04 ஜூலை 2017

மலாக்கா செட்டிகள் 1

காலத்தின் பேரலையில் தாய்மொழியைத் தொலைத்துவிட்ட ஒரு சமூகம் தனித்து நிற்கின்றது. இருந்தாலும் அந்தச் சமூகம் தங்களின் கலை, கலாசாரங்களை மறக்கவில்லை. சார்ந்து வளர்ந்த சமயத்தையும் மறக்கவில்லை. 



அந்தச் சமூகத்தினருக்கு மலேசியாவிலேயே மிக மிகப் பழமையான இந்துக் கோயிலைக் கட்டிய பெருமை. இந்துக்களின் பெருமைகளில் இனிய ஓர் இதிகாசத்தைச் சேர்க்கும் மலாக்கா ஸ்ரீ பொய்யாத விநாயகர் ஆலயத்தின் மகிமை. அந்த ஆலயத்தைப் பார்த்துப் பார்த்து புளகாங்கிதம் அடைகிறது அந்தச் சமூகம். நாமும் பெருமைப் படுவோம்.

மலாக்கா செட்டிகள். இவர்கள் தான் நான் சொல்லும் அந்தச் சமூகம். உலகம் போற்றும் ஓர் உன்னதமான சமூகம். ஒரே வார்த்தையில் சொல்வது என்றால் அமைதியான மனிதர்கள். ஆர்ப்பாட்டம் இல்லாத மலாக்கா தமிழர்கள்.

உழைப்பால் முன்னேறிய பழம் பெரும் மூத்தச் சமூகத்தவர்கள். இந்து சமயத்திற்காக இருப்பதை எல்லாம் அள்ளிக் கொடுக்கும் நல்ல உள்ளங்களின் அவதாரங்கள். பாராட்டுவோம். வாழ்த்துவோம். 




1880-களில் மலாயா ரப்பர்த் தோட்டங்களில் வேலை செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட சஞ்சித் தொழிலாளர்கள் வேறு. தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் என மூன்று பங்காளிகளும் ஒரே கப்பலில் ஒரே பாய் விரிப்பில் ஒன்றாகப் படுத்துப் புரண்டவர்கள்.

ஒன்றாகவே பினாங்கு புறமலையில் அடைக்கலமாகி அங்கே இருந்து தீபகற்ப மலேசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பிரிந்து சென்றவர்கள்..

அவர்கள் தான் சஞ்சித் தொழிலாளர்கள். இவர்கள் வேறு. மலாக்கா செட்டிகள் என்பவர்கள் வேறு. இரு தரப்பினரும் வேறு வேறு தமிழர்ச் சமுதாயங்கள்.

மலாக்கா செட்டிகள் அனைவருமே தமிழர்கள் தான். பெரும்பாலோர் இந்து சமயத்தவர்கள். ஒரு சிலர் இஸ்லாம் சமயத்தையும், வேறு சிலர் கிறிஸ்தவ சமயத்தையும் பின்பற்றி வருகின்றனர்.

மலாக்கா செட்டிகள் தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகளில் இருந்து வியாபாரம் செய்ய மலாக்காவிற்கு வந்தவர்கள். 




அவர்கள் இங்கு வந்து ஏறக்குறைய 600 ஆண்டுகள் ஆகின்றன. எத்தனை ஆண்டுகள் என்பதைப் பாருங்கள். 600 ஆண்டுகள். ஆக காலத்தால் மூத்த ஒரு சமூகம். வரலாற்றில் மதிக்கப்பட வேண்டிய ஒரு சமூகம். ஆனால் இப்போது காலத்தால் மறக்கப்பட்ட ஒரு சமூகம்.
(சான்று: http://m.himalmag.com/the-indian-peranakans-of-malaysia/ - Unknown to many Malaysians, for the last 600 years a small community known as the Melaka Chittys)

அதே மாதிரி சஞ்சிக்கூலிகள் எனும் பெயரில் வந்த தமிழர்கள் மலாக்காவிற்கு வந்து 200 ஆண்டுகள் ஆகின்றன. இவர்கள் மலாயா காபி, ரப்பர்த் தோட்டங்களில் வேலை செய்ய வந்தவர்கள்.

ஆகவே மலாக்கா செட்டிகளை 19-ஆம் நூற்றாண்டுச் சஞ்சித் தமிழர்களின்  பட்டியலில் சேர்க்க வேண்டாம்.

மலாக்கா செட்டிகள் என்று அழைக்கப்படும் இந்தச் சமூகம், மக்கள் தொகையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. மலாக்காவில் மட்டும் அல்ல. மலேசிய அளவிலும்தான். அவர்களின் மக்கள் தொகை ஏறக்குறைய 700. அவ்வளவுதான்.

மலேசிய இந்தியச் சமுதாயத்தின் எண்ணிக்கை எப்படி குறைந்து கொண்டே வருகிறதோ அதே போல மலாக்கா செட்டிகளின் மக்கள் தொகையும் குறைந்து கொண்டே வருகிறது.




முன்பு காலத்தில் மலாயாவுக்கு வந்தவர்கள் சின்ன வயதிலேயே கல்யாணம் செய்து கொண்டார்கள். சின்ன வயதிலேயே நிறையவே பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டார்கள். முப்பது வயதில் ஆறு ஏழு பிள்ளைகளுக்குத் தாய் தகப்பன் ஆனார்கள்.

ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லையே. எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாகப் பெற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்று நினைக்கிறார்கள். சரி.

மலாக்கா செட்டிகளின் வாரிசுகள் வேலைகளைத் தேடி ஈப்போ, பினாங்கு, கோலாலம்பூர், சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு இடம் மாறிச் செல்கின்றனர். ஒரு சிலர் தான் நிரந்தரமாக மலாக்காவிலேயே தங்கி விடுகின்றனர். ஆக மலாக்கா செட்டிகள் என்பவர்கள் மலேசியச் செட்டிகளாக மாறி வருகின்றனர்.

மலாக்கா செட்டிகளைப் பார்த்தால் தோற்றத்தில் இந்தியர்களைப் போலத் தான் இருப்பார்கள். ஆனால் அவர்கள் அணியும் ஆடை ஆபரணங்கள் எல்லாம் மலாய்க்காரர்களின் அணிகலன்களாக இருக்கும்.

பெரும்பாலும் மலாய் மொழியில் தான் பேசுவார்கள். இப்போது நாகரிகமான மேற்கத்திய உடைகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

அண்மைய காலங்களில் மலாக்கா செட்டிகள் பலர் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்கின்றனர். மலாக்கா செட்டிப் பெண்களும் தமிழ் இளைஞர்களைத் திருமணம்  செய்து கொள்கின்றனர். ஒரு கலப்புத் திருமணச் சமுதாயம் மலாக்காவில் உருவாகி வருகிறது. அவர்களுடைய நடை உடை பாவனைகளும் மாறி வருகின்றன. 




இருந்தாலும் இன்னும் சிலருக்கு அந்தப் பழைய பாரம்பரிய உணர்வுகள் மேலோங்கி நிற்கின்றன. மலாக்கா செட்டிச் சமூகத்தைச் சார்ந்தவர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற அழுத்தத்தையும் கொடுத்து வருகின்றனர். வற்புறுத்தியும் வருகின்றனர்.

சரி. மலாக்கா செட்டிகள் என்பவர்கள் யார்? அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மலாக்கா செட்டிகள் 14-ஆம் நூற்றாண்டில் தென் இந்தியாவின் கரையோரப் பகுதிகளில் இருந்து வர்த்தகம் செய்ய வந்தவர்கள். இவர்களில் பெரும்பாலோர் பண்ணை எனும் கலிங்கப் பட்டணத்தில் இருந்து வந்தவர்கள்.
(சான்று: https://en.wikipedia.org/wiki/Chitty#History - Historical records stated that the Tamil traders from Panai in Tamil Nadu settled down in Malacca during the sovereignty of the Sultanate of Malacca.)

மற்ற தமிழ் நாட்டுத் துறைமுகங்களில் இருந்தும் வந்தனர். பாய்மரக் கப்பல்களைப் பயன்படுத்தினார்கள்.

வந்த புதிதில் ‘மலாக்கா செட்டி’ (Malacca Chetti) என்று அழைக்கப் படவில்லை. சரி. அப்புறம் எப்படி மலாக்கா செட்டி என்ற பெயர் வந்தது. 




19-ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் லேவாதேவி தொழில் செய்வதற்காக நகரத்தார்கள் எனும் ஒரு புதிய தமிழர்ச் சமூகம் மலாக்காவிற்கு வந்தது. அவர்களைச் செட்டியார்கள் என்று அழைத்தார்கள். இவர்களும் தமிழ்நாட்டின் காரைக்குடி, திருச்சி, இராமநாதபுரம் போன்ற நகரங்களில் இருந்து வந்தவர்கள் தான்.

ஆனால் அதற்கு முன்னரே வேறு ஒரு தமிழர்ச் சமூகம் மலாக்காவில் பேர் போட்டு விட்டது. அதுதான் மலாக்கா செட்டி என்கிற சமூகம்.

அதனால் வட்டித் தொழில் செய்ய வந்த நகரத்தார்களை அங்கு இருந்த மலாய் சீனச் சமூகத்தவர்கள் அவர்களைச் செட்டியார்கள் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

ஏற்கனவே காலம் காலமாக வாழ்ந்து விட்ட தமிழர்ச் சமூகத்தை மலாக்கா செட்டிகள் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

அதாவது மலாக்காவில் இரு செட்டியார்ச் சமூகங்கள் இருக்கின்றன. இந்த இரு சமூகத்தினருக்கும் இடையே உள்ள கால இடைவெளி நானூறு ஆண்டுகள் ஆகும். அதை நாம் மறந்துவிடக் கூடாது..

சுருங்கச் சொன்னால் ஒரு சமூகத்தினர் செட்டியார்கள் என்று அழைக்கப் படுகின்றனர். இன்னொரு சமூகத்தினர் மலாக்கா செட்டிகள் என்று அழைக்கப் படுகின்றனர்.

இதில் முதலாவதாக வந்தவர்கள் மலாக்கா செட்டியார்கள். இரண்டாவதாக வந்தவர்கள் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள். இரண்டாவதாக வந்தவர்கள் தான் செட்டியார்கள் ஆனார்கள். புரியும் என்று நினைக்கிறேன்.

ஆக முதன்முதலில் வந்த மலாக்கா செட்டியார்கள் எனும் சொல் வழக்கம் பின்னர் காலத்தில் மலாக்கா செட்டிகள் என்று பெயர் மாற்றம் கண்டது.




செட்டி எனும் சொல்லின் பொருள் வியாபாரி என்பதாகும். மலாய் மொழியிலும் அப்படித் தான் பொருள் படுகிறது.

அப்படிப் பார்க்கும் போது சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மலாயாவுக்கு வணிகம் செய்ய வந்து இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. இவர்களின் எண்ணிக்கை குறைவு. அப்படி வந்த வணிகர்களில் மலாக்கா செட்டிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

1400-ஆம் ஆண்டுகளிலேயே பரமேஸ்வரா காலத்திலேயே மலாக்கா செட்டிகள் மலாக்காவில் வணிகம் செய்ய வந்து இருக்கிறார்கள்.

இந்த மலாக்கா செட்டிகள் என்பவர்கள் இப்போதைய மலாயாத் தமிழர்களின் தலைமுறைக் காலங்களுக்கு முந்தியவர்கள். மலாக்கா செட்டிகள் மிகப் பழமையானவர்கள்.

பரமேஸ்வரா மலாக்காவை ஆட்சி செய்த போது அவருடைய அரண்மனையில் மலாக்கா செட்டிகள் நல்ல நல்ல பதவிகளில் இருந்து இருக்கின்றனர்.

தலைமை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் தளபதிகள், படைத் தளபதிகள் போன்ற பதவிகளில் இருந்து இருக்கிறார்கள். (சான்று: Shiv Shanker Tiwary & P.S. Choudhary (2009). Encyclopaedia Of Southeast Asia And Its Tribes (Set Of 3 Vols.)

இருந்தாலும் இப்போதைய நிலையில் மலாக்கா செட்டிகள் தங்களின் அடையாளத்தை இழக்கும் ஓர் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

1414-ஆம் ஆண்டுகளுக்கு முன்பே மலாக்கா மாநிலத்தில் வாணிகம் செய்ய வந்த இந்த மலாக்கா செட்டிகள் இங்குள்ள மலாய் மக்களைத் திருமணம் செய்து கொண்டனர். அப்படியே தனி அடையாளத்துடன் வாழ்ந்தும் வருகின்றனர்.

பார்ப்பதற்கு மலாய் இனத்தவரைப் போன்று காட்சி அளிக்கும் செட்டி மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்.





தங்களுக்கு என்று தனி ஓர் அடையாளத்தைக் கொண்டுள்ள இவர்கள் அதே பாரம்பரியத்துடன் கலைகளை வளர்த்தும் வருகின்றனர். போர்த்துகீசியர், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷார், ஜப்பானியர் போன்றவர்களால் மலாக்கா ஆளப்பட்டு இருந்தாலும் மலாக்கா செட்டிகள் இன்னும் அவர்களின் அடையாளத்தை இழக்காமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பரமேஸ்வரா காலத்தில் மலாக்கா செட்டிகள் தங்களுக்கு என்று ஒரு சிறிய கோயிலை மலாக்கா புறநகர்ப் பகுதியில் கட்டிக் கொண்டார்கள். அதற்கு கஜபதி அம்மான் கோயில் என்று பெயரும் வைத்தார்கள்.

கஜபதி என்பதை கஜபேரம் என்றும் அழைத்தார்கள். கஜம் என்றால் யானை. கஜம் எனும் சொல்லில் இருந்து தான் Gajah எனும் சொல்லே உருவானது.

கஜ புரம் (Gajah Puram) எனும் சொற்கள் மருவி காஜா பூராங் (Gajah Berang) ஆனது. பின்னர் மலாக்கா காஜா பேராங் (Malacca Gajah Berang) ஆனது. இப்போது சொல்கிறார்களே காஜா பேராங் அது கஜபதி எ(Gajah Pathy) னும் சொல் தொடரில் இருந்து உருவானது. புரியுதுங்களா.
(சான்று: Peranakan Indians of Singapore and Melaka: Indian Babas and Nonyas—Chitty ... By Samuel S. Dhoraisingam)




வரலாற்றை எப்படித் திருப்பிப் போட்டு எழுதினாலும் இந்த உண்மையை யாராலும் மறைக்க முடியாது. நம்மிடம் சரியான வலுவான சான்றுகள் இருக்கின்றன. எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் சான்றுகளைத் தூக்கிப் போட முடியும்.

லண்டன் வரலாற்றுப் பழஞ்சுவடிக் காப்பகத்திலும் சீனா பெய்ஜிங் பழஞ்சுவடிக் காப்பகத்திலும் அந்தச் சான்றுகள் பத்திரமாக இருக்கின்றன. அந்தக் காப்பங்களில் டிஜிட்டல் முறையில் அந்தச் சான்றுகளைப் பத்திரப் படுத்தி வைத்து இருக்கிறார்கள்.

பரமேஸ்வரா காலத்திலேயே கடல்படை தளபதிகளாகவும் நிதி அமைச்சர்களாகவும் இருந்த மலாக்கா செட்டிகளுக்கு பூமிபுத்ரா தகுதி மிக அண்மையில் தான் வழங்கப்பட்டது. அதாவது 58 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற 2015-ஆம் ஆண்டு தான் வழங்கப்பட்டது.

மலாக்கா பண்டார் ஹிலிர் பகுதியில் உள்ள போர்த்துக்கிசியத் தலைமுறையினருக்கு 2005-ஆம் ஆண்டிலேயே பூமிபுத்ரா அந்தஸ்தை வழங்கி இருக்கிறார்கள். மலாக்கா செட்டிகளுக்கு மட்டும் கொடுக்கப்படவில்லை.

எனக்குள் ஓர் ஆதங்கம். மலாக்கா செட்டிகளுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து கொடுக்கப்பட்டு இருந்தாலும் மண் உரிமைச் சலுகைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

நிலம், வீடு வாங்குவதில் எந்தச் சிறப்புச் சலுகையும் இல்லை. எப்படிப் பார்த்தாலும் சராசரி இந்தியர்களின் நிலை தான்! பெயருக்குத் தான் பூமிபுத்ரா எனும் தகுதி. ஆனால் சிறப்பு உரிமைகள் எதுவும் இல்லை.

மலாக்கா பண்டார் ஹிலிர் பகுதியில் உள்ள போர்த்துக்கிசியத் தலைமுறையினருக்கு மலாக்காவில் மட்டும் நிலம் வாங்கும் உரிமை உண்டு. மற்ற மாநிலங்களில் அதுவும் இல்லை! மற்றபடி எந்தச் சிறப்புச் சலுகையும் வழங்கப் படவில்லை!

மலாக்கா செட்டிகள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பற்றி முதல் அமைச்சரிடம் விடாமல் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சரியான பதில் இன்னும் கிடைக்கவில்லை. Who wants to be a Millionaire எனும் ராகத்தில் அதுவும் பெரிய ஒரு கேள்வி.

தற்பொழுது மலாக்காவில் வசித்து வரும் மலாக்கா செட்டி சமூகத்தவர்கள் ஐந்தாவது தலை முறையைச் சேர்ந்தவர்கள். தங்கள் வழிபாட்டிற்காகக் காஜா பேராங் புறந்கர்ப் பகுதியில் சில இந்துக் கோயில்களை அமைத்து வழிபட்டனர். மிகப் பழமை வாய்ந்த சில கோயில்கள்.

மலாக்கா செட்டிகள் நிறுவிய கோயில்கள் பின்வருமாறு:


• ஸ்ரீ அம்மன் ஆலயம், காஜா பேராங் (1770)
• தர்மராஜா ஆலயம், காஜா பேராங் (1770)
• ஸ்ரீ அம்மன் ஆலயம், காஜா பேராங் (1770)
• தர்மராஜா ஆலயம், காஜா பேராங் (1770)
• ஸ்ரீ பொய்யாத விநாயகர் மூர்த்தி ஆலயம், ஜாலான் துக்காங் இமாஸ் (1781)
• ஸ்ரீ காளியம்மன் ஆலயம், பாச்சாங் (1804)
• ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், காஜா பேராங் (1822)
• ஸ்ரீ கைலாசநாதர் சிவன் ஆலயம், காஜா பேராங் (1887)
• ஸ்ரீ அங்காளம்மன் பரமேசுவரி ஆலயம், காஜா பேராங் (1888)
• லிங்காதரியம்மன், காஜா பேராங்
• கட்டையம்மன் ஆலயம்
• ஸ்ரீ அய்யனார் ஆலயம், பாச்சாங்
• ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயம், காஜா பேராங்


இருந்தாலும் தற்போது இந்த ஆலயங்கில் சிலற்ற மலாக்கா  இலங்கைத் தமிழர்கள் நிர்வகித்து வருகின்றனர்.

(தொடரும்)

29 ஜூன் 2017

அம்பிகா சீனிவாசன் 2

பாகம்: 2

அம்பிகா சீனிவாசன். அப்போது மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் அருந்தலைவர். இப்போது விழிப்புணர்வு மன்றங்களின் பெருந்தலைவர். நடப்பு ஆளுமைக்குச் சவால் விடும் ஓர் உருமாற்றம். துணிச்சல் மிக்கத் தமிழ்ப் பெண்ணாகப் பெருமாற்றம்.



இப்படித்தான் டத்தோ அம்பிகாவைப் பற்றி நான்கே வரிகளில் சொல்ல முடிகிறது. சமூக விழிப்புணர்வுகளின் பரிணாமத்தில் எத்தனையோ வேதனைகள்; எத்தனையோ சோதனைகள். அந்த வேதனைகளிலும் சோதனைகளிலும் எத்தனையோ சாதனைகள்.

அம்பிகா எனும் சொல்லின் பின்னால் வந்து நிற்கின்ற ஓர் உயிரோட்டம் இருக்கிறன்தே அது எத்தனையோ அரசியல் சுனாமி  அலைகளைத் தாண்டிப் பயணித்து வருகின்றது. 


அதில் ஒன்றும் ஒரு பெரிய மந்திரம் இல்லை. பெரிய மர்ம ஜாலமும் இல்லை. எல்லாமே அர்ப்பணிப்புச் சுவடுகளின் பிரதிபிம்பங்கள் தான். சமூக விழிப்புணர்வுகளுக்கான காணிக்கைகள் என்றும் சொல்லலாம். தப்பில்லை.
 

இந்த இடத்தில் இனம், மொழி, சமயம் எல்லாமே கடந்து போய் விடுகின்றன. அங்கே ஒரு பெரிய தேசியமே உருவாகி விடுகின்றது.

அம்பிகாவின் வாழ்க்கையில் பற்பல அசம்பாவிதங்கள். பற்பல சில்லறைத் தனமான நிகழ்வுகள். அவரைச் சிறுமைப்படுத்திய சில பல குறுந் தகவல்கள். அவருக்கு எதிராக நாடு முழுமையும் பிரசாரங்கள். 


'அம்பிகா ஒரு பயங்கரவாதி எனும் போர்வையில் ஓர் இந்துப் பெண்' என்றும் வகைப் படுத்தப்பட்டார். அவற்றை எல்லாம் தாண்டி அம்பிகா பயணித்துக் கொண்டு இருக்கிறார்.

ஒரு சமயம் அம்பிகாவின் வீட்டிற்கு முன்னால் ‘பர்கர்’ கடைகள் திறக்கப் பட்டன. பெர்சே 3.0 பேரணியினால் பர்கர் வியாபாரிகளுக்கு 200,000 ரிங்கிட் நட்டம் என்று குற்றச்சாட்டுகள். வருவோர் போவோருக்கு எல்லாம் இலவசமாக, சுடச்சுட ‘பர்கர்கள்’ வழங்கப் பட்டன. 




அம்பிகாவிடமே நேரடியாகப் போய் ’பர்கர்’ கொடுத்து சாப்பிடச் சொல்லி இருக்கிறார்கள். அம்பிகா ஒரு சுத்தமான சைவம். புலால் உண்ண மாட்டார் என்று தெரிந்தும் அவரிடமே போய் அசைவத்தைக் கொடுத்தது சரியா தவறா. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
(சான்று: http://www.thestar.com.my/news/nation/2012/05/11/traders-stage-burger-protest-in-front-of-ambigas-house/ - Traders upset over their loss of income a symbolic protest outside Bersih co-chairman Datuk S. Ambiga's house by giving away free burgers.)

அதன் பின்னர் சில நாட்கள் கழித்து 200 பேர் அடங்கிய ஒரு குழுவினர், அவருடைய வீட்டிற்கு முன்னால் ஒன்று கூடினர். தங்களின் பின்புறங்களைக் காட்டி அம்பிகாவை அசிங்கப் படுத்தினர். 


அந்த மனுஷியின் மனத்தை வேதனைப் படுத்தினர். அவரை மட்டும் அல்ல. அந்தக் குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்த அத்தனை பேரும் வேதனை அடைந்தனர்.

(சான்று:http://www.thestar.com.my/news/nation/2012/05/16/group-performs-butt-exercises-in-front-of-ambigas-home/ - A group of army veterans turned their backs and performed “butt exercises” in front her house in Bukit Damansara.)

இப்படிப்பட்ட செயல்களினால் தலைமைத் துவத்தின் மீது இருந்த விசுவாசம் பாதிக்கப் பட்டது. ஒரு பெண்ணுக்கு இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு எப்படி என்று பலர் வேதனை அடைந்தனர். அது ஒரு பெரிய வேதனையான விசயம். 




அம்பிகா என்பவர் ஒரு முப்பதாயிரம் வழக்கறிஞர்களைக் கொண்ட மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக இருந்தவர். அதுவும் அவர் ஒரு பெண். 

அவர் மிக மிக மோசமான நிலையில் கொச்சைப் படுத்தப்பட்டார் என்பதுதான் வேதனையிலும் வேதனையான விசயம். அவருக்கு ஏற்பட்ட சம்பவங்களைப் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அது அப்படியே இருக்கட்டும். அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு படுத்துகிறேன். 2009-ஆம் ஆண்டு டத்தோ அம்பிகாவுக்கும் மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த எண்மருக்கும் சிறந்த துணிகரமிக்க பெண்மணிக்கான விருதுகள் வழங்கப் பட்டன.

அந்த விருது வழங்கும் நிகழ்வில் டத்தோ அம்பிகாவைப் பற்றி முன்னாள் அமெரிக்க அதிபரின் துணைவியார் ஹில்லரி கிலின்டன் இப்படி அடையாளப் படுத்தினார். 




“மலேசியாவில் அம்பிகா மிக விநோதமான ஓர் ஆளுமை படைத்தவர். மலேசியச் சூழலில் அவருடைய வித்தியாசமான அடைவுகள் கவனிக்கத் தக்கவை. புதிய சட்ட சீர்த் திருத்தங்களையும் புதிய செயல் ஆக்கங்களையும் உருவாக்கும் வல்லமை படைத்தவர்.

நிர்வாகத் திறமையிலும் சரி நீதித் துறையிலும் சரி புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அம்பிகா தொடர்ந்து கடமையாற்றி வருகிறார். அவருடைய முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

பெண்களுக்கு மத்தியில் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். எல்லோர் மனங்களில் சமயச் சகிப்புத் தன்மையை விதைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அவருடைய இந்தச் சேவைகள் அவரை உலகின் நல்ல சிறந்த பெண்மணியாக அடையாளப் படுத்துகிறது. ஆகையால் அவரின் பங்களிப்புகளையும் சேவைகளையும் அங்கீகரிக்கும் வகையில் அவர் இந்த மேடையில் கௌரவிக்கப் படுகிறார் என்று அம்பிகாவை அறிமுகம் செய்தார்கள். 




அது ஓர் உலகளாவிய கௌரவிப்பு நிகழ்ச்சி. ஒரு மனிதருக்கு நோபல் பரிசைக் கொடுப்பதும் சரி ஒரு பெண்மணிக்கு இந்த மாதிரியான வீரப் பெண்மணி என்கிறப் பரிசைக் கொடுப்பதும் சரி. இரண்டும் ஒன்றாகவே தெரிகின்றன.

இதில் ஒரு வேடிக்கையான விசயம் என்ன தெரியுங்களா. அந்த கௌரவிப்பு நிகழ்ச்சியைப் பற்றி மலேசிய ஊடகங்களுக்குத் தெரியாமல் போனதுதான். எப்படி என்றுதான் தெரியவில்லை. ’தி ஸ்டார்’ பத்திரிகையும் ‘சன்’  பத்திரிகையும் துணுக்குச் செய்திகளாகப் போட்டன.

ஒருக்கால் இப்படியும் நடந்து இருக்கலாம். ராய்ட்டர்ஸ், ஏ.பி, செய்தி நிறுவனங்களில் பணி புரிந்த பத்திரிகையாளர்களுக்கு அந்தச் செய்தி கிடைக்காமல் போய் இருக்கலாம். அல்லது  பத்திரிகையாளர்கள் அசந்து தூங்கிப் போய் அந்த நிகழ்ச்சிக்குப் போகாமல் இருந்து இருக்கலாம்.

அல்லது கொட்டாங்குச்சியில் சோறாக்கிக் குடும்பத்துக்குப் போடும் வேலை செய்து இருக்கலாம். வேண்டாங்க. நமக்கு ஏன் வீண் பொல்லாப்பு.

எது எப்படியோ அந்த நிகழ்ச்சிக்கு இந்தியாவில் உள்ள தலையாய இந்தியப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தன. ஜப்பான், கொரியா நாட்டுப் பத்திரிகைகளும் பெரிது பெரிதாகச் செய்திகளை வெளியிட்டன.

ரொம்ப வேண்டாம். இருண்ட கண்டத்து நாடுகள் என்று சொல்கிறார்களே ஆப்பிரிக்க நாடுகள்; அந்த நாடுகளில் உள்ள நாளிதழ்கள் கூட அம்பிகாவின் செய்திகளைப் பிரசுரித்தன. 

 

இணையத்தின் வழியாகத் தெரிந்து கொண்டோம். ஏதோ ஒரு வகையில் உலக மக்களுக்குச் செய்திகள் போய்ச் சேர்ந்துவிட்டன. மகிழ்ச்சி.

அவரைப் பற்றிய சில விவரங்கள். டத்தோ அம்பிகாவின் முழுப்பெயர் அம்பிகா சீனிவாசன். அவர் 1956 நவம்பர் மாதம் 13-ஆம் தேதி சிரம்பானில் பிறந்தவர். 61 வயதாகிறது.

இவருடைய தகப்பனாரின் பெயர் டத்தோ டாக்டர் ஜி.ஸ்ரீநிவாசன். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். அம்பிகாவின் தாயார் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்.

அம்பிகாவின் தந்தைவழி தாத்தா, மலாயா ஆங்கிலேய ஆட்சியில் தொழிலாளர் இலாகாவில் ஆணையராகப் பணிபுரிந்தவர். 


அவருடைய கணவர் வழியாக ’ஆனந்தவிகடன்’ தாளிகையின் நிறுவனர் அமரர் ஸ்ரீநிவாசனுக்கு அம்பிகா பேத்தி ஆகின்றார்.
 

(சான்று: https://ta.wikipedia.org/s/2cey - தாய்வழி தாத்தா பெரும்பாலோர் அறிந்த ஆனந்த விகடன் வார இதழின் நிறுவனர் ஸ்ரீநிவாசன் ஆவார்.)

அம்பிகாவின் தகப்பனார் டாக்டர் ஜி. ஸ்ரீநிவாசன் 1974-இல் கோலாலம்பூர் பொதுமருத்துவமனையில் சிறுநீரகவியல் துறையை நிறுவியவர் (Dr.G.Sreenevasan, founder Hospital Kuala Lumpur - Urology and Nephrology Dept). 


அதன் தலைவராகவும் சேவை செய்தவர். அவருக்கு மூன்று பிள்ளைகள். அவர்களில் ஒருவர்தான் அம்பிகா. 



டத்தோ அம்பிகா 1979-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார் (University of Exeter, England, LLB Law, 1979). அவருடைய தகப்பனார் அவரை ஒரு மருத்துவராக்கிப் பார்க்க ஆசைப் பட்டார்.

ஆனால் கோலாலம்பூர் புக்கிட் நானாஸ் பள்ளியியில் படிக்கும் போதே சட்டம் பயில வேண்டும் என்கிற ஆசை அம்பிகாவிற்கு வந்துவிட்டது. அதுவே அவரைச் சட்டக் கல்லூரிக்கும் இழுத்துச் சென்றது. 1975-ஆம் ஆண்டு அந்தப் பள்ளியின் தலைமை மாணவராக (Head Prefect) இருந்தவர்.

சென்ற 2011-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் படித்த அதே எக்ஸ்டர் பல்கலைக்கழகம் அவரை அழைத்து அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பு செய்தது.

ஒரு வழக்கறிஞர் நிலையில் அம்பிகா உயரிய சேவைகளை வழங்கி இருக்கிறார். அத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். அதற்காக அவருக்கு அந்தக் கௌரவ டாக்டர் விருது வழங்கப் பட்டது. 




1982 மார்ச் மாதத்தில் இருந்து அம்பிகா வழக்கறிஞராகச் சேவை செய்து வருகிறார். இப்போது சொந்தமாக ஒரு சட்ட நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

ஒரு நாட்டின் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராகப் பொறுப்பு வகிப்பது என்பது மிக மிகச் சவால் நிறைந்தது. அதுவும் முப்பதாயிரம் வழக்கறிஞர்களுக்குத் தலைவராக இருந்து இருக்கிறார்.

அதுவும் ஆண் ஆதிக்கம் நிறைந்த ஒரு மன்றத்திற்குத் தலைவர் ஆவது என்பது சாதாரண விசயம் அல்ல என்று மேடையில் சொன்ன போது எல்லோருமே எழுந்து நின்று கைதட்டி  (Standing Ovation) பெருமை செய்தனர்.

இன்னும் ஒரு செய்தி. சென்ற 2011 செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியர் விருது (Chevalier de Legion d’Honneur) வழங்கிக் கௌரவிக்கப் பட்டது.

நடிகர் திலகம் சிவாஜிக்குச் செவாலியர் வழங்கினார்களே அதே விருது தான் அம்பிகாவுக்கும் வழங்கப் பட்டது. 

 

மலேசியாவில் மனித உரிமைகளுக்காகவும் சட்ட ஆளுமைக்காகவும் அம்பிகா போராடி வருகிறார். அதைச் சிறப்பிக்கும் வகையில் அந்த விருது வழங்கப் பட்டது.

இந்தச் செவாலியர் விருது மலேசியாவில் இதுவரையில் 20 பேருக்கு மட்டுமே கிடைத்து இருக்கிறது. அவர்களில் மாட்சிமை தங்கிய பேரரசர் துவாங்கு மிஷான் ஜைனல் அபிடின், டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ், நடிகை மிச்சல் இயோ போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.

2008-ஆம் ஆண்டில் பேராக் சுல்தான் இவருக்கு DPMP எனும் டத்தோ விருதை வழங்கிச் சிறப்பு செய்துள்ளார்.

இவர் வாதாடிய வழக்குகளில் லீனா ஜோய் என்பவரின் வழக்கு தான் மிகவும் பிரசித்தி பெற்ற வழக்காகும். ஒரு முஸ்லீம் சமயத்தவர் அவருடைய விருப்பத்தின் பேரில் மற்ற சமயங்களுக்கு மாற முடியும் என்று அம்பிகா வாதாடினார். 





இந்த வழக்கு 2007-ஆம் ஆண்டு, மலேசிய உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அது ஒரு நீண்ட வழக்கு. மலேசிய அரசியலமைப்பின் Article 121(1A) சட்டப் பிரிவின் கீழ் அந்த வழக்கு நடந்தது. இந்த வழக்கு உலகப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

அந்த வழக்கைப் பற்றி விரிவாக எழுத முடியவில்லை. புரிந்து கொள்ளுங்கள்.

இருந்தாலும் அந்த வழக்கைப் பற்றிய விவரங்கள் கீழ்க்காணும் இணையத் தளத்தில் உள்ளன. விருப்பப் பட்டவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.


(சான்று: https://www.worldwatchmonitor.org/2016/03/malaysian-court-upholds-right-to-convert-from-islam/ - Lina Joy who converted from Islam to Christianity in 1998 at the age of 26)

(தொடரும்)

28 ஜூன் 2017

அம்பிகா சீனிவாசன் 1

பாகம்: 1

மலேசிய மக்கள் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு மந்திரச் சொல். வான விதானத்தில் ஒளி விளக்காய்ச் சஞ்சரிக்கும் ஒரு மாயச் சொல். மகிமை வாய்ந்த அந்தச் சொல்லில் விவேகமான சிந்தனைகள். விநோதமான ஆளுமைகள். வித்தியாசமான அணுகுமுறைகள்.


சில சமயங்களில் அந்த விவேகமான சிந்தனைகளும் விநோதமான ஆளுமைகளும் வித்தியாசமான அணுகுமுறைகளும் ஒன்றாய்ச் சங்கமிக்கின்றன. ஆல விருச்சகங்களைப் போல ஆழமாய் விழுதுகள் விட்டு படர்ந்தும் போகின்றன.

அங்கே உலகப் பெண்களின் உரிமைப் போராட்ட உணர்வுகள் ஆழிப் பேரலைகளாய் ஆர்ப்பரிக்கின்றன. அப்படிப்பட்ட அந்த உணர்வுகளுக்குச் சொந்தக்காரார் தான் அம்பிகா சீனிவாசன். மலேசியா கண்டெடுத்த ஒரு மந்திரப் புன்னகை.

அண்மைய காலங்களில் அம்பிகா என்கிற சொல் சாமான்ய மக்களின் ஜீவ நாடிகளையும் உரசிப் பார்க்கின்றது. இனம் பார்க்காத சமயச் சகிப்புத் தன்மைகளை அலசியும் பார்க்கின்றது. அரசாசனம் பார்க்கும் அரசியல் புள்ளிகளுக்கும் சிம்மச் சொப்பனமாய் விளங்குகின்றது.

இதை எல்லாம் தாண்டிய நிலையில் அம்பிகா சீனிவாசன் மக்கள் மனங்களில் ஒரு மந்திரக் கண்ணாடியாக ஒளிர்கின்றார். மாயஜாலங்களைக் காட்டும் ஒரு தந்திரக் கண்ணாடியாக மிளிர்கின்றார். அங்கே பல்வேறான வியப்புகள். பல்வேறான பிரமிப்புகள்.

உலக நாடுகளில் சிறந்து விளங்கும் துணிச்சல்
மிக்க பெண்மணிகளுக்கான அமெரிக்க விருது.
அருகில் ஹில்லரி கிளிண்டன், மிச்சல் ஒபாமா
தமிழர்கள் மட்டும் அல்ல. அனைவரும் இவரைப் பற்றி தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.

அவரைப் பற்றி எழுதுவதற்கு முன்னால் இரு கோணங்களில் அவரைப் பார்க்க வேண்டி இருக்கிறது. முதலாவது அம்பிகா என்ன நினைக்கிறார். ஏன் அப்படி நினைக்கிறார் என்பதைப் பற்றிய ஒரு பார்வை. அடுத்ததாக அவர் என்ன செய்யப் போகிறார். அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார். இப்படி இரு கூறுகள். இரு பார்வைகள்.

இந்தக் கட்டுரையை நீங்களும் நானும் மட்டும் படிக்கப் போவது இல்லை. டத்தோ அம்பிகாவும் படிக்கப் போகிறார். அவருக்குத் தமிழ் ஓரளவுக்குத் தெரியும். ஏன் என்றால் ’ஆனந்த விகடன்’ தாளிகையின் நிறுவனர் அமரர் ஸ்ரீநிவாசனின் பேத்தி தான் இந்த டத்தோ அம்பிகா. 




இவர் ஈழத்து வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று சிலர் சொல்லி வருகின்றனர். அது தவறு. அவருடைய தாத்தா, பாட்டி, அம்மா அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

தந்தையார் டாக்டர் ஜி.ஸ்ரீநிவாசன். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர்.  1974-ஆம் ஆண்டு கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறையை (Dr.G.Sreenevasan, founder Hospital Kuala Lumpur - Urology and Nephrology Dept) நிறுவியவர். அதன் தலைவராகவும் பதவி வகித்தவர்.

சரி. விசயத்திற்கு வருகிறேன். அம்பிகாவைப் பற்றி சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். 


பிரான்ஸ் நாட்டின் செவிலியர் விருது
நல்லது கெட்டது தெரிந்த நல்ல ஓர் அறிவாளி. அப்பழுக்கற்ற வெள்ளந்தித் தனம். வயது தாண்டுகிறது என்றாலும் முகத்தில் ஒரு ஜீவகரமான ஒளி. மொத்தத்தில் இலட்சுமி கடாட்சம் நன்றாகவே தெரிகின்றது.

ஓர் அற்புதமான பெண்மணி. ரொம்பவும் புகழ்ந்து விட்டதாக நினைக்க வேண்டாம். மனதில் பட்டதைச் சொல்கிறேன். அவருக்கு வயது 61.


அவரிடம் பழகிப் பார்த்தால் உண்மை தெரியும். அவரை ஓர் எதார்த்தமான அறிவு ஜீவி என்றும் சிலர் சொல்கிறார்கள். அவர் ஒரு கருத்தைச் சொல்கிறார் என்றால் அதற்குச் சரியான சான்றுகள் இருக்கவே செய்யும்.

அந்தச் சான்றுகளுக்குச் சரியான சாட்சிகளும் இருக்கும். சில சிக்கலான கருத்துகளுக்கு அரசு நீதிச் சட்டங்களை அடுக்கடுக்காய் அள்ளிப் போடுவார். சும்மா சொல்லக் கூடாது. மலேசியாவில் ஏறக்குறைய 30 ஆயிரம் வழக்கறிஞர்களுக்குத் தலைவராக இருந்தவர். சட்டக் கலையை நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கிறார். (President of the Malaysian Bar Council from 2007 to 2009)

சில ஆண்டுகளுக்கு முன்பு கெடாவில் அவர் பேசியதை நினைவு கூர்கிறேன். 




“நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல. எந்த ஓர் அரசியல் கட்சிக்காகவும் போராடவில்லை. மக்களுக்காகப் போராடுகிறோம். மக்களின் வாக்குகள் அர்த்தம் கொண்டதாக இருக்க வேண்டும். அதைத் தான் நாங்கள் விரும்புகிறோம். மக்களின் வாக்குகளின் மதிப்பை யாரும் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அதை உறுதி செய்யவே நாங்கள் விரும்புகிறோம்.

யார் அதிகாரத்திற்கு வந்தாலும் சரி. வந்தவர்கள் நன்றாக இயங்கா விட்டால் ஐந்து ஆண்டுகளில் அவர்களை அகற்றும் ஓர் ஆற்றல் நமக்குத் தேவை. கிட்டத்தட்ட 57 ஆண்டுகள் முடிந்து விட்டன. உலகில் மிகவும் நீண்ட கால ஆட்சி இதுவாகும். நம் அரசியல்வாதிகள் நல்லபடியாகப் பொறுப்பேற்றுச் சேவைகள் செய்ய வேண்டிய ஒரு காலக் கட்டம் வந்து விட்டது.”

ஆக அம்பிகா என்ன சொல்ல வருகிறார் என்பது நன்றாகவே தெரிய வருகிறது. சுத்தமான பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அவரின் கோரிக்கை. அதற்கானச் செயல்பாடுகளிலும் களம் இறங்கி காய்களை நகர்த்தி வருகிறார். அவருடைய கோரிக்கைகளில் அதுதான் முத்தாய்ப்பும் கூட. 




அதனால் அவரைத் தொடரும் அச்சுறுத்தல்களைக் கண்டு அவர் மனம் கலங்கவில்லை. கண்களைக் கசக்கவில்லை. ஒரு நாட்டிற்கு ஒரு தூய்மையான ஆளுமை தேவை என்று சொல்லி வருகின்றார்.

அம்பிகா பல முறை கைது செய்யப் பட்டு இருக்கிறார். காவலில் வைக்கப் பட்டு இருக்கிறார். சமயங்களில் அவருடைய உயிருக்கே விலையும் பேசப் பட்டு இருக்கிறது.

அவருடைய வீட்டிற்குள் எண்ணெய்க் குண்டுகள் வீசப் பட்டன. அவருக்குக் கொலை மிரட்டல் கடிதங்கள் வருகின்றன. அசிங்கமான மின்னஞ்சல்களும் வருகின்றன. (சான்று: http://www.themalaymailonline.com/malaysia/article/ambiga-death-threats-act-of-terrorism-sreenevasan - Datuk Ambiga Sreenevasan today described the death threats against her and other activists as "an act of terrorism")




வேறு ஓர் பெண்ணாக இருந்தால் ’ஆளை விடுங்கடா சாமி’ என்று மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு வீடு பக்கம் போய்ச் சேர்ந்து இருப்பார். பழைய ஆளாய் மாறிப் போய் இருப்பார். சரி. அடுத்து ஒரு முக்கியமான விசயம்.

இந்தக் கட்டுரை எந்த ஓர் அரசியல் நோக்கப் பின்னணியிலும் எழுதப்படவில்லை. ஒரு சாமான்யச் சமூகப் போராட்டவாதி நடந்து வந்த பாதையைப் பின்னோக்கிப் பார்க்கிறோம். அந்தக் கோணத்தில் தான் எழுதப் படுகிறது.

ஆக அந்த வகையில் அந்தப் போராட்டவாதியின் உண்மையான காலச்சுவடுகளில் பல்வேறு சமூக அரசியல் நெளிவு சுழிவுகளும் இருக்கவே செய்யும். அவற்றை நாம் வரலாற்றுப் பதிவுகளாகப் பார்ப்போம். மற்ற எந்தக் கோணத்திலும் பார்க்க வேண்டாமே.




பெர்சே தன்னுடைய முதல் அரங்கேற்றத்தை மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் 2006 நவம்பர் 23-ஆம் திகதி நடத்தியது. அதில் டாக்டர் வான் அஸிஷா, சிவராசா ராசய்யா, லிம் குவான் எங், திரேசா கோக், எஸ்.அருட்செல்வன், சையட் ஷாரிர், மரியா சின், யாப் சுவீ செங் போன்றவர்கள் முக்கியத் தலைவர்களாக இருந்தார்கள்.

அடுத்து 2007 நவம்பர் 10-ஆம் திகதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்த பெர்சே 2.0 பேரணி. இதற்கு டத்தோ அம்பிகா தலைமை தாங்கினார். இந்தப் பேரணியில் அண்டிரூ சியூ, கா.ஆறுமுகம், பாருக் மூசா, மரியா சின், ஹாரிஸ் இப்ராஹிம், வோங் சின் ஹுவாட், ரிச்சர்ட் இயோ, சாயிட் காமாருடின் போன்றவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

அந்தப் பேரணியில் வெண் தாடியுடன் வலம் வந்த மலாய் இலக்கியவாதி சமாட் சாயிட் அவர்களையும் நாம் மறந்துவிடக் கூடாது. 
(சான்று: http://www.thestar.com.my/news/nation/2013/09/17/a-samad-said/ - Samad Said has written 72 books Salina, Cinta Fansuri and Hujan Pagi are among his more notable novels.)



மலாய் இலக்கியவாதி சமாட் சாயிட்

அடுத்து பெர்சே 3.0 பேரணி. கடந்த 2012 ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற்றது. இது ஒரு குந்தியிருப்பு போராட்டம். 250,000 பேர் கலந்து கொண்டனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனும் பிரதான நோக்கத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
(சான்று: https://www.youtube.com/watch?v=fV7GpnDiq74)

பெர்சே 2.0 பேரணியில் பல்லாயிரம் மக்களில் ஒருவராக அம்பிகா களம் இறக்கினார். அந்தக் களத்தில் இனம், சமயம், மொழி எதுவும் இல்லை. அப்போது இருந்து யார் இந்த அம்பிகா சீனிவாசன் என்று எல்லோரும் கேட்கத் தொடங்கினார்கள்.

அம்பிகா சீனிவாசன் எனும் சொல் அப்போது மலேசியா முழுவதும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது முற்றிலும் உண்மை. 




ஒரு சாதாரண குடும்ப மாது அரசியல் மறுமலர்ச்சி சன்னிதானங்களில் எப்படி இந்த அளவுக்கு துடிப்புமிக்கத் துடுப்பு கோலாக மாறினார் என்று அனைவரும் வியந்து பார்த்தனர். இணையத்தின் ‘யூ டியூப்’ வழியாக 32 இலட்சம் பேர் அந்தப் பேரணியைப் பார்த்தனர்.
(சான்று: https://www.youtube.com/watch?v=vCetbFLceFI)

சும்மா ஒன்றும் இல்லை. 24 மணி நேரத்தில் நடந்த ஒரு பெரிய நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். அதை யார் இணையத்தில் பதிவேற்றம் செய்தார் என்பது இன்று வரை ஒரு பரம இரகசியமாகவே இருந்து வருகிறது.

உலகத்தின் எங்கோ ஒரு பகுதியில் என்னவோ நடந்து கொண்டு இருக்கிறது என்பதை மட்டும் உலக மக்கள் அப்போது உணர்ந்து கொண்டனர். அவ்வளவுதான்.

அந்தக் கட்டத்தில் எகிப்திலும், லிபியாவிலும் தலைக்கு மேல் வெள்ளம். சிரியாவிலும் பிரச்சினைகள் தொடங்கி விட்டன. ஆயிரக் கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். ஆக அப்போதைக்கு பெர்சே 2.0 பேரணி என்பது தயிர் சாதத்தில் ஒரு சின்ன ஊசி மிளகாய்தான். 




சரி. அந்த நிகழ்வுகளை நாம் ஒரு பொது நிலையில் இருந்து பார்க்க வேண்டும். அந்தப் பக்கம் பார்த்தால் நாட்டை நிர்வாகம் செய்யும் ஓர் அரசாங்கம். இந்தப் பக்கம் பார்த்தால் அந்த அரசாங்கத்தின் ஒரு சில பலகீனங்களைத் தூசு தட்டச் சொல்லும் பொதுமக்களின் பேரணி.

இவற்றில் எது வேண்டும். பொதுமக்களில் பலர் எதைத் தேர்வு செய்வது என்கிற ஓர் இக்கட்டான நிலைமைக்கு தள்ளப் பட்டனர். இருக்கலாமா இருக்க முடியுமா எனும் இரண்டும் கெட்டான் நிலை. ஒரு திரிசங்கு நிலை.

அரசாங்கம் நல்லா தானே போய்க் கொண்டு இருக்கிறது. அப்புறம் ஏன் இந்த ஆர்ப்பாட்டங்கள் என்று ஒரு சாரார் கேள்விகளை எழுப்பினார்கள். அது இல்லை. அங்கே சில பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றைச் சரி செய்யத்தான் இந்த ஆர்ப்பாட்டங்கள் என்று ஒரு சாரார் குரல் கொடுத்தார்கள்.

பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாமே. ஆர்ப்பாட்டம் செய்துதான் ஆக வேண்டுமா. தேவை இல்லையே. இதற்கும் வேறு ஒரு பதில் வருகிறது. பெற்ற பிள்ளை நம்முடைய தொடையில் அசுத்தம் செய்து விட்டால் அதற்காக அந்தத்  தொடையை வெட்டி வீசிவிட முடியுமா. 




முடியாது. தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும். புரியும் என்று நினைக்கிறேன்.

பொதுவாகச் சொல்வது என்றால் கடந்து வந்த ஐம்பது ஆண்டு காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராகப் போகும் எந்த ஓர் அமைப்பையும் நாம் ஏற்றுக் கொண்டது இல்லை. அது குடிமக்களின் தலையாய விசுவாச முறையாகவும் இருந்து வந்துள்ளது.

ஆயிரம் இருந்தாலும் அரசாங்கத்தை எதிர்க்கும் எந்த ஒரு கொள்கைப் பாட்டிலும் நமக்கு உடன்பாடு இருந்தது இல்லை. அப்படிப்பட்ட ஓர் எதிர்க் கொள்கைப்பாடு இதுவரையிலும் புறக்கணிக்கப் பட்டே வந்துள்ளது.

நல்ல ஓர் ஆளுமையைச் சிதைக்கப் பார்க்கும் எந்த ஓர் ஒழுங்கற்ற நடவடிக்கைக்கும் பொது மக்கள் உடன்பட்டுத் துணை போனதும் இல்லை. குறிப்பாக இந்திய வம்சாவளியினர் அரச நிந்தனைகளையும், அரசு சார் நிந்தனைகளையும் பெரும் பாவங்களாக நினைத்துப் பார்க்கின்றவர்கள்.

ஆக அப்படிப்பட்ட ஒரு நடைமுறையில் ஏன் ஒரு சவால்  நிலை ஏற்பட வேண்டும். ஒன்று மட்டும் உண்மை. இதை நாம் நேர்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஓர் அரசாங்கத்தின் தேய்மானங்களையும் அந்த அரசாங்கத்தின் ஆளுமைப் பலகீனங்களையும் சரி பார்க்கச் சொல்லும் நேர்த்தியான சம்பிரதாயங்களை நாம் என்றுமே நிராகரிக்க முடியாது. ஆக அந்தக் கொள்கைபாட்டில் தான் அம்பிகா வந்து நிற்கின்றார்.

கடந்த சில ஆண்டுகளில் ‘பெர்சே’ போன்ற பேரணிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று பொது ஊடகங்களின் வழியாக பொது மக்களுக்கு எச்சரிக்கைகள், விளம்பரங்கள் செய்யப் பட்டன. அறிவிப்புகளும் தொடர்ந்து வந்தன. இந்தக் கட்டத்தில் பொதுமக்களில் ஒரு பகுதியினர் அம்பிகாவின் பின்னால் அணிவகுத்துச் சென்றனர். இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.




அதுதான் அம்பிகா எனும் சொல்லின் பின்னால் வந்து நிற்கின்ற ஓர் உயிரோட்டம் என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றார்கள். இதில் ஒன்றும் ஒரு பெரிய மாய மந்திரம் இல்லை. பெரிய மர்ம ஜாலம் எதுவும் இல்லை.

இந்த இடத்தில் இனம், மொழி, சமயம் எல்லாமே கடந்து போய் விடுகின்றன. அங்கே ஒரு பெரிய தேசியமே உருவாகி விடுகின்றது.

அதன் பின்னர் டத்தோ அம்பிகாவின் வாழ்க்கையில் பற்பல அசம்பாவிதங்கள். பற்பல சில்லறை இடையூறுகள்: எதிர்பாரா நிகழ்வுகள். அம்பிகாவைச் சிறுமைப்படுத்தி சில பல குறுந் தகவல்கள்.
(சான்று: http://www.abc.net.au/news/2015-05-02/rights-activists-opposition-politicians-arrested-in-malaysia/6440154)

அவருக்கு எதிராக பற்பல பிரசாரங்கள். ஒரு கட்டத்தில் 'அம்பிகா ஒரு பயங்கரவாதி எனும் போர்வையில் ஓர் இந்துப் பெண்' என்றும் வகைப் படுத்தப்பட்டது.
(சான்று: https://www.amnestyusa.org/sites/default/files/uaa24016.pdf - Amnesty International)


இந்தப் பகுதியின் இரண்டாம் பகுதி நாள தொடரும் >>> 

27 ஜூன் 2017

உங்கள் திறமை

ஒரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது. அந்த மயிலுக்குத் தன் அழகை எண்ணி அதிக பெருமை. ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. 





அந்த குரங்கிடம் தன் தோகையைக் காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில்.

அதற்கு குரங்கோ, "மயிலே! இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னை தேடி வர வேண்டும். ஆனால் அந்தக் குயிலைப் பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்கிறது. 


அழகாக பாடி மனிதர்களைச் சந்தோசப் படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலைக் கேட்டு மகிழ்கின்றனர். 

அவர்களைச் சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்தக் குயிலே இறைவனின் அற்புதப் படைப்பு" என்றது.

இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்குச் சென்று கத்தத் தொடங்கியது. அதன் கர்ண கொடூரச் சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்துத் தோப்புக்குள் விரட்டினார்கள் .

நீதி: பிரபுதேவாவால் பாலசுப்பிரமணியம் போல பாட முடியாது. பாலசுப்பிரமணியத்தால் பிரபுதேவா போல ஆட முடியாது.  

உங்கள் திறமையைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால் போதும். அடுத்தவர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவலைப்பட தேவையே இல்லை.

ஐயோ பாவம்

வயதான ஒரு தாத்தாவின் மீது ஒரு சுவர் சரிந்து விழுந்தது. அவர் இறந்து விட்டார். சுவரைக் கட்டிய கொத்தனார் மீது வழக்கு போடப் பட்டது. அவன் சொன்னான் ’என் மீது தவறு இல்லை. மண்ணையும் சிமெண்டையும் குழைத்தவன் தான் சரியாகக் குழைக்கவில்லை’


மண்ணைக் குழைத்தவன் மீது வழக்கு போடப் பட்டது. அவன் சொன்னான் ’நான் தவறு செய்யவில்லை. தண்ணீர் ஊற்றும் பானை வாய் அகலம். அதனால் தவறு நடந்து விட்டது’ என்றான்.

பானைக்காரன் மீது வழக்கு போடப் பட்டது. அதற்குப் பானைக்காரன்  சொன்னான் ‘நான் பானையை ஒழுங்காகத் தான் செய்தேன். அப்போது ஒரு நாட்டியகாரி அந்த வழியாகப் போனாள். அதனால் தான் பானை இப்படி ஆகிவிட்டது’ என்றான்.

நாட்டியக்காரி மீது வழக்கு போடப் பட்டது. அதற்கு அவள் ‘நான் ஒரு வண்ணானிடம் துணி துவைக்க கொடுத்து இருந்தேன். அதை வாங்கத் தான் அந்த வழியாகப் போனேன்’ என்றாள். 


வண்ணான் மீது வழக்கு போடப் பட்டது. வண்ணான் சொன்னான் ’நான் சலவை போடும் கல்லின் மீது ஒரு முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார். அவர் தான் காரணம்’ என்றான்.

முனிவரிடம் போய் கேட்டார்கள். பாவம் அவர். அமைதியாகத் தியானத்தில் இருந்தார். ’இந்த ஆள்தான் காரணம்’ என்று சொல்லி அவரைக் கொன்று விட்டார்கள்.

யாரோ செய்த தவறுக்கு யாரோ தண்டனை அனுபவிக்கும் காலம் இது. அதற்குப் பெயர் தான் பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்.