26 ஜூலை 2017

வணக்கம் கூறும் தமிழர் இயல்பு

எப்போது மனிதன் பேசக் கற்றுக் கொண்டானோ அப்போது இருந்தே வணக்கம் சொல்லும் பழக்கம் அவனுடைய வாழ்க்கையில் இணைந்து நனைந்து கனிந்து விட்டது. 



வணக்கம் கூறுவது என்பது வாழ்வியல் இயல்பு. அது அவர்களின் வாழ்க்கையில் ஒன்றித்துப் போன அன்றாட இயல்பு.

உலகவாழ் மக்கள் அவர்களின் மொழிக்கும் அவர்களின் பண்பாட்டிற்கும் ஏற்றவாறு வணக்கம் சொல்லும் பழக்கத்தைப் பின்பற்றி வருகின்றனர். 

மலேசியாவில் நம் சகோதர மலாய் இன மக்கள் ஒருவரைக் காலையில் பார்த்ததும் ‘செலாமாட் பாகி’ (Selamat Pagi);  மதியத்தில் ’செலாமாட் தெங்கா ஹரி’ (Selamat Tengahari); இரவில் ‘செலாமாட் மாலாம்’ (Selamat Malam) என்று சொல்கின்றனர். 


அது அவர்களின் இயல்பு. அது அவர்களுக்கு உரிய மொழி, பண்பாட்டு அடிப்படைச் செயல். அதை அப்படியே தமிழிலில் பார்த்தால் ‘நலம் மிக்க காலை நேரம்’, ‘நலம் மிக்க நண்பகல் நேரம்,’ ‘நலம் மிக்க மாலை நேரம்’ என்று பொருள் படுகின்றன. சரி.

அந்தப் பக்கம் பார்த்தால் ஆங்கிலேயர்கள் ‘குட் மார்னிங்’ (Good morning), ‘குட் ஆப்டர்நூன்’ (Good afternoon), ‘குட் ஈவ்னிங்’ (Good evening) என்று சொல்கிறார்கள். அது ஆங்கிலேயர்களின் இயல்பு. சரி.

இருந்தாலும் இன்றைய நாளில் தமிழர்கள் வணக்கம் சொல்லும் பயன்பாட்டில் பிற இனத்தவர் பண்பாடு கலந்துவிட்டது. 



 காலையில் சந்திக்கும் போது ‘காலை வணக்கம்’; மாலையில் சந்திக்கும் போது ‘மாலை வணக்கம்’; இரவில் சந்திக்கும் போது ‘இரவு வணக்கம்’ எனச் சொல்லும் வழக்கத்தைத் தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர். தப்பு என்று சொல்லவில்லை. அது நம் பண்பாடு அல்ல என்று சொல்ல வருகிறேன்.

அதாவது காலத்தை முன் வைத்து வணக்கம் சொல்வது நம் தமிழர்களின் மரபு அல்லஎன்று சொல்ல வருகிறேன். அது ஆங்கிலேயர்களின் மரபு. தயவு செய்து தப்பாக நினைக்க வேண்டாம்.

வணக்கம் என்னும் சொல்லைத் தமிழர்களாகிய நாம் பண்பாட்டுக் கலப்பு இல்லாமல் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும். எல்லாக் காலத்திற்கும் பொருந்தி வரும் சொல்லாக ‘வணக்கம்’ அமைந்து இருக்கிறது.

மற்ற பண்பாடுகளுடன் கலந்துவிட்ட ‘காலை வணக்கம்’, ‘நண்பகல் வணக்கம்’, ‘மாலை வணக்கம்’ போன்ற சொல் தொடர்கள் தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டிற்கு முரண் பட்டவையாக உள்ளன என்பது என் கருத்து. 
 



 ஆக வணக்கம் என்பதை வணக்கம் என்று சொல்வதே சாலப் பொருத்தம். சாலவும் சிறப்பு.

உடனடியாக மாற்றுங்கள் என்று சொல்லவில்லை. காலப் போக்கில் சன்னம் சன்னமாய் மாற்றிக் காட்டலாமே. யாரையும் வற்புறுத்தவில்லை. ஏன் என்றால் பழக்க தோஷம் என்னையும் விடவில்லை. 

சில வேளைகளில் நானும் காலை வணக்கம் கலந்த படச் செய்திகளைப் பகர்வதும் உண்டு. பகிர்வதும் உண்டு. சன்னம் சன்னமாய் மாற்றிக் காட்டுவோம்.

25 ஜூலை 2017

சசிகலா என்றும் நித்தியகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை. ஆனாலும் சிறையின் விதிமுறைகளைச் சசிகலா மீறி இருக்கிறார். இந்தச் சிறைமீறல் குற்றச்சாட்டுக்கள் உறுதிபடுத்தப் பட்டால் மேலும் பல ஆண்டுகள் கூடுதலாகச் சிறைத் தண்டனை கிடைக்கலாம். 
 

சசிகலாவைப் பொருத்த வரையில் கிடைத்தாலும் ஒன்றுதான் கிடைக்காமல் போனாலும் ஒன்றுதான்.

சிறையில் சசிகலாவுக்கு ஒதுக்கப் பட்டவை 5 அறைகள்; அங்கே அவருக்குக் கொடுக்கப்பட்ட இருந்த வி.ஐ.பி. வசதிகள்; நட்சத்திர ஓட்டல் வாழ்க்கை; அடுத்து பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரம் போன்ற அனைத்து விவரங்களும் கசியத் தொடங்கி விட்டன.



பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு உண்மையிலேயே நட்சத்திர ஓட்டல் போல் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன என்று பெங்களூரு சிறைத் துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபா சொல்லப் போய் அதுவே கர்நாடக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறது. டி.ஐ.ஜி ரூபா சொல்கிறார்... சசிகலாவுக்கு...

தனி சமையல் அறை; 
ஓய்வு எடுக்க தனி அறை; 
படுப்பதற்கு ஓர் அறை; 
ஒரு வெற்று அறை;
சோபா இருக்கை சந்திப்பு அறை;  

இப்படி மொத்தம் அவருக்கு மட்டும் 5 அறைகள். இதற்காக 2 லிருந்து 5 கோடி ரூபாய் வரை பணம் கைமாறி இருக்கிறது.


சசிகலாவை மற்ற கைதிகள் நெருங்கவே முடியாதபடி அவருக்கு என்று தனிப்பட்ட அறை. வேறு யாரும் உள்ளே நுழைய முடியாத அளவிற்குத் தடுப்புப் சுவர் வேறு.

சிறையில் இருக்கும் சசிகலாவை அவரின் உறவினர்கள் அல்லது கட்சிக்காரர்கள் சந்திக்க வேண்டும் என்றால் அந்தச் சந்திப்புக் காட்சிகளை வீடியோ கேமரா கண்காணிப்பில் தான் நடக்க  வேண்டும்.

ஆனால் சசிகலாவுக்கு அப்படி அல்ல. அவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்த பார்வையாளர் அறையில் கேமரா வசதிகள் அகற்றப்பட்டு உள்ளன. 



வீட்டில் இருப்பது போலவே சசிகலா சகல வசதிகளுடன் சிறையில் இருக்கிறார் என்று பெங்களூரு பத்திரிகைகள் டி.ஐ.ஜி. ரூபாவை மேற்கோள் காட்டி பக்கம் பக்கமாக எழுதிக் குவிக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகளைச் சிறைத் துறை டி.ஜி.பி. சத்யநாராயண ராவ் மறுத்துப் பேசினார்.

அவர் சொன்னார்: ''வி.வி.ஐ.பி. என்ற அடிப்படையில் பாதுகாப்பு விதிகள் சசிகலாவுக்குக் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. ரூபா சொல்வது போல சிறப்பு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை... என்கிறார் சத்தியம் தவறாத சத்யநாராயண ராவ்.

ஆனால் சசிகலாவுக்குச் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்து இருப்பது போல ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.



இந்த நிலையில் சசிகலாவை வேறு ஒரு சிறைக்கு மாற்ற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப் படுகிறது. அப்படி சிறை மாற்றப் பட்டால் தும்கூருவில் உள்ள மகளிர் சிறைக்குச் சசிகலாவை மாற்றலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சசிகலாவுக்குச் சொகுசு வசதிகள் கிடைக்க கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் உதவி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் தும்கூருவைச் சேர்ந்தவர். அவர் ஆஸ்திரேலியாவில் தொழில் செய்து வருகிறார். அங்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பை நடத்தி வருகிறார். 



இவர் அ.தி.மு.க.(அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு நெருக்கமானவர். இவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளுடன் தொடர்புகளை வைத்துக் கொண்டு சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க உதவிகள் செய்து இருக்கிறார்.

அவர் மூலமாகச் சிறை அதிகாரிகளுக்குக் கோடிக் கணக்கான ரூபாய் பணம் லஞ்சமாக கைமாறி உள்ளது. சிறையில் வேலை செய்த சிலருக்கு மாதச் சம்பளத்தைப் போல் லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் சொல்லப் படுகிறது.

24 ஜூலை 2017

எண் கணித மேதை முத்தையா

வானொலி தொலைக்காட்சிப் புகழ் எண் கணித மேதை முத்தையா (Dr. Muthaya). இவரின் அசல் பெயர் தஜுடின் ஜமால் முகமட். (Thajhuteen Jamal Mohammad). வயது 58. 



தன்னுடைய எண் கணித ஆற்றலின் மூலமாகப் பலரின் எதிர்காலத்தை மாற்றி அமைக்க முடியும் என்று விளம்பரம் செய்தவர்.

தங்காக் நகரில் உள்ள ஒருவரிடம் 52,000 ரிங்கிட் ஏமாற்றி மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 


கடந்த 20.07.2017-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டு தங்காக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார். இவர் மீது மேலும் 13 மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

தன்னுடைய எதிர்காலத்தையே இவரால் நிர்ணயிக்க முடியவில்லையே. அப்படி இருக்கும் போது எப்படி இவர் மற்றவர்களின் எதிர்காலத்தை மாற்றி அமைக்க முடியும். வேதனையான விசயம்.

சான்று: 
https://m.utusan.com.my/berita/mahkamah/8216-tukang-tilik-8217-dituduh-salah-guna-rm52-000-1.505174

23 ஜூலை 2017

ஹிண்ட்ராப் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு

இலண்டன், ஜூலை 22, 2017

பிரிட்டிஷ் மலாயாவில் தொடங்கி இன்றைய மலேசியாவிலும் தீர்க்கப் படாமல் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் இந்தியர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் ‘ஒடுக்கப்பட்ட உரிமைக் குரல்’ என ஹிண்ட்ராப் வழக்கு தொடர்ந்துள்ளது என்று அதன் தலைவர் பொன். வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

மலேசிய இந்திய தோட்டப் பாட்டாளி வம்சாவளியினர் பல்வேறு மனித உரிமை மீறலுக்கு இன்றளவும் ஆளாவதற்கு பிரிட்டிஷ் ஆட்சிதான் காரணம் என்ற அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை 18-07-2017 அன்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றப் பதிவாளரிடம் முறையான வழக்கு மனு ஹிண்ட்ராப் கட்சி சார்பில் சார்வு செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மனித உரிமை மாநாட்டின் 34-ஆவது விதிப்படி, மலாயா இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களின் வம்சாவளி சார்பில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

பிரிட்டீஷ் நீதிமன்றத்தில் ஹிண்ட்ராப் மேற்கொண்ட சட்ட நடைமுறை நீர்த்துவிட்ட நிலையில் இந்தப் புதியப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் துணை அமைச்சருமான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இதன் தொடர்பில் இங்கிலாந்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை 1-04-2016இல் பிரிட்டிஷ் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கை விசாரித்த ஒற்றை நீதிபதியான ஹெண்டர்சன், பிரிட்டிஷ் மலாயாவில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் அடியோடு புறக்கணிக்கப் பட்டதற்கு பிரிட்டிஷ் மகாராணி தான் பொறுப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்து மேல்முறையீட்டு நிதிமன்றத்தில் செய்த மனுவும் இவ்வாண்டு ஜனவரி மாதம் 19-ஆம் நாள் தள்ளுபடி செய்யப் பட்டது.

இப்படிப்பட்ட நிலையில்தான், இந்தப் பிரச்சினை ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

நூற்றுக் கணக்கான பக்கங்களை ஆவணங்களாகக் கொண்டு ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் தொடரப் பட்டுள்ள இந்த வழக்கில், பிரிட்டிஷ் அரசால் ‘டிகிளாசிஃபைட்’ (declassified) செய்யப்பட்ட சட்ட ஆவணங்களும் இணைக்கப்பட்டு உள்ளன.

மலாயா அரசியல் சாசனத்தை பிரிட்டிஷ் அரசு ஒருங்கிணைத்த போது, இந்தியத் தோட்டத் தொழிலாளர் குறித்த நலனில் சிறிதும் அக்கறை கொள்ளாமல் அப்பட்டமான மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தகவலும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்ற கட்ட அமைப்பை கடந்த 1953-இல் பிரிட்டீஷ் அரசு ஏற்றுக் கொண்டதுடன், அப்போது பிரிட்டீஷ் ஆதிக்கத்தில் இருந்த மலாயாவிற்கும் இது பொருந்தும் என்ற ஒப்பந்தமும் அப்போது ஏற்படுத்தப் பட்டது.

இதன் தொடர்பில் 1954-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசுக்கும் மலாயா பிரிட்டீஷ் உயர் ஆணையருக்கும் தகவல் பரிமாற்றமும் இடம்பெற்று உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட இந்திய தோட்டத் தொழிலாளர்களின் தலைமுறையினருக்கு உரிய நீதியைப் பெறுவதில் ஓயப் போவதில்லை என்று இலண்டனில் பொன். முனியாண்டி தெரிவித்தார்.

2007-இல் தொடங்கிய இந்த சட்டப் போராட்டம் பத்து ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையில், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மலேசிய இந்தியர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதில் இருந்து ஹிண்ட்ராப்  கட்சி அயரப் போவதில்லை.

ஏறக்குறைய 150 ஆண்டுகளாக இந்த மலேசிய மண்ணில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டீஷ் அரசாங்கத்தின் இன்றைய நீதி பரிபாலனத்திலும் மலேசிய இந்தியர்களின் உரிமை மறுக்கப்பட்டு உள்ளது என்பதற்கான சான்றுதான் நீதிபதி ஹெண்டர்சன் விசாரணைக்கு ஏற்காமலேயே வழக்கை தள்ளுபடி செய்தது.

மொத்தத்தில் மலேசிய இந்தியர்களுக்கான உரிமை மீறலை இன்னமும் இங்கிலாந்து அரசு தொடர்கிறது.

இதன் தொடர்பில் இலண்டனில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இக்கண்
பொன்.வேதமூர்த்தி
தலைவர்
ஹிண்ட்ராப்.

கோலாலம்பூர்.

21-07-2017

19 ஜூலை 2017

எம்.ஜி.ஆர் - தேங்காய் சீனிவாசன்

தேங்காய் சீனிவாசன் நடித்த படங்களில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசி நடிப்பார். ஆனால் எம்.ஜி.ஆரோடு அரசியலில் இருந்தாரா? தேங்காய் சீனிவாசனுக்கு எம்.ஜி.ஆர் உதவிகள் செய்தாரா?


எம்.ஜி.ஆரை வாத்தியாரே, அண்ணன், துரை, சாமி என்று தேங்காய் சீனிவாசன் சொல்லும் போது எல்லாம் ஒரு வெறித் தனமான ரசிகனின் குரல் புலப்படும். திரையில் மட்டும் அல்ல. நிஜத்திலும் எம்.ஜி.ஆரை நேசித்தவர். அ.தி.மு.க. கட்சி ஆரம்பித்த போது அதில் இணைந்தார். பிரசாரத்திலும் பங்கேற்றார்.

ஓர் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எம்.ஜி.ஆ.ர் சென்று இருந்தார். அதற்குப் பக்கத்து தளத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்துக் கொண்டு இருப்பதாகத் தகவல் சொல்லப் பட்டது. உடனே செட்டுக்குப் போய் அவரைப் பார்த்து பேசிவிட்டு வந்தார் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட நட்பு இருவருக்கும்.


தேங்காய் சீனிவாசன் தன் இறுதிக் காலத்தில் 'கிருஷ்ணன் வந்தான்’ என்ற படத்தை எடுத்தார். நிதி நெருக்கடியால் அந்தப் படம் பாதியில் நின்று போனது. இந்தத் தகவல் எம்.ஜி.ஆருக்குத் தெரிந்ததும் தேங்காய் சீனிவாசனை வர வழைத்துப் பணம் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.


தேங்காய் சீனிவாசன் இறந்த போது எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப் பட்டு இருந்தார். எம்.ஜி.ஆர். வருவாரா வர மாட்டாரா என்ற ஒரு சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர். வந்தார். வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் போகும் போது தேங்காய் சீனிவாசனின் மகளையும் ஏற்றிக் கொண்டு சென்றார்.

சற்று நேரத்தில் கார் நின்றது. சீனிவாசன் மகள் மட்டும் இறங்கி வந்தார். அவரிடம் எம்.ஜி.ஆர். பணம் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

தேங்காய் சீனிவாசன் கலந்து கொண்ட கடைசி கூட்டம் மும்பையில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா. அந்த அளவுக்கு இருவரும் இணை பிரியாதவர்களாக வாழ்ந்தவர்கள்.