குடிக்கத் தண்ணீர் இல்லை. தொண்டை காய்ந்து போகிறது. இரத்தம் சுண்டி போகிறது. உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல் போகிறது. தண்ணீர்ப் பஞ்சத்தில் உச்சம் பார்க்கும் உயிர் போகும் நிலைமை. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அதுதான் சுழியம் நாள்.
வரட்சிக் கோலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் தாண்டவம் ஆடும் நாள். ஜீரோ டே (Day Zero) என்பது ஹீரோவாக அவதாரம் எடுக்கும் நாள்.
அனைத்து நீர் ஆதாரங்களும் வற்றிப் போய் மனுக்குலத்தின் வாழ்வாதாரம் சுருங்கிச் சுருட்டிக் கொள்வதைத் தான் சுழியம் நாள் என்கிறார்கள். அதுவே தண்ணீர்ப் பஞ்சத்தின் உச்சக்கட்ட நாள்.
தொண்டையை நனைத்துக் கொள்ள ஒரு சொட்டு நீர் கிடைக்காத அவலத்தை அசை போட்டுப் பாருங்கள். எல்லாம் தெளிவாகத் தெரியும்.
இவற்றை எல்லாம் முன்கூட்டியே கோடி காட்டுவதைத் தான் ஜீரோ டே என்கிறார்கள். அதாவது தண்ணீர் அறவே இல்லாத நாள். தண்ணீர் இல்லை என்றால் அதற்கு அப்புறம் எதுவுமே இல்லை என்பதை உணர்த்திக் காட்டத் தான் சுழியம் நாள் என்கிற நாளை உருவாக்கினார்கள்.

குடிக்கவும் தண்ணீர் இல்லை. குளிக்கவும் தண்ணீர் இல்லை. அப்போது நாம் படும் அவஸ்தை இருக்கிறதே அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியுமா. சொல்லுங்கள். ரொம்பவும் கஷ்டம்.
ஒரு நாள்... ஒரே ஒரு நாள் தண்ணீர் இல்லாமல் இருந்து பாருங்கள். அப்போது தெரியும் நீரின் அருமை, பெருமை, மகிமை, மாண்பு, மரியாதை எல்லாம். பலருக்குச் சொன்னால் புரியாது. பட்டால் தான் தெரியும்.
நீரும் நதியும் நாடுகள் அமைக்கும்
நின்று நடந்தே காடுகள் சமைக்கும்
குன்றில் இருந்தே குதித்து விழும்
குருமண் பூமியில் மிதித்து வாழும்
எனும் கவிதை வரிகள் நினைவிற்கு வருகின்றன.

இந்த உலகத்தில் நீர்நிலைகள் இல்லை என்றால் எந்த ஓர் உயிரும் இல்லை. அப்போதைய வள்ளுவர் அப்போதே கூறி விட்டார். அதுவே இப்போதைக்கும் பொருந்தும். இனி எக்காலத்திற்கும் பொருந்தும். நீர் இல்லை என்றால் எந்த உயிரினமும் வாழ முடியாது.
இதே மாதிரி ஒரு நீர்ப் பஞ்சம் 2016-ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைநகர் கேப் டவுனில் ஏற்பட்டது. தண்ணீர்ப் பற்றாக் குறையினால் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் செத்தும் சாகாமல் அலைமோதி உயிருக்குப் போராடிய ஒரு காலக் கட்டம். இது காங்கோ நாட்டுக் கட்டுக் கதை அல்ல. உண்மையாக நடந்த கேப் டவுன் கதை.
காந்தியை இரயிலில் இருந்து உதைத்துத் தள்ளினார்களே அதே அந்த நகரத்தில் நடந்த கதை தான். சரி.

இருபது முப்பது வருடங்களுக்கு முன்னாலேயே அந்த நகரில் தண்ணீர்ப் பஞ்சம் வரும் என்று கணித்துச் சொல்லி விட்டார்கள். ஏன் என்றால் அந்த இடத்தின் தட்ப வெப்ப நிலை அப்படி. தென் ஆப்பிரிக்காவிற்கு கீழே ஒரு பெரிய பனிப் பாலைவனமே இருக்கிறது. அதாவது அண்டார்டிக் துருவம். ஆனாலும் பாருங்கள் இந்த நாட்டில் இங்கே தண்ணீர்ப் பஞ்சம்.
இருந்தும் இல்லாத நிலையைச் சந்தித்தது அந்த நகரம். ஒரு நாட்டின் கட்டமைப்பு எவ்வளவு தான் பெரிதாக இருந்தாலும்; எவ்வளவு தான் சிறப்பாக இருந்தாலும்; குடிக்கத் தண்ணீர் இல்லை என்றால் அப்புறம் என்னங்க. அந்த நாடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்.
எப்படி பார்த்தாலும் அந்த நாடு ஒரு மோசமான நிலையைச் சந்திக்க வேண்டி வரும். அதற்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டு இந்தக் கேப்டவுன் நகரம்.

இன்றும் அந்த நகரில் தண்ணீர்ப் பஞ்சம். அதனால் தண்ணீர்ப் பங்கீடு. கடல் நீரைக் குடிநீராக மாற்றி இப்போது விநியோகம் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒருவர் 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அது அந்த நாட்டின் விதிமுறைகளில் ஒன்று. சட்டமாகவும் இருக்கிறது.
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இங்கே நம்மில் பலர் தாயையும் பழிக்கிறார்கள். தண்ணீரையும் பழிக்கிறார்கள். பெற்ற தாயை அனாதை இல்லத்தில் கொண்டு போய் விடுவதும் ஒன்று தான். அந்தத் தாய்க்குச் சமமான தண்ணீரைச் சாக்கடையில் கொட்டுவதும் ஒன்று தான்.
சமயங்களில் இங்கேயும் எங்கேயும் சகட்டு மேனிக்கு தண்ணீர் விரயம் செய்யப் படுகிறது. ஒரு தடவை குளிக்கும் தண்ணீரின் அளவு 50 லிட்டருக்கும் அதிகம். சாப்பிட்ட தட்டைக் கழுவுவதற்கு 2 லிட்டர் தண்ணீர் வரை வீண் விரயம். சரி. கேப் டவுன் கதைக்கு வருவோம்.

கேப் டவுன் நிலப் பகுதியில் மத்தியத் தரைக்கடல் பருவநிலை. கோடைக் காலத்தில் வெப்பம். குளிர்காலத்தில் மழை பெய்யும். பெரும்பாலும் மழையை நம்பியே வாழ்கிறார்கள். மலைப் பிரதேசங்களில் அணைகளைக் கட்டி மழை நீரைத் தேக்கி நீர்ப் பயனீடு செய்து வருகிறார்கள்.
கோடைக் காலத்தில் நீர்த் தேக்கங்கள் வற்றிப் போகின்றன. அதே சமயத்தில் விவசாயத்திற்கு அதிகமாக நீர்ப் பயன்பாடு. அதனால் நீர்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அல்ல. பல பத்தாண்டுகளாக அதே பல்லவிகள் தான்.
2018-ஆம் ஆண்டு கேப் டவுன் நகரம் சுழியம் நாளை அறிவித்தது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் மக்கள் தேவைக்கான தண்ணீர் தீர்ந்துவிட்டது. அதனால் ஒவ்வொருவரும் ஒரு நாள் பயன்பாட்டிற்கு 87 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அதற்கு மேல் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று கேப் டவுன் நகர நிர்வாகம் தடாலடியாக அறிவித்தது. சுழியம் நாள் என்றும் அறிவித்தது. உலகமே அதிர்ந்து போனது.
அப்போது அங்கே உலகக் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. மலேசியக் கிரிக்கெட் வீரர்கள் இரண்டு நிமிடங்களுக்கு மேல் குளிக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்தார்கள். அப்போதுதான் உலகமே நீர்ப் பஞ்சத்தின் ஆபத்தை உணர்ந்தது. மலேசிய மக்களும் திகைத்துப் போனார்கள்.
அதன் பின்னர் பொது மக்கள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப் பட்டது. 45 லிட்டருக்குக் குறைக்கப் பட்டது. குளிக்க, குடிக்க, பாத்திரம் கழுவ என்று ஒவ்வொரு தேவைக்கும் இத்தனை லிட்டருக்குள் தான் இருக்க வேண்டும் என்கிற ஒரு பட்டியலை அரசாங்கம் தயாரித்து வெளியிட்டது.

தண்ணீர்ப் பஞ்சம் ஒருபுறம் இருக்க இன்னொரு புறம் தண்ணீர் திருட்டுகள். எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்கிற மாதிரி பொது மக்களுக்கு வரும் நீரைச் சிலர் திருடி விற்க ஆரம்பித்தார்கள்.
பணம் உள்ளவர்கள் காசு கொடுத்து வாங்கினார்கள். இல்லாதவர்கள் சட்டிப் பானையைத் தூக்கிக் கொண்டு ஆற்றுப் பக்கமாய் ஐலசா பாடிக் கொண்டு போனார்கள்.
சிரிக்க வேண்டாம். உண்மையாக நடந்த நிகழ்ச்சிங்க. நமக்கு அந்த மாதிரி ஏற்படவில்லையே என்று சந்தோசப் படுங்கள். உண்மையிலேயே மலேசியர்கள் புண்ணியம் செய்தவர்கள். படுத்துக் கொண்டே படம் பார்ப்பது புண்ணியம் இல்லையா. சீரியல் விசயத்தைத்தான் சொல்கிறேன். மற்றபடி கக்கல் கழிசல் ஆபாச வீடியோ விவகாரத்தைச் சொல்லவில்லை. பெரிய இடத்து வம்பு தும்பு எல்லாம் நமக்கு வேண்டாங்கோ!

ஆக தண்ணீர் திருடர்கள் கிரிமினல் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப் பட்டார்கள். அவர்களைப் பிடிக்க அரசாங்கம் ஆங்காங்கே சிறப்புப் படைகளை அமைத்தது. நல்ல வேளை மாறு கை மாறு கை வாங்கவில்லை.
ஒரு கட்டத்தில் கார் கழுவ முடியாது; தோட்டத்துக்குத் தண்ணீர் விட முடியாது என தடாலடித் தடைகள். அத்தியாவசியத் தேவைகளுக்கே தண்ணீர் இல்லாத போது கார் கழுவுவது ரொம்ப முக்கியமா? மனுசனே தண்ணீருக்கு சிங்கி அடிக்கிறான் இதில் காரைக் கழுவது தான் குறைச்சல், நாயைக் குளிப்பாட்டித் தான் ஆகணுமா என்கிற கேள்வி வேறு. இதனால் தண்ணீர்க் கலவரம் வரலாம் என்றுகூட எதிர்பார்க்கப் பட்டது.
இன்னும் ஒரு விசயம். எங்கோ ஒரு நாட்டில் நடந்ததை ஏன் பெரிதுபடுத்த வேண்டும் என்று கேட்கலாம். இருக்கும் போது ஒரு பொருளின் அருமை தெரியாதுங்க. இல்லாத போது தான் அதன் பெருமையே தெரியும். அங்கே நடந்தது மாதிரி இங்கே நடக்கக் கூடாது. தண்ணீர் சுலபமாகக் கிடைக்கிறது; மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக மானவாரியாக வீணாக்கலாமா.

நீரின் மீது நமக்கு ஒரு மதிப்பு மரியாதை வர வேண்டும். நீரை வீணாக்கக் கூடாது என்கிற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். அவைதான் நம் எதிர்பார்ப்பு.
இந்த மாதிரி நீர்ப் பஞ்சம் ஏற்பட்ட சமயத்தில் ஓர் ஆறுதலான செய்தி. அங்கே அருகாமையில் இருந்த நீர்பாசன விவசாயிகள் ஒரு நல்ல காரியம் செய்தார்கள். 10 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீரைத் தர முன்வந்தார்கள். இதனால் சுழியம் நாள் தள்ளிப் போனது.
இது உலக மக்களுக்கு விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை. எந்த நாட்டிலும் எந்த நேரத்திலும் நீர்ப் பஞ்சம் ஏற்படலாம். சில ஆண்டுகளுக்கு முன்னால் கோலாலம்பூரிலும் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதை நினைவில் கொள்வோம். பிலாஸ்டிக் வாளிகளைத் தூக்கிக் கொண்டு அலைந்ததை நினைத்துப் பார்ப்போம்.

மலாக்கா ஜாசினில் அடியேன் ஆசிரியராக இருந்த போது அந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்து இருக்கிறது. வீட்டில் இருந்த அண்டா குண்டாக்களைத் தூக்கிக் கொண்டு நடுரோட்டில் நின்ற கதையை மறக்க முடியாதுங்க. எப்படிங்க மறக்க முடியும்.
அதே போல 2016-இல் தமிழகத்தில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தை மறந்துவிட முடியுமா? பரும மழை பொய்த்தது. அணைகள் வறண்டு போயின. 15 நாட்களுக்கு ஒருமுறை சென்னை, கோவை, மதுரை, திருச்சி நகரங்களில் தண்ணீர் விநியோகம் செய்யப் பட்டது. தமிழக வரலாற்றில் அது ஒரு நவீனக் காலச் சுவடு.
வசதி படைத்தோர் காசு கொடுத்து லாரி தண்ணீர் வாங்கிப் பயன்படுத்தினார்கள். பணம் இல்லாத ஏழை மக்கள் குடங்களை எடுத்துக் கொண்டு தண்ணீர் வரும் தெருக் குழாயைத் தேடி வீதி வீதியாக அலைந்தார்கள். அந்த அவலக் காட்சிகள் சில மாதங்கள் தொடர்ந்தன. பின்னர் பருவ மழை பெய்து அணைகள் நிரம்பின. நிலைமை சீரானது.
இன்னும் ஒரு விசயம். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது தண்ணீர் பிரச்னை தீராதா என்று ஏங்கித் தவிக்கிறோம். தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் போது அதை நல்லபடியாக பயன்படுத்துகிறோமா? உங்களையே கேட்டுப் பாருங்கள்.

என்னைக் கேட்டால் நீர்ப் பஞ்சம் வருகிறதோ இல்லையோ; நீரைத் தெய்வமாக நினைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். இருக்கும் போதே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம்முடைய குழந்தைகளுக்குத் தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தைக் கூற வேண்டும். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த அவர்களைத் தயார் படுத்த வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இப்போதே சரிவர பாடம் எடுத்தால் தான் எதிர்காலத்தில் அவர்கள் பொறுப்பு உள்ளவர்களாக வளர்வார்கள். வாழ்வார்கள்.
கேப் டவுன் நகரத்தின் சுழியம் நாள் பிரச்னையில் இருந்து உலகமே பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த நகரத்திடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும் நிறையவே உள்ளன. கற்றுக் கொள்ளப் போகிறோமா இல்லை கதறி அழப் போகிறோமா? முடிவு செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.
நீரினால் ஆகாதது எதுவும் இல்லை. அதே போல நீர் இல்லாமல் எதுவும் ஆகப் போவது இல்லை. தேவைக்கு அதிகமாக நீரைச் செல்வழிப்பதில் நாம் தயக்கம் காட்டுவது இல்லை. தண்ணீர் தானே என்கிற ஓர் அலட்சியம்.
அண்மையில் இணையத்தில் ஒரு செய்தி. தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் வந்தாலும் வரலாம். படித்தேன். ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
மூன்றாம் உலகப் போர் வருகிறதோ இல்லையோ; எதிர்காலத்தில் ஒரு சொட்டு நீரைக்கூட காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப் படலாம். அதற்கு காரணம் நம் அலட்சியமே.

மழை பொய்த்து விட்டால் அல்லது குழாய் நீர் குறைந்து விட்டால் குய்யோ.. முறையோ என்று சத்தம் போடுவார்கள். ஆனால் இருக்கும் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழிக்க மட்டும் பலர் தயாராக இல்லை. அதுதான் பைப்பில் தண்ணீர் வருகிறதே என்கிற அலட்சியம்.
நம் வீடுகளுக்குத் தண்ணீர் குடிநீர் குழாய்கள் மூலம் வருகிறது. ஆனால் அது என்னவோ இலவசமாக கிடைக்கிறது என்கிற மாயையில் பலரும் தண்ணீரை அலட்சியப் படுத்துகிறார்கள். தப்பு.
இன்றைய இந்த அலட்சியம் நாளைய ஆபத்து. தாயைப் பழிக்காதே. தண்ணீரையும் பழிக்காதே என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம். சுழியம் நாள் வராமல் பார்த்துக் கொள்வோம்.
பெண் போராளி ஊர்மிளாவிற்கும் விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த உமா மகேஸ்வரனுக்கும் காதல் பிரச்சினை என்கிற செய்தி இலண்டனில் இருக்கும் அண்டன் பாலசிங்கத்திற்குப் போய்ச் சேர்கிறது.
அண்டன் பாலசிங்கம் புலிகளின் அறிவுத் தந்தை. அதாவது காட் பாதர். இன்னும் ஒரு விசயம். விடுதலைப் புலிகளுக்குத் தலைவராக இருந்தவர் உமா மகேஸ்வரன். தளபதியாக இருந்தவர் பிரபாகரன்.
ஆக இருவருமே தலையாய பதவிகளை வகித்து வந்தனர். இவர்கள் இருவரும் சென்னை; யாழ்ப்பாணம் என இரு இடங்களில் இருந்து செயல்பட்டு வந்தனர்.
இவர்கள் இருவருக்கும் அறிவுத் தந்தையாக இருந்தவர் அண்டன் பாலசிங்கம். இவர் இலண்டனில் இருந்து அறிவுரை கூறி வந்தார்.

பாலசிங்கத்திற்குச் செய்தி போனதும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இவர் பிரபாகரனுக்கு அறிமுகமாகி ரொம்ப நாட்கள் ஆகவில்லை.
பாலசிங்கத்திடம் தீர்வு காணச் சொல்லி கொடுக்கப்பட்ட முதல் பிரச்சினை ஒரு காதல் பிரச்சினை. விடுதலைப் புலிகளின் வரலாற்றில் முதல் விசித்திரம்; முதல் வியப்பு. எனக்குக்கூட அப்படித்தான் தோன்றியது.
ஏற்கனவே போன கட்டுரையில் சொல்லி இருக்கிறேன். காதல் பிரச்சினை என்பது விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் ஒரு கொசுக்கடி பிரச்சினை. இதற்கு போய் இப்படி அலட்டிக் கொள்கிறார்களே என்றும் எனக்கும் லேசான வருத்தம். ஆனால் அதற்குள் ஒரு பெரிய வில்லங்கம் இருப்பது போகப் போகத் தான் தெரிய வந்தது. தொடர்ந்து படியுங்கள்.

பாலசிங்கம் தன் மனைவி அடேலுடன் சென்னைக்கு வந்து சேர்ந்தார். ஊர்மிளா உமா மகேஸ்வரன் காதல் பிரச்னையின் முழு விவரங்கள் அவருக்குச் சொல்லப் பட்டன. உமா மகேஸ்வரனை அழைத்து விசாரிக்கிறார். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றுகிறது.
இதற்கு இடையில் பிரபாகரன் பொறுமை இழக்கிறார். இயக்கத்தை விட்டு வெளியேறுமாறு உமா மகேஸ்வரனிடம் சொல்கிறார்.
அற்பமான காதல் விசயம் தானே. ஏன் இவ்வளவு பெரிய பிரச்சினையாகப் பிரபாகரன் பெரிது படுத்துகிறார் என இயக்கத்தில் இருந்த சிலரும் முணுமுணுத்துக் கொண்டார்கள்.
விடுதலைப் புலிகளின் இலண்டன் பிரதிநிதிகள் இந்த மோதலை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சார்பாக கிருஷ்ணன் என்பவரும் ராமச்சந்திரன் என்பவரும் சென்னைக்கு வந்து பிரபாகரனைச் சந்தித்தனர்.
“உமா மகேஸ்வரன் பெரிய தவறு எதுவும் செய்யவில்லை. காதல் தானே... விட்டு விடுங்கள்” என்று பிரபாகரனிடம் பரிந்துரை செய்தனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் பெண் உறுப்பினர் ஊர்மிளா. அவரோடு புலிகளின் இயக்கத் தலைவர் படுக்கையைப் பகிர்ந்து கொண்டார் என்பது தெரிய வந்தால்... யாரும் இனிமேல் இயக்கத்துக்கு தங்களுடைய சகோதரியையும் அனுப்ப மாட்டார்கள்; மகளையும் அனுப்ப மாட்டார்கள் என்று பிரபாகரன் கூறிய போது இலண்டன் பிரதிநிதிகளால் பதில் சொல்ல முடியவில்லை.
மோதல் முற்றியது. 1980-ஆம் ஆண்டு உமா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப் பட்டார்.
அப்புறம் என்ன. பிரபாகரன் வசமாக மாட்டிக் கொண்டார். அவர் மீது உமா மகேஸ்வரன் சரமாரியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஜனநாயகச் சுதந்திரமே இல்லை. எல்லா முடிவுகளையும் பிரபாகரன் ஒருவரே எடுக்கிறார். அவர் ஒரு சர்வாதிகாரி. அவர் ஒரு இட்லர் என்று விலாசித் தள்ளினார்.
பிரபாகரன் மறுக்கவில்லை. ஆமாம். நான் சர்வாதிகாரி தான். இல்லை என்று சொல்லவில்லை. முடிவுகளை நான் தான் எடுப்பேன். விருப்பம் உள்ளவர்கள் இயக்கத்தில் இருந்தால் போதும். அவர்களை வைத்து தமிழர்களின் இலட்சியத்தை நிறைவேற்றிக் காட்டுவேன் என்று பிரபாகரனின் பதில் வருகிறது.

இந்தக் காலக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரிவினை. “பிரபாகரன் குழு” என்றும் “உமா மகேஸ்வரன் குழு” என்றும் இரண்டு பிரிவுகளாக விடுதலைப் புலிகள் இயக்கம் பிரிந்து குழப்பத்தில் மூழ்குகின்றது.
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல்வேறு காலக் கட்டங்களில் பல இயக்கங்கள் செயல்பட்டு வந்து உள்ளன.
1. தமிழீழ விடுதலைப் புலிகள்
2. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)
3. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்
4. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி
5. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
6. தமிழீழ விடுதலை இயக்கம்
7. தமிழர் விடுதலைக் கூட்டனி (அரசியல் கட்சி)
8. ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்
இந்த இயக்கங்கள் அனைத்துமே தனித் தமிழீழம் தோன்ற வேண்டும் என்று போராடிய குழுக்கள் ஆகும். சரி. உமா மகேஸ்வரன் பிரச்சினைக்கு வருவோம்.

உமா மகேஸ்வரனுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் பிரச்சனை பெரிதாக வெடித்தது. உமா மேஸ்வரன் சில இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டு புலிகளுக்கு எதிரான பிரசாரங்களைச் செய்யத் தொடங்கினார்.
இது யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்களிடையே பெரிய கவலையை உண்டாக்கியது. புலிகளுக்குள் சண்டையாம் என்று பேசும் அளவிற்கு விவகாரம் பெரிதாகிப் போனது.
இதற்கு இடையில் விடுதலைப் புலிகளின் மத்தியச் செயற்குழு இரு முறை கூடி விவாதித்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது மக்கள் இயக்கமாக அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.
பிரபாகரன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. விடுதலைப் புலிகளின் இயக்கம் ஓர் இராணுவ இயக்கமாக இருக்க வேண்டும்; இயங்க வேண்டும் என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு.

இருந்தாலும் மத்திய குழு விட்டுக் கொடுக்கவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் எனும் கருத்தையே தொடர்ந்து முன் வைத்தது.
பிரபாகரனுக்குக் கோபம் வந்துவிட்டது. சரி. பிரச்சினை இல்லை. உங்கள் விருப்பப்படியே செய்து கொள்ளுங்கள். என் பேச்சுக்கு மரியாதை இல்லாத இடத்தில் எனக்கும் வேலை இல்லை என்று சொல்லி இயக்கத்தை விட்டு வெளியேறினார். பலரும் தடுத்தார்கள். பிரபாகரன் கேட்கவில்லை.
இயக்கத்தை விட்டு வெளியேறியதும் வீட்டிற்குச் செல்லவில்லை. போலீஸ் தேடி வரும் என்று தெரியும். அதனால் வல்வெட்டித் துறையில் இருந்த மாமா வீட்டிற்குச் சென்றார். கொஞ்ச காலம் அங்கு தங்கி இருந்தார். ஆனாலும் அவருக்கு மன அமைதி இல்லை. இயக்கம் அழிந்து விடலாம் என்கிற பயம் இருந்தது.
அதனை உணர்ந்த பிரபாகரனின் மாமா (அக்காள் கணவர்) தக்க தருணத்தில் ஒரு முடிவு எடுத்தார். அப்போது டெலோ அமைப்பின் தலைவராகத் தங்கதுரை குட்டிமணி என்பவர் இருந்தார். அவரைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்தார்.
தங்கதுரையும் பிரபாகரனைச் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் தமிழகம் திருச்சியில் இருந்த டெலோ அமைப்பின் பயிற்சிப் பொறுப்பாளராகப் பிரபாகரன் நியமிக்கப் பட்டார்.

தமிழகம் வந்த பிரபாகரன் டெலோ அமைப்பின் உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார், ஆனாலும் பிரபாகரனுக்கு அதில் முழுமையான விருப்பம் இல்லை. ஒரு கட்டுக் கோப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே பிரபாகரனின் கனவு.
இறுதியில் யாழ்ப்பாணத்துப் போராளிகளின் கட்டாயத்தின் பேரில் 1980-ஆம் ஆண்டில் புலிகள் அமைப்பில் பிரபாகரன் மீண்டும் சேர்ந்தார். அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
அப்படி இப்படி கோபதாபங்கள் இருக்கவே செய்தன. அதாவது சின்னச் சின்ன சண்டைகள் போட்டு பிரபாகரன் விலகிக் கொண்டதைத் தான் சொல்ல வருகிறேன்.
1981-ஆம் ஆண்டில் பிரபாகரன் தமிழகத்திற்கு வந்தார். தமிழகத்தில் வேதாரண்யத்தில் தங்கினார், புலிகள் இயக்கத்தை பலப் படுத்துவதிலும் பயிற்சிகளை வழங்குவதிலும் தீவிரமாக இருந்தார்.
இதற்கு இடையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்ட உமா மகேஸ்வரன் புலிகளுக்கு எதிராக செயல்படத் தொடங்கினார்.

புளொட் என்னும் இயக்கத்தைத் தொடங்கினார். அது மட்டும் இல்லை. தென் இலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களுடன் உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டார். யாரை எதிரிகள் என்று நினைத்தார்களோ அவர்களிடமே கொஞ்சிக் குலவ ஆரம்பித்தார்.
அத்துடன் பிராகரனின் பெயரைக் களங்கப் படுத்த வேண்டும் என்பதற்காகப் புதியபாதை எனும் ஒரு பத்திரிக்கையையும் உமா மகேஸ்வரன் தொடங்கினார். புலிகளைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் அவதூறுகளை எழுதி வந்தார்.
புலிகள் ஆத்திரம் அடைந்தார்கள். அனைத்துலக ரீதியில் தமிழர்ப் போராட்டத்திற்கு பின்னடைவு ஏற்படும் என்பதைப் புலிகள் உணர்ந்தார்கள். ஊடகத்தின் மூலம் தமிழர்களின் போராட்டம் கொச்சைப் படுத்தப் படுவதைப் புலிகள் விரும்பவில்லை.
புதிய பாதை பத்திரிகையின் பொறுப்பாளரும் உமா மகேஸ்கரனின் வலது கரமான சுந்தரம் என்பவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்கள். புலிகளின் குழு தான் அந்த முடிவை எடுத்தது. அந்த வகையில் சுந்தரத்தை சார்ல்ஸ் அந்தோனி என்கிற சீலன் சுட்டுக் கொன்றார்.
இது உமா மகேஸ்வரனுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. பிரபாகரனைப் பழிவாங்க வேண்டும் என உமா மகேஸ்வரன் வெறி கொண்டு அலைந்தார்.
அந்த நேரத்தில் பிரபாகரன் தமிழகத்தில் இருந்தார். பகை உச்சக் கட்டமாக முற்றியது.
இதற்கிடையில் உமா மகேஸ்வரனும் 1982 பெப்ரவரி 25-ஆம் தேதி சென்னை வந்து சேர்ந்தார். தமிழகம் வந்த உமா மகேஸ்வரன் கவிஞர் பெரும்சித்தனார் வீட்டில் தங்கி இருந்தார்.

பிரபாகரன் தமிழகத்தில் இருப்பது உமா மகேஸ்வரனுக்கு நன்றாகவே தெரியும். பிரபாகரனைத் தீர்த்துக் கட்டத் தான் உமா மகேஸ்வரன் தமிழகத்திற்கே வந்தார்.
இன்னும் ஒரு விசயம். ஒரு காலக் கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழர்களின் விடுதலை இயக்கங்களின் உறைவிடமாகச் சென்னை மாநகரம் விளங்கியது.
தமிழீழ விடுதலைப் புலிகள்; தமிழீழ விடுதலை இயக்கம்; ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி; தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய நான்கு இயக்கங்களும் சென்னையின் நான்கு இடங்களில் உறைவிடங்கள் இருந்தன. அங்கு இருந்து வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெற்று வந்தன.
ஒரு குழுவினர் இருக்கும் இடத்திற்கு இன்னொரு குழுவினர் போக மாட்டார்கள். அது அவர்களுக்குள் எழுதப் படாத ஒரு சாசனம். அந்த வகையில் பிரபாகரனுக்கு அடையாறு தான் அவரிருடைய பேட்டை. சரி.
இந்த இயக்கங்களின் தலைவர்களை இலங்கை அரசாங்கம் அங்கே யாழ்ப்பாணத்தில் வலை போட்டுத் தேடிக் கொண்டு இருந்தது. இருந்தாலும் இவர்கள் தேங்காய் எண்ணெய்யை நன்றாகக் கரைத்துக் கடைந்து ஊற்றிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.
நம்ப விவேக் இப்போது தான் திரையில் வசனங்கள் பேசி கலாய்க்கிறார். ஆனால் அதற்கு முன்னாடியே பிரபாகரன் போன்ற தலைவர்கள் பேர் போன கில்லாடிகள்.
ஆக அதில் இருந்து தப்பிக்கவே பிராபகரன் சென்னையில் தற்காலிகமாகத் தஞ்சம் அடைந்து இருந்தார்.
யாழ்ப்பாணத்தில் நடந்த பதவி மோகக் கொலைகளுக்குத் தூபம் போட்டது தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் தான். சொல்லி இருக்கிறேன். அதை இங்கே விரிவாகவும் எழுத முடியாது. எழுதவும் விரும்பவில்லை.
இருந்தாலும் கட்டுரையைத் தொடர்ந்து படித்தால் அந்தத் தலைவர்கள் யார் யார் என்பது உங்களுக்கும் தெரிய வரும். அந்தத் தலைவர்களுக்கு எல்லாம் அப்பால் பட்டவர் எம்.ஜி.ஆர்.
செத்தும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். இறந்து கொண்டு இருக்கும் போதும் இலங்கைத் தமிழர்களுக்கு அள்ளிக் கொடுத்தார். அவர் மட்டும் இன்னும் கொஞ்ச நாட்கள் உயிரோடு இருந்து இருந்தால் தமிழீழ வரலாறே வேறு மாதிரியாய் எழுதப்பட்டு இருக்கும்.
(தொடரும்)
தற்காப்புக் கலை ஆதித் தமிழர்களின் அற்புதமான கலை. தனித்து நிற்கும் தனிப் பெரும் தத்துவக் கலை. சிலம்பத்தில் சீர் செய்து வீறு வரிசை பார்த்த வீரக் கலை. வர்மத்தில் வேதங்களைக் கரைத்து அகத்தியம் வளர்த்த கலை. குத்து வரிசையில் குச்சி இல்லாமல் கரத்தாண்டவம் வார்த்த கலை.
தமிழர்களின் நாட்டுப்புறக் கலைகள் நயன் மிகுந்தவை. தமிழர்களின் அனைத்துக் கலைகளுமே தனித்துவம் வாய்ந்தவை. அதே அந்தத் தமிழர்களின் தலை வாசலில் தமிழர் ஒருவர் சாதனை படைத்து இருக்கிறார். அழகிய தமிழ் மைந்தன். அகிலன் தணி எனும் அகிலன் தணிகாசலம்.
கலப்புத் தற்காப்புக் கலையில் ஒரு கலக்கு கலக்கி, ஒட்டு மொத்த மலேசியர்களையே திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர். சரித்திரம் படைத்து சாதனை செய்து இருக்கிறார். தன் அபாரமான போட்டித் திறமையால் ஒட்டு மொத்த மலேசியர்களுக்கே பெருமை சேர்த்து இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்னர் வரையில் “அகிலன் தணி” என்கிற ஒரு தனி மனிதர் யார் என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் இன்று அவர் புகழ்பெற்றவர். மலேசியாவில் மட்டும் அல்ல; உலக அளவில் ஒரு சிறந்த விளையாட்டு வீரராகப் புகழ் பெற்று விளங்குகின்றார்.
வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்றால் ஒருவரின் உடல் வாகு; உடல் அமைப்பு; அல்லது உடல் பருமன்; அது ஒரு தடை அல்ல என்பதற்கு அகிலன் தணிகாசலம் என்பவர் தனித்து நிற்கும் ஒரு முன்னோடிச் சான்று.
மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட்ஸ் (Mixed Martial Arts) என்பது கலப்புத் தற்காப்புக் கலை. தாய்லாந்துத் தற்காப்புக் கலையைப் பின்னணியாகக் கொண்டது. முவாய் தாய் (Muay Thai); உதைக் குத்துதல் (kickboxing); குத்துச் சண்டை (boxing); மல்லுக் கட்டுதல் (grappling); ஆகிய நான்கும் கலந்ததே கலப்புத் தற்காப்புக் கலை ஆகும்.
இந்தக் கலையில் உச்சம் பார்த்தவர் உலக ஜாம்பவான் அகியாமா. இவருக்கு செக்ஸியாமா எனும் புனைப்பெயரும் உண்டு. ஜப்பானில் புகழ்பெற்ற தற்காப்புக் கலை வீரர். அவரையே வீழ்த்திச் சாதனை படைத்து இருக்கிறார் நம் நாட்டு அகிலன் தணி.

கலப்பு தற்காப்புக் கலை வீரர்களுக்கான ‘ஒன் சாம்பியன்ஷிப்’ போட்டி நான்கு நாட்களுக்கு முன்னர் சீனா, ஷாங்காய் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அகிலன் தணியும் ஜப்பானின் அகியாமாவும் மோதினார்கள்.
அகியாமாவிற்கு வயது 43. அகிலன் தணிக்கு வயது 23. பொது மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த போட்டி. ஏன் என்றால் தற்காப்பு கலையில் அகியாமா ஒரு ஜாம்பவான். அசைக்க முடியாத அசாத்திய மனிதர். நீண்ட காலமாக அனுபவம். தற்காப்புக் கலையின் நெழிவு சுழிவுகளை நெட்டிச் சொடுக்கு எடுத்தவர்.
அகியாமாவை அகிலனால் சமாளிக்க முடியுமா என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. ஏன் என்றால் அகியாமா பல ஆண்டுகளாக உலகச் சாம்பியன் விருதைத் தக்க வைத்தவர். அகியாமாவை வீழ்த்த முடியாது என்பதே பலரின் கருத்துக் கணிப்பு.

முதல் சுற்றின் முப்பதாவது விநாடியில் அகியாமாவின் தாகுதலில் அகிலன் நிலைகுலைந்து போனார். மேடையில் சரிந்து விழுந்தார். தாக்குப் பிடிக்க முடியுமா என்று பலரும் யோசித்தார்கள்.
ஆனால் நடந்ததே வேறு. இரண்டாவது சுற்றில் அகிலன் தணி, தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தினார். மூன்றாவது சுற்றில் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் அகியாமாவை வீழ்த்தினார். அந்த மூன்றாவது சுற்றே அகிலன் தணியின் விளையாட்டு வீரத்தில் அரும் பெரும் சாதனையாகக் கருதப் படுகின்றது. சரி.
அகிலன் கடந்து வந்த பாதையைப் பார்த்தால் பலருக்கும் அழுகை வரும். அவரின் பாதையில் வேதனை கலந்த சோதனைகள். பாசத்திற்காக ஏங்கிய தவிப்புகள். தனிமையில் தவித்து நின்ற இறுக்கங்கள். அம்மா இல்லையே என்கிற ஏக்கங்கள். தொடர்ந்து படியுங்கள்.
அகிலனுக்குப் பருமான உடல். அதைப் பார்த்து பலரும் கேலி செய்தார்கள். மனம் உடைந்து போய் பல நாட்கள் தனிமையில் உடகார்ந்து அழுது இருக்கிறார்.
அவருக்கு 15 - 16 வயதாகும் போது விரக்தியின் அடிமட்டத்திற்கே போய் விட்டார். அதில் இருந்து விடுபட முடியாது என்கிற ஒரு முடிவிற்கும் வந்து விட்டார். அப்போது அவருடைய உடல் எடை 139 கிலோ. மிகவும் பருத்த உடல்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் சரி; பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களும் சரி; அவருடைய உடல் பருமனைப் பார்த்து ஏளனம், பகடி செய்தார்கள். தடியன் என்றும் சமயங்களில் எருமை மாடு என்றும் கேலி செய்து இருக்கிறார்கள். அப்போது அவருக்கு பதின்ம வயது. தாயாரும் அவரை விட்டுப் போய் விட்டார்.
அந்தச் சமயத்தில் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக ஒரு திரைப்படம் வந்து படம் காட்டி விட்டுச் சென்றது. அந்தப் படத்தின் பெயர் எஸ்.பி.எல். ஷா போ லாங் (SPL: Sha Po Lang). உலகப் புகழ் சீன நடிகர் டோனி யென் நடித்த படம்.
அந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சி. அகிலனின் கவனத்தை ஈர்த்தது. அந்தக் காட்சிதான் அவரைத் தற்காப்புக் கலையின் வலைக்குள் இழுத்துப் போட்டது.
நடிகர் டோனி யென் பயின்ற பயிற்சிகள்; அவரின் அந்தத் தற்காப்புக் கலையைப் பற்றிய செயல்பாடுகள்; அவற்றைப் பற்றி நிறைய ஆய்வுகள் செய்தார். அப்படியே அதிலேயே மூழ்கியும் போனார்.

இப்போது அகிலனுக்கு வயது 22. பழைய வேதனைகளை எல்லாம் கடந்து வந்து விட்டார். ஒரே வார்த்தையில் சொன்னால் பழையதை நினைக்க நேரம் இல்லை. அதாவது நண்பர்களின் கேலிக் கிண்டல்களை அசை போட்டுப் பார்க்க நேரம் இல்லை. மறந்து விட்டார்.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு ஜியூ ஜிட்சு (jiu-jitsu) தற்காப்புக் கலை வகுப்பில் சேர்ந்தார். அது ஒரு பிரேசிலியத் தற்காப்புக் கலைப் பயிற்சி மையம். அப்போது அவருக்கு வயது 16.
வகுப்பில் சேர்ந்த மூன்றே மாதங்களில் அவருடைய உடல் எடை 10 கிலோ குறைந்தது. 139-லிருந்து 129-ஆகக் குறைந்தது. அந்த ஒரு திருப்பமே; அந்த ஒரு மாற்றமே அவரின் உடல் எடை மேலும் மேலும் குறைவதற்குத் தூண்டுகோலாகவும் அமைந்தது.
அவருக்கு 18 வயதாக இருக்கும் போது கோலாலம்பூர் ராஜா சூலானில் இருக்கும் மொனார்க்கி உடல் பயிற்சிக் கூடத்தில் (Monarchy MMA gym) துப்புரவு செய்யும் வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் 1000 ரிங்கிட். அதே சமயத்தில் பயிற்சிக் கூடத்தில் எந்த ஒரு பயிற்சியிலும் கலந்து கொண்டு பயிற்சி பெற அனுமதியும் கிடைத்தது.

கலப்பு தற்காப்புக் கலையில் தீவிரமான ஈடுபாடு கொண்டார். அதில் முழுமையாகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மல்யுத்தப் பிடிகள்; தாக்குதல் கலை போன்றவற்றின் பயிற்சி முறைகளைத் தெரிந்து கொண்டார்.
பிரேசிலியத் தற்காப்புக் கலையில் தீவிரமான பயிற்சிகள். அதற்குப் பொருத்தமாக நல்ல ஆரோக்கியமான உணவு முறை. அப்புறம் என்ன. ஆறே மாதத்தில் அகிலம் தணிகாசலத்தின் உடல் எடை 129 கிலோவில் இருந்து 93-ஆகக் குறைந்தது.
இப்போது அவருடைய எடை 77 கிலோ. சமயங்களில் 85 வரை போகும்.
பதினெட்டு வயதில் தனிமையாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்து பயிற்சிகளில் முழுமூச்சாக ஈடுபட வேண்டும் என்று விரும்பினார். வீட்டை விட்டு வெளியேறினார். பயிற்சி முகாமிலேயே தங்கினார்.
பயிற்சி முகாமைக் கவனித்துக் கொள்வது; சுத்தம் செய்வது போன்ற பணிகளைச் செய்து கொண்டே பயிற்சிகளிலும் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்தார்.

இரவு நேரத்தில் பயிற்சி முகாமின் தரையில் பிலாஸ்டிக் விரிப்பில் படுத்துத் தூங்கினார். ஒரு வருட காலம் அப்படி தூங்கி இருக்கிறார். அப்படிக் கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்ததின் பிரதிபலன்களைத் தான் இப்போது வெற்றிக் கனிகளாகச் சுவைத்துப் பார்க்கிறார்.
இப்போது அகிலன் தணி எனும் அகிலன் தணிகாசலம் என்கிற ஒரு சின்னப் பையன் நாட்டின் தலை சிறந்த தற்காப்புக் கலை வீரராகவும் திகழ்கிறார். வாழ்த்துவோம்.
அகிலனுக்கு உற்றத் தோழனாகவும் உந்து சக்தியாகவும் இருந்தவர் அவருடைய தந்தையார் தணிகாசலம். ஆரம்பத்தில் மகனின் தற்காப்புக் கலை அவருக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் காலப் போக்கில் மனம் மாறி மகனுக்கு ஒத்துழைப்பை வழங்கினார். பயிற்சிகளுக்கான செலவுகளில் ஒரு பகுதியை வழங்கியும் வந்தார்.
அகிலனுக்கு அலிகேட்டர் எனும் ஒரு சிறப்புப் பெயரும் உண்டு. அலிகேட்டர் என்பது முதலை இனத்தைச் சேர்ந்த நீள்மூக்கு முதலை.
அகிலன் கைக்குழந்தையாக இருக்கும் போதே அவருடைய தாயார் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு அவருடைய தந்தையார் தான், தனி ஆளாக இருந்து அகிலனை வளர்த்து எடுத்தார்.

அகிலனின் பால்ய வயது. தொடக்கப் பள்ளியில் பயிலும் போது கோலாலம்பூரில் ஒரே ஓர் அறை கொண்ட வீடு. அதில் ஐந்து பேர் தங்கினார்கள். அவருடைய தந்தையார்; இரு சித்தப்பாக்கள்; சின்னம்மா ஒருவர். நெருக்கி அடித்துப் படுத்துத் தூங்க வேண்டிய நிலைமை. அகிலனே சொல்கிறார்.
தன்னுடைய அம்மாவைப் பற்றி அகிலனின் நண்பர்கள் கேட்பார்கள். அவர் குடும்பத்தை விட்டுச் சென்றதைச் சொல்ல மாட்டார். அதற்குப் பதிலாக என் அம்மா ஒலிம்பிக் போட்டிக்குப் போனார். திரும்பி வரவே இல்லை என்று சொல்வாராம்.
அகிலன் மேலும் சொல்கிறார். என் அம்மாவைப் பற்றி நான் கவலைப் படுவதே இல்லை. ஏன் என்றால் என் அம்மாவின் முகத்தை நான் பார்த்ததே இல்லை. அதனால் அம்மா - மகன் உறவு முறை எதுவுமே இல்லை. அம்மா பாசம் கொஞ்சமும் இல்லை. எல்லாமே என் அப்பா தான். அவர் தான் என் தெய்வம்.
அவருடைய தந்தையாருக்கு ஓர் உணவு விடுதியில் மேற்பார்வையாளர் வேலை. அந்த விடுதியின் மற்ற மற்ற துணை விடுதிகளுக்கும் சென்று கண்காணிக்க வேண்டிய பொறுப்பு. அதனால் நள்ளிரவில் தான் வீட்டிற்கு வருவார்.

அகிலனுக்கு எட்டு வயதாக இருக்கும் போதே தன்னுடைய துணிமணிகளைச் சொந்தமாகத் துவைத்துக் கொள்ள கற்றுக் கொண்டார். வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்வார். அப்பா கொடுத்த காசைக் கொண்டு வீட்டிற்கு வேண்டிய மளிகைச் சாமான்களை வாங்கி வருவார். சொந்தமாகவே சமைத்தும் கொள்வார். குண்டர்கள் நிறைந்த செந்தூல் பகுதியில் வீடு. இருந்தாலும் தனி ஆளாக ஆறு கிலோ மீட்டர் நடந்தே பள்ளிக்குப் போய் வருவார்.
நான் சுதந்திரமாக யாருடைய உதவியும் இல்லாமல் வாழக் கற்றுக் கொண்டேன். அதனால் அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். நான் சின்ன வயதில் செய்த ஒரே தவறு. என்ன தெரியுங்களா. ரொம்ப சாப்பிட்டேன். அளவுக்கு மீறி சாப்பிட்டேன்.
அது தான் என் உடலை பெரிதாகப் பருக்க வைத்து விட்டது என்று சொல்லிவிட்டு சின்னதாகச் சிரிக்கிறார். அண்மையில் அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சி நிறுவனம் அவரைப் பேட்டி கண்டது. மனம் விட்டுப் பேசினார்.
நாங்கள் இருந்த பகுதியில் நிறைய குண்டர்களின் நடமாட்டம். அதனால் தான் தற்காப்புக் கலையில் எனக்கு நாட்டம் ஏற்பட்டது. என்னைத் தற்காத்துக் கொள்வதற்காகத் தான் தற்காப்புக் கலையில் இறங்கினேன் என்று அகிலன் சொல்கிறார்.

ஆரம்பத்தில் என்னுடைய தற்காப்புக் கலைக்கு அப்பா முழுமையான ஆதரவு வழங்க மறுத்து விட்டார். நான் பிடிவாதமாக இருந்தேன். போகப் போக அவர் இறங்கி வந்தார். பயிற்சிகளுக்குக் காசு கொடுத்தார். பயிற்சிகள் செய்வதற்கு கையுறைகள் வேண்டும். அதிக விலை. வாங்குவதற்கு காசு கொடுத்தார். எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்தார். இப்போது நான் சுதந்திரமாக வாழ்கிறேன். எல்லாச் செல்வுகளையும் நானே பார்த்துக் கொள்கிறேன். அப்பாவுக்கும் உதவி செய்கிறேன்.
எனக்கு அம்மா எனும் நினைப்பே வராது. அவர் கறுப்பா சிவப்பா என்று தெரியாது. அவர் முகத்தை நான் பார்த்ததே இல்லை. அவருடைய படமும் வீட்டில் இல்லை. அவர் எப்படி இருப்பார் என்பதும் எனக்குத் தெரியாது. அப்பாவிடம் கேட்பதும் இல்லை என்று சொல்லும் போது அகிலனின் முகத்தில் சன்னமான இறுக்கம். சன்னமான வேதனைக் கீற்றுகள். ஆனால் சிரித்துக் கொள்கிறார்.
அகிலனின் எல்லா போட்டிகளுக்கும் அவருடைய தந்தையார் முதல் ஆளாகப் போய் ஆஜராகி விடுகிறார். அகிலனை உற்சாகப் படுத்துகிறார். புருஸ் லீ போல சண்டை போட வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்.
2017 மே 26-ஆம் தேதி கலப்புத் தற்காப்புக் கலைப் போட்டியின் அனைத்துலக வெல்டர்வெயிட் சாம்பியன் பட்டத்திற்கான போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் 15 முறை உலகச் சாம்பியன் விருதை வென்ற பென் அஸ்க்ரென் (வயது 32) என்பவருடன் மோதி வரலாற்றில் இடம் பிடித்தார். அப்போது அவருக்கு வயது 21. பென் அஸ்க்ரென் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அகிலனை ஊக்குவிக்க ம.இ.கா. விரும்பியது. அகிலனுக்கு தங்கப் பதக்கமும் 10,000 ரிங்கிட் ஊக்குவிப்புத் தொகையும் வழங்கிச் சிறப்பு செய்தது. 2017-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி.
ம.இ.கா. தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தலைமையில் அகிலனுக்கு அந்தப் பாராட்டு விழா நடந்தது.
அகிலன் தணி எனும் தமிழ் இளைஞர் மலேசிய வரலாற்றில் இடம் பிடித்தது ஒரு காலச் சுவடு. நம் இந்தியச் சமுதாயத்திற்கு ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது ஒரு சாதனைச் சுவடு. வாழ்த்துகிறோம் மகனே.
சான்றுகள்:
1. https://www.onefc.com/articles/title-challenger-agilan-thani-is-inspired-every-day-by-the-single-father-who-raised-him/
2. https://www.columnlife.com/index.php/biographies/item/395-agilan-thani
3. https://sukan.my/agilan-thani-budak-dari-sentul/
4. https://www.mmafighting.com/2019/6/15/18680072/one-championship-results-yoshihiro-akiyama-suffers-debut-defeat-agilan-thani-after-four-year-layoff
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட தொடக்க காலத்தில் நிதி பற்றாக்குறை. நியாயமான முறையில் நீதியான வழியில் நிதி உதவி பெறுவதையே தமிழீழ விடுதலைப் புலிகள் குறிக்கோளாகக் கொண்டு இருந்தார்கள். ஆனால் உதவி செய்ய ஆள் இல்லாத நிலையில் நிறையவே தடுமாற்றங்கள்.
ஒரு குடும்பத்தை நடத்துவதே பெரிய பாடு. இதில் ஓர் இயக்கத்தை நடத்துவது என்றால் என்ன சாதாரண விசயமா. அதுவும் அனுதினமும் புதுப் புது ஆதரவாளர்கள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டு இருந்தார்கள். நூறாக இருந்த இயக்கம் ஆயிரம் ஆயிரமாகிப் போனது.
எப்படியாவது இயக்கத்தை நடத்த வேண்டும். முன் வைத்த காலைப் பின் வைக்கக் கூடாது.
வெளியே போய் யாரிடமும் பணம் கேட்க முடியாது. கேட்டாலும் பெரிய அளவில் கிடைக்காது. ஆயிரம் நூறு என்றால் திரட்டி விடலாம். இது இலட்சக் கணக்கு விவகாரம். ஆகப் பெரிய அளவில் நிதி தேவை. என்ன செய்யலாம் என ரொம்பவும் யோசிக்க வேண்டிய கட்டம்.
சரி. இருக்கிறதே இருக்கிறது பணப் பட்டுவாடா கருவூலம். அதுதான் வங்கிகள். பணம் தான் அங்கே கொட்டி கிடக்கிறதே. அப்புறம் என்ன. போய் பொறுக்கிக் கொண்டு வர வேண்டிய வேலை தானே. சிரிக்க வேண்டாம்.

இல்லாத ஊரில் இருப்பது எல்லாம் இலுப்பை பூக்கள். கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. அந்த மாதிரி தான் பிரபாகரனின் நிலைமையும். தொடர்ந்து படியுங்கள்.
ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்லி விடுகிறேன். தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது உலக வரலாற்றில் ஒரு காலப் பதிவு. ஆக அந்த வரலாற்றை ஒரு வரலாறாகத் தான் பார்க்க வேண்டும். வேறு மாதிரியாக ஓர் இனத்தின் புரட்சித் தனமான பார்வையில் பார்க்க வேண்டாமே.
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின் போது யூதப் படுகொலை (Holocaust) என்பது ஒரு வரலாற்றுக் காலச் சுவடு. அதை வைத்து பத்துப் பதினைந்து படங்கள் எடுத்து விட்டார்கள். அதை உலகம் எப்படி பார்க்கிறது.
உகாண்டாவில் இடி அமின் என்கிற மனித மிருகம் இடி மின்னலாய் இறங்கி வந்து அந்த நாட்டின் சரித்திரத்தையே மாற்றிப் போட்டது. அதை எப்படி பார்க்கிறார்கள்.
கம்போடியாவில் போல் போட் எனும் சர்வாதிகாரி அங்கே இலட்சக் கணக்கான அப்பாவி ஜீவன்களின் கால் கைகளை வெட்டி வீசியதை மறக்க முடியுமா. அது வரலாறு இல்லையா.

சைபீரியா காடுகளில் ஸ்டாலின் சுட்டுப் பொசுக்கிய வாயில்லா மனித உயிர்களை மறக்க முடியுமா. அது வரலாறு இல்லையா.
1914-இல் ஐந்து இலட்சம் கிரேக்கர்களை ஒட்டோமான் துருக்கிய சர்வாதிகாரி கொன்று போட்டானே... அது வரலாறு இல்லையா.
1994-இல் ஆப்பிரிக்கா ருவாண்டா நாட்டில் பத்து இலட்சம் துட்சி மக்கள் அநியாயமாகச் சாகடிக்கப் பட்டார்களே... அது வரலாறு இல்லையா. இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மட்டும் என்னவோ சிலர் வீட்டுக்கு அழைக்காத விருந்தாளியாகப் பார்க்கிறார்கள். அந்தக் கோணல் பார்வையை விட்டு விட்டு தமிழனத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட விந்துகளாகப் பார்ப்போம். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு. மரியாதை.
விடுதலைப் போராட்டம் என்றால் அப்படி இப்படி என்று கொஞ்சம் முன்னுக்குப் பின் இருக்கவே செய்யும். இஸ்ரேலியர்களுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் இந்தா எடுத்துக்கோ என்று உதவி செய்தது போல விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ய அப்போது எந்த நாடும் முன்வரவில்லை.

பாலஸ்தீனத்திற்கு வாடா தம்பி வாடா என்று லெபனான் உதவி செய்தது போல விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. பக்கத்தில் ஒரு துணைக் கண்டம் இருந்தது. ஆனால் அதுவா? எப்படா கொத்தித் திங்கலாம் என்று காத்துக் கொண்டு இருந்த வல்லாறு. அங்கே அந்தக் கதை அப்படி. பாவம் இந்த நிலையில் விடுதலைத் தமிழர்கள் என்னதான் செய்வார்கள் சொல்லுங்கள்.
1978-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் யாழ்ப்பாணத்துக் கிழக்குப் பகுதியில் இயற்கையும் கோரத் தாண்டவம் ஆடியது. சூறாவளி சுழன்று சுழன்று அடித்த அகோரம். திரிகோணமலையில் இருந்து அருகம் விரிகுடா வரை அட்டகாசமான புயல்காற்று.
ஆயிரம் பேர் உயிர் இழந்தார்கள். பத்து இலட்சம் பேர் பாதிக்கப் பட்டார்கள். இரண்டரை இலட்சம் வீடுகள் பாதிப்பு. 240 பள்ளிக்கூடங்கள் பாதிப்பு. 28 ஆயிரம் தென்னந் தோப்புகள் பதிப்பு. 600 மில்லியன் இலங்கை ரூபாய் சொத்துகள் அழிந்து போயின. அனைத்தும் தமிழர்களின் உடமைகள்.
ஆனால் அரச உதவிகள் எதிர்பார்த்த அளவிற்குப் போய்ச் சேரவில்லை. இது தமிழ் மக்களின் கோபத்தையும் வெறுப்பையும் மேலும் அதிகப் படுத்தியது.
இந்தக் கட்டத்தில் ஒரு வங்கிக் கொள்ளைக்குத் திட்டம் வகுக்கப் படுகிறது. அந்த வகையில் திருநெல்வேலி பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் உள்ள மக்கள் வங்கி கண்ணில் படுகிறது.
வெளியே இருந்து பணம் வங்கிக்கு எடுத்துச் செல்லப்படும் தகவல்கள் வந்து சேர்கின்றன.

எதிர்பார்த்தபடி பணத்தை ஏற்றிக் கொண்டு போலீஸ் காவலுடன் ஒரு ஜீப் வண்டி வங்கியை நோக்கி வருகிறது. வழக்கம் போல ஜீப் வண்டி வங்கியின் முன்னால் நிறுத்தப் படுகிறது. அதில் இருந்து போலீஸ்காரர் இறங்குகிறார்.
அவர் இறங்கியதும் செல்லக்கிளியின் துப்பாகியில் இருந்து தோட்டாக்கள் பாய்கின்றன. எல்லாமே திட்டமிட்டபடி மின்னல் வேகத்தில் நடந்து முடிகிறது.
போலீஸாரிடம் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்னோர் இயந்திரத் துப்பாக்கி வந்து சேர்கிறது. பஸ்தியாம் பிள்ளை குழுவினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட முதலாவது துப்பாக்கியோடு இப்போது இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள். பணப் பெட்டியை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டவர்கள் சிட்டாகப் பறக்கிறார்கள்.
12 இலட்சத்துக்கும் அதிகமான தொகை. 1978-ஆம் ஆண்டில் பெரிய தொகை.
போராட்டம் சூடு பிடிக்கிறது. கிட்டு என்கிற கிருஷ்ணகுமார்; மாத்தையா என்கிற மகேந்திர ராஜா; மற்றும் பலரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தனர்.
இங்கேயும் கொஞ்சம் பிரச்சினை. இயக்கத்தின் முக்கியமானர்களைக் கேட்காமல் இவர்களைப் பிரபாகரன் கொண்டு வந்ததாகக் கொஞ்சம் கசப்புகள்.
கிட்டு வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர். பிரபாகரனின் உறவினர். மாத்தையா என்பவர் பருத்தித் துறைக்காரர். இதில் ரகு என்பவர் போலீஸ் துறையில் சேர முயற்சி செய்தவர். தமிழர் என்ற காரணத்தில் இடம் கிடைக்கவில்லை. அதனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார்.

ஈழமே போராட்ட பூமியாக மாறிக் கொண்டு இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழர்களின் பிரதிநிதிகள்; அவர்கள் தான் தமிழருக்கான உரிமைப் போராளிகள் என ஈழத் தமிழர்கள் உணரத் தொடங்கினார்கள். அப்போது தான் புலிகளின் அமைப்பில் முதல் பிரிவினை ஏற்பட்டது.
போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தவர் உமாமகேஸ்வரன். இவரைப் பற்றிய ஒரு இடக்கு முடக்கான செய்தி. பிரபாகரனுக்குத் தெரிய வருகிறது. என்ன செய்தி?
கணவனை விவாகரத்து செய்த ஊர்மிளா தேவி எனும் பெண்ணும் உமா மகேஸ்வரனும் காதலிக்கிறார்கள்; கல்யாணம் செய்யாமல் கணவன் - மனைவியாக வாழ்கிறார்கள் எனும் செய்தி. உமா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கியமான புள்ளி.
இந்தச் சமயத்தில் விடுதலைப் புலிகளில் பலர் சென்னை தண்டையார் பேட்டையில் இருந்தார்கள். பிரபாகரனும் சென்னையில் தான் இருந்தார்.
பலருக்கும் உமா மகேஸ்வரன் – ஊர்மிளா மீது சந்தேகங்கள். அதைப் பற்றி பிரபாகரனிடம் சொல்லி இருக்கிறார்கள்.
உமா மகேஸ்வரன் பாலஸ்தீன இராணுவப் பயிற்சிக்குச் செல்கின்ற சமயத்தில் விமான நிலையத்தில் அவர்கள் இருவரும் காதலர்கள் போல நடந்து கொண்டார்கள். அப்போது விமான நிலையத்தில் இருந்த நாகராஜா என்பவர் பிரபாகரனிடம் கூறி இருக்கிறார். அதைப் பிரபாகரன் நம்பவில்லை.

அப்பேர்ப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இந்த அற்பக் கொசுக்கடி காதல் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையா என்று கேட்கலாம்.
ஆமாங்க பெரிய பிரச்சினை தான். இந்தப் பிரச்சினை தான் பின்னர் காலத்தில் விஸ்வரூபம் எடுத்தது. பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் சென்னை நடு ரோட்டில் சுட்டுக் கொண்டதற்கும் மூல காரணம். புரியுதுங்களா. அதனால் தான் கொஞ்சம் விரிவாக எழுத வேண்டி வருகிறது.
ஒரு பெண் நினைத்தால் ஓர் ஆணை அணைக்கவும் முடியும். அவனை அப்படியே அழிக்கவும் முடியும். தெரியும் தானே.
உமா மகேஸ்வரனைப் பிரபாகரன் அழைத்து கேட்டு இருக்கிறார். உமா மகேஸ்வரன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதைத் தவிர நான் வேறு ஏதாவது தவறு செய்து இருந்தால் சொல்லுங்கோ என பிரபாகரனையே கேட்டு இருக்கிறார்.
உமா மகேஸ்வரனின் காதல் நடவடிக்கைகளும் அதற்கு அவர் பிரபாகரனிடம் கூறிய பதிலும் சக போராளிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நல்ல ஒரு தலைமைப் பொறுப்பில் இருந்த உமா மகேஸ்வரனின் பதில் அவரின் காதல் உறவை உறுதிப் படுத்துவதாக இருந்தது.

ஒழுக்கமான ஓர் இராணுவ அமைப்பில் இந்த மாதிரியான பாலியல் குற்றச் சாட்டுக்கள் என்பது அனுமதிக்கப்பட முடியாத குற்றமாகக் கருதினார்கள்.
ஒரு சில மணி நேரம் கழித்து ஊர்மிளாவுடன் பேசிவிட்டுத் திரும்பி வருகிறார் உமா மகேஸ்வரன். அனைத்தையும் மறுக்கிறார். தன்மீது திட்டமிட்டுச் சுமத்தப்படும் பழி என்று சொல்கிறார்.
ஒரு சம்பவம். நேரில் பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள். அதையே உமா மகேஸ்வரன் மறுக்கிறார். அதுவே அவர் மீதான வெறுப்பிற்கு மேலும் தூபம் போட்டது. அந்தக் கட்டத்தில் அங்கே சென்னையில் இருந்த அனைத்துத் தமிழீழப் போராளிகளும் உமா மகேஸ்வரனுக்குப் பிடிக்காதவர்களாக மாறுகிறார்கள்.
பிரபாகரனுக்கு அதிர்ச்சி கலந்த கோபம். உமா மகேஸ்வரனை நேரில் அழைத்து விசாரிக்கலாம் என முடிவு எடுக்கிறார். விசாரணை முடிந்தது. உமா மகேஸ்வரன் செய்தது தப்பு என்று தெரிய வருகிறது.

அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் காதலித்தது தப்பு இல்லை. ஆனால் கல்யாணம் செய்து கொள். விட்டு விடுகிறோம் என்றார்கள். உமா மகேஸ்வரன் மறுத்து விட்டார். அதனால் தான் பிரபாகரனுக்குக் கோபம்.
இல்லை என்றால் பிரபாகரன் இந்தப் பிரச்சினையைப் பெரிதாக எடுத்து இருக்க மாட்டார். காதலித்தவளைக் கல்யாணம் செய்ய முடியாது என்று சொன்ன போது தான் பிரபாகரன் கோபமாகிப் போனார்.
பிரபாகரனும் ஏனைய உறுப்பினர்களும் உமா மகேஸ்வரனைப் பதவியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு சொல்கின்றனர். கசப்பான முடிவு. அதன் பின்னர் தான் உமா மகேஸ்வரன் தன் பழி வாங்கும் படலத்தைத் தொடங்குகிறார்.
(தொடரும்)
மாறி வரும் உலகில் மாற்றங்கள் மட்டுமே மாறாதவை. ஆனால் அந்த மாறாத மாற்றங்களையே மாற்றி அமைத்து மாற்றங்களைச் செய்து வருகிறார்கள் பெண்கள். என்ன சொல்லப் போகிறீர்கள். ஆண்களுக்கே சவால் விடும் ஜாம்பவான்களாக மாறி வருகிறார்கள். மறைந்து இருந்து மர்ம ஜாலங்களையும் காட்டி வருகிறார்கள்.
பெண்களைப் பார்த்து ஆண்கள் சலாம் போடுகிற காலம் நெருங்கி விட்டது. அதனால் எதற்கும் இப்போதே நான் முதல் சலாம் போட்டு விடுகிறேன். அனைத்துப் பெண்களுக்கும் சவால்களே சமாளியுங்கள்.
ஆண்களுக்கு இணையாக அனைத்து இடங்களிலும் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னணி வகிக்கின்றார்கள். இப்போது அவர்கள் இல்லாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். ஆண்களுக்குச் சரிநிகர் சமமாகச் சவால் விட்டுச் சாதனைகளைப் படைத்து வருகிறார்கள்.
சமையல் அறையே கதி என்று கிடந்த காலம் எல்லாம் இப்போது இல்லை. மலை ஏறி ரொம்ப நாளாகி விட்டது. ஆண்களால் மட்டும் தான் எதையும் செய்ய முடியும் என்கிற ஒரு காலம் அப்போது இருந்தது. பெண்களால் முடியாது என்கிற காலம் இப்போது அமேசான் காட்டிற்குள் ஓடியே போய் ஒளிந்து கொண்டதாம்.

இப்போது பாருங்கள். எந்த இடத்தில் தான் பெண்கள் இல்லை. எல்லா இடங்களிலும் அவர்களின் அல்லி தர்பார்கள். தப்பாக நினைக்க வேண்டாம். அந்த அளவிற்கு உயர்ந்து போய் உச்சம் பார்க்கின்றார்கள். அதே நிலையில் ஆண்களே அசந்து போகும் அளவிற்கு ஒரு கதை வருகிறது. படியுங்கள்.
பாரம் தூக்குதல், பளுதூக்குதல், இரும்பை வளைத்தல்; இப்படி இரும்பு சம்பந்தமான விசயங்கள் எல்லாம் அப்போதைக்கு ஆணாதிக்கத்தின் எழுதப் படாத சாசனங்கள். அவற்றில் பெண்கள் என்பவர்கள் கைதட்டித் தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மைகள்.
பெண்களுக்கும் பளு தூக்குதலுக்கும் சம்பந்தம் இல்லை என்று நக்கல் அடித்தவர்களுக்கு விக்கல் வரச் செய்து இருக்கிறார் ஆர்த்தி நிதி. அழகிய அமெரிக்கத் தமிழ்ப் பெண்மணி.

பளுதூக்குதல் போட்டியில் பெண்களும் பங்கேற்கலாம். அதில் பதக்கத்தையும் வெல்லலாம் என்பதை உணர்த்திய காட்டி இருக்கிறார் ஆர்த்தி நிதி.
உலக அளவிலான பவர் லிப்ட்டிங் (Power Lifting) எனும் பளுதூக்குதல் திறன் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி (வயது 23). வெள்ளிப் பதக்கம் பெற்று உலகச் சாதனை செய்து இருக்கிறார்.
சுவீடன் நாட்டில் இந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி. அங்கே அந்தச் சாதனை செய்யப்பட்டு உள்ளது.
’பவர் லிப்ட்டிங் பளுதூக்குதல்’ என்றால் பளு தூக்குத் திறன் போட்டி. மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமான விளையாட்டு. இந்தப் போட்டி குந்துகை, இருக்கை, நெம்புத் தூக்கல் (Squat, Bench, Deadlift) ஆகிய மூன்று கட்டங்களைக் கொண்டது.

இந்தப் பளுதூக்குதல் போட்டியில் ஒட்டு மொத்தமாக அதிக எடையைத் தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப் படுகிறார்.
ஐ.பி.எப். (IPF) எனப்படும் (International Powerlifting Federation) எனும் கழகம் உலகப் பளுதூக்குதல் திறன் கழகம் (IPF Classic Bench Press World Championship) எனும் பெயரில் ஒவ்வோர் ஆண்டும் போட்டிகளை நடத்தி வருகிறது.
இந்தப் போட்டி 1971-ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடான லக்சம்பர்க் நாட்டில் தோற்றுவிக்கப் பட்டது. விரைவில் ஒலிம்பிக் போட்டியில் இணைக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு அந்தப் போட்டி சுவீடன் நாட்டில் நடைபெற்று வருகிறது. 20-22 வயதிற்கும் உட்பட்ட 63 கிலோ எடை உள்ள பெண்களுக்கான பிரிவில், அமெரிக்காவின் சார்பில் ஆர்த்தி நிதி போட்டியிட்டார். ஒட்டு மொத்தமாக 425 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்று இருக்கிறார்.

இவர் மற்றொரு சாதனையையும் செய்து உள்ளார். இந்தத் தூக்குத் திறன் போட்டியில் குந்துகைப் பிரிவில் உலகச் சாதனை செய்து மேலும் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்று இருக்கிறார்.
ஆர்த்தியின் தந்தை கருணாநிதி தமிழகத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1987-ஆம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்வுக்காக அமெரிக்காவிற்குச் சென்றார். அங்கே 1990-ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி என்பவரைத் திருமணம் செய்தார்.
இவர்களுக்கு 1996-ஆம் ஆண்டில் ஆர்த்தி நிதி பிறந்தார். அமெரிக்காவில் தான். இவருக்கு இரண்டு வயது மூத்த அண்ணன் ஒருவர் இருக்கிறார். குடும்பத்தில் இரண்டே இரண்டு பிள்ளைகள்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பளு தூக்குத் திறன் போட்டிகளுக்காகப் பயிற்சி செய்து வந்தார். இவ்வளவு சீக்கிரத்தில் அமெரிக்காவுக்கு ஒரு பதக்கத்தை வெல்வேன் என்று நினைக்கவில்லை என்று சொல்கிறார் ஆர்த்தி.

கடுமையான ஆனால் விடாப்பிடியான பயிற்சிகள். அவைதான் அவரின் கனவை; அவரின் இலட்சயத்தை நிறைவேற்றி உள்ளன.
அவர் பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இப்படிச் சொல்கிறார்.
அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்த இந்தியர்களின் குழந்தைகள் பெரும்பாலோர் கல்வியில் சாதனை புரிவது சாதாரண விசயமாக இருக்கிறது. விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பது குறைவு.
இந்தியர்கள் என்றாலே கல்விக்கு முதலிடம் கொடுத்து அதன் மூலம் பட்டறிவிற்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள். அப்படிப்பட்ட ஒரு நிலைக்குப் புலம்பெயர்ந்த பெற்றோர்கள் தான் முக்கியக் காரணம். படிக்கணும் படிக்கணும். படித்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்று படிப்பிலேயே அதீதக் கவனம் செலுத்துகிறார்கள்.

ஆனால் கல்வியைப் போன்று விளையாட்டுத் துறையிலும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் சாதிக்க முடியும் என்பதை மறந்து விடுகிறார்கள். புலம் பெயர்ந்த தமிழர்களால் சாதித்துக் காட்ட முடியும் என்பதை உணரத் தவறி விடுகிறார்கள்.
விளையாட்டுத் துறையிலும் புகழ்பெற முடியும் எனும் எண்ணத்தை வளர்க்க வேண்டியது அவசியம். கல்வியை விட்டால் நடனம். இந்த எண்ணத்தில் இருந்து அமெரிக்க இந்தியர்கள் வெளியே வர வேண்டும் என்று கூறுகிறார் ஆர்த்தி நிதி.
இந்த மாதிரி பளு தூக்கும் போட்டிகளில் தமிழ்ப் பெண்கள் பங்கு பெறுவதைத் தமிழர்களும் சரி; பொதுவாக இந்தியர்களும் சரி; விரும்புவது இல்லை.
இருப்பினும் ஆர்த்தியின் பெற்றோர்கள் சமூக அழுத்தங்களைத் தாண்டி வேறு கோணத்தில் பயணித்து இருக்கிறார்கள். சொல்லப் போனால் மனரீதியான தடைகளை மீறி உள்ளனர். இப்படிப்பட்ட பெற்றோர் தான் இப்போதைக்கு நம் தமிழ்ச் சமூகத்திற்குத் தேவை.

ஆர்த்தியின் பெற்றோர் அளித்த ஊக்கமே அவரின் வெற்றிக்குத் தலையாய காரணம். இவர் அனைத்துலகப் போட்டிக்குத் தயாரான போது தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் கிடைத்து விட்டார்கள். அதுவே பிளஸ் பாயிண்ட்.
அவர்கள் மூலம் நல்ல தரம் வாய்ந்த பயிற்சிகள் கிடைத்து உள்ளன. அவையே அவரின் வெற்றிக்கு ஒரு காரணம்.
ஆர்த்தியின் தாயார் சாந்தி இப்படிச் சொல்கிறார். பள்ளிக் காலத்தில் பரத நாட்டியத்தில் ஆர்த்திக்கு மிகுந்த ஈடுபாடு. கல்லூரியில் சேர்ந்ததும் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபடப் போவதாக கூறினாள். அதை மனரீதியாக எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
என்றாலும் மகளின் ஆர்வத்திற்கு தடைபோடக் கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக நானும் என் கணவரும் அமைதியாகிப் போனோம். தொடக்கத்தில் இருந்தே ஆர்த்திக்கு முழு ஆதரவு அளித்து வருகிறோம்.
இந்த நிலையில் அனைத்துலக அளவில் அமெரிக்காவின் தேசிய அணிக்காகப் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று ஆர்த்தியின் தாயார் கூறினார்.
அமெரிக்காவிலேயே பரத நாட்டியம் கற்றுக் கொண்டு அங்கேயே அரங்கேற்றம் செய்தவர் ஆர்த்தி. அப்படிப் பட்டவர் எப்படி பரதநாட்டியத்தில் இருந்து பவர் லிப்ட்டிங் இரும்பு விசயத்திற்குள் நுழைந்தார்.
அதற்கு ஆர்த்தி சொல்கிறார்: மேல்நிலை பள்ளிக்கல்வி வரை பரதநாட்டியம் பயின்றேன். இடையில் ஓராண்டிற்கு அதை நிறுத்தினேன். உடல் எடை அதிகமானது. அதைத் தொடர்ந்து, உடல் எடையைக் குறைப்பதற்காக உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்றேன்.

உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றி அமைத்தேன். உடற்கட்டில் அதிகக் கவனம் செலுத்தினேன். அதைத் தொடர்ந்து பயிற்சியாளர்கள், நண்பர்கள் வழங்கிய அறிவுரையின்படி பவர்லிப்ட்டிங்கில் ஈடுபடத் தொடங்கினேன் என்றார்.
அமெரிக்கா முழுவதும் நிறவெறி இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதே சமயத்தில் நிறத்தின் அடிப்படையில் ஒருவரை தனிமைப் படுத்தும், வசைபாடும் மற்றும் தாக்குதல் தொடுக்கும் சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், நான் இதுவரை நேரடியாக இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டது இல்லை. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் தாண்டி சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது என்கிறார் ஆர்த்தி.
ஆர்த்தி பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்கா. என்றாலும் தமிழ்நாட்டை நான் மறக்கவில்லை. நான் தமிழராக வாழ்வதில் பெருமை கொள்கிறேன் என்று ஆர்த்தி பெருமைப் படுகிறார்.
நான் பள்ளியில் படித்த போது தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை எடுத்து செல்வேன். அப்போது என் நண்பர்கள் கேலி செய்தது உண்டு. ஆனால் நான் ஒரு போதும் அது குறித்து கவலைப்பட்டது இல்லை. இப்போதுகூட எனது உடற்கட்டைப் பராமரிக்கும் உணவு வகைகளில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் தொடர்கின்றன என்று கூறுகிறார்.
புலம்பெயர்ந்து அமெரிக்கா போனாலும் வீட்டில் தமிழில் தான் பேசிக் கொள்கிறார்கள்.
ஆர்த்தி சொல்கிறார். இந்தச் சமூகம் நினைப்பதைப் போன்று பெண்கள் வலுவற்றவர்கள் அல்ல. வாய்ப்பு கிடைத்தால் எந்தப் பெண்ணாலும் சாதிக்க முடியும்.
தனக்கு மிகவும் பிடித்த விசயத்தைச் செய்ய பெண்களுக்குக் குடும்பத்தினர் ஆதரவு அளிக்க வேண்டும். நினைத்ததை செய்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று கூறும் ஆர்த்தி பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணிபுரிகிறார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்வதே தன்னுடைய நீண்டகால இலட்சியம் என்று ஆர்த்தி கூறுகிறார். வாழ்த்துகிறோம் மகளே.
பெண்கள் முன்னால் ஆண்கள் புன்னகைத்து நிற்க வேண்டிய கட்டத்தில் உலக மாறுதல்கள் மாறிக் கொண்டே போகின்றன. அந்த மாறுதல்களில் ஆண்களும் பெண்களும் சமம் என்கிற ஓர் அணி சாரா மந்திரம் எல்லோருடைய வீட்டு வாசல் கதவுகளையும் தட்டிக் கொண்டே போகின்றது. ஜன்னலைத் திறந்து பாருங்கள். உங்களுக்கும் தெரியும்.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
ஆர்த்தியின் யூடியூப் காணொளி:
https://www.youtube.com/watch?v=XkhSab5_Zwk