19 அக்டோபர் 2014

கணினியும் சுட்டிகளும்

கடந்த ஒரு வருடமாக ’சுட்டி மயில்’ மாத இதழில் சுட்டிகளின் கணினி கேள்விகளுக்கு பதில் அளிக்கப் படுகிறது. அக்டோபர்  2014 மாத இதழில் வெளியான கேள்வி பதில்கள். 

Preview

சுட்டி மயில்

மரியா சேமந்தா, ஆண்டு 6, தாப்பா தமிழ்ப்பள்ளி, பேராக்
கே: கணினியின் கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?
ப: கணினியில் தேவை இல்லாத கோப்புகளை Delete என்பதைத் தட்டி அழித்து விடுகிறோம். அப்படி அழிக்கப் பட்ட கோப்புகள் Recycle Bin எனும் மீள்சுழல் தொட்டியில் சேர்ந்து விடுகின்றன. பின்னர் அங்கேயும் சென்று Empty Recycle Bin என்பதைச் சொடுக்கிச் சுத்தமாகக் காலி செய்து விடுகிறோம். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பிரச்சினை அதோடு முடிந்தது. அப்படித் தான் எல்லோரும் நினைக்கிறோம்.
ஆனால், திறமை வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் அழிக்கப் பட்ட அந்த  கோப்புகளை மீட்டு எடுத்து விடுவார்கள். அது தெரியுமா உங்களுக்கு. அப்படி மீட்டு எடுப்பதற்கு சில சிறப்பு நிரலிகள் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னால் ஒருவர் என்னிடம் வந்தார். இந்தியாவில் பிடித்த படங்களை தன் மகள் தெரியாமல் அழித்து விட்டதாகச் சொல்லிக் கண் கலங்கினார். அந்தப் படங்கள் ஒரு வருடத்திற்கு முன் கணினியில் இருந்து சுத்தமாக அழிக்கப்பட்டு விட்டன.
மறுபடியும் சொல்கிறேன். அந்தப் படங்கள் ஒரு வருடத்திற்கு முன்னால் அழிக்கப்பட்டு விட்டன. இருந்தாலும் அழித்த அந்தப் படங்களை மீட்டு எடுத்துக் கொடுத்தேன். ஒரு பத்து நிமிட வேலை. அவ்வளவுதான். அதனால், ஓர் ஆவணத்தை அழித்து விட்டால், அதைக் கணினியில் இருந்து சுத்தமாக அழித்து விட்டதாக மட்டும் நினைத்து விட வேண்டாம். 
அழிக்கப் பட்ட தகவலின் தடயங்களைக் கணினியின் Hard Disk எனும் வன் தட்டகம் மறக்கவே மறக்காது. பத்திரமாக வைத்து இருக்கும். கணினித் திரையில் வெளியே இருந்து பார்த்தாலும் தெரியாது. மறைந்தே இருக்கும். ஏற்கனவே அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் புதிய தகவல்கள் வந்து அமரும் வரையில் அந்தப் பழைய தடயங்கள் அப்படியே இருக்கும்.
ஆக, கணினியின் கோப்புகளை நிரந்தரமாக அழிப்பதற்கு ஒரு நிரலி இருக்கிறது. அதன் பெயர் SDelete (Secure Delete). இந்த நிரலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் இலவசமாக வழங்குகிறது. கீழ்காணும் இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கணினியின் தகவல்களை முற்றாக அழிப்பதற்கு இந்த நிரலியைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிரலியைப் பன்படுத்தித் தகவல்களை அழித்தால், பின்னர் அவற்றை மீட்டு எடுக்கவே முடியாது.

சு. யோகீஷ், ஆண்டு 6, லாடாங் ஜெண்டராட்டா 1 தமிழ்ப்பள்ளி, பேராக் (சுட்டி உறுப்பினர்: 1242)
கே: கணினியின் மூலமாகக் கொசுக்களை விரட்டி அடிக்க முடியும் என்று என் நண்பர் சொல்கிறார். முடியுமா சார்? நம்ப முடியவில்லை.
ப: உண்மைதான். கொசுக்களை விரட்டி அடிக்கும் ஆற்றல் கணினிக்கு உள்ளது. ரொம்ப பேருக்கு இந்த விஷயம் தெரியாது. சத்தத்தை Hertz எனும் அளவைக் கொண்டு அளக்கிறார்கள். ஒரு சத்தத்தின் அளவு 20,000 Hertz-க்கும் மேலே இருந்தால்தான் மனிதர்களின் காதுகளால் கேட்க முடியும்.
கொசுக்களின் காதுகள் 16,000 இருந்து 20,000 ஹெர்ட்ஸ் ஒலி அலைகளைக் கேட்கும் ஆற்றலைப் பெற்றவை. கணினியின் ஒலிபரப்பிகள் 17,000 இருந்து 40,000 வரையிலான ஹெர்ட்ஸ் ஒலி அலைகளை ஒலிபரப்புச் செய்யக் கூடியவை
ஓர் ஒலி 20,000 ஹெர்ட்ஸ் ஒலி அலை வரிசைக்கும் கீழே போனால், மனிதர்களுக்கு அந்த ஒலி கேட்காது. ஆனால் , எறும்பு, கொசு, வண்ணத்துப் பூச்சி, கரப்பான் போன்ற சின்னச் சின்ன ஜீவராசிகளுக்கு மட்டும் கேட்கும். அந்தச் சத்தம் அவற்றின் செவிப் புலன்களுக்கு ஒரு வகையான வலியை உண்டாக்கும். அதனால் அவை அந்த மாதிரியான  சத்தம் வரும் இடங்களுக்குப் போவதைத் தவிர்க்கும். ஆக, அப்படிப் பட்ட ஓர் ஒலியை நம்ப வீட்டுக் கணினியால் உருவாக்க முடியும். அதைக் கேட்டதும் கொசுக்கள் ஓடி ஒளிந்து கொள்ளும்.
கொசுக்கள் இல்லையே என்பது அந்த நேரத்தில் மட்டும் நிம்மதியைக் கொடுக்கும். கணினியை நிறுத்தியதும் மறுபடி கொசுக்கள் வந்து விடும். சரியா. சாருன்யூ புன்யாராத்தாபுண்டுகு (Sarunyou Punyaratabundhu) எனும் ஒரு தாய்லாந்துகாரர் அந்தக் கொசு விரட்டியைக் கண்டுபிடித்து இருக்கிறார். பதிவிறக்கம் செய்து சோதனை செய்து பாருங்கள். நான் பயன் படுத்திப் பார்த்தேன். ஒரே ஒரு கொசு மட்டும் பதுங்கிப் பறந்து வந்து என்னைக் கடிக்காமல் போனது. தைரியம் இல்லாத கொசு. இணைய முகவரி: www.allmosquitos.com/soft/anti-mosquito.rar  
ர. திவ்யா ஸ்ரீ, ஆண்டு 6, செயிண்ட் பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி, பேராக் (சுட்டி உறுப்பினர்: 1787)
கே: சிலர் கணினியை அடிக்கடி திறப்பதும் அடைப்பதுமாக இருப்பார்கள். அது நல்லதா?
ப: கணினியை அடிக்கடி அடைத்து திறப்பது, அதாவது On and Off செய்து  கொண்டு இருப்பது தவறு. அந்த மாதிரி செய்தால் கணினி நீண்ட நாட்களுக்கு  நீடிக்காது. சீக்கிரமாகக் கெட்டுப் போக வாய்ப்புகள் உள்ளனகணினியை முடுக்கி விடும் போது, கணினிக்குள் ஒரு வகையான மின் அதிர்வு  ஏற்படும். ஒவ்வொரு முறையும் நீங்கள் கணினியை முடுக்கிவிடும் போது இந்த மின் அதிர்ச்சி உண்டாகும்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திறக்கிறீர்கள் - அடைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் அத்தகைய மின் அதிர்வுகள் ஏற்படும். கணினியின் உள்ளே இருக்கும் சாதனங்கள் அந்த அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை. இப்படியே அடைத்துத் திறந்து விளையாடிக் கொண்டு இருந்தால் ஒரு நாளைக்கு கணினி நிரந்தரமாகக் கண்களை மூடிக் கொள்ளும். அதனால், கணினியில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே தடவையில் செய்து முடித்துவிட வேண்டும்.
பின்னர் அதற்கு ஒரு மணி நேரமாவது ஓய்வு கொடுக்க வேண்டும். சும்மா சும்மா திறப்பதும் சும்மா சும்மா அடைப்பதுமாக இருந்தால், பாவம் அந்தக் கணினிதான் என்ன செய்யும். நீங்களே சொல்லுங்கள். கணினியை நீண்ட நேரம் பல மணி நேரத்திற்கு அடைக்காமல் இருந்தாலும் அதிகமாகச் சூடு ஏறும். அதனால் கணினிக்கு சேதம் ஏற்படலாம். குளிர்சாதன அறையில் கணினி இருந்தாலும் தொடர்ந்து பல மணி நேரம் பயன்படுத்தக் கூடாது. மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை அதற்கு சில நிமிடங்கள் ஓய்வு கொடுக்க வேண்டும்.
ப. விக்னேஸ், ஆண்டு: 6, உலு திராம் தமிழ்ப்பள்ளி, ஜொகூர், 
(சுட்டி உறுப்பினர்: 1803) 
கே: Yahoo எனும் பெயர் எப்படி வந்தது?
: ஜோனாதான் ஸ்விப்ட் என்பவர் ஒரு பிரபலமான ஆங்கிலேய எழுத்தாளர். அவர் 1726 -ஆம் ஆண்டில்குலிவர் டிரெவல்ஸ்’ எனும் நாவலை எழுதினார். அதில் ஒரு சொல் தொடர் வருகிறது. Yet Another Hierarchical Officious Oracle எனும் சொல் தொடர். இந்தச் சொல் தொடரில் வரும் சொற்களின் முதல் எழுத்துகளைப் பாருங்கள். Yahoo என்று வரும். ஆக, அந்தச் சொற்களின் முதல் எழுத்துகளைப் பிடித்துக் கொண்டு, அப்படியே இதற்கும் பெயர் வைத்து விட்டார்கள்.
யாஹூ எனும் பெயர் வந்த விதமே கொஞ்சம் வேடிக்கை ஆனது. யாஹூவின் பழைய பெயர் Jerry and David's Guide to the World Wide Web. மிக நீளமான பெயராகத் தானே தெரிகிறது.  யாஹூ உருவாகிய சில மாதங்களுக்கு அப்படித் தான் தொடர் வண்டி வாலைப் போல நீண்டு நெடிய பெயராக இருந்தது. யாஹூவை உருவாக்கியவர்கள் இரு மாணவர்கள். ஜெரி யாங் (Jerry Yang) இன்னொருவர் டேவிட் பிலோ (David Filo).  1994-இல் தோற்றுவிக்கப் பட்டது. யாஹூ இலவசமாக மின்னஞ்சல் சேவையை வழங்கி வருகிறது. தவிர, உலகத் தேடல் இயந்திரங்களில், இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.
கி. விஷ்வலிங்கம், ஆண்டு 6, அம்பாங் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்
(சுட்டி உறுப்பினர்: 1820)
கே: ஒவ்வொரு கணினியிலும் Anti Virus போட்டிருக்க வேண்டுமா?
ப: வைரஸ் என்றால் கிருமி. கணினி வைரஸ் என்றால் கணினிக் கிருமி என்று பொருள். மனிதர்களைத் தாக்கும் கிருமி என்பது மனிதக் கிருமி. அதைப் போல கணினியைத் தாக்கும் கிருமிக்குப் பெயர் கணினிக் கிருமி. இருந்தாலும், கணினிக் கிருமி என்பது மனிதனைத் தாக்கும் மனிதக் கிருமி மாதிரி அல்ல. அப்படித்தான் பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. கணினிக் கிருமி என்பது வேறு. மனிதக் கிருமி என்பது வேறு.

மனிதர்களைத் தாக்கும் கிருமிக்கு உயிர் இருக்கிறது. ஆனால், கணினியைத் தாக்கும் கிருமிக்கு உயிர் இல்லை. கணினிக் கிருமி அல்லது கணினி வைரஸ் என்பது ஒரு வகையான சின்ன மென்பொருள். அதாவது சின்ன ஒரு நிரலி. (Program)

கணினி வைரஸ் கணினிக்குள் நுழைந்ததும் நாம் சேகரித்து வைத்து இருக்கும் செய்திகள், படங்கள், ஆவணங்கள், செயலிகள் போன்றவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக நாசம் செய்துவிடும். அதனால் கணினிக் கிருமிக்கு தமிழில் கணினி அழிவி அல்லது நச்சுநிரல் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

இந்தக் கணினி அழிவியைக் கணினிக்குள் வரவிடாமல் தடை செய்யும் ஒரு நிரலிக்குப் பெயர்தான் Anti Virus. தமிழில் நச்சுநிரல் தடுப்பி என்று அழைக்கலாம். அல்லது கணினிக் கிருமித் தடுப்பி என்றும் அழைக்கலாம்.

இந்த அழிவிகள் எப்படி உருவாக்கப் படுகின்றன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு கணினியைச் செயல் படுத்துவதற்கு செயலிகள் தேவை. அதாவது Programs.  இந்தச் செயலிகளை எழுதித் தயாரிக்கும் கணினி நிபுணர்களே, இந்தக் கணினி அழிவிகளையும் எழுதுகிறார்கள். தங்களுடைய திறமைகளைக் காட்ட வேண்டும் என்பதற்காக அப்படி செய்கிறார்கள். சிலர் விளையாட்டுக்காகவும் எழுதுவார்கள்.

எந்த நேரத்தில் அழிவிகள் உங்கள் கணினியைத் தாக்கும் என்று உங்களுக்கே தெரியாது. அதனால் உடனடியாக Anti Virus எனும் தடுப்பு நிரலியைக் கணினியில் பதித்துக் கொள்ளுங்கள். வெள்ளம் வருவதற்கு முன்பாக அணை போடுங்கள். AVG, Avast, Avira, Comodo, Kaspersky, Trend Micro, Panda, Eset, Ashampoo, Zone Alarm, BitDefender, McAfee போன்ற தடுப்பு நிரலிகள் இலவசமாகக் கிடைக்கின்றன.


இந்தத் தடுப்பு நிரலிகளின் இணைய முகவரிகள் நீளமானவை. இங்கே எழுத முடியாது. அதனால், கூகிள்’ தேடல் இயந்திரத்தில் ksmuthu என்று தட்டச்சு செய்தால் போதும். நிறைய இணையத் தொடர்புகள் கிடைக்கும். ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து, என்னுடைய வலைப் பதிவிற்குச் செல்லுங்கள். அங்கே நேரடியான தொடர்புகள் உள்ளன. நிறைய கணினித் தகவல்களும் உள்ளன.

16 அக்டோபர் 2014

கருக்கொலை சிசுக்கொலை

[இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 02.07.2014 நாளிதழில் வெளியான கட்டுரை]


குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று சொல்வார்கள். ஆனால், இப்போது குழந்தையும் குண்டுமணியும் குப்பைத் தொட்டியிலே என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. படிக்கப் போகிற பதின்ம வயதுப் பெண்கள் குழந்தையைப் பெற்று கழிவறையில் எறிந்து விட்டுப் போகும் அளவிற்கு ஒரு கலாசாரம் சாதாரணமாகி வருகிறது. மலேசியாவில் மட்டும் அல்ல. உலகத்தில் பல இடங்களில் அந்த மாதிரியான உண்மைகள் பரவலாகி வருகின்றன.



உங்களுக்கு ஒன்று தெரியுமா. இந்தியாவில் சில மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன், அந்தப் பச்சை சிசுக்களின் தொப்புள் கொடி ஈரம் காய்வதற்கு முன்னரே விஷம் கொடுத்துக் கொன்று விடுகின்றனர். முன்புதான் அப்படி என்றால் இப்போதும் அந்தச் சறுக்கல்களில் சனி பகவானுக்குச் சங்கு ஊதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.



ஒரு சில கிராமத்து எல்லைகளில் மாட்டுச் சாணம் போட்டு கள்ளிச் செடிகளை வளர்த்து வருகிறார்களாம்.  பத்திரிகைச் செய்தியில் படித்த நினைவு. கள்ளிப் பாலைக் கொடுத்து சிசுக்களைக் கொல்வது ஒருபுறம் இருக்கட்டும். பிறந்த மறுநாளே கழுத்தை நெரித்துக் கொள்ளும் அளவுக்கு மனித மனம் மிருகமாகிப் போகிறதே! ஈவு இரக்கத்தில் ஈரப் பசை இல்லாத சில தாய்மைகளை என்னவென்று சொல்வது. மனசிற்கு ரொம்பவும் சங்கடமாக இருக்கிறது!

சிசுவைப் புதைத்த இடத்தில்
கண்ணீர் வடிக்கிறது பனித்துளி
பாலூட்ட வழி தெரியாமல்
பதறித் துடிக்கிறது கள்ளிச் செடி



கவிதையைப் பாருங்கள். ஆக, அவர்களுக்கு எப்படி மனம் வருகிறது என்று யோசித்துப் பார்க்கின்ற விஷயம் இல்லை. எப்படி எல்லாம் குறுக்கு புத்தி கோணலாகிப் போகிறது என்று யோசிக்கின்ற விஷயம். இப்படியே பெண் பிள்ளைகளை அழித்துக் கொண்டு போனால் அப்புறம் பெண்களே இல்லாமல் போய்விடுவார்களே. அழகிற்கும் வேண்டும் ஆசைக்கும் வேண்டும். ஆனால், பெண் குழந்தைகள் என்றால் அது மட்டும் வேண்டாம். என்னய்யா அக்கிரமம்.



பெண்கள் இல்லாமல் ஆண்களால் ஓர் அணு அளவுகூட அசைய முடியாது. ஓர் அறிஞர் சொல்லி இருக்கிறார். அது சத்தியமான உண்மை. சிசுக்கொலைகளைப் பார்த்து பார்த்து பூமாதேவிக்கே பொறுக்காமல் போய்விட்டது போலும். அதனால்தானோ என்னவோ அடிக்கடி காட்டு வெள்ளங்களும் கடல் சுனாமிகளும் ஆர்ப்பரித்துப் போகின்றன.

பெண்பிள்ளைகளைக் கொன்றுவிடும் பாவச் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு நல்ல திட்டம்தான் தமிழ்நாட்டின் தொட்டில் குழந்தை திட்டம்.



இந்தத் திட்டம் 1992-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாகத் தமிழ்நாட்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. தொட்டில் குழந்தை திட்டத்தை உருவாக்கிய பெருமை முதல்வர் ஜெயலலிதாவையே சாரும். அவருக்கு நன்றி சொல்வோம். சேலம் மாவட்டத்தில் இந்தத் திட்டம் முதன்முறையாக நடைமுறைக்கு வந்தது.



பின்னர் 2001-ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டது. இப்போது குடலூர், அரியலூர், பெரம்பலூர், வில்லிபுரம் போன்ற இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுமையும் ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட தொட்டில் குழந்தை மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திற்கும் ஆண்டுக்கு 60 - 80 இலட்சம் ரூபாய் செலவாகிறது.  இதுவரை 3,800 பெண் குழந்தைகள் 662 ஆண் குழந்தைகள் காப்பாற்றப் பட்டுள்ளனர். இவர்களில் 3,200 குழந்தைகள் தத்து கொடுக்கப் பட்டுள்ளனர். தவிர 260 பெண் குழந்தைகள் 44 ஆண்குழந்தைகளை வெளிநாட்டவர் தத்து எடுத்துள்ளனர்.



தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் அதாவது 2001-இல் 1000 ஆண்களுக்கு 942 பெண்களாக இருந்த விகிதம் 2011-இல் 1000 க்கு 946 ஆக உயர்ந்து உள்ளது. சந்தோஷமான செய்தி.

பெண் பாவம் பொல்லாதது

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல; இந்தியாவின் பல மாநிலங்களில் பெண் குழந்தைகளை ஒரு பெரிய சுமையாகவே நினைக்கின்றனர். அதாவது பரவாயில்லைங்க. அதையும் தாண்டிப் போய், ஐரோப்பிய நாடுகளில் பிறந்த குழந்தையே பெற்றவர்களுக்கு ஒரு சுமையாகிப் போகின்றது. அப்படி ஒரு நவீனக் கலாசாரம். 


அதைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள். வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள் என்பதை எல்லாம் வேண்டும் என்றால் வரலாற்றில் படிக்கலாம். இப்போதைக்கு அப்படி இல்லை. வந்தார்கள் பார்த்தார்கள் படுத்தார்கள் என்பதுதான் அங்கே நடக்கிற கசுமாலக் கூத்துகள்.  காடு மேடு தெரியாமல் சகட்டு மேனிக்கு வீடு கட்டி வாழ்கிறார்களாம். செய்திகள் வருகின்றன. அதைப் பற்றி கருத்து சொல்ல மனதில் பலம் இல்லை.

இந்தியாவின் சில இடங்களில், பெண் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையின் பிறந்த தளும்பு ஆறுவதற்குள் அரிச்சுவடி தெரியாமல் அதன் முகவரியைச் சுத்தமாக அழித்து விடுகின்றார்கள். இங்கே மலேசியாவில் கொஞ்சம் வேறு மாதிரி. வந்ததும் தெரியாமல் போட்டதும் தெரியாமல் போய்க் கொண்டே இருக்கிறார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் இங்கே ஆண்குழந்தை பெண் குழந்தை என்கிற பேதம் இல்லை. அது ஒன்றுதான் பாக்கி.



ஆக, இங்கே மட்டும் என்ன ஒசத்தி என்று கேட்க வேண்டாம். குழந்தைகளைப் பெற்று வீசி எறியும் கலாசாரத்திற்கு மலேசியா மட்டும் விதிவிலக்கு அல்ல. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஒன்றாக ஊறிய மட்டைகள் ஒன்றாகத்தான் ஊறிப் போய் இருக்கும். குப்பைத் தொட்டிகளில், பேரங்காடிகள், கோயில் குளங்களில் இருந்து சிசுக்கள் மீட்கப் படும் அவல நிலைகளை அடிக்கடி பார்த்துக் கொண்டுதானே வருகிறோம். எல்லாரையும் சொல்லவில்லை. ஈவு இரக்கத்தில் ஈரப் பசை இல்லாமல் போகும் ஒரு சில மனிதப் பிண்டங்களைத்தான் சொல்கின்றேன்.



அண்மையில் மலேசிய தேசிய சேவைக்கு போன ஒரு பதின்ம வயதுப் பெண், குளியறையிலேயே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த விஷயம் ஒட்டு மொத்த மலேசியர்களையே பிரமிக்கச் செய்தது. தெரியும்தானே.

அதற்கு எல்லாம் காரணம் என்ன. கணவனை விட்டுப் பிரிந்த பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள்; திருமணம் செய்யாமலே பிறந்த குழந்தைகள்; கணவன் இருந்தும் அவனுக்குத் தெரியாமல் பிறந்த குழந்தைகள்; கருவைக் கலைத்த பின்னர் பிறந்த குழந்தைகள்; பதின்ம வயதில் பக்குவப் படாத ஆசைகள்; வயதுக்கு மீறிய வரைமுறையற்ற வாலிபக் கோளாறுகள். 
அப்புறம் இதை எல்லாம் தாண்டி, கல்யாணம் ஆகாமலேயே பிறந்த குழந்தைகள். ஆக, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். குழந்தையைப் பெற்று எடுத்தவர்களுக்கு அந்தக் குழந்தை வேண்டாம் என்கிற ஓர் இக்கட்டான நிலைமை எப்படியோ வந்துவிடலாம். அல்லது அவர்களுடைய ஆசாபாசங்களுக்கு அந்தக் குழந்தை இடைஞ்சலாகியும் போகலாம்.

அந்த மாதிரியான இரக்கமற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்த மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் குழந்தைத் தொட்டில்கள் வைக்கப் படுகின்றன.



ஒரு குழந்தையின் உயிர்க் காற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பதிலாக, அப்படியே அந்தக் குழந்தையைக் குழந்தைத் தொட்டிலில் விட்டுச் சென்றால் அந்த உயிர் காப்பாற்றப்படும் இல்லையா. அப்படி விட்டுச் செல்லப் படும்  குழந்தைகள் தான், பின்னர் தொட்டில் குழந்தை மையங்களில் சேர்க்கப் பட்டு முறையாக வளர்க்கப் படுகின்றன. முறையாக யாரிடமாவது சேர்க்கப் படுகின்றன.

குறைந்து வரும் பெண் இனம்

இந்த  2011-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தினார்கள். அந்தக் கணக்கெடுப்பில் பெண் குழந்தைகளின் விகிதம் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மிக மிக மோசமாகக் குறைந்து வருவதைக் கண்டுபிடித்தார்கள்


அதனால் அந்த மாவட்டங்களில் தொட்டில் குழந்தைத் திட்டம் உடனடியாக விரிவாக்கம் செய்யப்பட  வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பெண் சிசுக்கொலை

தமிழகத்தில் பெண் சிசுக்கொலை தொடக்கக் காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் தான் கொஞ்சம் பரவலாக இருந்தது. 1980-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தின் தென் பகுதியான மதுரை மாவட்டம்,  உசிலம்பட்டி,  தேனி போன்ற பகுதிகளுக்கும் தொற்றிக் கொண்டது.



அடுத்து 1990-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டத்திலும் இந்தக் கொடூரப் பழக்கம் வேர் விட்டுப் பரவியது. மனிதம் இல்லாத இந்தச் செயலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் மட்டுமே ஈடுபட்டு வருவது சமூக ஆய்வின் மூலமாகக் கண்டு அறியப்பட்டது. எந்தச் சமூகத்தவர் என்று கேட்க வேண்டாம்.

அதன் பின்னர், பெண்களுக்காக, பெண்களின் விழிப்புணர்வுகளுக்காகப் பல சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன. பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்கள் கொடுக்கப் பட்டன. இருந்தாலும், சிசுக்கொலை, கருக்கொலைகள் குறையவே இல்லை. தொடர்ந்தன.



தமிழகத்தில் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் வகையில் 1991-ம் ஆண்டில் தொட்டில் குழந்தை திட்டம் பல மாவட்டங்களில் துரிதப்படுத்தப் பட்டது. தர்மபுரியில் இந்தத் திட்டத்துக்கு பெரும் அளவில் ஆதரவு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அங்கே இந்தத் திட்டத்திற்கு முக்கியத்துவம் குறைந்த நிலையில் 2002-ம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி மீண்டும் இந்தத் திட்டம் இன்னும் கூடுதலாகத் தீவிரப் படுத்தப் பட்டது.

இரு நாட்களுக்கு ஒரு குழந்தை

தொட்டில் குழந்தை திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளைச் செயல் படுத்தி வருகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் இப்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தொட்டில் குழந்தை திட்டம் என்பது சிசுக் கொலைக்கு எதிரான திட்டம் என்பது எல்லாருக்கும் தெரியும். இருப்பினும்  தர்மபுரி மாவட்டத்தில் 2002-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு ஏப்ரல் வரை 89 குழந்தைகள் மட்டுமே தொட்டில் மையங்களில் ஒப்படைக்கப்பட்டன.


இப்போது நிலைமை மாறி வருகிறது. இரு நாட்களுக்கு ஒரு குழந்தை எனும் விகிதத்தில் தொட்டில் குழந்தைகளின் தொகை அதிகரித்து வருகிறது. மறுபடியும் சொல்கிறேன். இரண்டு நாட்களுக்கு ஒரு குழந்தை. அப்படி என்றால் என்ன வேகத்தில் கலாசாரம் ரவிக் கொண்டு இருக்கிது என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

குழந்தை என்றால் அதில் ஆண் குழந்தை பெண் குழந்தை என்கின்ற பேதம் வேண்டாம். பெண் குழந்தை வேண்டாம் என்றால், கடைசியில் கலயாணம் பண்ணும் போது ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தானே தேட வேண்டி இருக்கிறது. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே எனும் பழமொழி ஒரு தெய்வ மொழியாக மாற வேண்டும். அதுவே நம் ஆசையும் கூட!



கடைசியாக, ஒரு கள்ளிச் செடியின் பக்கத்தில், மண்ணுக்குள் இருந்து அம்மா என்ற ஓர் அழுகைச் சத்தம் கேட்கிறது. உங்களுக்கு கேட்கிறதா? இந்த மாதிரி எத்தனையோ ஆயிரம் குழந்தைகள் இன்னும் மண்ணுக்குள் அழுது கொண்டே இருக்கின்றனர். அவர்களுடன் அந்த ஆண்டவனும் அழுகின்றார்.

07 அக்டோபர் 2014

ரஷ்யா எப்படி உடைந்தது

மலேசியா தினக்குரல் 23.07.2014 நாளிதழில் வெளிவந்த கட்டுரை

இந்த உலகில் இரண்டே இரண்டு வல்லரசுகள். ஒன்று அமெரிக்கா. மற்றொன்று ரஷ்யா. இது எழுதப் படாத சாசனம். இப்போது சீனாவும் எட்டி எட்டிப் பார்க்கிறது. போட்டிக்குத் தயாராய் நிற்கிறது. இந்தியாவும் களத்தில் இறங்கலாம். இறங்க முடியும். வாய்ப்பு இருக்கிறது. முதலில் இத்தாலிக்கு ‘சப்போர்ட்’ செய்வதை நிறுத்த வேண்டும்.

கார்ப்பசேவ்

சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்து இருக்கும் பத்து இலட்சம் கோடி பணத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும். அப்புறம் வேண்டும் என்றால், வல்லரசு போட்டியில் இந்தியா கலந்து கொள்ளலாம். அந்தத் தகுதி வரலாறு தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தியாவிற்கு இருக்கிறது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 

உலக வல்லரசு என்று சொல்லிக் கொள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பிரிட்டன் ஆகிய இந்த ஐந்து நாடுகளுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருக்கிறது.  மற்ற எந்த நாட்டுக்கும் அந்தத் தகுதி இல்லை. பிரான்சு, ஜெர்மனி, ஜப்பான், போன்ற நாடுகளைப் போட்டியில் சேர்க்க வேண்டாம்.  அப்படியே கொடுத்தாலும் அது அழகாகவும் இருக்காது. காட்டுவாசிக்கு மேக்கப் போட்டது மாதிரி ஆகிவிடும்.

யார் அந்த உலகப் போலீஸ்காரர்

ஏறக்குறைய ஒரு நூறு ஆண்டு காலமாக, உலக வல்லரசுகள் என்கிற அந்தப் பாரம்பரியம் நிலைகாக்கப் பட்டு வருகிறது. ரஷ்யா அமெரிக்கா என்கிற இந்த இரண்டு பேரில் யார் உலகப் போலீஸ்காரராகச் சேவை செய்ய முடியும் என்பதற்கு பலப் பல ஒலிம்பிக் போட்டிகளும் நடந்து இருக்கின்றன. ஒவ்வொரு காலக் கட்டத்திலும், இரண்டு நாடுகளுமே தங்கப் பதக்கங்களை வாங்கி இருக்கின்றன.

ரஷ்ய போர் வீரர்கள்

சில சமயங்களில் கீழே விழுந்து, மீசையில் ஒட்டிய மண்ணைத் தடவி விட்டு, சாக்லேட் சாப்பிடுகிறேன் என்று சொல்லிய வரலாறும் வல்லினங்கள் பேசுகின்றன.

ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவை ஜார் மன்னர்கள் ஆட்சி செய்தார்கள். ஆடம்பரமான வாழ்க்கை. அநாவசியமான செலவுகள். அன்றாடம் அரண்மனைக் களியாட்டங்கள். அடிதட்டு மக்களை அடித்துப் போடும்  அதிகாரங்கள். அடுக்கடுக்காய் அத்துமீறல்கள். இந்த அதிகாரத் துஷ்பிரயோகங்களுக்குச் சமாதி கட்டினார் விலாடிமிர் லெனின். அவர் கொண்டு வந்த மக்கள் புரட்சியை அக்டோபர் புரட்சி என்றும் அழைக்கிறார்கள். 

அவருடைய சீர்த்திருத்தக் கொள்கைகளுக்கு வழி வகுத்துக் கொடுத்தது கார்ல் மார்க்ஸின் தத்ததுவச் சித்தாந்தங்கள். சோசலிச ரஷ்யாவை லெனின் உருவாக்கினார். கம்யூனிஸ்டுக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு யு.எஸ்.எஸ்.ஆர் என்கிற ஒரு சோசலிஸ்டு நாடு தோற்றுவிக்கப் பட்டது.

இணங்க மறுத்த மகாதேவிகள்

இரண்டாம் உலகப் போர் வந்தது. உலக நாடுகளின் குடுமிகளை ஓர் ஆட்டு ஆட்டிவிட்டுப் போனது. நாகசாக்கி ஹிரோசிமாவில் குண்டுகள் போடவில்லை என்றால், போர் தொடர்ந்து போய் இருக்கும். உலக வரலாறும் திருத்தப்பட வேண்டி வந்து இருக்கும். அந்த வாக்கில், சோவியத் ரஷ்யா பக்கத்தில் இருந்த சின்னச் சின்னக் குட்டி நாடுகளை, தன் நாட்டுக்குள் சேர்த்துக் கொண்டது.

யுக்ரெயின் போர்க் கப்பல்கள்

அப்படிச் சொல்ல முடியாது. வன்முறையைப் பயன்படுத்தி வளைத்துப் போட்டது என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். சின்னச் சின்ன நாடுகளுக்கு அல்வா துண்டுகளை ஆட்டிக் காட்டி, ஆசைகளை உண்டாக்கி விட்டது. இணங்க மறுத்த மகாதேவிகளும் இருந்தன. அந்த மாதிரியான பெரிய நாடுகளை ‘இணங்கிவிடு மகாதேவி’ என்று சொல்லி ரோத்தான்களைப் பயன்படுத்தியது. அதில் ரொம்ப ரோத்தான் பூசை வாங்கிய நாடு யுக்ரெயின். 

அப்புறம் சோவியத் ரஷ்யா உலகின் மிகப் பெரிய நாடாகப் பேர் போட்டது. அப்போது அதன் நிலப்பரப்பு, ஐரோப்பாவில் இருந்து ஆசியா வரை இரண்டு கண்டங்களிலும் பரந்து நிறைந்து விரிந்து கிடந்தது. அதன் பரப்பளவு 6,592,800 சதுர மைல்கள். 17,075,400 சதுர கிலோமீட்டர்கள். அதாவது, மலேசியாவைப் போல 51 மடங்கு பெரியது. சபா சரவாக்கைச் சேர்த்து தான்.

யுக்ரெயின் விடுதலைப் போராட்டம்

1917-க்குப் பின்னர், சோவியத் யூனியனில் ஒட்டு மொத்தமாகக் கம்யூனிஸ்டு ஆட்சி. நாட்டுக்குள் என்ன தான் நடக்கிறது என்கிற விஷயம் வெளியே யாருக்கும் தெரியாது. மறைப்புச் சுவரை எழுப்பி ஒரு நாட்டையே மறைத்து வைத்து இருந்தார்கள். அதனால் அதை இரும்புத் திரை நாடு என்றும் வர்ணித்தார்கள். 

ரஷ்யச் சர்வாதிகாரி ஸ்டாலின்

ரஷ்யக் கூட்டமைப்பில் ரஷ்யா, பைலோருஷ்யா, அர்மீனியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான், தஜிக்ஸ்தான், கஜக்ஸ்தான், கிர்க்கிஸ்தான், ஜார்ஜியா, யுக்ரெயின், மால்டோவியா, எஸ்டோனியா, லாட்வியா, லிட்வேனியா என்று 15 மாநிலங்கள் இருந்தன.

குருஷேவ்

இதில் லிட்வேனியா, லாட்வியா, எஸ்டோனியா ஆகிய மூன்று மாநிலங்களும் பால்டிக் நாடுகள். இவை பால்டிக் கடலுக்குப் பக்கத்தில் இருந்ததால் அவற்றை பால்டிக் நாடுகள் என்று அழைத்தார்கள். இவை ரஷ்யச் சர்வாதிகாரி ஸ்டாலின் காலத்தில் ரஷ்யாவுடன் இணைந்தவை.

லெனினுக்குப் பிறகு, 1924-இல் ஸ்டாலின் வந்தார். இந்த மனிதர் ரஷ்யாவை ஒரு வழி பண்ணிவிட்டுத் தான் போனார். சும்மா சொல்லக் கூடாது. கிராமிய நாடாக இருந்த ரஷ்யாவைக் கைத்தொழில்மய நாடாக மாற்றிய பெருமை இவரைத் தான் சாரும். இருந்தாலும் இவருடைய அடக்கு முறையினால் பலப் பல இலட்சம் பேர் மறைந்து போனார்கள்.

லெனின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

சைபீரிய வதைமுகாம்களில் பல இலட்சம் அரசியல் கைதிகள் மண்ணோடு மண்ணாகிப் போனார்கள். இன்னும் பல்லாயிரம் பேர் நாடு கடத்தப் பட்டனர். ஸ்டாலினுக்குப் பிறகு குருஷேவ் வந்தார். இவரும் பல மாற்றங்களைச் செய்தார். இவர் ஒரு மிதவாதி. தொழிலாளர் வதை முகாம்களை ஒழித்துக் கட்டினார். சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு பல நூறு  புனர்வாழ்வு மையங்களை அமைத்துக் கொடுத்தார். 

கியூபா ஏவுகணை நெருக்கடி

இவருடைய காலத்தில்தான் ரஷ்யா, முதன் முதலாக மனிதனை (யூரி ககாரின்) விண்வெளிக்கு அனுப்பி வைத்துச் சாதனை செய்தது. இவருக்கும் அமெரிக்க அதிபர் கென்னடிக்கும் கியூபா ஏவுகணைகள் தொடர்பாக ஒரு முறுகல் ஏற்பட்டது. அப்போது உள்ளவர்களுக்கு ஞாபகம் வரலாம். மூன்றாம் உலகப் போர் வரக் கூடிய கட்டம். அது 1962-ஆம் ஆண்டில் நடந்தது. கியூபா ஏவுகணை நெருக்கடி என்றும் சொல்வார்கள்.  ஒரு வழியாக நீறு பூத்துப் போனது.

புன்னகை மன்னன் புடின்

அடுத்து, குஷேவிற்குப் பிறகு பிரஷ்னீவ் வந்தார். இவருடைய காலத்தில் தான் ரஷ்யப் படைகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்தன. பெருமையாகச் சொல்வது என்றால், ஆப்கானிஸ்தானின் இயற்கை வளங்கள் சுரண்டப் பட்டன என்று தாராளமாகச் சொல்லலாம். இவர் ரஷ்யாவில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்து விடவில்லை. ஒரு வகையில் அந்த நாடு உலகத் தரத்தில் கொஞ்சம் சரிந்து போனது தான் மிச்சம். 

அடுத்து, 1984-ஆம் ஆண்டு ரஷ்ய அதிபராக கார்ப்பசேவ் பதவி ஏற்றார். இவர் பல சீர்திருத்த நடவடிக்கைகளைக் கொண்டு வந்தார். இவருடைய ஆட்சியில் சில பல கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டன. கம்யூனிஸ்டு ஆட்சியின் அதிகாரப் பிடியைத் தளர்த்தினார். உலக அமைதி முயற்சியில் இறங்கினார். அதனால் ரஷ்ய மக்கள் ரொம்பவும் மகிழ்ச்சி அடைந்தனர். 

ரஷ்ய அதிபர்களிலேயே மனதில் நிற்கக் கூடிய மனிதர்

அணு ஆயுதங்களை ஒழிக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதனால் அவருக்குச் சமாதானத்துக்கான நோபல் பரிசு கொடுக்கப் பட்டது. உலக நாடுகளில் இவருடைய புகழ் ஓங்கி நின்றது. நல்லபடியாக ஆறு ஆண்டுகளுக்கு ரஷ்யா சுமுகமாக நடை போட்டது. என்னைக் கேட்டால், ரஷ்ய அதிபர்களிலேயே என் மனதில் நிற்கக் கூடிய ஒரே மனிதர். இவர்தான், ஒரு கம்னியூஸ்ட் நாட்டை ஜனநாயகப் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்த நல்ல ஒரு மனிதர்.

ஆனால், என்ன செய்வது. இவருக்கும் ஒரு கஷ்ட காலம். எதிர்பாராத சூழ்நிலை. ரஷ்யாவில் உணவு தானியத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால், உள்நாட்டில் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கின. அமெரிக்காவுடன் குசலம் பேசிக் கொண்டு, இங்கே ரஷ்யாவைக் கவனிக்கவில்லை என்கிற ஆத்திரம் ஆதங்கம் வேறு. 1991-ஆம் ஆண்டு மத்தியில், தானியத் தட்டுப்பாடு ரஷ்யாவின் கழுத்தை நெரித்தது. 

கார்ப்பசேவ் அதிபராகும் வரையில் மற்ற மற்ற அதிபர்களிடம் அதிகாரங்கள் குவிந்து கிடந்தன. தவிர, உலகின் மிகப் பெரிய வல்லரசாகவும் பேர் போட்டு வந்தது. அதனால், முன்பு 1910-களில் வலுக்கட்டாயமாக இணைக்கப் பட்ட குட்டி நாடுகளும், பிரிந்து போக வழி இல்லாமல் பேசாமல் இருந்தன.

முதன் முதல் சுதந்திரக் குரல்கள்

கார்ப்பசேவ் அதிபரானதும் அவருடைய அமைதிக் கொள்கை, இந்தக் குட்டி நாடுகளுக்குக் கொஞ்சம் இளக்காரமாகிப் போனது. அதே சமயத்தில் உணவுத் தட்டுப்பாடு என்பது அவர்களுக்கு ஒரு நொண்டிச் சாக்கு. இந்த இரண்டுமே பல மாநிலங்களுக்கு பிரிந்து போகும் உற்சாகத்தையும், மன தைரியத்தையும் கொடுத்தன. 

பால்டிக் நாடுகள் என்று சொல்லப்படும் லிட்வேனியா, லாட்வியா, எஸ்டோனியா ஆகிய இந்த மூன்று மாநிலங்கள் தான், முதன் முதலில் சுதந்திரக் குரல்களை உயர்த்தின. ஒரு நல்ல நாள் பார்த்து, ஜார்ஜியாவும் அவற்றுடன் சேர்ந்து கொண்டது.

சுதந்திரம் கோரி போர்க் கொடி தூக்கிய அந்த நான்கு மாநிலங்களும், தங்களுக்குத் தாங்களாகவே சுதந்திரப் பிரகடனங்களைச் செய்து கொண்டன. அவற்றுக்குத் தூதரக அங்கீகாரம் வழங்க ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து, போலந்து, நார்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் முன்னுக்கு வந்தன. அடுத்தக் கட்டமாக, உலகப் போலீஸ்காரர் அமெரிக்கா களம் இறங்கினார்.

அமெரிக்காவின் பெரிய அண்ணன் ஜார்ஜ் புஷ்

பால்டிக் நாடுகளுக்கு உடனடியாகச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று ரஷ்யாவை அமெரிக்கா வலியுறுத்தியது. இது கார்ப்பசேவுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். அந்தச் சமயத்தில் அமெரிக்காவின் பெரிய அண்ணன் ஜார்ஜ் புஷ், கார்ப்பசேவுக்கு மருந்து மாத்திரைகளை அனுப்பி வைத்து இருக்கலாம். சொல்ல முடியாது. 

ஏன் தெரியமா. கார்ப்பசேவ் என்கிற பிள்ளையைக் கிள்ளிவிட்டது ஜார்ஜ் புஷ் தானே. ஆக, பிரிந்து போன மாநிலங்களின் அதிகாரங்களைப் பரவலாக்கி, அவற்றைச் சாந்தப் படுத்த முயற்சிகள் செய்தார். ஒன்றும் எடுபடவில்லை.

அப்போது கம்யூனிஸ்டு கொள்கையில் தீவிரம் கொண்ட தலைவர்கள் சிலர் ரஷ்யாவின் ஆட்சி பீடத்தில் இருந்தனர். அவர்களுக்கு கார்ப்பசேவின் அதிரடி மாற்றங்கள் பிடிக்கவில்லை. கார்ப்பசேவினால் பதவியில் அமர்த்தப் பட்டவர்களே, அவருக்கு எதிராக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்தனர். திடீரென்று கார்ப்பசேவ் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். கொள்கைப் பிரிவினைவாதிகள் நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற முயற்சிகள் செய்தனர்.

பொது மக்களுக்கு எதிராக, ராணுவம் களம் இறக்கப் பட்டது. சுட்டுத் தள்ளுமாறு கட்டளை. ஆனால், இராணுவத்தினர் பொது மக்களைச் சுட மறுத்தனர். எங்கள் மக்களை நாங்களே சுட்டுக் கொல்வதா. முடியாது என்று மறுத்து விட்டனர். அப்புறம் என்ன. கம்யூனிஸ்டு தீவிரவாதிகளின் முயற்சி கலகலத்துப் போனது. கார்ப்பசேவ் விடுவிக்கப் பட்டார்.

சோவியத் ரஷ்யா உடைந்து போனது

புரட்சியைத் தூண்டிவிட்ட எட்டு முன்னணித் தலைவர்களின் பொறுப்புகள் பறிக்கப் பட்டன. அவர்களில் அறுவர் கைது செய்யப் பட்டனர். இருவர் தற்கொலை செய்து கொண்டனர். புதிய பிரதமரையும் அமைச்சர்களையும் கார்ப்பசேவ் நியமித்தார். இருந்தாலும், போகப் போக கார்ப்பசேவிற்கு கம்யூனிஸ்டு உயர்மட்டக் குழுவின் ஒத்துழைப்புகள் கிடைக்கவில்லை. அதனால் கார்ப்பசேவின் தலைமைத்துவம் பலகீனம் அடைந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்மீனியா, மால்டோவியா, பைலோருஷியா, உஸ்பெக்கிஸ்தான், யுக்ரெயின் ஆகிய ஐந்து மாநிலங்களும் சுதந்திரப் பிரகடனம் செய்தன. இங்கே யுக்ரெயின் இருப்பதைக் கவனியுங்கள். சோவியத் யூனியன் மறைந்து விட்டது என்றும் பிரகடனப் படுத்தினார்கள். இப்படித்தான் சோவியத் ரஷ்யா உடைந்து போனது.

பிரிந்து போன மாநிலங்கள் தங்களைக் காமன்வெல்த் கூட்டமைப்பு என்று அழைத்துக் கொண்டன. அதற்கு போரிஸ் யெல்ட்சின் தலைமை தாங்கினார். கார்ப்பசேவ் அதிபர் பதவியில் இருந்து விலகினார். இப்படித்தான் கார்ப்பசேவ் என்கிற ஒரு நல்ல மனிதர் பதவியில் இருந்து தூக்கி வீசப் பட்டார்.

சோவியத் யூனியனுக்குச் சொந்தமான அணு ஆயுதங்களும், அணு உலைகளும் பல்வேறு மாநிலங்களில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றில் சில ஆயுதக் கிடங்குகள் யுக்ரெயினிலும் இருக்கின்றன. 
கார்ப்பசேவ் ரஷ்யாவின் காமராசர்

மிக்காயில் கார்ப்பசேவ், ரஷ்யாவின் தொலைதூர பிரிவோல்னயா என்கிற கிராமத்தில், 1931-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். மாணவ பருவத்திலேயே பொது வாழ்வில் ஈடுபட்ட அவர், 21-ஆம் வயதில் கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினரானார். படிப்படியாக உயர்ந்து ரஷ்யாவின் அதிபரானார். அவருக்கு இப்போது வயது 83.

மிக்காயில் கார்ப்பசேவுக்கு ஒரே மனைவி. 46 வயதில் 1999-ஆம் ஆண்டு புற்று நோயினால் இறந்து போனார். கார்ப்பசேவ் மறுமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு ஒரே ஒரு மகள். ஈரினா மிக்காயிலோவ்னா.

இப்போது கார்ப்பசேவிற்கு மாதா மாதம் பத்தாயிரம் ரிங்கிட் ஓய்வூதியம் வழங்கி வருகிறார்கள். கை சுத்தமான மனிதர். ரஷ்யாவின் காமராசர் என்றுகூட புகழாரம் செய்வார்கள். அவருக்கு ரஷ்ய அரசாங்கம் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொடுத்து இருக்கிறது. 

கோடை காலத்தில் ஓய்வு எடுப்பதற்கு சைபீரியக் குளிர்ப் பிரதேசத்தில் இன்னொரு வீட்டையும் கொடுத்து இருக்கிறது. அவர் கார்ப்பசேவ் அறநிறுவனம் என்கிற ஒரு அமைப்பைத் தோற்றுவித்து, அதில் அவரும் அவருடைய மகளும் அறப் பணிகளைச் செய்து வருகின்றனர்.