26 ஜனவரி 2014

இளம்பெண்கள் கைப்பேசி எண்களைக் கொடுப்பதால் ஏற்படும் தொல்லைகள்

கணினியும் நீங்களும் - மலேசியா தினக்குரல் நாளிதழ்
26.01.2014 ஞாயிறு மலர்

..................................................................................................................................................

சரவணன் குமார், சுங்கை பூலோ, சிலாங்கூர்
கே: ஐயா, நான் தமிழ்நாடு திருச்சியில் இருந்து இங்கு வந்து கடந்த ஆறு ஆண்டுகளாக வேலை செய்கிறேன். அண்மையில் என் நண்பர் அவர் வேலை  செய்யும் இடத்தில் இருந்து ஒரு பழைய கணினியை என்னிடம் வந்து கொடுத்தார். அது சரியாக வேலை செய்யவில்லை. நான் செலவு செய்து பழுது பார்த்தேன். நன்றாக வேலை செய்வதைப் பார்த்த அந்த நண்பர் இப்போது அந்தக் கணினியை வேண்டும் என்கிறார். கொடுக்க முடியாது என்றேன். மிரட்டிப் பார்க்கிறார். மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது ஐயா. என்ன செய்யலாம்?



ப: நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அந்த மாதிரியான மனிதர்களை நண்பர் என்று அழைப்பதை முதலில் நிறுத்தி விடுங்கள். மனித நேயங்களை மறந்து வாழும் மானிடப் பிண்டங்களை எல்லாம் எப்படி ஐயா நண்பர்கள் என்று முடியும். சொல்லுங்கள். அற்ப சகவாசம் பிராண சங்கடம் எனும் பழமொழி இருக்கிறதே அது உங்களுக்குத் தெரியாதா.

பழுது பார்க்க நீங்கள் செலவு செய்த காசை, அவரிடம் இருந்து முதலில் வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு கணினியைத் திருப்பிக் கொடுக்கலாம். கவலைப் பட வேண்டாம்.

என்னிடம் பழைய கணினிகள் இரண்டு இருக்கின்றன. அவற்றில் ஒன்றை உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறேன். ஈப்போ வரும்போது பெற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் செலவு செய்த பணத்தைக் கேளுங்கள். அவர் கொடுக்க முடியாது என்றால் எனக்குத் தெரிவியுங்கள். சுங்கை பூலோவில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் புக்கிட் அமான் மலேசியப் போலீஸ் தலைமையகத்தில் ஓர் ஆணையர். அவரிடம் சொல்லி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்வோம். கவலைப் பட வேண்டாம்.

நீங்கள் ஒரு தமிழர். நானும் ஒரு தமிழர். நீங்கள் ஒரு நம்பிக்கையுடன் அங்கே இருந்து இங்கே வந்து வேலை செய்கிறீர்கள். இங்குள்ள  தமிழர்கள் தான் உங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். அதை விடுத்து உங்களை ஏமாற்றி பிழைப்பது என்பது ஈனத் தனமான செயல். அப்படிப் பட்ட மனிதர்களை எல்லாம் வெட்கம் கெட்ட ஜென்மங்கள் என்று சொன்னால் தப்பே இல்லை.

உங்கள் வாழ்க்கையில் எது உங்களை விட்டுப் போகலாம். ஆனால், தன்னம்பிக்கை என்பதை மட்டும் விட்டுப் போகாமல் பார்த்துக் கொளுங்கள். தன்னம்பிக்கை என்பதுதான் வாழ்க்கை. அதுதான் ஆண்டவரின் அடுத்த அவதாரம்.

..................................................................................................................................................

சுந்தரராஜன் பெருமாள், ஜாலான் காசிங், பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர்.
கே: சிடி-ரோம் டிரைவின் வேகத்தை 20X, 48X, 52X என்று குறிப்பிடுகிறார்கள். அதில் X என்றால் என்ன?



ப: ’சிடி-ரோம்’ என்றால் குறும் தட்டு. ’சிடி-ரோம் டிரைவ்’ என்றால் குறும் தட்டகம். முதன்முதலில் வெளிவந்த குறும் தட்டகத்தின் வேகம் 150 KBPS. இந்தக் குறும் தட்டகங்கள் 1990-களில் வெளிவந்தவை. விலையும் அதிகம். KBPS என்பதன் விரிவாக்கம் Kilo Bytes Per Second.

அப்படி என்றால் ஒரு விநாடியில் எத்தனை ‘பைட்ஸ்’ தகவல்கள் பரிமாறப் படுகின்றன என்பதைக் குறிக்கிறது. ஆக, ஆரம்பத்தில் வெளிவந்த குறும் தட்டகத்தின் வேகம் 150 KBPS ஆக இருந்தது.

பின்னர், வேகம் கூடிய தட்டகங்கள் வெளிவந்தன. புதிய குறும் தட்டகங்களின் வேகத்தை எடுத்துச் சொல்ல பழைய குறும் தட்டகங்களின் வேகத்தை X  எனும் அடிப்படையில் எடுத்துக் கொண்டார்கள்.

ஆகவே 20X என்றால் 20 X 150 = 3000 கே.பி.பி.எஸ். என்று பொருள். அதாவது ஒரு விநாடிக்கு 3000 பைட்ஸ் தகவல்களை பரிமாறிக் கொள்கிறது என்று பொருள்.

ஒரு ’பைட்’ என்றால் என்ன என்று கேட்கலாம். ‘அ’ எனும் எழுத்துக்கு எட்டு பைட்ஸ்கள். ‘ஆ’ எனும் எழுத்துக்கும் எட்டு பைட்ஸ்கள்தான். உலகத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் எட்டு பைட்ஸ்களைத் தான் கொடுத்து இருக்கிறார்கள்.

அந்தக் கணக்குப் படி, ஒரு விநாடி நேரத்தில் 400 எழுத்துகளை, அந்தத் தட்டகம் படிக்கின்றது. புரியுதுங்களா.

இப்போது 80X குறும் தட்டகங்களும் வெளிவந்து விட்டன. பழைய 2X குறும் தட்டின் விலை அப்போதைய விலையில் நான்கு ரிங்கிட். இப்போதைய குறும் தட்டின் விலை வெறும் நாற்பது காசுகள் தான். 

சில ஆண்டுகளுக்கு முன்னால் ’புளுரே’ எனும் தட்டகங்களும் வந்துவிட்டன. ஒரே ஒரு ’புளுரே’ தட்டை வைத்துக் கொண்டு உலகத்தில் உள்ள அத்தனை பேருடைய முகவரி விவரங்களை எழுதி வைத்துக் கொள்ள முடியும். அவர்களின் பூர்வீகத்தையும் எழுதி வைக்க முடியும். ஆக, கணினி உலகம் எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது. விரட்டிப் பிடியுங்கள்.

..................................................................................................................................................

மா. நல்லபெருமாள், ஜே.பி.ஜே. கோலகங்சார்
கே: சில இளம்பெண்கள் மற்றவர்களிடம் கொஞ்சம் பழகியதும் தங்களின் கைப்பேசி எண்களைக் கொடுத்து விடுகின்றனர். கடைசியில் தொல்லைகளில் மாட்டிக் கொண்டு அவதிப் படுகின்றார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?


ப: நான் என்ன சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு சிலர் சொன்னால் கேட்க மாட்டார்கள். பட்ட பிறகுதான் வேதனை தெரியும். நெருப்பு சுடும் என்று சொல்லிப் பாருங்கள்.

அது என்ன சுடும் என்று திருப்பிக் கேட்பார்கள். சுட்ட பிறகு ‘ஐயோ சுட்டு புடுச்சே...  ஐயோ சுட்டு புடுச்சே... ’ என்று ஒப்பாரி வைப்பார்கள்.

ஆக, சில ஜென்மங்களைத் திருத்தலாம். ஒரு சில ஜென்மங்களைச் சுட்டுப் போட்டாலும் திருத்தவே முடியாது. எல்லோரையும் சொல்லவில்லை. பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் திருவிளையாடல் படத்தில் தருமி நாகேஷ் நினைப்வுக்கு வருகிறது. என்னைக் கேட்டால்  கைப்பேசியும் அதில் தொங்கி வழிவதும் என்று சொல்வேன்.

அதற்காகச் சண்டைக்கு வரவேண்டாம். கைப்பேசியை ஒரு பொழுது போக்காகக் கருதும் பெண்கள், தயவு செய்து கொஞ்சம் யோசிக்க வேண்டும். சொல்ல வேண்டியது என் கடமை.

1. அவசியமின்றி யாருக்கும் கைப்பேசி எண்களைக் கொடுக்காதீர்கள். புருஷனுக்கும் பிள்ளைகளுக்கும் தெரிந்தால் போதும்.

2. பொது இடங்களில் நீட்டப்படும் வருகைப் பதிவேடுகளில் உங்கள் கணவர் அல்லது தந்தையின் கைப்பேசி எண்களைப் பதிவு செய்யுங்கள். உங்கள் எண்களைப் பதிவு செய்ய வேண்டாம். பிற்கு ஆபத்தாக முடியும்.

3. அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளைத் தவிர்க்கவும். எடுத்து ‘Wrong Number' என்று சொல்லி வைத்து விடுங்கள்.

4. கடலைபோடும் ஆசாமிகள் இருக்கிறார்கள். வேலை வெட்டி இல்லாத ஜென்மங்கள். அவர்களிடம் கறார் வேண்டும்.

5. நன்றாகப் பேசுபவர் எல்லாம் நல்லவர் என நம்பாதீர்கள். இனிக்க இனிக்கப் பேசுபவர்கள் எல்லாம் நல்லவர்கள் அல்ல.

6. ஆயிரம் சத்தியம் செய்வார்கள். கடைசியில் காரியத்தைச் சாதித்துக் கொண்டு கம்பி நீட்டி விடுவார்கள். கடைசியில் அவதிப்படுவது நீங்கள் தான்.

7. வீட்டிலேயே இருக்கும் பெண்கள் ஆக்கப் பூர்வமான காரியங்களில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்காக மெகா சீரியல்களில் இறங்கி புருசன், டிவி பெட்டியைத் தூக்கிப் போட்டு உடைக்கிற மாதிரி வைத்துக் கொள்ள வேண்டாம்.

..................................................................................................................................................

ஜான் பீட்டர்ஸ், ஆயர் குரோ, மலாக்கா
கே: கணினி வைரஸ்கள் என்னென்ன தீமைகளைச் செய்கின்றன?


ப: பட்டியல் போட முடியாது. Trojan எனும் கணினி அழிவி உங்களுடைய கணினிக்குள் நுழைந்து விட்டால், நீங்கள் செய்யும் வேலைகளைக் கவனித்து வரும். நீங்கள் பயன்படுத்தும் கடன் அட்டை இலக்கங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளும். talking-trojan இணைய வங்கியில் பயன்படுத்தும் கடவுச் சீட்டுகளையும் எடுத்து வைத்துக் கொள்ளும்.

அப்புறம் தனது எஜமானனுக்கு (Owner of the Virus) இணையத்தின் வாயிலாக சகவாசமாக ரகசியங்களை அனுப்பி வைக்கும்.

சில நச்சுநிரல்கள் கணினியின் நிரலிகளில் கோப்புகளை அழித்தல், கோப்புகளின் குணாதிசயங்களை மாற்றுதல் போன்றவற்றைச் செய்யும். இவை கணினியின் நினைவகத்தைப் பயன்படுத்துகின்றன.

நீங்கள் பயன்படுத்தும் Programs எனும் நிரலிகளில் குழப்பத்தை உண்டு பண்ணும். கணினியை நிலைகுலையச் செய்யும். சில அழிவிகள் கணினி தொடங்குவதையும் மெதுவாக்கும். வேலை செய்யும் வேகத்தைக் குறைக்கும்.

அழிவி அல்லது நச்சுநிரல் எல்லாம் ஒன்றுதான். சில அழிவிகள் வெடிகுண்டு போல குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெடித்து தம் அழிவு வேலைகளைச் செய்யும்.

ஆக உங்களுடைய கணினி 30 வினாடிகளில் இருந்து 40 வினாடிகளுக்குள் இயங்குதளத்தைத் தொடங்க வேண்டும். கூடுதல் நேரம் எடுத்தால் முதலில் நச்சு நிரலைக் கவனிக்க வேண்டும். அதை (Update) எனும் இற்றை செய்தல் வேண்டும்.

இணையத்தைக் கண்டுபிடித்தது யார்

கணினியும் நீங்களும் - மலேசியா தினக்குரல் நாளிதழ்
19.01.2014 ஞாயிறு மலர்

..................................................................................................................................................................

எஸ்.பாலசேகரன் சுப்பையா, ஜெலாப்பாங், ஈப்போ
கே: இணையத்தைக் கண்டுபிடித்தது யார்?


ப: இணையம் (Internet) என்பதைத் தனிநபர் யாரும் கண்டுபிடிக்கவில்லை. கணினி மேதைகள் பலரின் சிந்தனையில் உருவானது. 1961-ஆம் ஆண்டில், லியானர்ட் கிளேன்ராக் என்பவர்தான் இணையத்தைப் பற்றி ஒரு வியூகம் செய்தார்.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு Tim Berners Lee என்பவர் World Wide Web எனும் வையக விரிவு வலையை உருவாக்கினார். அதன் பிறகு இணையம் இமயமலை உயரத்திற்குப் போய்விட்டது. இப்போது இருக்கும் இணையத்திற்கு ஓர் உண்மையான வடிவத்தைக் கொடுத்தவர் திம் பெர்னர்ஸ் லீ தான்.

அவர் நினத்து இருந்தால், உலகப் பணக்காரர் பில் கேட்ஸ் போல வியாபாரம் பண்ணி இருக்கலாம். கோடிக் கோடியாகப் பார்த்து இருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. தான் உருவாக்கிய இணையத்தை, உலக மக்களுக்கு இலவசமாகக் கொடுத்து விட்டார்.

பல உலகக் கணினி நிறுவனங்கள் அவருக்கு உதவிகள் செய்ய முன் வந்தன. பல நாடுகள் உயரிய விருதுகள் வழங்கி இருக்கின்றன. எதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ரொம்ப தன்னடக்கமான மனிதர்.

கடைசியில் இங்கிலாந்து அரசாங்கம் வழங்கிய ‘சர்’ எனும் உயரிய விருதை ஏற்றுக் கொண்டார். உலகப் பல்கலைக்கழகங்கள் இதுவரையில் 26 டாக்டர் பட்டங்களை வழங்கி உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், அனைத்துலக் கணினிச் சம்மேளனம் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தியது.

உலகக் கணினி அறிஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி இருந்தனர். அவர் அரங்கத்திகுள் நுழைந்ததும் அத்தனை பேரும் எழுந்து நின்று, Standing Ovation  என்று சொல்லப்படும் ராஜமரியாதை செய்தார்கள். ஒன்றரை கோடி ரிங்கிட் அன்பளிப்பும் செய்தார்கள். அந்தப் பணத்தையும்கூட அவர் ஓர் அறவாரியத்திற்கு அப்படியே எழுதிக் கொடுத்து விட்டார்.

என்னே மனிதத் தன்மை. இன்று கணினி உலகின் அன்பிற்குரிய மாமனிதராக வாழ்ந்து வருகிறார். அவருடைய நல்ல மனம் வாழ வேண்டும். அவர் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும். வாழ்த்துவோம். இவரைப் பற்றிய மேல் விவரங்களை http://en.wikipedia.org/wiki/Tim_Berners-Lee  எனும் இடத்தில் தெரிந்து கொள்ளலாம்.

..................................................................................................................................................................

திவ்யா கன்னியப்பன், <thivya_sega@gmail.com>
கே: HTML என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன?


ப: Hyper Text Markup Language என்பதின் சுருக்கம். இணையப் பக்கங்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் இணைய மொழி. 1990ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்தவரும் திம் பெர்னர்ஸ் லீ தான். ஒரு சின்ன எடுத்துக்காட்டு:

<HTML>
<HEAD>
<!-- created 2014-01-19 -->
<TITLE>Thinakkural Sunday</TITLE>
</HEAD>
<BODY>
நான் நலம். நீங்கள் நலமா?
 <!-- Save the file as .html -->
</BODY>
</HTML>

உங்களுடைய கணினி ‘நோட் பேட்’டில் (Notepad), மேலே இருக்கிற மாதிரி தட்டச்சு செய்யுங்கள். சேமிக்கும் போது .html என்று சேமித்து வையுங்கள். பிறகு திறந்து பாருங்கள். நான் நலம். நீங்கள் நலமா?  என்று ஓர் இணையப் பக்கம் உருவாகி இருக்கும். அதுதான் நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில்.

..................................................................................................................................................................

திருவே பாலசேனா, பத்து தீகா, ஷா ஆலாம்.
கே: என்னுடைய சில ஆவணங்கள், கோப்புகள் போன்றவற்றை மற்றவர்கள் பார்க்கக் கூடாது படிக்கக்கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும். வழி இருக்கிறதா?


ப: Documents என்பதை ஆவணங்கள் என்று சொல்கிறோம். Folders என்பதைக் கோப்புகள் என்று சொல்கிறோம். இவற்றை மற்றவர்கள் பார்க்காமல் இருக்கச் செய்ய முடியும். அதற்கு ஒரு வழி இருக்கிறது. அந்த கோப்பின் மீது வலது சொடுக்கு செய்து Properties என்பதைத் தேர்வு செய்யுங்கள். அதில் Hidden என்று இருக்கும். அதைச் 'சரி' என்று சொடுக்கி விடுங்கள். அதே கோப்பைத் திறக்கவும். அதாவது (Double Click).

கணினித் திரையின்ல் ஆக மேலே Tools எனும் பகுதி வரும். அங்கே Folder Options என்பதில் View என்பதைத் தட்டினால் ஒரு செய்திப் பெட்டகம் வரும். Do not Show hidden files and folders என்பதைத் தட்டி விடுங்கள். அவ்வளவுதான்.

உங்கள் ஆவணம் காணாமல் போய்விடும். யாரும் பார்க்க முடியாது. அப்படி ஓர் ஆவணம் இருப்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். இதைவிட இன்னும் பல இரகசியப் பாதுகாப்பு நிரலிகள் வந்துள்ளன. இலவசமாகவும் கிடைக்கும். வேண்டும் என்றால் கேளுங்கள். இணைய முகவரியைச் சொல்கிறேன்.

..................................................................................................................................................................

எஸ். தம்பிராஜா, லுக்குட், நெகிரி செம்பிலான்.
கே: Fonts அதிகம் இருந்தால் கணினி மெதுவாக வேலை செய்யுமா?


ப: Fonts என்பதை எழுத்துருகள் என்று தமிழில் அழைக்கிறோம். இந்த எழுத்துருகள் அதிகமாக இருந்தால் கணினி மெதுவாக ஆரம்பிக்கும். அதாவது Startup எனும் கணினித் தொடக்கம். கணினியைத் தொடக்கியதும், நத்தை மாதிரி போல நகரும். ஆனால் ஆரம்பித்த பிறகு, வேலை தாமதம் ஆகாது. இருந்தாலும் தேவை இல்லாத எழுத்துருகளை நீக்கி விடுவதுதான் நல்லது.

சிலர் உலகத்தில் உள்ள எல்லாமே தங்கள் கணினிக்குள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அது தப்பு. கணினி வேகமாக வேலை செய்ய வேண்டும் என்றால் கண்ட கண்ட குப்பைகளைக் கணினிக்குள் சேர்த்து வைக்காதீர்கள்.

கணினியை இலகுவாகச் செயல்பட வழி செய்யுங்கள். Control Panel க்குப் போய் Font எனும் கோப்புக்குள் போய் தேவைப்படாத எழுத்துருகளை நீக்கிவிடலாம். பத்திரம்!

Arial, Century Gothic, Lucida Console, Sans Serif, Tahoma, Trebuchet, Verdana போன்ற எழுத்துருகள் கணினியின் உயிர் எழுத்துகள். (System Fonts) என்று சொல்வார்கள். அவற்றை நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். அப்படியே அழிக்க முயற்சி செய்தாலும், கணினி அவற்றை அழிக்க விடாது. குறைவான எழுத்துருகள் இருந்தால், கணினி கொஞ்சம் வேகமாக வேலை செய்யும்.

..................................................................................................................................................................

சேகரன் சுபரத்தினம்  segaran_vasan@gmail.com
கே: ’பேஸ்புக்’ போல வேறு இணையத் தளங்கள் உள்ளனவா?


ப: ’பேஸ்புக்’ மாதிரி ஏறக்குறைய நூறு சமூகத் தளங்கள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஒரு சமூக வளைத்தளம் பிரபலம். இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஆர்குட். சீனாவை எடுத்துக் கொண்டால் வெய்போ. மலேசியாவை எடுத்துக் கொண்டால் பேஸ்புக். உலகில் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட 20 சமூகத் தளங்களின் பட்டியலைத் தருகிறேன். அடைப்புக் குறியில் அனைத்தும் மில்லியன்கள்.

1. Facebook (ஒரு பில்லியன்)
2.Twitter (500)
3. Google+ (500)
4. Qzone (480)
5. Weibo (300)
6. Formspring (290)
7. Habbo (268)
8.  Linkedin (200)
9. Renren (160)
10. Instagram (150)
11. Vkontakte (123)
12. Bebo (117)
13. Tagged (100)
14. Orkut (100)
15. Netlog (95)
16. Friendster (90)
17. hi5 (80)
18. Fixster (63)
19. MyLife  (51)
20. Plaxco (50)

..................................................................................................................................................................

கலை மாறன்  kalai07@live.co.uk
கே: குழந்தைகள், வயதிற்கு வந்த பிள்ளைகள் Facebook, Friendster, Twitter, போன்ற சமூகத் தளங்களில் அவர்கள் பயன்படுத்தும் ’பாஸ்வோர்ட்’ சொல்லை நாம் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் எச்சரிக்கை ஏற்கனவே செய்து இருக்கிறீர்கள். குழந்தைகள் என்றால் எத்தனை வயது? வயதிற்கு வந்த பிள்ளைகள் என்றால் எத்தனை வயது?


ப: மின்னஞ்சல் வழியாக ஐந்து கேள்விகளைக் கேட்டு இருக்கிறீர்கள். ஆர்வத்திற்குப் பாராட்டுகள். முக்கியமான ஒரு கேள்விக்கு வருகிறேன். இணையச் சதிவலைகளில் குழந்தைகளும் பெண்களும் எளிதாகச் சிக்கிக் கொள்கிறார்கள் என்று அடிக்கடி எச்சரிக்கை செய்து வருகிறேன்.

நாம் நம்முடைய பிள்ளைகளை முழுக்க முழுக்க நம்பித் தான் அவர்களுக்கு இணையத்தைத் திறந்து விடுகிறோம். ஆனால், Facebook, Friendster, Twitter, Hi5 போன்ற தளங்களின் வசீகரமான அம்சங்கள்; அவற்றின்  கவர்ச்சித் தன்மைகள்; சின்னச் சின்ன பிஞ்சு மனங்களைச் சிதற வைத்து விடுகின்றன. அவர்களின் உணர்வுகளைப் பேதலிக்கச் செய்து விடுகின்றன. அவர்களுடைய பதின்ம வயது எண்ணங்களைத் தடுமாற வைத்து விடுகின்றன என்றுதான் சொல்ல வருகிறேன்.

பேஸ்புக்கில் ஒருவர் கணக்குத் திறக்க வேண்டும் என்றால் அவருக்கு குறைந்தது 13 வயது  முடிந்து இருக்க வேண்டும். சரியா. ஆனால், ஒரு 10 வயதுப் பெண் பிள்ளை, அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் தனக்கு 14 வயது ஆகிவிட்டது என்று சொல்லி  கணக்குத் திறந்தால் யாருக்கு என்னத் தெரியும். சொல்லுங்கள்.

பேஸ்புக் நடத்துபவர்கள் என்ன... அமெரிக்காவில் இருந்து இங்கே மலேசியாவுக்குப் பறந்து வந்து... அந்தப் பிள்ளையின் ஐ.சி. அடையாள கார்டை வாங்கிப் பார்த்து... ஓ.கே. சொல்லப் போகிறார்களா என்ன.

பேஸ்புக்கில் யார் வேண்டும் என்றாலும் கணக்குத் திறந்து கொள்ளட்டும். அப்புறம் சோறு தண்ணி இல்லாமல் அதிலேயே உருண்டு புரண்டு கிடக்கட்டும்.  யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆனால், நான் கவலைப் படுவது எல்லாம் இந்த பி.எம்.ஆர், எஸ்.பி.எம் தேர்வுகள் எழுதும் வயதுகளில் இருக்கும் 15, 16, 17 வயது பிள்ளைகளைப் பற்றித் தான். எஸ்.பி.எம் தாண்டிவிட்டால் எதையாவது செய்து போகட்டும் என்று ஒரு கண்ணை ஒரு பக்கமாக மூடிக் கொள்ளலாம்.

அதுவரையில் பெற்றோர்கள் இந்த இணைய விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது தான் என்னுடைய வேண்டுகோள்.

சரி. அடுத்து என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

1.    முதலில் பதின்ம வயது மாணவர்களின் Password எனும் கடவுச் சொல்லைக் கண்டிப்பாகப் பெற்றோர் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். இது ரொம்பவும் முக்கியம்.

2.    அந்தக் கடவுச் சொல் மாற்றம் செய்யப் படுகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

3.    பிள்ளைகள் பேஸ்புக்கில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதில் எப்போதும் ஒரு கண் வைத்து இருக்க வேண்டும்.

4.    அவர்களுடைய நண்பர்களில் யார் மீதாவது சந்தேகம் வந்தால், பேஸ்புக்கில் அனைவரும் பார்க்கும்படி ஓர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

5.    அந்த நண்பரை உடனடியாகப் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும்.

6.    பதின்ம வயது பிள்ளைகள், இனிப்பான வார்த்தைகளுக்கு சீக்கிரம் மயங்கிவிடுவார்கள். விஷமதாரிகளின் முதல் ஆயுதம் இனிப்பான சொற்கள் தான்.

7.    அவர்களுக்கு நண்பர்கள் இருந்தால் இணையத்திலேயே இருக்கட்டும். தயவு செய்து வீட்டுக்கு வரச் சொல்லி அழைக்க வேண்டாம்.

8.    அந்தரங்கமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

9.    உங்களின் உடல் தோற்றம் எப்படி. ஒல்லியா, நெட்டையா, என்று விசாரிப்பவர்களை உடனடியாக ஒதுக்கி விடுங்கள். அவர்கலை நம்ப வேண்டாம்.

10.    குடும்ப விஷயங்கள், வீட்டு முகவரிகளைத் தெரியப் படுத்தவே கூட்டாது. இன்றைக்கு என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் லடாய் என்று சொன்னால், நாளைக்கு  இணைய நண்பர் வீட்டுக் கதவைத் தட்டுவான்.

11.    அப்படியே நம்பகரமான பேஸ்புக் நண்பரைச் சந்திக்க வேண்டும் என்றால், பெற்றோர் அல்லது மிகவும் நம்பிக்கையான உறவினர் யாரையாவது உடன் அழைத்துச் செல்லுங்கள்.

12.    சில சமயங்களில் இணையத்தில் ஆபாசமான உரையாடல்கள் வரும். அதில் எந்தக் காரணத்தைக் கொண்டும் கலந்து கொள்ள வேண்டாம். முற்றாகத் தவிர்த்து விடுங்கள்.

இணையம் என்பது ஒரு மாயை உலகம். அதில் நமக்கு புதுமையான வாய்ப்புகள், அனுபவங்கள் கிடைக்கின்றன. உண்மைதான். ஆனால், அதுவே நமக்கு ஒரு நரக உலகமாக மாறி விடக் கூடாது. குழந்தைகள் என்றால் 15 வயதிற்கும் குறைந்த வயதுடையவர்கள். 16 வயதிற்கு மேல் போனால் வயதிற்கு வந்தவர்கள்.

[Google தேடல் இயந்திரத்தில் ksmuthukrishnan என்று தட்டச்சு செய்யுங்கள். என்னுடைய வலைப்பதிவுகள் இருக்கும். ஏதாவது ஒரு பதிவைச் சொடுக்கினால், அங்கே என் மின்னஞ்சல் இருக்கும். உங்கள் கேள்வியை எழுதி அனுப்புங்கள்.]