30 செப்டம்பர் 2017

ஜொகூர் பாக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின்


ஜொகூர் மாநிலத்தின் பாக்காத்தான் ஹரப்பான் தலைவராகப் பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவரான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அம்னோ கட்சி ஜொகூர் மாநிலத்தில் தான் முதன்முதலில் தோற்றுவிக்கப் பட்டது. 

அடுத்து வரும் 14-வது பொதுத் தேர்தலில் ஜொகூர் மாநிலத்தைத் தனது முன்னணி மாநிலமாக முன்னிறுத்தி பாக்காத்தான் ஹரப்பான் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

மொகிதின் யாசின் அம்னோவில் இருந்து விலக்கப் பட்டதால் ஜொகூர் மாநிலத்தில் அதிருப்தி நிலவுகிறது. அடுத்த பொதுத் தேர்தலில் ஜொகூர் மாநிலத்தில் கடுமையான போட்டிகள் நிலவும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஜொகூரின் 26 நாடாளுமன்றத் தொகுதிகளில் சுமார் 15 தொகுதிகளில் வெற்றி காண எதிர்க் கட்சிகள் திட்டம் கொண்டுள்ளன.

ஜொகூரில் மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகள். அவற்றில் தற்போது 19 சட்டமன்றத் தொகுதிகளை எதிர்க் கட்சிகள் தங்கள் வசம் கொண்டுள்ளன. மாநில ஆட்சி அமைக்க 28 சட்டமன்றத் தொகுதிகள் தேவை.

தியான் சுவா - சிறையில் பகவத் கீதை




தியான் சுவா என்பவர் பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். பி.கே.ஆ.ர் கட்சியின் உதவித் தலைவர். பற்பல போராட்டங்களில் கலந்து கொண்டு கைதாகித் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர். பற்பல விசாரணைகளுக்கு உள்ளானவர். இருந்தாலும் இப்போதுதான் முதன் முறையாக ஒரு மாத சிறைவாசம் பெற்றார்.

காஜாங் சிறையில் அவர் தனது அடுத்த ஒரு மாத காலத்தைக் கழிக்கும் போது அங்கே பகவத் கீதையையும், சமஸ்கிருத மொழியையும் படிக்கப் போவதாகச் சொல்கிறார். பகவத் கீதையின் வழி இந்து மதம் குறித்து மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றார்.


அவருக்கு அந்தப் புத்தகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அவற்றை அவர் சிறைக்குள் கொண்டு செல்ல அனுமதி கோரி இருக்கிறார். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. 

ஏப்ரல் 2012-ஆம் ஆண்டு பெர்சே - 3 பேரணியின் போது போலீஸ் பயிற்சி மையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை விட்டு வெளியேறும்படி போலீசார் உத்தரவிட்டதை தியான் சுவா ஏற்க மறுத்தார். அதனால்  கைது செய்யப் பட்டார். 


அவர் மீது வழக்கு தொடுக்கப் பட்டது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அவருக்கு 1000 ரிங்கிட் அபராதமும் 1 மாத சிறைத் தண்டனையும் வழங்கியது.


அந்தத் தீர்ப்புக்கு எதிராக தியான் சுவா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தார். நேற்று வெள்ளிக்கிழமை அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தியான் சுவா தன் மேல்முறையீட்டை மீட்டுக் கொண்டார். அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர் ஒரு மாத சிறைவாசத்தையும் அனுபவிக்கத் தயார் ஆனார்.


தனது சிறைவாசக் காலத்தின் போது பகவத் கீதை, சமஸ்கிருதம், லத்தீன் மொழி, பைபிள் படிப்பதற்கும் அவர் ஆர்வமாக இருக்கிறார் என்று அவரின்  வழக்கறிஞரும் பி.கே.ஆர். கட்சியின் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேந்திரன் தெரிவித்து இருக்கிறார்.

27 செப்டம்பர் 2017

ஹலோ எப்படி வந்தது

தொலைப்பேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் (Alexander Graham Bell) அவரின் முதல் தொலைப்பேசி சொற்கள். "Mr. Watson--come here--I want to see you." 1876 மார்ச் 10-ஆம் தேதி பேசப் பட்டது.



பின்னர் ஆஹோய் (Ahoy) எனும் சொல்லைப் பயன்படுத்தினார். அதற்கு மாறாக தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Edison) அவர்கள் தான் ஹுல்லோ (Hullo) எனும் சொல்லை அதிகம் பயன்படுத்தினார். 

ஆஹோய் எனும் சொல் தான் ஹுல்லோ என்று புதுவடிவம் எடுத்தது. அதுவே ஹலோ (Hello) என்று இப்போது பரவலாகிப் போனது.

இத்தாலியைச் சேர்ந்த அன்டொனியோ மியூசியோ (Antonio Meucci) என்பவரே முதன் முதலாக தொலைபேசியைக் கண்டுபிடித்தவர். 1860-ஆம் ஆண்டில் மியூசியோ அந்த முதலாவது தொலைத் தொடர்பு சாதனத்தைக் கண்டுபிடித்தவர்.

அது கிரஹாம் பெல் 1876-ஆம் ஆண்டு கண்டுபிடித்த தொலைபேசியை விட 16 ஆண்டுகளுக்கு முந்தையது. மியூசியோவின் கண்டுபிடிப்பை அமெரிக்கா நாடாளுமன்றத்தில் 2002ஆம் ஆண்டு ஜுன் 19ஆம் தேதி அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்தார்கள். அதனால் அதுவே முதல் தொலைபேசி என்று இன்றும் சொல்லப்படுகிறது.



Bell placing the first New York to Chicago telephone call in 1892

எனினும் உலகம் மக்கள் முழுமைக்கும் இன்று வரை தொலை பேசி என்றாலே கிரஹாம் பெல் என்றே பதிந்து விட்டது. அது தப்பு. 1871-ஆம் ஆண்டு அமெரிக்காவில் வாழ்ந்த இத்தாலிய நிபுணர் அண்டோனியோ மியூசியோ தான் தொலைப்பேசியை முதன்முதலில் கண்டுபிடித்தவர்.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஸ்காட்லாண்டில் பிறந்து அமெரிக்கரான அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்; அடுத்து அமெரிக்கர் எலிஸா கிரே (Elisha Gray). 


இருந்தாலும்  வாய்ப் பேச்சை அனுப்பவும், காதில் கேட்கவும் பழக்கத்திற்குப் பயன்படும் ஒரு சரியான தொலைப்பேசிச் சாதனத்தை முதலில் ஆக்கிப் பதிவு செய்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல். அந்தப் பெருமை அவருக்கே.


Johann Philipp Reis (1834–1874) publicly demonstrated the Reis telephone

எலிஸா கிரேயின் தொலைப்பேசி சாதனமும் அதே சமயத்தில் தயாரானது. சிறப்பாக வேலை செய்தது. இருந்தாலும் யார் முதலில் உரிமை படைத்தவர் என்ற வழக்கு நடந்தது. அதில் கிரஹாம் பெல் வெற்றி பெற்றார். அவரே தொலைபேசியின் முதல் படைப்பாளர் என்றும் கருதப் படுகிறார்.

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் தனது புதிய கருவியை வர்த்தகத் தொழிற்துறை உற்பத்திக்குப் பயன் படுத்துவதற்கு பதிவு உரிமை பெற்றார். அதுவே அவரைத் தொலைபேசியின் தந்தை என்று புகழாரம் செய்து உள்ளது.


Source: 1. Bruce, Robert V. (1990). Bell: Alexander Graham Bell and the Conquest of Solitude. Cornell University Press.

2. Casson, Herbert Newton. (1910) The history of the telephone online.

நெருப்பு இல்லாமல் புகை வராது

ஒருவரின் கருத்து மற்றவருக்குப் பொருந்தி வராத கட்டத்தில் அந்தக் கருத்து ஒரு தப்பான கருத்து என்று ஒரு சிலர் முடிவு செய்கிறார்கள். அதே கருத்து அவருக்குப் பொருந்தி வரும் கட்டத்தில் அதுவே நல்ல கருத்தாக மாற்றம் பெறுகிறது. 

ஒருவரின் கருத்தைத் தவறாக எடுத்துக் கொள்வதும் அல்லது நல்லதாக எடுத்துக் கொள்வதும் அவரவர் மனநிலை, தெளிவாகச் சிந்திக்கும் நிலையைப் பொருத்த விசயங்கள்.

தப்பான கருத்து என்று முடிவு செய்வதற்கு முன்னர் ஏன் அந்தக் கருத்து நல்லதாக இருக்கக் கூடாது என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். அதில் உள்ள எதார்த்த உண்மைகள் தெரிய வரும். அதே அந்தத் தப்பான கருத்து நல்ல கருத்தாகத் தெரிய வரலாம்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நம்மிடம் குறை இல்லாமல் எப்போதுமே யாருமே நம் மீது வீணாகக் குறை சொல்ல மாட்டார்கள். ஏதோ ஒரு குறை இருக்க வேண்டும். அதை மறந்துவிட வேண்டாம்.

நம்முடைய செயல்பாடுகளில் நடைமுறைக் கோளாறுகள் இருந்தால் மட்டுமே மற்றவர்கள் கருத்துகள் சொல்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றன. அதை மறக்க வேண்டாம். நெருப்பு இல்லாமல் புகை வராது.

தொலை பேசியா - தொலைப்பேசியா

தொலைப்பேசி என்பதே சரியான சொல். தொலை + பேசி = தொலைப்பேசி. இங்கே வலி மிகும். 


தொலைக்காட்சி என்று சரியாகச் சொல்லும் நாம் தொலை பேசி என்று மட்டும் ஏன் பிழையாகச் சொல்கிறோம். புரியவில்லை. தொலை பேசி என்றால் பேசியைத் தொலைத்துவிடு என்று அல்லவா பொருள் படுகிறது.

தொலைவில் இருந்து காணக் கூடியது தொலைக்காட்சி. அப்படி என்றால் தொலைவில் இருந்து பேசக் கூடியது தொலைப்பேசி தானே? பின்னர் ஏன் பலர் தொலைபேசி எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.