24 ஆகஸ்ட் 2014

சீனி நைனா முகமது

தித்திக்கும் தொல்காப்பியத்தில்
திக்கெட்டும் சீனி நைனா முகமது 

(மலேசியா, பேராக் மாநிலப் பொது இயக்கங்களின் இணை ஏற்பாட்டில், அமரர் சீனி நைனா முகம்மது அவர்களுக்கு, 22.08.2014 வெள்ளிக்கிழமை, ஈப்போ பாராகோன் விடுதியில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதை முன்னிட்டு, அன்றைய தினம் இந்தச் சிறப்புக் கட்டுரை தினக்குரல் நாளிதழில் வெளியிடப்பட்டது.)


சீனி நைனா முகமது
இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான். அப்படி ஒரு வாசகத்தைத் தன் கல்லறையில் எழுதி வைக்கச் சொல்லி உயிர் துறந்தவர் ஜி.யு.போப் (George Uglow Pope) என்கிற ஒரு பாதிரியார். தன்னுடைய வாழ்க்கையில் நாற்பது ஆண்டு காலத்தை, தமிழுக்காக அர்ப்பணிப்புச் செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற தமிழ்க் காப்பியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். மறக்க முடியாத மாமனிதர்.

திராவிட மொழி இயலின் தந்தை எனப் போற்றப் படுகிறவர் ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell). இவரும் ஒரு பாதிரியார் தான். ஆனால், சமயத்தைப் பரப்புவதற்கு வந்த இவர், அதற்குப் பதிலாக திராவிட மொழிகளை ஆய்வு செய்து, தமிழ் மொழியின் கண்களைத் திறந்து விட்டுப் போனவர். 


இவர் ஆங்கில மொழியில் உருவாக்கிய ’திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் நூல், அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. இந்த நூல் இப்போது தமிழகப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாட நூலாகப் பயன்படுத்தப் படுகிறது.

’சுவடி தேடும் சாமியார்’ என்று புகழப் பட்டவர் வீரமாமுனிவர் எனும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joesph Beschi). ஐம்பது ஆண்டு காலம், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அரும்பாடு பட்டவர். 


தமிழில் 23 நூல்களை எழுதியவர். தமிழின் மீது ஏற்பட்ட தணியாத தாகத்தினால், ஜோசப் பெஸ்கி எனும் தம்முடைய பெயரை, தைரியநாதன் என்று மாற்றினார். ஆனால், அந்தப் பெயர் ஒரு வடமொழி என்பதற்காக, தூயச் செந்தமிழில் வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். 

திருக்குறளை லத்தீன் மொழியில் பெயர்த்த வீரமாமுனிவர்

தேம்பாவணி என்பது வீரமாமுனிவர் இயற்றிய அரும் பெரும் காப்பியம். தமிழில் முதல் தமிழ் அகரமுதலியை (அகராதி) உருவாக்கியவரும் இவரே. திருக்குறளை லத்தீன் மொழியில் பெயர்த்தவர். 


தமிழுக்கு இவ்வளவு தொண்டு செய்த அந்தத் தமிழ்ப் பெரியாரின் கல்லறை, கேரளாவில் ஓர் உப்பங்கழியில் அனாதையாகப் புதர் மண்டிப் போய்க் கிடக்கிறது. இந்த விஷயம் உலகத் தமிழ் மக்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால், அவர்களுக்குத் தெரியுமா என்பது எனக்கும் தெரியவில்லை. 

வித்தாலி பூர்ணிக்கா (Vitaly Fournika) ஒரு ரஷ்யர். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்தவர். மகாகவி பாரதியாரின் சிந்தனைகளாலும் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட வித்தாலி, தன் பெயரைத் தமிழகப்பித்தன் என்று மாற்றிக் கொண்டவர். 


தற்காலத் தமிழ் இலக்கியம், தமிழரின் தொன்மை, நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை ஆராய்ந்து ரஷ்ய மொழியில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியவர்.

இரோசி யமாசிடா தமிழ்ப் பேராசிரியர்

இரோசி யமாசிடா (Prof. Hiroshi Yamashita) என்பவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர். தமிழ் மொழியின் ஒலிப்புகளுக்கும் ஜப்பானிய மொழி ஒலிப்புக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை ஆய்வு செய்தவர். 

தமிழ் மொழி சார்ந்த உலகளாவிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி வருகிறார். தமிழ் நாவல்களை ஜப்பானிய மொழியில் மாற்றம் செய்து வருகிறார். செம்மொழி மாநாட்டில் தமிழில் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தவர்.

தமிழறிஞர் சீனி நைனா முகம்மது

இவர்களைப் போல அலெக்சாண்டர் துபியான்சுகி, ராபர்ட் தே நோபிலி (இத்தாலி), மிரான் வின்கலோ (அமெரிக்கா), சீகன் பால்கு (ஜெர்மனி), என்றிகஸ் அடிகளார் (போர்ச்சுக்கல்), ஆண்டர்சன் இராபர்ட் (இங்கிலாந்து) போன்றவர்களின் பட்டியல் நீள்கிறது. இவர்கள் அனைவரும் தமிழ் வளர்த்த பெருமக்கள். தமிழுக்காக அரிய பெரிய சேவைகளைச் செய்த மாமனிதர்கள். 

அதே வரிசையில் வருபவர்தான் தமிழறிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள். இவர் தமிழகத்தில் இருந்து மலேசியாவிற்கு வந்து, தொல்காப்பியத்தைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு இயங்கியவர். பன்மொழிப் புலமையாளர். சிறந்த பண்பாளர். பொதுநலத் தொண்டர். தமிழ்ப் பற்றாளர். 

தமிழ் உலகிற்கு ஒரு பேரிழப்பு

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தொல்காப்பியத்தில் மட்டும் தனித்து ஒரு ஞாயிறாகவே ஜொலித்து வந்தார். தொல்காப்பியம் என்றாலே விலகி ஓடும் காலக் கட்டத்தில், அதன் அருமை பெருமைகளை எளிமையாக விளக்கி வந்தார். தொல்காப்பியத்தில் ஆழ்ந்த அறிவு பெற்ற அன்னாரின் மறைவு, மலேசியத் தமிழ் உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். என்றுமே நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார். இதயம் கனக்கிறது. 

அவர் நினைவாக சற்று நேரம் சம்மணம் போடுகிறேன். தொல்காப்பியம் என்றால் என்ன என்று எளிய முறையில் சொல்கிறேன். அதுவே, மலேசியம் பார்த்த ஒரு தமிழ் மகனுக்கு நாம் செய்யும் மரியாதை. ஒரு மௌனமான அஞ்சலி. அந்தத் தொல்காப்பிய அறிஞரின் நினைவாக இந்தக் கட்டுரையைச் சமர்ப்பிக்கின்றேன்.

ஒரு மொழிக்கே இலக்கணம் சொன்ன ஒரு மொழி

உலகில் 2795 மொழிகள் உள்ளன. அந்த அத்தனை மொழிகளிலும், ஒரே ஒரு மொழிக்கு மட்டும் ஒரே ஒரு சிறப்பு இருக்கிறது. மற்ற எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு. அது என்ன சிறப்பு. 

தொல்காப்பியம் என்கிற சிறப்பு தான் அந்தத் தனிச் சிறப்பு. ஒரு மொழிக்கே இலக்கணம் சொன்ன ஒரு மொழி இருக்கிறது என்றால் அது தமிழ் மொழியாகத் தான் இருக்க முடியும். வேறு மொழியாக இருக்க முடியாது. அதில் மாற்றுக் கருத்தும் இல்லை.

தமிழின் மும்மணிச் சிகரங்கள்

பொதுவாகவே, ஒரு மொழியில் முதலில் தோன்றுவது அதன் கதைகள். காப்பியங்கள், புராணங்கள். அவை அனைத்தும் கதா வடிவங்கள். ஆனால், அந்தக் காப்பியங்கள் 

வருவதற்கு முன்னாலேயே, ஒரு மொழிக்கு இலக்கணம், காப்பியமாக வருகிறது என்றால், அந்த மொழியின் செம்மையை என்னவென்று புகழ்வது. அந்தச் செம்மைத் தன்மை, தமிழ்மொழியைத் தவிர வேறு எந்த மொழிக்கும் இல்லை. இதை நாம் மட்டும் சொல்லவில்லை. ஒட்டுமொத்த மொழி வல்லுநர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம். இந்த மூன்று இலக்கியங்களையும் தமிழின் மும்மணிச் சிகரங்கள் என்று பெருமையாகச் சொல்வார்கள். இவற்றுள் தொல்காப்பியம் என்பது தலையாயச் சிகரம். 

அதன் செம்மைகளைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது, தமிழுக்கு நேர்ந்த ஒரு காலக் கொடுமை. அதை குமரிக் கண்டத்தின் ஆழ் இடுக்கில் புதைந்து கிடக்கும் ஓர் இறுக்கம் என்றுகூட சொல்லலாம். ஆக, அந்த இறுக்கத்தை இப்போதே தளர்த்தி விடுவோம். தொல்காப்பியத்தை இன்றே படிக்கத் தொடங்குவோம்.

இடைச் சங்கத்தில் கபாடபுரம் அழிந்தது

பண்டைய காலத்தில் தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று சங்கங்கள் இருந்தன. தலைச் சங்க காலத்தில், குமரிக் கண்டம் அழிந்து போனது. 

இடைச் சங்க காலத்தில், கபாடபுரம் அழிந்து போனது. கடைச் சங்க காலத்தில், மதுரை அழிந்து போனது. அகத்தியம், தொல்காப்பியம் ஆகிய இந்த இரண்டு நூல்களும் இடைச் சங்கத்தைச் சேர்ந்தவை. 

தொல்காப்பியம் என்பது மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  அதை எழுதியவர் தொல்காப்பியர். சேர நாட்டில் பிறந்து வளர்ந்தவர். இவர் அகத்தியரின் மாணவர்களில் ஒருவர். தொல்காப்பியரைப் பற்றிய உண்மையான முழுமையான வரலாறு இன்னும் எழுதப் படாமல் இருக்கிறது.

தமிழ் மொழிக்கு இலக்கணம் சொல்லும் நூல்

தமிழ் உலகில் எத்தனையோ தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் தோன்றி மறைந்து இருக்கின்றன. ஆனால், தொல்காப்பிய நூல் மட்டும் சிதைவு பெறாமல், இன்று வரை வழிவழியாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தமிழ் மொழியின் இலக்கண விதிகளுக்கு ஓர் அடிப்படை நூலாகவும் கருதப் படுகிறது. 

தொல்காப்பியம் மிக எளிமையான நூல். தொடக்கப் பள்ளி மாணவர்கள்கூட எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஒன்றை மட்டும் மறந்துவிட வேண்டாம். அது ஓர் இலக்கண நூல். இலக்கிய நூல் அல்ல. அதனால், முதலில் கசக்கும். போகப் போக இனிக்கும். 

கசப்பும் இருக்காது. துவர்ப்பும் இருக்காது

இவ்வளவு நாளும் தெரிந்து கொள்ளாமல் இருந்து இருக்கிறோமே என்று சிலர் காலம் தாழ்ந்து வருத்தப் படலாம். தமிழ் மொழிக்கு இலக்கணம் சொல்லும் நூல் என்று நினைத்துக் கொள்ளுங்கள். கசப்பும் இருக்காது. துவர்ப்பும் இருக்காது. உரைப்பும் இருக்காது.

தொல்காப்பியம் 1,610 பாட்டுகளால் ஆனது. இதில் எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என மூன்று அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது இயல்கள். இயல் என்றால் துறை. ஆக மொத்தம் இருபத்தேழு இயல்கள். பாடல்களாகவே எல்லாக் கருத்துகளும் சொல்லப் படுகின்றன. அதைச் சூத்திரம் அல்லது நூற்பா என்றும் சொல்வார்கள்.

தமிழ் நூல்களும் காப்பியங்களும், பெரும்பாலும் கடவுள் வாழ்த்தோடு தொடங்குவது வழக்கம். ஆனால், தொல்காப்பியம் அப்படி அல்ல. அதற்கு கடவுள் வாழ்த்து இல்லை. 

தொல்காப்பியத்தில் முதலில் வருவது எழுத்ததிகாரம்

தொல்காப்பியத்திற்குப் பாயிரம் என்பது மட்டும் இருக்கிறது. பாயிரம் என்றால் கவிதை நடையில் உள்ள முன்னுரை. அந்தப் பாயிரத்தில் தமிழகத்தின் எல்லை, வடவேங்கடம் தென் குமரி ஆஇடைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்று சொல்லப் படுகிறது. அந்தப் பாயிரத்தை எழுதியவர் பனம்பாரனார். இவர் தொல்காப்பியருடன் ஒன்றாகக் கல்வி பயின்றவர்.

தொல்காப்பியத்தில் முதலில் வருவது எழுத்து அதிகாரம். தமிழின் எழுத்துகள் என்ன என்ன என்று சொல்லப் படுகிறது. ஆனால், தமிழ் எழுத்துகளின் வடிவம், இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மெய் எழுத்துக்கு புள்ளி வரும். ஆனால், அந்தப் புள்ளி எங்கே வரும் என்றும் சொல்லப் படவில்லை. 

புள்ளி வைத்தால் ஓலை கிழிந்துவிடும்

முன்பு காலத்தில் ஆணியைக் கொண்டு, பனை ஓலையில் எழுதினார்கள். புள்ளி வைத்தால் ஓலை கிழிந்துவிடும். அதனால், தமிழ் எழுத்துகளுக்கு புள்ளி வைப்பது இல்லை. 

அடுத்து, எழுத்துகள் பிறப்பதைப் பற்றி, இந்த எழுத்து அதிகாரம் சொல்கிறது. ஒலி என்பதுதான் சொல் ஆகிறது. அந்த ஒலியை அரவம், இசை, ஓசை என்று பிரிக்கலாம். 

சீன மொழியைத் தவிர, உலகில் உள்ள மற்ற எல்லா மொழிகளும் ஒலி எழுத்துகளால் தான் எழுதப் படுகின்றன. ஆங்கிலத்தில்  Phonetics என்று சொல்வார்கள்.

சொல் அதிகாரம். 463 நூற்பாக்கள் கொண்டது

எழுத்து அதிகாரத்தில் தனித்து நிற்கும் எழுத்துகள்; சொல்லுக்கு இடையில் வரும்போது அந்த எழுத்துகளின் நிலை என்ன ஆகிறது; எழுத்துகளை எப்படி உச்சரிக்க வேண்டும்; சொற்களில் வரும் எழுத்துகள் தொடர்ந்து நிற்கும் நிலைகள்; சொற்கள் புணரும் போது ஏற்படும் எழுத்து மாற்றங்கள் போன்றவை விளக்கப் படுகின்றன.

இரண்டாவதாக வருவது சொல் அதிகாரம். 463 நூற்பாக்கள் கொண்டது. சொல்லப் படுவது என்பது ஒரு சொல். அந்தச் சொல்தான், எழுத்தால் எழுதப் படுகின்றது. ஒரு மொழிக்கு சொல் என்பதுதான் முதலில் வந்தது. அப்புறம் தான் எழுத்து வந்தது. இதை நாம் நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். 

எழுத்தையும் சொல்லையும் கொண்ட வாழ்க்கை இலக்கணம்

சொல் அதிகாரத்தில் தமிழ் மொழியை எவ்வாறு பேசுவது, எவ்வாறு எழுதுவது, எவ்வாறு சொற்களை அமைத்துக் கொள்வது போன்றவை விளக்கப் படுகின்றன. மேலும் சொற்கள் தொடர்களாக அமையும் முறை; வேற்றுமைத் தொடர்கள்; தனிச் சொற்களின் இலக்கணம் போன்றவையும் சொல்லப் படுகின்றன.

மூன்றாவதாக வருவது பொருள் அதிகாரம். அன்றைய காலத்து மக்களின் வாழ்வு எப்படி இருந்தது. எழுத்தையும் சொல்லையும் கொண்டு புனையப் படும் வாழ்க்கை இலக்கணம் எப்படி இருந்தது என்று இந்த அதிகாரத்தில் விளக்கப் படுகிறது. இந்த அதிகாரம் தமிழ் மொழியில் மட்டுமே காணப்படும் தனிச் சிறப்புடைய ஒரு பகுதி என்றுகூட சொல்லலாம்.

பாலை என்பது ஓர் அகத் திணை

பொருள் அதிகாரத்தில், அகத் திணையியல், புறத் திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவம இயல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்கள் உள்ளன.

தமிழ் இலக்கியம் என்பது திணை கோட்பாட்டைச் சார்ந்தது. ஏழு திணைகள் உள்ளன என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஏழு திணைகளில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் திணைகள் நிலங்கள் சம்பந்தப் பட்டவை. 

இதில் நிலம் இல்லாத பாலை எனும் திணையும் சேர்ந்து கொள்கிறது. பாலை என்பது ஓர் அகத் திணையாகும். 

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

இந்த அகத்திணைப் பாடல்களில் தலைவன், தலைவி, தோழி நற்றாய், செவிலித் தாய்கள் என்று பொதுவாகச் சொல்லப்படும். ஆனால், அந்தக் கதாமாந்தர்களுக்குப் பெயர்கள் வழங்கப் படுவது இல்லை. "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்' என்பது தொல்காப்பியக் கூற்று. 

தொல்காப்பிய நூல் எழுதப்பட்ட பின்னர், அதை எந்தக் கல்வெட்டிலும் எழுதி வைக்கவில்லை. காலம் காலமாகப் பனை ஓலைகளில் எழுதிப் படித்து வந்து இருக்கிறார்கள். தொல்காப்பியம் எழுதப்பட்ட ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான், அதற்கு உரை எழுத ஆரம்பித்தார்கள். அதாவது விளக்கம் எழுதினார்கள். 

அப்படி விளக்கம் எழுதியவர்கள், அவர்களின் காலத்து இலக்கண, இலக்கிய அறிவின் அடிப்படையிலேயே உரை எழுதி இருக்கிறார்கள். பல காலக் கட்டங்களில் பலர் விளக்கவுரை எழுதி இருக்கிறார்கள். இருந்தாலும், இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், கல்லாடர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் போன்ற புலவர்களின் தொல்காப்பிய உரைகளை மட்டுமே தமிழ் உலகம் ஏற்றுக் கொண்டு இருக்கிறது.

தொல்காப்பியம் குழப்பமான நூல் அல்ல

தொல்காப்பியம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கரடு முரடான தமிழில் எழுதப் பட்டது என்று சிலர் சொல்வார்கள். அதற்காக அதை ஒரு குழப்பமான நூல் என்று நினைத்து, ஒதுக்கி வைத்துவிட வேண்டாம். அதன் மொழி எளிமையானது. ஆனால், பல சொற்களுக்கு அர்த்தம் சொல்லப்படுகிற விதம் இருக்கிறதே, அங்கே கொஞ்சம் லேசான மயக்கம் வரலாம். 

மயக்கம் என்றால் மயக்கம் போட்டு விழுவதைச் சொல்லவில்லை. தடுமாற்ரம் வரும் என்று சொல்ல வருகிறேன். தொல்காப்பியம் என்ன சொல்ல வருகிறது என்பதை புரிந்து கொள்ள சற்று சிரமம் ஏற்படும். அவ்வளவுதான். மற்றபடி அது குழப்பமான நூல் அல்ல.

தொல்காப்பியம் என்பது தமிழின் முதல் இலக்கண நூல். தமிழ் மொழியின் உச்சமான படைப்பு. சரி. தொல்காப்பியம் என்றால் என்ன என்று இப்போது உங்களுக்கு ஓரளவுக்குப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். 

ஐந்திலக்கண நூல்கள் என்றால் என்ன

தொல்காப்பியம் தோன்றிய பிறகு, அதனை அடிப்படையாகக் கொண்டு பலப்பல இலக்கண நூல்கள் தோன்றின. அவற்றில் முதன்மையாக வருபவை ஐந்திலக்கண நூல்கள் ஆகும். அந்த ஐந்திலக்கண நூல்களின் பெயர்கள். 1. வீரசோழியம் 2. இலக்கண விளக்கம் 3. தொன்னூல் விளக்கம் 4. முத்து வீரியம் 5. சுவாமிநாதம். இந்த நூல்களின் வரிசையில் மேலும் இரண்டு நூல்கள் உள்ளன. 

தமிழ்நெறி விளக்கம், நன்னூல். இவை இரண்டும் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. அதனால், அதை ஏழு இலக்கண நூல்கள் என்பதற்குப் பதிலாக ஐந்திலக்கண நூல்கள் என்று அழைக்கிறார்கள்.

தொல்காப்பியத்தில் மூன்றாவதாகச் சொல்லப்படும் பொருள் அதிகாரம் இருக்கிறதே, அதில் ஒரு பிரிவுதான் யாப்பிலக்கணம். இந்த யாப்பிலக்கணம் ஒரு பெரிய பிரிவு. 

அதனால், அதைத் தனியாகப் பிரித்து எடுத்து விட்டார்கள். அதே மாதிரிதான் அணி இலக்கணம். குழப்பிக் கொள்ள வேண்டாம். ஒன்று யாப்பிலக்கணம். மற்றொன்று அணி இலக்கணம். இந்த அணி இலக்கணம் என்பது, தொல்காப்பியத்தின் பொருள் அதிகாரத்தில் மற்றொரு பெரிய பிரிவாகும். ஆக, யாப்பிலக்கணமும், அணி இலக்கணமும் இரட்டைப் பிறவிகள் மாதிரி எப்போதும் சேர்ந்தே வரும். 

அணி இலக்கணத்திற்கு விளக்கம் தண்டியலங்காரம்

அணி என்றால் அழகு என்று அர்த்தம். செய்யுள்களை அமைக்கும் போது, சொல் அழகு, பொருள் அழகு ஆகிய இரண்டையும் எப்படி சேர்க்க வேண்டும் என்று இந்த அணி இலக்கணம் விளக்குகிறது. அணி இலக்கணத்திற்கு விளக்கம் கொடுக்கும் ஒரு பெரிய நூல் இருக்கிறது. அதன் பெயர் தண்டியலங்காரம். 

அணி இலக்கணத்தை இன்னும் பிரித்துப் பார்க்கலாம். நிறைய அணிகள் வரும். அதிசய அணி, சிலேடை அணி, தீவக அணி, வாழ்த்தணி, மயக்க அணி என்று மொத்தம் 35 அணிகள் இருக்கின்றன. இதை எல்லாம் கேட்கும் போது, உங்களுக்கும் கொஞ்சம் மயக்கம் வருகிற மாதிரி இருக்கலாம். கவலைப் படாதீர்கள். போகப் போக எல்லாம் சரியாகி விடும். மயக்கமும் தெளிந்து விடும். 

ஒன்றை மட்டும் மறந்து விட வேண்டாம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழின் இலக்கணத்தை, இப்படி அக்குவேர் ஆணிவேராகச் சல்லடை போட்டு பிரித்து வகுத்துப் பார்த்து இருக்கிறார்கள். 

ஆக, அவர்களின் தமிழ் மொழி அறிவை என்னவென்று சொல்வது. என்னவென்று புகழ்வது. அதனால் தான் அதற்கு செம்மொழி எனும் உயர்த் தகுதி கொடுத்து இருக்கிறார்கள். இமயத்தில் சிகரம் பார்க்கும் ஒரு மொழி இருக்கிறது என்றால் அது நம் தமிழ்மொழியைத் தவிர வேறு மொழியாக இருக்க முடியாது. 

தொல்காப்பிய ஞாயிறு சீனி நைனா முகம்மது

தமிழ்மொழியின் தோற்றம் மிக மிகத் தொன்மையானது. அப்பேர்ப்பட்ட அந்த மொழியில் தான் தொல்காப்பியம் என்கிற ஓர் இலக்கண இலக்கியமும் ஐக்கியமாகிறது. 

தொல்காப்பியத்திற்கு இணையாக, வேறு ஒரு நூல் இது வரைக்கும் தமிழில் இல்லை. ஆக, தொல்காப்பியம் மாதிரி இன்னொரு நூல், இனிமேலும் கிடைக்கப் போவதும் இல்லை. 

மலேசியாவில் தமிழ் இணையமும் வலைப்பதிவுகளும்

கடைசியாக ஒரு தனிப்பட்ட பதிவு. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 2012-ஆம் ஆண்டில், ஓர் இணையக் கருத்தரங்கை கோலாலம்பூரில் நடத்தியது. அதில் ‘மலேசியாவில் தமிழ் இணையமும் வலைப்பதிவுகளும்’ எனும் தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 

அப்போது தான் தொல்காப்பிய ஞாயிறு சீனி நைனா முகம்மது அவர்களைச் சந்தித்தேன். நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. 

கணினிக் கலைச் சொற்களை உருவாக்கும் போது, அவற்றின் மூலத்தையும் வேர்த் தன்மைகளையும் எப்படி ஆராய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அந்த வகையில், உருவாக்கப்பட்ட சுழலி, விரலி எனும் இரண்டு கணினிக் கலைச் சொற்களை, ஐயா சீனி. நைனா முகமது அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். நன்றி.

14 ஆகஸ்ட் 2014

அழ வைத்த ஔவை சண்முகி


சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரித்து வாழ்ந்திடாதே என்று எல்லோரையும் சிரிக்க வைத்தார். இன்றைக்கு அந்த எல்லோரையும் அழ வைத்து விட்டுப் போய் விட்டார். உற்றார் உறவினர்கள் சொந்த பந்தங்கள் என்று அவர்களுடன் சேர்ந்து உலகமே அழுது கொண்டு இருக்கிறது. ஓர் அற்புதமான கலைஞரை உலகம் இழந்து விட்டது.



மனத்தின் அழுத்தங்கள் ஓர் எல்லைக்குள் அடங்கிப் போக வேண்டும். தாண்டிப் போனால் மன உலைச்சல்கள் விஸ்வரூபம் எடுக்கும். மனிதனை மரணப் படுக்கையில் சாய்த்துவிடும். இதற்கு அமெரிக்க ஔவை சண்முகி நல்ல ஒரு சான்று. கோலிவூட்டிற்கு கமல்ஹாசன் ஓர் ஔவை சண்முகி என்றால் ஹாலிவூட்டிற்கு ரொபின் வில்லியம்ஸ் ஓர் ஔவை சண்முகி. 

சுத்த பத்தமான வெள்ளந்தி

மன அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அந்தக் கலைஞன் தற்கொலை செய்து கொண்டான் என்பது ஒரு வதந்தியாக இருந்துவிட்டுப் போகட்டும். இல்லை என்றால் அதை நம்மாலும் தாங்கிக் கொள்ள முடியாது.


அதிகம் பேசாமலேயே அசட்டுத் தனமான உடல் அசைவுகளினால், உலக மக்களைக் கட்டிப் போட்டவர். நவரச நாயகன் கமல்ஹாசனின் மானசீக குருவாக வலம் வந்தவர். மன்மதலீலைகளை வாசிக்கத் தெரியாத சுத்த பத்தமான வெள்ளந்தியாக வாழ்ந்தவர். 

கலை நகர்வுக்கு புதிய வடிவம்

மிஸ்டர் பீன்ஸ் நிகழ்ச்சி தெரியும் தானே. அதற்கு ஆரத்தி எடுத்து ஆலாபனை செய்தவர் இந்த ரொபின் வில்லியம்ஸ் தான். எதார்த்தமான உடல் கோணங்கித் தனத்தினால் மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்த முடியும் எனும் ஒரு கலை நகர்வுக்கு புதிய வடிவம் கொடுத்த அந்த மனிதரை நினைத்துப் பார்ப்போம். சார்லி சாப்ளின், ரோவன் அட்கின்சன் (மிஸ்டர் பீன்) வரிசையில் ரொபின் வில்லியம்ஸுக்கு இரண்டாம் இடம் கொடுக்கலாம்.


அவருக்கு அதிகமானப் புகழ். அதிகமானச் செல்வாக்கு. இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்தன. துணைக்கு மன உலைச்சலைச் சேர்த்துக் கொண்டன. அடுத்து அவரை மது போதைக்கு அடிமையாக்கின. இப்போது அந்த மனிதரைப் பலிக்கடாவாகவும் ஆக்கி விட்டன. ஒரு நல்ல நடிகரை உலகம் இழந்து விட்டது.

புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகர்

மனிதச் சாமான்ய வாழ்க்கையில் பணம், பெயர், புகழ், செல்வாக்கு போன்றவற்றினால் மன நிம்மதி, மன அமைதி, மன மகிழ்ச்சி, மன நிறைவுகளைப் பெற முடியாது என்பதற்கு ரொபின் வில்லியம்ஸ் நல்ல ஓர் எடுத்துக் காட்டு. 


ரொபின் வில்லியம்ஸ் என்பவர் புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகர். அகடாமி விருதுகளுக்கு மூன்று முறை முன் மொழியப் பட்டவர். ஆனாலும், Good Will Hunting எனும் படத்திற்கு அகடாமி விருது கிடைத்தது. அகடாமி விருது என்பது இந்தியாவின் திரைப்பட தேசிய விருதிற்குச் சமமானதாகும். இரண்டு முறை எமி விருதுகள், இரண்டு முறை அமெரிக்கத் திரைப்பட விருதுகள், நான்கு முறை கோல்டன் குளோப் விருதுகள், ஐந்து முறை கிராமி விருதுகள் பெற்றவர்.

கணவர் எனக்கு ஒரு நல்ல தோழர்

அவருடைய இறப்புச் செய்தியைக் கேட்டு உலகமே அதிர்ந்து போனது. நேற்று வரை சிரித்துப் பேசிக் கொண்டு நல்லா தானே இருந்தார். திடீரென்று என்ன ஆனது. இத்தனைக்கும் பெரிய வயது இல்லை. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்கலாம். உலக மக்களை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு மகிழ்ச்சிப் படுத்தி இருக்கலாம். அவருடைய மனைவி சூசன் என்ன சொல்கிறார் தெரியுமா. 


என்னுடைய கணவர் எனக்கு ஒரு நல்ல தோழராகவே இருந்தார். வாழ்ந்தார். யாரும் அழக்கூடாது என்று எப்போதும் சொல்வார். அமெரிக்கப் போர் வீரர்கள் ஈராக்கில் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் போது, அவர் அங்கே போனார். ஆடிப் பாடி நகைச்சுவை வழங்கி எல்லாரையும் சிரிக்க வைத்தார். சண்டை வேண்டாம் சமாதானமாகப் போவோம் என்று சொன்னவர் இப்போது அழ வைத்துவிட்டுப் போய் விட்டார் என்று சொல்கிறார்.


1993-ஆம் ஆண்டு மிஸஸ் டவுட்பையர் (Mrs. Doubtfire) எனும்  படத்தில் ஆண் பெண் இரட்டை வேடங்களில் நடித்து உலகத்தையே அசத்திக் காட்டியபர் இந்த ரொபின் வில்லியம்ஸ். 25 மில்லியன் பட்ஜெட் படம். ஆனால், 441 மில்லியன் வசூல் செய்து ‘பாக்ஸ் ஆபிஸ்’ சாதனை படைத்தது. இந்தப் படத்தைத் தழுவி, 1996-ஆம் ஆண்டு, தமிழில் ஔவை சண்முகி படம் எடுக்கப் பட்டது. தமிழ் மக்களிடையே பரிச்சயம் ஆனது. கமல்ஹாசனின் நவரசங்களுக்கு முத்தாய்ப்பு வைத்தது.

கமல்ஹாசன் இரங்கல் செய்தி 

தமிழகத்தைப் பொறுத்த வரையில் ரொபின் வில்லியம்ஸை அதிகமாய்த் தெரிந்து வைத்து இருந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன்.  இறப்புச் செய்தியைக் கேட்டு துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறார். கமல்ஹாசன் தன்னுடைய இரங்கல் செய்தியில் இப்படிச் சொல்கிறார். 

’தொடர்ந்தால் போல வேடிக்கையான முகபாவத்தை வைத்து இருப்பது மன அழுத்தத்தைத் தரும். அந்த வகையில் ரொபின் வில்லியம்ஸ் இயற்கையாகக் கண்ணீர் சிந்தி நடிப்பவர். அவரது படங்களில் அதைத் தெளிவாகக் காண முடியும். ஆணின் அழுகைக்கு ஒரு கண்ணியமான அர்த்தத்தைத் தந்தவர் ரொபின் வில்லியம்ஸ். அவரது திறமைக்காகவே நான் அவரைப் பெரிதும் விரும்புகின்றேன். 

கமலஹாசன் கவலை

ஆனால் அவரது மரணம் தற்கொலை என்பது உறுதியானால், அந்தச் செயலை வெறுக்கிறேன். திறமை வாய்ந்த ஒரு நடிகரான அவரிடம் இருந்து, இப்படிப்பட்ட ஒரு முடிவை நான் எதிர்பார்க்கவில்லை என்று கமலஹாசன் கவலையுடன் கூறினார். 

ரொபின் வில்லியம்ஸ்க்கு எல்லாம் இருந்தன. ஆனால், மன நிம்மதியும் மன அமைதியும் மட்டும் கிடைக்கவே இல்லை. மாற்றுவழியாக மது போதைக்குப் பாதை மாறினார். ஒட்டு மொத்தமாக அவற்றுக்கு அடிமையாகியும் போனார். கடைசியில் என்ன ஆனது. தன் உயிரையே அடமானம் வைக்க வேண்டி வந்தது. 

அதிகமான போதைப் பொருட்கள்

இரண்டு முறை மதுப் பழக்கத்தில் இருந்து வெளியாகி புனரமைப்பு மையங்களில் புதிய வாழ்க்கை தேடி இருக்கிறார். பல ஆண்டுகள் அந்தத் தறுதலைகளின் பக்கம் தலை வைக்காமல் பயணித்தும் இருக்கிறார். இருந்தாலும், சில சமயங்களில் தொட்டுக் கொள்ள ஊறுகாய் மாதிரி இருந்தது கடைசியில் கள்ளிக் காயாக மாறிப் போனது.

அவர் அதிகமான போதைப் பொருளைப் பயன்படுத்தித் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று வதந்தி நிலவுகிறது. அதிகமாக மதுவையும் போதைப் பொருட்களையும் பயன்படுத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என்று இன்னொரு வதந்தியும் நிலவுகிறது. 

அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்பது மூன்றாவது வதந்தி. எது எப்படியோ அவர் இறந்து விட்டார். இப்போது நம்மிடம் இல்லை, மன உலைச்சலின் காரணமாக மது மயக்கத்திற்கு அடிமையாகிப் போனது என்பது என்னவோ உண்மை.  

மனைவியினால் பிரச்சினை தொடங்கியது

ஔவை சண்முகி படத்தில் கமல்ஹாசன் எப்படி நடித்து இருந்தாரோ, அதைவிட மிஸஸ் டவுட்பையர் படத்தில் ரொபின் வில்லியம்ஸ் சிறப்பாகவே நடித்து இருந்தார். அந்தப் படத்தை நானும் பார்த்து இருக்கிறேன். அதனால்தான், ரசிகர்களால் ரொபின் வில்லியம்ஸின் இறப்பை அவ்வளவு எளிதாகக் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.

இப்படி உலகத்து மக்கள் எல்லோரையும் சிரித்து மகிழ்வித்த இவருக்கு வீட்டிலே தான் பிரச்சினை ஆரம்பமானது. அவருடைய மனைவியினால் தான் பிரச்சினை தொடங்கியது. மனைவின் பெயர் வாலரி வாலார்டி. 1978-இல் திருமணம். அப்போது அவருக்கு வயது 27. 

மணவாழ்க்கையில் பல சிக்கலகள்

குடும்பம் நன்றாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. வாலரி வாலார்டி தன்னைவிட வயது குறைந்த ஒருவருடன் நெருக்கமாக இருப்பதை அறிந்த ரொபின் வில்லியம்ஸ் குடிக்க ஆரம்பித்தார். அதனால் பலப் பல சிக்கல்கள். கடைசியில் பத்தாண்டுகள் கழித்து விவாகரத்து செய்து கொண்டார்கள். 

அடுத்து மார்ஷா கார்சே என்பவரை ரொபின் வில்லியம்ஸ் திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவின் காலத்தில் தான், ஆங்கில ஔவை சண்முகி (மிஸஸ் டவுட்பையர்) படத்தில் நடித்துப் புகழ் பெற்றார். 19 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் திருமணமும் விவாகரத்தில் போய் முடிந்தது. 

மூன்று ஆண்டுகள் கழித்து சூசன் சினேய்டர் எனும் பெண்னைத் திருமணம் செய்து கொண்டார். இங்கேயும் பிரச்சினைதான். இருந்தாலும் வாழ்க்கையை அமைதியாக ஓட்டிக் கொண்டு வந்தார். ஏற்கனவே வாழ்ந்த மனைவிகள் ஜீவனாம்சம் கோரி வழக்கு மேல் வழக்கு போட்டு, அவரை ரொம்பவும் அலைகழித்து விட்டார்கள். 

மகள் புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகை

மன உலைச்சல்களில் இருந்து அவரால் மீள முடியவில்லை. மறுபடியும் குடிக்க ஆரம்பித்தார். அப்புறம் போதைப் பொருட்களுடன் சகவாசம் ஏற்பட்டது. கடைசியில், இரண்டு நாட்களுக்கு முன்னர் குடி, போதைப் பொருட்களால் தன் வாழ்க்கையையும் முடித்துக் கொண்டார். ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது.

இவருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு மகன்கள். ஒரு மகள். பெயர் செல்டா வில்லியம்ஸ். இவரும் புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகை என்பதைச் சொல்லி விடுகிறேன். இதுவரை 15 படங்களில் நடித்து இருக்கிறார். செல்டா தன் தந்தையுடன் சேர்ந்து ’ஹவுஸ் ஆப் டி’ எனும் படத்தில் நடித்து இருக்கிறார். 

தவிர, தந்தையும் மகளும் சில பாடல்களைப் பாடி தொகுப்பாக வெளியிட்டு இருக்கின்றனர். எமி விருதும் கிடைத்து இருக்கிறது. செல்டா வில்லியம்ஸ் 2007-ஆம் ஆண்டு அமெரிக்க நடிகைகளில் அழகான நடிகையாகத் தேர்வு செய்யப் பட்டவர். தன் தந்தையாரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தவர். தந்தையாரின் மறைவு இவரை மிகவும் பாதித்துவிட்டது. ஒரு மாதத்திற்குத் தன் படப் பிடிப்புகளை நிறுத்தி வைத்து இருப்பதாகக் கேள்வி.

தனிமை வாழ்க்கை

ரொபின் வில்லியம்ஸ், 1951 ஜூலை மாதம் 21-ஆம் தேதி சிக்காகோவில் பிறந்தவர். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பெரிய வீடு. தனிமையிலேயே வாழ்ந்து இருக்கிறார். நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை. சின்னச் சின்ன பொம்மை போர் வீரர்கள் தான் நண்பர்கள். அவர்கள்தான் அவருக்குத் துணை. அம்மாவிடம் அடிக்கடி நகைச்சுவைகளை அள்ளி வீசி அட்டகாசம் செய்வார்.

வில்லியம்ஸின் தந்தையார் எப்போதும் வீட்டில் இருப்பது இல்லை. அப்படியே வீட்டில் இருந்தால் ரொபின் வில்லியம்ஸின் அடிவயிறு கலங்கும். அம்மாவும் வேலைச் செய்தார். அதனால் பெரும்பாலும் வேலைக்காரிகளின் பராமரிப்பிலேயே வாழ்ந்தார். அவர் வளர்க்கப்பட முறைதான் அவரிடம் ஒரு புறக்கணிப்பு உணர்வை ஏற்படுத்தி விட்டதாக ரொபின் வில்லியம்ஸ் சொல்கிறார். அந்த உணர்வை ‘லவ் மி சிண்ட்ரோம்’  (Love Me Syndrome) என்று சொல்லி வந்தார்.

1978-ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். படிப்படியாக முன்னேறி அமெரிக்காவின் ஔவை சண்முகி எனும் அவதாரத்தையும் எடுத்து விட்டார். எல்லாவற்றையும் பார்த்துவிட்ட அவர், தனக்குத் தானே தண்டனையை விதித்துக் கொண்டது தான் வேதனையான விஷயம். ஓடி ஆடி சிரிக்க வைத்த ஒரு சிரிப்பு ராஜாவை மனுக்குலம் இழந்து விட்டது.

பாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு - பாகம் 3

[இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 05.08.2014 நாளிதழில் பிரசுரிக்கப் பட்டது.]

காலப் போக்கில் கானானிய நாகரீகம் அழிந்த போனது. புதிய இஸ்ரேலிய நாகரிகம் தோன்றியது. முன்பு இஸ்ரேலியர்களிடம் விக்கிர வழிபாடு இருந்தது. நாளடைவில் மறைந்து போனது.


பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் டேவிட் என்கிற மன்னன் வாழ்ந்த காலத்தில் இஸ்ரேல் எனும் நாடு உருவானது என்றும் சொல்வார்கள். அப்போது ஹிப்ரு மொழி பேசுவோரின் நாடாக இஸ்ரேல் இருந்தது. 

அராமிய மொழி

இதற்குப் பின்னர் தான், யூதர்கள் என்கிற ஓர் இனம் இருப்பதாக அடையாளம் காணப் பட்டது. யூதர்கள் அராமிய மொழியைப் பயன்படுத்தினர். அராபிய மொழி இல்லை. 


அராமிய மொழி. இயேசு மகான் கிறிஸ்துவின் தாய் மொழியும் அராமிய மொழிதான். இந்த அராமிய மொழி இன்று கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றது. இயேசு மகான் பயன்படுத்திய அந்த மொழியை, இப்போது ஒரு மூவாயிரம் பேர்தான் பேசி வருகிறார்கள். 

ஜார்ஜ் சோரோஸ்

யூதர்களில் பலர் ஐரோப்பா பக்கம் புலம் பெயர்ந்தனர். ஜெர்மனியில் தான் அதிகமான குடியேற்றம். பல நூறாண்டுகளாக ஐரோப்பாவிலேயே இருந்தனர்.


பொருளாதாரத்தில் முன்னுக்கு வந்தனர். மற்ற ஐரோப்பிய சமூகங்களைப் பின்னுக்குத் தள்ளினர். ஜெர்மன் மக்களையும் இரண்டாம் தர மக்களாக்கினர். உழைப்பு உழைப்பு என்பதுதான் அவர்களின் தாரக மந்திரமாக விளங்கியது. 

இப்போது உலகில், பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் யூதர்களாகத்தான் இருக்கிறார்கள். அதை நாம் மறந்து விடக் கூடாது. அவர்களில் ஒருவர்தான் ஜார்ஜ் சோரோஸ்.


1997-இல் இவருக்கும் நம்முடைய முன்னாள் பிரதமர் மகாதீருக்கும் வாக்குவாதங்கள் வந்தன. சிலருக்கு நினைவு இருக்கலாம். உலக மகா விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன்கூட ஒரு யூதர்தான்.

ஹிட்லர் செய்த யூத இனப் படுகொலை

அப்புறம் அடுத்து, ஹிட்லர் செய்த யூத இனப் படுகொலை. இதை நாஜி பேரழிப்பு அல்லது ’நாஜி ஹோலோகாஸ்ட்’ என்பார்கள். அதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஒரு திட்டம் போட்டன.


யூதர்களைப் பாலஸ்தீனம் பக்கம் அனுப்பி வைப்பது எனும் முடிவு. யூதர்கள் பாலஸ்தீனத்திற்குப் புலம் பெயர்ந்த போது,  பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி பிரிட்டனின் கைவசம் இருந்தது. 

நாஜிகளின் நரவேட்டையில் இருந்து தப்பித்த யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனம் சென்று குடியேறினர். அதற்கு முன்னர், 1910-களில் இருந்தே யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கி விட்டனர். ஆக, அப்போதே சின்னச் சின்ன பிரச்சினைகள் தொடங்கி விட்டன. இருந்தாலும் பெரிதாக எதுவும் இல்லை.


பாலஸ்தீன மக்கள் வந்தவர்களை அனுதாபத்துடன் பார்த்தார்கள். முடிந்த வரை அவர்களுக்கு உதவிகளையும் செய்து வந்தனர். ரொம்பக் க‌ஷ்டப்பட்டு வந்து இருக்கிறார்கள் என்று தங்குவதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்கள். 

சும்மா சொல்லக் கூட்டது. சொந்தச் சகோதரனைப் போல பார்த்துக் கொண்டார்கள். பொதுவாக, பாலஸ்தீனர்கள் ரொம்பவுமே இரக்க சுபாவம் கொண்டவர்கள். 

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை

வெளுத்தது எல்லாம் பால் என்று நினைத்தது தான் பாலஸ்தீனர்கள் செய்த பெரிய தவறு. அந்தத் தவற்றின் விளைவுகளை இப்போது அனுபவிக்க வேண்டி இருக்கிறது.


ஏற்கனவே சொன்னேன். ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை. இந்தக் கட்டத்தில் அது இங்கே சரியாக அமைகிறது. ஆக, பாலஸ்தீனர்கள் இருக்க இடம் கொடுத்தார்கள். 

ஆனால், வந்தவர்கள் படுப்பதற்கே மடத்தைப் பிடுங்கி எடுத்துக் கொண்டார்கள். 1940-களில் ஒரு பெரிய புலம்பெயர்ப்பே நடந்து இருக்கிறது. அதைத் தான் பாலஸ்தீனர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.


பாலஸ்தீனர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்கள் மனித உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தார்கள். இரக்கச் சிந்தையுடன் நடந்து கொண்டார்கள். ஆனால், யூதர்கள் அப்படி நினைக்கவில்லையே. பிடுங்கித் தின்ன ஆசைப் படுகிறவன் நடுங்கிப் போவதைப் பார்த்து இருக்கிறீர்களா. 

பாலஸ்தீனர்களின் வரலாற்றை ஒரு கதையாகத் தான் சொல்கிறேன். அதனால், வருடங்களைப் பெரிது படுத்தவில்லை. அடுத்து ஐக்கிய நாட்டு சபை, இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டது.


பாலஸ்தீனத்தில் குடியேறிய யூதர்கள் அங்கேயே இஸ்ரேல் என்கிற ஒரு நாட்டை அமைத்துக் கொள்ளலாம். இந்த அங்கீகாரத்தின் பின்னணியில் இருந்தவர் யார் தெரியுமா. 

உலக வாத்தியார் அமெரிக்கா தான். அவருக்கு உதவியாகப் பிரிட்டன் என்கிற சட்டாம்பிள்ளை. போதுமான அளவுக்கு யூதர்கள் குடியேறியதும், ஐ.நா.சபை பாலஸ்தீனத்தை இரு துண்டுகளாகப் பிரித்துப் போட்டது.


ஒரு சில வாரங்களில், இஸ்ரேலியக் குடியரசு பிரகடனம் செய்யப் பட்டது. ஐ.நா.வின் முடிவை யூதர்கள் வரவேற்றனர். என்ன நடக்கின்றது என்பதைப் பாலஸ்தீன அரபுக்கள் மெதுவாகத் தான் உணர்ந்தனர். அதற்குள் காலம் கடந்து விட்டது. வெள்ளந்தியாய் வாழ்ந்து மோசம் போனது தான் மிச்சம். 

ஜோர்டான் மன்னர் ஹுசைன்

பாலஸ்தீனம் பிரிக்கப் பட்டதை, அரபுக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பாலஸ்தீனர்களிடையே மனக்கசப்புகள். மன வெதும்பல்கள். கொஞ்ச நாளில் பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே சில பல வன்முறைப் போராட்டங்கள், சண்டைகள்.


அடுத்து அடுத்து போர்கள்.  நவீன ஆயுதங்களைக் கொண்டு இஸ்ரேலியர்கள் வெற்றி பெற்றனர். அந்தச் சமயத்தில், யூதர்களுக்கு நவீன ஆயுதங்களை அமெரிக்காவும் பிரிட்டனும் கொடுத்தன. பற்றாக்குறைக்கு ஏற்கனவே சோவியத் ரஷ்யா கொடுத்த ஆயுதங்களும் இருந்தன. 

இஸ்ரேலின் முதல் கூட்டாளி யார் தெரியுங்களா. அமெரிக்காவும் இல்லை. பிரிட்டனும் இல்லை. ரஷ்யா தான் முதல் ஆத்ம ஆயுத நண்பர். இந்த விஷயம் பலருக்குத் தெரியாது.


இஸ்ரேலைக் கைக்குள் போட்டுக் கொண்டு, மத்திய கிழக்கில் மண்டோர் வேலை செய்யலாம் என்பதே ரஷ்யாவின் மாஸ்டர் பிளேன். ஆனால், அது நடக்காமல் போய் விட்டது.

சொந்த மண்ணிலேயே அனாதைகளாக வாழ்ந்து வருகிறார்கள்

அப்புறம் யூதர்களின் பக்கம் வெற்றி. காலம் காலமாய் கிராமங்களில் வாழ்ந்து வந்த அரபு மக்கள், பாலஸ்தீனத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப் பட்டனர். பாவம் அவர்கள். 

கடைசியில் பக்கத்து பக்கத்து அரபு நாடுகளில் அகதிகளாய்த் தஞ்சம் அடைந்தனர். இப்போது சொந்த மண்ணிலேயே அனாதைகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதுதான் இப்போதைய காஸா.


பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே நடந்த சண்டைகளைப் பற்றி நான் அதிகம் எழுத விரும்பவில்லை. சங்கடமாக இருக்கிறது. இஸ்ரேல் செய்தது மாபெரும் நம்பிக்கைத் துரோகம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. 

அந்தச் சமயத்தில், ஜோர்டான் மன்னர் ஹுசைன் இருந்தார். அவர் அமெரிக்காவின் பேச்சைக் கொண்டு, பாலஸ்தீனர்களுக்கு நிறையவே துரோகம் செய்து விட்டார். 

இந்த விஷயம் பலருக்குத் தெரியாது. அந்தத் துரோகங்களுக்குப் பிராயச் சித்தமாக, பின்னர் பாலஸ்தீன அகதிகளுக்கு ஜோர்டானிய அரசாங்கம் குடியுரிமை வழங்கியது. அடுத்து, 1970-களில் பாலஸ்தீன இயக்கங்கள் ஜோர்டானில் இருந்து அடித்து விரட்டப் பட்டன. 

பாலஸ்தீன அரபுக்கள் லெபனான் நாட்டில் தஞ்சம்

மன்னர் ஹுசைனுக்கு விசுவாசமாக இருந்த இராணுவப் படைகள் பாலஸ்தீன எழுச்சிகளை மூர்க்கத்தனமாக அடக்கின. அதில் 5000 பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டனர். 

இறுதியாக, வேறுவழி இல்லாமல் பாலஸ்தீன அரபுக்கள் லெபனான் நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அங்கு இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் செய்தனர். பலவீனமான லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் படை எடுத்தது. அதன் சில நிலங்களைப் பறித்துக் கொண்டது.

அடுத்து பாலஸ்தீனப் போராளிகளை அடக்கப் போவதாக இஸ்ரேல் கூறியது. அந்தச் சாக்கில் எகிப்து நாட்டின் மீதும் படை எடுத்தது. லெபனான் தலைநகர் பெய்ரூட் வரை போன இஸ்ரேலிய படைகள், 2000  பாலஸ்தீன அகதிகளைப் படுகொலை செய்தன. 

அந்த இனப் படுகொலைக்கு தலைமை தாங்கியவர் ஜெனரல் ஷரோன். இவர்தான் பின்னாளில் இஸ்ரேலின் பிரதமர் ஆனார். பல பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் அரபு நாடுகளில் தளம் அமைத்து போராடி வந்தன. யாசீர் அரபாத் தேசியவாதக் கொள்கை கொண்டவர்.


அவர் தலைமையில் Tahir al Hatani al Falestini எனும் இயக்கம் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்று இருந்தது. பலப் பல தாக்குதல்களை நடத்தியது. 

அமெரிக்காவின் ஆதரவு

ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராகப் பல தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், அமெரிக்கா தன்னுடைய ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்தனையையும் வெட்டிப் போட்டது. 

சோவியத் ரஷ்யாவைப் பொருத்த வரையில், அப்போதும் இப்போதும் பாலஸ்தீன விடுதலைக்கு மறைமுகமான ஆதரவுகளை வழங்கி வருகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லாமே ஒப்புக்குத்தான்.

அடுத்து Harakat al-Muqaama al-Islamiya எனும் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் அல்லது "ஹமாஸ்" இயக்கத்தை மறந்துவிடக் கூடாது. இந்த இயக்கம்தான் இப்போதைக்கு இஸ்ரேலுக்கு பெரும் குடைச்சல். 

ஹமாஸ் இயக்கம், இராணுவ நடவடிக்கைகளில் மட்டும் இல்லை. அரசியல் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகின்றது. 

பாலஸ்தீனத்தில் ஏழை மக்களுக்கான இலவச மருத்துவமனைகள். இலவச பாடசாலைகள். அநாதை இல்லங்கள். அற நல  மையங்கள் போன்றவற்றை நடத்தி வருகின்றது. 

மனிதாபிமான அடிப்படையில் நிதியுதவிகள்

ஹமாஸின் தர்ம காரியங்களுக்கான நிதி உதவி உலகின் பல நாடுகளில் இருந்து வந்து சேர்கின்றன. பெரும்பகுதி சவூதி அரேபியா, பாகிஸ்தான், குவாயிட், பகரேன், துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் இருந்து போகின்றது. மலேசியாவும் மனிதாபிமான அடிப்படையில் நிதியுதவிகள் செய்து வருகின்றது. இந்தோனேசியாவும் ஓரளவுக்கு உதவிகள் செய்கிறது.

சரி. ஓர் அறிவிப்பு. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஒரு வசதியான வீடு. பிள்ளைகளுக்கு இலவசப் பள்ளிக்கூடம். இலவச மருத்துவமனை வசதிகள். கூடவே ஒரு துப்பாக்கி. வேண்டுமா சொல்லுங்கள். எல்லாமே அரசாங்கச் செலவில் கிடைக்கும். இஸ்ரேலில் குடியேறினால் போதும். அவை எல்லாம் இலவசம். 

ஆனால், ஒரே ஒரு ’கண்டிசன்’. நீங்கள் ஒரு யூதராக மாற வேண்டும். உலகில் யார் வேண்டும் என்றாலும் யூதராக மதம் மாறலாம். இஸ்ரேல் அனுமதி வழங்குகிறது. 

இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள பாலஸ்தீன நிலங்களில், ஒரு ராஜா மாதிரி போய் உட்கார்ந்து கொள்ளலாம். உலகின் எந்த மூலையில் இருந்து வந்தாலும், ஒரு யூதர் ஓர் இஸ்ரேலிய பிரஜையாகக் கருதப் படுகின்றார். 

ஆனால், என்ன. இஸ்ரேலுக்குப் போனதும் மனைவி மக்களை விட்டுவிட்டு, துப்பாக்கியைத் தூக்க வேண்டும். சாகத் தயாராக வேண்டும். எப்படி உங்கள் வசதி.

இருக்க இடம் கொடுத்தார்கள் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்கள்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, தாங்கள் பிறந்து வாழ்ந்து வந்த அந்தப்  பாலஸ்தீன மண்ணிலேயே நிரந்தரமாய் வாழ, வாழ்ந்தவர்களுக்கே உரிமை இல்லை. அதுதான் வேதனையிலும் வேதனையான வேதனை.

பாவம் பாலஸ்தீன மக்கள். இருக்க இடம் கொடுத்தார்கள். குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்கள். சாப்பிட சோறு கொடுத்தார்கள். படுக்கப் பாய் கொடுத்தார்கள். கடைசியில், என்ன ஆனது பார்த்தீர்களா. 

ஆக, இதையே ஒரு வாழ்க்கைத் தத்துவமாக எடுத்துக் கொள்ளுங்கள். அப்பா, அம்மா, மனைவி மக்கள். இவர்களைத் தவிர, வேறு யாரையும் வீட்டில் சேர்ப்பதற்கு முன்னால் இரண்டு மூன்று முறை யோசித்துப் பாருங்கள். வருபவர் நல்லவராக இருக்கலாம். 

நாணயமானவராகத் தோன்றலாம். ஆனால், அவர் மனசில் என்ன இருக்கிறது என்பது அவருக்கே தெரியாமல் இருக்கலாம். 

ஆக, அவரைக் குடும்பத்தில் ஒருவராகச் சேர்ப்பதற்கு முன்னால் என்ன என்ன விளைவுகள் ஏற்படலாம் என்பதை நன்றாக யோசித்துப் பாருங்கள். 

இப்போது இந்தக் கலியுகத்தில் நல்ல நல்ல கலாசாரங்கள் எல்லாம் மூன்றாம் தரக் கலாசாரங்களாக மாறி வருகின்றன. இருக்கிற சொத்தைப் பிடுங்கிக் கொண்டு போவதில்தான், பல சொந்த பந்தங்கள் 24 மணி நேரமும் கணக்குப் போட்டுப் பார்க்கின்றன. 

நாம்தான் பத்திரமாக இருக்க வேண்டும்! பத்திரமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்! 

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி.

13 ஆகஸ்ட் 2014

பாலஸ்தீனம் கண்ணீர் வரலாறு - பாகம் 2

 [இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 04.08.2014 நாளிதழில் பிரசுரிக்கப் பட்டது.]

இரண்டாம் உலகப் போரில், பிரிட்டன் ரொம்பவுமே பாதிக்கப்பட்டுப் போனது. அந்தச் சமயத்தில் பிரிட்டனிடம், ஐம்பது அறுபது காலனிகள் (Colony) இருந்தன. அதாவது இந்தியா, மலாயா, பர்மா, கானா, கென்யா, மலாவி, உகாண்டா, பிஜி என்று பலப் பல  காலனி நாடுகள். 

எண்ணிப் பார்த்தால் 53 வருகிறது. போருக்குப் பிறகு, பிரிட்டனைப் பார்த்தால் மனசிற்கு கஷ்டமாக இருக்கும். வெளியே பார்த்த மாதிரி வீட்டையும் பார்த்து இருக்க வேண்டுமே என்று கதை கதையாய்ச் சொல்லிக் கண்ணீர் விட்டது.


எல்லாக் காலனி நாடுகளையும், சரியாகக் கவனிக்க முடியாத நிலைமை. உண்மைதானே. ஒரு மனைவியாக இருந்தால், உருப்படியாகச் சோறு போட்டு அழகு பார்த்து இருக்கலாம். 

கணக்குத் தெரியாமல் மன்மத ராகம் பாடினால் எப்படிங்க. சொல்லாமல் கொள்ளாமல் காசி இராமேஸ்வரத்திற்கு டிக்கெட் எடுப்பது தான் உத்தமம். என்னைக் கேட்டால் அதுதான் சுத்தமான புருஷ இலட்சணம். 


ஆக, எப்படியாவது இந்தக் காலணிகளை, மன்னிக்கவும் காலனிகளைக் கழற்றிப் போட்டால் நிம்மதி என்று பிரிட்டன் பெருமூச்சு விட்டது. ஒரு காலத்தில் அதன் காலனிகளை எல்லாம் அதன் காலணிகளாகத் தானே அந்த நாடு நினைத்தது. நடத்தியும் வந்தது. 

ஒரு நாட்டின் இயற்கை வளங்களை நன்றாகச் சுரண்டி எடுப்பது. எல்லாவற்றையும் உறிஞ்சி முடித்த பிறகு, சாவதானமாகச் சுதந்திரம் கொடுத்து சமாதானம் செய்வது. இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா. 


இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த உலகத்திற்கே சோறு போடும் அளவிற்கு இயற்கை வளங்கள் நிறைந்த புனித பூமி. பரங்கித் தலையர்கள் வந்தார்கள். அவற்றை எல்லாம் சாக்கு மூட்டைகளில் கட்டி எடுத்துக் கொண்டு போனார்கள். வெறும் சக்கையைக் காட்டி இதுதான் சுதந்திரம் எடுத்துக்கோ என்று பை பை காட்டினார்கள். 

இப்போது பாருங்கள். கடலில் கலக்கும் மழை நீரைத் கொடுப்பதற்கே, கஞ்சத் தனம் பண்ணுகின்ற அரசியல் அழுக்குகள் மலிந்து விட்டன. ஒரு புண்ணிய பூமி வாய்விட்டு அழுகிறது.

கலகம் இல்லாமல் உலகம் இல்லை. 
சிந்தனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை

தன்னுடைய குட்டி நாடுகளைக் கழற்றி விட்டால், அப்புறம் லண்டன் கஜானா காலியாகி விடுமே. இந்தக் காலனிகளில் இருந்துதானே கப்பல் கப்பலாய் வருமானம் வந்தது. ஆக, அப்படியும் ஒரு பயம் இருந்தது. 


அடுத்து, ஆசை யாரை விட்டது. இந்தச் சமயத்தில், மத்தியக் கிழக்கு நாடுகளில், பிரிட்டனின் கை கொஞ்சம் லேசாக ஓங்கியது. அங்கே இருந்து டீசல், பெட்ரோல் என்கிற கறுப்புத் தங்கம் வற்றாமல் கிடைத்தது. 

அதை வைத்துக் கொண்டு, பல நாடுகளுக்கு நாட்டாமையும் பார்த்தது. கலகம் இல்லாமல் உலகம் இல்லை. சிந்தனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை என்பதே வெள்ளைக்காரர்களின் வேதாந்தம்.


உலக வல்லரசாக வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்ட நாள் ஆசை, கனவு, இலட்சியம், இலக்கு, எதிர்பார்ப்பு எல்லாமே. உலகப் போலீஸ்காரர் பட்டத்தைத் தற்காக்க வேண்டும் என்பதுதான் தலையாய ஆசை. அந்த ஆசை 1900-களிலேயே வந்து விட்டது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஹிட்லர் செய்த யூதப் படுகொலைகளினால், உலகம் முழுவதும் யூதர்களுக்கு அனுதாப அலைகள் வீசத் தொடங்கிய நேரம். ஆரம்பத்தில் சில ஆயிரம் யூதர்கள் பாலஸ்தீனத்திற்குச் சென்று குடியேறினார்கள். 

இவர்கள் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த சோசலிச யூதர்கள். அவர்கள் சோசலிச யூதர்களாக இருந்ததால், சோவியத் ரஷ்யாவின் ஆதரவை எளிதாகப் பெற முடிந்தது. ஒன்றை மறந்துவிட வேண்டாம்.


அந்தக் காலக் கட்டத்தில் இஸ்ரேலின் நெருங்கிய நண்பனாக இருந்தது சோவியத் ரஷ்யா. அதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமான தகவல். அப்போதும் சரி இப்போதும் சரி. பலருக்கு வியப்பை அளிக்கும் செய்தியும்கூட. இப்போது பாருங்கள். இஸ்ரேலுக்கும் ரஷ்யாவுக்கும் ஏழாம் பொருத்தம்.

மூன்றாம் உலக நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள்

இரண்டாவது உலகப் போரின் போது, ரஷ்யாவை ஸ்டாலின் ஆட்சி செய்தார். ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, மூன்றாம் உலக நாடுகள் விடுதலைப் போராட்டங்கள் செய்த காலக் கட்டம். அந்த நாடுகளை ரஷ்யா ஆதரித்தது. அதை அப்போதைக்கு ஸ்டாலின் கொள்கை என்றும் சொல்வார்கள்.


மத்திய கிழக்கில் பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள் அதிகாரம் செய்து வந்தது ரஷ்யாவுக்குப் பிடிக்கவில்லை. அவற்றுக்கு எதிராக வேறு ஒரு நாடு உருவாக வேண்டும் என்று ரஷ்யா விரும்பியது. 

அந்த நாட்டிற்கு ஆதரவு தர ரஷ்யா தயாராகவும் இருந்தது. அது இஸ்ரேல் நாடாக இருந்தால் நல்லது என்பது ஸ்டாலின் அண்டக் காகசக் கணிப்பு.

ஆக, யூதர்களைத் தனியாகக் குடியேற்றுவதற்கு ஓர் இடம் தேவைப் பட்டது. அந்த வகையில் இஸ்ரேலியர்கள் சம்பந்தப்பட்ட ஓர் இடம் இருக்கிறது என்றால் அது பாலஸ்தீனம்தான். 

ஆக, யூதர்கள் அங்கே போய் குடியேறலாம் என்று அமெரிக்காவும் இங்கிலாந்தும் திட்டம் போட்டன. ஐ.நா. என்கிற தலையாட்டி பொம்மையும் சரி என்று சொல்லி, தலையைத் தடவிக் கொண்டது. 

கானான் ஒரு பெரிய சாம்ராஜ்யம்

அதற்கு முன்னர், பாலஸ்தீனத்தின் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டும். 8000 ஆண்டுகளுக்கு முன்னர், யூத மதம் தோன்றியதாக யூதர்கள் சொல்கின்றனர்.


ஆனால், 10,000 ஆண்டுகளுக்கு முன்பே பாலஸ்தீனத்தில், மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அகழாய்வுச் சான்றுகள் உள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஜோர்டான், சிரியா போன்ற நாடுகளின் பழைய பழைய நாகரீகங்கள் அங்கேதான் தோன்றின.

அந்தச் சமயத்தில் கானான் எனும் ஒரு பெரிய சாம்ராஜ்யம், பாலஸ்தீனப் பகுதியில் இருந்து இருக்கிறது. அந்தச் சாம்ராஜ்யம் இப்போது இல்லை. அழிந்து விட்டது. 

அந்தக் கானான் சாம்ராஜ்யத்தின் வழித் தோன்றல்கள் தான், இப்போது இருக்கின்ற இந்த யூதர்கள். ராக்கெட் மேல் ராக்கெட்டைப் பாய்ச்சி லெபனான் நாட்டை அலங்கோலப் படுத்திக் கொண்டு இருக்கும் யூத வாரிசுகள்.


இங்கே ஓர் இடைச் செருகல். சொந்தக் கதை. சொல்லலாம் தானே. இப்ப சொல்லாமல் வேறு எப்ப சொல்வதாம். 1972-ஆம் ஆண்டு. தமிழ் மலர் நாளிதழில் நிருபராக வேலை செய்த சமயம். 

அப்போது, இஸ்ரேல் ஓர் அனைத்துலகக் கட்டுரைப் போட்டியை நடத்தியது. ஆங்கில மொழியில் தான். கானான் சாம்ராஜ்யத்தைப் பற்றி ஒரு வரலாற்றுக் கட்டுரையை எழுதி, அமெரிக்கத் தூதரகத்தின் மூலமாக அனுப்பி வைத்தேன். 

இரண்டாவது பரிசு கிடைத்தது. விருந்தினராக வரச் சொல்லி இஸ்ரேலிய அரசாங்கம் அழைப்பு அனுப்பியது. போக முடியவில்லை. இந்தப் பக்கம் அனுமதி கிடைக்கவில்லை. புரிந்து கொள்ளுங்கள். நாற்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை.

காலப் போக்கில் கானானிய நாகரீகம் அழிந்தது

அப்படியே போய் இருந்தால் என்ன. பக்கத்தில் இருக்கிற எகிப்து நாட்டிற்குப் போய் இருக்கலாம். பாலைவனத்தில் ஒட்டகங்களை மேய்க்கிற வேலை கிடைத்து இருக்கும். கிளியோபாட்ரா மாதிரி, கழுதைப் பாலில் குளிக்கிற ஒரு பெண்ணைப் பார்த்து இருக்கலாம்.


அவளுக்கும் தமிழ்மொழியைக் கற்றுக் கொடுத்து இருக்கலாம். அவளும் எனக்கு உதவியாக இருந்து இருப்பாள். என்ன செய்வது. கழுதைப் பாலிலும் குளிக்க முடியவில்லை. ஒட்டகப் பாலையும் குடிக்க முடியவில்லை. கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று சொல்ல மாட்டேன். 

ஏன் தெரியுமா. அதே கிளியோபாட்ரா மாதிரி நல்ல ஓர் அழகிய கிளி, இப்போது வீட்டில் இருக்கிறது. அந்தக் கிளியின் பெயர் மனைவி.

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். எனக்கும் உதவியாக இருக்கும்.  நன்றி.