06 ஜூலை 2021

சயாம் மரண பாதையில் மலாயாவுக்கு நஷ்டயீடு RM 270 பில்லியன்?

சயாம் மரண இரயில் பாதை உருவாக்கப்பட்ட போது மலாயாவைச் சேர்ந்த பல்லாயிரம் தமிழர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள், இதர இனத்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட அவர்களின் குடும்பங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் 270 பில்லியன் போர் நஷ்டயீடு வழங்கியதாகவும், அந்தத் தொகை மர்மமாய்க் காணாமல் போய் விட்டதாகவும், ஊடகங்களில் பற்பல பதிவுகள்.

270 பில்லியன் நஷ்டயீடு வழங்கப் பட்டதாக முதன்முதலில் சொன்னவர் முன்னாள் பேராக் மந்திரி பெசார் நிஜார் ஜமாலுடீன்.

1967-ஆம் ஆண்டில் ஜப்பானும் மலேசியாவும் ஒரு போர் நஷ்டயீட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதில் மலேசியாவுக்கு 270 பில்லியன் ரிங்கிட் போர் நஷ்டயீடு வழங்கப் பட்டதாக 2013-ஆம் ஆண்டில் அறிவித்தார்.


அவரின் கணக்குப்படி அப்படி அந்த நிதி வழங்கப்பட்டு இருந்தால் ஜப்பான் நாடு இந்நேரம் திவாலாகி இருக்கலாம் என்பது சிலரின் கருத்து. ஏன் என்றால் 270 பில்லியன் ரிங்கிட் என்பது சாதாரண காசு அல்ல. மலேசிய நாட்டின் ஆறு மாத மொத்த வருமானம்.

(The sum of RM207 billion as compensation agreed upon in 1967 between Japan and Malaysia would have bankrupted Japan. At the historical exchange rate the RM207 billion would have worth 24 billion Pound Sterling. At current exchange rate it is worth 42 billion Pound. A mind boggling figure.)

ஜப்பான் நாடு போர் இழப்பீடுகள் வழங்க வேண்டிய நாடுகளில் மலேசியா மட்டும் அல்ல. மேலும் பல நாடுகள் இருந்தன. ஏறக்குறைய 30 நாடுகள். 20,700 கோடி ரிங்கிட் தொகையை மலாயாவுக்கு மட்டும் வழங்க ஜப்பான் ஏற்றுக் கொண்டு இருக்குமா?

உண்மைத் தகவல் தெரியாமல் நாம் ஒரு முடிவிற்கு வரக் கூடாது. வாட்ஸ் அப் ஊடகத்திலும் பேஸ்புக் ஊடகத்திலும் வரும் தகவல்கள் எல்லாம் உண்மையும் அல்ல. பொய்யும் அல்ல.

(According to Article 14 of the Treaty of Peace with Japan (1951): "Japan should pay reparations to the Allied Powers for the damage and suffering caused by it during the war.) 


1950-ஆம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் ஜப்பானிடம் 67.25 மில்லியன் போர் நஷ்டயீடு கேட்டது. ஆனால் 1950-ஆம் ஆண்டில் கிடைத்த நஷ்டயீடு இவைதான்:

1. ஜப்பானின் தொழிற்சாலை ஆலைகள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் 5% விழுக்காடு (5% of Japan’s factory plants, machinery, and equipment)

2. ஜப்பானிய கடல் படையைச் சேர்ந்த 23 போர்க் கப்பல்கள் (23 fleets of Japanese warships)

மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஜப்பான் வழங்கிய போர் இழப்பீடுகளின் விளக்கம். அப்போதைய யென் நாணயத்தில் (in yen, at the time of payment) இழப்பீடு வழங்கப்பட்ட போது:

மைக்ரோனேசியா -  Micronesia - ஆண்டு 1950 - 18 billion yen donated (680 மில்லியன் ரிங்கிட்)

மியன்மார் - Myanmar - ஆண்டு 1963 - 50.4 billion yen (US$20 million 1954, 1963)
    
பிலிப்பைன்ஸ் - Philippines - ஆண்டு 1956 - (US$525 million/52.94 billion yen 1967)
    
இந்தோனேசியா - Indonesia - ஆண்டு 1958 - (541 மில்லியன் ரிங்கிட்) - (+63.7 billion yen credit write-off)
    
லாவோஸ் - Laos - ஆண்டு 1958 - 1 billion yen grant
    
கம்போடியா - Cambodia - ஆண்டு 1959 - 1.5 billion yen grant
    
வியட்நாம் - Vietnam - ஆண்டு 1960 - US$39 million (14.04 billion yen 1959)

கொரியா - Korea - ஆண்டு 1965 - 72 billion yen (US$300 million 1965)

மலேசியா - Malaysia - ஆண்டு 1967 - (25 million Malaysian dollars / 2.94 billion yen 1967)

தாய்லாந்து - Thailand - ஆண்டு 1967 - (5.4 billion yen 1955)
    
தைவான் - Taiwan - ஆண்டு 1967 - 58 billion yen
    
சிங்கப்பூர் - Singapore - 1967 - 2.9 billion yen grant
    
ஹாலந்து - Holland - 1956 - 3.6 billion yen compensation
    
சுவிட்சர்லாந்து - Switzerland - 1955 - 1.1 billion yen compensation
    
டென்மார்க் - Denmark - 1955 - 7.23 billion yen compensation
    
சுவீடன் - Sweden - 1958 - 5 billion yen compensation
    
ஸ்பெயின் - ($5.5 million 1957)

இழப்பீடுகளுக்கான கொடுப்பனவுகள் 1955-இல் தொடங்கி 23 ஆண்டுகள் நீடித்து, 1977-ஆம் ஆண்டில் முடிந்தது. இது தொடர்பாக (3 பாகங்கள்) முழுக் கட்டுரை தமிழ் மலர் நாளிதழில் விரைவில் வெளிவருகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.07.2021



சான்றுகள்:

1. PRESS RELEASE UNITED NATIONS COMPENSATION COMMISSION PAYS OUT US$270 MILLION" (PDF). United Nations Compensation Commission. 23 July 2019.

2. RESOLUTION 687 (1991)" (PDF). U.S. Department of the Treasury. 9 April 1991. Archived (PDF)

தகவல்கள்:

The United States signed the peace treaty with 49 nations in 1952 and concluded 54 bilateral agreements that included those with Burma (US$20 million 1954, 1963), South Korea (US$300 million 1965), Indonesia (US$223.08 million 1958), the Philippines (US$525 million/52.94 billion yen 1967), Malaysia (25 million Malaysian dollars/2.94 billion yen 1967), Thailand (5.4 billion yen 1955), Micronesia (1969), Laos (1958), Cambodia (1959), Mongolia (1977), Spain ($5.5 million 1957), Switzerland, the Netherlands ($10 million 1956), Sweden and Denmark.

 

பெண்களின் வளர்ச்சி இமயம் பார்க்கும் முதிர்ச்சி

இன்றையக் காலக் கட்டத்தில் பெண்களின் வளர்ச்சி இமயம் பார்க்கும் மலர்ச்சி அல்ல முதிர்ச்சி. ஆண்களுக்குச் சமமாக... மன்னிக்கவும்... ஆண்களை விட அதிகமாகவே முன்னேறியும் வருகின்றார்கள்.

பெண்கள் பல்துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். கொடி கட்டிப் பறக்கின்றார்கள். பெருமையாக உள்ளது. பெண்களால் நாட்டிற்கும் பெருமை; வீட்டிற்கும் பெருமை.
 

அது மட்டும் அல்ல. பெண்களைப் பார்த்து ஆண்களே பொறாமைப் படும் அளவிற்கு ஒரு நவீன மயத்தில் வாழ்ந்து கொண்டும் போகிறார்கள். எனக்கும் கொஞ்சம் பொறாமை தான். மன்னிக்கவும். ரொம்பவும் இல்லை.

நாட்டை ஆட்சி செய்வதற்கு ஓர் அரசர் வேண்டும். அதைப் போல ஒரு வீட்டை ஆட்சி செய்வதற்கு ஒரு பெண் வேண்டும். இதை எவராலும் மறுக்க முடியாது. பெண்கள் இல்லாமல் பெயர் போடுவது ரொம்பவுமே சிரமம். இதை ஆண்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆக... பெண் உரிமையைக் காப்போம். பெண்ணியத்தைக் காப்போம். பெண் இனத்தைப் போற்றுவோம். ஓர் ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை மறக்காமல் இருந்தால் சரி.

அந்த வகையில் எந்த நாடு பெண்ணின் பெருமையை உயர்த்திப் பிடிக்கின்றதோ அந்த நாடு தான், உலகில் உயர்ந்த நாடு. மனிதத்தில் உச்சம் பார்க்கும் நாடு. நான்கு மனைவிகள் வேண்டும். 25 பிள்ளைகள் வேண்டும் என்பது எல்லாம் பெண்மையைச் சிறுமைப் படுத்தும் நகர்வாகும். பெண்ணாசைப் பிடித்து பெண்மையைச் சிறுமைப் படுத்தும் போக்கு. பெண்மையைச் சுய போகத்திற்குப் பயன்படுத்தும் அணுகுமுறை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.07.2021

 

05 ஜூலை 2021

வாழிய வாழியவே சாரா கலைவாணி

தமிழ் மலர் - 05.07.2021

2018-ஆம் ஆண்டு வரையில் நிர்வாகத் துறை அதிகாரி. சில வணிக நிறுவனங்களுக்கு கருத்துரைஞர். சில பல அதிகாரிகளைச் சந்தித்து நிர்வாகத் துறை பற்றி விளக்கம் கொடுத்தவர். கை நிறைய சம்பளம். மனம் நிறைந்த வாழ்க்கை. இனிதான வாழ்க்கை. இனிதான பயணங்கள்.

2019-ஆம் ஆண்டு இறுதியில் அவருக்கு 29 வயது. வலிமிகு ஓர் அதிர்ச்சி. கால் முடக்குவாதம். நடக்க முடியாமல் போய் விட்டது. அவரைச் சுற்றி இருந்த சொந்த பந்தங்கள் காணாமல் போய் விட்டன. குடும்பத்தாரால் கைவிடப் பட்டார். தனிமை வாழ்க்கை. மிகவும் சிரமப்பட்டார். உதவி கிடைக்கவில்லை.


தங்கி இருக்கும் அறைக்கு வாடகைப் பணம் தர வேண்டும். நடக்க முடியாத நிலையிலும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். மருந்துகள் வாங்க வேண்டும். அவற்றுக்குப் பணம் இல்லாமல் தவித்தார். இந்தக் கட்டத்தில் சில நல்ல உள்ளங்களும் இருந்தன. இயன்ற வரையில் பொருள் உதவி செய்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரிக்கும் பணம் சிகிச்சைக்கும் மருந்துகளுக்குமே கரைந்து விடும். இதில் கூடுதலாக வீட்டு வாடகை. ஒவ்வொரு நாளைக்கும் உணவுப் பொருட்கள் வாங்க வேண்டும். அதற்கும் செலவு. இன்னொரு புறம் அன்றாடம் பயன்படுத்த வேண்டிய பொருட்களுக்கான செலவு.


அப்போது அவர் கோலாலம்பூர் அம்பாங் பகுதியில் தங்கி இருந்தார். அங்கு இருந்து பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை மையத்திற்குச் சென்று வர வேண்டும். வாரத்திற்கு இருமுறை சிகிச்சை. அதற்கான போக்குவரத்துச் செலவு.

அங்கே இங்கே இருந்து கிடைக்கும் கொஞ்ச நஞ்ச பணம் செலவானதும் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் போகும் நிலை. கையில் காசு இல்லாமல் பல நாட்கள் பச்சைத் தண்ணீரைக் குடித்து வாழ்க்கையை நகர்த்தி இருக்கிறார். இதை அவரே சொல்லி இருக்கிறார்.

கடந்த ஈராண்டுகளில் கோவிட் காலத்தில் மிகவும் சிரமப் பட்டு இருக்கிறார். அந்தப் பக்கம் மருத்துவமனை; இந்தப் பக்கம் வீடு என்று அலைந்து திரிந்து இருக்கிறார். சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணம் எல்லாம் போக்குவரத்திற்கும்; மருந்து வாங்குவதற்கும் செல்வழிந்து போனது.
மலேசிய பொது நல அமைச்சின் (Jabatan Kebajikan Masyarakat Malaysia) உதவி கேட்டு இருக்கிறார். இன்னும் கிடைக்கவில்லை. நிலுவையில் உள்ளது. 
 
கோலாலம்பூர் மலிவு வீட்டு உதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறார். முன்பு நிராகரிக்கப் பட்டது. அண்மையில் மறுபரிசீலனை செய்யப் படுவதாகத் தகவல். கிடைப்பதும் கிடைக்காததும் கிடைக்கும் வரையில் எவருக்கும் தெரியாத மர்மம்.


ஒரு நாள் பொழுது; கொஞ்சம் நிம்மதியுடன் பயணிக்க வீடு என்று ஓர் இடம் இல்லை. வீடு வேண்டாம். இளைப்பாறுவதற்கு; ஓய்வு எடுத்துக் கொள்வதற்கு; உறங்குவதற்கு ஓர் அறை இல்லையே. என்ன செய்வார்? பாவம்.

வாடகை கட்ட முடியாத நிலை. ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு விரட்டப்படும் நிலை. உடல் ரீதியாகவும் துன்புறுத்தப் பட்டு உள்ளார். ஒரு சிலர் இவரை அடித்தும் இருக்கிறார்கள். என்ன காரணமோ. வேதனையாக உள்ளது. சில தடவை உடல் ரீதியான வற்புறுத்தலுக்கும் உள்ளாகி உள்ளார்.

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தவிக்கும் ஒரு கேள்விக் குறியான வாழ்க்கை. தவிர அவருக்கு மேலும் ஒரு நோய். தன் உடலை ஆளும் குறைநிலை (Borderline Personality Disorder).

உடல் ஆளுமைக் கோளாறு என்பது ஒரு மனநலக் கோளாறு ஆகும். உங்களைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் நீங்கள் நினைக்கும் அல்லது உணரும் தன்மைகளைப் பாதிக்கும் நோய். அன்றாட எதார்த்த வாழ்க்கையைச் செயல் படுத்துவதில் பற்பல சிக்கல்களை ஏற்படுத்தும் நோய்.


இப்படி பற்பல சிக்கல்களில் பயணித்த; பயணிக்கும் ஓர் அழகிய பெண்மணியார்தான் சாரா கலைவாணி பூபாலன் (Sarah Kalaivani Pupalan). வயது 32.

அழகு அறிவு ஐஸ்வரியம் அத்தனைக்கும் அழகு சேர்த்த பெண்மணி. நடை ஒப்பனையில் வடிவழகி (மாடலிங்). மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நல்ல ஒரு பதவியில் வாழ்ந்து பார்த்தவர்.

மனித வாழ்க்கையில் எதுவும் எப்போதும் நடக்கலாம். உண்மைதானே. அந்த வகையில் கலைவாணிக்கும் சின்ன வயதில் பெரிய வேதனைகள்.  

கால் முடக்குவாதம் (Rheumatoid Arthritis Disorder); ஒரு நீண்டகால நோய். மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக விரல்கள், மணிகட்டு, கால்கள் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் அசைவற்ற தன்மை ஏற்படலாம். இதன் விளைவாக உயிர் போகும் வலி வர்லாம்.


இதில் முடக்கு வாதம் (Rheumatoid arthritis) என்பது ஒரு வகையான் மூட்டு வீக்கம். சன்னம் சன்னமாய் அதிக வலியைக் கொடுக்கும். ஒருவரின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றல் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மூட்டுகளின் புறணிக்குள் கிருமிகள் தாக்கும் போது இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் ஆண்களைவிட பெண்களைத் தான் அதிகம் பாதிக்கிறது.

இந்தக் கட்டத்தில் எபிட் லியூ (Preacher Ustaz Ebit Lew) எனும் ஒரு சமய போதகர், அவரின் தன்னார்வ அமைப்பின் (Pertubuhan Kasih Umat Malaysia) மூலமாக உதவி செய்யத் தொடங்கினார். சாரா கலைவாணி ஏற்கனவே தங்கி இருந்த அம்பாங் அறையின் மாத வாடகை நிலுவைகள். அவை தீர்க்கப்பட ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்.

கோலாலம்பூர் அம்பாங் பகுதியில் வாடகை அறை கிடைப்பது சிரமமாக இருந்தது. வாடகையும் அதிகம். அதனால் பெட்டாலிங் ஜெயாவைச் சுற்றி வாடகைக்கு ஒரு அறையைத் தேடினார்கள். 


ஏன் என்றால் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை மையம் அங்குதானே உள்ளது. போக்குவரத்துச் செலவு மிச்சப் படலாம். அந்த வகையில் ஓர் அறை கிடைத்து உள்ளது.

சாரா கலைவானியின் பிரச்சினை வெளியே தெரிய வந்ததும் பொதுமக்கள் உதவ முன்வந்துள்ளனர். 
 
அவருக்கான உடைகள்; உணவு போன்ற பிற அடிப்படைத் தேவைகளுக்கு உதவிகள் கிடைத்து வருகின்றன. அவரின் பொழுது போக்கிற்காக சமய போதகர் எபிட் லியூ ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கி அன்பளிப்புச் செய்து உள்ளார். வாழ்க மனிதநேயம்.

எபிட் லியூ போன்றவர்கள் இந்த நாட்டிற்கும் இந்த மண்னிற்கும் மிகவும் தேவை! இனம், நிறம், மதம் பார்க்காமல் மனிதர்களுக்கு உதவும் மனிதநேயக் கரங்கள். அன்புடன் அடுத்த தலைமுறைகளை வார்க்கும் அன்பு வெளிச்சங்கள்.


சாரா கலைவாணிக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்தும் இருக்கிறார்கள். வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். வீடு இல்லை. அவருடைய அறையில் இருந்து ’ஆன் லைன்’ மூலமாக வேலை செய்வது. கோவிட் காலத்திற்குப் பிறகு அவர் அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்யலாம்.

மனித வாழ்க்கை என்பது நிரந்தரம் இல்லாதது. எந்த நேரத்தில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம். அதனால் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காமல் நல்ல எண்ணங்களுடன் வாழ்வோம். நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தில் எதன் மீதும்  ஆசை வைப்பதைத் தவிர்ப்போம். எதுவும் நிரந்தரம் இல்லை. இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருப்போம்.

செய்தி அறிந்து மனம் மிகவும் பாதித்து விட்டது. எப்படியாவது உதவி செய்ய வேண்டும். சாரா கலைவாணி பூபாலன் நம்முடன் இந்தக் கொரோனா கோவிட் காலத்தில் பயணிக்கும் பெண்மணியார்.

கோலாசிலாங்கூரைச் சேர்ந்த அன்பர் ராதா என்பவர் மலேசியம் புலனத்தில் ஒரு பதிவைப் பதிவு செய்து இருந்தார். மனதைப் புரட்டிப் போட்டது.


இது தான் மனித வாழ்க்கை. இவர் நன்றாக இருந்த காலத்தில் இவரைச் சுற்றிலும் சுற்றதார், நண்பர்கள். இவர் நலம் தவறியதால் காணாமல் போய் விட்டார்கள். பெற்றவர்கள், உடன் பிறந்தவர்களும் கூடவா இல்லை. மிக வேதனை.

கோவிட் காலத்தில் நலத்தோடு இருப்பவர்களே சிரமப் படும் போது, இவர் நிலையை நினைக்கும் போது மனம் அழுகிறது. இப்படி ஒரு நிலை இனி யாருக்கும் கொடுக்காதே இறைவா!

இவருக்கு உதவி செய்ய விரும்பும் அன்பர்கள் உதவி செய்யலாம். 


Sarah Pupalan
RHB Bank 16803800069368


மின்னஞ்சல்: sarahpupalaninsurvivalmood@yahoo.com

சான்றுகள்:

1. Ebit Lew offers much-needed shelter to homeless senior citizen and woman with disabilities - https://www.malaymail.com/news/life/2021/05/19/ebit-lew-offers-much-needed-shelter-to-homeless-senior-citizen-and-woman-wi/1975345

2. Preacher Ustaz Ebit Lew - https://www.facebook.com/ebitlewofficialpage/

3. Sarah Kalaivani Pupalan -
https://malaysiam-tamil.blogspot.com/2021/07/blog-post_26.html

4. https://gempak.com/intrend/segala-benda-tiada-yang-kebetulan-tak-sengaja-dan-sengaja-itu-semua-allah-dah-aturkan-pertemukan-ustaz-ebit-lew-50792

பின்னூட்டங்கள்

[10:54 am, 04/07/2021] Ganesan Ulu Tiram: வணக்கம் ஐயா. தங்களின் இக் கட்டுரை கண் கலங்க வைத்தது. மிக்க நன்றி. அவருக்கு நாம் என்ன செய்யலாம் சொல்லுங்க

[10:57 am, 04/07/2021] Ganesan Ulu Tiram: ரவாங்கில் ஒரு நண்பர் வீடு உள்ளது அவர் அங்கு தங்கி கொள்ளலாம். வாடகை வேண்டாம்

[10:57 am, 04/07/2021] Ganesan Ulu Tiram: முடிந்தால் கேட்டு சொல்லுங்கள் ஐயா

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நல்ல மனம் வாழ்க. பெட்டாலிங் ஜெயாவில் ஓர் அறை பார்த்து கொடுக்கப்பட்டு உள்ளது. இவரைப் பற்றிய கட்டுரை நாளைய தமிழ் மலர் நாளிதழில் வெளிவருகிறது.


 

04 ஜூலை 2021

மலேசியப் பெண்ணியவாதி மேரி சாந்தி தைரியம்

தமிழ் மலர் - 04.07.2021

மலேசிய மனித உரிமை போராட்டவாதி. அனைத்துலகப் பெண்ணுரிமைப் போராளி. ஐக்கிய நாட்டுச் சபையின் மனித உரிமை தலைமை அதிகாரி. மலேசியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் இயற்றப் படுவதற்கு மூல காரணமாக இருந்தவர். அழகிய அறிவார்ந்த பெண்மணி. மலேசியத் தமிழ்ப் பெண்ணியவாதி. மேரி சாந்தி தைரியம். கைகூப்புகிறோம்.


மலேசியாவின் மகளிர் உதவி அமைப்பு (Women’s Aid Organisation (WAO) தோன்றுவதற்கும் முன்னோடியாக இருந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழுவில் இருந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழுவிலும் (Committee on the Elimination of All Forms of Discrimination against Women) பணியாற்றியவர்.

மேரி சாந்தி தைரியம் (Mary Shanthi Dairiam). ஓர் அற்புதமான மலேசியச் சமூகச் சேவகி. மலேசியாவில் பலருக்கும் இவரைத் தெரியாது. வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டியது நம் கடமையாகும்.

இப்படி உலகப் பெண்களுக்காகப் போராடிய பெண்கள்; போராடும் பெண்களை எல்லாம் மேலாதிக்கப் பெரும் தலைவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். இனவாதத்தில் மனவாதம் கலந்தால் மனிதவாதம் மறைந்து போகலாம். அந்த வகையில் இந்தப் பெண்மணியும் மறக்கப்பட்டு இருக்கலாம். ஒரு செருகல்.


தயிர் ரசம், மிளகு ரசம், பருப்பு சாம்பார் காணொலிகள் செய்து ஒரே நாளில் உலகப் புகழ் பெறும் சோடா புட்டிகளுக்குத் தான் இன்றைய காலத்தில் மவுசு அதிகம். விளம்பரங்களும் அதிகம். அப்படிப் பட்டவர்களுக்குத் தான் அதிகம் வெளிச்சமும் கிடைக்கிறது. அசலுக்கு மவுசு குறைவு.

மேரி சாந்தி தைரியம். குடும்ப வன்முறைகளுக்கு எதிராக 1980-ஆம் ஆண்டுகளில் மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து பல மாதங்களுக்குப் பரப்புரைகள்; கண்டனக் குரல்கள் எழுப்பியவர். குடும்ப வன்முறை மசோதாவைச் சட்டமாக்குவதற்கு (Domestic Violence Act) போராட்டம் செய்து வெற்றியும் கண்டவர்.

அவரின் தொடர் பரப்புரைகளினால் தான் 1994-ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டம் (Domestic Violence Act 1994) மலேசிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. 2012-ஆம் ஆண்டில் அந்தச் சட்டம் மறுதிருத்தம் செய்யப் பட்டது. பின்னர் 2017-ஆம் ஆண்டு (Domestic Violence (Amendment) Act 2017) என்று மறுபடியும் திருத்தம் செய்யப்பட்டது.


ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவரைச் சும்மா கையை நீட்டி ஓர் அடி அடித்தாலே போதும். கையில் விலங்குடன் அந்தச் சட்டம் ஓடி வந்து எட்டிப் பார்க்கும். மேரி சாந்தி கொண்டு வந்த சட்டம்.

இது பெண்களுக்கு மட்டும் உதவும் சட்டம் அல்ல. ஆண்களுக்கும் உதவுகிறது. கோபத்தில் மனைவி ஒரு கரண்டியை எடுத்து புருசன்காரன் மீது ஒரு வீசு வீசி... அது படாத இடத்தில் பட்டு...  ஒரு சின்ன சிராய்ப்புக் காயம் பட்டு... ரெண்டு சொட்டு இரத்தம் வந்து... அது போதுங்க. பொம்பளைய பிடிச்சு உள்ளுக்கு வச்சிடலாம்.

‘வாராயோ தோழி வாராயோ’ என்று குடும்ப வன்முறைச் சட்டம் கதவைத் தட்டும். அப்புறம் அந்த ராணி லலிதாங்கி கம்பி எண்ண வேண்டி வரலாம்.

ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் மீது அல்லது ஓர் ஆணின் மீது வார்த்தைகளால் வன்முறை நிகழ்ந்தாலும் இந்தச் சட்டம் பாயும். சரிங்களா.

குடும்ப வன்முறை என்றால் என்ன. ஒரு குடும்ப உறுப்பினர் இன்னும் ஒரு குடும்ப உறுப்பினர் மீது பயன்படுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறைக்குத்தான் குடும்ப வன்முறை என்று பெயர். இது கணவன், மனைவி மீது அல்லது மனைவி, கணவன் மீது செலுத்தும் வன்முறையைப் பொதுவாகச் சுட்டுகின்றது.

அது யாராக இருந்தாலும் சரி; துணையைத் துன்புறுத்தல் பல வடிவங்களில் வெளிப்படலாம். அடித்தல், பயமுறுத்தல், பாலியல் வற்புறுத்தல், உளவியல் முறையில் வற்புறுத்தல், திருமண முறிவு என்று பயமுறுத்தல், குடும்பத்தை விட்டு வெளியேறி விடுவேன் என்று பயமுறுத்துதல் என்று பல வழிகளில் இது வெளிப்படலாம்.

கணவன் மனைவி என்று இல்லை. குடும்ப அமைப்பில் உள்ள ஆண் பெண் எவராக இருந்தாலும் இந்தக் குடும்ப வன்முறைச் சட்டம் மூலமாக நீதி கேட்கலாம்.

’நான் தாலி கட்டியவன். நான் சொன்னால் நீ கேட்கணும்டி’ என்று வறுபுறுத்தி படுக்கை அறைக்கு இழுத்துக் கொண்டு போவது எல்லாம் தப்பு. மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவன் தன் மனையைத் தொட்டாலே அது ஒரு வகையான வன்முறைதான். அது சட்டப்படி குற்றம். அதற்காக இதை வைத்துக் கொண்டு கணவனை மிரட்ட வேண்டாம் பெண்களே.


புருசன்காரன் தானே என்று குடும்பப் பெண்கள் பெரும்பாலும் பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்துப் போய் விடுவார்கள். பெண்களுக்கே உள்ள இயல்பான குணம். கணவனுக்கு விட்டுக்கொடுத்துப் போகும் குணம். இருந்தாலும் வற்புறுத்தலின் பேரில் விட்டுக் கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். இந்த இடத்தில் வற்புறுத்தல் வந்து நிற்கிறது. வற்புறுத்தல் என்பது ஒரு வகையில் பயமுறுத்துவது போலாகும்.

’நான் சொல்லி நீ கேட்கவில்லை. உனக்கு இனிமேல் ஒரு காசு தர மாட்டேன் போடி’ என்று சொல்வது குற்றம் அல்ல. ஆனால் அதைச் சொல்லி வறுபுறுத்தி அவளை இணங்க வைப்பது குற்றமாகும். புரியும் என்று நினைக்கிறேன்.

‘வந்து தொலை... வாங்கி வந்த வரம்’ என்று ஒரு மனைவி சொல்வதிலும் வன்முறை தொக்கி நிற்கிறது. நன்றாகக் கவனியுங்கள். வற்புறுத்தலைத் தாங்க முடியாமல் அந்தப் பதில் வருகிறது. ஆக இது ஆண் மீதான வன்முறைக் குற்றம்.


ஆக இந்தச் சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்கச் சமாதானமாகப் பேசி விட்டுப் போகலாமே. ’இகோ’ தனமையைத் தவிர்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது.

’உலகத்திலேயே நீ தாண்டி அழகி. உன்னைத் தவிர வேறு எவளும் அப்ரஸ் இல்லடி’ என்று இரண்டு வார்த்தை ஆசையாகப் பேசினால் போதுங்க. கதை முடிஞ்சது. மறுபேச்சு இல்லை. காலடியில் வந்து விழுந்து விடுவாள். அப்புறம் எதற்கு பலாத்காரம். சண்டை; பிணக்கு; முறைப்பு எல்லாம்.

அல்வா இனிப்பான பொருள். அதை ஒரேயடியாக ’லபக்’ என்று முழுங்குவதைக் காட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சாப்பிட்டுப் பாருங்கள். சுவையே வேறு மாதிரியாக இருக்கும். சமயங்களில் தமிழ்க் கட்டுரைகளில் துணுக்கு ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிறோமே. அந்த மாதிரி என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

மனைவியைப் புகழ்ந்து பேசி காரியத்தைச் சாதிப்பதை விட்டு விட்டு, அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதே சமயத்தில் புருசன்காரன் அமைதியாக அன்பாக இருக்கிறானே என்று பெண்கள் சிலர் புருசன்காரனை ஏறி மிதிப்பதும் உண்டு. நடக்கிற காரியம் தான். சான்றுகள் உள்ளன.

எல்லாக் குடும்பங்களிலும் அல்ல. சில குடும்பங்களில் நடப்பது உண்டு. அப்படிப்பட்ட மனைவியை இரண்டு நாள்களுக்குக் கண்டு கொள்ள வேண்டாம். அவள் சமைத்ததைச் சாப்பிட வேண்டாம். மூன்றாவது நாள் அவளே இறங்கி வந்து விடுவாள்.

ஆக இப்படிப்பட்ட ஒரு குடும்ப வன்முறைச் சட்டம் கொண்டு வரப் படுவதற்கு அல்லும் பகலும் உழைத்த மேரி சாந்தி தைரியம் அம்மாவுக்குத் தாராளமாக ஒரு கைதட்டல் கொடுக்கலாமே. அதில் ஓரவஞ்சனை வேண்டாமே.

மேரி சாந்தி தைரியம், 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர் (முன்பு University of Madras). 1991-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுசேக்ஸ் பல்கலைக்கழகத்தில் (University of Sussex) மாஸ்டர்ஸ் பட்டம் செய்தவர். ஆங்கில மொழி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இன்றும் அதே இளமைத் துடிப்புடன் மனித உரிமைப் போராட்டவாதியாகப் பயணித்துக் கொண்டு வருகிறார்.

ஐக்கிய நாட்டுச் சபையின் அறிவுரைஞராகவும் சேவை செய்து இருக்கிறார். அவருடைய மனித உரிமைச் சேவைகள் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துவோம்.

ஐ. நா. சபையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழு (UN's Gender Equality Task Force); பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழு போன்றவற்றில் பணியாற்றியவர்.

2010-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டு காசா போரைப் பற்றிய ஆய்வறிக்கையைத் தயாரிக்க ஐக்கிய நாட்டுச் சபை மூன்று பேரை அங்கு அனுப்பி வைத்தது. அந்த மூவரில் மேரி சாந்தி தைரியம் அவர்களும் ஒருவர். இப்படி ஒரு பெரிய அமைதித் தூதுவராகப் பணியாற்றியவர்.

பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் நீக்க ஒரு காப்பகம் தோற்றுவிக்கப்பட்டது. அது அனைத்துலகப் பெண்ணுரிமை காப்பகம். அந்தக் காப்பகத்தின் ஆசியப் பிரிவின் நிறுவனர்; தற்போதைய இயக்குனரும் இவரே. (International Women's Rights Action Watch - Asia Pacific)

இவர் பல பசிபிக் நாடுகளுக்கு பெண்ணுரிமை அறிவுரைஞராகவும் திகழ்கிறார். இவர் எழுதிய ’ஒரு பெண்ணின் சமத்துவ உரிமை: சிடாவின் வாக்குறுதி’ (A Woman’s Right To Equality: The Promise Of Cedaw) எனும் நூல் தாய்லாந்து பாங்காக் நகரில் பெண்ணுரிமை மாநாட்டில் (Beijing +20 conference) வெளியிடப் பட்டது.

இப்படிப்பட பெண்களை உலகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டும். பெண்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். பெண்ணியத்திற்கு மரியாதை செய்ய வேண்டும். ரசம் அதிரசம் காணொலிகள் தயாரிக்கும் போலி விளம்பரப் பிரியர்களுக்கு அல்ல; சிறுபான்மை இனத்தைச் சிறுமைப் படுத்தும் சின்னக் கொசுறுகளுக்கு அல்ல.

உண்மையாக இந்த நாட்டை உருமாற்றியவர்களின் உயரத்தை ஏற்க முடியாமல் காழ்ப்புணர்ச்சியோடு பெண்டத்தாங், பெனும்பாங் என்று பிதற்றி, உளறிக் கொட்டும் அரை வேக்காடுகளுக்கு அல்ல.

அதிரசம் பாரம்பரியச் சொத்து; ரசம் எங்க பாட்டி செஞ்ச பருப்பு சாம்பார் என்று சொல்லும் சோடா புட்டிகளைக் கண்டும் காணாமல் போய்விட வேண்டும்.

பேஸ்புக் ஊடகத்தில் பகாங் சத்யா ராமன் ஒரு வாசகம் எழுதி இருந்தார். நினைவிற்கு வருகிறது. "குருணை அரிசியும் கழுத்தறுத்தான் கருவாடும்" ஒரு நாவலுக்கு ஏற்ற தலைப்பு.

தோட்டங்களில் நாம் சொந்தமாகக் காய்கறிகளைப் பயிரிட்டு சமைத்து உண்டு வந்த வேளையில்; இன்று சொகுசு பேசும் சோம்பேறிகள் பலரின் அன்றைய உணவே அதுதானே?

இந்த வேதாந்தத்தை மறந்து விட்டவர்கள் இன்று ஒரு நாடே தங்களுடையது என்று சித்தார்த்தம் பேசுகிறார்கள். கங்கையில் குப்பை எரிந்தால் கங்கையின் மவுசு எப்போதுமே குறைந்து விடாது. அப்படித்தான் நாமும் இங்கே... என்று எழுதி இருக்கிறார். சரி.

மேரி சாந்தி தைரியம் போன்ற இந்தியப் பெண்கள் நிறைய பேர் இங்கேயும் எங்கேயும் ஜொலிக்கின்றார்கள். இருந்தாலும் மேலாண்மையின் அதிகார ஆதிக்க அழுத்தங்களின் காரணமாகப் பலர் இன்னமும் இலை மறை காய்களாகவே மறைந்து போய் நிற்கின்றார்கள். இதையே காலத்தின் கொடுமை என்று பலரும் சொல்கின்றார்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.07.2021

சான்றுகள்:

1. Mary Shanthi Dairiam (Malaysia) (pdf). Office of the United Nations High Commissioner for Human Rights.

2. Mary Shanthi Dairiam - https://en.wikipedia.org/wiki/Mary_Shanthi_Dairiam

3. Malaysian human rights and women's rights advocate - http://www.dtp.unsw.edu.au/mdm-mary-shanthi-dairiam

4. A Woman’s Right To Equality: The Promise Of Cedaw - https://www.star2.com/people/2015/01/01/fighting-for-equality/

5. International Expert Leads High Level Anti-Discrimination Forum for Royal Government of Cambodia". UNIFEM.






 

28 ஜூன் 2021

பினாங்கு உருவாக்கத்தில் அந்தமான் தமிழர்கள் - 1786

தமிழ் மலர் 28.06.2021

மலேசியாவில் காபி என்று சொன்னால் போதும். ஈப்போ வெள்ளைக் காபி (Ipoh White Coffee) நினைவுக்கு வரலாம்; காபித்தாம் (Kopitiam) நினைவுக்கு வரலாம்; அப்படியே காபி சாம் (Coffee Cham); காபி சி (Kopi-c); காபி ஓ (Kopi-o); காபி மின் திம் (Kopi min-tim); இப்படி இன்னும் பல வகையான் காபிகள் நினைவுக்கு வரலாம்.

சாப்பிட்டால் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். அது தொலைக்காட்சியில் ஒரு விளம்பரப் பாணி. அதாவது டிரெண்ட். அந்தப் பாவனையில் குடித்தால் குடித்துக் கொண்டே இருக்கலாம் எனும் என்னுடைய டயலாக்கையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சரி.
 

மலாயாவுக்கு காபி எப்படி வந்தது. இந்தக் கதை பலருக்கும் தெரியாது. காபி குடிக்கத் தெரியும். கமெண்ட் அடிக்கத் தெரியும். ஆனால் காபி மலாயாவுக்கு வந்த கதை பலருக்கும் தெரியாது. அதோடு மலாயாவில் காபி பயிர் செய்யப்பட்ட கதையும் தெரியாது. ஒன் மினிட் பிளீஸ்.

இந்தக் காபியும் காபிச் செடியும் வருவதற்கு முன்னதாகவே தமிழர்கள் மலாயாவுக்கு வந்து விட்டார்கள். இந்தப் பாயிண்டைப் பிடித்துக் கொள்ளுங்கள். சரி. மெட்ராஸ் மாநிலம் தான் தமிழர்களை இலட்சக் கணக்கில் அனுப்பி வைத்த முதல் மாநிலம். இதுவும் ரொம்ப பேருக்குத் தெரியாது.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். 1786-ஆம் ஆண்டில் பினாங்குத் தீவிற்குத் தமிழர்கள் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சுவடுகள் அப்போதைய பதிவுகளில் இருக்கும். இப்போது இருக்குமா தெரியவில்லை. அதிரசம் இடியப்பம் காணாமல் போனது மாதிரி அதுவும் அடிபட்டுப் போய் இருக்கலாம். சொல்ல முடியாது. 


ஒரு திருத்தம். காபி பயிர் செய்வதற்காகத் தமிழர்கள் கொண்டு வரப்படவில்லை. மலாயா காடுகளை வெட்டிச் சமப்படுத்த வேண்டும். மனிதர்கள் ஓடிப் பிடித்து விளையாட வேண்டும். அப்படியே குடியிருப்பு பகுதிகளை உருவாக்க வேண்டும். அதற்காகத் தான் தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள்.

1858-ஆம் ஆண்டில் தான் தமிழ்நாட்டில் இருந்து அந்தமான் தீவுகளுக்கு கைதிகள் அனுப்பப் பட்டார்கள். அதற்கு முன்னர் 1780-ஆம் ஆண்டுகளில் மலாயாவுக்கும் பெங்கூலனுக்கும் ஏறக்குறைய 15 ஆயிரம் கைதிகள் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். அந்தக் கைதிகள் சிலர் தான் பினாங்கிற்குப் பின்னாட்களில் கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள்.

(சான்று: Yang, Anand A. “Indian Convict Workers in Southeast Asia in the Late Eighteenth and Early Nineteenth Centuries.” Journal of World History, vol. 14, no. 2, 2003, pp. 179–208. JSTOR, www.jstor.org/stable/20079205. Accessed 27 June 2021.)

(Indian labourers, most likely former convicts, repairing a road in front of the since demolished Chartered Bank Building along Battery Road, circa 1890. Image reproduced from Liu, G. (1999). Singapore: A Pictorial History 1819–2000. Singapore: Archipelago Press in association with the National Heritage Board.)



India dispatched 4000 - 6000 convicts to Bencoolen between 1787 and 1825 and 15,000 to the Straits Settlements between 1780 and 1860. Another 1,000 - 1,500 were transported from Ceylon to Malacca in the Straits Settlements between 1849 and 1873, and several thousands were sent to Burma and to the areas outside of Southeast Asia, principally Mauritius between 1815 and 1837 and the Andaman Islands after 1857.

(சான்று: Nicholas and Shergold ''Transportation as Global Migration" in Convict Workers p.30, Bernard Bailyn, The Peopling of British North America: An Introduction (Madison, 1986), p.121

அந்தக் கட்டத்தில் பினாங்குத் தீவைத் திறப்பதற்கு கிழக்கிந்தியக் கம்பெனியாருடன் பிரான்சிஸ் லைட் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். பினாங்குத் தீவைத் திறப்பதற்கு ஒப்புதல் கிடைத்தால் கைதிகளில் ஒரு பகுதியினரைப் பினாங்குத் தீவிற்கு அழைத்துச் செல்லலாம் என்றும் எண்ணம் கொண்டு இருந்தார். அதே போல ஒப்புதல் கிடைத்தது. 1786 ஜுலை 17-ஆம் தேதி பினாங்குத் தீவைத் திறப்பதற்கு மூன்று கப்பல்களில் வந்தார்.  



100 தமிழ்நாட்டுச் சிப்பாய்கள்; 30 லாஸ்கார் வீரர்கள் (lascars); 15 பீரங்கிப்படை வீரர்கள்; 5 பிரிட்டிஷ் அதிகார்கள்; கூடவே 40 தமிழர்களையும் அழைத்து வந்தார். இந்தத் தமிழர்கள் தான் பினாங்குத் தீவில் முதன்முதலில் காடுகளை அழிப்பதற்கும் சாலைகள் அமைப்பதற்கும் முன்னோடிகளாக இருந்தவர்கள்.

அந்த வகையில் மலாயாவுக்கு வந்த மூத்த தமிழர்கள் சாதாரண தமிழர்கள் அல்ல. மலையூர் மண்ணின் வளப்பத்திற்கும் செழிப்பிற்கும் மந்திரச் சொற்களை வாசித்துக் முதல் மனிதர்கள்.

மலாயா காடுகளைக் கேளுங்கள். மரம் செடி கொடிகளைக் கேளுங்கள். ரொம்ப வேண்டாம். மக்கிப் போன மரங்களையும் கேட்டுப் பாருங்கள். அவைகூட அழுது கொண்டே பதில் சொல்லும்.

மலாயா தமிழர்கள் வாசித்து வந்த மந்திரச் சொற்களின் சாரலில் அவர்களும் நனைந்து கரைந்து கடைசியில் காணாமல் போய் விட்டார்கள். அந்த வாயில்லா ஜீவன்களுக்கு முதல் வணக்கம். முதல் மரியாதை. 


மலாயா தமிழர்கள் வாசித்த அந்த மந்திரச் சொற்கள் காலத்தால் மறக்க முடியாத உண்மைகள். அந்த உண்மைகளுக்குள் இன்னும் ஓர் உண்மை மறைந்து உள்ளது. அந்தக் கித்தா தோப்பு ஜீவன்களே இந்த நாட்டின் மறக்க முடியாத ஜீவகாருண்யங்கள். அதுதான் மறைந்து கிடக்கும் உண்மை.

வரலாறு தெரியாதவர்கள்; அல்லது வரலாறு படிக்காதவர்கள்; அல்லது அந்த வரலாற்றையே மறைப்பவர்களின் பார்வையில், வேண்டும் என்றால் அந்த வாயில்லா ஜீவன்களுக்குப் பெயர் வந்தேறிகளாக இருக்கலாம். பெனும்பாங் என்றும் இருக்கலாம். ஆனால் வரலாறு தெரிந்தவர்களின் பார்வையில் அவர்கள் வந்தேறிகள் அல்ல. சத்தியமான தியாகச் சீலங்கள்.

உண்மையை உரசிப் பார்த்தால் அந்தக் கித்தா தோப்பு ஜீவன்கள் தான் அச்சு அசலான மைந்தர்கள். அம்சமான மண்வாசனைகள். வாய் இருந்தும் வாய்விட்டுப் பேச முடியாத அந்த வாயில்லா பூச்சிகளினால் தான் மலைநாட்டு மண்வாசனையை இன்னமும் பலர் சுவாசித்துக் கொண்டு இருக்கிறார்கள். 


உண்மையைச் சொன்னால் சிலருக்குக் கோபம் வரலாம். சண்டைக்கும் வரலாம். பிரச்சினை இல்லை. சபைக்கு உதவாத சோம்பேறிகளைப் பற்றி பேசுவதினால் யாருக்கும் எவருக்கும் எந்த நன்மையும் இல்லை.

1786-ஆம் ஆண்டில் கெடா சுல்தானிடம் இருந்து பிரான்சிஸ் லைட் (Francis Light) ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். பினாங்குத் தீவைப் பெற்றுக் கொண்டார். இதுவும் ஒரு பெரிய வரலாறு. 
 
பினாங்குத் தீவு ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்ட போது அது ஒரு பெரிய காடாக இருந்தது. மனிதர்கள் எளிதாக நுழைந்து போக முடியாத காடுகள். ஓர் ஆள் உயரத்திற்கு நிரம்பி வழிந்த காட்டுப் புதர்கள். லாலான் காடுகள். அந்தக் காடுகளிலும் அந்தப் புதர்களிலும் பல வகையான விலங்குகள் காட்டு தர்பார் செய்து கொண்டு இருந்தன.

அந்தப் பக்கம் காட்டு யானைகள். இன்னொரு பக்கம் காட்டுப் புலிகள். மற்றொரு பக்கம் மலைப் பாம்புகள். இந்தப் பக்கம் காண்டா கரடிகள். சும்மா சொல்லக் கூடாது. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேரன் பேத்திகள் எடுத்து பெரிய காட்டுக் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து இருக்கின்றன. அந்தக் காடுகளை அழிப்பதற்கு அப்போது ஆட்கள் தேவைப் பட்டார்கள்.

அப்போது பினாங்குத் தீவில் பெரும்பாலும் மீனவர்கள் வாழ்ந்தார்கள். எளிய வாழ்க்கை முறை. எளிமையான வாழ்வியல் அமைப்பு. ஒருபுறம் கடலிலும் ஆற்றிலும் கிடைத்த மீன்கள். இன்னொரு புறம் மணல் மேடுகளில் கிடைத்த மரவெள்ளிக் கிழங்குகள். சுட்டுப் பொசுக்கிச் சாப்பிடுவதில் மனநிறைவு. எளிதான வாழ்க்கை. ஆக அப்படி வாழ்ந்தவர்களுக்கு காடுகளை அழிக்கும் வேலைகள் சரிபட்டு வரவில்லை.


பக்கத்தில் இருந்த இந்தோனேசியா ஜாவா தீவில் இருந்து மக்களைக் கொண்டு வந்தார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளிகள். ஆனால் ஒரு பலகீனம். சம்பளம் போட்டதும் சில நாட்களுக்கு வேலைக்காட்டுப் பக்கமாய்த் தலை வைத்துப் படுக்க மாட்டார்கள். வேலைகள் அப்படி அப்படியே நின்று போகும்.

அதனால் தமிழகத்தில் இருந்து தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். ஒப்பந்தக் கூலிகளாக அல்ல. இந்தியாவை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்களின் அரசியல் கைதிகளாக வந்தார்கள். அதாவது நாடு கடத்தப் பட்டார்கள். அப்படி வந்தவர்கள் எல்லாம் அங்கே இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர்கள். முதலில் சின்னச் சின்னக் குற்றங்களைச் செய்தவர்கள் பினாங்கிற்குக் கொண்டு வரப் பட்டார்கள்.

ஆக அப்படிக் கொண்டு வரப்பட்ட தமிழர்கள் தான் பினாங்கு மலைக் காடுகளை வெட்டிச் சீர் செய்தார்கள். காண்டா காடுகளை வெட்டித் துப்புரவு செய்தார்கள். குடியிருப்புப் பகுதிகள் உருவாக்கித் தந்தார்கள். வெள்ளைக்காரர்கள் ’கோல்ப்’ விளையாட திடல்களையும் செய்து கொடுத்தார்கள். காடு மேடுகளாய்ப் பரந்து கிடந்த பினாங்கை, மக்கள் வாழும் திண்ணை மேடுகளாக மாற்றிக் காட்டினார்கள். அதன் பின்னர் தான் 1800-ஆம் ஆண்டுகளில் பினாங்கில் காபி பயிர் செய்யப் பட்டது. 


ஏற்கனவே 1750-ஆம் ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குத் தமிழர்கள் நாடு கடத்தப்பட்டு வந்தார்கள். இந்தியாவில் வெள்ளையர்களை எதிர்த்தவர்கள் எல்லாம் அந்தமானுக்கு நாடு கடத்தப் பட்டார்கள். 1786-ஆம் ஆண்டு பினாங்குத் தீவு திறக்கப் பட்டதும் அங்கேயும் தமிழர்கள் நாடு கடத்தப் பட்டார்கள்.

ஆக அப்படி வந்த தமிழர்கள் தான் பினாங்கு தீவின் காடுகளை அழித்தார்கள். ரோடுகளைப் போட்டார்கள். மறுபடியும் சொல்ல வேண்டி வருகிறது. இல்லை என்றால் மறந்து போகும். அப்புறம் என்னாங்க. பக்கத்தில் இருக்கும் மனைவியையே மறந்து போகும் காலத்தில் ரொம்ப பேர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆக எல்லாவற்றையுமே இரண்டு மூன்று முறை சொல்ல வேண்டி வருகிறது.
 
மலாயாவுக்கு வந்த தமிழர்கள், மற்றவர்கள் சுகமாய் மகிழ்ச்சியாய் வாழும் அளவிற்கு நல்லது செய்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். அவர்கள் போட்டுக் கொடுத்த சாலைகளில் தான் பலரும் இப்போது சொகுசாய்க் கார் ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். என்னையும் பாருங்க என் அழகையும் பாருங்க என்று செல்பி படங்களையும் எடுத்துக் கொள்கிறார்கள்.

அந்தச் சொகுசு ராசா ராசாத்திகளில் சிலர்; காடுகள் அழித்தவர்களைப் பார்த்து பெனும்பாங் என்கிறார்கள். சரியான லூசுகள். அந்த மேனா மினுக்கி லூசுகளை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. நோ சூடு. நோ சொரணை.


இன்னும் ஒரு விசயம். இங்கிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ஆங்கிலேயர்கள் தான் இப்போது ஆஸ்திரேலியாவின் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தான் இன்றைக்கும் ஆஸ்திரேலியாவை ஆட்சி செய்கிறார்கள். ஆனால் பினாங்கிற்குக் கொண்டு வரப்பட்ட தமிழர்கள் என்ன ஆனார்கள். பினாங்கு தண்ணீர்மலை முருகப் பெருமானுக்குத் தான் தெரியும்.

என்னைக் கேட்டால் அட்ரஸ் இல்லாமல் கழற்றிவிடப் பட்டார்கள். அதுவே ஒரு வரலாற்றுக் கொடுமை. ஆக இப்படியும் சொல்லலாம். 1780-ஆம் ஆண்டுகளில் பினாங்கு தீவு என்பது மலாயா கட்டுமானத்தின் முன்வைப்பு. பினாங்கு முன்னோடி பிரான்சிஸ் லைட் அவர்களின் முன்னெடுப்பு. அதுவே தமிழர்களின் முதன்மைப் பங்களிப்பு.

இன்னும் ஒரு விசயம். பினாங்கு தமிழர்கள் தான் பினாங்கு கொடிமலையில் பாதை அமைத்துக் கொடுத்தார்கள். பினாங்கு கொடி மலையில் இருந்து குடி நீரை மாட்டு வண்டிகளில் தோம்பு கட்டிக் கொண்டு வந்தார்கள். ஜார்ஜ் டவுன் நகரத்தில் வாழ்ந்த எல்லா இன மக்களுக்கும் விநியோகம் செய்தார்கள். அவர்கள் கொண்டு வந்து கொடுத்த பச்சைத் தண்ணீரைக் குடித்து அவர்களுக்கே பச்சையாகத் துரோகம் நினைகலாமா?


பினாங்கு வனப்பூங்காவை 150 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்புச் செய்தார்கள். அது மட்டும் அல்ல. குட்டித் துறைமுகமாக இருந்த பினாங்கு துறைமுகத்தைப் பெரிய பரிமாணத்தில் வார்த்துப் பெருமை செய்து இருக்கிறார்கள். பினாங்கு சாலைகளின் கட்டுமானத்தை அமைத்துக் கொடுத்தவர்களும் மலாயா தமிழர்கள் தான். ரொம்ப வேண்டாம்.

பாயான் லெப்பாஸ் விமானத் திடலை அமைத்துக் கொடுத்தவர்களும் மலாயா தமிழர்கள் தான். பினாங்கு ஜெட்டி துறைமுகத்தை அமைத்துக் கொடுத்தவர்களும் தமிழர்கள் தான். கொடிமலைக்கு இரயில் பாதையைப் போட்டுக் கொடுத்தவர்களும் தமிழர்கள் தான்.

1867-ஆம் ஆண்டு பினாங்கில் வாழ்ந்த தமிழர்கள் பற்றிய ஓர் அபூர்வமான புகைப்படம் உள்ளது. 1800-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே தமிழர்கள் மலாயாவுக்குக் கொண்டு வரப் பட்டதைச் சித்தரிக்கும் படம்.

நமக்கு கிடைத்த சான்றுகளின் படி, 1837-ஆம் ஆண்டு 2000 தமிழர்கள் பினாங்கிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள். இது அதிகாரப்பூர்வமற்ற குடியேற்றம். மெட்ராஸ் அரசாங்கத்திற்குத் தெரியாமல் நடைபெற்றது. முன்னர் காலத்தில் சென்னை மாநிலத்தை மெட்ராஸ் அரசாங்கம் என்று அழைத்தார்கள்.

சில வரலாற்றுப் படங்கள் கிடைத்து உள்ளன. அந்தப் புகைப்படங்களை எடுத்தவர் கிரிஸ்டன் பீல்பர்க் (Kristen Feilberg). 1867-ஆம் ஆண்டு பாரிஸ் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப் பட்டது. இந்த மாதிரியான வரலாற்றுப் படங்கள் இல்லை என்றால் வந்தேறிகள் என்று சொல்கிறார்களே; அவர்களின் சீண்டல்கள் மேலும் அதிகரிக்கும். அவர்களின் வசைமொழிகளைத் தவிர்ப்பவதற்கு, எதிர்காலத்தில் இந்தப் படங்கள் துருப்புச் சீட்டுகளாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஒரு கட்டத்தில் மெட்ராஸ் மாநிலத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தெரியாமல் தமிழர்கள் பினாங்கில் உள்ள கரும்புத் தோட்டங்களுக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள். இதுவும் ஓர் அரிய தகவல். 1844-ஆம் ஆண்டில் தான் ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தமிழர்கள் மலாயாவுக்கு கொண்டு வரப் பட்டார்கள். 


மலைக்காட்டு மலையகத்தைப் பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டிய மலாயா தமிழர்களுக்கு நாம் எப்போதும் மரியாதை செய்வோம். கொட்டும் மழையிலும் கொக்கரிக்கும் வெயிலிலும் வெறும் வேட்டி முண்டாசு கட்டிக் கொண்டு பினாங்கு தீவின் கட்டுமானத்தில் முதுகெலும்பாய் வாழ்ந்து காட்டியவர்கள். அரசியல் கைதிகளாகவும் அற்றைக் கூலிகளாகவும் பரிணமிததவர்கள். பினாங்குத் தீவின் வளப்பத்திற்கும் ஒட்டு மொத்த மாலாயாவின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தவர்கள்.

இவர்களைப் போய் வந்தேறிகள் என்று சொல்கிறார்களே. என்னங்க சொல்வது. இதில் இப்போது ரவிக்கையும் சேலையும் பாரம்பரிய உடை என்று வேறு சொல்கிறார்கள். எங்கேயாவது மனுசன் இல்லாத காட்டுக்கு ஓடிப் போகலாம் போல இருக்கிறது. அங்கே ஓடினாலும் ரசமும் சாம்பாரும் எங்கள் பரம்பரை சொத்து என்று சொல்லி அங்கேயும் வரலாம். என்னதான் நடக்கிறது. ஒன்னுமே புரியலீங்க.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.06.2021

சான்றுகள்:

1.  Sandhu, Kernial Singh (1969), Indians in Malaya-immigration and settlement, Cambridge University Press

2.  Kuppusamy, Baradan (20 March 2008). "Dr P. Ramasamy – from critic to Penang No. 2". The Star.

3. Sinnappah, Anasanatnam (1979), Indians in Malaysia and Singapore, Kuala Lumpur: Oxford University Press

4. Snider, Nancy (1968), "What Happened in Penang", Asian Survey, 12: 960–975