோட்டம்; பேராக் கோலாகங்சார்; பாடாங் செராய்; புரோவின்ஸ் வெல்லஸ்லி நிபோங் திபால்; மலாக்கோப் தோட்டம் பினாங்கு; போன்ற இடங்களிலும் காபி பயிர் செய்யப் பட்டது. அங்கேயும் தமிழர்கள் போய் இருக்கிறார்கள்.

ஆனால், 1878-ஆம் ஆண்டில், நெகிரி செம்பிலான், ரந்தாவ், லின்சம் காபி தோட்டத்திற்குத் தான் தமிழர்கள் முதன் முதலில் கொண்டு வரப்பட்டார்கள் என்று தெரிய வருகிறது.

ராத்போர்ன் அம்ப்ரோஸ் (Rathborne, Ambrose) எனும் ஆங்கிலேயர் எழுதி இருக்கும் ’மலாயா தீபகற்பத்தின் மாநிலங்களில் பதினைந்து ஆண்டுகள்’ (Camping and Tramping in Malaya: fifteen years' pioneering in the native states of the Malay peninsula) எனும் நூலில் பக்கம்: 85-இல் இந்தப் படங்கள் உள்ளன. இருப்பினும் 1898-ஆம் ஆண்டில் தான் அந்தப் புத்தககத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்தப் படங்கள் ரந்தாவ் லிங்கி தோட்டத்தில் எடுக்கப்பட்டு இருக்கலாம் எனும் ஒரு கருத்து உள்ளது. எனினும் ரந்தாவ், லின்சம் தோட்டத்தில் காபி பயிர் செய்வதற்காகக் காடுகள் அழிக்கப்படும் படமும் கிடைத்து உள்ளது. ஆகவே இந்தப் படம் லின்சம் தோட்டத்தில் தான் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் ரந்தாவ், லின்சம் தோட்டமும்; ரந்தாவ் லிங்கி தோட்டமும் மிக அருகாமையில் இருக்கும் பக்கத்து பக்கத்து தோட்டங்கள். ஆக மலாயா தமிழர்கள், 1878-ஆம் ஆண்டில், அந்தப் பகுதியில் வேலை செய்து இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிய வருகிறது.

லுக்குட் தோட்டத்தின் பழைய பெயர் லிங்கி காபி கம்பெனி (Linggi Coffee Company). அங்கு லைபீரியா காபி பயிர் செய்யப்பட்டது. ஆக அந்தக் கம்பெனியின் பெயரில் இருந்து ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம். காபி தான் முதன்மையான  விளைச்சல்.

நெகிரி செம்பிலானில் மட்டும் அல்ல. 1870-ஆம் ஆண்டுகளில் சிலாங்கூர், பேராக், பினாங்கு, ஜொகூர், சிங்கப்பூர் பகுதிகளிலும் காபி பயிர் செய்யப்பட்டு உள்ளது. 1896-ஆம் ஆண்டு வாக்கில் தான் முதன் முதலாக மலாயாவில் ரப்பர் பயிர் செய்யப்பட்டது.

ஆக 142 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயாவுக்கு வந்த தமிழர்கள்; மலாயா காபி தோட்டங்களில் வேலை செய்து இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி ஆகின்றது.

மலாயா தமிழர்கள் என்பவர்கள் மலையூர் மலாயாவிற்கு நேற்று முந்தா நாள் வந்தவர்கள் அல்ல. ஒன்றை நினைவில் கொள்வோம். மனுசர்கள் நுழைய முடியாத பாசா காடுகளின் கித்தா தோப்புகளில் வாழ்ந்தவர்கள் தான் மலாயா தமிழர்கள்.

மலைக் காடுகளை அழித்துத் திருத்திக் காபி, மிளகு, கொக்கோ, ரப்பர் தோட்டங்களைப் போட்டவர்கள் தான் மலாயா தமிழர்கள். அவர்கள் உருவாக்கிக் கொடுத்த கட்டுமானத்தில் சொகுசு காண்பவர்கள் சிலரும் பலரும் இருக்கிறார்கள்.

உழைத்து உழைத்து ஓடாய்ப் போன அந்த மலாயா தமிழர்களா வந்தேறிகள்? இவர்கள் உழைத்துப் போட்டதை வயிறு முட்ட வக்கணையாகச் சாப்பிட்டுக் கொண்டு; சொகுசாக வாழ்ந்து கொண்டு; வாய்க் கூசாமல் வக்கிரமாக பேசுகிறது ஒரு கூட்டம். இனவாதத்தின் ஓர் இடைச் செருகல். மனம் கலங்குகிறது. வேதனை.

மலாயா தமிழர்கள் நேற்று வந்த வந்தேறிகள் என்று சிலர் சொல்கிறார்கள். என்ன சொல்வது? அவர்களை நன்றி கெட்டவர்கள் என்று சொல்ல மனசு வரவில்லை.

கரை தாண்டி வந்த தமிழர் இனம் இங்கே இரண்டாம் கிலாஸ் இனமாக தரம் பிரித்துப் பார்க்கப் படுகிறது. மூன்றாம் கிளாஸுக்குத் தள்ளப் படலாம். நமக்குள் இனியும் ஏனோ தானோ போக்குகள் வேண்டாம்.

நாம் நமக்குள் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒற்றுமை இல்லாததால் தான் நம்மை வந்தேறிகள் என்று சொல்லிச் சீண்டிப் பார்க்கிறார்கள்.

நமக்கு இப்போது மிக முக்கியம் காசு பணம் அல்ல. மிக முக்கியம் சொத்து சுகம் அல்ல. ஒன்றே ஒன்றுதான். ஒற்றுமை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.07.2021

சான்றுகள்:

1. Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources Page 480.

2. Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula. Author(s): Rathborne, Ambrose B. British Library shelfmark: Digital Store 010055.ee.10
London. Date: 1898. Publisher: Swan Sonnenschein

3. http://www.arabis.org/index.php/articles/articles/plantation-history/the-malaysian-plantation-industry-a-brief-history-to-the-mid-1980s

4. http://seasiavisions.library.cornell.edu/catalog/seapage:233_481

5. https://coffeecultures.org/coffee-planting-in-colonial-malaya/

பின்னூட்டங்கள்

மகாலிங்கம் படவெட்டான் பினாங்கு: நன்றி வாழ்த்துகள் ஐயா. அற்புதம். நல்ல ஆழமான கருத்துக் கொண்ட பதிவு.

"செய்யும் தொழிலே தெய்வம்" என்பதற்கு ஏற்ப மிக மிக நேர்மையாக உழைத்த நம் முன்னோர்களுக்கு இன்றைய ஆட்சி கொடுக்கும் பட்டம் "வந்தேறிகள்"...

இந்த மண்ணில் உரமாகக் கிடக்கும் நமது மூதாதையர்களின் மதிக்கத் தெரியாத மூடர்களிடையே சிக்கித் தவிக்கிறோம். வாய்த்ததும் சரியில்லை. நம்மை அனாதையாகத் தவிக்க விட்டு விட்டான்.

வந்தவரும் அதி சுயநலப் போக்கில் நம்மை ஆட்டிப் படைக்கிறான். சோதனை மேல் சோதனை போதுமடா சாமி. 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️

கரு. ராஜா: கட்டுரையைப் படித்தேன். அருமை ஐயா. நீங்கள் மட்டும் இல்லை என்றால் ஏப்பம் விட்டுவிடுவார்கள். நீங்கள் புள்ளி விவரத்தோடு சொல்வதற்கு நன்றி ஐயா. பாராட்டுக்கள்.

வெங்கடேசன்: சோகமான தகவல்






 

24 ஜூலை 2021

1870-ஆம் ஆண்டு ரந்தாவ் லுக்குட் தமிழர்கள் கண்ணீர் வரலாறு

இடுப்போடு இழுத்துக் கட்டிய வேட்டி. அந்த வேட்டிக் கோவணத்தில் ஒட்டுப் போட்ட ஓட்டைகள். உடம்போடு ஒட்டிக் கொண்ட ஒரு பொட்டுத்துணி. சப்பாத்து இல்லாமல் ஒடிந்து விழும் ஒல்லிக் கால்கள். தலையில் முக்கால் பீக்கள் மரவெள்ளி மூட்டை. விழுந்தோம் கவிழ்ந்தோம் என்று படகுப் பாலங்களில் மூட்டைகளைச் சுமக்கும் கண்ணீர்க் காட்சி.

அவர்கள்தான் முதுகு எலும்பு முறிந்த லுக்குட் தமிழர்கள். இடுப்பு எலும்பு நகர்ந்த லிங்கி தமிழர்கள். கழுத்து எலும்பு தகர்ந்த லின்சம் தமிழர்கள். கறுப்புத் தோல் கிழிந்த ரந்தாவ் தமிழர்கள்.
 


இன்று நேற்று நடந்தது அல்ல. மலாயாவில் கித்தா மரங்கள் வருவதற்கு முன்னதாகவே மலாயா காடுகளில் அரங்கேற்றம் கண்ட உழைப்புகளின் உயிர்த் தோரணங்கள்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பழஞ்சுவடிக் காப்பகம்; சிங்கப்பூர் பல்கலைக்கழகப் பழஞ்சுவடிக் காப்பகம்; நெதர்லாந்து லெய்டன் பல்கலைக்கழகப் பழஞ்சுவடிக் காப்பகம் போன்ற பழம்சுவடி காப்பகங்களில், மலாயா காபி ரப்பர் தோட்டங்களைப் பற்றிய சில அரிய படங்கள் உள்ளன. அந்தப் பல்கலைக்கழகங்களில் ஓர் ஆய்வாளராகப் பதிவு செய்து வரலாற்றுப் படங்களை மீட்டு எடுத்து வருகிறோம். 


அந்த வகையில் அண்மையில் நமக்கு ஒரு படம் கிடைத்து உள்ளது. ஒரு வரலாற்றுப் படம். எடுக்கப்பட்ட இடம்: நெகிரி செம்பிலான், லிங்கி, லுக்குட் தோட்டப் படகு துறை. காலவெளி: 1870 - 1900. பொருள்கள்: மரவெள்ளிக் கிழங்குகள்.

அந்தப் படத்தைப் பார்க்கும் போது மனசு ரொம்பவும் வேதனைப் பட்டது. இன்று நேற்று நடந்தது அல்ல. மலாயாவில் கித்தா மரங்கள் வருவதற்கு முன்பாகவே மலாயா காடுகளில் அரங்கேற்றம் கண்ட வரலாற்றுத் தோரணங்கள்.

அந்தப் படம் 1900-ஆம் ஆண்டில் லிங்கி ஆற்றில், படகுகள் அணையும் இடத்தில் எடுக்கப்பட்டது. படகுகள் மூலமாக போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து இருக்கும் கப்பல்களுக்கு அந்த மூட்டைகளை எடுத்துச் செல்கிறார்கள்.

உழைத்து உழைத்து ஓடாய்ப் போன இவர்களா வந்தேறிகள்? இவர்கள் உழைத்துப் போட்டதை வயிறு முட்ட வக்கணையாகச் சாப்பிட்டு; சொகுசாக வாழ்ந்து விட்டு வாய்க் கூசாமல் வக்கிரமாக பேசுகிறது ஒரு கூட்டம். இனவாத மதவாதத்தின்  இடைச் செருகல். வேதனை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.07.2021

1. Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources Page 480.

2. Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula. Author(s): Rathborne, Ambrose B. British Library shelfmark: Digital Store 010055.ee.10 London. Date: 1898. Publisher: Swan Sonnenschein


1870 - 1900-ஆம் ஆண்டுகளில் மலாயா, நெகிரி செம்பிலான், லிங்கி, லுக்குட் பகுதிகளில் நிறையவே மரவெள்ளி, சர்க்கரைவல்லி, காபி, வாழைத் தோட்டங்கள் இருந்தன. ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்னர் அங்கு அந்த வகையான உணவுப் பயிர்கள் பயிர் செய்யப்பட்டன. தென்னை, அன்னாசி, கரும்பு, கொக்கோ, மிளகு தோட்டங்களும் இருந்தன.

1900-ஆம் ஆண்டில் பேராக், கிரியான் (Kerian); புரவின்ஸ் வெல்லஸ்லி (Province Wellesley) மாவட்டங்களில் 260,000 ஹெக்டர் கரும்பு பயிர் செய்யப்பட்டு உள்ளது.

[1#]. In 1890 the most successful estates proved to be those where access was easy, in Selangor, areas around Klang and Kuala Lumpur, in Negeri Sembilan areas near the coastal village of Lukut, now Port Dickson, and in Perak in the area of Matang and Lower Perak.

[1#]. http://www.arabis.org/index.php/articles/articles/plantation-history/the-malaysian-plantation-industry-a-brief-history-to-the-mid-1980s

லுக்குட் தோட்டத்தின் பழைய பெயர் லிங்கி காபி கம்பெனி (Linggi Coffee Company). அங்கு லைபீரியா காபி பயிர் செய்யப்பட்டது. ஆக அந்தக் கம்பெனியின் பெயரில் இருந்து ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம். காபி தான் பிரதான  விளைச்சல். [#1]

[#1]. http://seasiavisions.library.cornell.edu/catalog/seapage:233_481

நெகிரி செம்பிலானில் மட்டும் அல்ல. 1870-ஆம் ஆண்டுகளில் சிலாங்கூர், பேராக், பினாங்கு, ஜொகூர், சிங்கப்பூர் பகுதிகளிலும் காபி பயிர் செய்யப்பட்டு உள்ளது. 1896-ஆம் ஆண்டு வாக்கில் தான் முதன் முதலாக மலாயாவில் ரப்பர் பயிர் செய்யப்பட்டது.

ஆக 1870-ஆம் ஆண்டுகளில் நெகிரி செம்பிலான் லுக்குட்,  லிங்கி காபித் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள். [#2]

[#2]. Formerly the company was known as the Linggi Coffee Company, and Liberian coffee was grown on the first properties acquired, but it was decided in 1900 to substitute the more profitable product, Para rubber.

1905-ஆம் ஆண்டு தான் அந்தக் குழுமத்தின் காபி, கிழங்கு, வாழைத் தோட்டங்கள் அனைத்தும் ரப்பர் தோட்டங்களாக மாறின.

லுக்குட் தோட்டத்தில் வேலை செய்த தமிழர்கள் குழுக்கள் குழுக்களாக வேலை செய்தார்கள். ஒரு குழுவினர் விளச்சல் பொருள்களை மாட்டு வண்டிகளில் ஏற்றி ஒரு குறிப்பிட்ட இடம் வரைக்கும் கொண்டு செல்வார்கள்.

பின்னர் அந்தப் பொருள்களை மாற்றும் இடம் வரும். அது ஒரு பாலம்; ஒரு முச்சந்தி; ஓர் ஆலயம்; ஓர் ஆறு போன்ற இடமாக இருக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட இடம் வரையில் ஒரு குத்தகையாளரின் பொறுப்பு. அடுத்த இடம் வேறு ஒரு குத்தகையாளரின் பொறுப்பு. பொதுவாகத் துறைமுகம் அல்லது ஆற்றங்கரைகளில் படகுகள் அணையும் இடமாக இருக்கும்.

மாட்டு வண்டிகளில் கொண்டு வரப்படும் பொருள்கள் படகுகளில் ஏற்றப்பட்டு பின்னர் போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து இருக்கும் கப்பல்களில் ஏற்றப்படும்.

1905-ஆம் ஆண்டில் லுக்குட் தோட்டக் குழுமம் புனரமைப்பு செய்யப் பட்டது. லிங்கி தோட்டங்கள் என்ற பெயரில், பெரிய அளவில் ரப்பர் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் காபி சாகுபடியும் நிறுத்தப் பட்டது. 1906-ஆம் ஆண்டில் ரப்பர் உற்பத்தி தொடங்கியது.

[3#]. Liberian coffee flourished in Malay States’ relatively low-altitude coffee farms from the 1870s through to the late 1890s.

[3#]. https://coffeecultures.org/coffee-planting-in-colonial-malaya/

1900-ஆம் ஆண்டில் லுக்குட் நிறுவனத்தின் ரப்பர்  தோட்டங்கள்:

1. லுகுட் (Lukut)

2. மார்ஜோரி (Marjorie)

3. லிங்கி (Linggi)

4. உலு சவா (Ulu Sawah)

5. காஞ்சோங் (Kanchong)

இந்தத் தோட்டங்க சிரம்பான் நகரில் இருந்து பன்னிரண்டு மைல் தொலைவில் அமைந்து இருந்தன. லுக்குட் லிங்கி பகுதியில் இப்போது இருக்கும் தோட்டங்கள்:

Erin Estate,

Ladang Hew Mun,

Ladang Lukut,

Ladang Bonawe,

Ladang Siliau North,

Ladang Siliau,

Ladang Lukut,

Ladang Sungai Salak,

Ladang Parit Gila,

Ladang Sua Betong,

Ladang Bukit Belco,

Ladang Bukit Untong,

Ladang Port Dickson Lukut,

Ladang Port Dickson Lukut,

Ladang Bradwall,

Ladang Ranston,

Ladang Leigh,

Ladang Eng Aun,

Ladang Linggi Berhad,

Ladang Wilmor,

Ladang Bukit Palong,

Ladang New Ruthken,

Ladang Sua Betong,

Ladang Arunasalam,

Ladang Shiaw You,

Ladang Sungai Salak,

Ladang Perhentian Siput

மேலே காணப்படும் படம் 1900-ஆண்டில் லிங்கி ஆற்றில்; படகுகள் அணையும் இடத்தில் எடுக்கப்பட்டது. அந்த மூட்டைகள் படகுகள் மூலமாக போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து இருக்கும் கப்பல்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.



 

22 ஜூலை 2021

கொரோனா இறப்பு: ஆண்கள் அதிகம் பெண்கள் குறைவு. உண்மையா?

தமிழ் மலர்  - 19.07.2021

கொரோனா கொரோனா என்று உலகமே கொதித்துப் போய் நிற்கிறது. அந்தப் பக்கம் பார்த்தால் கொரோனா வைரஸ். இந்தப் பக்கம் பார்த்தால் டெல்டா வைரஸ். இன்னும் கொஞ்சம் தள்ளிப் போனால் தென்னாபிரிக்கா வைரஸ். ஆக எந்தப் பக்கம் திரும்பினாலும் கொரோனா கோவிட் கொக்கரிப்புகள்கள்.

அலைகள் ஓய்வது இல்லை. மலைகள் சாய்வது இல்லை. அது அந்தக் காலத்துப் பொன்மொழி. கொரோனா ஓய்வதும் இல்லை. கோவிட் சாய்வதும் இல்லை. இது இந்தக் காலத்துப் பொன்மொழி. இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

அலைகள் ஆழமான கடலில் ஆர்ப்பரிக்கின்றன. கொரோனா மனித உடலில் கொக்கரிக்கின்றன. அலைகளைக் கடல் விடுவது இல்லை. அதைப் போல கொரோனா மனிதர்களை விடுவதாகவும் இல்லை.

எப்படி அலைகள் ஓய்வது இல்லையோ; அதே போல கொரோனாவும் அவ்வளவு சீக்கிரத்தில் அடங்கப் போவதும் இல்லை.

இருந்தாலும் கொரோனாவின் ஆட்டம் கண்டிப்பாக ஒரு முடிவிற்கு வரும். அதுவும் விரைவில் வரும். எதிர்பார்ப்போம்.

கொரோனாவினால் ஆண்கள் தான் அதிகமாய் உயிர் இழக்கிறார்கள். பெண்களின் இறப்பு ஆண்களைவிட குறைவு என்றும்; சராசரியாக ஒரு பெண்ணுக்கு மூன்று ஆண்கள் உயிர் இழக்கிறார்கள் என்றும்; புதிய மருத்துவ ஆய்வுத் தகவல்கள் பரவலாகி வருகின்றன.

இது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும். ஆராய்ந்து பார்த்ததில், உடலமைப்பு ரீதியில் பெண்களைவிட ஆண்கள் சற்றே பலவீனமானவர்கள் எனும் உண்மை தெரிய வருகிறது.

உயிர் வாழும் முறை என்று வரும் போது பெண்களைவிட ஆண்கள் சற்றே பலவீனமானவர்கள் (When it comes to survival, men are the weaker sex.). அதற்குச் சில காரணங்கள் சொல்லப் படுகின்றன. என்ன காரணங்கள் என்று பார்ப்போம்.

இப்போது ஏற்பட்டு இருக்கும் இந்தக் கொரோனா தொற்று இருக்கிறதே, இது ஒன்றும் முதன்முறையாக ஏற்பட்ட உலகளாவியத் தொற்று நோய் அல்ல. ஏற்கனவே பற்பல கொடிய நோய்கள் வந்து போய் விட்டன. பல கோடி மக்கள் இறந்து போய் இருக்கிறார்கள்.

கறுப்பு மரணம் என அழைக்கப்படும் பிளேக் நோய்; காலரா; ஸ்பானிஷ் காய்ச்சல் (Spanish flu); சார்ஸ் (Severe Acute Respiratory Syndrome (SARS) போன்ற ’பெண்டமிக்’ தொற்றுகள் வந்து போய் இருக்கின்றன.

இதில் ஸ்பானிஷ் (Spanish Flu) காய்ச்சலுக்கு ஸ்பானிஷ் ஈ (Spanish Fly) என்று பெயர் வைத்த உலக மகா அமைச்சர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒரு நாட்டின் சுகாதார அமைச்சருக்கு இதுகூட தெரியவில்லை என்றால் எங்கே போய் முட்டிக் கொள்வது?

இப்போதைய உலக மக்களில் 100 வயது வரை வாழ்ந்து கொண்டு இருப்பவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்கள். 110 வயதை எட்டியவர்கள் 95 விழுக்காட்டினர் பெண்கள். ஆண்கள் சிலர் மட்டுமே தட்டுத் தடுமாறி 100 வயதுகளைத் தொட்டுப் பார்க்கிறார்கள்.

இந்தப் பக்கம் இல்லாத கூத்துகள் பண்ணிக் கொண்டு இருக்கும், ஒரு மெகா மனிதரையும் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மனித மரபணுக்களில் ஆண்களின் மரபணுக்கள்; பெண்களின் மரபணுக்கள்; இரண்டும் ஒன்று தான். ஒரே மாதிரி தான். ஆனால் அவற்றின் பரிணாம வளர்ச்சியின் (evolutionary growth) முறையில் தான், இரண்டுமே கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றம் கண்டு இருக்கின்றன. பரிணாமத்தைப் பொறுத்த வரையில் அது லேசான மாற்றம்.

பரிணாமம் என்றால் என்ன? வாழ்வியல் சூழலுக்கு ஏற்றவாறு கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நாமே செதுக்கிக் கொள்வதைத் தான் பரிணாமம் என்கிறோம். உயிருடன் வாழும் ஓர் உயிர்ப் பொருளை உயிரி என்கிறோம்.

அந்த உயிரி, பூமியின் காலச் சூழல்; சுற்றுச் சூழல் அமைப்புக்கு ஏற்றவாறு படிப்படியாகத் தன்னை மாற்றிக் கொள்கிறது. அது தான் பரிணாமம்.

உயிரினங்களில் பல கோடிக் கோடி இனங்கள் உள்ளன. அந்த உயிரினங்களில் படிப்படியாக, மரபு வழியாக, அடுத்த பரம்பரைக்கு மாற்றங்கள் கொண்டு போகப் படுகின்றன. கடத்தப் படுகின்றன என்று சொன்னால் சரியாக இருக்கும்.

காலம் செல்லச் செல்ல, பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து போக, உயிரினங்களின் மரபணுக்களில் வெவ்வேறு பதிப்புகளின் (different alleles of genes) விகிதங்கள் மாறுபட்டுக் கொண்டே போகும். அது தான் பரிணாமம்.

தனி ஓர் உயிர்ப் பொருளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது பரிணாமம் அல்ல. தனி ஓர் உயிர் தன்னம் தனியாகப் பரிணாமம் அடைவது இல்லை. ஓர் உயிரினத்தைச் சார்ந்த ஒரு கூட்டமே பரிணாமம் அடையும்.

ஆண்களின் மரபணுக்கள் ஆண்களுக்குக் கொஞ்சம் கூடுதலான உடல் தசையைக் கொடுக்கிறது. உடலுக்குக் கொஞ்சம் கூடுதலாக உயரத்தையும் கொடுக்கிறது. இது பல இலட்சம் பல கோடி ஆண்டுகளாக நடந்த பரிணாமம்.

பரிணாமம் பற்றி மேலும் கொஞ்சம் கூடுதலான தகவல். மிக மிக எளிதாக விளக்கி இருக்கிறேன்.  பரிணாமங்களில் இரு வகை உள்ளன.

1. நுண் ப‌ரிணாமம் (microevolution)

2. பெரும் ப‌ரிணாம‌ம் (macroevolution)

நுண் ப‌ரிணாமம் என்பது ஒரே ஓர் உயிரின‌க் கூட்ட‌த்திற்குள் (within a particular species) நடக்கும் மரபியல் மாற்ற‌ங்க‌ள். பெரும் ப‌ரிணாம‌ம் என்பது ஓர் உயிரின‌க் கூட்ட‌த்தையும் தாண்டி நிலையில் மற்ற உயிரினங்களிலும் ம‌ர‌பிய‌ல் மாற்ற‌ங்க‌ள் ஏற்படுத்துவது ஆகும் (above the level of species).

அதாவது ஓர் இனத்தில் இருந்து இன்னோர் இனத்தில் ம‌ர‌பிய‌ல் மாற்ற‌ங்க‌ளை உருவாக்குவது ஆகும்.

பொதுவாகவே ஆண்களின் உடல் எடையும் உடல் வலிமையும் பெண்களைவிட கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. ஏன் ஆண்களுக்கு மட்டும் இப்படி தனிப்பட்ட மரபணுச் சலுகைகள் என்று கேட்கலாம். நல்ல கேள்வி.

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து ஆண்களுக்கு உடல் ரீதியாகவே பற்பல கஷ்டங்கள்; எதிர்நீச்சல்கள்; சண்டைகள்; கலவரங்கள்; திண்டாட்டங்கள்; தத்தளிப்புகள்; போர்கள்; போராட்டங்கள். சவாலே சமாளி என்று சமாளிக்கும் தன்மையில் ரொம்பவுமே சவால்கள்.

குகைகளில் வாழும் காலத்தில் குடும்பத்தைக் கொடிய விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். அங்கே ஒரு போராட்டம். உணவு தேடிப் போகும் போது காட்டு விலங்குகளிடம் இருந்து உயிர் தப்பிக்க வேண்டும். அங்கே ஒரு போராட்டம்.

எதிரிக் குழுக்களிடம் இருந்து குடும்ப உறுப்பினர்களைத் தற்காக்க வேண்டும். அங்கே ஒரு போராட்டம். பயிர் பச்சைகளைப் பெரிய மிருகங்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். அங்கே ஒரு போராட்டம்.

இப்படி எக்கச்சக்கமான போராட்டங்கள். பல இலட்சம் ஆண்டுகளாக இந்த மாதிரியான தப்பிப் பிழைக்கும் போராட்டங்களை, ஆண்கள் நடத்தி வந்து இருக்கிறார்கள். அங்கே இருந்து தான் ஆணாதிக்கமும் தலை தூக்கி இருக்கிறது.

அதனால் ஆண்களின் மரபணு பரிணாமத்தில் சற்றே கூடுதலான வலிமை மாற்றங்கள். ஆண்களுக்குக் கொஞ்சம் கூடுதலான பலம் வந்ததற்கு அதுதான் காரணம். புரியும் என்று நினைக்கிறேன். சரி.

தலைப்பிற்கு வருவோம். கொரோனா நோயினால் பெண்களைவிட ஆண்கள் தான் அதிகமாய் உயிர் இழப்பதாகத் தகவல்கள். என்ன காரணங்கள். இந்தக் கட்டத்தில் ஆண்கள் சில கசப்பான உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பெண்களை ஆராதனை செய்யும் ஆண்கள் கட்சி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

முதல் காரணம்: ஆபத்தான நேரங்களில் ஆண்களைவிட பெண்கள் அதிக மனவலிமையுடன் செயல்படும் திறன் கொண்டவர்கள். அதே சமயத்தில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக மனத் துணிச்சல் கொண்டவர்கள்.

ஆபத்துகளை எதிர்கொள்வதில் ஆண்களைவிடப் பெண்களே துணிச்சல் மிக்கவர்கள் என்று சொல்லப் படுகிறது. இந்தக் காரணம் மனவலிமை தொடர்பானது.

இரண்டாவது காரணம்: மது அருந்தும் பழக்கம். இந்தப் பழக்கம் ஆண்களுக்கு அதிகம். பெண்களைவிட ஆண்களே மதுப் பழக்கத்திற்கு அதிகமாய் அடிமையானவர்கள். இதுவும் ஒரு பொதுவான கருத்து.

மூன்றாவது காரணம்: புகைபிடிக்கும் பழக்கம் (Higher rates of tobacco consumption). புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குப் பொதுவாக நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது உண்டு.

கொரோனா வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் மூக்கு வழியாக நுழைந்து மூச்சுக் குழாயை முதலில் சேதப் படுத்துகிறது. அடுத்து நுரையீரலைச் சிதைக்கிறது. அதனால் வைரஸ் தொற்று ஏற்பட்டதும் அவர்களின் நுரையீரல் அதிகமாய்ப் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கிறார்கள்.

நான்காவது காரணம்: பெண்களின் ஹார்மோன் (hormone) சுரப்பிகளில் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பது ஒரு காரணம் (more aggressive immune system).

அதனால் கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் பெண்களிடம் அதிகமாக உள்ளது. வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போராடும் சக்தி பெண்களுக்கு அதிகம். அடடடா… நான் ஏன் பெண்ணாகப் பிறக்கவில்லை என்று ஆண்கள் சிலர் யோசிக்கலாம். டூ லேட்.

ஆனாலும் பெண்களின் ஹார்மோன் (hormone) சுரப்பிகளில் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால் அதுவே சமயங்களில் அவர்களுக்கு ஆபத்தாகவும் முடியலாம். இது பெண்களுக்கு ஒரு பின்னடைவு.

ஆக பெண்களே எச்சரிக்கை. அட்ரா சக்கை நாங்க ஆண்களை மிஞ்சிட்டோம் என்று சொல்லி ரொம்பவும் பெருமை வேண்டாமே.

முடக்கு வாதம் (rheumatoid arthritis); தண்டுவட மரப்பு நோய் (multiple sclerosis}; கேடயச் சுரப்பியைத் தாக்கி அழிப்பது (autoimmune thyroiditis); ஜோக்ரன் சிண்ட்ரோம் (Sjögren’s syndrome); தோல் அழிநோய் (lupus) போன்ற நோய்கள் பெண்களுக்கு அதிகம்.

ஆக பெண்களின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு அவர்களின் ஹார்மோன்களே காரணம். ஆண்களுக்கு இந்தப் பாதிப்பு குறைவு.

பொதுவாகவே உலகம் எங்கும் உள்ள ஆண்கள், பெண்களை விட குறுகிய காலமே உயிர் வாழ்கிறார்கள். அது ஏன் என்று பொதுமக்களிடம் கேட்கப் பட்டது. அதற்குப் பலவாறான பதில்கள்.

ஆண்கள் பெரிய பெரிய ஆபத்துகளை எதிர்நோக்குகிறார்கள். ஆண்கள் குடிக்கிறார்கள். அதிகமாகப் புகைக்கிறார்கள்.

ஆனால் அது ஒரு பெரிய காரணம் அல்ல. புதிய ஆராய்ச்சிகளில் ஓர் உண்மையான காரணத்தைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். குரோமோசோம் தொடர்புடைய காரணங்கள்.

குரோமோசோம் (Chromosome) என்றால் என்ன? மனித உடல் செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லின் மையத்திலும் ஒரு கரு உள்ளது. அந்தக் கருவுக்குள் இருக்கும் மரபணு கட்டமைப்பு தான் குரோமோசோம்கள்.

கண் நிறம்; இரத்த வகை; உடல் அமைப்பு; ஒருவரின் பண்பு; சிந்திக்கும் திறன் போன்றவற்றைத் தீர்மானிக்கும் மகா தன்மைகள் மரபணுக்களிடம் உள்ளன. அந்த மரபணுக்களின் ஒருகூறு தான் குரோமோசோம்கள்.

மனிதரின் செல் 23 ஜோடி குரோமோசோம்களைக் கொண்டு இயங்குகிறது. அதில் ஒரு ஜோடிக்கு எக்ஸ் - ஒய் (X - Y) என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த எக்ஸ் - ஒய் குரோமோசோம்கள் தான் ஒரு நபர் ஆணா பெண்ணா என்று தீர்மானிக்கின்றன. இந்த எக்ஸ் - ஒய் குரோமோசோம்கள் ஆணிடம் மட்டுமே உள்ளன. பெண்களிடம் இல்லை.

ஒரு பெண்ணுக்கு இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள். இரண்டுமே எக்ஸ் எக்ஸ் (XX) குரோமோசோம்கள். அதே சமயத்தில் ஓர் ஆணுக்கு வெவேறான இரு குரோமோசோம்கள் உள்ளன.

ஒரு குரோமோசோம்: பெயர் எக்ஸ் (X). மற்றும் ஒரு குரோமோசோம். அதன் பெயர் ஒய் Y. இரண்டையும் சேர்த்து எக்ஸ் - ஒய் (X - Y) குரோமோசோம்கள் என்று சொல்வார்கள்.

சுருங்கச் சொன்னால் ஆண்களின் மரபு அணுக்களில் ஒரே வகையில் இரு குரோமோசோம்(கள்) உள்ளன (chromosome (XY). பெண்களின் மரபு அணுக்களில் இரு வகையில் இரு குரோமோசோம்(கள்) உள்ளன (chromosomes (XX). சரிங்களா.

ஓர் ஆணும் பெண்ணும் இணைந்த பின்னர் அந்த ஆணின் எக்ஸ் குரோமோசோம் பெண்ணின் கரு முட்டையில் இணைந்தால் பெண் குழந்தை பிறக்கிறது. அதே ஆணின் ஒய் குரோமோசோம் இணைந்தால் ஆண் குழந்தை பிறக்கிறது.

ஆக ஒரு குழந்தை ஆணாகப் பிறப்பதற்கும் அல்லது பெண்ணாகப் பிறப்பதற்கும் ஓர் ஆணின் குரோமோசோம்கள் தான் முடிவு செய்கின்றன. அது அப்படியே இருக்கட்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள மரபணுக்களை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள்.

அந்த ஆய்வின் மூலமாக ஆண்களைவிட பெண்கள் 15-இல் இருந்து 25 ஆண்டுகளாகக் கூடுதலாக வாழ முடியும் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

பெண்களின் ஆயுட்காலம் கூடுதலாக இருப்பதற்கு மேலும் ஒரு காரணம். பெரும்பாலும் பெண்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள். ஆதிகாலத்தில் இருந்து இந்தக் காலம் வரை வீட்டிற்குள்ளேயே வாழ்க்கையை ஓட்டி விடுகிறார்கள்.

அண்மையில் ஒரு ஐம்பது ஆண்டு காலமாகத் தானே பெண்கள் வெளியே வந்து ஆண்களுக்கு நிகராகப் பெரிய பெரிய பதவிகளை வகிக்கிறார்கள்.

முன்பு காலத்தில் பெண்களை ஆண்கள் அடக்கி வைத்து இருந்தார்கள். ஆணாதிக்கம் என்று சொல்வார்களே அதுதான். பெண்களைப் பொறுத்த வரையில் அவர்கள் தங்களின் உடலை எப்போதும் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்கிறார்கள். பெண்களின் காலா காலத்து இயல்பு.

ஆனால் ஆண்கள் அப்படி இல்லையே. அதிகமாய் வெளியே போவது வழக்கம். அதனால் உடல் சுத்தம் கொஞ்சம் குறைவு. பெண்களுக்கு வீடுதான் உலகம். ஆண்களுக்கு உலகமே வீடு.

இந்த மாதிரியான காரணங்களினால் தான் கொரோனா உயிரிழப்பு விகிதத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள். ஆக என்னதான் வேறுபாடுகள் இருந்தாலும், ஆண்களின் உயிரிழப்புகள் என்பது பெண்களையும் மறைமுகமாகப் பாதிக்கும்.

ஏன் என்றால் பெண் இனம்; ஆண் இனத்தைச் சார்ந்து இருக்கிறது. ஆண் இனம்; பெண் இனத்தைச் சார்ந்து இருக்கிறது. ஆண் இனத்திற்கு இழப்பு என்றால் அது பெண் இனத்தையும் பாதிக்கும். நீ இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் நான் இல்லை. அப்போது 100%. இப்போது ஒரு கேள்விக்குறி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.07.2021