14 மே 2016

பாலி தீவின் இந்திய வரலாறு

பச்சைப் பசேல் வயல் காடுகள். பார்க்கும் பரவெளிக் காட்டில் பசுமைச் செல்வங்கள். பார்ப்பவர்களை எல்லாம் ஈர்த்துக் கொள்ளும் பாமர மக்கள். பார்த்த பின்னும் பார்க்கச் சொல்லும் பாலியப் பெண்கள். நடையழகில் அழகின் அழகுகள். அத்தனையும் சொர்க்க வாசலின் சொப்பனச் செல்வங்கள். ஒய்யார ஒப்பனைகளில் ஓராயிரம் கவிதைகள். வண்ண வண்ணக் கலவைகளின் வானவில் கோலங்கள். 



எப்படி வர்ணிப்பது என்று எனக்கே தெரியவில்லை. அதுதான் உலகின் அதி அற்புதமான அழகிய தீவுகளில் ஒன்றான பாலித் தீவு. உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு இந்தோனேசியா. சுந்தா தீவுகளுக்கு மேற்கிலும் ஜாவா லொம்பொக் தீவுகளுக்கு இடையிலும் அமைந்து உள்ளது. இந்தோனேசியா நாட்டின் 33 மாநிலங்கள் உள்ளன. அதில் பாலித் தீவு ஒரு சின்ன மாநிலம்.

அங்கே 92.29% விழுக்காட்டினர் இந்துக்கள். 42 இலட்சம் பேர். ஒவ்வொரு மார்ச் மாதத்தில் ஒருநாள் மௌன விரதம். அதனை மௌனதினம் (Nyepi Day) எனச் சொல்கிறார்கள். அந்த நாளில் பாலித் தீவு முழுமைக்கும் விடுமுறை. யாரும் பேசிக் கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள். 




பாலித் தீவில் இந்துக்களின் நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த உன்னதமான நிலையில் உள்ளன. அந்த வகையில் இந்தோனேசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கின்றது. சரி.

பாலி தீவு வரலாற்றின் இந்தியப் பின்னணியைக் கொஞ்சம் மீள்பார்வை செய்து பார்க்கலாமே.

இந்தோனேசியாவை இந்தியர்கள் ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டோம். அவர்கள் ஆட்சி செய்த நிலப்பகுதிகளில் பாலித் தீவும் ஒன்று. 




அதற்கு முன் இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியப் பேரரசுகளின் பெயர்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அடிக்கடி அந்தப் பெயர்களைச் சொல்லி வந்தால் அந்தப் பெயர்கள் மனதில் நன்கு பதிந்துவிடும். மறக்க முடியாத மறக்கக் கூடாத பெயர்கள். தலைமுறை தலைமுறையாக நினைத்துப் பார்க்க வேண்டிய பெயர்கள்.


•    கி.பி. 358 இல் பூரணவர்மன்  உருவாக்கிய தர்மநகரப் பேரரசு.
•    கி.பி. 650 இல் ஸ்ரீ ஜெயாசேனா உருவாக்கிய ஸ்ரீ விஜய பேரரசு.
•    கி.பி. 650 இல் கலிங்கர்கள் உருவாக்கிய சைலேந்திரப் பேரரசு.
•    கி.பி. 915 இல் ஸ்ரீ கேசரி வர்மதேவா உருவாக்கிய வர்மதேவா பேரரசு.
•    கி.பி. 732 இல் சஞ்சாயா உருவாக்கிய மத்தாராம் பேரரசு.
•    கி.பி. 1293 இல் ராடன் விஜயா உருவாக்கிய மஜபாகித் பேரரசு.
•    கி.பி. 1222 இல் ராஜாசா உருவாக்கிய சிங்காசாரி பேரரசு.


அதில் ஸ்ரீ கேசரி வர்மதேவா உருவாக்கிய வர்மதேவா பேரரசு என்று ஒரு வாசகம் வருகிறதே அதைக் கவனியுங்கள். அந்த  ஸ்ரீ கேசரி வர்மதேவா (Sri Kesari Warmadewa) தான் பாலியில் ஓர் இந்தியப் பேரரசை உருவாக்கியவர். இவர் தான் வர்மதேவா அரச மரபையும் தோற்றுவித்தவர்.






இந்தோனேசியா பாலியில் சானூர் (Sanur) எனும் ஓர் இடம் இருக்கிறது. அங்கே 1932ஆம் ஆண்டு ஒரு கல் தூணைக் கண்டு எடுத்தார்கள்.  அதன் பெயர் பெலாஞ்சோங் கல் தூண் (Belanjong pillar). சமஸ்கிருத மொழியிலும் பழைய பாலித் தீவு மொழியிலும் எழுதப்பட்டது.

பழைய பாலித் தீவு மொழி பல்லவ எழுத்து வடிவங்களைக் கொண்டது. (சான்று: A Short History of Bali: Indonesia's Hindu Realm - பக்கம்: 46). இந்தத் தூணில் உள்ள எழுத்துக்கள் கி.பி. 914 ஆம் ஆண்டில் வரிக்கப்பட்டவை ஆகும்.

அந்தக் கல் தூண், ஸ்ரீ கேசரி வர்மதேவா மன்னர் தன் ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட படையெடுப்புகளை விவரிக்கின்றது. இப்போது பெலாஞ்சோங் ஆலயத்தில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சந்தன மஞ்சள் பட்டுத் துணிகளைப் போர்த்தி ஒரு தெய்வப் பொருளாக அர்ச்சனை செய்து வருகின்றனர்.

மத்திய ஜாவாவை ஆட்சி செய்த சஞ்சாயா பேரரசிற்கும் (Sanjaya Dynasty) பாலித் தீவின் ஆட்சிக்கும் இடையே நிலவிய தொடர்புகளை அந்தக் கல் தூண் விவரிக்கின்றது. இன்னும் ஒரு விசயம். 




பேரரசு என்பது வேறு. அரச மரபு அல்லது வம்சாவளி என்பது வேறு. ஒரு பேரரசைப் பற்பல வம்சாவளியினர் ஆட்சி செய்து இருக்கலாம். ஆனால் அது ஒரே பேரரசு தான். அந்த வகையில் வர்மதேவா பேரரசைப் பற்பல வம்சாவளியினர் ஆட்சி செய்து இருக்கிறார்கள். சஞ்சாயா பேரரசையும் பற்பல வம்சாவளியினர் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

பாலியில் வர்மதேவா பேரரசை உருவாக்கியவர் ஸ்ரீ கேசரி வர்மதேவா. கல் தூண் குறிப்புகளின் படி ஸ்ரீ கேசரி வர்மதேவா என்பவர் சைலேந்திரா பேரரசைச் சேர்ந்தவர். புத்த மதத்தைச் சார்ந்த மன்னர்.

சைலேந்திரா பேரரசு மத்திய ஜாவாவைச் சேர்ந்த ஒரு பேரரசு. மறந்துவிட வேண்டாம். ஸ்ரீ கேசரி வர்மதேவா புத்த மதத்தைப் பரப்புவதற்காகப் பாலித் தீவிற்குப் படையெடுத்துச் சென்றார். அப்படி படையெடுத்துச் சென்ற போது தொலை தூரத்தில் இருந்த மொலுக்கஸ் தீவுகளையும் கைப்பற்றி இருக்கிறார். ஆக அந்தப் பெலாஞ்சோங் கல் தூண் தான் இப்போதைக்குப் பாலித் தீவின் வரலாற்றைச் சொல்லும் முதல் வரலாற்றுப் படிவம் ஆகும்.




பாலியில் வர்மதேவா வம்சாவளியைச் சேர்ந்த மன்னர்கள்:

•    ஸ்ரீ கேசரி வர்மதேவா (Sri Kesari Warmadewa - கி.பி. 914)
•    ரத்து உக்ரசேனா (Ratu Ugrasena)
•    சந்திரபாயா சிங்க வர்மதேவா (Candra-bhaya-singha-Warmadewa - கி.பி. 962)
•    ஜனசாது வர்மதேவா (Janasadu Warmadewa - கி.பி. 975)
•    உதயனா வர்மதேவா (Udayana Warmadewa)
•    தர்மவங்சா வர்மதேவா (Dharmawangsa Warmadewa)
•    ஆயிர்லங்கா (Airlangga - கி.பி. 991-1049)
•    அனாக் உங்சு (Anak Wungsu - கி.பி. 1049)

பாலியில் ஜெயா வம்சாவளியைச் சேர்ந்த மன்னர்கள்:

•    ஜெயாசக்தி (Jayasakti - கி.பி. 1146-1151)
•    ஜெயா பாங்குஸ் (Jayapangus - கி.பி. 1178-81)

பெலாஞ்சோங் கல் தூண்ணைப் போல மேலும் ஒரு கண்டுபிடிப்பு. கற்களால் கட்டப்பட்ட ஆலயம். பாலித் தீவில் உபுட் எனும் இடத்தில் இந்தக் குகை கண்டுபிடிக்கப் பட்டது. 




அதன் பெயர் யானைக் குகை (Goa Gajah / Elephant Cave). குகைவாயிலில் யானையின் உருவம். புத்த மதமும் இந்து சமயமும் கலந்த சிற்ப வடிவங்களின் அலங்காரங்கள். தீய ஆவியைத் தவிர்ப்பதற்காக அந்தக் கோயில் கட்டப்பட்டது.

1365ஆம் ஆண்டு ஜாவாவில் ஒரு கவிதை எழுதப்பட்டது. கவிதையின் பெயர் தேசவர்ணனா (Desawarnana). அந்தக் கவிதையிலும் இந்தக் குகை ஆலயத்தைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள்.

1950ஆம் ஆண்டில் இந்தக் குகைக் கோயிலை இந்தோனேசிய அரசாங்கம் மறுசீரமைப்புச் செய்தது. அதன் பின்னர் 1995 அக்டோபர் 19ஆம் தேதி அந்தக் கோயிலை யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்தது.

ஜாவாவைச் சேர்ந்த அரச பரம்பரைக்கும் பாலியைச் சேர்ந்த அரச பரம்பரைக்கும் இடையே கலப்புத் திருமணங்கள் நடந்துள்ளன. பாலியின் வர்மதேவா பரம்பரையைச் சேர்ந்த உதயானா வர்மதேவாவிற்கும் ஜாவாவைச் சேர்ந்த தர்மவங்சா பரம்பரையைச் சேர்ந்த ஓர் இளவரசிக்கும் கலப்புத் திருமணம்.

இவர்களுக்குப் பிறந்த மகன் ஆயிர்லங்கா. இந்த ஆயிர்லங்காதான் ஒரு காலத்தில் பாலியையும் ஜாவாவையும் ஒரு சேர ஆட்சி செய்தவர். பாலி வரலாற்றில் உச்சம் கண்டவர்.

இவரின் வழித்தோன்றல் தான் அதாவது ஆயிர்லங்காவின் வழித்தோன்றல் தான் பாலியின் ஜெயா வம்சாவளியினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜெயாசக்தி, ஜெயா பாங்குஸ் எனும் அரசர்கள்.

ஜெயாசக்தி, ஜெயா பாங்குஸ் அரசர்களின் அரசாட்சிக்குப் பின்னர் பாலியில் வர்மதேவா பேரரசு ஒரு முடிவிற்கு வந்தது.

1284ஆம் ஆண்டு ஜாவாவில் இருந்த சிங்காசாரி பேரரசின் கெர்த்தாநகரா (Kertanegara) எனும் அரசர் பாலியின் மீது படையெடுத்தார். வர்மதேவா அரசிற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தார். அப்புறம் சில காலம் கழித்து கெர்த்தாநகராவும் மஜபாகித் பேரரசினால் தோற்கடிக்கப்பட்டார். இப்படித்தான் ஒருவரை ஒருவர் அடித்து நொறுக்கி இந்திய ஆளுமைகளுக்கு அஸ்திவாரமே இல்லாமல் செய்து விட்டார்கள்.

14ஆம் நூற்றாண்டில் சுமத்திராவில் மஜபாகித் பேரரசு தன்னிகரில்லாத அரசாக விளங்கியது. கடைசியில் பாலித் தீவும் மஜபாகித்தின் கரங்களில் வீழ்ந்தது. காஜா மாடா எனும் மஜபாகித் அரசர் பாலியின் மீது படையெடுத்துச் சென்று கெர்த்தாநகராவின் சிங்காசாரி அரசை ஒரு முடிவிற்குக் கொண்டு வந்தார்.

பாலியில் சாம்பராங்கான் எனும் இடத்தில் மஜாபாகித்தின் தலைநகரம் உருவாக்கப்பட்டது. ஆக அதன் பின்னர் ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு மஜபாகித் பேரரசு பாலியை ஆட்சி செய்தது. அதாவது 17ஆம் நூற்றாண்டு வரை மஜபாகித் அரசர்கள் பாலியை ஆட்சி செய்தார்கள். அது ஒரு நீண்ட கால அரசாட்சியாகும். இந்த வரலாற்றுக் கட்டுரையின் தொடர்ச்சி நாளை இடம்பெறும்.

பாலியைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:

பாலியில் இருக்கும் இந்துக் கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடம் இருந்து வந்தது. பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளைப் பற்றிய பாடங்கள் இருக்கின்றன. அகஸ்திய, மார்கண்டேய, பரத்வாஜ ரிஷிகளைப் பற்றி இங்கே இருக்கும் நமக்கே தெரியாத நிலை. ஆனால் இந்த ரிஷிகளைப் பற்றி அங்கே பாலித் தீவில் சின்னக் குழந்தைகள்கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

திரிகால சந்தயம் (Trikala Sandhya) என்பது சூரிய நமஸ்காரம். அங்கே அனைத்துப் பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்று வேளை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள்.அதே போல மூன்று வேளை காயத்ரி மந்திரத்தையும் சொல்ல வேண்டும். பாலி வானொலியில் மூன்று வேளை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தையும் அறிவிக்கிறார்கள்.

பாலி கோயில்களில் பணிபுரியும் இந்து பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது. பாலித் தீவு முழுவதும் அரிசி வயல்கள். வயல்களில் விளைந்த அரிசியை ஸ்ரீ தேவி, பூ தேவி (Shri Devi / Bhu Devi) ஆகிய தெய்வங்களுக்குதான் முதலில் படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களுக்கும் சிறு சிறு கோயில்கள் இருக்கும். இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகுதான் விவசாயிகள் தொழிலுக்குச் செல்கிறார்கள்.

அனைத்து திருவிழாக்களிலும் பாலி நடனம். அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களைக் கதைகளாகச் சொல்வார்கள். அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க  இந்துக் கலாச்சாரம், நடனம், இசை என இந்தத் தீவு உலகச் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவருவதில் வியப்பு எதுவும் இல்லை. ஆக இந்துக்களின் சொர்க்கபூமி பாலி என்று சொல்வதிலும் தவறு இல்லை.

கோலா செலிங்சிங்


கோலா செலிங்சிங் என்ற பகுதியில் இருக்கும் களும்பாங் தீவில் 1930-ஆம் ஆண்டுகளில் சில அகழ்வாராய்ச்சி நடந்து இருப்பது உண்மை. இந்தத் தீவிற்குப் புலாவ் பூலோ என்று இன்னொரு பெயரும் உண்டு.

Ivor Hugh Norman Evans எனும் ஆங்கிலேய வரலாற்று அறிஞர் 1930இல் முதல் ஆய்வு செய்தார். இவர் பேராக் அரும்பொருள் காட்சியகத்தின் இயக்குநராக இருந்தவர்.

அவர் எழுதி இருக்கும் Skeletal remains from the Kuala Selinsing excavations, Perak எனும் நூலில் இருந்து நிறைய தகவல்களைப் பெற முடியும்.

இந்த நூல் இப்போது ஆஸ்திரேலிய தேசிய நூலகத்தில் உள்ளது. இணையம் வழியாக நீங்களும் படித்து தகவல்களைப் பெற முடியும்.

அந்த நூலகத்தில் முதலில் நீங்கள் உறுப்பினராக வேண்டும். அதன் முகவரி: http://www.nla.gov.au/ இந்த நூலகத்தில் இருந்து தான் மலேசிய இந்தியர்களின் வரலாற்று ஆவணங்களைப் பெற்று வருகிறேன்.

கோலா செலிங்சிங் பாசி மணிகள் தமிழ் நாட்டின் Arikamedu எனும் இடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டன். உள்ளூர் மக்களுக்கு விற்கப்பட்டன. Kuala Selinsing (Perak), Sungai Mas (Kedah) and Santubong (Sarawak) ஆகிய இடங்களில் அதே காலக் கட்டத்தில் பாசிமணிகள் உற்பத்தியும் செய்யப்பட்டு உள்ளன. 

 

மணிகளை manik என்று மலாய் மொழியில் சொல்கிறார்கள். manikya எனும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து manik எனும் சொல் உருவானது. கோலா செலிங்சிங்கில் மனித எலும்புக்கூடுகள் கிடைத்தன. உண்மை.

அவை 7ஆம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த இந்தியர்களின் எலும்புக் கூடுகள். மலாய்க்காரர்களின் எலும்புக்கூடுகள் என்று சொல்கிறார்கள். மேலிடங்களுக்குத் தெரியும். ஏனோ தெரியவில்லை. அந்த ரகசியங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளன.

பூஜாங் நாகரிகத்தை அவர்களின் நாகரிகம் என்று சொல்லவில்லையா. அந்த மாதிரிதான் கோலா செலிங்சிங் 7ஆம் நூற்றாண்டு எலும்புக்கூடுகளின் ரகசியங்களும். கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். ரகசியம் வெளியாகும்.

கோலா செலிங்சிங் ரகசியங்களை அவிழ்க்க வேண்டும். மலேசிய இந்தியர்களுக்கு மட்டும் அல்ல உலக இந்தியர்களுக்கே தெரிவிக்க வேண்டும். அது நம்முடைய பொறுப்பு அல்ல கடமை.

13 மே 2016

பிரம்பனான் ஆலயம்

பிரம்பனான் ஆலயம் உலகத்திலேயே மிக அழகான ஆலயம். இந்து ஆலயங்களில் தலையாய ஆலயம். சைலேந்திரா வம்சாவழியினர் ((Sailendra Dynasty)) உருவாக்கிய பொராபுடுர் (Borobudur) புத்த ஆலயத்திற்கு நிகரான இந்து ஆலயம். இந்துக் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு, சிவா ஆகிய மூவரின் தோற்றத்திற்குத் தோரணம் கட்டிய அழகு ஆலயம்.


உலகப் பாரம்பரியச் சின்னமாக ஒரு நளின ஆலயம். 1250 ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 850 ஆம் ஆண்டு கட்டப் பட்ட ஆலயம். அதுதான் பிரம்பனான் (Prambanan) ஆலயம். ஒவ்வோர் இந்துவும் பார்க்க வேண்டிய ஆலயம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே இந்தோனேசியாவில் அழகு அழகான ஆலயங்களைக் கட்டி இந்தியர்கள் அழகு பார்த்து இருக்கிறார்கள். அத்தனையும் அற்புதமான கலை நுணுக்கங்கள்.

அதிசயமான சிற்ப ஆராதனைகள். அறிவார்ந்த அறிவியல் நுட்பங்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் ஆடம்பரம் இல்லாமல் அழகு பேசும் அதி அற்புதங்கள். சொல்லும் போது மனசு நடுங்குகிறது.




9-ஆம் நூற்றாண்டில் ஜாவாத் தீவில் ஸ்ரீ விஜய பேரரசின் (Srivijaya 650 – 1377) வழித்தோன்றல்கள் சைலேந்திரா அரசு; மத்தாராம் அரசு.
சைலேந்திரா அரசு என்பது ஒரு புத்த அரசு. அந்த அரசு போராபுடோர் (Borobudur) புத்த ஆலயங்களைக் கட்டி அழகு பார்த்தது. 

மத்தாராம் (Mataram) அரசு ஓர் இந்து அரசு. பிராம்பனான் (Prambanan) திருமூர்த்தி கோயிலைக் கட்டி அழகு பார்த்தது.

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா. உலகத்திலேயே மிக அழகான இந்துக் கோயில் எது தெரியுமா. அதுதான் பிராம்பனான் திருமூர்த்தி கோயில். நான் சொல்லவில்லை. 2008 ஆம் ஆண்டில் உலகளாவிய இந்து ஆலயக் கணக்கெடுப்பு நடந்தது. அதில் அந்த உண்மையைச் சொன்னார்கள்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் ஒன்றிணைத்து திருமூர்த்திகள் என்கிறோம். அந்த மூவரின் தத்துவங்களுக்கும் சான்று கூறும் இந்துத் தத்துவமாகப் பிராம்பனான் ஆலயம் அமைகின்றது. காலா காலத்திற்கும் அழகு பேசும் அழகு ஓவியம்.

இந்த ஆலயத்தை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதே இந்தக் கோயிலின் 30 சதுர கி.மீ. அளவிற்கு உள்ள நிலப்பகுதியை இந்தோனேசியாவின் பாரம்பரியக் காப்பகமாக இந்தோனேசிய அரசாங்கமும் அறிவித்து இருக்கிறது.

ஆலயத்தின் சுற்றுப் புறங்களில் ஒரு செடியைக் கூட இடமாற்றம் செய்யக் கூடாது என்று தடாலடியான ஒரு சட்டத்தையும் போட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லை. ஆலயத்தின் குளங்களில் மீன் பிடிக்கக் கூடாது. படகு விடக்கூடாது. குளிக்கக் கூடாது என்று அதிரடியான சட்டங்களையும் இயற்றி ஆலயத்திற்குப் புனிதம் சேர்த்து வருகிறது. கை கூப்புவோம்.

இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் உள்ள நகரங்களில் யோக்ஜகார்த்தா மிக முக்கியமான நகரம். அந்த நகரத்தில் இருந்து 17 கி,மீ. தொலைவில் தான் இந்த ஆலயம் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றது. இரவு நேர ஒளிவிளக்குகளில் பார்ப்பவர்களின் இதயங்கள் சலனமாகி விடுகின்றன. அப்பேர்ப்பட்ட கொள்ளை அழகு.

உலகின் மூலை முடுக்குகளில் இருந்து எல்லாம் சுற்றுப்பயணிகள் இந்த ஆலயத்திற்கு வருகிறார்கள்…. பார்க்கிறார்கள்…. ரசிக்கிறார்கள்…. வாயாரப் புகழ்கிறார்கள். மனுக்குல மாண்புகளை மனதாரப் போற்றுகிறார்கள். மனதைப் பறிகொடுத்துப் போகிறார்கள்.

ஆனால் அடிவாசலில் இருக்கும் மலேசிய இந்தியர்களில் பலருக்குத் தான் அந்த ஆலயத்தைப் பார்க்க நேரம் இல்லை. புளிச் சோறு கட்டிக் கொண்டு புரியாத இடங்களுக்கும் தெரியாத மடங்களுக்கும் படை எடுக்கிறார்கள். அவர்களுக்காக அனுதாபப் படுகிறேன்.

இந்த ஆலயத்தின் நிர்மாணப் பணிகள் கி.பி. 850ஆம் ஆண்டில் தொடங்கின. கி.பி. 856ஆம் ஆண்டில் முடிவுற்றது. ஆறு ஆண்டுகள். சஞ்சாயா வம்சாவளியைச் சேர்ந்த ராக்காய் பாக்கத்தான் (Rakai Pikatan) எனும் அரசர் தான் கட்டுமானப் பணிகளை முதலில் தொடக்கினார். இருந்தாலும் அவருக்குப் பின்னர் அரசர்களான லோகபாலா (Lokapala), மகா சம்பு (Balitung Maha Sambu) எனும் அரசர்கள் தான் பெருவாரியான கட்டு வேலைகளைச் செய்து முடித்தனர்.

அண்மையில் அங்கே சிவர்கா (Shivagrha Inscription) எனும் கல்வெட்டு கிடைத்தது. கி.பி. 856ஆம் ஆண்டுக் கல்வெட்டு. அந்தக் கல்வெட்டில் அந்த ஆலயம் இந்துக் கடவுள் சிவனுக்காகக் கட்டப் பட்டது என்று எழுதப்பட்டு இருந்தது.

உண்மையிலேயே அந்த ஆலயத்தின் அசல் பெயர் சிவர்கா ஆலயம். அல்லது சிவாலயம். பிரம்பனான் எனும் இடத்தில் இருப்பதால், காலப் போக்கில் அதற்குப் பிரம்பனான் ஆலயம் எனும் பெயரும் வந்து சேர்ந்தது.

முன்பு காலத்தில் மத்தாரம் எனும் அரசப் பரம்பரை ஜாவாவை ஆட்சி செய்து வந்தது. அந்தப் பரம்பரையில் தாக்சா (Daksa), துலோடொங் (Tulodong) எனும் அரசர்கள் இருந்தார்கள். இவர்கள் தான் பிரம்பனான் கோயிலைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து இருக்கிறார்கள். அது மட்டும் இல்லை. பிரதானக் கோயிலைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான சிறு கோயில்களையும் இவர்கள் தான் கட்டினார்கள்.

பிரம்பனான் ஆலயம் தான் மத்தாரம் பேரரசின் அரச ஆலயமாகவும் விளங்கி இருக்கிறது. அரச சமய நிகழ்ச்சிகளும் அரச நேர்த்திக் கடன்களும் அங்கே நடைபெற்று உள்ளன. ஒரு கட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆரிய அர்ச்சகர்கள் கோயில் வளாகத்தில் தங்கிச் சேவைகள் செய்து இருக்கின்றனர்.

கி.பி. 930ஆம் ஆண்டு வாக்கில் இசாயானா அரசப் பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீ இசாயானா விக்ரமாதமதுங்க தேவா (Sri Isyana Vikramadhammatunggadeva) என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவர்தான் இசாயானா அரசப் பரம்பரையைத் தோற்றுவித்தவர். அவருடைய ஆட்சிக் காலத்தில் மெராப்பி எரிமலை வெடித்தது.

மெராப்பி எரிமலை மத்திய ஜாவாவில் பிரம்பனான் பகுதிக்கு வடக்கே உள்ளது. எரிமலை வெடிப்பினால் சேதங்கள் ஏற்பட்டன. அதனால் இசாயானா அரசு கிழக்கு ஜாவாவிற்கு இடம் மாறியது.

அதன் பின்னர் பிரம்பனான் ஆலயச் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்தது. முறையான பராமரிப்பு இல்லை. ஓர் அபலையான நிலை. அப்படியே கைவிடப்பட்டது. அப்படியே அந்த ஆலயம் சிதைவும் அடைந்தது.

பிரம்பனான் ஆலயத்தைப் பற்றிய ரகசியங்கள் வெளியுலகத்திற்குத் தெரிவதற்கு முன்னால் அங்கு வாழ்ந்த ஜாவா மக்களுக்கு ஆலயத்தின் இடிபாட்டுச் சிதையல்களைப் பற்றி தெரிந்து வைத்து இருந்தார்கள். ஆனால் யார் கட்டியது, எப்போது கட்டியது, எந்த அரசப் பரம்பரையினர் ஆட்சி செய்தனர் என்பது எல்லாம் அவர்களுக்குத் தெரியாது. தெரிந்து இருக்க வாய்ப்பும் இல்லை.

இருந்தாலும் பற்பல பாட்டிக் கதைகளைச் சொல்லி வந்தார்கள். அரக்கர்களும் பூதங்களும் சேர்ந்து கட்டியதாகவும் கதைகள். அந்தக் கதைகளில் ஒரு பிரபலமான கதையும் உண்டு. அதன் பெயர் லோரோ ஜொங்கராங் (Loro Jonggrang) கதை.

பல ஆயிரம் அரக்கர்கள் ஒன்றுகூடி ஆலயத்தைக் கட்டிய கதை. அந்த அரக்கர்களுக்கு பாண்டுங் போண்டோவோசோ எனும் அரக்கர் தலைமை அரக்கராக இருந்தாராம். அவருடைய மூர்க்கத்தனத்தினால் மற்ற அரக்கர்கள் பயந்து போது போய் அடிமைகளைப் போல வேலை செய்தார்களாம்.

இன்னும் இந்தக் கதை அங்கே ஒரு மெகா சீரியல் மாதிரி ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. புதிய தலைமுறையினரும் கேட்டுத் தலைகளை ஆட்டிக் கொண்டு தான் இருக்கின்றனர்.

சிங்கப்பூரை ராபிள்ஸ் ஆட்சி செய்த காலத்தில் ஜாவாவும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் கொஞ்ச காலம் இருந்தது. 1811ஆம் ஆண்டு. அப்போது ராபிள்ஸிடம் காலின் மெக்கன்சி (Colin Mackenzie) எனும் ஓர் ஆங்கிலேயர் நில ஆய்வாளராகப் பணிபுரிந்தார்.

பிரம்பனான் பகுதியில் நில ஆய்வு செய்து கொண்டு இருக்கும் போது எதேச்சையாக அந்தக் கோயிலில் தடுக்கி விழுந்தார். தடுக்கி விழவில்லை. அப்பேர்ப்பட்ட கோயிலில் எப்படிப் போய் தடுக்கி விழ முடியும். அது என்ன சின்ன பிள்ளைகள் விளையாடும் மரப்பாச்சி பொம்மையா. கண்டுபிடித்தார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படியும் சொல்லலாம். அதாவது அவர் தான் பார்க்க வேண்டும். வெளியே போய் நாலு பேரிடம் சொல்ல வேண்டும் எனும் ஒரு கொடுப்பனை இருக்கிறதே. அதற்குப் பெயர் தான் அதிர்ஷ்டம். கண்டுபிடிப்பு எனும் பெயரில் லாட்டரி அடித்து இருக்கிறது. அங்கார் வாட் அதிசயச் சின்னத்தையும் அப்படித் தானே கண்டுபிடித்தார்கள். சரி. இந்தக் கதையை நாளைய கட்டுரையில் தொடர்ந்து பார்க்கலாமே. அதற்கு முன்னர் மனசிற்குள் இருக்கிற ஒரு சின்ன ஆதங்கம். அதையும் சொல்லி விடுகிறேன்.

இந்தியர்கள் அதிகமாக வாழாத நாடுகளில் இந்தியப் பாரம்பரியங்களை எப்படி எல்லாம் ஆராதனை செய்கிறார்கள் பாருங்கள். இங்கே அப்படியா நடக்கிறது. இருக்கிற இந்தியப் பாரம்பரியங்களை அழித்து ஒழிப்பதில் தான் தீவிரம் காட்டுகிறார்கள். அழித்து ஒழித்துவிட்டு முகம் சுழிப்பது இல்லை. மாறாக முப்பத்திரண்டும் தெரியாத மௌனப் புன்னகை. என்னே புனிதப் புன்னகை.

தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த உலகம் எங்கோ பயணித்துக் கொண்டு இருக்கிறது. இணையம் இண்டர்நெட் என்று உலக மக்கள் இதிகாச இத்யாதி இத்யாதிகளைத் தாண்டிப் போய்க் கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் ஒரு சில மரமண்டைகளுக்கு அவ்வப்போது மண்டைக் கிறுக்குப் பிடித்து விடுகிறது.

லெம்பா பூஜாங் தங்களின் பாட்டன் சொத்து என்றும் அங்கோர் வாட் தங்களின் பாட்டிச் சொத்து என்றும் வெட்கம் இல்லாமல் கப்சா அடிக்கிறார்கள். அதைப் பார்த்து உலகமே வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறது.

இந்த மாதிரியான ஜென்மங்கள் கத்துகிற வரை கத்தட்டும். விடுங்கள். அவர்களுக்குத் தானே வாய் வலிக்கும். நமக்கு இல்லையே. இதோடு போதும். விட்டு விடுகிறேன். இல்லை என்றால் சட்டம் பாயலாம்.



இன்றைய நாளில் - மே 13

  • 1787 - ஆஸ்திரேலியாவில் குடியேற்றம். 11 கப்பல்களில் 772 கைதிகள். 
  • 1888 - பிரேசில் அடிமை முறையை அழித்தது
  • 1954 - சிங்கப்பூரில் சீனப் பள்ளி மாணவர்களின் ஆர்ப்பாட்டம்
  • 1967 - சாகிர் உசேன் இந்தியாவின் முஸ்லிம் குடியரசுத் தலைவர் 
  • 1969 - மலேசியாவில் கலவரம்.
  • 1989 - சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் போராட்டம்
  • 1998 - ஜகார்த்தாவில் சீனர்களுக்கு எதிராக இனக்கலவரம்.
  • 1996 - வங்காள தேசத்தில் கடும் புயல். 600 பேர் வரையில் இறப்பு.
  • 1998 - இந்தியா இரு அணுகுண்டுச் சோதனைகளைச் செய்தது.
  • 2006 - மு. கருணாநிதி - 5ஆவது முறையாகத் தமிழக முதல்வர் பதவி
  • 2006 - யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி படுகொலை

பிறப்புகள்:

  • 1905 - பக்ருதின் அலி அகமது, இந்தியக் குடியரசுத் தலைவர், (இறப்பு. 1977)
  • 1918 - பாலசரஸ்வதி, பரத நாட்டிய மேதை (இறப்பு. 1984)
  • 1956 - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்திய குரு

இறப்புகள்

  • 1898 - பி. ஆர். ராஜமய்யர், தமிழ் எழுத்தாளர் (பி. 1872)
  • 1978 - வி. தெட்சணாமூர்த்தி, தவில் மேதை (பி. 1933)
  • 2000 - தாராபாரதி தமிழ்க்கவிஞர் (பி.1947)
  • 2001 - ஆர். கே. நாராயண், இந்திய நாவலாசிரியர் (பி. 1906)

11 மே 2016

ஸ்ரீ விஜய பேரரசு


இந்தோனேசியக் கல்வியாளர்களிடையே ஒரு விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அதாவது இந்தோனேசியாவிற்கு ஒரு தேசிய அடையாளம் வேண்டும். அது ஒரு வரலாற்று அடையாளமாக இருக்க வேண்டும் எனும் விவாதம்.


அப்படி என்றால் ஸ்ரீ விஜய பேரரசின் அடையாளத்தை வைக்கலாமா அல்லது மஜாபாகித் பேரரசின் அடையாளத்தை வைக்கலாமா… எந்த அடையாளம் இந்தோனேசியாவிற்குச் சரியாகப் பொருந்தி வரும் என்று இன்றைக்கு வரைக்கும் இந்தோனேசியக் கல்வியாளர்கள் விவாதம் செய்து வருகிறார்கள்.

ஸ்ரீ விஜயா; மஜாபாகித் இந்த இரண்டுமே இந்தோனேசியாவின் அடையாளமாக இருக்கட்டும் என்று இந்தோனேசியத் தேசியவாதிகள் பலர் முன்மொழிகின்றனர். ஸ்ரீ விஜயா - மஜாபாகித் எனும் அந்த இரு பெயர்களுமே தங்களின் பழைமையான மகத்துவத்திற்கும் பழமையான மேன்மைக்கும் பெருமை சேர்ப்பதாகப் பெரும ுகின்றர்.
           

இருந்தாலும் பொதுவாக ஸ்ரீ விஜயா எனும் பெயரே தேசியப் பெருமையின் அடையாளமாகக் கருதப் படுகிறது. பலேம்பாங் வாழ் மக்கள் ஸ்ரீ விஜயா எனும் பெயர் தான் தேசிய அடையாளம் என்று போராடி வருகின்றனர்.

அந்தத் தாக்கத்தில் கெண்டிங் ஸ்ரீ விஜயா (Gending Sriwijaya) எனும் பாடலை உருவாக்கி அதனை இந்தோனேசியப் பாரம்பரிய நடனங்களுக்குப் பயன்படுத்தியும் வருகின்றனர்.

பலேம்பாங்கில் ஸ்ரீ விஜயா விளையாட்டரங்கம்

இந்தோனேசியாவில் பல நகரங்களில் பல சாலைகளுக்கு ஸ்ரீ விஜயா சாலை என்று பெயர் வைத்து பெருமைப் படுகிறார்கள். 1960இல் பலேம்பாங்கில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதற்கு ஸ்ரீ விஜயா பல்கலைக்கழகம் (Srivijaya University) என்று பெயர் வைக்கப்பட்டது.


இந்தோனேசிய இராணுவத்தின் கமாண்டோ பிரிவிற்கு கோடாம் ஸ்ரீ விஜயா (Kodam Sriwijaya) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். தாவரங்களுக்கு உரம் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் பெயர் பூப்புக் ஸ்ரீ விஜயா (PT Pupuk Sriwijaya). பலேம்பாங் நாளிதழுக்கு ஸ்ரீ விஜயா போஸ்ட் (Sriwijaya Post) என்று பெயர். 

ஸ்ரீ விஜய பல்கலைக்கழகம் - பலேம்பாங்

ஓர் இந்தோனேசிய விமான நிறுவனம். அதற்குப் பெயர் ஸ்ரீ விஜயா ஏர் (Sriwijaya Air). ஒரு விளையாட்டரங்கத்திற்கு கெலோரா ஸ்ரீ விஜயா (Gelora Sriwijaya Stadium) என்று பெயர். பலேம்பாங்கில் ஒரு காற்பந்து குழுவின் பெயர் ஸ்ரீ விஜயா (Sriwijaya F.C.). 

2011 நவம்பர் 11 ஆம் தேதி தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பலேம்பாங்கில் உள்ள கெலோரா ஸ்ரீ விஜயா அரங்கில் நடைபெற்றது. அந்தத் தொடக்க விழாவில் மாபெரும் நடன நிகழ்ச்சி. அந்த நடனத்தின் பெயர் என்ன தெரியுமா. தங்கத் தீபகற்பமாக ஸ்ரீ விஜயா (Srivijaya the Golden Peninsula). 
 

அந்தப் பாரம்பரிய நடனத்தில் அந்தக் காலத்துக் கப்பல் ஒன்றைத் தவழச் செய்து ஸ்ரீ விஜயா பேரரசிற்கே பெருமை செய்தார்கள். ஸ்ரீ விஜயா என்கிற பேரரசு வரலாற்றின் பெருமைகளை அப்படி எல்லாம் அழகு செய்தார்கள். சொல்லும் போது உடல் புல்லரிக்கிறது. 

Srivijaya - The Golden Peninsula
அந்த நடனம் யூடியூப்பில் பதிவேற்றம் செய்து இருக்கிறார்கள். நீங்களும் பார்த்து பெருமை படுங்கள். அதன் இணைய முகவரி:


ஆக இப்படி பல்வேறு வகையில் ஸ்ரீ விஜயா எனும் பெயருக்குப் பெருமை சேர்த்து பெருமை படுகிறார்கள். யார் பெருமை படுகிறார்கள். சொல்லுங்கள். பக்கத்து நாட்டில் இருக்கும் இந்தோனேசியர்கள்.

அங்கே வரலாற்றை வரலாறாக மதித்து கை எடுத்துக் கும்பிடுகிறார்கள். ஆனால் இங்கே அப்படியா நடக்கிறது. இந்தியர்கள் சார்ந்த அடையாளங்களை அடித்துத் துவைத்து மிதித்து அரிச்சுவடி இல்லாமல் சிதைத்து வருகிறார்கள். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் எதைக் கடிக்கக் கூடாதோ அதையும் கடித்து வருகிறார்கள்.

மனிதர்களில் முன்பு பரமேஸ்வரா காணாமல் போனார். முன்ஷி அப்துல்லா காணாமல் போனார். ஹங்துவா காணாமல் போனார். கோத்தா கெலாங்கி காணாமல் போனது. இப்போது பூஜாங் சமவெளியும் காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது.

எது எப்படியோ பத்துமலையை எங்கள் தாத்தா பாட்டிகள் தான் உருவாக்கினார்கள் என்று யாரும் சொல்லாமல் இருந்தால் சரி. அதுவே நாம் செய்த பெரும் பாக்கியம் இல்லை இல்லை… பெரும் புண்ணியம்.

இந்தோனேசியாவில் பற்பல காலக் கட்டங்களில் பற்பல பேரரசுகள் ஆட்சிகள் செய்துள்ளன.

பெரும்பாலானவை இந்தியப் பேரரசுகள். இந்தோனேசிய வரலாற்றின் தொடக்கக் காலங்களில் இந்தியப் பேரரசுகள் தான் மிகையான தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளன.

ஆங்காங்கே சின்னச் சின்ன அரசுகளும் இருந்தன. அவை உள்ளூர் மக்களால் உருவாக்கப் பட்டவை. பின்னர் வந்த பெரும் அரசுகளை அந்தச் சின்ன அரசுகளால் எதிர்த்து நிற்க முடியவில்லை. கால ஓட்டத்தில் கரைந்து போயின.

இந்தப் பெரும் பேரரசுகள் எப்படி உருவாகின என்பதைப் பற்றி இன்னும் ஆய்வுகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். துள்ளியமான விவரங்கள் சரிவரக் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

இதுவரையிலும் கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகள், சிற்பச் சிலைகள், சமயச் சின்னங்கள், அகழாய்வு மண்பாண்டங்கள், உலோகப் பொருட்கள் போன்றவை அவர்களின் ஆய்வுப் பணிகளுக்குப் பெரிதும் உதவி வருகின்றன.

  • கி.பி. 358 இல் பூரணவர்மன்  உருவாக்கிய தர்மநகரப் பேரரசு.
  • கி.பி. 650 இல் ஸ்ரீ ஜெயாசேனா உருவாக்கிய ஸ்ரீ விஜய பேரரசு.
  • கி.பி. 650 இல் கலிங்கர்கள் உருவாக்கிய சைலேந்திரப் பேரரசு.
  • கி.பி. 915 இல் ஸ்ரீ கேசரி வர்மதேவா உருவாக்கிய வர்மதேவா பேரரசு.
  • கி.பி. 732 இல் சஞ்சாயா உருவாக்கிய மத்தாராம் பேரரசு.
  • கி.பி. 1293 இல் ராடன் விஜயா உருவாக்கிய மஜபாகித் பேரரசு.
  • கி.பி. 1222 இல் ராஜாசா உருவாக்கிய சிங்காசாரி பேரரசு.
இந்தோனேசியாவைப் பல இந்தியப் பேரரசுகளும் சிற்றரசுகளும் ஆட்சி செய்து உள்ளன. முதலில் ஒரு பட்டியல் வருகிறது. பாருங்கள். அந்தப் பேரரசுகளைத் தோற்றுவித்தவர்கள்; எந்த ஆண்டில் எங்கே  தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்கள்:

1. ஜலநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600

5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600

6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377

7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669–1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669–1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752–1006

11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914–1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006–1045

13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045–1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya) கி.பி. 1183–1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222–

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500

இவை மிக முக்கியமான பேரரசுகள். இவற்றுள் பெரும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது ஸ்ரீ விஜய பேரரசாகும். ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக தென்கிழக்காசியவையே ஆட்சி செய்த மாபெரும் ஓர் அரசு. சுமத்திராவை மையமாகக் கொண்டு செயல் பட்டது. 

13ஆம் நூற்றாண்டில் அந்தப் பேரரசு உலக வரலாற்றில் இருந்து திடீரென்று மறைந்து போனது. சிங்காசாரி பேரரசு; மஜாபாகித் பேரரசு இந்த இரு பேரரசுகளின் விரிவாக்கத்தினால் அந்த மறைவு ஏற்பட்டு இருக்கலாம்.

அல்லது ஓர் இயற்கைப் பேரிடரினால் அழிந்து போய் இருக்கலாம். இயற்கைப் பேரிடர் என்று சொல்லும் போது சுனாமி அல்லது நிலநடுக்கம் போன்றவற்றை நினைவு படுத்துகிறேன்.

அதன் பின்னர் ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி யாருக்குமே தெரியாமல் இருந்தது. அந்தப் பேரரசைப் பற்றி உலக வரலாறு சுத்தமாக மறந்துவிட்டது. ஏன் இந்தோனேசியாவில் வாழ்ந்த இந்தோனேசிய மக்களுக்கே தெரியாமல் தான் இருந்தது.  

1918ஆம் ஆண்டு ஜார்ஜ் கோடெஸ் (George Coedès) எனும் பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் இந்தோனேசியாவிற்கு வந்தார். ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி ஆய்வுகள் செய்தார். இரு ஆய்வு நூல்களை எழுதினார்.

ஒரு நூலின் பெயர் ’தென்கிழக்காசியாவில் இந்திய மயமான நாடுகள்’ (The Indianized States of Southeast Asia). இந்த நூல் 1948 இல்(Les etats hindouises d Indochine et d Indonesie) என்று பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டது.

அடுத்து ’தென்கிழக்காசிய உருவாக்கம்’ (The Making of South East Asia) எனும் நூலை எழுதினார். இந்த நூல் Le Royaume de Crivijaya எனும் பெயரில் பிரான்ஸ் நாட்டில் வெளியானது. இரு நூல்களுமே 1910, 1918 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டவை. பின்னர் இந்தோனேசியாவின் டச்சு மொழி, இந்தோனேசிய மொழி நாளிதழ்களில் பிரசுரிக்கப் பட்டன.

அதன் பின்னர் தான் ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றிய ரகசியங்கள் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தன. இப்படி ஒரு மாபெரும் அரசு இந்தோனேசியாவில் இருந்ததாகச் சொல்லும் போது உலகமே வியந்து போனது. தென்கிழக்காசியாவைத் திரும்பிப் பார்த்தது.

முதலில் அதிர்ச்சி அடைந்தது வேறு யாரும் இல்லை. சுமத்திரா மக்கள் தான். ஏன் என்றால் அவர்கள் அங்கேதானே இருக்கிறார்கள். ஸ்ரீ விஜய பேரரசர்கள் நடமாடிய மண்ணில் தானே இவர்களும் இவ்வளவு காலமும் நடமாடிக் கொண்டு இருந்து இருக்கிறார்கள். ஆச்சரியப் படாமல் இருக்க முடியுமா?

ஸ்ரீ விஜய பேரரசின் குறிப்புகள் கற்களில் பொறிக்கப்பட்டு இருந்தன. அதாவது கல்வெட்டுகள். சமஸ்கிருத மொழியிலும் பழமையான மலாய் மொழியிலும் எழுதப்பட்டு இருந்தன. இப்போது உள்ள மலாய் மொழியில் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பயன்படுத்தப்பட்ட பழைய மலாய் மொழியில். இதை Old Malay என்று சொல்வார்கள்.

பழைய மலாய் மொழி பல்லவர்களின் எழுத்து வடிவத்தையும், நாகரி எழுத்து வடிவத்தையும், இந்தோ சுமத்திரா எழுத்து வடிவத்தையும் கொண்டு இயங்கியது. கி.பி.4 ஆம் நூற்றாண்டில் இருந்து  கி.பி.14 ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது. சான்று: http://glottolog.org/resource/languoid/id/oldm1243

அதன் பின்னர் மரபு சார்ந்த மலாய் மொழி (Classical Malay) வந்தது. அடுத்து 19ஆம் நூற்றாண்டில் முன்நவீன மலாய் மொழி (Pre-Modern Malay) வந்தது. 20ஆம் நூற்றாண்டில் நவீன மலாய் மொழி (Modern Malay) புழக்கத்திற்கு வந்தது. 1888இல் ஜொகூர் மாநிலத்தில் இயங்கிய Pakatan Bahasa Melayu dan Persuratan Buku Diraja Johor எனும் மலாய் இயக்கம் தான் இப்போதைய நவீன மலாய் மொழிக்கு அடித்தளம் அமைத்தது.

சரி. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் மலாய் மொழி என்பது வேறு. பழைய மலாய் மொழி என்பது வேறு. குழப்பிக் கொள்ள வேண்டாம். பழைய மலாய் மொழியின் பயன்பாடு 14 ஆம் நூற்றாண்டு வரை தான் இருந்தது.

ஆக ஸ்ரீ விஜய பேரரசு தொடர்பான கல்வெட்டுகளில் சமஸ்கிருத மொழி எழுத்துகளும்  பழைய மலாய் மொழி எழுத்துகளும் இந்தோ சுமத்திரா மொழி எழுத்துகளும் தான் இருந்தன என்பதை நினைவு படுத்துகிறேன்.

அந்தக் கல்வெட்டுகள் சுமத்திராவின் கெடுக்கான் புக்கிட், தாலாங் டூவா, தெலாகா பத்து, கோத்தா காப்பூர் எனும் இடங்களில் அகழ்வாய்வுகள் மூலமாகக் கிடைக்கப் பெற்றன.

சுமத்திராவில் ஸ்ரீ விஜய பேரரசு பலம் வாய்ந்த அரசாகக் கோலோச்சிய போது ஜாவாவில் மஜாபாகித் அரசும் உச்சத்தில் இருந்தது. இரண்டுமே சரி சமமான திறனில் நிர்வாகம் செய்து வந்தன. 


1984ஆம் ஆண்டு விமானங்கள் மூலமாக பலேம்பாங் பகுதியைப் படம் பிடித்தார்கள். மனிதர்கள் உருவாக்கிய கால்வாய்கள், அகழிகள், குளங்கள், செயற்கைத் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தவிர கை வேலைப் பாட்டுப் பொருட்கள், புத்தச் சிலைகள், உருண்மணிக் காப்புகள், மண்பாண்டங்கள், சீனாவின் பீங்கான் சாமான்களும் கிடைத்தன. (சான்று: Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. பக்கம்: 171.)

ஸ்ரீ விஜய நகரம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தன. நிறைய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் கிடைத்தன. இப்போது அதே அந்த இடத்தில் ஸ்ரீ விஜய தொல்லியல் பூங்காவை (Sriwijaya Kingdom Archaeological Park) உருவாக்கி அழகு பார்க்கிறார்கள்.

ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றிய உருவகச் சான்றுகள் மிகக் குறைவு. உருவகச் சான்றுகள் என்றால் கோயில், குளம், தளவாடப் பொருட்கள், சின்னங்கள், கட்டடங்கள். 

இருந்தாலும் கெடுக்கான் புக்கிட் எனும் இடத்தில் ஸ்ரீ ஜெயாசேனாவைப் பற்றிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. கி.பி. 683 ஆம் ஆண்டு கிடைத்த கல்வெட்டுகள். அவற்றில் ஸ்ரீ விஜய பேரரசை உருவாக்கியவர் ஸ்ரீ ஜெயாசேனா என்று பொறிக்கப்பட்டு உள்ளது.

’ஸ்ரீ ஜெயாசேனா எனும் மகா அரசர் மினாங்கா தாம்வான் எனும் இடத்தில் இருந்து பலேம்பாங்கிற்குப் புனிதச் சித்த யாத்திரை மேற்கொண்டார். அந்தப் பயணத்தில் 20,000 போர் வீரர்கள் கலந்து கொண்டனர்’ எனும் வாசகம் இருக்கிறது.

இப்போதைய சுமத்திரா பலேம்பாங்கில் தான் ஸ்ரீ விஜய பேரரசு முதன்முதலாகக் கால் பதித்தது. அது வரலாற்றுப் பூர்வமான உண்மை. என்றாலும் ஸ்ரீ ஜெயாசேனா அரசர் மினாங்கா தாம்வான் எனும் இடத்தில் இருந்து வந்தார் என்று கல்வெட்டுகள் சொல்கின்றன.

ஆக இந்த மினாங்கா தாம்வான் எனும் இடம் இப்போது எங்கே இருக்கிறது? இது தான் இப்போதைக்கு வரலாற்று அறிஞர்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தும் சிதம்பர ரகசியம். இன்னும் ஒரு கணிப்பு இருக்கிறது. அதாவது ஸ்ரீ ஜெயாசேனா அரசர் தென் தாய்லாந்தில் உள்ள சுராட் தானி எனும் இடத்தில் இருந்து வந்து இருக்கலாம் எனும் கணிப்பு.

ஸ்ரீ ஜெயாசேனா என்பவர் தான் ஸ்ரீ விஜய பேரரசை உருவாக்கியவர். சரி. சுமத்திரா பலேம்பாங்கில் முதன்முதலாகக் கால் பதித்தார். சரி. தன் நிர்வாகத் தலைமையகத்தை அங்கே நிலைக்கச் செய்தார். சரி.

அவர் மினாங்கா தாம்வான் எனும் இடத்தில் இருந்து வந்தார் என்றால் அந்த மினாங்கா தாம்வான் இப்போது எங்கே இருக்கிறது. மினாங்கா தாம்வான் எனும் இடம் தாய்லாந்தில் இருந்ததா. இல்லை மலாயாவில் இருந்ததா. இல்லை இந்தியாவில் இருந்ததா. இல்லை இலங்கையில் இருந்ததா. தெரியவில்லை.

ஆனால் ஸ்ரீ ஜெயாசேனா இந்து மதத்தைப் பின்பற்றி இருக்கிறார். இந்து மதத்தைப் பரப்பி இருக்கிறார். இந்து மதத்திற்கு ஆதரவு வழங்கி இருக்கிறார். இந்துவாகவே இறந்தும் போய் இருக்கிறார். (சான்று: Coedes, George (1968). Walter F. Vella. The Indianized States of Southeast Asia.)

அடுத்து ஒரு தாழ்மையான வேண்டுகோள். இது ஒரு வரலாற்று ஆய்வுக் கட்டுரை. இந்தியப் பாரம்பரியத்தைச் சார்ந்தது. மிகவும் சிரமப்பட்டு தகவல்களையும் சான்றுகளையும் சேகரிக்க வேண்டி வந்தது. இதுவரை எங்கேயும் எழுதப் படாதது. ஆக பத்திரப்படுத்தி வையுங்கள். உங்கள் பிள்ளைகளிடம் படிக்கக் கொடுங்கள். அடுத்த தலைமுறையினருக்கும் போய்ச் சேர வேண்டும். அதுவே கட்டுரையாளரின் சமூகப் பார்வை.