11 செப்டம்பர் 2011

இந்தியா மீது சீனா போர் தொடுக்குமா


(இந்தக் கட்டுரை இன்று செப்டம்பர் 11 மலேசிய நண்பன் நாளிதழில் பிரசுரிக்கப் படுகிறது)


தயவு செய்து மூச்சைக் கொஞ்சம் இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்.
இந்தியாவின் அருணாச்சலப் பகுதி எல்லையில் சீனா தனது படைகளைக் குவிக்க ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே மூன்று டிவிஷன் படைகள் அங்கே இருந்தன. இப்போது 30 டிவிஷன்கள் குவிக்கப் பட்டு விட்டன. 30 டிவிஷன்கள்  என்றால்  3 லட்சம் இராணுவ வீரர்கள். ஏன்?

இன்னும்  இரண்டே இரண்டு ஆண்டுகளில் இந்தியா மீது சீனா போர் தொடுக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகமாகி உள்ளன. இதை நான் சொல்லவில்லை. உலக அரசியல் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

இரண்டு இமயங்கள் மோதிக் கொள்ளும் அடிவானக் கீற்றுகள் அதிகமாகத் தெரிகின்றன. நெஞ்சம் கனக்கும் வேதனையான செய்தி. இருந்தாலும் அந்த மாதிரியான ஒரு போர் வரவே கூடாது என்று வேண்டிக் கொள்வோம்.

காஷ்மீரில் சீனா ஆக்கிரமித்து இருக்கும் இந்தியப் பகுதியின் பெயர் அக்சாய் சின்.  இது ஏறக்குறைய மலேசியாவில் கால் பகுதி இருக்கும். அதாவது 37,250 சதுர கிலோ மீட்டர்கள். அதுவும் பற்றாது என்று இன்னும் கொஞ்சம் நிலத்தை சீனா பாகிஸ்தானிடமிருந்து 1963ல் வாங்கிக் கொண்டது. சுதந்திரம் வாங்கிய கையோடு பாகிஸ்தான்  காஷ்மீரில் ஊடுருவியது என்பது பழைய செய்தி. அப்படி அத்துமீறி நுழைந்த ஒரு சில வாரங்களிலேயே காஷ்மீரின் பெரும் பகுதியைப் பாகிஸ்தான் தன் ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வந்தது.
(சான்று: http://en.wikipedia.org/wiki/Kashmir_conflict)

இந்தக் காலக் கட்டத்தில் சீனாவின் பாதுகாப்பு பாகிஸ்தானுக்கு மிகவும் தேவைப் பட்டது. எந்த நேரத்திலும் தன் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் எனும் அச்சம் அதற்கு இருந்தது. அதனால், நிலைமையைச் சரி கட்ட அப்போது அதன் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த 5120 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியைப் பாகிஸ்தான் சீனாவுக்கு தானமாக வழங்கியது.

அதாவது நெகிரி செம்பிலான் மாநில அளவுக்கு உள்ள நிலப்பரப்பு சீனாவுக்கு தாரை வார்க்கப் பட்டது என்று சொன்னால் தான் தெளிவாக இருக்கும்.  கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதை உங்களுக்குத் தெரியும் தானே. அந்த மாதிரி தான் இங்கேயும் நடந்தது. அதன் மூலம் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு நெருக்கமான உறவுப் பாலம் உருவாக்கப் பட்டது.

ஆனால், பறி போன அந்த நிலங்களில் ஒரு பிடி மண்ணைக் கூட இந்தியாவால் இதுவரை இன்னும் திரும்பிப் பெற முடியவில்லை என்பது தான் வேதனையான செய்தி. அதுவே ஓர் உண்மையான  நிதர்சனமும் கூட! (சான்று: http://en.wikipedia.org/wiki/Aksai_Chin)

சரி. இந்த அக்சாய் சின் நிலப்பகுதிக்கு வருவோம். இந்த நிலம் காஷ்மீருக்கு வட கிழக்கே லடாக் பகுதியில் இருக்கிறது. 1834ல் இருந்து இது இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்து வந்தது. அப்பகுதி ஜம்மு காஷ்மீரின் ஒரு நிலப்பகுதி. 1963ல் சீனா திடீரென்று ஒரு தாக்குதலை நடத்தி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. அதற்கும் காரணம் இருக்கிறது.

திபெத் நாடு சீனாவுக்கு அருகாமையில் உள்ள நாடு. 1959ல் அந்த நாட்டின் மீது சீனா தாக்குதல் நடத்திக் கைப்பற்றியது. அங்கு வாழ்ந்த இலட்சக்கணக்கான திபெத்தியர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர். திபெத் தலைவர் டாலய் லாமாவுக்கும் இந்தியா அரசியல் அடைக்கலம் கொடுத்தது.

அதனல் அத்திரம் அடைந்த சீன, ஒரு சால்சாப்புக் காரணத்தைக் காட்டி லடாக் மீது படை எடுத்தது. அதனால், 1962ல் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு பெரிய போர் நடந்தது. அதில் சீனா கைப்பற்றிய இந்திய நிலம் தான் லடாக். ஆக, இந்த லடாக் தன் இப்போது அக்சாய் சின் என்று சீனாவால் அழைக்கப் படுகிறது. இது தான் நடந்த உண்மை.

இந்த நிலம் தனக்குச் சொந்தம் என்று சீனா தன் தலைமுடியை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறது.

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. வாழையடி வாழையாக அக்சாய் சின் எங்களுடைய பரம்பரைச் சொத்து என்று இந்தியா வரிந்து கட்டி மல்லுக்கு நிற்கிறது. உண்மையில் யாருக்குச் சொந்தம் என்பதில் ஒரு தீர்வு காண முடியாமல் ஐக்கிய நாட்டுச் சபையும் தவிக்கிறது.

ஓர் இடைச் செருகல். 1950களில் பிரதமர் நேரு சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குச் சென்றார். சௌ என் லாய் டில்லிக்கு வந்தார். இரு பிரதமர்களும் கை குலுக்கிக் கொண்டனர். குசலம் விசாரித்து பரஸ்பரம் பரிசுகளை மாற்றிக் கொண்டார்கள். அவ்வளவுதான். அவர்களும் போய்ச் சேர்ந்து விட்டார்கள். ஆனால், அக்சாய் சின் பிரச்னை மட்டும் இன்னும் அப்படியே குத்துக் கல்லாக நிற்கிறது. (சான்று: http://www.isn.ethz.ch/isn/Current-Affairs/ISN-Insights/)

சரி. இந்தப் பனிப்போர் அணு ஆயுதப் போரில் முடிந்து விடுமோ என்று இப்போது உலகமே பயப்படுகிறது. ஏன் என்றால் இரு நாடுகளுமே அணுகுண்டுகளை வைத்திருக்கும் நாடுகள். இந்தியாவுக்கு பக்க பலமாக அமெரிக்கா, ரஷ்யா, இருக்கின்றன. பிரச்னை என்று வந்தால் சில ஐரோப்பிய நாடுகள் உதவிக்கு வரலாம். பிரான்ஸ் இரண்டாம் படசம்.

சீனாவின் பக்கம் பாகிஸ்தான், வட கொரியா, ஆப்ரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன. ஸ்ரீலங்கா இப்போதைக்கு நல்ல ஒரு கூட்டாளி.

சீனா இப்போது வங்காள் தேசம், மியன்மார், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் ஆகிய நாட்டுத் துறைமுகங்களில் தனது போர்க் கப்பல்களை நிறுத்தி வைத்து இருக்கிறது. அதாவது இந்தியாவைச் சுற்றி நாலா பக்கமும் அதற்கு இலக்குகள் உள்ளன. அத்துடன், ஐக்கிய நாட்டு பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதையும் சீனா முடிந்த வரை தடுத்து வருகிறது.

இப்போது ஸ்ரீலங்கா கடல் பிரதேசத்தில் சீனக் கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் அடிக்கடி காணப் படுகின்றன. சீனக் கப்பல்களுக்காக ஸ்ரீலங்காவில் ஒரு நவீனத் துறைமுகமே கட்டப் பட்டு வருகிறது. (சான்று: http://www.defence.pk/forums/china-defence/26043-chinese-naval-base-sri-lanka.html)

இப்போது வெகு அண்மைய செய்தி என்னவென்றால் காஷ்மீர் பகுதிகளில் சீனாவும் பாகிஸ்தானும் சாலைத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு வருவது தான். அதாவது அத்து மீறி நுழைந்த இந்திய மண்ணில் சீனா சாலைகளை அமைத்துக் கொண்டு வருகிறது என்று சொன்னால் தான் எல்லாருக்கும் சரியாகப்  புரியும்.

அந்தச் சாலைகளில் ஆயுதங்கள் அனுப்பப் படுகின்றன. அந்த வழியாகத் தீவிரவாதிகளுக்குப் போர் முறை சாணக்கியங்களும் சொல்லித் தரப் படுகின்றன. (சான்று: http://christwire.org/2011/05/china-gives-pakistan-50-fighters-jets-makes-blood-pact/)

2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்தியாவின் அருணாச்சலப் பகுதியின் எல்லையில் சீனா தனது படைகளைக் குவிக்க ஆரம்பித்தது. ஏற்கனவே மூன்று டிவிஷன்கள் படை இருந்தன. இப்போது 30 டிவிஷன்கள் அங்கே குவிக்கப் பட்டு விட்டன. மொத்தம்  3 லட்சம் இராணுவ வீரர்கள். இது கசப்பு மருந்தில் கருப்புக் கசாயத்தைக் கரைப்பது போல இருக்கிறது.  

இந்த வீரர்கள் அடிக்கடி எல்லையைத் தாண்டி இந்திய எல்லைக்குள் வருகின்றனர். இந்தியக் காற்றைச் சுவாசித்து விட்டு இந்திய மண்ணுக்குச் சலாம் சொல்லிவிட்டு போகின்றனர்.
இந்திய சீன அருணாச்சல எல்லைகளின் நீளம் 4050 கிலோமீட்டர்கள். அதாவது கோலாலம்பூரில் இருந்து சென்னைக்குப் போய் திரும்பி வருகிற தூரம். (சான்று: http://en.wikipedia.org/wiki/1987_Sino-Indian_skirmish)

இந்த எல்லைகளில் இராணுவத்திற்குத் தேவையான கட்டிடங்கள், மின்சார இணைப்புகள், இராணுவத் தளவாடக் கூடாரங்கள், இராட்சசத் தொலை நோக்கிகள், பதுங்கு குழிகள் உருவாக்கப் பட்டு வருகின்றன. அதுவும் அவசர அவசரமாக வேலைகள் நடக்கின்றன. ஏன்? எதற்காக? என்று தயவு செய்து கேட்க வேண்டாம். நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

ஐம்பது அறுபது வருடங்களாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை ஒரு பங்காளிச் சண்டையாகவே இருந்து வந்திருக்கிறது.  ஒருவரை ஒருவர் முழுசாக நம்பாத பனிப் போரில் ஈடுபட்டு வந்தனர்.
(சான்று: http://www.lib.berkeley.edu/SSEAL/SouthAsia/kashmir.html)

இந்தியா மீது சீனா போர் தொடுக்கும் சாத்தியக் கூறுகள் மிகுதியாக உள்ளன என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இதற்கு பல காரணங்களைப் பட்டியல் போட்டுக் காட்டலாம்.  அந்தக் கணிப்புகள் அத்தனையுமே மிகச் சரியாக இருப்பது தான் நம்முடைய வயிற்றில் இப்போதைக்கு புளியைக் கரைக்கின்றன.

1911ல் சீனாவில் விவசாயிகளின் ஆதரவில் மாபெரும் புரட்சி நடைபெற்றது. அதுதான் சீனப் புரட்சி. இதைக் கலாசார புரட்சி என்றும் சொல்லுவார்கள். அந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் மாவோ சி துங். அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டுகள் வரை விவசாயத்திற்கு சீனா முக்கியத்துவம் கொடுத்து வந்தது. கடந்த இருபது ஆண்டுகளாகக் கிராமப்புற வளர்ச்சியைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. நகர்ப்புறங்களை மட்டுமே தொழில்மயம் ஆக்குவதில் மும்முரம் காட்டியது.

அதனால் சீனாவில் தொழில் புரட்சி விஸ்வரூபம் எடுத்தது. உலக  நாடுகளின் வணிகத்தில் சீனப் பொருள்கள் மலை மலையாகக் குவிக்கப் பட்டன.   மலிவான விலையில் சீனப் பொருள்கள் கிடைக்காத நாடே உலகில் இல்லை என்று சொல்லலாம். அப்பா அம்மாவைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஏற்றுமதி செய்தார்கள்.  அந்த அளவிற்கு சீனாவின் ஏற்றுமதி அபரிமிதமாக வளர்ந்து போனது.

இப்போது இந்த 2010 களில் உலகப் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. நாம் அறிந்த விஷயம். அதனால் உலகச் சந்தையில் சீனப் பொம்மைகளில் இருந்து மலிவான மின்சாரப் பொருட்கள் வரை தேங்கிக் கிடக்கின்றன. எந்தப் பொருளுமே விலை போகாத நிலைமை. சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதல பாதாளத்திற்குச் சரிந்து போய் கிடக்கிறது. சீன நிதிச் சந்தையிலிருந்து கோடிக் கோடியான அந்நிய முதலீடுகள் மீட்டுக் கொள்ளப் பட்டன அல்லது முடங்கிக்  கிடக்கின்றன.

அதனால் சீனாவில் வேலையில்லாத் திண்டாட்டம் இப்போது தலை விரித்து ஆடுகிறது. அடுத்த பக்கம் பார்த்தால் கிராமப்புற விவசாயிகளின் கசப்புணர்வுகளின் கொந்தளிப்புகள் வஞ்சகம் இல்லாமல் கொப்பளிக்கின்றன. பல இடங்களில் போராட்டமாக வெடித்தும் வருகின்றன.

இனக் கலவரங்களும் புதிய புதிய முரண்பாடுகளை உருவாக்கி வருகின்றன.  மக்களின் மீது இருந்த அரசின் இரும்புப் பிடி சன்னம் சன்னமாகத் தேய்ந்து வருகிறது. கடந்த இரண்டு தலைமுறைகளில் அரசின் எந்த ஒரு முடிவையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டு வந்த சீன மக்கள் இப்போது முகம் சுழிக்க ஆரம்பித்து விட்டனர். அரசு நிர்வாகத்தை எதிர்த்துப் பேசவும் துணிந்து விட்டனர்.
(சான்று:http://www.bloomberg.com/news/2011-01-26/china-will-face-crisis-within-5-years)

மக்களின் இந்த அதிருப்திகளைச் சமாளிக்க முடியாமல் அரசாங்கம் தடுமாறுகிறது. மக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும். அதற்கு ஒரு பிள்ளையார் சுழி போட வேண்டும். ஆக, அந்தப் பிள்ளையார் சுழிதான் ஒரு புதிய போருக்கு மூல காரணம் ஆகும்.

சரி. அடுத்து இரண்டாவது காரணத்தில் பாகிஸ்தான் வந்து நிற்கிறது.  கடந்த காலங்களில் இந்தியாவின் உறுதிப் பாட்டைக் குலைக்க அதன் அண்டை நாடு எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும்  சீனா  மறைமுகமான  ஆதரவை வழங்கி வந்துள்ளது.
தீவிரவாத முகாம்களை அமைப்பது. தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுப்பது. அவர்களைக் காஷ்மீர் வழியாக  இந்திய எல்லைக்குள் ஊடுருவ வைப்பது.  வங்காள தேசம், நேபாளம் வழியாக தீவிரவாத இயக்கங்களை இந்தியாவுக்குள் நுழைய வைப்பது. அத்தனையும் இந்தியாவுக்கு தலைவலி தரும் தாங்க முடியாத வேதனைகள். அவற்றுக்கு எல்லாம் அந்த அண்டை நாடு நேரடிக் காரணமாக இருக்கலாம். ஆனால் சீனா இருக்கிறதே அதுதான் ஒரு மறைமுகக் காரணம்! இது உலகமே அறிந்த உண்மை.(சான்று: http://en.wikipedia.org/wiki/Mukti_Bahini)

அடுத்து, தாலிபான் அமைப்பு பாகிஸ்தானில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால் பாகிஸ்தானின் முழுக் கவனமும் தாலிபான் மீது குவிந்து இருக்கிறது. அமெரிக்காவும் தன் கழுகுப் பார்வையை அங்கே தான் வைத்து இருக்கிறது.  அதனால் இந்தியாவுக்கு எதிராக பெரிய அளவில் எதையும்  செய்ய முடியாத நிலையில் பாகிஸ்தான் இப்போது இருக்கிறது.

மூன்றாவது காரணமாக உலகப் போலீஸ்காரர்  அமெரிக்கா வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவும் இந்தியாவும் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டன. அப்புறம் இராணுவக் கூட்டுப் பயிற்சிகளில் வேறு ஈடுபட்டு வருகின்றன.  இருவரும் நகையும் சதையுமாக நெருங்கி வந்து விட்டார்கள்.

இது சீனாவின் கண்களை உறுத்துகிறது. சீனாவால் பொறுக்க முடியவில்லை. ஆசியாவின் நம்பர் ஓன் வல்லரசாக விளங்க சீனா ரொம்ப நாட்களாக ஆசைப் பட்டு வருகிறது. ஆக, சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவை உருவாக்குவது தான் அமெரிக்காவின் நோக்கமாக இருக்கலாம் என்ற ஒரு  சந்தேகம் சீனாவுக்கும் வந்துவிட்டது. அது பாகிஸ்தானுக்கும் பெரிய ஒரு குடைச்சலைக் கொடுத்து வருகிறது.

இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் சீன மக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும். சீனா மக்களிடம் தேச பக்தியைப் புதுப்பிக்க வேண்டும். சீனாதான் ஆசியாவின் சூப்பர் தாதாஎன்பதை நிரூபிக்க வேண்டும். ஆகவே, இந்தியாவின் மீது சீனா போர் தொடுக்க வேண்டும். அந்தப் போர் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று சொல்ல வருகிறேன்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா. வட கொரியாவிற்கு ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதில் இருந்து அணு ஆயுத சோதனைகளுக்கு மறைமுக உதவிகளைச் செய்வது வரை சீனா தான் முதன்மை இடத்தை வகிக்கிறது.
(சான்று: http://www.cfr.org/china/china-north-korea-relationship/p11097)

சீனாவின் இந்த உதவிகளை அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் போன்றவை கண்டித்து வருகின்றன. அந்த நாடுகளில் ஏதோ ஒன்றின் மீது சீனா போர் தொடுக்கலாம். ஆனால்,  உலகப் பொருளாதார மந்தநிலை நிலவும் இந்த நேரத்தில் அந்த நாடுகளைச் சீனா பகைத்துக் கொள்ள முடியாது. அப்படி போர் தொடுத்தால் சீனா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப் படலாம்.  அதனால் சீனாவின் நிலைமை மேலும் மோசமடையும். அதையும் சீனா பார்க்கிறது.

தன்னைவிட சற்று பலம் குறைந்த ஒரு நாட்டுடன் போர் தொடுக்கவே அதற்கு விருப்பம். அந்த வரிசையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அப்படி ஒரு போர் வந்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெரும் பகுதியைச் சீனாவால் அபகரித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

ஒருபுறம் சீனா தன்னுடைய இராணுவங்களைக் குவித்துக் கொண்டு இருக்கிறது. மூன்று இலட்சம் வீரர்களை இந்திய எல்லையில் சீனா நிறுத்தி வைத்து இருக்கிறது. அதை மறந்து விட வேண்டாம். இன்னொரு புறம் பாகிஸ்தானும் இந்தியாவுடன் மல்லுக்கு நிற்கிறது.

பாகிஸ்தான் தன் இந்திய எல்லைப் பகுதியில் பதுங்கு குழிகளையும் கண்காணிப்பு கோபுரங்களையும் அதிகம் அதிகமாக அமைத்து கொண்டு வருகிறது. மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தக் கட்டுமானங்கள் மேலும் அதிகமாகி வருகின்றன. (சான்று: http://www.bharat-rakshak.com/SRR/Volume12/sahgal.html)

புதிதாக இன்னும் ஒரு பிரச்னை. அருணாச்சல மாநிலத்தில் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி  சீனாவின் நிலம் என்று சீனா இப்போது ஒரு புதிய கதையை உருவாக்கி இருக்கிறது. அதை இந்தியா ஆக்கிரமித்து வைத்திருக்கிறது என்றும் பிரசாரம் வேறு செய்து வருகிறது.

அந்த நிலப் பகுதியை தெற்கு திபெத்எனும் அடைமொழியுடன் சீனா அழைக்கிறது. சென்ற ஏப்ரல் மாதம் அருணாச்சல மாநிலத்தில் சில நீர்மின் திட்டங்களைச் செயல் படுத்த ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இந்தியா நிதியுதவி கேட்டது.

அது சர்ச்சைக்குரிய பகுதி. அது சீனாவின் இடம். அதில் இந்தியா எப்படி அணைக் கட்டுகளையும் மின் நிலையங்களையும் கட்ட முடியும்?’ என்று சீனா எதிர்க் கேள்வி கேட்டது.  அதனால் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி கிடைக்காமலே போனது என்பது வேதனைக்குரிய விஷயம்.

இந்த அருணாச்சலப் பகுதியில் சீன இராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அடிக்கடி விளையாட்டுத் தனமாக ஊடுருவல் செய்கின்றனர். அப்புறம் கொஞ்ச நேரத்தில் திரும்பிப் போய்விடுகின்றனர். இந்த மாதிரி கண்ணாமூச்சி விளையாட்டுகளும் அடிக்கடி நிகழ்கின்றன.

வரவு செலவு திட்டத்தில் இராணுவத்துக்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது.

கைகலப்பிற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன.  அசம்பாவிதம் எதுவும் நடக்கக் கூடாது என்று ஆண்டவனை வேண்டிக் கொள்வோம்.  எல்லாம எதிர்ப்புகளையும் எதிர் கொள்ள இந்தியா இப்போது இருந்தே தயாராக இருக்க வேண்டும். இப்போதே இருந்தே அது தற்காப்பு பாதுகாப்பு கவசத்தில் இறங்க வேண்டும்.

இந்த அரசியல் கணிப்புகள் கோடானு கோடி உலக மக்களின் துக்கத்தைக் கனக்கச் செய்கின்றன! தூக்கத்தை இழக்கச் செய்கின்றன!

06 செப்டம்பர் 2011

சொர்ண பூமியின் சுவர்ண இசைகள்

05.09.2011
(இந்தக் கட்டுரை 05.09.2011 மலேசிய நண்பன் நாளிதழின் ’மாணவர் சோலை’ திங்கள் இதழில் மாணவர்களுக்காக எழுதப் பட்டது. கடந்த ஒரு வருடமாக ’யார் இந்தப் பெண்’ எனும் தலைப்பில் உலகத் தமிழ்ப் பெண்களை அறிமுகம் செய்து வருகிறோம்.)

அன்பு தெய்வமே...
‘’ரகுபதிராகவ ராஜாராம்’ எனும் பாடல் உலகத் தமிழர்களுக்குப் பிடித்த பாடல். மகாத்மா காந்திக்கும் பிடித்த பாடல். ‘தன்னை இழந்து பாடுகிறார்’ என்று எம்.எஸ்.சுப்புலட்சுமியை மனம் விட்டுப் பாராட்டினார் காந்தி. இந்திய வானொலியில் மகாத்மா காந்திஜியின் அஞ்சலிக்கு இந்தப் பாடல் ஒலிக்கிறது. திருப்பதி திருமலையில் தினமும் கோவில் நடை திறக்கும் போது பாடப் படும் வெங்கடேச சுப்ரபாதம் எம். எஸ். சுப்புலட்சுமி பாடிய பாடலே.

காற்றினிலே வரும் கீதம்
"இந்தியா இந்தத் தலைமுறையில் ஒரு மாபெரும் கலைஞரை உருவாக்கி உள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்" என ஒருவரை பார்த்து சரோஜினி நாயுடு ஒரு முறை கூறினார். ஆம். அவர்தான் கர்நாடக சங்கீத மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி. அந்த மாபெரும் கலைஞருக்கு இந்தியாவின் ஆக உயர்ந்த விருதான பாரத ரத்னா  விருதும் வழங்கப்பட்டது.

எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களின் முழுப்பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தார். மிக இளம் வயதிலேயே இசை கற்றுக் கொள்ளத் தொடங்கிய இவர் தனது பத்தாவது வயதில் முதல் இசைப் பதிப்பை வெளியிட்டார். தனது 17-வது வயதில் தன் முதல் அரங்கேற்றததை நிகழ்த்தினார். இவர் பல மொழிகளில் பாடியுள்ளார்.

கணவர் கல்கி சதாசிவம்
இசை உலகில் எம்.எஸ். என்று அன்புடன் அழைக்கப் பட்டார். குடும்பத்தார் அழைக்கும் பெயர் குஞ்சம்மாள். அவரது முதல் குரு அவருடைய தாயார் சண்முகவடிவு தான்.

இவர் ஒரு சிறந்த வீணைக் கலைஞர். எம்.எஸ். சுப்புலட்சுமியின் அண்ணன் பெயர் மதுரை சக்திவேல் பிள்ளை. இவர் ஒரு மிருதங்கக் கலைஞர், தங்கையின் பெயர் வடிவாம்பாள்.

"மரகத வடிவும் செங்கதிர் வேலும்" எனும் பாடலே எம். எஸ். சுப்புலட்சுமியின் முதலாவது இசைத்தட்டுப் பாடல். சுப்புலட்சுமி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1945-ல் இவர் நடித்து ’பக்த மீரா’ படம் மிகவும் புகழ் பெற்றது. விடுதலைப் போராட்ட வீரரான கல்கி சதாசிவம் 1940 ஆம் ஆண்டு சுப்புலட்சுமியை மணந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

பக்த மீரா திரைப் படத்தில்
1941ம் ஆண்டு சாவித்திரி என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடித்தார். அதில் அவருக்குக் கிடைத்த ஊதியம் 50 ஆயிரம் ரூபாய். அதை மூலதனமாகக் கொண்டு தான் ‘கல்கி’ பத்திரிகை தொடங்கப் பட்டது. பத்திரிகையின் அப்போதைய விலை இரண்டு அணா.

ராஜாஜி, டி.கே. சிதம்பரநாத முதலியார், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார். கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.கே. சண்முகம் செட்டியார், அறிஞர் அண்ணா போன்றவர்களால் தொடங்கப் பட்ட தமிழிசை இயக்கத்திற்கு பக்க பலமாக நின்றவர் எம்.எஸ். சுப்புலட்சுமி.

பெண்ணிய மனுஷி சரோஜினி நாயுடு அவர்களுடன்
மகாகவி பாரதியார், சுத்தானந்த பாரதியார், வள்ளலார், இராமலிங்க அடிகளார், பாபநாசம் சிவன் போன்ற மேதைகளின் தமிழ்ப் பாடல்களை மேடை தோறும் பாடி ரசிகர்கள் மனதில் பதிய வைத்த பெருமை எம்.எஸ். சுப்புலட்சுமியையே சாரும்.

இந்தியில் வெளிவந்த மீரா திரைப் படத்தைப் பார்த்த பிரதமர் நேரு "இந்த இசையரசிக்கு முன்னால் நான் யார்? வெறும் பிரதமர்!" என எம். எஸ். சுப்புலட்சுமியைப் பாராட்டிப் புகழ்ந்தார். அந்தப் படத்தில் எம்.எஸ்.  சுப்புலட்சுமி பாடிய  ‘காற்றினிலே வரும் கீதம்’  எனும் பாடல் மிகவும் பிரபலமானது. 

நான் சாதாரண பிரதமர் தான். ஆனால் நீ உலகத்தின் கலையரசி: நேரு
இவ்வளவு பிரபலம், புகழ், சம்பாத்தியம் இருந்து. சுப்புலட்சுமி சாதாரண மனுஷியாகவே வாழ்ந்தார்.  பல நூற்றுக்கணக்கான கச்சேரிகளின் மூலம் அவருக்கு கிடைத்த செல்வத்தை எல்லாம் தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த ஒரே இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமிதான். இதற்காக இவருக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் மாக்சேசே விருது வழங்கப் பட்டது.

இவர் உலகின் பல நாடுகளுக்குப் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். 1966 அக்டோபரில் ஐ.நா. சபையில் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.


1997-ல் அவரது கணவரின் இறப்புக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

பல்வேறு அமைப்புகள் எம். எஸ். சுப்புலட்சுமிக்கு விருதுகளை வழங்கி பெருமைப் படுத்தியுள்ளன.

    பத்ம பூசண் விருது - 1954
    சங்கீத கலாநிதி விருது - 1968
    ராமன் மக்சசே விருது - 1974
    பத்ம விபூசண் விருது - 1975
    காளிதாச சன்மான் விருது - 1988
    நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது - 1990
    பாரத ரத்னா விருது - 1998

தேனினும் இனிய காந்தக் குரலால் கோடிக் கணக்கான மக்களின் மனங்களில் நீங்காத இடம் பெற்றவர் எம். எஸ். சுப்புலட்சுமி. அவர் கர்நாடக இசையுலகின் ஒரு சகாப்தம்.

அந்த நாதஜோதி அணைந்து விட்டது.  ஆனால் அந்த ஜோதியின் குரல் இன்றும் என்றும் காலத்தால் அழிக்க முடியாத ஓர் அமரக் குரல். அவருடைய வெகுளித்தனம் கலந்த வெள்ளந்தியான புன்னகை,  தடயம் எதுவும் இல்லாமல் அவருடனேயே மறைந்து போய் விட்டன. எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் காற்றினிலே கரைந்து வரும் ஒரு கீதம்!-

05 செப்டம்பர் 2011

கணினியும் நீங்களும் - 112

(அன்பர்களே, இந்த 112 ஆம்  பகுதி மலேசிய நண்பன் 04.09.2011 ஞாயிறு பதிப்பில் வெளியிடப் பட்டது. ஏற்கனவே வெளிவந்த கணினியும் நீங்களும் - 95 லிருந்து 111 வரையிலான கேள்வி பதில்கள் ஒவ்வொன்றாகப் பதிப்புச் செய்ய முயற்சி செய்கின்றேன். மலேசிய நண்பன் Indo Word பரணி எழுத்துருவைப் பயன் படுத்துவதால், நம்முடைய எழுத்துகளை அங்கு இருந்து யூனிகோட்டிற்கு மாற்றப் பட வேண்டியுள்ளது. அதனால், சினனச் சின்னத் தாமதங்கள். மன்னித்துப் பொறுத்தளுங்கள்.)

04.09.2011


அம்மணி சுப்பிரமணியம் ammanee@ymail.com

கே: சார், நான் ஒரு மரத்தளவாட நிறுவனத்தில் பணிபுரிகிறேன். நான் கணினியில் சேமித்து வைத்து இருந்த கோப்புகளை எல்லாம் தெரியாமல் அழித்துவிட்டேன். Recycle Bin இல் இருந்தும் அழித்து விட்டேன். தயவு செய்து எப்படி திரும்பவும் மீட்பது என்று சொல்லவும். நல்ல பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.


ப: கணினியில் சேமித்து வைத்து இருந்த கோப்புகளை எல்லாம் தெரியாமல் அழித்துவிட்டேன் என்று சொல்கிறீர்கள். உங்களுக்குத் தெரியாமல் எப்படி அழிக்க முடியும். சொல்லுங்கள். உங்களுக்கு நன்றாகத் தெரியும் எந்த எந்தக் கோப்புகள் முக்கியமானவை என்று. அப்புறம் எப்படி தெரியாமல் அழிக்க முடியும். கணினி விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இனிமேல், கணினியில் இருந்து எந்தக் கோப்புகளை அழித்தாலும் அந்தக் கோப்புகள் உண்மையிலேயே தேவை இல்லை என்று உறுதி படுத்திய பிறகு அழியுங்கள். Recycle Bin எனும் ‘மீள்சுழல் தொட்டி’ யில் இருந்தும் அழித்து விட்டதாக வேறு சொல்கிறீர்கள்.

‘மீள்சுழல் தொட்டி’யில் உள்ளதை அழிக்கிறீர்கள் என்றால் மொத்தமாக உங்களுக்கு எதுவுமே தேவை இல்லை என்று தானே பொருள். ‘மீள்சுழல் தொட்டி’ யில் உள்ளதை அழிப்பது என்பது உங்களுக்குத் தெரிந்தே அழிப்பதாகும்.

நல்ல வேளை. என்னிடம் வந்து கேட்கிறீர்கள். இதையே நீங்கள் ஒரு கடைக்கு எடுத்துச் சென்று கோப்புகளை மீட்டுத் தரச் சொல்லி இருந்தால் குறைந்த பட்சம் அவர்கள் முந்நூறு நானூறு என்று கரந்து எடுத்து இருப்பார்கள்.

சில சமயங்களில் ஆயிரம் வெள்ளி கட்டி கோப்புகளை மீட்ட சம்பவங்களும் உள்ளன. நான் உங்களை ஏசவில்லை. ஒரு தகப்பன் ஒரு மகளுக்குச் சொல்லும் அறிவுரையாக இதை எடுத்துக் கொள்ளுங்கள். இனிமேல் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

http://www.softpedia.com/get/System/Back-Up-and-Recovery/PC-Inspector-File-Recovery.shtml  எனும் முகவரிக்குச் சென்று தகவல் மீட்பு நிரலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.

கணினியில் பதிப்பு செய்த பின்னர், அந்த நிரலி சொல்வதைப் போல செய்யுங்கள். உங்களின் அழிந்து போன கோப்புகள் மீண்டும் கிடைத்து விடும்.  இந்த நிரலியும் சரியாக வேலை செய்யவில்லை என்றால் http://www.filesonic.com/file/1696007991 எனும் இணையத் தளத்திற்குச் சென்று இந்த ஒரு பிரபலமான நிரலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள். இது பணம் கட்டி பதிவிறக்கம் செய்ய வேண்டிய நிரலி. இருப்பினும் சோதனை முறையில் இலவசமாகக் கிடைக்கிறது.


கடவுள் சாமி goldsamymp@gmail.com
கே: அண்மையில் நான் ஒரு நோக்கியா கைத்தொலைப்பேசி வாங்கினேன். அந்தக்  கைத்தொலைப்பேசி எங்கே தயாரிக்கப் பட்டது என்று கடைக்காரரிடம் கேட்டேன். அதற்கு அவர் அமெரிக்காவில் தயாரிக்கப் பட்டது என்று சொன்னார். ஆனால், அது சீனாவில் தயாரிக்கப் பட்டது என்று என் நண்பர் சொல்கிறார். உண்மையில் அது எங்கே தயாரிக்கப் பட்டது என்று எப்படி கண்டுபிடிப்பது?
: தங்களுடைய பொருள் விற்பனையாக வேண்டும் என்பதற்காக சில கடைக்காரர்கள் பலவிதமான வர்ணனைகளைச் செய்வார்கள். அவர்களைக் குறை சொல்லக் கூடாது. அது அவர்களின் வாழ்வாதாரம்.

பயனீட்டாளர்களாகிய நாம் தான் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். நோக்கியா கைப்பேசி எங்கே தயாரிக்கப் பட்டது என்பதைக் கண்டுபிடிக்க ஓர் எளிய முறை உள்ளது. கைப்பேசியில் *#06# என்று தட்டுங்கள். அப்போது 15 எண்கள் தெரியும்.

அதுதான் நோக்கியா கைப்பேசியின் IMEA எண்கள். அதாவது International Mobile Equipment Identity எண்கள். அதைத் தமிழில் அனைத்துலக அசைவுச் சாதன அடையாளம்என்று சொல்லலாம். இது அடியேன் உருவாக்கிய விரிவாக்கச் சொல். பிழையாக இருப்பின் மொழி அறிஞர்கள் திருத்திக் காட்டவும்.

அந்த 15 எண்களில் ஏழாவதாக வரும் எண்ணையும் எட்டாவதாக வரும் எண்ணையும் குறித்துக் கொளுங்கள். எடுத்துக்காட்டாக என்னுடைய நோக்கியா கைப்பேசியின் IMEA எண்கள் 359342033893341. இதில் ஏழாவதாக வரும் எண் 0. எட்டாவதாக வரும் எண் 3.

இந்த 03 எண்கள்தான் அந்தக் கைப்பேசி எந்த நாட்டில் தயாரிக்கப் பட்டது என்பதைக் காட்டிக் கொடுக்கும் ரகசிய எண்களாகும்.

அந்த எண்களில் 00 என்று வந்தால் அசல் நோக்கியா தொழில்சாலையில் தயாரிக்கப் பட்டது. மிக மிக நல்ல தரம்.

01 அல்லது 10 என்று வந்தால் பின்லாந்து நாட்டில் தயாரிக்கப் பட்டது. கைப்பேசி நல்ல தரமானது.

02 அல்லது 20 என்று வந்தால் எமிரேட்ஸ் நாடு. கைப்பேசியின் தரம் மோசமானது.

03 என்று வந்தால் கொரியா. கைப்பேசி நல்ல தரமானது.

04 என்று வந்தால் சீனா. நல்ல தரமான கைப்பேசி.

05 என்று வந்தால் பிரேசில் செய்யப் பட்ட கைப்பேசி சுமாரான தரம்.

08 அல்லது 80 என்று வந்தால் ஜெர்மனி. கைப்பேசி சுமாரான தரம்.

13 என்று வந்தால் அசர்பைஜான். கைப்பேசி மிக மோசமான தரம் வாய்ந்தது. மேலே சொன்னது நோக்கியா போன்களுக்கு மட்டுமே.

மற்ற வகையான சோனி எரிக்சன், மோட்டோரோலா, எல்ஜி, சம்சுங் போன்ற கைப்பேசிகளுக்கு http://www.numberingplans.com/ எனும் இணையத் தளம் உள்ளது.

அங்கு சென்று உங்களுடைய ஐ.எம்.இ.எ. எண்களைப் பதித்து சரி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் துப்பறியும் வேலையைப் பற்றி எனக்கும் தெரிவியுங்கள். நானும் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.


துரை பாலசுந்தரம் 16balan@gmail.com
கே: சார், சில சுப்பர் மார்க்கெட்டுகளில் நமக்கு பொருத்தமான உடைகளை மாற்றிப் பார்க்கும் அறைகளில் ரகசியக் காமிராக்கள் இருக்கும் என்று இணையத்தில் வதந்தி உலாவுகிறதே. உண்மையா?


ப:
சில பெரிய துணிக்கடைகளில், பேரங்காடிகளில் அந்த மாதிரியான ரகசியக் காமிராக்கள் இருக்கலாம் என்று நானும் கேள்வி பட்டிருக்கிறேன். அந்த ரகசிய காமிராக்களைக் கண்காணிக்க பெண் ஊழியர்களை மட்டுமே வேலைக்கு வைத்திருப்பார்கள்.

உடைகள் மாற்றும் போது எந்தவிதமான திருட்டு வேலைகளும் நடைபெறவில்லை என்றால் அந்தப் படங்களை உடனே அழித்து விடுவார்கள்.

விலை உயர்ந்த துணிமணிகளை விற்கும் சில பிரபலமான கடைகளில் அந்த வகையான கண்காணிப்புகள் உள்ளதாக அங்கு வேலை செய்பவர்களே சொல்லி இருக்கிறார்கள்.

மறுபடியும் சொல்கிறேன். ஒரு சில கடைகளில் தான்.  எல்லாக் கடைகளிலும் இல்லை. மிக மிக நாணயமான கடைகளும் உள்ளன.

பொதுவாக, மலேசியாவில் உள்ள இந்தியர்களின் கடைகளில் இந்தக் கண்காணிப்புகள் இல்லை. என்னதான் இருந்தாலும் பெண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

02 செப்டம்பர் 2011

கணினியும் நீங்களும் - 94



(மலேசிய நண்பன் 03.04.2011 ஞாயிறு பதிப்பில் வெளியிடப் பட்டது)


வி.எஸ்.வி.வெங்கடாசலம், பாரிட் புந்தார், பேராக்

கே: நம்முடைய கணினி எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்தப் படுகிறது என்று எப்படி கண்டுபிடிப்பது சார்? அது அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்துமா?

கேள்விக்கும் படத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது.
ப: பொதுவாகக் கணினியைப் பயன்படுத்தும் போது எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்பதை நாம் கண்டு கொள்வதே இல்லை. இதில் என்ன வந்து விடப் போகிறது என்றுதான் நினைக்கிறோம்.

என்னையும் சேர்த்து தான். ஓர் அசட்டையான அலட்சியப் போக்கு. அது தப்புங்க. மாதம் முடிந்து மின்சார ‘பில்’ வரும் போது தான் எங்கேயோ இடிக்கிற மாதிரி இருக்கும். இல்லையா.

கணினியை நீண்ட நேரம் பயன்படுத்தாத போது அதை நிறுத்தி விட வேண்டும். முடிந்தால் கணினியை Hybernate எனும் ஆழ் உறக்கத்தில் வைப்பது ரொம்பவும் நல்லது.

ஆழ் உறக்கத்தில் இருக்கும் கணினியை நாம் எப்போது வேண்டுமானாலும் தட்டி எழுப்பி மறு இயக்கத்திற்கு கொண்டு வரலாம். அதனால் காசு மிச்சம். கணினியின் ஆயுசும் கெட்டி. ரொம்ப நாளைக்கு தாக்குப் பிடிக்கும். உண்மைதானே.

புதிதாக வீட்டுக்கு வரும் புது மனைவியிடம் ’ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் வேலை. மற்ற நேரத்தில் நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்’ என்று சொல்லிப் பாருங்கள். இருபது வருடங்களுக்கு இளமையாக இருப்பாள். அறுபது வயதிலும் அழகாகத் தான் இருப்பாள்.

அதை விட்டு விட்டு 24 மணி நேரமும் துணி துவைப்பது போல துவைத்து எடுத்தால், பாவம் அவள் தான் என்ன செய்வாள். முப்பது வயதில் கிழடு தட்டி நாற்பது வயதில் நாடி தளர்ந்து...  வேண்டாம். சொல்லவே மனசு கஷ்டமாக இருக்கிறது. ஆளை விடுங்க சாமி... என்று அவள் வீட்டை விட்டு ஓடாமல் இருந்தால் சரி. அதே நிலைமை தான் கணினிக்கும் வரும். புரிகிறதா.

ஒரு கணினியை 24 மணி நேரமும் நிற்காமல் பயன்படுத்தினால் அது ஒரு நாளைக்கு 3.50 ரிங்கிட் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது என்பதை மறக்க வேண்டாம். மடிக்கணினி 1.80 ரிங்கிட்  மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் பயன் படுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அப்படி என்றால் ஒரு வருடத்திற்கு 20 ரிங்கிட்  மின்சாரத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரியா. http://co2saver.snap.com/ எனும் இடத்தில் ஒரு நிரலி இருக்கிறது. எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகிறீர்கள், எங்கே மின்சாரம் செலவாகிறது என்பதைக் காட்டிக் கொடுத்து விடும்.


இந்திரன் ஜோ ஜோ roy201158@yahoo.com
கே: நம்முடைய பிள்ளைகள் சில ஒழுக்கக் கேடான இணையத் தளங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு என்ன செய்யலாம்?

ப: ‘அதோ பாரு பாட்டி... பாட்டி கட்டுறா வேட்டி’ என்று பாட்டுப் பாடிய காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இப்போது சில பிள்ளைகள் இணையத்தில் சில நாட்டுப் பாட்டிகளின் ’பார்ட்டி’களைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.


வேதனையான் விஷயம். இணையம் மின்சாரம் போன்றது. தொட்டால் அதிர்ச்சி. அது நல்லதும் செய்யும். கெட்டதும் செய்யும்.

பதினாறு வயது வரை பிள்ளைகளுக்கு இணையத்தில் பாதுகாப்பான வழிமுறைகளைச் சொல்லித் தர வேண்டும். அது பெற்றோரின் கடமை. இணையத்தின் நன்மை தீமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.

அப்படியும் அதை மீறி வயது வந்தவர்க்ளுக்கான படங்களை, வீடியோக்களைப் பார்க்கிறார்கள் என்றால் உடனடியாகத் தடுப்பு முறைகளில் இறங்குவது நல்லது. பதினாறு வயதிற்கும் மேற்பட்டு இருந்தால் அறிவுரை ஆலோசனைகளை மட்டுமே சொல்ல முடியும். அந்த வயது இருக்கிறதே அது விவரம் தெரியாத வயது.

ஆக, பிள்ளைகளை ரொம்பவும் கட்டுப்படுத்தினால் அவர்கள் அந்தத் தடைகளை உடைத்துக் கொண்டு போவார்கள். அதனால் ஆரோக்கியமான அறிவுரைகள் தான் சரியான மருந்து.

பிள்ளைகள் கணினியின் முன் உட்கார்ந்ததும் அப்போதே அவர்களுக்கு அருகில் போய் பெற்றோர்கள் உட்காருவதைச் சுத்தமாகத் தவிர்த்து விட வேண்டும். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நொச்சு நொச்சு என்று குறை சொல்வதையும் தவிர்க்க வேண்டும்.

அவர்கள் சுதந்திரமாக இணையத்தை எப்படி நல்ல வழிகளில் பயன் படுத்த முடியும் என்று அறிவுரை சொல்லுங்கள். அதோடு விலகிக் கொள்ளுங்கள்.

இருந்தாலும் அவர்கள் இணையத்தில் என்ன என்ன செய்கிறார்கள்; என்ன என்ன பார்க்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கத் தவற வேண்டாம். அதற்கான நிரலிகள் உள்ளன. இரு இலவச நிரலிகள் கிடைக்கும் முகவரிகளைக் கொடுக்கிறேன். பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

1. http://www1.k9webprotection.com/
2.http://kidlogger.net/


சீர்காழி ஜெயபாலன், ஸ்தாபாக், கோலாலம்பூர்
கே: என்னுடைய கணினி வழக்கத்திற்கு மாறாக வேலை செய்கிறது. மிகவும் மெதுவாக வேலை செய்கிறது. ஒரு புரோகிராமை ஆரம்பித்தால் ஒரு நிமிடம் சென்றுதான் திறக்கிறது. விரிவாக விளக்கம் கொடுத்து இருக்கிறேன். உங்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் பதில் கிடைப்பது இல்லை. அப்புறம் ஏன் உங்கள் கைப்பேசி எண்களைப் பத்திரிகையில் போட வேண்டும். சரியான காரணம் என்ன?


ப:
அன்பு சீர்காழியாரே, நமக்கு எத்தனை வயிறு. ஒரு வயிறுதானே. நல்லபடியாக, நிம்மதியாகத் தானே இருக்கிறது. திடீரென்று கடா முடா சத்தம். பேய் மழைக் காற்று. இடி முழக்கம். சுனாமி அலைகள். நாகாசாக்கி குண்டுகள்.

அப்படி என்றால் என்ன அர்த்தம். இலவசமாகச் சாப்பாடு கிடைக்கிறதே என்று போட்டுத் திணித்தால் வயிறு சத்தம் போடாமல் வேறு என்னய்யா செய்யும்.

கணினியும் அந்த மாதிரிதான். கணினி வழக்கத்திற்கு மாறாக மெதுவாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என்றால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்குப் பல காரணங்கள் உள்ளன.
 
RAM எனும் தற்காலிக நினைவி திடீரென நிறைந்து போய் இருக்கலாம். அல்லது தற்காலிக நினைவியின் கொள் சக்தி குறைவாக இருக்கலாம். கண்ட கண்ட படங்கள், கண்ட கண்ட பாடல்கள் கணினியின் வன் தட்டைப் பிதுங்க பிதுங்க அடைத்துக் கொண்டு இருக்கலாம்.

உலகமே தன் கணினிக்குள் இருக்க வேண்டும் என்று சிலர் ஆசைப் படுவார்கள். ஆனால், அதற்காகக் கிடைக்கின்ற சில்மிச அல்வாக்கள், ஆரோக்கியமற்ற லட்டு ஜிலேபிகளைக் கணினிக்குள் போட்டு அடைத்து வைத்து அழகு பார்க்கக் கூடாது. தெருவில் கிடக்கிற குப்பைகளை வீட்டுக்கு கொண்டு வந்தால் எப்படி?

இதைத் தவிர்க்க WhatInStartup எனும் ஓர் இலவச நிரலி இருக்கிறது. http://www.nirsoft.net/utils/what_run_in_startup.html எனும் இடத்தில் கிடைக்கிறது. அதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

என்ன என்ன நிரலிகள் உடன் தொடங்குகின்றன என்ற பட்டியல் வரும். தேவையற்றதை நீக்கி விடுங்கள். அதன் பின்னர் உங்கள் கணினி வேகமாக வேலை செய்யும்.

அல்லது http://www.filesonic.com/file/595166814/TuneUp.Utilities.2011.rar எனும் இடத்தில் TuneUp.Utilities.2011 நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். மிக அருமையான நிரலி.

அடுத்து எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் பதில் கிடைப்பது இல்லை என்று வருத்தப் படுகிறீர்கள். ஒன்று சொல்வேன். கோயிலில் பிரசாதம் கொடுக்கிறார்கள். அதைச் சந்தோஷமாக வாங்கிச் சாப்பிட்டு விட்டுப் போவோம் ஐயா. எல்லோரும் கையை நீட்டுகிறார்கள்.

கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும். அதற்காக நதி மூலம் ரிஷி மூலத்தைப் பற்றி ஆராய்ச்சி பண்ணி ஆத்திரப் படுவதில் நியாயம் இருக்கிறதா. சொல்லுங்கள்.


தினேஷ் குமார் dhaneshkumar80@gmail.com
கே: என்னுடைய கணினியில் உள்ள சில ரகசியக் கோப்புகளை (Folder) மற்றவர்கள் பார்க்காமல் இருக்க மறைத்து வைக்க வேண்டும். அவற்றை எப்படி மறைப்பது?



ப:
நீங்கள் மறைக்க விரும்பும் கோப்பின் மீது சுழலி கொண்டு வலது சொடுக்கு செய்யுங்கள். ஆகக் கீழே Attributes எனும் பகுதி இருக்கும். அதில் Hidden என்பதைச் சொடுக்கி விடுங்கள். பின்னர் Apply என்பதைத் தட்டி விடுங்கள்.

அடுத்து Apply changes to this folder only  என்பதைச் சொடுக்கி விடுங்கள். அடுத்ததாக Ok. உங்கள் கோப்பு உடனே மறைந்து இருக்க வேண்டும். அப்படி மறையவில்லை என்றால் இப்படி செய்யுங்கள்.

Desktop >> My Computer >> Double Click >> Tools >> Folder Options >> View >> Do not show hidden files >> Ok என்று சொடுக்கி விடுங்கள். உங்கள் கோப்பு கண்டிப்பாக மறைந்து இருக்கும்.


ஜெயன் மோகன் ஜெயசீலன், செம்பிராங் ரிசோர்ட், லாபுவான்
கே: சத்யம் கணினி நிறுவனத்தில் என்னதான் நடந்தது? அந்த நிறுவனத்தை மூடி விட்டார்களா சார்?

ப:
பங்கு வர்த்தகத் துறையில் சத்யம் கணினி நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பைக் கூட்டி விட செய்யப் பட்ட ஒரு ராஜதந்திர வேலை. 2009 ஆம் ஆண்டு ராமலிங்க ராஜு என்பவர் சத்யம் நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.



அப்போது அந்த நிறுவனத்தில் உண்மையில் 40,000 பேர்தான் வேலை செய்து வந்தனர். ஆனால், 53,000 பேர் வேலை செய்ததாக வெளி உலகத்திற்கு அறிவித்து வந்தார்.

ஆக 13,000 ஆவி ஊழியர்களின் சம்பளப் பணத்தை ராமலிங்க ராஜு தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வந்தார். அதாவது ஒரு மாதத்திற்கு 20 கோடி ரூபாய். பல மாதங்களாக இந்தக் கரையான் அரிப்பு வேலை நடந்து இருக்கிறது.

கடைசியில் குட்டு உடைந்தது. ராமலிங்க ராஜு பிடிபட்டார். அதன் பின்னர் மகேந்திரா நிறுவனம், சத்யம் நிறுவனத்தின் பங்குகளில் பாதியைக் குறைந்த விலையில் வாங்கிக் கொண்டது.

பழைய சத்யம் இப்போது மகேந்திரா-சத்யம் என்று அழைக்கப் படுகின்றது. அதை விடுங்கள். 2ஜி அலைக் கற்றை ஊழலுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால் சத்யம் ஊழல் ஒரு சின்ன ஜுஜுபி. நம் மலேசியா மொழியில் சின்ன கோப்பிக்கோ மிட்டாய்.

28 ஆகஸ்ட் 2011

கணினியும் நீங்களும் - 93

(மலேசிய நண்பன் 27.03.2011 ஞாயிறு பதிப்பில் வெளியிடப் பட்டது)

சரவணன் குமார், சுங்கை பூலோ, சிலாங்கூர்
கே: ஐயா, நான் தமிழ்நாடு திருச்சியில் இருந்து இங்கு வந்து கடந்த ஆறு ஆண்டுகளாக வேலை செய்கிறேன். அண்மையில் என் நண்பர் அவர் வேலை  செய்யும் இடத்தில் இருந்து ஒரு பழைய கணினியை என்னிடம் வந்து கொடுத்தார். அது சரியாக வேலை செய்யவில்லை. இருந்தாலும் நான் செலவு செய்து பழுது பார்த்தேன். நன்றாக வேலை செய்வதைப் பார்த்த அந்த நண்பர் இப்போது அந்தக் கணினியை வேண்டும் என்கிறார். கொடுக்க முடியாது என்றேன். மிரட்டிப் பார்க்கிறார். மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது ஐயா. என்ன செய்யலாம்?


ப: நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அந்த மாதிரியான மனிதர்களை நண்பர் என்று அழைப்பதை முதலில் நிறுத்துங்கள். மனித நேயங்களை மறந்து வாழும் மானிடப் பிண்டங்கள் எல்லாம் எப்படி ஐயா நண்பர்களாக முடியும். சொல்லுங்கள். அற்ப சகவாசம் பிராண சங்கடம் எனும் பழமொழி இருக்கிறதே அது உங்களுக்குத் தெரியாதா.

பழுது பார்க்க நீங்கள் செலவு செய்த காசை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு கணினியைத் திருப்பிக் கொடுக்கலாம். கவலைப் பட வேண்டாம். என்னிடம் பழைய கணினிகள் இரண்டு இருக்கின்றன. அவற்றில் ஒன்றை உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறேன். ஈப்போ வரும்போது பெற்றுக் கொள்ளுங்கள்.


நீங்கள் செலவு செய்த பணத்தைக் கேளுங்கள். அவர் கொடுக்க முடியாது என்றால் எனக்குத் தெரிவியுங்கள். சுங்கை பூலோவில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் புக்கிட் அமான் மலேசியப் போலீஸ் தலைமையகத்தில் ஓர் ஆணையர். அவரிடம் சொல்லி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்வோம். கவலைப் பட வேண்டாம்.


நீங்கள் ஒரு தமிழர். நானும் ஒரு தமிழர். நீங்கள்
ஒரு நம்பிக்கையுடன் அங்கே இருந்து இங்கே வந்து வேலை செய்கிறீர்கள். இங்குள்ள  தமிழர்கள் தான் உங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். அதை விடுத்து உங்களை ஏமாற்றி பிழைப்பது என்பது ஈனத் தனமான செயல். அப்படிப் பட்ட மனிதர்கள் எல்லாம் வெட்கம் கெட்ட ஜென்மங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எது உங்களை விட்டுப் போனாலும் கவலைப் படாதீர்கள். தன்னம்பிக்கை மட்டும் விட்டுப் போகாமல் பார்த்துக் கொளுங்கள். ஏன் என்றால் தன்னம்பிக்கை என்பதுதான் வாழ்க்கை. அதுதான் ஆண்டவரின் அடுத்த அவதாரம். 


அய்யாவு காசிப்பிள்ளை, ஸ்கூடாய், ஜொகூர்

கே: கணினி தொடங்குவதற்கு முன் Booting நடைபெறுகிறது. அப்போது எந்த எந்தக் கோப்புகள் அல்லது நிரலிகள் இயக்கப் படுகின்றன?

ப:
முதன் முதலாகக் கணினியைத் திறந்ததும் ((On செய்ததும்) BIOS தன் வேலையைத் தொடங்கும்.  BIOS   என்றால் Basic Input Output System. தமிழில் ‘அடிப்படை உள்ளீடு வெளியீட்டு முறைமை’ என்று சொல்லலாம்.



கணினியின் தாய்ப்பலகையில் அனைத்துச் சாதனங்களும் ஓர் ஆரம்ப நிலைக்கு கொண்டு வரும் முறைக்குத் தான் ‘அடிப்படை உள்ளீடு வெளியீட்டு முறைமை’ என்று பெயர்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேனே. கணினி இன்னும் அதன் விண்டோஸ் இயங்குதளத்தின் உள்ளே நுழையவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன் தான் இந்த BIOS வேலைகள் நடக்கும்.

கணினித் திரையில் ஆக முதன்முதலாக வெள்ளை எழுத்துகள் தெரியும். அவை தான் ’பையோஸ்’ அறிவிப்புகள். இந்த ’பையோஸ்’  முதலில் தாய்ப்பலகையைச் சோதனை செய்யும்.

தாய்ப்பலகையின் இயக்க முறை சரியாக இருந்தால் அடுத்து RAM எனும் தற்காலிக நினைவகத்தைப் பரிசோதிக்கும். அடுத்து Hard Disk எனும் வன் தட்டைச் சோதிக்கும்.

அடுத்து Graphic Card எனும் வரைகலை அட்டையைச் சோதிக்கும. இந்தக் கட்டத்தில் தாய்ப்பலகையில் பொருத்தப் பட்டு இருக்கும் சாதனங்கள் எல்லாம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும்.

ஏதாவது பிரச்னை என்றால் Error Messege என்று ஓர் எச்சரிக்கை திரையில் தெரியும். அப்புறம் அதோடு அதன் வேலையையும் நிறுத்திக் கொள்ளும். ஓர் அடி மேலே போகாது.

இவை அனைத்தும் சோதனை செய்யப் படுவதை POST  அல்லது Power On Self Test என்று சொல்வார்கள். சரி. எல்லாம் ஓ.கே. என்றால் ’பையோஸ்’ நெகிழ்தட்டின் (Floppy Disk) பக்கம் தன் கடைக்கண் பார்வையைத் திருப்பும்.

நெகிழ்தட்டில் DBR எனும் Dos Boot Record இருக்கிறதா என்று பார்க்கும். ’டிபிஆர்’ எனும் இயக்கப் பதிவுகள் நெகிழ்தட்டில் இல்லை என்றால் வன் தட்டிற்குப் போய் MBR எனும் Master Boot Record இருக்கிறதா என்று பார்க்கும்.

Master Boot Record என்றால் தலைமை இயக்கப் பதிவு. கணினியை இப்படித் தான் இயக்க வேண்டும் என்கிற பதிவு. அடுத்து இந்த MBR உடனே DBR ஐத் தேடும். DBR இல்லை என்றால் வேலைகள் அனைத்தும் அப்படியே நிறுத்தப் படும்.

DBR இருந்தால் உடனே IO.SYS எனும் தகவல் கோப்பு தற்காலிக நினைவகத்தில் ஏற்றம் செய்யப் படும்.

அடுத்ததாக இந்த IO.SYS கோப்பு,  CONFIG .SYS எனும் மற்றொரு கோப்பைப் பரிசீலிக்கிறது. எல்லாம் சரி என்றால், இந்த ‘கன்பிக்.சிஸ்’ கோப்பு MSDOS.SYS எனும் கோப்பை ஏற்றம் செய்கிறது. கடைசியாக மிக மிக முக்கியமான COMMAND. COM எனும் கோப்பு ஏற்றம் காண்கிறது.

அதைத் தொடர்ந்து இறுதியாக AUTOEXEC.BAT எனும் கோப்பு கணினிக்குத் தேவையான இயக்கிகளை எல்லாம் பதிவு செய்து விண்டோஸ் இயங்குதளத்திற்குள் ஏற்றம் செய்கிறது. இயக்கி என்றால் Driver.

அப்புறம் தான் விண்டோஸ் இயங்குதளம் தன் வேலையை ஆரம்பிக்கும். விண்டோஸ் சின்னம் கணினித் திரையில் தெரியும்.

இத்தனை ‘பையோஸ்’ வேலைகளும் பத்து விநாடிகளில் செய்து முடிக்கப் படுகின்றன. என்ன அதிசயம் பாருங்கள்.

இனிமேல் கணினியைத் தட்டி விட்டதும் கணினியின் உள்ளே ‘பையோஸ்’ என்ன செய்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள். அதன் லீலா விநோதங்களுக்கு மதிப்பு கொடுங்கள்.

கணினிக்கு மரியாதை செய்யுங்கள். கணினி எனும் சரஸ்வதி தேவியை ஆண்டவன் நமக்கு அன்பளிப்பாகக் கொடுத்து இருக்கிறார். அதை நாம் தெய்வமாக நினைத்து கையெடுத்துக் கும்பிடுவோம்.



பூர்ணம் விஸ்வநாதன், செபாராங் பெராய், பினாங்கு

கே:  LAN என்றால் என்ன?

ப: 
Local Area Network என்பதே அதன் சுருக்கம். பல கணினிகளை ஒரே ஒரு தலைமைக் கணினியுடன் இணைக்கும் அமைப்பே இந்த ‘லான்’ முறை. இதைத் தமிழில் ‘உள்ளக வலைப்பின்னல்’ என்று அழைக்கலாம்.



கலாமஞ்சரி நாயுடு, ஜாலான் ஈப்போ, கோலாலம்பூர்

கே: Cyber Space எனும் சொற்கள் அடிக்கடி பயன் படுகின்றன. அதன் அர்த்தம் என்ன என்று சொல்லுங்கள்?


ப:
1984 ஆம் ஆண்டு வில்லியம் கிப்சன் எனும் ஓர் அறிவியல் கதாசிரியர் ‘நியூரோ மென்சர்’ எனும் நாவலை எழுதினார். அதில் அவர் சைபர் ஸ்பேஸ் எனும் ஒரு சொல்லை முதன் முதலில் பயன் படுத்தினார்.

சைபர் ஸ்பேஸ் என்றால் எவராலும் கண்ணால் காண முடியாத ஓர் இடம். ஆனால், அப்படி ஓர் இடம் இருக்கிறது என்பது எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று. தமிழில் ’மின் வெளி’ என்று அழைக்கலாம்.

ஆக, அப்படி பார்க்க முடியாத ஒரு கற்பனையான இடத்தைத் தான் சைபர் ஸ்பேஸ் என்று அவர் அழைத்தார். இந்தச் சொல்லை 1989ல் இணைய உலகம் பயன்படுத்த ஆரம்பித்தது. இணைய உலகத்தை சைபர் ஸ்பேஸ் என்று அழைத்தாகள். இப்போதும் அப்படித் தான் அழைக்கிறார்கள்.

கண்ணுக்குத் தெரியாத இணைய வலைப் பின்னலில் நுழைந்து அங்கு உள்ள படங்களைப் பார்க்கிறோம். ஆவணங்களைப் படிக்கிறோம். பாடங்களைப் பதிவிறக்கம் செய்கின்றோம். அவற்றை அனுபவ ரீதியாக உணர்கின்றோம். ஆனால், பார்த்தது இல்லை. ஆகவே, இணையத்தை ’சைபர் ஸ்பேஸ்’ என்று அழைப்பதில் தவறு இல்லையே.

சுந்தரராஜன் பெருமாள், ஜாலான் காசிங், பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர்.

கே: சிடி-ரோம் டிரைவின் வேகத்தை 20X, 48X, 52X என்று குறிப்பிடுகிறார்கள். அதில் X என்றால் என்ன?

ப:
சிடி-ரோம் என்றால் குறும் தட்டு. சிடி-ரோம் டிரைவ் என்றால் குறும் தட்டகம். முதன்முதலில் வெளிவந்த குறும் தட்டகத்தின் வேகம் 150 KBPS. இந்தக் குறும் த்ட்டகங்கள் 1990 களில் வெளிவந்தவை. விலையும் அதிகம்.



KBPS என்பதன் விரிவாக்கம் Kilo Bytes Per Second. அப்படி என்றால் ஒரு விநாடியில் எத்தனை ‘பைட்ஸ்’ தகவல்கள் பரிமாறப் படுகின்றன என்பதை அது குறிக்கிறது. ஆக, ஆரம்பத்தில் வெளிவந்த குறும் தட்டகத்தின் வேகம் 150 KBPS ஆக இருந்தது.

பின்னர், வேகம் கூடிய தட்டகங்கள் வெளிவந்தன. புதிய குறும் தட்டகங்களின் வேகத்தை எடுத்துச் சொல்ல பழைய குறும் தட்டகங்களின் வேகத்தை அடிப்படையாக எடுத்துக் கொண்டார்கள். ஆகவே 20X என்றால் 20 X 150 =3000 கேபிபிஎஸ் என்று பொருள்.

இப்போது 80X குறும் தட்டகங்களும் வெளிவந்து விட்டன. பழைய 2X குறும் தட்டின் விலை அப்போதைய விலையில் நான்கு ரிங்கிட். இப்போதைய குறும் தட்டின் விலை வெறும் நாற்பது காசுகள் தான். கணினி உலகம் எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது. விரட்டிப் பிடியுங்கள்.