12 மே 2018

மலேசிய இந்தியர்களின் மாற்றம்

மாற்றம் ஒன்றே மாறாதது. இரவு பகலாகிறது. பகல் இரவாகிறது. பூ காயாகிறது. காய் கனியாகிறது. கனி செடியாகிறது. செடி மரமாகிறது.

ஒரு குழந்தை பெண் ஆகிறாள். ஒரு பெண் தாய் ஆகிறாள். ஒரு தாய் பாட்டி ஆகிறாள். இளமை தேய்கிறது. முதுமை சாய்கிறது. அந்த முதுமை அப்படியே நலிந்து போய் மக்கி மண்ணாகிப் போகின்றது.


அந்த இடத்தில் புல்லும் பூக்கிறது. பூண்டும் பூக்கிறது. மறுபடியும் அங்கே ஒரு மாற்றம் மலர்கின்றது. இதைத் தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்கிறோம்.

மலேசியவாழ் இந்தியர்கள் ஒரு மாற்றத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்தார்கள்.

கடைசியில் தங்களின் இன உரிமைப் போராட்டத்தில் களம் இறங்க வேண்டிய ஓர் இறுக்கமான ஓர் இக்கட்டான சூழல். அவர்களின் எதிர்காலச் சந்ததியினருக்காக ஒரு மாற்றத்தைச் செய்ய வேண்டிய ஓர் அர்ப்பணிப்பு நிலை. ஒரு விழிப்புணர்வு நிலை.



ஆக மாற்றம் என்பதே நேற்று வரை மலேசிய இந்தியர்களின் ஒரு மாற்றுச் சிந்தனை இலக்காகவே இருந்தது. ஒரு நல்ல ஒரு மாற்றம் வர வேண்டும் என்று நம்பிக்கை வைத்தார்கள். மாற்றியும் காட்டி விட்டார்கள். மாற்றி அமைத்த மலேசிய மக்களுக்கு நன்றிகள் ஆயிரம்.

அவர்களின் கோப தாபங்கள்; அவர்களின் இனப் பின்புலங்கள்; அவர்களின் சமூகக் கோட்பாடுகள்; அவர்களின் தனிமனித உணர்வுகள்; இவற்றை எல்லாம் ஒதுக்கித் வைத்தார்கள்.

அரசியல்வாதிகள் அவ்வப்போது ஆங்காங்கே அள்ளித் தெளித்த அற்ப காசுக்கு விலைபோன வீரமற்ற விளம்பரக் கூஜா தூக்கிகளை நினைத்துப் பார்த்தார்கள்.


ஆண்மை இழந்த ஒரு சில சமூகத் தலைவர்களையும் நினைத்துப் பார்த்தார்கள். உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கு அப்பாவிப் பொது மக்களிடம் காட்டிய அநியாயங்களை அப்படியே மறைத்து அரசியல்வாதிகளுக்கு ஆலாபனை செய்த அந்த அடிவருடிகளை நினைத்துப் பார்த்தார்கள்.

வேசிகள் எப்படி தம் உடல்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறார்களோ அதே போல் இந்தக் அடிவருடிகளும் பணம் சம்பாதித்தார்கள்.

அரசியல்வாதிகளின் அநியாயத்தை தட்டிக் கேட்க, பொதுமக்கள் அனைவரும் வீதியில் இறங்கினார்கள். செருப்பால் அடிக்காத குறை. எச்சில் உமிழ்ந்தது போல் ஆட்சியை மாற்றி அமைத்தார்கள்.



 22 ஆண்டுகள் ஆட்சி செய்த துன் மகாதீர் மட்டும் தப்பு செய்யவில்லையா என்று பலரும் கேட்டார்கள். எவர் தான் தவறு செய்யவில்லை. சொல்லுங்கள்.

தலையே போய்க் கொண்டு இருந்தது. இதில் அப்படி என்னங்க முழங்கால் போகிறது முண்டம் போகிறது என்கிற பேச்சு. அணை உடைந்து வெள்ளம் வீட்டு வாசல் வரை வந்து கதவைத் தட்டிப் பார்க்கின்றது. சும்மா இருக்கலாமா.

அந்தச் சமயத்தில் மழை ஏன் வந்தது எப்படி வந்தது என்று எல்லாம் ஆராய்ச்சி பண்ணலாமா. கடந்து போனதைப் பற்றி பேசுவதில் அர்த்தமும் இல்லை. இப்படி கேட்டுக் கொண்டே இருந்தால் ஆகப் போவது ஒன்றும் இல்லை. நிலைமை மேலும் மோசமாகிப் போகும் என்று முடிவு செய்தார்கள்.



 ஒன்று மட்டும் உண்மை. நஜீப் பிரதமராய் இருந்த காலக் கட்டத்தில் எக்கச் சக்கமான கொள்ளைக்காரர்கள். மலிந்து போய் கிடந்தார்கள். தடுக்கி விழுகிற இடத்தில் எல்லாம் திருட்டு மாங்காய்கள்.

மகாதீர் கொள்ளை அடித்தார். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நாட்டை நன்றாகப் பார்த்துக் கொண்டார். நஜீப் மாதிரி இப்படி ஒரு மோசமான நிலைக்கு நாட்டைக் கொண்டு செல்லவில்லை. விலைவாசியை ஏற்றி வைத்துச் சங்கை அறுக்கவில்லை.

இப்படியே விட்டால் இந்த நாடு விரைவில் திவாலாகி விடும். 100% உண்மை. காசு பணம் உள்ளவர்களுக்கே பிரச்சினை என்றால் பாவம் ஏழை எளியவர்கள் என்னங்க செய்வார்கள் என்று சொல்லி ஒட்டு மொத்த மலேசியர்களும் விழித்துக் கொண்டார்கள்.



மகாதீர் என்பவர் தன் தவற்றை உணர்ந்து விட்டார். தான் கண்ணை மூடுவதற்குள் இந்த நாட்டை மீட்டு எடுக்க வேண்டும் என்பதே அவரின் அப்போதைய தீர்க்கமான நோக்கம். அவரின் இந்த 93 வயதிலும் களம் இறங்கி உள்ளார் என்பதே ஒரு பெரிய விசயம். அவருக்கு உதவியாக மலேசிய மக்கள் ஆதரவு கரம் நீட்டினார்கள். வெற்றியும் பெற்றார்கள்.

அன்பான வாசகர்களே உங்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள். உங்கள் வீட்டில் அப்பா அம்மா, தாத்தா பாட்டி மற்ற எல்லோரிடமும் இப்போது நம் நாடு இருக்கும் உண்மையான நிலைமையை விவரமாக எடுத்துச் சொல்லுங்கள்.

இந்த நாட்டின் இப்போதைய அரசியல் நிலவரம் பற்றி சரியாகத் தெரியாமல் அந்தப் பெரியவர்கள் எஞ்சிய காலத்தை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். உண்மை நிலையை எடுத்துச் சொல்லுங்கள்.



ஒன்றை மட்டும் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். மகாதீர் அரசியல் அனுபவம் இல்லாதவர் அல்ல. அவரின் பொறுப்பு ஏற்று இருக்கும் தலைமைத்துவத்திற்குத் துணிந்து தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.

அவர் வந்தால் மட்டும் தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று பெரும்பாலான சீனர்களும், மலாய்க்காரர்களும் அன்றும் இன்றும் திண்ணமாக திடமாக நம்பினார்கள்.

அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து அவருடன் அணிவகுத்துச் செல்ல தயாராகி விட்டார்கள். அவர்களைப் போல நாமும் மகாதீர் மீது நம்பிக்கை வைப்போம். செயல் படுவோம். அவருக்கு ஆதரவாக இருப்போம்.



நம் இந்திய இளையோர்களிடம் காணப்படும் நடைமுறை விழிப்புணர்வு நம் பெரியவர்களிடம் மிதமாகவே குறைந்து காணப் படுகிறது. சஞ்சிக்கூலிகளாய் வந்த காலத்தில் இருந்தே தாய்க் கட்சிக்குதான் ஆதரவு என்று சொல்கிறார்கள். இருக்கட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை.

இப்போதைய சூழ்நிலையில் இப்போது நாடு இருக்கும் சூழலில் ஒரே ஒரு மாற்றத்தைச் செய்து காட்ட வேண்டும். அதுதான் நம்முடைய இப்போதைய பணிவான வேண்டுகோள். செய்து காட்டிவிட்டோம். ஆனால் தொடர வேண்டும்.

உயர் மட்டத்தில் இருக்கும் ஒரு சிலர் பொது மக்களை ஏமாற்றி அவர்களின் பணத்தைக் கொள்ளை அடித்து மாட மாளிகைகள் கட்டி நாட்டையே சீரழித்து விட்டார்கள். இந்த விசயம் அந்தப் பெரியவர்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. பட்டும் படாமல் இருக்கிறார்கள். ஆகவே உண்மையான நிலவரம் அவர்களுக்குத் தெரிய வேண்டும்.



 இனிமேலும் மகாதீரின் பழைய குற்றங்களைப் பார்த்து ஒன்றும் நடக்கப் போவது இல்லை. அவரை விட்டால் தலைமை தாங்க இப்பொதைக்கு வேறும் யாரும் இல்லை. இப்போதைக்கு மகாதீர் மட்டுமே சரியான நேரத்தில் சரியான தலைவர். இவரைத் தவிர வேறு யாரும் இப்போதைய நடைமுறை தலைமைத்துவத்தை வழிநடத்த முடியாது.

அன்வார் அவர்கள் சிறையில் இருக்கிறார். தலைமை ஏற்க முடியாது. வான் அசிசா அவர்களால் முடியும். ஆனால் இப்பேர்ப்ப்ட்ட களேபரத்தில் அவர் துணிய வேண்டும். முடியுமா என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறி.

அனேகமாக அன்வார் அவர்களுக்கு நாளை அரசு மன்னிப்பு கிடைக்கலாம்.

மகாதீர் அவர்கள் இப்போதைய அரசியல் நிலையை நன்றாகத் தெரிந்து கொண்ட பின்னர் தான் திரும்பவும் அரசியலுக்கு வருகிறார். ஆக மீண்டும் தவறு செய்ய மாட்டார் என்று நம்புவோம்.



முதலில் நாம் பிறந்த இந்தப் பச்சை மண்ணிற்காக ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். தமிழர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள் என்று பேதத்தை இப்போதைக்கு நினைத்துப் பார்க்க வேண்டாம். நம்முடைய இலக்கு என்பது ஒரு மாற்றம். அதை மட்டுமே கூர்ந்து அணுகிப் பயணிப்போம்.

ஒரு தடவை அல்ல ஆயிரம் தடவை யோசித்துப் பாருங்கள். நம் எதிர்காலத்திற்கும் நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் நாம் மாறித் தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை.

இப்போதைய காலக் கட்டத்தில் நாம் சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சம்கூட சேமிக்க முடியவில்லை. வேலை இடத்தில் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. நிம்மதியாக சாப்பிட முடியவில்லை. நிம்மதியாக தூங்க முடியவில்லை. நாளைக்கு என்ன நடக்கப் போகிறதோ எனும் ஓராயிரம் கவலைகள்.

நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு கணிசமான தொகை ஜி.எஸ்.டி. வரிக்கே போய்ச் சேர்கிறது. பொருட்களின் விலை அன்றாடம் ஏறிக் கொண்டே போகிறது.

எதைத் தொட்டாலும் பதை பதைக்கும் விலை. என்னதான் செய்வது என்று தெரியாமல் ஒவ்வொருவரும் விழிப் பிதுங்கித் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

குடும்பத்திற்கு ஓர் ஆபத்து என்றால் என்ன செய்வது என்று தெரியாமல் வெம்பி வெதும்பி வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒன்று மட்டும் உண்மை. ஒரு சில உயர்மட்டப் பேர்வழிகள் பொது மக்களைத் தவிக்க விட்டு விட்டு அந்தப் பொது மக்களின் பணத்தில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். அநியாயம்.

அந்தப் பேர்வழிகளில் ஒருவர் தன் மனைவியின் அழகு சாதனங்களுக்கும்; அவரின் குடும்பத்தார் பயன்படுத்தும் விலையுயர்ந்த பொருட்களுக்கும்; மனைவியின் ஆடம்பரச் செலவுகளுக்கும் பொது மக்களின் பணத்தை விரயம் செய்து வந்தார்.

வியர்வையும் இரத்தமும் சிந்திய ஏழை மக்களின் வரிப்பணத்தில் இப்படியும் ஓர் ஆடம்பர வாழ்க்கையா. சொல்லுங்கள்.

நம்முடைய ஒவ்வொரு நாளின் அடிப்படை தேவைகளுக்கு நாம் இப்போது சம்பாதிக்கும் பணம் சத்தியமாகப் பற்றவில்லை. என்ன செய்வது. பட்டப் பகலிலேயே கொள்ளை அடிக்கும் கூட்டம் இருக்கும் வரையில் ஏழைகள் பரம ஏழைகளாகி வருகிறார்கள். இதுதான் சத்தியமான உண்மை.

ஆக ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். துன் மாகாதீர் தலைமை பீடத்தில் மட்டுமே நம் அனைவருக்கும் பாவ விமோசனம். அது ஒன்று தான் நம் எதிர்காலத்தின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும்.

நம் இந்தியச் சமுதாயத்திற்கு ஒரு மாற்றம் வேண்டும்; கண்டிப்பாக ஒரு மாற்றம் வரவேண்டும். இந்த நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

அதற்கு எப்படியும் குறைந்தது இன்னும் ஒரு பத்துப் பதினைந்து வருடங்களாவது பிடிக்கும். அந்தப் புனரமைப்பு பணி அப்படி ஒன்றும் எளிதான காரியம் அல்ல. நிர்வாகக் கட்டுக் கோப்பு மிக மிக அவசியம்.

வெளிநாட்டில் இருந்து வந்த வங்காளதேசிகளைப் பாருங்கள். இந்தோனேசியர்களைப் பாருங்கள். இந்த நாட்டிற்குக் கள்ளத் தனமாக வந்த ஆயிரக் கணக்கான பலர் இப்போது நீல நிற அடையாள அட்டைகளில் ஊர்க்கோலம் போகிறார்கள். ஞாயிற்றுக் கிழமையில் கோலாலம்பூர் வங்காளத் தேசிகளின் தலைநகரமாக மாறி விடுகிறது. போய்ப் பாருங்கள். தெரியும்.

இந்த வங்காளதேசிகள் நம் இனப் பெண்களிடமே அழகு காட்டி பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கி வருகிறார்கள். இன்னும் தொடர்கிறது. புத்தி கெட்ட நம் பெண்களும் பல்லைக் காட்டிக் கொண்டு போகின்றார்கள். எதைக் கழற்றி அடிப்பது என்று தெரியவில்லை.

அது மட்டும் இல்லீங்க. அப்படி ஒண்ட வந்த பிடாரிகளுக்கு எல்லாம் பணத்தை அள்ளிக் கொடுத்து ஓட்டுப் போட வசதியும் செய்து கொடுத்தார்களே. என்னங்க அநியாயம். என்னே கொடுமை.

ஆனால் இந்த நாட்டிலே பிறந்து இந்த நாட்டிற்கே தங்களின் உயிரையும் உடலையும் அர்ப்பணித்த இந்தியர்கள் பலருக்கு அடையாள அட்டை கொடுக்க வக்கு இல்லை. வெட்கம்.

நம்மவர்கள் பலர் இன்னும் சிவப்பு அட்டையில்தான் அழுது அழுது அழிந்து கொண்டு இருக்கிறார்கள்.

நமக்கும் சூடு சொரணை உண்டு. மலேசிய இந்தியர்கள் சோற்றில் உப்பு போட்டுத் தான் சாப்பிடுகிறார்கள் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

நமக்கு கிடைத்த இந்த ஐந்தாண்டு கால வாய்ப்பை தவறவிட்டால் இன்னும் ஒரு வாய்ப்பு நமக்கு இனி நமக்கு கிடைக்கப் போவது இல்லை. ஆகவே மகாதீரின் பக்காத்தான் ஆட்சிக்கு ஆதரவு வழங்குவோம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்களும் நானும் போய் விடுவோம். நாம் போன பிறகு நம் பிள்ளைகள் அழுது அழுது நம்மைச் சபிக்க வேண்டுமா. சொல்லுங்கள்.

என் இந்திய இனம் இந்த மண்ணில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். என் சந்ததியினர் எதிர்காலத்தில் நெஞ்சை நிமிர்த்தி நடக்க வேண்டும். அதுதான் என்னுடைய நெஞ்சார்ந்த விருப்பம். இப்போதே ஒரு முடிவு செய்யுங்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது

இந்த மண்ணின் எதிர்காலம்  சென்ற 9-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டு விட்டது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்வார்கள். மலேசிய இந்தியர்கள் பலரும் தீர யோசித்து தீர்க்கமாக முடிவு செய்து விட்டார்கள்.

மக்களின் தீர்ப்பு தான் இந்த நாட்டின் தலையெழுத்தையே முடிவு செய்தது. நல்ல ஒரு முடிவை எடுத்து விட்டார்கள்.

மலேசிய இந்தியர்கள் எடுத்த முடிவு அவர்களின் எதிர்காலத்தை மட்டும் அல்ல; அவர்ளின் பிள்ளைகளின் எதிர்காலத்தை மட்டும் அல்ல, அவர்களின் பேரப் பிள்ளைகளின் எதிர்காலத்தை மட்டும் அல்ல; அவர்களின் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலத்தை மட்டும் அல்ல; இந்த நாட்டின் ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்காலத்தையே மாற்றிப் போட்ட ஒரு முடிவாக அமைந்து போனது. மலேசிய இந்தியர்கள் எடுத்த முடிவை வாழ்த்துகிறோம்.

15 ஏப்ரல் 2018

தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருக்கு அநீதி

பீடோங், ஏப்.15-

கெடா பீடோங் வட்டாரத்தில் உள்ள சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியைக்கு பாலிங் மாவட்டத்தில் தொலைதூரத்தில் உள்ள கத்தும்பா தமிழ்ப்பள்ளிக்குத் திடீர் பணி  இட மாற்றம் செய்தது ஓர் அநீதி.

அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தொடர்ந்து சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியக் குழு, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் பெரும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

இந்தத் தலைமையாசிரியரை அந்தப் பள்ளியிலேயே தக்க வைக்க கெடா மாநிலக் கல்வி இலாகாவின் உயர் அதிகாரிக்குப் பெற்றோர் ஆசிரியர் சங்கம், வாரியக் குழு, பள்ளியின் ஆசிரியர்களின் கையொப்பங்கள் அடங்கிய கடிதம் ஒப்படைத்து நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தியது. மாற்றத்திற்குக் காரணம் சொல்லாத நிலையில் மாநிலக் கல்வி இலாகா கைவிரித்து விட்டது.

எந்தப் பலனும் கிடைக்காதப் பட்சத்தில் பெ.ஆ.சங்கமும் பள்ளி வாரியக் குழுவும் தலைமையாசிரியருக்கு ஆதரவாகப் போர்க்கொடி தூக்கி உள்ளது என்று பெ.ஆ.சங்கத் தலைவர் திருமதி வளர்மதி நிருபரிடம் கூறினார்

இந்தத் தலைமையாசிரியர் 2016-ஆம் ஆண்டு பள்ளிக்கு வந்தது முதல் பள்ளி பல நிலைகளில் முன்னேற்றம் கண்டு வருகிறது. மாணவர் கல்விநிலை, விளையாட்டில் பங்கெடுப்பு, பள்ளித் தோற்றம் என்று சொல்லிக் கொண்டு போகலாம் என்று பெ.ஆ.ச. தலைவர் திருமதி வளர்மதி கூறினார்.

தலைமையாசிரியரோடு இணைந்து இன்னும் பள்ளி  வளர்ச்சிக்காக முடிக்க வேண்டிய பணிகள் இருப்பதாகவும் அந்தப் பணிகள் முடியும் வரையில் இந்தத் தலைமை ஆசிரியர் இந்தப் பள்ளியில் பணிபுரிய கல்வி அமைச்சு உத்தரவு பணிக்க வேண்டும் என்பதையும் வாரியக்குழுத் தலைவர் திரு.லோகநாதன் கேட்டுக் கொண்டார்.

இந்தத் தலைமை ஆசிரியரின் திடீர் தொலைதூரப் பணி இட மாற்றத்தில் ஏதோ 'சூழ்ச்சி' அடங்கி உள்ளது என்று இந்த வட்டாரத்தில் பரவலாகப் பேசப் படுகிறது.

இது இந்த மலேசிய நாட்டில் ஒரு தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி. மலேசியத் தமிழர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு உரிமை கேட்போம்

19 மார்ச் 2018

நாக தோசங்கள்

அது ஒரு நல்ல அழகான கோயில். சுமாரான பெரிசு. கோயிலின் ஓர் ஒதுக்குப் புறத்தில் ஓர் அரச மரம். அந்த மரத்தின் அடிப்பாகம் எப்போதும் மஞ்சள் துணியால் சுற்றப்பட்டு இருக்கும். 
 
மரத்தைச் சுற்றி அழகாக ஒரு மண் மேடை. அந்த மேடையில் சின்ன பெரிய முட்டைகள். விரல் விட்டு எண்ண முடியாத பால் போத்தல்கள். அவ்வளவும் காலை அபிசேகத்திற்கு வந்த அர்ச்சனைப் பொருள்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு அபிசேகங்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு நாளைக்கு நானூறு முட்டைகள். அரை லிட்டர் பால் என்றால் ஒரு இருநூறு போத்தல்கள். பக்த கோடிகளின் பக்திப் பரவச நிலையின் ஆராதனைகள்.
தயவு செய்து திருப்பதியின் கோடான கோடிகளை இங்கே இழுத்துப் போட்டு கணக்குப் பார்க்க வேண்டாம். அப்புறம் உங்களுக்குத் தான் தலைவலி. மருந்து மாத்திரை தேட வேண்டி இருக்கும்.
 
சரி, எதற்காக இத்தனை முட்டைகள். எதற்காக இத்தனைப் பால் போத்தல்கள். அரச மரத்தில் குடியிருக்கும் நாக தெய்வத்திற்கு செய்யும் நெய்வேத்தியங்கள்.
அந்த நாகம்மாள் என்பது வேறு யாரும் இல்லை. ஒரு நாலடி நீளத்தில் ஒரு சின்னக் குட்டி நாகப் பாம்பு. அந்தப் பாம்பை இப்போதைக்கு யாரும் பார்த்தது இல்லை. பார்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை.
அந்தப் பாம்பு வெளியே வருவதும் இல்லை. நல்ல நாள், பெரிய நாள் பார்த்து வெளியே வந்து தரிசனம் செய்யுமா என்றால் அதுவும் இல்லை. மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. 
 
ஆனால் இருக்கிறது எனும் ஒரு பெரிய நம்பிக்கை மட்டும் இன்னும் இருக்கிறது.
கல்யாணமாகாத பெண்கள் அந்த அரச மரத்தைச் சுற்றி சுற்றி வருவார்கள். கீழே பால் முட்டை வைத்துச் சாமி கும்பிட்டால் சீக்கிரமாகக் கல்யாணம் நடக்கும் என்று ஓர் ஐதீகம். எந்தப் பெண்களுக்குக் கல்யாணம் நடந்தது என்று. தெரியவில்லை. மலேசியப் புள்ளிவிவர இலாகாவிடமும் புள்ளிவிவரங்கள் இல்லை.
இருந்தாலும் பாலும் முட்டையும் அங்கே ஒரு வாடிக்கை. நாகதோசம், கர்ப்ப தோசம், பிரேம தோசம் உள்ள பெண்களும் இந்தப் புனிதச் சடங்கில் ஐக்கியம். இதனால் ஜலதோசம் வந்து ஜன்னி பிடித்து தஞ்சோங் ரம்புத்தான் போனவர்களும் உண்டு. 
 
போன வருடம் இதைப் பற்றி எழுதப் போய் அடி வாங்கியது தான் மிச்சம். விடுங்கள். துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை. அந்த மாதிரி போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்.
நம்பிக்கைதானே மனிதச் சாத்திரம். நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கும் அந்த நம்பிக்கையை நாம் குறைத்துச் சொல்லவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் முட்டைகளையும் பாலையும் கொடுத்து தர்ம சாந்தி தாக சாந்தி செய்து வருகிறார்கள்.
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு செய்யட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. விசயத்திற்கு வருகிறேன்.

1965-ஆம் ஆண்டுதான் ஆகக் கடைசியாக அந்த கருநாகத்தைப் பார்த்தார்களாம்.  மாதம் தேதி தெரியவில்லை. அந்த நாகம் ஒரு வாரம் வந்து போய்க் கொண்டு இருந்து இருக்கிறது. அதன் பிறகு அதை யாரும் பார்க்கவில்லை. அப்போது அது ஓர் அதிசய நிகழ்ச்சியாக இருந்தது.
அந்தச் சமயத்தில் அரச மரம் எதுவும் இல்லை. வேறு என்னவோ ஒரு மரம் இருந்து இருக்கிறது. அந்தக் கட்டத்தில், கோயில் இருந்த இடம், நகராண்மைக் கழகத்திற்குச் சாலை அமைக்கத் தேவைப்பட்டு இருக்கிறது. அதனால் 1971-ஆம் ஆண்டு வேறு இடத்திற்கு கோயிலை மாற்றிக் கொடுத்து இருக்கிறார்கள்.
புதிதாக வந்த இடத்தில் புதிதாக ஓர் அரச மரம் நடப்பட்டது. மஞ்சள் துணி கட்டப்பட்டது. சகல சடங்குகளும் செய்யப்பட்டன. அதில் இருந்து பால் அபிஷேகம் முட்டை அபிஷேகம் தொடர்ந்தன. 
 
இதில் ஒரு சிறப்புச் செய்தி  என்னவென்றால் பழைய கோயிலில் இருந்த பாம்பு மட்டும் புதிய கோயிலுக்கு வரவில்லை. இருந்தால் தானே வருவதற்கு! ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் புதிய கோயிலுக்கு பக்தர்கள் எல்லாம் வந்து 47 ஆண்டுகள் ஆகிவிட்டன.
பழைய கோயிலில் இருந்த நாகத்தைப் பார்த்தும் 47 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அந்த நாகத்திற்கு வயது இருந்தால் எப்படியும் 50-ஐத் தாண்டி இருக்கும். ஒரு விசயம் தெரியுமா.
மனிதனுடைய சராசரி வயது 72 என்றால் ஒரு பாம்பின் சராசரி வயது 18 தான். அதற்கு மேல் ஒரு வருசமும் இல்லை. ஒன்பது வருசமும் இல்லை. நல்ல பாம்புகள் 20 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வதும் இல்லை. 


அடுத்து பாம்புகளுக்கு முட்டை சாப்பிடுவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஆனால் ஒன்று தெரியுமா. எந்தப் பாம்பும் எந்தப் பொருளையும் மனிதன் மாதிரி கடித்து மென்று அரைத்துச் சாப்பிடுவது இல்லை.
கோழி முட்டையாக இருந்தாலும் சரி; கோழிக் குஞ்சாக இருந்தாலும் சரி; அதை அப்படியே ஒரே லபக்! அம்புட்டுதான். உயிரோடு இருக்கிற பொருள்களைத் தான் பிடித்து விழுங்கும். செத்துப் போன எந்த ஒரு பொருளையும் பாம்பு சாப்பிடாது. ஆயிரம் பசியாக இருந்தாலும் தொட்டுகூட பார்க்காது. பத்து அடி தள்ளியே நிற்கும்.
அது மட்டும் இல்லை. மனிதன் மாதிரி மென்று சாப்பிட அதற்குப் பற்கள் அமையவில்லை. ரசித்து ருசித்துச் சாப்பிட நாக்கும் இல்லை. அவை ஆண்டவன் படைப்பின் ரகசியங்கள். 
 
அதன் வாய்ப் பகுதியில் நிமிடத்திற்கு நிமிடம் நீட்டி நீட்டிப் பார்ப்பது எல்லாம் அதன் மூக்கு. அதன் மூலமாக வெளியே இருக்கும் பொருள்களின் வாசனை, வாடையைத் தெரிந்து கொள்கிறது. இது மனுசன், அது மாடு, இது குதிரை, அது கோழி என்று தெரிந்து கொள்கிறது. அம்புட்டுத்தான்.
இதற்கு நேர் மாறானது முதலை. அது செத்துப் போன பொருள்களையும், அழுகிப் போன பொருள்களையும் மட்டும் தான் விழுங்கும். ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். முதலை, பாம்பு எல்லாம் உணவுப் பொருள்களைச் சாப்பிடுவது இல்லை. அப்படியே முழுசாக விழுங்கி விடும்.
இவற்றுக்கு எல்லாம் அப்பால்பட்ட ஓர் இனம் இருக்கிறது என்றால் அதுதான் மனித இனம். மன்னிக்கவும். இந்த இனம் இருக்கிறதே சும்மா சொல்லக் கூடாது, 
 
செத்துப் போனதையும் சாப்பிடும். செத்துப் போகாததையும் சாப்பிடும். செத்துக் கொண்டிருப்பதையும் சாகடித்துச் சாப்பிடும்.
அவை எல்லாம் நாளும் புளித்துப் போன சங்கதிகள். அந்த வகையில் நல்ல ஓர் ஒசத்தியான மனித இனத்தின் வழித்தோன்றல் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது.
சரி. பாம்பு பால் குடிக்குமா? நல்ல ஒரு கேள்வி. இந்த உலகம் இருந்த வரையில் எந்தப் பாம்பும் தண்ணீர் குடித்தது இல்லை. பால் குடித்ததும் இல்லை. அப்படி ஒரு சரித்திரம் படைத்தச் சான்றுகள் எதுவும் இதுவரை கிடைத்ததும் இல்லை.
சில பாம்புகள் தண்ணீரிலே பிறந்து தண்ணீரிலேயே வாழும். தண்ணீரிலேயே செத்தும் போகும். ஆனால் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது. பாம்புகளினால் தண்ணீரைக் குடிக்க முடியாது என்பதுதான் ஓர் அறிவியல் உண்மை.
 
ஆக தண்ணீரே குடிக்க முடியாத பாம்பு இனம், இந்த உலகம் இருக்கும் வரையில் பால் குடிக்கப் போவதும் இல்லை. அது மட்டும் உண்மை. தயவு செய்து இந்த உண்மையை மட்டும் மறந்துவிட வேண்டாம்.
பிள்ளையார்ச் சிலை பால் குடிக்கும் போது பாம்பு மட்டும் பால் குடிக்காதா என்று சிலர் கேட்கலாம். பிள்ளையார்ச் சிலை பால் குடிக்கும் விசயத்தில் இயற்பியலும் வேதியலும் இருக்கின்றன.
சிலைதான் பால் குடித்தது. பிள்ளையார் பால் குடிக்கவில்லை. ஆக இந்தப் பிள்ளையார்ச் சிலை பால் குடிப்பதைப் பற்றி பிறகு வேறு ஒரு கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.
பாம்புக்கு நாக்கு என்பதே இல்லை. சரி. தண்ணீர் குடிக்க முடியாத பாம்பு எப்படி ஐயா பால் குடிக்கும். சொல்லுங்கள். கொஞ்சம் ‘லோஜிக்’காக யோசித்துப் பாருங்கள். முடிந்தால் பாயாசம் கேட்கிறது.  தயிர்ச் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ஊறுகாய் கேட்கிறது என்று சொன்னாலும் சொல்வார்கள்.
நடக்கக் கூடிய விசயம்தான். அதனால் ஊறுகாய் பாட்டில்களுக்குக் கிராக்கி ஏற்பட்டு ஊறுகாய் பாட்டில்கள் அடுக்கடுக்காய் வந்து குவியலாம். மறுநாள் அவையும் மறைந்து போகலாம்.
கேட்டால் சர்ப்பம் பாட்டில்களை விழுங்கி விட்டது என்று ஆவணப் படங்கள் தயாரிக்கப் படலாம். ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அதற்கு அப்புறம்  வேண்டாங்க சாமி… கை எடுத்துக் கும்பிடுகிறேன். ஆளை விடுங்கள்.
 
உயிரியல் கூற்றுப்படி நாக்கு இருக்கும் ஒரு ஜீவராசி மட்டுமே நீரைப் பருக முடியும். அப்படி இருக்கும் போது மில்லியன் மில்லியன் ஆண்டுகளாக நாக்கு இல்லாமல் பச்சைத் தண்ணியே குடிக்க முடியாமல் இருந்த பாம்பு இப்ப மட்டும் எப்படிங்க ஐயா, லிட்டர் லிட்டராகப் பால் குடிக்குது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இது உங்களுக்கு முரண்பாடாகத் தெரியவில்லை.
பாம்பு தனக்கு வேண்டிய நீர்த் தன்மையை அது விழுங்கும் உயிர்ப் பொருள்களில் இருந்து தன் உடலுக்குள் கிரகித்துக் கொள்கிறது. இதுதான் அறிவியல் சொல்லும் உண்மைகள்.
Having a narrow body and small head, and no limbs and chewing teeth, snakes have to swallow their prey whole. Snakes get water from the food they swallow. Food includes: small frogs, lizard, small birds, mice and rats.
சில வகையான பாம்புகளுக்கு அரை செண்டிமீட்டர் அகலத்திற்குச் சின்ன லேசான நாக்கு, வாயின் வெளிப்புற உதடுகளில் ஒட்டிக் கொண்டு இருக்கும். ஆனால் நாகப் பாம்புகளுக்கு அந்த மாதிரியான ஒட்டு நாக்குகள் இல்லவே இல்லை.
Snakes may drink through the tongue groove in the lip.
ஒரு நாளைக்கு ஒரு முட்டை அல்லது இரண்டு முட்டைகளை விழுங்கும் ஒரு பாம்பு அப்புறம் மூன்று நாளைக்கு ஒன்றுமே சாப்பிடாது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்.
விழுங்கிய முட்டை செரிக்க வேண்டும். முட்டையின் ஓடு செரிக்க வேண்டும். அதற்காக அது எங்கேயாவது ஒரு சந்து பொந்தில் அமைதியாகப் படுத்தே கிடக்கும். ஏதாவது தொந்தரவு என்றால்தான் இடத்தை விட்டு நகரும்.
அப்புறம் எப்படி, வேண்டுதலுக்காக வைக்கப்படும் நூற்றுக் கணக்கான முட்டைகள் ஒரே நாளில் காணாமல் போகின்றன. அவ்வளவு முட்டைகளையுமா ஒரே ஒரு பாம்பு முழுங்கி விடுகிறது.
இல்லை என்றால் பக்கத்து காடு மலைகளில் இருக்கும் பாம்புகள் எல்லாம் படை எடுத்து வந்து அந்த முட்டைகளைச் சாப்பிட்டு விட்டுப் போகின்றனவா? சொல்லுங்கள்.
அப்படிச் சாப்பிட்டுவிட்டுப் போய் இருந்தாலும் பரவாயில்லைங்க. பல உயிர்களின் பசியைப் போக்கிய புண்ணியமாவது நமக்கு வந்து சேருமே. அதுவும் இல்லையே.
ஒரே ஒரு நாகம் ஒரே ஒரு நாளில் அத்தனை நூற்றுக் கணக்கான முட்டைகளையும் சாப்பிட்டு விட்டுப் போகிறது என்றால் நம்பிக்கை அடிபட்டுப் போகிறது. ஒரே ஒரு நாகம் ஒரே ஒரு நாளில் அத்தனை லிட்டர் பாலையும் குடித்துவிட்டுப் போகிறது என்றால் நம்பிக்கை துண்டு பட்டுப் போகிறது.
பரவாயில்லை. இனிமேல் யாராவது பாம்பு பால் குடிக்குமா என்று கேட்டால் குடிக்கும் என்று சொல்லுங்கள். எப்படி குடிக்கும் என்று கேட்டால் இந்தக் கதையைச் சொல்லுங்கள்.
நம்பவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இருக்கவே இருக்கிறது பிள்ளையார் பால் குடித்த கதை. மனிதர் அடங்கி விடுவார். அதையும் மீறினால் ஒரே வழிதான்… விவேக் மாதிரி ‘எஸ்கேப்” ஆகி விடுங்கள்.