04 ஜனவரி 2016

முத்துலட்சுமி ரெட்டி

தேவதாசி விடுதலை வீராங்கனை


ஆண்களின் இச்சைக்கு ஆரவாரப் பூக்கள். பெண்களின் இயலாமைக்கு பரிவாரப் பூக்கள். ஒரு பக்கம் ஆண்களுக்குச் சாதகமான வக்கிரச் சலவைகள். இன்னொரு பக்கம் பெண்களுக்குப் பாதகமான மூளைச் சலவைகள். முன்னது ஆண்களின் லௌகீத்தில் மோப்பம் பிடித்த வேசித் தனம். பின்னது பெண்களின் பலகீனத்தில் ஏப்பம் விட்ட அசிங்கத்தனம். இது எனக்குள் ஆர்ப்பரிக்கும் வேதனைத் தனம். உணர்வுகள் கொப்பளிக்கும் ஆதங்கத் தனம். கோபம் வேண்டாமே... 

தேவதாசி முறையை ஒழித்துக் கட்டிய வீராங்கனை முத்துலட்சுமி ரெட்டியின் வரலாறு வருகிறது. ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான வாழ்வியல் வரலாறு. படியுங்கள்.

படித்து விட்டு அந்தப் பெண் தெய்வத்தைக் கை எடுத்துக் கும்பிடுங்கள். சொர்க்கத்தில் இன்றைக்காவது உங்களால் கொஞ்ச நேரம் பூமாரி பொழியட்டும்.

தேவதாசி என்கிற பெயர்கூட சரித்திரத்தில் இருக்கக் கூடாது


ஓர் உண்மைச் சம்பவம். 1950களில் நடந்தது. தமிழகச் சட்டச் சபையில் ஒரு நா‌ள் அன‌ல் பற‌க்கு‌ம் ‌விவாத‌ம். பல காலமாகத் தமிழகத்துக் கோயில்களில் பொட்டுக் கட்டுதல் என்கிற தேவதாசி முறை வழக்கத்தில் இருந்தது. இனிவரும் காலங்களில் தேவதாசி என்கிற பெயர்கூட சரித்திரத்தில் இருக்கக் கூடாது.



அந்த முறை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அந்தப் பெண்ணின் பிடிவாதமான இறுமாப்பு. ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய அரசியல் பீடத்தில் ஆவேசமாக முழக்கமிட்டார்.

அதே அந்தச் சட்டச் சபையில் சத்தியமூர்த்தி என்பவர் ஒருவர் இருந்தார். இவர் மாறுதல்களை விரும்பாத நல்ல ஒரு பழமை விரும்பி. நன்றாகப் பட்டை அடித்துக் கொண்டு வெள்ளையும் சொள்ளையுமாகத் திரிந்தவர். அரசியல் டிக்கெட் வாங்கிச் சட்டச் சபைக்கு வந்து விட்டார். எட்டுக் காலில் அவர் எகிறிக் குதித்து எதிர்க் குரல் கொடுத்தார்.

சாமிக்கு விரோதமாக எதையும் செய்யக் கூடாது. சாமி கண்ணைக் குத்தி விடும். தேவதாசிகள் காலம் காலமாக ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப் பட்டவர்கள். அவர்கள் தேவர்களின் அடிமைகள். தெய்வச் சன்னிதானத்தில் புனிதம் பெற்றவர்கள்.


அவர்களை ஏன் ஒழிக்க வேண்டும். அதெல்லாம் கூடாது. அது பெரிய பாவம். சரித்திரத்தைத் திருப்பி எழுதக் கூடாது. எப்படி இருந்ததோ அப்படியே இருக்கட்டுமே. தெய்வ நிந்தனைக்குப் பட்டயம் கட்ட வேண்டாம். இது சத்தியமூர்த்தியின் சத்தியமான குரல்.

அந்தப் பெண் சும்மா விடுவாரா. சற்றும் தாமதிக்கவில்லை. எழுந்து நின்று உயர்ந்த குரலில் கத்தினார்.


தெய்வச் சன்னிதானத்தில் புனிதம் என்றால்


தேவதாசி முறை புனிதமானது என்றால்... தேவதாசி முறை ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப் பட்டது என்றால்... தெய்வச் சன்னிதானத்தில் புனிதம் என்றால்… உங்களை ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்…

அந்தத் தொழிலை பிற்படுத்தப்பட்ட எங்கள் குலத்துப் பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா... ஏன் உங்கள் உயர் சாதிப் பெண்களைத் தேவதாசிகளாக ஆக்கிப் பாருங்களேன்… நாங்களும் சந்தோஷப் படுவோம் இல்லையா… என்றார். அனல் தெறித்த வார்த்தைகளால் சட்டசபையே சில நொடிகள் ஆடிப் போனது. சரி…


அந்தக் கனல் பொழிந்த குரலுக்குச் சொந்தக்காரர் யார் தெரியுமா. அவர் தான் இன்றைய நம்முடைய கதாநாயகி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

இந்தியாவிலேயே டாக்டருக்குப் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. இந்திய அரசின் உதவித் தொகையால் வெளிநாடு சென்று உயர் கல்வி பெற்ற முதல் பெண்மணி.

பெண்ணியம் பார்த்த அழகிய மகள்


பாரத மண்ணின் முதல் சட்டசபை பெண் உறுப்பினர். தமிழகத்தின் முத‌ல் பெ‌ண் மரு‌த்துவ‌ர். பெண் விடுதலைக்காகப் போராடியவர். தேவதாசி ஒழிப்புக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். பெண் குலத்திற்குப் பெண்ணியம் பார்த்த அழகிய மகள். ஒரு சமூகச் சீர்திருத்தவாதி. ஒரு சமூகப் போராளி. ஒரு தமிழ் ஆர்வலர். அஞ்சா நெஞ்சம் படைத்தவர்.

அனாதைக் குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்த்தவர். அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைக்கும் வகையில் அவ்வை இல்லம் எனும் அன்பு நிலையம். புற்று நோய்க்கு உயர்ச் சிசிக்சைகள் அளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை போன்றவற்றை அமைத்தவர்.

பத்து வயது பெண்ணுக்குப் பொட்டு கட்டும் நிகழ்ச்சி

பெண்கள் அடிமைகளாக நடத்தப் பட்ட காலத்தில், புழு பூச்சிகளாகக் கருதப் பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில், பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர் தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (Dr. Muthulakshmi Reddy). முதலில் அவரைக் கை எடுத்துக் கும்பிடுவோம்.

இந்தக் கட்டுரையில் தேவதாசிகளைப் பற்றி எதையும் அதிகமாகச் சொல்லவில்லை. விரைவில் அதைப் பற்றி தனியாக ஒரு தொடரை எழுதுகிறேன். இன்றைக்குப் பெண்ணியத் தலைமகள் முத்துலட்சுமி ரெட்டியைப் பற்றி மட்டும் தெரிந்து கொள்வோம். சரிங்களா.

இந்திய வரலாற்றில் பெருமைக்குரிய இவரின் வாழ்வியல், ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய காலச்சுவடு. 1886 ஜூலை 30ஆம் தேதி, புதுக்கோட்டையில் பிறந்தவர். தந்தையாரின் பெயர் நாராயணசாமி. தாயாரின் பெயர் சந்திரம்மாள். நான்கு பிள்ளைகள்.

அவர்களில் மூத்த மகளாகப் பிறந்தார். இவருக்குச் சுந்தரம்மாள், நல்லமுத்து என்று இரண்டு தங்கைகள், இராமையா என்று ஒரு தம்பி. சுமாரானக் குடும்பம். நான்கு பிள்ளைகளையும் படிக்க வைக்க முடியாத பணப் பற்றாக்குறை.

முத்துலட்சுமிக்கு நான்கு வயதான போது திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப் பட்டார். மூத்த பெண்ணான முத்துலட்சுமியை பள்ளிப் படிப்போடு நிறுத்தி விடலாமா என்று நாராயணசாமி நினைத்தார்.

 பள்ளியின் மானத்தைக் காப்பாற்றினார்


அப்போது… அவரைக் கிணற்றுத் தவளையாக மாற்றிவிட வேண்டாம் என அவருக்குப் படித்துக் கொடுத்த ஆசிரியர்கள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். தொடர்ந்து படிக்க வையுங்கள் என ஆசிரியர்கள் சிபாரிசு செய்தார்கள். இல்லை என்றால் முத்துலட்சுமியின் படிப்பும் அதோடு நின்று போய் இருக்கலாம். பத்தில் பதினொன்றாக ஆறிப் போய் இருக்கும்.

ஆக, அந்த வகையில் உயர் நிலைப்பள்ளிப் படிப்பைத் தொடர வாய்ப்பு பெற்றார். முத்துலட்சுமியின் கல்வி தொடர்ந்தது. மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதிய 100 பேரில் பத்து பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அவர்களில் ஒரே மாணவி, அதிலும் முதல் மாணவி என்ற பெருமையையும் பெற்றார் முத்துலட்சுமி. மன்னிக்கவும்… பள்ளியின் மானத்தைக் காப்பாற்றினார் எனும் டயலாக்கைப் பயன்படுத்தலாம் தானே.


அதனால் தொடர்ந்து அவர் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தடை ஏதும் இல்லாமல் போனது. அடுத்து புதுக்கோட்டை அரசக் கல்லூரியில் சேர்ந்தார். அவருக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு. அங்கே முத்துலட்சுமியின் ஆங்கிலப் புலமை ஆசிரியர்களையே அசர வைத்தது.

பெண் அடிமைத்தனம் விலக வேண்டும்


அத்தனைத் திறமையும், புத்திக் கூர்மையும் கொண்ட முத்துலட்சுமிக்கு சிறுவயதில் இருந்தே கண்பார்வைக் கோளாறு. அது ஒன்று தான் அவருடைய ஒரே குறை. அதற்குக் கண்ணாடி கூட போட்டுக் கொள்ளாமல் கல்லூரிப் பாடங்களுடன் ஐக்கியமாகிப் போனார்.

இவருக்கு ஷேக்ஸ்பியர் (Shakespeare), டென்னிசன் (Tennyson), மில்டன் (Milton), ஷெல்லி (Shelly) போன்ற மேல்நாட்டு இலக்கிய நூல்கள் மிகவும் பிடிக்கும்.

தனது 20 ஆவது வயதில் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பைப் பயின்றார். அவருக்குள் இருந்த உடல்நலக் குறைபாடே அவரை மருத்துவத் துறையில் கால் பதிக்கத் தூண்டியது என்றும் சொல்லலாம்.

அறுவை சிகிச்சைத் தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுத் தேறினார். இதனால் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றுச் சான்றிதழும் கிடைத்தது.

1912இல் மருத்துவராய் வெளியே வந்தார். அடுத்து, சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் பணியாற்றிய போது தான் அவருக்குச் சமூகத் தொண்டுகளின் மீது ஆர்வம் பிறந்தது.

பெண் அடிமைத்தனம் விலக வேண்டும், தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் அநீதிகளும் அழிக்கப்பட வேண்டும். அதற்கு அரசியலில் இறங்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்குள் உதயமானது.

அடுத்து அவருடைய இலக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவுவது. அந்த இலக்கு தனது பகுதி மக்களுக்கானச் சேவையில் தொடங்கியது. புதுக்கோட்டையைச் சுற்றிய உள்ள கிராமங்கள் எல்லாம் அவர் கரம்பட்டு நலம் பெற்று புத்துயிர் பெற்றன.


திருமண வயதை அடைந்த முத்துலட்சுமிக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்பினார்கள். ஆனால் முத்துலட்சுமிக்குத் திருமணத்தில் நாட்டம் இல்லை. இங்கேயும் அந்த மாதிரி பல முத்துலட்சுமிகள் சுற்றித் திரிவதைப் பார்க்கலாம். திருமணமே வேண்டாம் என்று அடம் பிடித்து படம் பிடித்துக் கொண்டு திரிகிறார்கள். ஆக, முத்துலட்சுமியின் விருப்பம் எல்லாம் படிப்பிலும், சமூகப் பணியிலுமே பயணித்தன.

மூன்று நிபந்தனைகள்


இருப்பினும் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு திருமணத்திற்குச் சம்மதித்தார். அவருடைய கணவராகச் சுந்தரரெட்டி என்பவர் வந்து சேர்ந்தார்.

தன்னுடைய விடுதலை உணர்வுக்கு தன் கணவர் தடையாக இருக்க மாட்டார் என்று உணர்ந்த பின்னர் தான் முத்துலட்சுமி திருமணத்திற்குச் சம்மதித்தார். அதற்கு முன் மூன்று நிபந்தனைகள்.

1. தம்மைச் சரிசமமாக நடத்த வேண்டும்.
2. தம் சொந்த விருப்பங்களுக்குக் குறுக்கே நிற்கக் கூடாது.
3. தம்மைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் அடையாறில் அன்னிபெசன்ட் (Anni Besant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்ம ஞான சபை இருந்தது. மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்க்கும் திருமணங்களை அங்கே நடத்தி வந்தார்கள். அங்கேதான் முத்துலடசுமி - சுந்தர ரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்தது.

கணவன் - மனைவி இருவரும் மருத்துவப் பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம் மோகன். தனியார் நிறுவனத் தொழில். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி, தாய் - தந்தையைப் போல மருத்துவர். பிற்காலத்தில் புற்றுநோய் சிகிச்சை நிபுணரானார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகித்தார்.

கோயிலுக்கு நேர்த்திக்கப்பட்ட சிறுமி

சரித்திரம் படைத்த பெண்மணிகள் வரிசையில் முத்துலட்சுமி ரெட்டி இடம் பிடித்தார். அந்தப் பெருமையை அவர் பெறக் காரணமாக இருந்தவற்றைத் தெரிந்து கொள்ளலாமே….

முத்துலட்சுமி ரெட்டியின் ஆற்றலை அறிந்த இந்திய அரசாங்கம் அவருக்கு உபகாரச் சம்பளம் வழங்கி அவரை இங்கிலாந்திற்கு அனுப்பியது.

1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத் தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுகளில் சில புரட்சிகரமான சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

புற்று நோய் பற்றிய ஆராய்ச்சிகள்


அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களைத் தடை செய்யும் சட்டம் போன்றவற்றச் சொல்லலாம்.

1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய சொற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பின்னர் முத்துலட்சுமி புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தார். அந்த நேரத்தில் அவருடைய தங்கைக்குப் புற்று நோய். தான் ஒரு மருத்துவராக இருந்தும் தன் தங்கையைக் காப்பாற்ற முடியாமல் பதறிப் போனார். அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தங்கையின் இழப்பு அவரை வெகுவாகப் பாதித்தது.

புற்று நோய் எனும் உயிர்க் கொல்லி நோயில் இருந்து இனி யாரையும் சாகவிடக் கூடாது என்கிற எண்ணம் அவருக்குள் உறுதியானது. 1925இல் கணவர், குழந்தைகளுடன் லண்டனுக்குச் சென்று அங்கே அரச புற்றுநோய் மருத்துவமனையில் புற்று நோய் பற்றிய ஆராய்ச்சிகளைச் செய்தார்.


நல்ல மருத்துவமனைகள் இல்லாத காரணத்தினால் தான் அவருடைய தங்கை சுந்தரம்மாள் இறந்து போனார். சொல்லி இருக்கிறேன். தன் தங்கைக்கு நேர்ந்த கதி மற்றவர்களுக்கும் ஏற்படக் கூடாது என்று நினைத்தார்.

சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை ஒன்றை அமைக்க உறுதி எடுத்தார். பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.

டாக்டர் முத்துலட்சுமி புற்றுநோய் அறிவியல் துறை கல்லூரி


1954இல் பன்னிரெண்டு படுக்கைகளோடு தொடங்கப் பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இன்று விஸ்வரூபம் எடுத்துச் சிகரம் தொடுகிறது. புற்றுநோய் ஆய்வு மையம், புற்றுநோய் தடுப்பு, டாக்டர் முத்துலட்சுமி புற்றுநோய் அறிவியல் துறை கல்லூரி என பல பிரிவுகள். இன்று அந்த மருத்துவமனையில் பயன் பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா. வருடத்திற்கு 80,000 பேர். மலேசியாவில் இருந்தும் அங்கே போய் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அக்காலத்தில் வறுமையில் வாடிய பெண்களும், நடத்தை தவறிய பெண்களும் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளைக் குப்பைத் தொட்டியில் வீசிவிடுவது வழக்கம். அந்த மாதிரியான அனாதையாக்கப் பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அடையாறு அவ்வை இல்லம். இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.

இதில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்குத் தாயாக இருந்து அவர்களைப் படிக்க வைத்து, உரிய காலத்தில் திருமணமும் செய்து வைத்தார்.

பெண் விடுதலைக்காகவும் ஏழை, எளிய மக்களுக்காகவும் தனது வாழ்வின் பெரும் பகுதியைச் செலவழித்த முத்துலட்சுமி ரெட்டிக்கு, 1956இல் இந்திய அரசு பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது. சாதனைகள் படைத்து சரித்திரம் பேசிய முத்துலட்சுமி 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்து போனார். அந்த இதயம் நின்ற போது அவருக்காகப் பல இலட்சம் இதய‌ங்க‌ள் துடி‌த்துக் க‌ண்‌ணீ‌ர் ‌‌வி‌ட்டன.


பல ஆயிரம் தேவதாசிகளைக் காப்பாறிய புண்ணியம்… பல ஆயிரம் நோயாளிகளைக் காப்பாறிய புண்ணியம்… பல ஆயிரம் அனாதைக் குழந்தைகளைக் காப்பாறிய புண்ணியம்… அவரை ஒரு நிலையான ஆத்மாவாக பூபாளம் பாடுகின்றன. தமிழ் மக்கள் அவரை ஒரு தெய்வமாகவே வணங்குகிறார்கள். வாழ்த்துகிறார்கள்.

டாக்டர் முத்துலட்சுமி மறைந்தாலும் அவர் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் மறையவில்லை. வாழ்கிறார்… கை எடுத்து கும்பிடுவோம்!



20 அக்டோபர் 2015

பாலம் கல்யாணசுந்தரம்

மலேசியா புதிய பார்வை நாளிதழில் 20.10.2015இல் பிரசுரிக்கப்பட்டது.

பாலம் கல்யாணசுந்தரம், மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

உன்னதமான இலட்சியங்களில் உண்மையான இலக்கணங்கள். சாந்தமான கொள்கையில் சத்தியமான சாதனைகள். கிஞ்சிதம் குறையாத சீர்பட்ட செம்மைகள். அங்கே தியாகத்தின் எளிமைக் கூற்றுகள் தெரிகின்றன.  

இப்படியும் ஒரு மனிதரா என்கிற அலைகடல் வியப்பு. ஒரு திகைப்பு. அந்த மனிதருக்குள் ஓர் அருவமான ரிஷிகேசி தென்படுகிறது.  

அவர்தான் பெரியவர் பாலம் கல்யாணசுந்தரம். மனுக்குலத்திற்கு கிடைத்த நல்ல ஒரு ஜீவகாருண்யம். தமிழகத்தில் பிறந்த ஒரு தார்மீகச் சிந்தனை. வயதாகியும் இளமை மாறாத சாருகேசியில் இவர் ஒரு ராக மாளிகை. அப்படித் தான் நமக்கும் படுகிறது.

காமராசர், கக்கன், அண்ணாதுரை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, எம்.ஜி.ஆர், இரட்டைமலை சீனிவாசன், சீனிவாச ஐயங்கார், தீரன் சின்னமலை, சந்திரசேகர ஆசாத்.

இந்தப் பெயர்களை உங்களுக்குத் தெரியுமா. தெரிந்தால் நல்லது. தெரியாவிட்டால் பரவாயில்லை. இவர்கள் எல்லாம் இந்திய மண்ணின் மைந்தர்கள். தமிழகத்திற்கு மிகவும் வேண்டப் பட்டவர்கள். 

மறைந்தும் மறையாமல் இன்றும் நம்மோடு வாழ்கின்றார்கள். அதே அந்த மண்ணில் பிறந்தவர்தான் பாலம் கல்யாணசுந்தரம். இவர் சத்தியத்தில் பிறந்து  சத்தியத்திலேயே வாழும் ஒரு சத்தியமூர்த்தி.

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த குடிமகன்

ஐயா ல்யாணசுந்தரம்ர்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபை 20-ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த குடிமகன் (Man of Millinium) விருதை வழங்கிச் சிறப்பு செய்தது. இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் அனைத்துலகச் சுயசரிதைக் கழகம், உலகின் உயர்ந்த மனிதர்களில் ஒருவர் என்று புகழாரம் செய்தது. அமெரிக்க அரசாங்கம் புத்தாயிரத்தின் தவப் புதல்வன் என்று மகுடம் சூட்டியது.

இந்திய அரசு இந்தியாவின் சிறந்த நூலகர்என்று பாராட்டிச் சிறப்பித்தது. உலகின் ஆகச் சிறந்த முதல் பத்து நூலகர்களில் ஒருவர் எனத் தேர்வு செய்யப்பட்டு இன்றும் போற்றப் படுகிறார். 

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கிய முதல் மாணவர் என்கிற பெருமையும் இவரைச் சார்கிறது. உலகப் பணக்காரர் பில் கேட்ஸ், சில மில்லியன் டாலர்களை அன்பளிப்பாகக் கொடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவருடைய வாழ்க்கை வரலாற்றை, மெலிண்டா கேட்ஸ் அறவாரியம் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கிறது. 22 மொழிகளில் வெளியீடு செய்து இருக்கிறார்கள். வேறு என்னங்க வேண்டும். இவர் ஒரு தமிழர் என்பது நமக்கு எல்லாம் எத்தனைப் பெருமை. அவரைப் பற்றி மேலும் தகவல்கள்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இந்தியா வந்தபோது அவர் இருவரைச் சந்திக்க விரும்பினார். ஒருவர் அதிபர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இன்னொருவர் பாலம் கல்யாண சுந்தரம். 

ல்யாண சுந்தரத்தின் பெயருக்குப் பின்னால் வரும் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS எனும் எழுத்துகளைப் பாருங்கள். மொத்தம் 36 எழுத்துகள்.

நார்வே நாட்டில் திரைப்பட விழா

ஏழைகளின் துயரங்களை நேரிடையாக தெரிந்து கொள்ள 7 ஆண்டுகள் நடைபாதை வாசியாகவே வாழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லூரிகளுக்குத் தானமாக எழுதி வைத்து விட்டார்.

வாழ்நாள் முழுவதும் ஒரு துண்டு நிலம், ஓர் ஓலைக் குடிசை, ஒரு சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்க நினைத்தவர். அதனால் தன்னுடைய திருமண வாழ்க்கையையும் தியாகம் செய்தார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், உலகில் மிகவும் போற்றத்தக்க அறிவுஜீவி (A Most Notable intellectual’ in the World) என்ற பட்டத்தை வழங்கியது. அத்துடன் நூலகத் துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.

இந்தியாவின் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து. இவர் சென்னை மையப் பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை பரிசாகக் கொடுத்தார். 

ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என கல்யாணசுந்தரம் அந்தப் பரிசை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பாருங்கள். அந்த மனிதர் எங்கே நிற்கிறார் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

இவரைப் பற்றி ஓர் ஆவணப் படம் தயாரித்தார்கள். சுபாஷ் கலியன் என்பவர் இயக்கியது. 2012-ஆம் ஆண்டு நார்வே நாட்டில் நடைபெற்ற திரைப்பட விழாவில் படத்தைப் போட்டுக் காட்டினார்கள். 

அதை ஒரு சிறப்புப் படமாகத் தேர்வு செய்தார்கள். கல்யாணசுந்தரம் நடத்தும் பாலம் எனும் தொண்டூழிய வாரியத்திற்கு கணிசமான தொகையையும் கொடுத்து அனுப்பினார்கள்.

சூப்பர் ஸ்டார் வீட்டில்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் மீது அளவு கடந்த மதிப்பு வைத்து இருந்தார். தன் தந்தையைப் போல நினைத்தார். ஒண்டுக் குடிசையிலும் பிளாட்பாரத்திலும் அவர் தங்குவது ரஜினிக்குப் பிடிக்கவில்லை. அதனால், இவரைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்தார். 

அங்கேயே தங்க வைத்துக் கொண்டார். ஆனால், கல்யாணசுந்தரம் கொஞ்ச நாட்கள்தான் தங்கினார். அப்புறம் ரஜினியின் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். ஏன்? கல்யாணசுந்தரமே சொல்கிறார். கேளுங்கள்.

ரஜினிகாந்துக்கு என் மேல் மிகுந்த பிரியம்தான். எனக்காக அவருடைய வீட்டில் இரண்டு பெரிய அறைகளை, எல்லா வசதிகளுடன் ஒதுக்கித் தந்தார். இருந்தாலும், எனக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. 

மாடிப்படிகளுக்குக் கீழேதான் என் துணிமணிகளை வைத்துக் கொள்வேன். தரையில் ஒரு துணியை விரித்துப் போட்டு படுத்துக் கொள்வேன். அது என்னவோ என் மனசிற்குச் சரியாகப் படவில்லை. ஏழைகளுக்காக உழைக்கிறவன் என்று சொல்லிக் கொண்டு சூப்பர் ஸ்டார் வீட்டில் தங்கி இருந்தால், யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்.

அங்கே நான் ரொம்ப எளிமையாக வாழ்ந்தேன். கீழே தரையில்தான் படுத்துக் கொள்வேன்என்று சொன்னால் யார் தான் நம்புவார்கள். சொல்லுங்கள்.  

பனை மரத்தின் அடியில் நின்று கொண்டு பாலைக் குடித்தாலும் அதைக் கள் என்றுதானே உலகம் சொல்லும். முள் மேல் இருப்பது போல் நான்கு மாதங்கள் அங்கு இருந்தேன். பின்பு வெளியேறி விட்டேன். அதில் ரஜினிக்கு ரொம்பவும் வருத்தம்என்றார்.

நிச்சயமாக ரஜினி வருத்தப்பட்டு இருப்பார். தெரிந்த விஷயம். பெரியவரை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் தானே, தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார். 

அங்கே போய் துண்டை உதறித் தரையில் போட்டு படுத்துக் கொண்டால் எப்படி. ரஜினிக்கும் ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்து இருக்கும்.

உலகப் பணக்காரர் பில் கேட்ஸ்

சரி. யார் இந்த பாலம் கல்யாணசுந்தரம். ரொம்ப பேருக்கு இவரைத் தெரியாதுங்க. அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், இந்திய அதிபர் அப்துல் கலாம், ஆளுநர் பாத்திமா பீவி போன்றவர்கள் இவரைத் தேடி வந்த பிறகுதான், சொந்த நாட்டு மக்களுக்கே அவரைப் பற்றி தெரிய வந்தது. 

அப்புறம் என்ன. வழக்கம் போல ஆகா ஓகோ புகழ்மாலைகள். கட் அவுட்டுகள். விருதுகள் விருந்துகள். பற்றாக்குறைக்கு பார்க்கிற இடம் எல்லாம் பதாகைகள்.

ஆனால், நாற்பது ஆண்டுகள் வரை, கல்யாணசுந்தரம் என்பவர் யார் என்று தமிழர்களில் பலருக்குத் தெரியாமல் போனது தான் உலகத்தின் எட்டாவது அதிசயம். என்ன செய்வது. கண்களில் பட்டது எல்லாம் சிரிக்கும் சினிமா, சிணுங்கும் சினிகா, கொத்தவால் பில்டப்புகள். பெயர்கள் வேண்டாமே. பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள். அதைப் பற்றி எழுதினால் வலிக்கும்.

கல்யாணசுந்தரம் என்பவர் இந்தியாவிலேயே மிகச் சிறந்த சமூகச் சேவகர்களில் ஒருவராகப் போற்றப் படுகிறார். தனக்கென வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்

ஒரு நூலகராக அரசாங்கத்தில் பணியாற்றியவர். தனக்குக் கிடைத்த பத்து லட்சம் ரூபாய் ஓய்வூதியத் தொகையை, அப்படியே தூக்கிக் குழந்தைகள் நல நிதிக்காகக் கொடுத்தவர்.

அதன் பின்னர், இவருக்கு லட்சக் கணக்கில் பணம் கிடைத்து இருக்கிறது. ஆனால், தனக்கு என்று ஒரு காசைக்கூட தொடுவது இல்லை. சமூக நலக் காரியங்களுக்காக வாரிக் கொடுத்து விடுவார்

பின்னர் ஒரு ஓட்டலில் அற்றைக் கூலியாக வேலை செய்தார். அதில் கிடைத்த பணத்தில் தன் அன்றாடச் செலவுக்கு கொஞ்சம் எடுத்துக் கொள்வார். மிச்சத்தையும் தர்ம காரியங்களுக்குக் கொடுத்து வந்தார்.

பெரியவர் கல்யாணசுந்தரம் திருநெல்வேலி, கருவேலங்குளம் என்ற ஊரில் 1953-ஆம் ஆண்டில் பிறந்தவர். ஏர்வாடியில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் கருவேலங்குளம் இருக்கிறது. தந்தையாரின் பெயர் பால்வண்ணன். அந்த ஊர் மக்களின் நாட்டாமை. தாயாரின் பெயர் தாயம்மாள்.

சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது

செயின்ட் சேவியர் கல்லூரியில் தமிழில் படித்து பி.ஏ இளங்கலைப் பட்டம் பெற்றார். ஒரே ஒரு மாணவராக இருந்ததால் அவரை வேறு பாடம் எடுக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள்.

இருந்தாலும் தமிழ் மொழியின் மீது இருந்த அலாதியான பிடிப்பினால்,  பிடிவாதமாக இருந்தார். அதில் வெற்றியும் பெற்றார். 1963-ஆம் ஆண்டு அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருக்கும் பொழுது, இந்திய சீனப் போர் நடக்கிற காலக்கட்டம். 

அப்போது, தேசியப் பாதுகாப்பு நிதிக்காக, தன்னுடைய எட்டரை பவுன் தங்கச் சங்கிலியை அப்படியே கழற்றி, கர்மசீலர் காமராசரிடம் கொடுத்தவர்தான் இந்தப் பாலம் கல்யாணசுந்தரம்.

பணம் என்பது எல்லோருக்கும் மூன்று வழிகளில் கிடைக்கும். கஷ்டப்பட்டு சொந்தமாக உழைத்துச் சம்பாதிப்பது ஒரு வழி. அப்பா அம்மா பாட்டன் பூட்டன் மூலமாகக் கிடைப்பது இன்னொரு வழி. 

வாச்சான் போச்சானாக மற்றவரிடம் இருந்து கிடைப்பது அடுத்த வழி. ஆக, பெரியவர் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு இந்த மூன்று வழிகளிலும் பணம் கிடைத்தது. எப்படி என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

ஒரு கல்லூரியில் அவருக்கு இருபது ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம். முப்பத்தைந்து ஆண்டுகள் பணி. சம்பளமாகக் கிடைத்தது எழுபது லட்சம். சம்பளத்தில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு, மிச்சத்தை ஏழைகளுக்கே கொடுத்து ஒரு வரலாற்றையும் படைத்து இருக்கிறார். ஓர் ஆண்டு இல்லை. இரண்டு ஆண்டுகள் இல்லை. முப்பத்தைந்து ஆண்டுகள். அப்புறம் வேலையில் இருந்து ஓய்வு பெற்றதும், ஓர் உணவகத்தில் சர்வராக வேலை.

எந்த நாட்டைச் சேர்ந்த அரசு ஊழியராக இருந்தாலும் சரி; இல்லை அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருந்தாலும் சரி; கல்யாணசுந்தரம் செய்தது மாதிரி யாரும் செய்ததாக இல்லை. ஆக அவருடைய நல்ல தர்ம தியாகச் செயல்களுக்கு விருதுகளும் விழாக்களும் வீடு தேடி வந்தன.

வகுப்பு வர்ணங்களைத் தாண்டிய தியாக மனப்பான்மை

அந்த வகையில், ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர் என்கிஓர் உயரிய விருதை அமெரிக்காவில் வழங்கினார்கள். விருதுடன் 6 புள்ளி 5 மில்லியன் டாலர்களையும் பரிசாகக் கொடுத்தார்கள். நம்ப மலேசிய காசிற்கு 240 இலட்சம் ரிங்கிட். பெரிய பணம் தானே. கல்யாணசுந்தரம் என்ன செய்தார் தெரியுமா. அதில் இருந்து ஒரு காசையும் எடுத்துக் கொள்ளாமல் அப்படியே அந்தப் பணம் முழுவதையும் ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டார்.

என்ன பைத்தியக்கார மனிதன் என்று ஒரு சிலர் ஏசினார்களாம். என்ன செய்வது. எனக்குகூட ஒரு மாதிரியாகத் தான் இருக்கிறது. கிடைத்த காசை எல்லாம் தானம் தானம் என்று கொடுத்து விட்டு, கடைசியில் ஓட்டலில் மங்கு பாத்திரம் கழுவுகிற வேலை செய்தால் யாருக்குத்தான் மனசு சங்கடப் படாது. சொல்லுங்கள்.

இருந்தாலும் இவர், அடித்தள ஏழை மக்களுக்கு ஓர் அகல்விளக்காக வாழ்ந்து இருக்கின்றார். சாதி பார்ப்பது இல்லை. சமயம் பார்ப்பது இல்லை. வகுப்பு வர்ணங்களைத் தாண்டிய ஒரு தியாக மனப்பான்மையில் வாழ்ந்து இருக்கின்றார். துன்பக் கடலில் மிதக்கும் அனாதைக் குழந்தைகளுக்கு, ஒரு தந்தையாக, ஒரு தனயனாக, ஒரு தார்மீகவாதியாக வாழ்ந்து கொண்டும் வருகிறார்.

அதனால், அவருடைய நிதர்சனமான உண்மை வாழ்க்கை நிலைதான் நமக்கு பெரிதாகப் படுகிறது. கூடவே, நம்முடைய எதார்த்தமான மனச் சங்கடங்களும் அடிபட்டுப் போகின்றன. முதலில் சொன்னேனே யாருக்குத்தான் மனசு சங்கடப் படாது என்று. அதுவும் அடிபட்டுப் போகிறது.

கல்யாணசுந்தரம் போல உதாரண புருஷராகத் திகழுங்கள்

அன்புப் பாலம் எனும் ஒரு தொண்டு நிறுவனத்தைச் சென்னையில் நடத்தி வருகிறார். அமைப்பின் பெயர் பாலம். அதனால் இவரின் பெயருக்கு முன்னால் பாலம் எனும் சொல்லும் இணைந்து கொண்டது. கொஞ்ச காலத்திற்கு முன்னர், சென்னையில் அன்புப் பாலம் தொண்டு நிறுவனத்தின் வைரவிழா நடைபெற்றது. 

அதில் அதிபர் அப்துல் கலாம் கலந்து கொண்டார். கல்யாணசுந்தரம் போல உதாரண புருஷராகத் திகழுங்கள் என்று பல்கலைக்கழக மாணவர்களிடம் சொல்லும் போது அதிபரின் கண்கள் பனித்தன.

தர்ம சிந்தை. எளிமை. நேர்மை. தன்னலமற்ற சேவை. மாணிக்கமாக வாழ்ந்து மகத்தான சேவை செய்து வரும் பாலம் கல்யாணசுந்தரம் மனுக் குலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஸ்ரீவைகுண்டம் குமரகுரு கல்லூரியில் 30 ஆண்டு காலம், நூலகராக உழைத்துக் கிடைத்த 11 லட்சம் ரூபாய் ஓய்வூதியம். 

அதை அப்படியே ஏழைக் குழந்தைகளுக்குக் சீருடை, நோட்டுப் புத்தகங்கள் வாங்குவதற்காகச் செலவு செய்து இருக்கிறார். அதையும் இரண்டே மாதங்களில் முடித்து இருக்கிறார்.

அமெரிக்காவில் அவரது சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட ரூ.30 கோடியை அனைத்துலகக் குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார். எவ்வளவு என்று பாருங்கள். 30 கோடி.

அவர் போட்டு இருக்கும் ரப்பர் செருப்பு என்ன விலை இருக்கும். ஒரு பிளாட்பாரக் கடையில் ஏழரை ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார். அவர் பயன்படுத்தும் வேட்டி வெறும் இரண்டு ரூபாய், சட்டை வெறும் மூன்று ரூபாய். என்ன உண்மையாகத்தான் சொல்றீங்களா என்று கேட்க வேண்டாம். உண்மைதான்.

ரெண்டு ரூபாய்க்கும், மூணு ரூபாய்க்கும் கிடைக்கும் துணிமணிகளில் கிழிசல்கள் இருக்கும். பொத்தல்கள் இருக்கும். அதைத் தச்சுக்கிட்டா போச்சு என்று சொல்கிறவர் இந்தக் கல்யாணசுந்தரம். இப்படியும் ஒரு மனிதரா.

நமக்குத் தரப்பட்டதைக் கொண்டு நாம் நடத்துவது பிழைப்பு. நாம் தருவதைக் கொண்டு நாம் அமைத்துக் கொள்வதுதான் வாழ்வு. யார் யாரையோ மகான், மகான் என்று அழைக்கிறோம். அதில் ஏழு தலைமுறைகளுக்குச் சொத்துச் சேர்த்த பெரிய மனிதர்களும் வருகிறார்கள். ஆனால், கல்யாணசுந்தரம் போன்றவர்கள் தான், மகான் எனும் சொல்லுக்கான முழு அர்த்தத்துடன் வாழ்கின்றார்கள்.

எழுதி முடிக்கும் போது என் கண்களில் நீர் துளிர்க்கிறது. கட்டுப்படுத்த முடியவில்லை. உங்கள் பிள்ளைகளிடம் இவரைப் பற்றி சொல்லுங்கள். அதுவே அந்தப் பெரியவருக்குச் செய்யும் மரியாதை ஆகும்.

கல்யாணராமன் போன்ற நல்ல மனிதர்கள் செய்து வருவது மகா மகா புண்ணியங்கள். அந்த மாதிரியான மனிதர்களால் தான் மழை பெய்கிறது. பூமியும் செழிக்கிறது.  நாமும் வாழ்கிறோம். அவரை வாழ்த்த வயது இல்லை. வணங்குகிறேன்.