20 அக்டோபர் 2015

பாலம் கல்யாணசுந்தரம்

மலேசியா புதிய பார்வை நாளிதழில் 20.10.2015இல் பிரசுரிக்கப்பட்டது.

பாலம் கல்யாணசுந்தரம், மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

உன்னதமான இலட்சியங்களில் உண்மையான இலக்கணங்கள். சாந்தமான கொள்கையில் சத்தியமான சாதனைகள். கிஞ்சிதம் குறையாத சீர்பட்ட செம்மைகள். அங்கே தியாகத்தின் எளிமைக் கூற்றுகள் தெரிகின்றன.  

இப்படியும் ஒரு மனிதரா என்கிற அலைகடல் வியப்பு. ஒரு திகைப்பு. அந்த மனிதருக்குள் ஓர் அருவமான ரிஷிகேசி தென்படுகிறது.  

அவர்தான் பெரியவர் பாலம் கல்யாணசுந்தரம். மனுக்குலத்திற்கு கிடைத்த நல்ல ஒரு ஜீவகாருண்யம். தமிழகத்தில் பிறந்த ஒரு தார்மீகச் சிந்தனை. வயதாகியும் இளமை மாறாத சாருகேசியில் இவர் ஒரு ராக மாளிகை. அப்படித் தான் நமக்கும் படுகிறது.

காமராசர், கக்கன், அண்ணாதுரை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, எம்.ஜி.ஆர், இரட்டைமலை சீனிவாசன், சீனிவாச ஐயங்கார், தீரன் சின்னமலை, சந்திரசேகர ஆசாத்.

இந்தப் பெயர்களை உங்களுக்குத் தெரியுமா. தெரிந்தால் நல்லது. தெரியாவிட்டால் பரவாயில்லை. இவர்கள் எல்லாம் இந்திய மண்ணின் மைந்தர்கள். தமிழகத்திற்கு மிகவும் வேண்டப் பட்டவர்கள். 

மறைந்தும் மறையாமல் இன்றும் நம்மோடு வாழ்கின்றார்கள். அதே அந்த மண்ணில் பிறந்தவர்தான் பாலம் கல்யாணசுந்தரம். இவர் சத்தியத்தில் பிறந்து  சத்தியத்திலேயே வாழும் ஒரு சத்தியமூர்த்தி.

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த குடிமகன்

ஐயா ல்யாணசுந்தரம்ர்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபை 20-ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த குடிமகன் (Man of Millinium) விருதை வழங்கிச் சிறப்பு செய்தது. இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் அனைத்துலகச் சுயசரிதைக் கழகம், உலகின் உயர்ந்த மனிதர்களில் ஒருவர் என்று புகழாரம் செய்தது. அமெரிக்க அரசாங்கம் புத்தாயிரத்தின் தவப் புதல்வன் என்று மகுடம் சூட்டியது.

இந்திய அரசு இந்தியாவின் சிறந்த நூலகர்என்று பாராட்டிச் சிறப்பித்தது. உலகின் ஆகச் சிறந்த முதல் பத்து நூலகர்களில் ஒருவர் எனத் தேர்வு செய்யப்பட்டு இன்றும் போற்றப் படுகிறார். 

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கிய முதல் மாணவர் என்கிற பெருமையும் இவரைச் சார்கிறது. உலகப் பணக்காரர் பில் கேட்ஸ், சில மில்லியன் டாலர்களை அன்பளிப்பாகக் கொடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவருடைய வாழ்க்கை வரலாற்றை, மெலிண்டா கேட்ஸ் அறவாரியம் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கிறது. 22 மொழிகளில் வெளியீடு செய்து இருக்கிறார்கள். வேறு என்னங்க வேண்டும். இவர் ஒரு தமிழர் என்பது நமக்கு எல்லாம் எத்தனைப் பெருமை. அவரைப் பற்றி மேலும் தகவல்கள்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இந்தியா வந்தபோது அவர் இருவரைச் சந்திக்க விரும்பினார். ஒருவர் அதிபர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இன்னொருவர் பாலம் கல்யாண சுந்தரம். 

ல்யாண சுந்தரத்தின் பெயருக்குப் பின்னால் வரும் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS எனும் எழுத்துகளைப் பாருங்கள். மொத்தம் 36 எழுத்துகள்.

நார்வே நாட்டில் திரைப்பட விழா

ஏழைகளின் துயரங்களை நேரிடையாக தெரிந்து கொள்ள 7 ஆண்டுகள் நடைபாதை வாசியாகவே வாழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லூரிகளுக்குத் தானமாக எழுதி வைத்து விட்டார்.

வாழ்நாள் முழுவதும் ஒரு துண்டு நிலம், ஓர் ஓலைக் குடிசை, ஒரு சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்க நினைத்தவர். அதனால் தன்னுடைய திருமண வாழ்க்கையையும் தியாகம் செய்தார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், உலகில் மிகவும் போற்றத்தக்க அறிவுஜீவி (A Most Notable intellectual’ in the World) என்ற பட்டத்தை வழங்கியது. அத்துடன் நூலகத் துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.

இந்தியாவின் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து. இவர் சென்னை மையப் பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை பரிசாகக் கொடுத்தார். 

ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என கல்யாணசுந்தரம் அந்தப் பரிசை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பாருங்கள். அந்த மனிதர் எங்கே நிற்கிறார் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

இவரைப் பற்றி ஓர் ஆவணப் படம் தயாரித்தார்கள். சுபாஷ் கலியன் என்பவர் இயக்கியது. 2012-ஆம் ஆண்டு நார்வே நாட்டில் நடைபெற்ற திரைப்பட விழாவில் படத்தைப் போட்டுக் காட்டினார்கள். 

அதை ஒரு சிறப்புப் படமாகத் தேர்வு செய்தார்கள். கல்யாணசுந்தரம் நடத்தும் பாலம் எனும் தொண்டூழிய வாரியத்திற்கு கணிசமான தொகையையும் கொடுத்து அனுப்பினார்கள்.

சூப்பர் ஸ்டார் வீட்டில்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் மீது அளவு கடந்த மதிப்பு வைத்து இருந்தார். தன் தந்தையைப் போல நினைத்தார். ஒண்டுக் குடிசையிலும் பிளாட்பாரத்திலும் அவர் தங்குவது ரஜினிக்குப் பிடிக்கவில்லை. அதனால், இவரைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்தார். 

அங்கேயே தங்க வைத்துக் கொண்டார். ஆனால், கல்யாணசுந்தரம் கொஞ்ச நாட்கள்தான் தங்கினார். அப்புறம் ரஜினியின் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். ஏன்? கல்யாணசுந்தரமே சொல்கிறார். கேளுங்கள்.

ரஜினிகாந்துக்கு என் மேல் மிகுந்த பிரியம்தான். எனக்காக அவருடைய வீட்டில் இரண்டு பெரிய அறைகளை, எல்லா வசதிகளுடன் ஒதுக்கித் தந்தார். இருந்தாலும், எனக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. 

மாடிப்படிகளுக்குக் கீழேதான் என் துணிமணிகளை வைத்துக் கொள்வேன். தரையில் ஒரு துணியை விரித்துப் போட்டு படுத்துக் கொள்வேன். அது என்னவோ என் மனசிற்குச் சரியாகப் படவில்லை. ஏழைகளுக்காக உழைக்கிறவன் என்று சொல்லிக் கொண்டு சூப்பர் ஸ்டார் வீட்டில் தங்கி இருந்தால், யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்.

அங்கே நான் ரொம்ப எளிமையாக வாழ்ந்தேன். கீழே தரையில்தான் படுத்துக் கொள்வேன்என்று சொன்னால் யார் தான் நம்புவார்கள். சொல்லுங்கள்.  

பனை மரத்தின் அடியில் நின்று கொண்டு பாலைக் குடித்தாலும் அதைக் கள் என்றுதானே உலகம் சொல்லும். முள் மேல் இருப்பது போல் நான்கு மாதங்கள் அங்கு இருந்தேன். பின்பு வெளியேறி விட்டேன். அதில் ரஜினிக்கு ரொம்பவும் வருத்தம்என்றார்.

நிச்சயமாக ரஜினி வருத்தப்பட்டு இருப்பார். தெரிந்த விஷயம். பெரியவரை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் தானே, தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார். 

அங்கே போய் துண்டை உதறித் தரையில் போட்டு படுத்துக் கொண்டால் எப்படி. ரஜினிக்கும் ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்து இருக்கும்.

உலகப் பணக்காரர் பில் கேட்ஸ்

சரி. யார் இந்த பாலம் கல்யாணசுந்தரம். ரொம்ப பேருக்கு இவரைத் தெரியாதுங்க. அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், இந்திய அதிபர் அப்துல் கலாம், ஆளுநர் பாத்திமா பீவி போன்றவர்கள் இவரைத் தேடி வந்த பிறகுதான், சொந்த நாட்டு மக்களுக்கே அவரைப் பற்றி தெரிய வந்தது. 

அப்புறம் என்ன. வழக்கம் போல ஆகா ஓகோ புகழ்மாலைகள். கட் அவுட்டுகள். விருதுகள் விருந்துகள். பற்றாக்குறைக்கு பார்க்கிற இடம் எல்லாம் பதாகைகள்.

ஆனால், நாற்பது ஆண்டுகள் வரை, கல்யாணசுந்தரம் என்பவர் யார் என்று தமிழர்களில் பலருக்குத் தெரியாமல் போனது தான் உலகத்தின் எட்டாவது அதிசயம். என்ன செய்வது. கண்களில் பட்டது எல்லாம் சிரிக்கும் சினிமா, சிணுங்கும் சினிகா, கொத்தவால் பில்டப்புகள். பெயர்கள் வேண்டாமே. பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள். அதைப் பற்றி எழுதினால் வலிக்கும்.

கல்யாணசுந்தரம் என்பவர் இந்தியாவிலேயே மிகச் சிறந்த சமூகச் சேவகர்களில் ஒருவராகப் போற்றப் படுகிறார். தனக்கென வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்

ஒரு நூலகராக அரசாங்கத்தில் பணியாற்றியவர். தனக்குக் கிடைத்த பத்து லட்சம் ரூபாய் ஓய்வூதியத் தொகையை, அப்படியே தூக்கிக் குழந்தைகள் நல நிதிக்காகக் கொடுத்தவர்.

அதன் பின்னர், இவருக்கு லட்சக் கணக்கில் பணம் கிடைத்து இருக்கிறது. ஆனால், தனக்கு என்று ஒரு காசைக்கூட தொடுவது இல்லை. சமூக நலக் காரியங்களுக்காக வாரிக் கொடுத்து விடுவார்

பின்னர் ஒரு ஓட்டலில் அற்றைக் கூலியாக வேலை செய்தார். அதில் கிடைத்த பணத்தில் தன் அன்றாடச் செலவுக்கு கொஞ்சம் எடுத்துக் கொள்வார். மிச்சத்தையும் தர்ம காரியங்களுக்குக் கொடுத்து வந்தார்.

பெரியவர் கல்யாணசுந்தரம் திருநெல்வேலி, கருவேலங்குளம் என்ற ஊரில் 1953-ஆம் ஆண்டில் பிறந்தவர். ஏர்வாடியில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் கருவேலங்குளம் இருக்கிறது. தந்தையாரின் பெயர் பால்வண்ணன். அந்த ஊர் மக்களின் நாட்டாமை. தாயாரின் பெயர் தாயம்மாள்.

சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது

செயின்ட் சேவியர் கல்லூரியில் தமிழில் படித்து பி.ஏ இளங்கலைப் பட்டம் பெற்றார். ஒரே ஒரு மாணவராக இருந்ததால் அவரை வேறு பாடம் எடுக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள்.

இருந்தாலும் தமிழ் மொழியின் மீது இருந்த அலாதியான பிடிப்பினால்,  பிடிவாதமாக இருந்தார். அதில் வெற்றியும் பெற்றார். 1963-ஆம் ஆண்டு அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருக்கும் பொழுது, இந்திய சீனப் போர் நடக்கிற காலக்கட்டம். 

அப்போது, தேசியப் பாதுகாப்பு நிதிக்காக, தன்னுடைய எட்டரை பவுன் தங்கச் சங்கிலியை அப்படியே கழற்றி, கர்மசீலர் காமராசரிடம் கொடுத்தவர்தான் இந்தப் பாலம் கல்யாணசுந்தரம்.

பணம் என்பது எல்லோருக்கும் மூன்று வழிகளில் கிடைக்கும். கஷ்டப்பட்டு சொந்தமாக உழைத்துச் சம்பாதிப்பது ஒரு வழி. அப்பா அம்மா பாட்டன் பூட்டன் மூலமாகக் கிடைப்பது இன்னொரு வழி. 

வாச்சான் போச்சானாக மற்றவரிடம் இருந்து கிடைப்பது அடுத்த வழி. ஆக, பெரியவர் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு இந்த மூன்று வழிகளிலும் பணம் கிடைத்தது. எப்படி என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

ஒரு கல்லூரியில் அவருக்கு இருபது ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம். முப்பத்தைந்து ஆண்டுகள் பணி. சம்பளமாகக் கிடைத்தது எழுபது லட்சம். சம்பளத்தில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு, மிச்சத்தை ஏழைகளுக்கே கொடுத்து ஒரு வரலாற்றையும் படைத்து இருக்கிறார். ஓர் ஆண்டு இல்லை. இரண்டு ஆண்டுகள் இல்லை. முப்பத்தைந்து ஆண்டுகள். அப்புறம் வேலையில் இருந்து ஓய்வு பெற்றதும், ஓர் உணவகத்தில் சர்வராக வேலை.

எந்த நாட்டைச் சேர்ந்த அரசு ஊழியராக இருந்தாலும் சரி; இல்லை அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருந்தாலும் சரி; கல்யாணசுந்தரம் செய்தது மாதிரி யாரும் செய்ததாக இல்லை. ஆக அவருடைய நல்ல தர்ம தியாகச் செயல்களுக்கு விருதுகளும் விழாக்களும் வீடு தேடி வந்தன.

வகுப்பு வர்ணங்களைத் தாண்டிய தியாக மனப்பான்மை

அந்த வகையில், ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர் என்கிஓர் உயரிய விருதை அமெரிக்காவில் வழங்கினார்கள். விருதுடன் 6 புள்ளி 5 மில்லியன் டாலர்களையும் பரிசாகக் கொடுத்தார்கள். நம்ப மலேசிய காசிற்கு 240 இலட்சம் ரிங்கிட். பெரிய பணம் தானே. கல்யாணசுந்தரம் என்ன செய்தார் தெரியுமா. அதில் இருந்து ஒரு காசையும் எடுத்துக் கொள்ளாமல் அப்படியே அந்தப் பணம் முழுவதையும் ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டார்.

என்ன பைத்தியக்கார மனிதன் என்று ஒரு சிலர் ஏசினார்களாம். என்ன செய்வது. எனக்குகூட ஒரு மாதிரியாகத் தான் இருக்கிறது. கிடைத்த காசை எல்லாம் தானம் தானம் என்று கொடுத்து விட்டு, கடைசியில் ஓட்டலில் மங்கு பாத்திரம் கழுவுகிற வேலை செய்தால் யாருக்குத்தான் மனசு சங்கடப் படாது. சொல்லுங்கள்.

இருந்தாலும் இவர், அடித்தள ஏழை மக்களுக்கு ஓர் அகல்விளக்காக வாழ்ந்து இருக்கின்றார். சாதி பார்ப்பது இல்லை. சமயம் பார்ப்பது இல்லை. வகுப்பு வர்ணங்களைத் தாண்டிய ஒரு தியாக மனப்பான்மையில் வாழ்ந்து இருக்கின்றார். துன்பக் கடலில் மிதக்கும் அனாதைக் குழந்தைகளுக்கு, ஒரு தந்தையாக, ஒரு தனயனாக, ஒரு தார்மீகவாதியாக வாழ்ந்து கொண்டும் வருகிறார்.

அதனால், அவருடைய நிதர்சனமான உண்மை வாழ்க்கை நிலைதான் நமக்கு பெரிதாகப் படுகிறது. கூடவே, நம்முடைய எதார்த்தமான மனச் சங்கடங்களும் அடிபட்டுப் போகின்றன. முதலில் சொன்னேனே யாருக்குத்தான் மனசு சங்கடப் படாது என்று. அதுவும் அடிபட்டுப் போகிறது.

கல்யாணசுந்தரம் போல உதாரண புருஷராகத் திகழுங்கள்

அன்புப் பாலம் எனும் ஒரு தொண்டு நிறுவனத்தைச் சென்னையில் நடத்தி வருகிறார். அமைப்பின் பெயர் பாலம். அதனால் இவரின் பெயருக்கு முன்னால் பாலம் எனும் சொல்லும் இணைந்து கொண்டது. கொஞ்ச காலத்திற்கு முன்னர், சென்னையில் அன்புப் பாலம் தொண்டு நிறுவனத்தின் வைரவிழா நடைபெற்றது. 

அதில் அதிபர் அப்துல் கலாம் கலந்து கொண்டார். கல்யாணசுந்தரம் போல உதாரண புருஷராகத் திகழுங்கள் என்று பல்கலைக்கழக மாணவர்களிடம் சொல்லும் போது அதிபரின் கண்கள் பனித்தன.

தர்ம சிந்தை. எளிமை. நேர்மை. தன்னலமற்ற சேவை. மாணிக்கமாக வாழ்ந்து மகத்தான சேவை செய்து வரும் பாலம் கல்யாணசுந்தரம் மனுக் குலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஸ்ரீவைகுண்டம் குமரகுரு கல்லூரியில் 30 ஆண்டு காலம், நூலகராக உழைத்துக் கிடைத்த 11 லட்சம் ரூபாய் ஓய்வூதியம். 

அதை அப்படியே ஏழைக் குழந்தைகளுக்குக் சீருடை, நோட்டுப் புத்தகங்கள் வாங்குவதற்காகச் செலவு செய்து இருக்கிறார். அதையும் இரண்டே மாதங்களில் முடித்து இருக்கிறார்.

அமெரிக்காவில் அவரது சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட ரூ.30 கோடியை அனைத்துலகக் குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார். எவ்வளவு என்று பாருங்கள். 30 கோடி.

அவர் போட்டு இருக்கும் ரப்பர் செருப்பு என்ன விலை இருக்கும். ஒரு பிளாட்பாரக் கடையில் ஏழரை ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார். அவர் பயன்படுத்தும் வேட்டி வெறும் இரண்டு ரூபாய், சட்டை வெறும் மூன்று ரூபாய். என்ன உண்மையாகத்தான் சொல்றீங்களா என்று கேட்க வேண்டாம். உண்மைதான்.

ரெண்டு ரூபாய்க்கும், மூணு ரூபாய்க்கும் கிடைக்கும் துணிமணிகளில் கிழிசல்கள் இருக்கும். பொத்தல்கள் இருக்கும். அதைத் தச்சுக்கிட்டா போச்சு என்று சொல்கிறவர் இந்தக் கல்யாணசுந்தரம். இப்படியும் ஒரு மனிதரா.

நமக்குத் தரப்பட்டதைக் கொண்டு நாம் நடத்துவது பிழைப்பு. நாம் தருவதைக் கொண்டு நாம் அமைத்துக் கொள்வதுதான் வாழ்வு. யார் யாரையோ மகான், மகான் என்று அழைக்கிறோம். அதில் ஏழு தலைமுறைகளுக்குச் சொத்துச் சேர்த்த பெரிய மனிதர்களும் வருகிறார்கள். ஆனால், கல்யாணசுந்தரம் போன்றவர்கள் தான், மகான் எனும் சொல்லுக்கான முழு அர்த்தத்துடன் வாழ்கின்றார்கள்.

எழுதி முடிக்கும் போது என் கண்களில் நீர் துளிர்க்கிறது. கட்டுப்படுத்த முடியவில்லை. உங்கள் பிள்ளைகளிடம் இவரைப் பற்றி சொல்லுங்கள். அதுவே அந்தப் பெரியவருக்குச் செய்யும் மரியாதை ஆகும்.

கல்யாணராமன் போன்ற நல்ல மனிதர்கள் செய்து வருவது மகா மகா புண்ணியங்கள். அந்த மாதிரியான மனிதர்களால் தான் மழை பெய்கிறது. பூமியும் செழிக்கிறது.  நாமும் வாழ்கிறோம். அவரை வாழ்த்த வயது இல்லை. வணங்குகிறேன்.

12 அக்டோபர் 2015

சிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா



               சிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா அலெக்சியேவிச்                                      (Svetlana Alexandrovna Alexievich)

பிறப்பு: 31 மே 1948 (வயது 67)

தொழில்: பத்திரிக்கையாளர், எழுத்தாளர்

நாடு: பெலருசியா

இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2015)

”நமது காலத்தின் துயரம் ஒரு துணிச்சலின் நினைவுச் சின்னமாக இருக்கும்”

எனும் படைப்பிற்காக 2015 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது. இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறும் 14-ஆவது பெண்.

மேற்கு யுக்ரேயினில் சிவெத்லானா பிறந்தவர். பெலருசில் வளர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் பல உள்ளூர் பத்திரிகைகளின் செய்தியாளராகப் பணியாற்றினார்.

பின்னர் பெலருசிய அரசப் பல்கலைக்கழகத்தில் பயின்று 1972-இல் பட்டம் பெற்றார். மின்ஸ்க் நகரில் வெளியாகும் நேமன் என்ற இலக்கியப் பத்திரிகையின் செய்தியாளராகப் பணியாற்றினார்.

இரண்டாம் உலகப் போர், ஆப்கான் சோவியத் போர், செர்னோபில் அணு உலை விபத்து, சோவியத் வீழ்ச்சி போன்ற நிகழ்வுகளில் பாதிக்கப் பட்டவர்களின் செய்திகளைப் பத்திரிகைகளில் வெளியிட்டார். அதனால் பெலருஸ் அரசாங்கத்தின் கெடுபிடிகள்.

2000-ஆம் ஆண்டில் பெலருசில் இருந்து நாடு கடத்தப் பட்டார். பாரிஸ், பெர்லின் நகரங்களில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்து வந்தார். 2011 ஆம் ஆண்டில் மீண்டும் பெலருஸ் திரும்பினார்.

இப்போது அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. உலக இலக்கியவாதிகள் இவரை மனித உரிமைப் போராளியாகப் போற்றுகின்றனர். 

11 அக்டோபர் 2015

சாக்ரடீஸ் சொன்னது

உங்களுக்கு நல்ல மனைவி வாய்த்தால்...
நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்...
கெட்ட மனைவி வாய்த்தால்...
நீங்கள் ஞானி ஆகிவிடுவீர்கள்...


சாக்ரடீஸ் என்பவர் புகழ்பெற்ற கிரேக்க ஞானி; தத்துவ வித்தகர். அவருக்கு வாய்த்த மனைவியோ சரியான அடங்காபிடாரி.


ஒருமுறை சாக்ரடீஸ்... தத்துவச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டு இருந்தார். அவரது மனைவியோ ஞான சூன்யம். மேல் மாடியில் இருந்து எட்டிப் பார்த்தார். பேச்சை நிறுத்தச் சொல்லி இடி முழக்கம் செய்தார். சாக்ரடீஸோ நிறுத்தவில்லை. ஒரு வாளி தண்ணீரை மேலே இருந்து கொட்டினார். யார் தலையில்... சாக்ரடீஸ் தலையில்! சாக்ரடீஸ் அசரவில்லை. அப்போது அவர் சொன்னார்...

“அன்பர்களே! இவ்வளவு நேரம் இடி முழங்கியது... இப்பொழுது மழை பெய்கிறது!”

சாக்ரடீஸின் மனைவியைப் பற்றி நன்கு அறிந்தவர் அங்கே அப்போது ஒருவர் இருந்தார். அவர் சாக்ரடீஸிடம் சென்று, திருமணம் செய்து கொள்வதைப் பற்றிய தங்கள் கருத்து என்னவோ என்று கேட்டார்.

அதற்கு சாக்ரடீஸ் சிரிக்கமல் சொன்னார்:

எந்த முடிவு எடுத்தாலும் இறுதியில் வருத்தப் படுவாய்! “நல்ல மனைவி கிடைத்தால் நன்கு மகிழ்ச்சியாக வாழலாம்; கெட்ட மனைவி கிடைத்தாலோ ஞானி ஆகலாம்” என்றார். ஆக, சாக்ரடீஸ் சொன்னது உண்மை. ஐயம் வேண்டாம். சாக்ரடீஸ் என்பவர் மனுக்குலத்தில் ஒரு தத்துவஞானியாக இன்றும் போற்றிப் புகழப் படுகிறார்.

மனோரமா




உலகத் திரை வரலாறு எத்தனையோ சாதனைப் பெண்களைப் பார்த்து விட்டது. பார்த்துப் பெருமை பேசி இருக்கிறது. பேசியும் வருகிறது. ஆனால், அதே அந்தச் சினிமா வரலாறு, ஜில் ஜில் மனோரமாவை போல ஓர் அற்புதமான குணச்சித்திர திலகத்தை இதுநாள் வரை பார்த்து இருக்க முடியாது. இனியும் பார்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை. அதைப் பற்றி அந்த வரலாற்றிடம் தான் கேட்க வேண்டும்.

தமிழ்ச் சினிமாவில் முன்னோடிகள் பலர். அந்த முன்னோடி ஜாம்பவான்களில் யாரை எல்லாம் உச்சி முகர்ந்து பார்த்தோமோ அவர்களில் பலர், இப்போது தங்களின் இறுதிக் காலங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மக்கள் திலகம், நடிகர் திலகம், புரட்சித் திலகம் என்ற தமிழ்த் திரையின் மூன்று திலகங்களும் மறைந்து விட்டன. 


காலத்தை மறந்து வாழ்ந்த ஆச்சி

அந்த மூன்று திலகங்களுக்கும் துணையாக நின்று சண்டை போட்ட வில்லன்களும் மறைந்து போய் விட்டார்கள். இடையே இடையே ஓடித் திரிந்த நகைச்சுவை நடிகர்களில் பலரும் கரைந்து விட்டார்கள். தற்போது தன்னுடைய காலத்தையும் நினைவையும் மறந்து வாழ்ந்து கொண்டு இருந்த ஆச்சி மனோரமாவும் மறைந்து விட்டார். 



மனோரமா 1300 படங்களுக்கு மேல் நடித்து, பெருமையும் சாதனைகளையும் செய்தவர். தமிழ்ச் சினிமாவில்  தேய்ந்து போன அத்தனை அட்டூழியங்களையும் பார்த்தவர். அவலட்சணமான அசிங்களைப் பார்த்தும் பார்க்காமல்... தெரிந்தும் தெரியாமல் வாழ்ந்து காட்டியவர்.

தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப் பட்டவர்.

தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்து இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் ஆச்சி நடித்து இருக்கிறார்.



அவருடைய சினிமா வாழ்க்கை 1958இல் மாலையிட்ட மங்கையில் தொடங்கியது. பின்னர் கொஞ்ச காலம் சினிமா தொலைக் காட்சித் தொடர். தம்முடைய சாதனைக்காக ஆச்சி மனோராமா, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

டூரிங் தியேட்டர் காலத்தில் இருந்து டிஜிட்டல் புரஜெக்டர் காலம் வரை வலம் வந்தவர். கடைசியாக சிங்கம் 2 படத்தில் நடிகர்  சூர்யாவுடன் நடித்தார் மனோராமா. ஆக, நடிப்புலக வாழ்க்கையில் கொடிகட்டிப் பறந்தவர். தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஜில் ஜில் சுந்தரியை மறந்து விடமுடியுமா.

நான் இப்போது இங்கேயே செத்துப் போனால்...

ஆச்சி மனோரமாவின் மரணம், திரைத் துறையில் மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய இறப்பிற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், தன்னுடைய மரணம் குறித்து பேசி இருப்பது நம்மை எல்லாம் ரொம்பவும் நெகிழ வைக்கிறது.

வயோதிகம் காரணமாக விழாக்களை மனோரமா தவிர்த்து வந்தார். கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்து முடிந்த திரைத்துறை ஊடகவியலாளர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி தான்.



அதில் கமல், சிவக்குமார் போன்றோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் மனோரமா பேசினார். சென்னைத் தமிழில் குட்டிக் கதைகளைக் கூறினார். பார்வையாளர்களைப் பரவசப் படுத்தினார். தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகப் பலமுறை சொல்லிச் சொல்லி வந்தார். அப்போது அவர் பேசிய பேச்சு அங்கு வந்து இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

அப்படி அவர் பேசிக் கொண்டு இருக்கும் போது, ஒரு கட்டத்தில் திடீரென்று, “எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் இப்போது இங்கேயே செத்துப் போனால் கூட ரொம்ப சந்தோசப் படுவேன்” என்று கூறினார். அந்த நிகழ்ச்சி முடிந்து ஒருவார காலம் ஆகி இருக்கும். இதோ இப்போது சொன்ன மாதிரியே அவரும் போய்ச் சேர்ந்து விட்டார்.




தமிழ்ச் சினிமாவில் ஆச்சி என்று அழைக்கப்ட்ட மனோரமா, தன் கடைசிக் காலத்தில் அதிகமான குணச்சித்திர வேடத்தில் நடித்தப் பகழ் பெற்றார். சிறந்த நடிகையாக மட்டும் அல்லாது சிறந்த பாடகியாகவும் மனோரமா வலம் வந்தவர். 300க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியும் புகழ் பெற்றார்.

கலைத் துறையில் அன்னாரின் ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப் பட்டார். மேலும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’; ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’; மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’; கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’; ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’; சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’; ‘என்.எஸ்.கே விருது’; ‘எம்.ஜி.ஆர். விருது’; ‘ஜெயலலிதா விருது’. தவிர பல முறை ‘பிலிம் பேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்தவர் ஆச்சி மனோரமா.

உண்மையான கலைஞர்களுக்கு இப்போது வேலை இல்லை

கமலஹாசன்களும் ரஜனிகாந்துகளும் நிறைந்து வழியும் தமிழ் நாட்டுச் சினிமாவிற்குள், உண்மையான கலைஞர்களுக்கு இப்போது வேலை இல்லை என்றே சொல்ல வேண்டும். உண்மையில் நிலை கொள்ளத் தக்க, பெயர் பதித்து இருக்கக் கூடிய ஒரு தமிழ்ச் சினிமாவில் மனோரமா நடித்து இருக்க வேண்டும்.

தமிழ்ச் சினிமா அவரை முழுமையாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் வெறுமனே பொய்யும் புரளும் சினிமாவிற்குள் அது சாத்தியம் இல்லாமல் போய் விட்டது. வேதனையான விஷயம்.

நாடகத்துறை தந்த பல சினிமாக் கலைஞர்களின் காலம் முடிந்து கொண்டு இருக்கிறது. சினிமாவிற்காகவே வாழ்ந்த பெரும் கலைஞர்களும்... அந்தச் சினிமா வாழ்விற்கும் அப்பால் சினிமாவை நேசித்த கலைஞர்களும்... மறைந்து கொண்டு இருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சினிமா வெறும் வியாபாரத் தளமாக மாறிக் கொண்டு இருக்கிறது.

சினிமா எனும் மிகப் பெரிய ஊடகம், தமிழ்ச் சமூகத்தில் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது. அதுகூட தெரியாமல், நம்முடைய அடுத்த தலைமுறையும் கெட்டுச் சுவாரகிக் கொண்டு வருகிறது. என் செய்வது.

பெண்கள் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது, மேலானது என்று ஆங்கிலேய எழுத்தாளர் மில்டன் கூறி இருக்கிறார். அந்த வகையில் அந்த மாபெரும் சகாப்தத்தின் அழகிய சின்ன வயது அனுபவங்களைத் தெரிந்து கொள்வோம்.

மனோரமா கதை சொல்கிறார்...

அவரே சொல்கிறார் கேளுங்கள். அவருடைய சுயசரிதை ஓர் ஒலிப் பேழையில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் இருந்து சில பகுதிகளை மீட்டு எடுத்து இருக்கிறேன். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை நீங்களும் கேளுங்கள்.

நான் மனோரமா... பிறந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜமன்னார்குடி. பெற்றவர்கள் எனக்கு வைத்த பெயர் கோபிசாந்தா.

வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், என் தந்தை வசதி மிகுந்த ரோடு காண்ட்ராக்டர். வசதியும் செல்வாக்கும் உள்ள குடும்பத்தில்தான் பிறந்தேன். இந்த நேரத்தில்தான் என் தாயார் ஒரு பெரிய தவறைச் செய்து விட்டார். என் அப்பாவுக்கு தன் கூடப் பிறந்த தங்கையையே இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து வைத்ததுதான் அவர் செய்த பெரிய தவறு!

அதன் விளைவு... என் அம்மாவின் வீட்டு நிர்வாகம் கைமாறியது. எனது சின்னம்மாவின் ஆதிக்கம் வலுத்தது. பல வழிகளிலும் என் அப்பா என் அம்மாவை அவமானப் படுத்தினார். கொடுமைப் படுத்தவும் தொடங்கி விட்டார்.

எந்தத் தங்கையின் வாழ்க்கை நல்ல வாழ்க்கையாக அமைய வேண்டும் என்று தனது வாழ்க்கையைப் பங்கு போட்டுக் கொடுத்தாரோ... அந்தத் தங்கையே எங்கள் வாழ்க்கையில் எல்லா அவலங்களுக்கும் பாதை போட்டுக் கொடுத்து விட்டார்.

நாளுக்கு நாள் துன்பமும் கொடுமைகளும் அதிகரித்தன. பொறுக்கமுடியாத அளவிற்கு அவற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தன. எதற்கும் ஒரு உச்ச வரம்பு உண்டல்லவா? ஒருநாள் என் தாயார் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டிக் கொண்டு விட்டார். பிறந்து ஒரு வருடம்கூட நிறைவு பெறாத நான் அருகில் நின்று கதறிக் கொண்டு இருந்தேன்.

தற்செயலாக எனது அழுகைக்குரல் கேட்டு வந்து பார்த்தவர்கள், எனது அம்மா தூக்கு மாட்டிக் கொண்டு சாகும் நிலையில் இருப்பதைப் பார்த்துப் பதறி, கயிற்றை அறுத்து காப்பாற்றினார்கள்.

அப்படிக் காப்பாற்றப்பட்ட அவருக்கு சரியாக பன்னிரெண்டு மணி நேரத்திற்குப் பிறகுதான் உயிர் வந்தது.

இந்தத் துன்பச் சூழ்நிலையில் மன வெதும்பல்கள் அதிகரித்தனவே தவிர குறையவில்லை. அத்துடன் என் அப்பா கூட என் அம்மாவால் தொடர்ந்து குடும்பம் நடித்த முடியாத நிலை. இனி என்ன செய்வது? வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை!

அரைகுறை பட்டினியோடு வாழ்க்கை ஓடியது

அதனால், ஒரு நாள் என் தாயார் கைக் குழந்தையான என்னைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார். அப்படி அவர் வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, மாவட்டத்தை விட்டு புறப்பட்டு வந்து நின்ற ஊர்தான் இராமநாதபுரம் மாவட்டம். காரைக்குடிக்குப் பக்கத்தில் உள்ள பள்ளத்தூர்.

முன்பின் தெரியாத ஊர். பார்த்து பழகியிராத மக்கள். முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை. பசித்து அழுத எனக்கு பால் வாங்கக் கூட கையில் காலணா இல்லாத வறுமை. இப்படி பாவப்பட்ட சூழ்நிலையில் தான், என் அம்மா பள்ளத்தூரில் தனது வாழ்க்கையைத் தொடக்கினார்.

பலகாரம் சுட்டு விற்பது என் அம்மா எடுத்துக் கொண்ட தொழில். வியாபாரத் தன்மை பெருக்கம் இல்லாத சிறிய ஊர். அதிக முதலீடோ லாபமோ இல்லாத தொழில். அரைகுறை பட்டினியோடு வாழ்க்கை ஓடியது. ஆனால் மானத்தோடு வாழ வழி காட்டியது.

இந்தப் பள்ளத்தூர்தான் என்னை வளர்த்த ஊர். எனது இன்றைய வாழ்க்கைக்கே வழிகாட்டிய ஊர். அனாதையாக வந்த எங்களை ஆதரித்த ஊர். அப்போது எனக்கு இரண்டு வயது. திருநீலகண்டர் படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய "உன்னழகை காண இரு கண்கள் போதாதே" என்ற பாட்டை நான் ஒரு பொம்மையை வைத்து பாடிக் கொண்டிருந்தேனாம். அதைக் கேட்ட என் அம்மாவுக்கு எல்லை இல்லாத ஆனந்தம்... பூரிப்பு... இருக்காதா பின்னே!

வயதோ இரண்டு. மழலை தவழும் காலம். அந்தக் காலத்தில் பிரபல இசை மேதை பாடிய பாட்டை ஓரளவு நயத்தோடு பாடினால்... எந்தத் தாய்க்குத் தான் மகிழ்ச்சி பொங்காது. சொல்லுங்கள்.

தன்னுடைய கண்ணீர் வாழ்க்கையில் என் தாயார் முதன்முறையாக அனுபவித்த சந்தோஷ நிகழ்ச்சியே அதுவாகத்தான் இருக்க முடியும். ஏன் என்றால் இதைப் பற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லிச் சொல்லி பூரித்துப் போவாராம்.

ஒரு சின்னஞ்சிறிய ஊரில்... எந்த வித ஒரு வசதியும் இல்லாத ஓர் ஏழையின் இரண்டு வயதுக் குழந்தை... ஓரளவு இனிமை சேர்த்துப் பாடுவது ஒரு ஆச்சரியமான விஷயமாக இருந்திருக்கும் போலும்!

யார் வீட்டில் என்ன நிகழ்ச்சி நடந்தாலும்

அதற்குப் பின்னர் என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம், தங்கள் அருகே கூட்டி வைத்துக் கொண்டு "பாப்பா பாடு" என்று சொல்லிக் கேட்பார்கள். நானும் பாடுவேன்.

படிப்படியாக இந்தப் பாடும் வித்தை, எப்படியோ என்னைப் பலமாக ஒட்டிக் கொண்டது. மற்றவர்களுக்குப் பாடிக் காட்டி... பாடிக் காட்டி அதுவே நல்ல பயிற்சியாகவும் அமைந்து போனது!

பிறகு எங்கள் ஊரில் யார் வீட்டில் என்ன நிகழ்ச்சி நடந்தாலும், அங்கே என்னைத் தவறாமல் கூட்டிச் சென்று பாட வைப்பார்கள்.

இதே நேரத்தில் ரொம்பவும் சிரமத்திற்கு மத்தியில் பள்ளிக்கூடத்திற்குப் போய் வந்தேன். படிப்பில் மிகுந்த கெட்டிக்காரி என்ற பாராட்டையும் பெற்று வந்தேன்.

என்னுடைய பெயர் கோபிசாந்தாவாக இருந்தாலும் எல்லோரும் என்னை பாப்பா என்று தான் கூப்பிடுவார்கள். ஒருமுறை எங்கள் பள்ளிக்கூட விழா ஒன்றில் எங்கள் வாத்தியார் என்னை அழைத்து "பாப்பா ஒரு பாட்டுப் பாடும்மா" என்று கேட்டுக் கொண்டார்.

பாருக்குள்ளே நல்ல நாடு... என்ற பாட்டை, மீரா படத்தில் வரும் "காற்றினிலே வரும் கீதம்" என்ற பாட்டின் டியூனில் பாடினேன். பள்ளிக்கூட ஆசிரியர்களும், மற்றவர்களும் மகிழ்ந்து போனார்கள்.

அதுமுதல் நான் பாடாத பள்ளிக் கூட விழாக்களே இல்லை என்றாகிப் போனது. அத்துடன் சுற்று வட்டார ஊர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் என்னை அழைத்துச் சென்று பாட வைத்தார்கள்.

'பாட்டுப் பாடுற பொண்ணு, படத்தைப் பார்த்தா பாடக் கத்துக்கும்'

நான் பாடத் தெரிந்தவள். அதனால், எனக்கு ஒரு சலுகையும் கிடைத்தது. பள்ளிக்கூடம் போய் வந்த பிறகு, பலகாரம் விற்க எங்கள் ஊர் சினிமா கொட்டகைக்குப் போவேன். எந்த நேரமும் உள்ளே சென்று படம் பார்க்க எனக்கு இலவச அனுமதியும் உண்டு. 'பாட்டுப் பாடுற பொண்ணு, படத்தைப் பார்த்தா பாடக் கத்துக்கும்' என்று பிரியமாக விட்டு விடுவார்கள்.

நானும் அவ்வப்போது உள்ளே போய் சிறிது நேரம் பாட்டுகள் வரும் காட்சிகளைப் பார்த்துவிட்டு வருவேன். இப்படியே படம் பார்த்தும், கிராமபோன் ரிக்கார்டுகளைக் கேட்டுமே எனது இசைஞானம் வளர்ந்தது. இந்த நிலையில்தான் என் அம்மாவுக்கு பயங்கரமான ரத்தப் போக்கு நோய் வந்தது.

மனக்கவலை... வறுமை... தினந்தோறும் நெருப்புடன் நடத்தும் கடுமையான போராட்டம்... இவை எல்லாமாகச் சேர்ந்து அந்த நோயைக் கொடுத்து விட்டன. என்ன செய்வது? ஆச்சி மனோரமாவின் சோகக் கதை நாளை தொடரும்...