27 ஜூன் 2016

தமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள்

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு...
நெய் மணக்கும் கத்திரிக்கா...
நேத்து வெச்ச மீன்கொழம்பு என்னை இழுக்குதய்யா... 





பட்டி தொட்டிகளைப் பித்தம் கலங்கச் செய்த பாடல். முள்ளும் மலரும் படத்தில் ஒலித்தது. பாடலைக் கேட்கும் போது எல்லாம் மனசுக்குள் கத்திரிக்காய் மணந்தது. மீன்குழம்பு வாசித்தது. படாபட் ஜெயலட்சுமியும் ஒரு மாதிரியாகக் கண் சிமிட்டினார்.

ஆனால் இப்போது அந்தப் படாபட் இல்லை. 1979-இல் காதல் தோல்வி. கண்கலங்கி உதிரிப் பூவாய் உதிர்ந்து போனார். தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு மீளாத் தூக்கத்தில் ஐக்கியமாகி விட்டார். அவள் ஒரு தொடர்கதையில் நடித்த படாபட் ஜெயலெட்சுமியின் வாழ்க்கையும் ஒரு தொடர்கதையாகிப் போனது.




அதே ஆண்டில் பதினேழு வயது ஷோபா. அற்புதமான ஒரு நடிகை. பசி, மூடுபனி, அழியாத கோலங்கள், முள்ளும் மலரும் போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். அவரைப் போன்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்து இருந்தார். இன்றைய வரைக்கும் யாராலும் மறக்க முடியாதவர். பசி படத்தில் சிறப்பாக நடித்தார். தேசிய விருது கிடைத்தது.

ஷோபாவின் மரண மர்ம முடிச்சுகள்

இயக்குனர் பாலுமகேந்திராவைத் திருமணம் செய்த இரண்டே ஆண்டுகளில் மலர்ந்தும் மலராத மலராகிப் போனார். ஏன் என்று கேட்க வேண்டாம். புருசன்காரன் பாலுமகேந்திராவைத் தான் கேட்க வேண்டும். 




இன்று வரை ஷோபாவின் மரண மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாத ரகசியங்கள். புகழின் உச்சியில் இருந்த போதே தூக்குக் கயிற்றில் தன் உயிரை விலைபேசிக் கொண்டார். சுத்த அபத்தம்.

முள்ளும் மலரும் ரஜினிக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த படம். அந்தப் படத்தில் ரஜினிக்குத் தங்கையாக ஷோபாவும் மனைவியாக ஜெயலட்சுமியும் நடித்து இருந்தனர். 


இதில் ஜெயலட்சுமி 1979-ஆம் ஆண்டும் ஷோபா 1980-ஆம் ஆண்டும் தற்கொலை செய்து கொண்டனர். இதில் வேடிக்கை என்ன தெரியுமா. இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது. அது தான் ரொம்பவும் வேதனையான விஷயம்.



சினிமா என்று வந்தாலே கதாநாயகிகள் வெறும் ஒரு கவர்ச்சிப் பொருளாகத் தான் பார்க்கப் படுகிறார்கள். அது தமிழ்ப் படமாக இருந்தாலும் சரி இல்லை தெலுங்குப் படமாக இருந்தாலும் சரி இல்லை கன்னடப் படமாக இருந்தாலும் சரி.

அரச மரத்தையும் ஆல மரத்தையும் சுற்றிச் சுற்றி வருவது. அப்புறம் ஓடிப் பிடித்துக் கண்ணாமூச்சி விளையாடுவது. அப்புறம் ஐந்தே நிமிசத்தில் ஹீரோவைக் கட்டிப்பிடித்துக் காதலிப்பது. அதற்கும் மட்டுமே பயன்பட்டு வந்தனர்.

ஐந்து நிமிசத்தில் காதல் வருமா… தெரியவில்லை. முயற்சி செய்து பாருங்களேன்... எதற்கும் முதலில் ஒரு பெரிய டின்னாகப் பார்த்து முதுகில் கட்டிக் கொள்வது நல்லது.

பணம் புகழ் செல்வாக்கு அதிகாரம் இருந்தும்

தமிழ்த் திரையுலகைப் பொருத்த வரையில் ஒரு  நடிகனுக்கு  வயது 80ஐ கூட தாண்டி இருக்கலாம். நோ புரோபளம்… காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம். கூலிங் கிளாஸ் போட்டுக் கொள்ளலாம். டூயட் பாடலாம். ஹீரோயினை ஒரு கையில் தூக்கிக் கொண்டு ஒன்றரை மைல் ஒலிம்பிக் ஓடலாம். 




முகத்தில் ஒரு சொட்டுக் கிழடு தெரியாது. என்றைக்கும் அவர் ஹீரோ. என்றைக்கும் சினிமாவில் அவருக்கு வயசு பத்து. இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ஒன்பது. புரியும் என்று நினைக்கிறேன்.

ஆனால் கதாநாயகிகள் அப்படி அல்ல. ஐந்து அல்லது ஆறு வருடங்கள் தாக்குப் பிடிப்பதே குதிரை கொம்பு. பிறகு வேறு வழி இல்லாமல் அமெரிக்க மாப்பிள்ளையுடன் ஐலசா. அப்புறம் சீரியல் தொடர்கள். அல்லது ரியாலிட்டி ஷோ நடுவர்கள். இப்படித்தான் இன்னமும் காலத்தைக் கழிக்கின்றனர். இனிமேலும் அப்படித்தான் நடக்கப் போகிறது.




இதில் தயவுசெய்து நயனைச் சேர்க்க வேண்டாம். நாலும் தெரிந்த நல்ல மகள். இருந்தாலும் பேர் போட்டு இருக்கலாம். கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து இருப்பார்கள். இனிமேல் நோ சான்ஸ்… டூ லேட்...  சரி விடுங்கள். ஊர்வம்பு நமக்கு வேண்டாங்க…

அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன் மனைவி கேட்பதாக இல்லை. மனைவி சொல்வதைக் கணவன் கேட்பதாக இல்லை. இதில் மாமனார் மாமியாரின் சமகால அர்ச்சனைகள். சின்ன வயதைப் பெரிதாகப் பாதித்தச் சொல்லாடல்கள். செத்தும் போனார் அந்த நடிகர். சுத்தப் பைத்தியக்காரத்தனம். 




நடிகர் சாய் பிரசாந்தின் தற்கொலை தமிழ்ச் சினிமாவையே மீளாச் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. வாழ வேண்டிய வயது. புகழின் உச்சியில் உலா வந்த நேரம். பணம் புகழ் செல்வாக்கு அதிகாரம் எல்லாமே இருந்தன. இருந்தும் என்ன பயன்.

நல்ல ஒரு பொன்னான வாழ்வு… மண்ணாகிப் போனதே. மிக மிக அற்பத் தனமான செயலினால் வாழ்வின் இலட்சியங்கள் அடிமட்டமாகிப் போனதே… கலகலப்பாக வாழ்ந்தவர்கள் இப்படி எல்லாம் துயரமான முடிவுகளை எடுப்பது அதிர்ச்சி கலந்த வியப்பைத் தரலாம். என்னைக் கேட்டால் முட்டாள்தனம்.

சின்னத்திரை நடிகை வைஷ்ணவி காதல் பிரச்சினை

தமிழ்ச் சினிமாவும் நடிகர் நடிகைகளின் தற்கொலைகளும் இணைபிரியாத் தோழர்களாக மாறி விட்டன. அந்த அளவிற்கு நிலைமை மிக மோசமாகி விட்டது. 


ஆக, அந்த வகையில் தற்கொலை செய்து கொண்ட தமிழ் நடிகர் நடிகைகளில் சிலரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.

சித்தி சீரியலில் நடித்த சாருகேஷ், 2004ஆம் ஆண்டு ஓட்டும் இரயிலுக்கு முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். 2006-இல் சின்னத்திரை நடிகை வைஷ்ணவி காதல் பிரச்சினை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார்.

அள்ளித்தந்த வானம், பாய்ஸ் போன்ற படங்களில் நடித்த முரளி மோகன் வாய்ப்புகள் குறைவானதால் 2014-இல் தற்கொலை செய்து கொண்டார். அரசி சீரியல் தொடரை இயக்கிய பாலாஜி யாதவ் மன இறுக்கம் அதிகமாகித் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ்த் திரை உலகில் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது 1974 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. அந்த ஆண்டில் விஜயஶ்ரீ எனும் நடிகையின் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணம் ஒரு தற்கொலையா என்பதில்கூட இன்னும் மர்மம் நீடிக்கிறது.

அடுத்து சில்க் சுமிதா. இவருடைய ஆரம்ப கால வாழ்க்கையில் ஏழ்மையும் வறுமையும் அகோரமாக நர்த்தனம் ஆடி இருக்கின்றன. வினு சக்கரவர்த்தியின் மூலமாக அறிமுகமானார்.

நேத்து ராத்திரி யம்மா

 
1980-களில் கவர்ச்சி என்ற வார்த்தைக்கு தன் கண்ணிலேயே பாடம் எடுத்தவர். தன்னுடைய வசீகரப் பார்வையால் வாலிபர்கள் முதல் வயோதிகர் வரை சகட்டு மேனிக்குக் கட்டிப் போட்டவர். தன் கண்களாலேயே தமிழ் சினிமா ரசிகர்களை சுண்டி இழுக்க ஆரம்பித்தார். கொடிகட்டிப் பறந்தார்.

இவரின் போஸ்ட்டரைப் பார்த்தே தியேட்டருக்கு வருபவர்கள் பலர். ஐட்டம் டான்சைத் தமிழுக்கு அறிமுகப் படுத்திய பெருமை இவரையே சாரும். மூன்றாம் பிறை படத்தில் இவர் பாடிய பொன்மேனி உருகுதே பாடலையும், சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற நேத்து ராத்திரி யம்மா பாடலையும் மறக்க முடியுமா.

அவருடைய கவர்ச்சியே கடைசியில் அவருக்கு ஆபாத்தாகிப் போனது. தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை வெளியே சொல்ல முடியாமல் தற்கொலை என்ற முடிவை தேடிக் கொண்டார். 1996-ஆம் ஆண்டு தூக்கு மாட்டி இறந்து போனார். இன்று வரை இவரின் தற்கொலைக்கு யார் காரணம் என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை.

இருந்தாலும் காதல் தோல்வி, தொழில் பிரச்சினை, கடன் தொல்லை, மதுப்பழக்கம் ஆகியவை மரணத்திற்கு மூல காரணங்களாக கூறப் படுகின்றன. உண்மை என்ன என்பது அந்த ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

இவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தியில் டர்ட்டி பிச்சர் (Dirty Picture) என்ற படம் வெளிவந்தது. இதில் சில்க் கதாபாத்திரத்தில் நடித்த வித்யா பாலனுக்கு தேசிய விருது கூட கிடைத்தது.

அடுத்து இந்தி நடிகை ஜியாகான். இவருடைய மரணத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தியில் தயாரான 'கஜினி' படத்தில் நயன்தாரா வேடத்தில் இவர் நடித்தார். அதனால் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமானவராக அறியப் பட்டார்.

ஜியாகானுக்கு 25 வயது. அமிதாப் பச்சனுடன் ‘நிஷப்த்’ படத்தில் நடித்தார். சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். அக்ஷய் குமாருடன் நடித்த ஹவுஸ்புல் படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. முன்னணி நடிகை நிலைக்கு உயர்ந்து பேர் போட்டுக் கொண்டு இருந்தார்.

அந்தக் கட்டத்தில் அவர் தூக்கில் பிணமாகத் தொங்கியது சினிமா உலகையே உலுக்கிப் போட்டது. தற்கொலைதானா என இன்று வரையிலும் உறுதிப்படுத்த முடியவில்லை.

ரசிகர்களின் காமப் பார்வை

போகிற இடம் எல்லாம் ரசிகர்களின் ஆரவார வரவேற்பு. அப்புறம் பணம், புகழ், அழகு. இப்படி உச்சத்தில் இருந்த நடிகைகள் ஏன் செத்துப் போகும் முடிவை எடுக்கின்றனர். புரியாத புதிராகவே இருக்கிறது.

வாழ்க்கையில் மனச்சிதைவுகள் ஏற்படலாம் விரக்திகள் ஏற்படலாம் மன இறுக்கம் ஏற்படலாம் அதனால் அவர்கள் சாகத் துணிகின்றனர் என்று மனநல வல்லுநர்கள் கருத்துச் சொல்கின்றனர். எது எப்படியோ போன உயிர் போனது தானே. திருப்பிக் கிடைக்குமா.

பெரும்பாலான நடிகைகளின் தற்கொலைக்கு முக்கியமாக அமைவது ரசிகர்களின் காமப் பார்வை தான். அப்படி நான் சொல்லவில்லை. ஒட்டுமொத்தமான கருத்து. நடிகை என்றாலே ஒரு விலைமாது எனும் ஒரு தனிப்பட்ட கருத்து வந்துவிடுகிறது.

அது மட்டும் அல்ல. இயக்குநர்கள் நடிகைகளை பொதுவாகவே லூசு பெண்களாகத் தான் சித்தரிக்கிறார்கள். சில நடிகைகள் காதல் வார்த்தைகளில் ஏமாற்றம் அடைவது, காதலித்தவனால் கை விடப்படுவது... பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை முடிவை நாடுகின்றனர்.

சிம்ரனின் தங்கையான மோனல். இவர் நடிகர் விஜய்யின் 'பத்ரி' படத்திலும் குணாலுடன் பார்வை ஒன்றே போதுமே எனும் படத்திலும் நடித்துப் புகழ்பெற்றவர். இவரும் காதல் வலையில் சிக்கினார். 


நடன இயக்குநர் பிரசன்னா சுஜித்துடன் காதல். அப்புறம் அவர்களுக்குள் பிரச்சனைகள். 2002-ஆம் ஆண்டு சென்னையில் தான் தங்கியிருந்த வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 21.

என்ன பைத்தியகாரத்தனம். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்ரன் ‘எந்த ஒரு முடிவுக்கும் தற்கொலை தீர்வாகாது’ என்று கண்ணீருடன் கூறினார்.


மோனல் இறந்த அதே ஆண்டு கடல் பூக்கள், தவசி படங்களில் நாயகியாக நடித்த பிரதியுஷா (வயது 23) தற்கொலை செய்து கொண்டார். காதலர் சித்தார்த் ரெட்டியுடன் காரில் அமர்ந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த பிரதியுஷா காரிலேயே இறந்து போனார்.

பால்கனியில் இருந்து குதித்துத் தற்கொலை

ஆனால் பிரதியுஷாவின் காதலர் அந்தத் தற்கொலை முயற்சியில் இருந்து பிழைத்துக் கொண்டார். காதலனுக்கு ஆயுசு கெட்டி. இருந்தாலும் காதலன் மீது கொலைக் குற்றம் சாட்டப் பட்டது. இன்னும் தீர்ந்தபாடு இல்லை. பிரதியுஷாவின் தற்கொலையைத் தழுவி ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ என்றொரு திரைப்படம் ராஜ்கிருஷ்ணா இயக்கத்தில் பின்னர் வெளிவந்தது.

மோனலுடன் பார்வை ஒன்றே போதுமே படத்தில் நடித்த குணாலும் (வயது 31) காதல் தோல்வி காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். காதலர் தினம், வருஷமெல்லாம் வசந்தம், அற்புதம் போன்ற படங்களில் குணால் நடித்து இருக்கிறார். குணால், மோனல் இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதே போல கோழி கூவுது படத்தின் மூலம் புகழ்பெற்ற விஜி எனும் நடிகை 2௦௦௦-ஆம் ஆண்டு, சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கும் காதல் தோல்விதான் காரணம்.

தமிழில் ‘நிலாப் பெண்ணே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யபாரதி (வயது 19). தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வந்த திவ்யபாரதி 1993-ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி தனது மும்பை வீட்டின் பால்கனியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை தள்ளி விடப்பட்டாரா என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

அடுத்து நடிகை ஷோபனா (வயது 31). நடிகர் வடிவேலுவுடன் சில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடித்த காமெடி நடிகை. 2004-ஆம் ஆண்டு தன்னுடைய கோட்டூர்புரம் வீட்டில் தூக்கு மாட்டி இறந்து போனார். உடல்நலப் பிரச்சினைகளே ஷோபனாவின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.

அடுத்து இந்தி நடிகை பர்வீன் பாபி. இவர் 2005-ஆம் ஆண்டில் தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஒரு வாரத்திற்ப்கு பிறகு அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப் பட்டது.

சரி. ஹாலிவுட் திரைப்பட உலகைத்தையும் மறந்துவிட வேண்டாம். ஒரு காலத்தில் தன் கடைக்கண் பார்வையால் சொக்க வைத்து பலரின் கனவுக் கன்னியாய்த் திகழ்ந்தவர் மர்லின் மன்றோ. 


ஒரு பெண்ணின் அழகான உடல் மூடி மறைப்பதற்கு அல்ல… மற்றவர்கள் பார்த்து ரசிக்கவே... என வெளிப்படையாய்ச் சொன்னவர். மர்லின் மன்றோவின் மரண மர்மம் இன்னும் நீடிக்கிறது.

அவ்வை ஷண்முகி ராபின் வில்லியம்ஸ்

பிரபல நடிகர் ராபின் வில்லியம்ஸ். இரு ஆண்டுகளுக்கு முன்னால் தற்கொலை செய்து கொண்டார். அவ்வை ஷண்முகியின் ஆங்கில மூலத் திரைப்படமான ‘மிஸஸ் டவுட்பயர்’ படத்தில் நடித்துப் புகழ் பெற்றவர். ஆஸ்கார் பரிசுகளை வென்றவர். 


அவருடைய முடிவு சோகமானது. பலரை மகிழ்வித்த அந்தக் கலைஞன் கடைசியில் மன உளைச்சலால் பாதிக்கப் பட்டது கொடுமையின் உச்சம்.

இறைவன் கொடுத்த உயிரை அழிப்பதற்கு அந்த இறைவனுக்கு மட்டுமே உரிமை உள்ளது. அதைக்கூட அவர் நேரம் காலம் பார்த்துத் தான் செய்கிறார். மற்றபடி சட்டத்திற்கு முன் நீதியரசரும் சத்தம் போட்டுத் தான் உயிர்த் தண்டனையையும் வாங்கிக் கொடுக்கிறார். 


ஆக அந்த உயிருக்குச் சொந்தமான அந்த மனிதருக்குக்கூட அந்த உரிமை இல்லை. என்னைக் கேட்டால் தற்கொலை என்பது சுத்தமான கோழைத்தனம்!

25 ஜூன் 2016

நடிகை நிஷாவின் உண்மைக் கதை

உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா நாகப்பட்டினத்தில் இருக்கிறது. வரலாறு படைக்கும் அந்தப் புண்ணிய பூமியில் இன்னொரு மனித வரலாறும் அரங்கேற்றம் காண்கிறது. 


மனநோய் முற்றிய அனாதைகள், நாதியற்ற முதியோர்கள், கைகால் விளங்காதவர்கள், ஊனமுற்றவர்கள், தீர்க்க முடியாத நோய் கண்டவர்களின் புகலிடமாகவும் நாகூர் தர்கா மாறி வருகிறது. அண்மைய காலங்களில் அதுவும் ஒரு வழக்கத்தில் ஒரு பழக்கமாகவும் பரிணாமம் கண்டு வருகிறது. 


முடியாத நிலையில் இருக்கும் அந்த ஜீவன்களுக்கு, நாகூர் தர்காவின் தர்மகர்த்தாக்களும் நிறைய உதவிகள் செய்கிறார்கள். செய்தும் வருகிறார்கள். அந்தப் பிரச்சினை அப்படியே இருக்கட்டும். அங்கே நடந்த வேறு ஒரு கதையைக் கொண்டு வருகிறேன். நெஞ்சைப் பிழிந்து எடுக்கும் கதை. படித்த பிறகு உங்கள் மனசும் கனத்துப் போகும்.

தமிழ்ச் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்

கமலஹாசனுடன் டிக்…டிக்….டிக் (1981) படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபலமான நடிகை; ரஜினிகாந்தின் 100ஆவது படமான ஸ்ரீராகவேந்திரர் (1985) படத்தில் கதாநாயகியாக நடித்தவர்; பாலசந்தரின் கல்யாண அகதிகள் (1986); ஐயர் தி கிரேட் (1990); இளமை இதோ இதோ; முயலுக்கு மூணு கால் (1980); மானாமதுரை மல்லி; எனக்காகக் காத்திரு போன்ற பல தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். ஒரு காலத்தில் தமிழ்ச் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர். 



அப்படி புகழ் வெளிச்சத்தில் நனைந்த ஒரு கதாநாயகி, நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்கச் சாகக் கிடந்தார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. அப்படி அனாதையாகக் கிடந்தவர் பிரபல நடிகை நிஷா என்கிற நூர் நிஷா. அவரை யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. தவிர அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அதுதான் சரி. ஆறுநாட்கள் அனாதையாகக் கிடந்து இருக்கிறார். இளமை இதோ இதோ என்று ஆடிப் பாடிய அவரின் இளமையை எய்ட்ஸ் நோய் உருக்குலைத்துச் சீரழித்து விட்டது.

நிஷா கேட்க ஆள் இல்லாமல் சாகக் கிடந்தது எங்கே தெரியுமா. அவர் பிறந்து வளர்ந்த அதே நாகூரில்தான். அது ஓர் அதிர்ச்சியான செய்தி. ஆனால் அதைவிட இன்னும் ஒரு பெரிய அதிர்ச்சி என்ன தெரியுமா.

அவருடைய அப்பா, அத்தை, பெரியப்பா என ஒரு பெரிய உறவுப் பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வந்து இருக்கிறது. அதாவது அவர் சாகக் கிடக்கும் போது அவருடைய சொந்த பந்தங்கள் அவரை அனாதையாக விட்டுவிட்டு அதே நாகூரில் தான் வாழ்ந்து இருக்கிறார்கள்.

காய்ந்த கருவாடாகக் கட்டிலில் கிடந்த பிரபல நடிகை

இதைவிட வேறு என்ன அதிர்ச்சியான செய்தி வேண்டும்... சொல்லுங்கள். பின்னர் ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் நிஷாவைச் சென்னை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள்.

செய்தி அறிந்த பத்திரிகையாளர்கள் அவரைப் போய் பார்த்து இருக்கிறார்கள். காய்ந்த கருவாடாகக் கட்டிலில் கிடந்து இருக்கிறார். இளமைக் காலங்களில் நடித்த நிஷாவா இவர் என்று பத்திரிகையாளர்கள் திகைத்துப் போய் இருக்கிறார்கள்.

நடிகை நிஷா அவர்களைப் பார்த்ததும் “சார்! சார்! என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாத்துங்க சார். நான் மறுபடியும் நடிக்கணும் சார்’ என்று கதறி அழுது இருக்கிறார். சினிமா ஒளி வெள்ளத்தில் குளித்த ஒரு ஜீவன், இப்படி தன்னை ஒரு போட்டோ எடுக்கும்படி கெஞ்சி இருக்கிறதே. நம்பவே முடியவில்லை.

அந்தப் பத்திரிகைகளின் செய்திகளையும் இணையங்களின் தகவல்களையும் நானும் இங்கே சான்றுகளாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு நடிகை எப்படி வாழக் கூடாது என்பதற்கு இந்த இளம் நடிகை நிஷாவை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். நடிகர் விவேக் ஒரு வசனம் பேசுவார். எப்படி இருந்த நான்… இப்படி ஆயிட்டேன்... என்கிற வசனம். எந்தப் படம் என்று தெரியவில்லை. ஆனால் அந்த வசனம் இப்போதைக்கு நிஷா என்கிற அந்தச் சினிமா நடிகைக்கும் மிகச் சரியாகப் பொருந்தி வருகிறது. நிஷா இப்போது இல்லை. அவர் இறந்து விட்டார். இறந்து சில ஆண்டுகள் ஆகின்றன.

மருத்துவமனையில் எலும்பும் தோலுமாய்க் கிடந்த நிஷாவின் பேச்சில் ஒரு நடிகைக்கு உரிய நளினம் கொஞ்சமும் குறையவில்லை. கூடவே குரலில் சோகத்தையும் கொட்டிக் குழைத்துப் பேசி இருக்கிறார்.

அம்மா அப்பாவுக்குச் சின்ன சண்டை

”எனக்குச் சொந்த ஊர் இந்த நாகூர்தான். என் அப்பா பேர் அப்துல் ஜப்பார். அவருடைய முதல் மனைவிக்குப் பிறந்த பெண்தான் நான். என் அம்மாவின் பெயர் பேபி. நான் குழந்தையாக இருந்த போது, என் அம்மா அப்பாவுக்குச் சின்ன சண்டை. அதனாலே என் அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்துட்டாங்க. அப்புறம் என் அம்மா என்னை வளர்த்து சினிமாவில் நடிக்க வச்சாங்க. நானும் பல படங்களில் ஹீரோயினா நடிச்சேன்.

நடிகர் கமலோடு ‘டிக்…டிக்….டிக்’ படம்... ரஜினி சாரோட ‘ஸ்ரீராகவேந்திரர்’ படம்... பாலசந்தர் சாரோட ‘கல்யாண அகதிகள்’ படம். இன்னும் விசு சார் படம், சந்திரசேகர் சார் படங்களில் எல்லாம் நடித்து இருக்கிறேன்’’ என்று தொடர்ந்தார்.

அம்மா இறந்த பிறகு அந்தத் துக்கத்தில் சரியாகச் சாப்பிடாமல் இளைச்சுப் போயிட்டேன். நடிக்கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்சு இருந்த பணம் எல்லாம் கரைஞ்சு போயிடுச்சு. நிறைய பேர் சான்ஸ் தரேன் சான்ஸ் தரேன்னு சொல்லி நல்லா ஏமாத்திட்டாங்க. சென்னையில் உறவுன்னு சொல்லிக் கொள்ள எனக்கு இப்ப ஒருத்தரும் இல்லை. அனாதையாக இருக்கிற எனக்கு உதவி செய்யவும் ஒரு ஆள்கூட இல்லை.

நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் ஒரு தடவை உதவி கேட்டுப் போனேன். ‘உனக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா... பேசாம... டி.வி.யில் போய் நடிக்க வேண்டியது தானே... அப்படினு சொல்லி என்னை வெறும் கையோட திருப்பி அனுப்பி வச்சிட்டார். ஒரு பைசா கூட கொடுக்கலை சார்...’ குலுங்கிக் குலுங்கி அழுதார்.

நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னமோ தெரியலை” என்று சொல்லிக் கண்ணீர்க் கடலில் மிதந்தார்.

பெற்ற தகப்பனின் கண்ணுக்கு முன்னாலே

‘உங்கள் அப்பா, மற்ற சொந்தக்காரர்கள் ஏன் உங்களை ஏற்க மறுக்கிறார்கள்?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். அதைக் கேட்டதும் சற்று கோபப்பட்ட நிஷா ”நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக் கொண்ட அவர்கள் இப்போது என்னைக் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள். பெற்ற தகப்பனின் கண்ணுக்கு முன்னாலே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடக்கிற நிலைமை என்னைத் தவிர வேறு யாருக்கும் வரக் கூடாது சார்... என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார்.

அதன் பிறகு ”சார் தப்பா நினைக்காதீங்க. என் கையில் சுத்தமாக காசே இல்லை சார்... ஒரு முட்டை புரோட்டா சாப்பிடணும் போல ஆசையாக இருக்கு சார்... ஒண்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன் சார்... ப்ளீஸ்... என்று கெஞ்சி இருக்கிறார். இலட்சம் இலட்சமாகச் சம்பாதித்த ஒரு பெண், ஒரு புரோட்டா ரொட்டிக்காகக் கெஞ்சி இருக்கிற நிலைமையைப் பாருங்கள். அழுகை வருகிறது.

நடிகை நிஷாவிடம் பத்திரிகையாளர்கள் பேசிக் கொண்டு இருந்த போது நர்ஸ் ஒருவர் வந்து இருக்கிறார். அவர்களைத் தனியாக அழைத்தார். ‘‘அந்த அம்மாவுக்கு எச்.ஐ.வி. பாஸிட்டிவ்னு ரிசல்ட் வந்திருக்கு. அவங்களை தாம்பரத்தில் உள்ள எய்ட்ஸ் நோயாளி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கணும். முடிந்தால் நீங்கள் ஏற்பாடு செய்யுங்களேன்... என்று நர்ஸ் உதவி கேட்டு இருக்கிறார்.

அதன் பிறகு நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரைப் பத்திரிகையாளர்கள் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். அதற்கு அவர் ‘நிஷா எனக்குப் பிறந்தவள்தான். அவளோட அம்மா பேபியை நான் காதல் பண்ணித் தான் கல்யாணம் பண்ணிகிட்டேன். அதனால் என் பெற்றோர் என்னை வீட்டை விட்டு விரட்டி அடிச்சிட்டாங்க. அப்ப பிறந்தவதான் நிஷா. ‘கொஞ்ச நாள் பொறுத்துக்கச் சொன்னேன். நான் சொன்னதைக் கேட்காமல் குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராத்திரியோட ராத்திரியா சென்னைக்கு ஓடிப் போயிட்டா.

மகள் நிஷாவை கண்ணில் காட்டவில்லை

அதன் பிறகு பேபியைத் தேடி அலைஞ்சு கடைசியில் கோடம்பாக்கத்தில் கண்டுபிடிச்சேன். எனக்குத் தெரியாமல் அடிக்கடி அவள் வீடு மாற ஆரம்பிச்சா. ஜலீல்னு ஒருத்தரை அவள் கல்யாணம் பண்ணிக்கிட்டதாகச் சொன்னாள். மகள் நிஷாவை என் கண்ணில் காட்டாமலே மறைச்சிட்டாள். பேபிக்கு பல பேரோட தவறான தொடர்பு இருந்து இருக்கிறது. எனக்குத் தெரிஞ்ச பிறகு நான் ஒதுங்கிட்டேன். அப்புறம் நிஷாவை சினிமாவில் நடிக்க வைச்சு இருக்கா. பணம் வர ஆரம்பிச்சு இருக்கு... என்று தொடர்ந்தார்.

ஒரு நாள் பேபி என்னைப் பார்த்து ‘‘உனக்கு ஊரில் பல பொம்பிளைங்க சகவாசம் இருக்கு. இனிமே இங்கே வராதேன்னு சொல்லி என்னை விரட்டி அடிச்சிட்டா... என்றார்.

மீண்டும் தொடர்ந்த அவர் ‘‘பேபி இறந்தபோது எனக்கு யாரும் தகவல் சொல்லவில்லை. என் அண்ணன் அங்கே ஒரு தடவை போய் இருக்கிறார். அப்போது ‘எனக்கு அப்பாவே வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம் நீங்க பெரியப்பா எதுக்குன்னு சொல்லி அவரை நிஷா விரட்டி இருக்கா. இப்ப நோய் வந்து சொந்தம் கொண்டாட வந்தா அவளை யாருங்க ஏத்துக்குவாங்க. நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடறேன். இதில் அவளையும் வச்சி எப்படிங்க காப்பாத்த முடியும்?’’ என்றார் அப்துல் ஜப்பார்.

நிஷாவின் பெரியப்பா அப்துல் ஹமீத் சென்னையில் இருந்தார். அவரையும் பத்திரிகையாளர்கள் விடவில்லை. சந்தித்து இருக்கிறார்கள். அவர் இப்படி சொல்லி இருக்கிறார். ‘‘சென்னை சாந்தோமில் சூப்பர் மார்க்கெட் வச்சிருக்கிற முகமது அலியும், ரபீக் என்பவரும் நிஷாவை ஆண்டு அனுபவிச்சிட்டாங்க... அப்புறம் இங்கே நாகூர்ல கொண்டாந்து விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாதுங்க’’ என்றார்.

நாகூர் ஜமாத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நிஜாமுதீன், ‘‘ஒரு நடிகை எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணம் இந்த நிஷா. இப்போ வருத்தப்பட்டு எந்தப் புண்ணியமும் இல்லை’’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

நிஷாவின் அம்மா இறந்த போது உறவுக்காரர்கள் வரவில்லை

‘சென்னை சாந்தோமில் சூப்பர் மார்க்கெட் வைத்து இருக்கும் அலிபாய் என்கிற முகமது அலியை கடைசியாகத் தொடர்பு கொண்டு கேட்டு இருக்கிறார்கள். அதற்கு அவர், ’அந்தப் பொண்ணும் அவங்க அம்மாவும் இங்கே அனாதைகளாக இருந்தார்கள். அப்போது உதவிகள் செய்தோம்.

நிஷாவின் அம்மா இறந்தபோது கூட உறவுக்காரங்க யாரும் வரவில்லை. இவர்களுக்கு உதவப் போய் இப்போது எங்களுக்குத் தான் கெட்ட பெயர். உடல்நிலை சரியில்லாத நிஷா அவருடைய நகை ஒன்றை அடகு வைத்து இருக்கிறார். அந்தப் பணத்தில்தான் நிஷாவை நாகூரில் இருக்கும் அவளோட அப்பாகிட்ட கொண்டு போய் விட்டுவரச் சொன்னோம்.

நாகூரில் உள்ள நிஷாவின் அப்பாவும் சொந்தக்காரர்களும் அவரை ஏற்க மறுத்து விட்டார்கள். அதனால் நிஷாவே தன்னை நாகூர் தர்காவில் விடச்சொல்லி இருக்கிறார். அதனால் தான் நாகூர் தர்காவில் விட்டு விட்டு வந்தோம்.

நிஷா பல்லாவரத்தில் இருந்த போது அவருடைய எதிர் வீட்டில் மகியம்மா என்பவர் ஒருவர் இருந்து இருக்கிறார். அவரிடம்தான் மீதி நகைகளை நிஷா கொடுத்து விட்டுச் சென்று இருக்கிறார்...’ என்று முகமது அலி சொன்னார்.

மகியம்மாவையும் பத்திரிகையாளர்கள் விடவில்லை. மகியம்மா சொன்ன பதில்கள். ‘என்னிடம் மொத்தம் மூணு பவுன் நகையைத்தான் நிஷா கொடுத்து வைத்து இருந்தார். அதற்கு பதினான்காயிரம் ரூபாய் பணம் கொடுத்து விட்டேன். அப்புறம் இருபத்து நான்கு புடைவைகளைக் கொடுத்தார். அதில் இருபது புடைவைகளை ஒரு புடைவை நூறு ரூபாய்க்கு விற்று, கிடைத்த காசை அவரிடமே கொடுத்து விட்டேன். மீதம் இருப்பது நான்கு புடைவைகள்தான்’’ என்றார்.

அநியாயமாக பெண்ணின் மீது பழியைப் போடக் கூடாது

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் சென்னை அரசு மருத்துவமனைக்கு நிஷா கொண்டு போகப்பட்டு இருக்கிறார். பின்னர்  சென்னை தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். பின்னர் சில நாட்களில் நிஷா இறந்து விட்டதாகவும் தகவல் வருகிறது.

ஐயர் தி கிரேட் எனும் தமிழ்ப் படத்தைத் தயாரித்தவரான ஆர். மோகன் என்பவர், நடிகை நிஷாவை விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார் எனும் ஒரு குற்றச்சாட்டும் உலவுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. என்னைப் பொருத்த வரையில், ஆதாரம் இல்லாமல் அநியாயமாக ஒரு பெண்ணின் மீது பழியைப் போடக் கூடாது. அது பெரிய பாவம். அப்படியே இருந்தாலும் கூட, முடிந்த வரையில் அதை மறைக்க முயற்சி செய்ய வேண்டும். அதுதான் அழகு.

நடிகை நிஷா 2007இல் இறந்து விட்டதாக, இன்னும் ஒரு செய்தி கசிகிறது. இறந்து போனது நிஷாவாக இருந்தால், பிறகு ஏன் இப்போது ஏழு வருடங்கள் கழித்து, செய்திகள் வர வேண்டும். இந்தச் செய்தி, அதாவது இப்போது நீங்கள் படிக்கிற இந்தச் செய்தி, 2013ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே தெரிய வந்து இருக்கிறது.

கடைசி கட்டத்தில், இரண்டு வருட காலமாக எயிட்ஸ் நோயினால் பாதிக்கப் பட்டு இருக்கிறார். நோய் முற்றியதும், எல்லோரும் கைகழுவி நழுவி விட்டார்கள்.

பெற்ற அப்பனே கண்டு கொள்ளவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு மகள் என்னதான் தப்பு செய்து இருந்தாலும், உலகத்தையே எதிர்த்து அந்த மகளுக்காகப் போராட வேண்டும். அதுதான் ஒரு சுத்தமான அப்பனுக்கு அழகு. தன் விந்திற்குப் பிறந்த மகள் என்கிற உயிர் உணர்ச்சி கொஞ்சமாவது அந்த அப்பனுக்கு இருந்து இருக்க வேண்டும் இல்லையா. கடைசியில் அந்தப் பெண், தன்னந் தனியாகப் போராடி அனாதையாகவே செத்துப் போய் இருக்கிறாள். அப்போது அவளுக்கு வயது 42. வேதனையாக இருக்கிறது.

நெஞ்சைக் கிழிக்கும் நிதர்சனமான நெருடல்

நூர் நிஷா (Noor Nisha) என்ற அந்த நடிகை சந்தர்ப்பச் சூழ்நிலையினால், ஏமாற்றப்பட்டு இருக்கலாம். அவள் மீதும் தப்பு இருக்கிறது. ஒரு தகப்பன் என்கிற பார்வையில் அதைப் பார்க்க வேண்டும். நிஷா வயதில் நமக்கும் மகள்கள் இருக்கிறார்கள்.

காலம் என்பது ஒரு மோசமான வாத்தியார். முட்டிப் போட வைக்கும். தோப்புக் கரணம் போட வைக்கும். கொட்டுப் போட்டு தலையை வீங்க வைக்கும். ஒரு குறைந்த பட்ச ஒழுக்கத்தை மட்டுமே அது சொல்லிக் கொடுக்கும். அவ்வளவுதான். மற்றதை மனிதனாக வாழ்ந்து அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

கடைசியாக என் மனதில் பட்டது. நிஷா என்கிற நடிகை இறந்து விட்டார் என்பது முக்கியம் அல்ல. ஆனால், ஒரு பெண் ஓவியத்தின் பலகீனங்களை, ஆண்வர்க்கத்தின் பலகீனங்கள் பயன்படுத்திக் கொண்டன என்பதுதான் நெஞ்சைக் கிழிக்கும் ஒரு நிதர்சனமான நெருடல்.

திறன்பேசி மின்கலப் பராமரிப்பு

# புதிய திறன்பேசி வாங்கியதும் அல்லது புதிய மின்கலம் வாங்கியதும் முதலில் 8 மணி நேரம் மின்னூட்டம் செய்வது மிக மிக அவசியம். ஒரு மணி அல்லது 2 மணி நேரத்தில் ’Battery Full’ என காட்டினாலும் மின்னேற்றம் (Charge) செய்வதை நிறுத்தாதீர்கள். 8 மணி நேரம் முடிந்த பின்பே மின்னேற்றம் செய்வதை நிறுத்துங்கள்.


# எப்போது திறன்பேசி "Battery Low " என காட்டுகிறதோ அப்போதுதான் மின்னூட்டம் செய்ய வேண்டும். சற்றுக் குறைந்ததும் உடனே மின்னூட்டம் செய்யக் கூடாது.

# திறன்பேசியின் மின்கலம் mAh (Milliamp Hours) 1000 க்கும் அதிகமான திறன் உடைய மின்கலமா என சோதித்துb பார்த்து வாங்குங்கள். ஏனெனில் ஆடியோ, வீடியோ, இணைய வசதி உள்ள திறன்பேசிகளுக்கு mAh 1000 க்கும் அதிகமான திறன் உடைய மின்கலம் தேவை.



# இரவு நேரங்களில் திறன்பேசியை மின்னேற்றத்தில் இணைத்துவிட்டு காலையில் கழற்றும் வழக்கத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் நீங்கள் இப்படி மின்னூட்டம் செய்வதால் உங்களுடைய மின்கலம் விரைவில் பருத்துப் பெருத்து... பின்னர் பயன்படாமலேயே போகும்.

# புளூடூத் (Bluetooth) வசதி, வை-பை (wifi) வசதி மற்றும் இணைய வசதிகள் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள். மற்ற நேரங்களில் அத்து வைப்பதே சிறந்தது. எப்போதும் திறந்தே வைத்து இருந்தால் மின்கலத்தின் தயாரிப்பு நிலை ஆற்றல் குறைந்து கொண்டே போகும்.



# அழைப்பு ஒலிக்கு (Ringtone) ஒரமுழு பாட்டையும் வைக்காமல் Cut Songs அல்லது Split Songs எனும் குறுகிய பாடல்களையே அழைப்பு ஒலியாக வைத்தால்... மின்கலத்தின் திறன் அதிகமாகச் செலவழிக்கப் படுவது தவிர்க்கப்படும்.

# திறன்பேசியில் எப்போதும் பாடல்களைப் பாட விடாதீர்கள்.

# திறன்பேசியின் திரை வெளிச்சத்தைக் குறைத்து வையுங்கள். அனைத்து திறன்பேசிகளிலும் (Power Saver Mode) இருக்கும். அதை முடுக்கி (Activate) விடுங்கள் இதனால் உங்களது மின்கலம் நீண்ட காலத்திற்குத் தாக்குப் பிடிக்கும்.

# திறன்பேசியின் முகப்பில் அதிக பிக்ஸ்ல்கள் (Pixels) கொண்ட படங்கள் வேண்டாமே. இதனால் மின்கலத்தின் ஆற்றல் விரைவில் தீர்ந்து விடும்.

சூரியகாந்தி

சூரியகாந்தி (Helianthus Annuus) பசுமைக் கொள்கையின் அடையாளம். பூக்களில் தனித்தன்மை வாய்ந்தது. அமெரிக்க நாடுகளில் உருவான மலர். மிகப் பெரிய மஞ்சரியைக் கொண்டது. மஞ்சரி என்றால் பூங்கொத்து. ஆலிவ் எண்ணெயைவிட மலிவாக இருப்பதால் வெண்ணெய் (மார்ஜரின்) மற்றும் பயோடீசல் தயாரிப்புக்கும் பயன்படுகிறது. 


தவிர ஈயம், யுரேனியம் போன்ற நச்சுப் பொருட்களை மண்ணில் இருந்து பிரித்து எடுப்பதற்கும் சூரியகாந்திகளைப் பயன்படுத்துகிறார்கள். உக்ரெய்ன் நாட்டின் தேசியப் பூ சூரியகாந்தி.

எத்தனைப் பூக்கள் இருந்தாலும் சூரியகாந்திப் பூவிற்கு வேறு ஒரு பூ நிகராகுமா. பூக்களுக்கு என்று அழகு ராணிப் போட்டி வைத்தால் சூரியகாந்திக்குத் தான் முதல் பரிசு. கி.மு 2600 ஆண்டுகளுக்கு முன் மெக்சிகோவில் தான் முதன்முதலாகப் பயிரிடப்பட்டது.

காட்டுச் சூரியகாந்தி (Tithonia Diversifolia) என்பது ஜப்பானிய சூரியகாந்தி. ஆங்கிலத்தில் Tree marigold எனும் பெயரும் உண்டு. மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது. அங்கிருந்து மற்ற உலகப் பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப் பட்டது. ஜப்பானில் மிகப் பிரபலம். இந்தியாவின் நீலகிரி மாவட்டத்தில் பயிர் செய்கிறார்கள்.

இதில் பூ என அழைக்கப்படுவது உண்மையில் பெரும் எண்ணிக்கையிலான சிறுபூக்கள் ஆகும். பொதுவாக ஒவ்வொரு சிறு பூவும் 137.5° பாகையில் அடுத்த சிறுபூவை நோக்கி வரிசையான வடிவமைப்பை கொண்டு இருக்கும்.

சூரிய உதயத்தின் போது பெரும்பாலான சூரியகாந்திகளின் முகங்கள் கிழக்கை நோக்கித் திரும்புகின்றன. அன்றைய நாள் நகரும் போது சூரியகாந்திகளின் முகங்களும் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிச் சூரியனைப் பின் தொடருகின்றன. இரவில் அவை மீண்டும் கிழக்குத் திசைக்குத் திரும்புகின்றன. சூரியன் இல்லாத போது அவற்றின் முகங்கள் திரும்புவது பெரிய அதிசயம்.

சூரியகாந்திப் பூங்கொத்தின் சிறுபூக்களின் வடிவமைப்பின் மாதிரியை 1979 ஆம் ஆண்டில் ஹெச். வோஜெல் (H. Vogel) என்பவர் முன்வைத்தார். கணித முனைவு ஆயங்களில் (Fibonacci numbers). r = c square root n ; θ = n X 137.5 என்று தெரிவிக்கப்படுகிறது. இங்கே θ என்பது கோணம். r என்பது ஆரம் அல்லது மையத்திலிருந்து தூரம். n என்பது சிறுபூவின் சுட்டி எண். c என்பது ஓர் அளவீட்டுக் காரணியாகும்.

இது ஒரு கணிதச் சமன்பாடு. இந்தப் பூவைக் கொண்டு தான் *பைபானாச்சி சமன்பாடு* உருவாக்கப்பட்டது. கணித வளர்ச்சியில் தாவரங்கள் எப்படி எல்லாம் உதவிகள் செய்கின்றன. (சான்று: http://wiki.eanswers.com/ta/சூரியகாந்தி)

படித்தேன் ரசித்தேன்

நதியில் விழுந்த இலை போல... திக்கு திசை தெரியாமல் தத்தளித்து... பலச் சோகங்களைக் கண்டு... பல வேதனைகளைக் கண்டு... பல பந்தங்களை எதிர்க் கொண்டு... விழித்துவரும் நிலையில்... அற்புதமான வரிகள். படித்தேன் ரசித்தேன்.

தமிழ்த் தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி...

தனிக் காற்றாடி போலறுந்து வீழ்வதில்லையடி...

அன்பான உறவுதனில் கூடு கட்டி ஆடிடுவேன்...

பண்பான மறுவாழ்க்கை தனைத் தேடிடுவேன்...

பாரதி வார்த்தைகள் தோற்றதில்லையடி...

தோல்வி என்பதும் எனக்கில்லையடி...

ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி...  In the confrontation between the stream and the rock... the stream always wins... not through strength but by perseverance என்று சொல்வார்கள். 

வாழ்க்கையும் அப்படித் தான். பற்பல மேடு பள்ளங்கள்... பற்பல வேதனைகள் பற்பல சோதனைகள்... போராட வேண்டும்... 

ஜெயித்துக் காட்ட வேண்டும். போராடத் தெரியாதவன் மனிதனாகப் பேர் போட முடியாது. எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தெரிய வேண்டும்.