தமிழ் மலர் - 26.11.2020
தாகித்தி தீவில் தவித்த கன்னிகள் கட்டுரையின் இறுதிப் பாகம். கப்பல் சிப்பந்திகளில் சிலருக்கு மீண்டும் இங்கிலாந்திற்குத் திரும்பிச் செல்ல மனம் வரவில்லை. அத்துடன் கப்பல் தலைவர் ரொம்பவும் கெடுபிடியாக நடந்து கொண்டார். தொட்டதற்கு எல்லாம் சவுக்கடிகள் தண்டனை. அதனால் அவருக்குப் பல தொல்லைகள். ஓர் இரவு கப்பலின் நங்கூரக் கயிற்றைத் துண்டித்து விட்டார்கள். சரி செய்யப் பட்டது.
என்னென்ன சாமான்கள் வேண்டுமோ அவற்றை எல்லாம் ஏற்றிக் கொண்டு கப்பல் கிளம்பியது. தாகித்தி மக்களுக்குத் தெரியாமல்தான் கிளம்பினார்கள். தெரிந்தால் அவர்கள் ஏதாவது கலாட்டா செய்து பயணத்தை நிறுத்தி விடலாம் இல்லையா.
அந்த மாதிரியான பயணத் தடைகள் ஏற்கனவே நடந்து உள்ளன. எல்லாவற்றையும் முன் எச்சரிக்கையுடன் செய்து இருக்கிறார்கள். கப்பல் கிளம்பி விட்டது. கப்பலில் தோங்கா (Tonga) எனும் தீவிற்கு வரும்போது கப்பலில் கலவரம் தொடங்கியது.
எல்லாம் வீச்சு அரிவாளுக்கு முன்னால் நடந்தது. பெரும் ஆழ்க்கடலில் ஒரு சின்னப் படகு. கொஞ்சம் உணவுப் பொருட்கள். குடிக்கக் கொஞ்சம் தண்ணீர். பாதுகாப்புக்கு இரண்டு கத்திகள். அவ்வளவுதான். படகில் 19 பேர். கப்பலில் 25 பேர். மறுபடியும் சொல்கிறேன். தனித்து விடப்பட்ட படகில் 19 பேர். கடத்தல்காரர்கள் புரட்சி செய்த கப்பலில் 26 பேர்.
படகில் இருப்பவர்கள் பிழைப்பார்களா இல்லையா என்று பிளெட்சர் கிரிஸ்டியன் கொஞ்சமும் கவலைப் படவில்லை. இது நடப்பது எல்லாம் பசிபிக் மாக்கடலில். அத்துடன் அங்கே ஒரு நிரந்தரமான பிரிவு. படகில் இருந்தவர்கள் ஆஸ்திரேலியாவை நோக்கி மேற்கு திசையில் பயணமானார்கள்.
ஆஸ்திரல் தீவுக்கு வந்த போது கடத்தல் குழுவினரில் இருவருக்கு காய்ச்சல். மருந்து மாத்திரை இல்லாமல் இறந்து போனார்கள். மிச்சம் 16 பேர். சில நாட்கள் ஆஸ்திரல் தீவிலேயேயே தங்கினார்கள். சில நாட்களில் மேலும் சிலர் இறந்து போனார்கள்.
அதன் பின்னர் மறுபடியும் தாகித்தி தீவிற்கே திரும்பி வந்தார்கள். குடியேறுவதற்கு அனுமதி கேட்டார்கள். சில நிபந்தனைகளின் பேரில் அனுமதி வழங்கப் பட்டது. சில வாரங்கள் தாகித்தி தீவில் தங்கினார்கள். அப்போதே ஒரு பெரிய திட்டம் போட்டு விட்டார்கள்.
கண் காணாத இடம் என்று சொன்னேனே அந்த இடத்தின் பெயர்தான் பிட்காயின் தீவு. தாகித்தி தீவில் இருந்து ஏறக்குறைய 1350 மைல்களுக்கு அப்பால் பிட்காயின் தீவு உள்ளது.
முதலில் பதினைந்து பெண்கள். அதில் ஆறு பெண்கள் வயதானவர்கள். அவர்கள் மொரியா எனும் தீவில் இறக்கிவிடப் பட்டார்கள். இளம் வயது பெண்கள் ஒன்பது பேர். புரட்சிக் கும்பலைச் சேர்ந்த ஆண்கள் ஒன்பது பேர். தாகித்திய ஆண்கள் ஐந்து பேர். ஆக மொத்தம் ஆண்கள் 14 பேர். பெண்கள் பத்து பேர் தான். பிரச்னை வருமா வராதா. கண்டிப்பாக வரும். தொடர்ந்து படியுங்கள்.
பிட்காயின் தீவிற்கு வந்தவுடன் துணைத் தளபதி பிளெட்சர் கிரிஸ்டியன் செய்த முதல் வேலை. என்ன தெரியுங்களா. தனக்குப் பிடித்தமான பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவளுடைய பெயர் மவுத்துவா (Mauatua). எஞ்சிய பெண்கள் எட்டு பேர். இந்தப் பெண்களுக்கு எந்த ஆணைப் பிடிக்குமோ அந்த ஆணைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். அப்புறம் கப்பல் எரிக்கப் பட்டது.
மற்றபடி கல்யாணம் பண்ணிக் கொள்கிற விசயத்தில் எந்தப் பெண்ணையும் வற்புறுத்தக் கூடாது என்பது ஒரு கட்டளை. எப்படிப் பார்த்தாலும் ஐந்து ஆண்களுக்கு ஜோடி இல்லாமல் போனது. நாளடைவில் அதுவே பெரிய பிரச்னையாக மாறிப் போனது. ஆண்களுக்குள் அடிக்கடி சண்டை. சண்டையில் சிலர் இறந்தும் போனார்கள். இப்படியே காலம் ஓடியது. பிள்ளைகளும் பிறந்தார்கள்.
பிட்காயின் ஒரு பெரிய தீவு என்று சொல்ல முடியாது. ஐந்து சதுர கி.மீ. பரப்பளவு. சுற்றிலும் கடல். எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட தீவு. பயிர் செய்வதற்குப் பக்குவமான மண். அப்படியே ஒரு புதிய சமுதாயம் உருவானது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு 1808-இல் திமிங்கில வேட்டைக்குப் போன அமெரிக்கர்கள் பிட்காயின் தீவில் மனிதர்கள் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார்கள். விசாரித்துப் பார்த்ததில் பிளெட்சர் கிரிஸ்டியனின் குட்டு அம்பலமானது. அதுவரையில் வெளியுலகில் யாருக்குமே இந்த விசயம் தெரியாது. தெரிந்து இருந்தால் ஆங்கிலேயர்கள் அப்போதே வந்து அத்தனைப் பேரையும் தோலை உரித்துத் தொங்கப் போட்டு இருப்பார்கள்.
அந்தத் தீவில் சிபிலிஸ் அல்லது காசநோய் வந்து இருக்கலாம். அதனால் அழிவு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. ஆனாலும் பிளெட்சர் கிரிஸ்டியன் அங்கிருந்து தப்பித்து இங்கிலாந்து சென்று வாழ்ந்ததாகவும் சொல்லப் படுகிறது. அது ஒரு கணிப்பு. உண்மை தெரியவில்லை.
1856-ஆம் ஆண்டில் இங்கிலாந்து விக்டோரியா மகாராணியார், பிட்காயின் தீவில் வாழ்ந்த மக்களுக்கு புதிதாக வேறு ஓர் இடம் கொடுத்தார். நியூசிலாந்துக்கு அருகில் இருந்த நார்போல்க் தீவில் குடியேறலாம் என்றார். 193 பேர் போய் சில ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.
அவர்களுக்கு என்று ஒரு சின்னப் பள்ளிக்கூடம். ஒரு தேவாலயம். ஒரு சின்னத் தொலைபேசி சேவை. வெளியுலகத் தொடர்புகளுக்குக் கம்பியில்லா தந்தி. வெளிநாடுகளுக்குப் படிக்கப் போகும் பிள்ளைகள் வெளிநாடுகளிலேயே தங்கி விடுகிறார்கள். திரும்பி வருவது இல்லை. பெரும்பாலும் நியூஸிலாந்து நாட்டில் வாழ்கிறார்கள்.
மாதத்திற்கு ஒரு முறை நியூசிலாந்தில் இருந்து விமானம் வருகிறது. அதில் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வந்து சேர்கின்றன. வரலாற்றுப் பின்னணியைத் தவிர வேறு சிறப்பு அம்சங்கள் எதுவும் இல்லை. சுற்றுப் பயணம் போகலாம். ஓர் ஆளுக்குப் போய் வர முப்பது நாற்பதாயிரம் ரிங்கிட் பிடிக்கும். எப்படி உங்கள் வசதி!
குப்பாங் கிராமத்தில் மூன்று மாதப் போராட்டம். அப்போது இந்தோனேசியாவை டச்சுக்காரர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். அவர்களின் உதவியால் இங்கிலாந்து சென்று சேர்ந்தார்கள். விசயம் தெரிந்து இங்கிலாந்து நாடே கொதித்துப் போனது. மறுவருடம் ஒரு தனிப் படை பிளெட்சர் கிரிஸ்டியனைத் தேடிக் கொண்டு தாகித்தி தீவுக்கு வந்தது. அங்கே அவர் இருந்தால் தானே.
கப்பல் புரட்சியில் ஈடுபட்ட ஒரு சிலர் தாகித்தி தீவில் இருந்தார்கள். பழைய கில்லாடிகள். மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப் பட்டார்கள். அங்கே விசாரிக்கப்பட்டு மூன்று பேருக்கு தூக்குமேடைக்கு அனுப்பப் பட்டார்கள்.
மன்மத ராசா குந்தால். தன் மனைவியுடன் ஐந்து மாதங்கள் தாகித்தி தீவிலேயே வாழ்ந்தார். கப்பல் புறப்படும் தினத்தில், இங்கிலாந்துக்குத் திரும்பிப் போக மறுத்து விட்டார். வேறுவழி இல்லாமல் மன்மத ராசாவைக் கட்டிப் போட்டு கப்பலில் ஏற்றி இருக்கிறார்கள்.
இந்த விசயம் அவனுடைய மனைவிக்குத் தெரியாது. தெரிந்து இருந்தால் கத்திக் கதறி ஆர்ப்பாட்டம் பண்ணி புருசனைக் காப்பாற்றி இருப்பாள். கப்பல் புறப்பட்டு ஒரு நாளைக்குப் பிறகு மன்மத ராசா கடலில் குதித்துத் தப்பிக்க முயற்சி செய்து இருக்கிறார்.
நிச்சயமாக குந்தால் நீந்திப் போய் இருக்க முடியாது. ஏன் என்றால் கடல் சுறாக்கள் நிறைந்த இடம். இரண்டு நாட்கள் கழித்து அவனுடைய உடலை மீனவர்கள் மீட்டு எடுத்து இருக்கிறார்கள். உடல் சேதம் அடையவில்லை. 50 மைல்கள் தூரம். கடல் அலைகளை மன்மத ராசாவால் சமாளிக்க முடியவில்லை. நீந்த முடியாமல் இறந்து போய் இருக்கலாம்.
கணவனின் உடலைப் பார்த்து கதறிய மனைவி, வேதனை தாங்க முடியாமல் மறுநாள் அவளும் விசம் குடித்து தற்கொலை செய்து கொண்டாள். அப்போது அவள் மூன்று மாதக் கர்ப்பிணி. பாவம். அநியாயமாக மூன்று உயிர்கள் அரிச்சுவடி இல்லாமல் அழிந்து போயின.
பிரான்ஸ் நாட்டில் நெப்போலியன் புரட்சி செய்யும் போது பசிபிக் மாக்கடலிலும் இப்படியும் மறக்க முடியாத ஒரு புரட்சி. நடுக்கடலில் நடந்த ஒரு நாடகத்தில் ஒரு சரித்திரமே உருவாகி விட்டது.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.11.2020