06 அக்டோபர் 2018

தேசிங்கு ராஜா - 2

தேசிங்கு ராஜா கதையைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர் செஞ்சிக் கோட்டையைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். செஞ்சிக் கோட்டை தமிழ் நாடு மாநிலத்தில் தப்பி இருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும்.



இந்தச் செஞ்சிக் கோட்டை தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு அருகில் இருக்கிறது. கிழக்கே ராஜகிரி மலை. வடக்கே கிருஷ்ணகிரி மலை. தெற்கே சந்திரகிரி மலை.

செஞ்சிக் கோட்டையைச் சொரூப் சிங் என்பவர் நிர்வகித்து வரும் போது டில்லியில் மொகலாயப் பேரரசர் ஔவுரங்கசீப் நோய்வாய்ப் பட்டு இறந்து போனார். அவருக்குப் பதிலாக ஷா ஆலம் என்பவர் டில்லி சுல்தான் ஆனார். அதாவது ஔவுரங்கசீப்பிற்குப் பின்னர் ஷா ஆலம் என்பவர் மொகலாயப் பேரரசர் ஆனார்.



அப்போது பேரரசர் ஷா ஆலம் புதிதாக ஒரு முரட்டுக் குதிரையை வாங்கி இருந்தார். அந்தக் குதிரையை யாராலும் அடக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து பேரரசர் ஓர் அறிவிப்பு செய்தார். அந்தக் குதிரையை எந்த ஒரு சிற்றரசர் அடக்கிக் காட்டுகிறாரோ அவருக்கு அப்போது அவர் நிர்வாகம் செய்யும் சிற்றரசு அன்பளிப்பாக வழங்கப்படும் என்று ஓர் அறிவிப்பு செய்தார். அதாவது மொகலாயப் பேரரசின் கீழ் உள்ள சிற்றரசுகள் தான்.

அறிவிப்பைக் கேட்ட சொரூப் சிங் மகிழ்ச்சி அடைந்தார். அவர் அப்போது நிர்வகித்து வந்த செஞ்சிக் கோட்டைக்கு விடுதலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் டில்லிக்குப் பயணமானார்.


இங்கே ஒரு முக்கியமான விசயம். சொரூப் சிங் குதிரை சவாரி செய்வதில் மிக மிகக் கெட்டிக்காரர். எப்பேர்ப்பட்ட குதிரையையும் அடக்கிவிடும் சாமர்த்தியசாலி. குதிரைச் சவாரியில் ஔரங்கசீப்பிடம் இருந்தே பாராட்டுகளைப் பெற்றவர். 

இருந்தாலும் அவரால் குதிரையை அடக்க முடியவில்லை. ஒப்பந்தம் செய்து கொண்டபடி தோல்வி அடைந்தால், தோல்வி அடைந்தவர் சிறையில் அடைக்கப் படுவார். அதே போல சொரூப் சிங் தோல்வி அடைந்தார். டில்லி சிறையில் அடைக்கப் பட்டார். இந்தச் செய்தியை ஓர் அமைச்சர் மூலமாக, ராஜா தேசிங்கு அறிந்ததும் டில்லிக்கு விரைந்து சென்றார். சொரூப் சிங்கின் மகன் தான் ராஜா தேசிங்கு.

ராஜா தேசிங்குவின் மாமா பீம் சிங் அப்போது பேரரசர் ஷா ஆலமிடம் ஒரு படைத் தளபதியாக சேவை செய்தார். அவரைச் சந்தித்து அவருடைய அறிவுரைகளை ராஜா தேசிங்கு கேட்டார்.


தனக்கு ஒரு வாய்ப்பு வழங்கச் சொல்லி பேரரசரிடம் அனுமதி கேட்டார். வாய்ப்பு வழங்கப் பட்டது. அப்புறம் என்ன. அங்கே கூடி இருந்த அனைவரும் வியக்கும்படி, ராஜா தேசிங்கு அந்தக் குதிரையை அடக்கி சவாரி செய்து காட்டினார். அந்தக் குதிரையின் பெயர் பரிகாரி. 

ராஜா தேசிங்கின் வீரத்தைச் பேரரசர் ஷா ஆலம் வெகுவாகப் பாராட்டினார். பிறகு அந்தக் குதிரையையே ராஜா தேசிங்கிற்குப் பரிசாகவும் கொடுத்து அனுப்பினார். அது மட்டும் அல்ல. செஞ்சிக் கோட்டையைச் சொரூப் சிங்கிற்கே எழுதியும் கொடுத்தார். 

ஒரு சில நாட்கள் கழித்து தளபதி மாமா பீம் சிங், தனது மகளை ராஜா தேசிங்கிற்குத் திருமணம் செய்து வைத்தார். மனைவியின் பெயர் ராணிபாய். அப்போது ராணிபாய்க்கு வயது 16. ராஜா தேசிங்கிற்கு வயது 18. சின்ன வயதிலேயே திருமணம்.

அதன் பிறகு செஞ்சிக் கோட்டையின் தலைவராகச் சொரூப் சிங் (Swaroop Singh) நியமிக்கப் பட்டார். ஆற்காட்டு நவாப்பிடம் ஒரு தொகையைக் கப்பமாகக் கட்ட வேண்டும் என்றும் பணிக்கப் பட்டார். 


இதற்கு முன்னர் 1707-இல் ஒளரங்கசீப் காலத்திலேயே டில்லியில் பிரச்சினை. ஒளரங்கசீப்பிற்குப் பின்னர் அதிகாரத்தில் யார் அமர்வது என்கிற அரசியல் குழப்பம். 

அந்தச் சமயத்தில் அதுவரை ஆற்காட்டு நவாப்பிற்குச் செலுத்தி வந்த கப்பத் தொகையைச் சொரூப் சிங் நிறுத்திக் கொண்டார். அங்கேதான் பிரச்சினை ஆரம்பமானது. 

வணிகம் செய்வதாகச் சொல்லி நாடு பிடிக்க வந்த ஆங்கிலேயர்களையும் சொரூப் சிங் பகைத்துக் கொண்டார். அதுவே அவருடைய  ஆட்சிக்கு நெருக்கடிகளை உண்டாக்கியது.

1714-ஆம் ஆண்டு சொரூப் சிங் இறந்து போனார். அதன்பின் அவருடைய மகன் ராஜா தேசிங்கு, செஞ்சிக் கோட்டையின் மன்னராக முடி சூட்டிக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 22.

Image result for raja desingu

தன் தந்தையாரின் காலத்தில் அவர் வாங்கிய கடனுக்கு ஆற்காட்டு நவாப் அநியாய வட்டி போட்டுக் கேட்டார். மொத்தத் தொகையையும் ஒரே நேரத்தில் திருப்பித் தர வேண்டும் என்றும் ஆள் அனுப்பினார். 

ராஜா தேசிங்கு அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். அத்துடன் செலுத்தி வந்த கப்பத் தொகையையும் இனிமேல் கட்ட முடியாது என்றும் மறுத்து விட்டார்.

இதனால் ஆற்காட்டு நவாப் சாதத் உல்லா-கான் ஆத்திரம் அடைந்தார். செஞ்சிக் கோட்டையைத் தாக்கத் தன் படையை அனுப்பினார். 1714-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி தேவனூர் என்ற இடத்தில் போர் தொடங்கியது. 

தேசிங்கு ராஜாவின் கை ஓங்கி இருந்த நேரம். சுபாங்கித் துரை என்பவன் மறைந்து இருந்து துப்பாக்கியால் தேசிங்கு ராஜாவைச் சுட்டான். அதே இடத்தில் ராஜா தேசிங்கு மரணம் அடைந்தார்.

Related image

தேசிங்கு ராஜா இறந்தவுடன் அவருடைய மனைவியும் உடன்கட்டை ஏறினார். ராணிபாயை எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அவருடைய நினைவாக இராணிப்பேட்டை என்ற ஓர் ஊர் உருவாக்கப் பட்டது. ராணிபாய்க்கு கோயில்களும் கட்டப் பட்டன. இன்றும் வழிபாடுகள் நடக்கின்றன.

தேசிங்கு ராஜாவின் சமாதியும் அவருடைய படைத் தளபதி முகம்மது கானின் சமாதியும் நீலாம்பூண்டி கிராமத்தில் இன்றும் இருக்கின்றன. தேசிங்கு ராஜா உயிருக்கும் மேலாய் நேசித்து வந்த நீலவேணி எனும் குதிரையின் சமாதியும் அங்கேதான் இருக்கிறது.

தேசிங்கு ராஜா தமிழ்நாட்டில் இன்றும் வீர நாயகனாகப் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தனைக்கும் அவர் பத்தே பத்து மாதங்கள் தான் செஞ்சியை ஆட்சி செய்து இருக்கிறார்.

செஞ்சிக் கோட்டைக்கு அருகில் மூன்று கி.மீ. தொலைவில் சிங்கவரம் எனும் ஒரு கிராமம் இருக்கிறது. அங்கே இருக்கும் அரங்கநாதர் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது. 

செஞ்சி அருகில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது இந்தச் சிங்கவரம் கிராமம். பல்லவர் காலத்தில் சிங்கபுர நாட்டின் தலைநகராக இருந்தது. முதலாம் மகேந்திர வர்மனின் தந்தை சிம்ம விஷ்ணுவின் காலத்தில் இந்த நகரம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

Related image

அரங்கநாதர் ஆலயம் மலையின் மேல் இருப்பதால் 125 படிகளைக் கடக்க வேண்டும். எல்லோரா பாறையைப் போல ஒரே பாறையைக் குடைந்து செய்யப் பட்டக் கோயில். இந்த அரங்கநாதர் தான் தேசிங்கு ராஜாவின் குலதெய்வம். 

எந்த ஒரு வேலையைத் தொடங்கினாலும் தேசிங்கு ராஜா இங்கே வந்து அர்ச்சனை செய்து விட்டுத்தான் போவாராம். செஞ்சிக் கோட்டை அரண்மனையில் இருந்து அரங்கநாதர் கோயிலுக்குச் செல்ல அவர் காலத்திலேயே ஒரு சுரங்கப் பாதையையும் அமைத்து இருக்கிறார். 

ஆற்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த அரங்கநாதரிடம் தேசிங்கு ராஜா அனுமதி கேட்ட போது அரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம். 

"எதிரியின் படைகள் எல்லையை அடைந்து விட்டதே; முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டேன். இன்றே செல்ல முடியுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம்.

Related image

வலிமை வாய்ந்தது செஞ்சிக் கோட்டை. பற்பல வரலாற்று நினைவுகளைத் தனக்குள் இறுக்கிப் பிடித்துக் கொண்டு கம்பீரத் தொனியில் மிடுக்குடன் இன்றும் காட்சி அளிக்கின்றது. 

செஞ்சிக் கோட்டையில் உள்ள கோயில்கள், மண்டபங்கள், குளங்கள், ஆறுகள், படைவீரர்கள் தங்கும் பகுதிகள், நெற் களஞ்சியங்கள்; எதிரிகள் எளிதில் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப் படுத்துகின்றன.

செஞ்சிக்கு புகழ் வரக் காரணமாக இருந்தவர் தேசிங்கு ராஜா. இவரைப் பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்கள் உள்ளன. கதைகளும் உள்ளன.

பண்டைய கால மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நாம் வரலாற்றில் படித்து தெரிந்து கொள்கிறோம். அதே சமயத்தில் கடந்த கால மன்னர்களின் வாழ்க்கை முறையைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

Image result for raja desingu

அவர்கள் வாழ்ந்த இடங்களை நேரில் போய்த் தொட்டுப் பார்க்க வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதையும் உணர்ந்து பார்க்க வேண்டும். அதற்கு நீங்கள் செல்ல வேண்டிய ஒரே இடம் செஞ்சிக் கோட்டை தான். 

தேசிங்கு ராஜா வாழ்ந்த இடம்; அவர் போரிட்ட இடம்; அவர் மரணம் தழுவிய இடம்; அவருடைய மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறிய இடம் என ஏராளமான வரலாற்று நினைவிடங்களைத் தன்வசம் வைத்து உள்ளது. 

செஞ்சிக் கோட்டை ஆனந்தக் கோனார் என்பவரால் கி.பி. 600-ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டது. பற்பல அரசர்களின் கீழ் இருந்தது. பின்னர் காலத்தில் பிரெஞ்சுக்காரர்கள்; ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. தற்போது இந்தக் கோட்டை மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பில் உள்ளது.

Image result for raja desingu


வியப்பில் ஆழ்த்தும் கட்டடக் கலைக்கு எடுத்தக்காட்டாகக் கலை நயத்துடன் கல்லில் கட்டப்பட்ட கம்பீரமான கட்டுமானத்தைக் கண்டு வியப்பபு அடையாதவர்களே இருக்க முடியாது. அதில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நேரில் பார்த்துப் பிரமித்துப் போய் இருக்கிறேன்.

செஞ்சிக் கோட்டையை ஆட்சி புரிந்த தேசிங்கு ராஜா போலவே விண்ணை முட்டி கம்பீரமாக நிற்கிறது இந்தச் செஞ்சிக் கோட்டை. கால மாற்றங்களைக் கடந்து வந்தது இந்தச் செஞ்சிக் கோட்டை. பற்பல படையெடுப்புகளையும் தாண்டி நிற்கிறது இந்தச் செஞ்சிக்கோட்டை. அதே சமயத்தில் நம் மனங்களைக் கசியவும் வைக்கிறது.

தமிழ்நாட்டிற்குப் போனால் கிருஷ்ணகிரிக்குப் போங்கள். அங்கு இருந்து கொஞ்ச தொலைவில்தான் செஞ்சிக் கோட்டையும் இருக்கிறது. போய்ப் பாருங்கள். தேசிங்கு ராஜாவை நினைத்துப் பிரார்த்தனை செய்யுங்கள். அதுவே அவருக்கு நாம் செய்யும் உள்ளார்ந்த மரியாதையாகும்.

(முற்றும்)

தேசிங்கு ராஜா - 1

ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னால் மலாயா தோட்டங்களில் தேசிங்கு ராஜாவைப் பற்றி கதை கதையாகச் சொல்வார்கள். விடிய விடிய கதைப் பேச்சுகள். மங்கிய மண்ணெண்ணெய் விளக்கு தூங்கி வழிந்து கண் மூடும் வரையிலும் கதைகள். சமயங்களில் விடிந்ததுகூட தெரியாமல் கதைகள். 


நான் பிறந்து வளர்ந்த மலாக்கா டுரியான் துங்கல் காடிங் தோட்டத்தையும் அதில் சேர்க்க வேண்டும். பொழுது சாய்ந்தால் போதும். பாட்டிமார்களைச் சுற்றி ஒரு பெரிய வாண்டுப் பட்டாளமே கூடி நிற்கும். 

பாட்டிமார்கள் என்று சொன்னால் இரண்டு மூன்று பேர் தான். பெரிய வயது என்று சொல்ல முடியாது. அறுபது எழுபது வயதுகளைத் தாண்டிப் போய் இருக்க மாட்டார்கள்.

அப்போது தான் வானொலி, தொலைக்காட்சி, வாட்ஸ் அப், தோப் அப் எதுவுமே இல்லையே. கங்காணி வீட்டிலும் கிராணி வீட்டிலும் மட்டும் தான் ரேடியோ இருக்கும். இருபத்து நாலு மணி நேரமும் இங்கிலீஷ் பாட்டுகள். அதனால் பாட்டிமார்களின் ராமாயணக் கதைகளுக்கு ரொம்பவுமே கிராக்கி. 


கதா கலாசேபத்திற்கு முன்னால் மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைக்க ஓர் ஆள். பாட்டிக்கு வெற்றிலைப் பாக்கை இடித்துக் கொடுக்க ஓர் ஆள். காலைப் பிடித்துவிட ஓர் ஆள். விரல்களில் முட்டி முறித்துவிட ஓர் ஆள். முதுகைச் சொறிந்துவிட ஓர் ஆள். பெரியவர்களும் சேர்ந்து கொள்வார்கள்.

முத்திப் போன பாட்டிமார்களின் சித்துப் பாடல்கள் நன்றாகவே சுதி சேர்த்துக் களை கட்டி நிற்கும். அப்போதைக்கு அது பாட்டிமார்களின் அல்லி தர்பார் என்றுகூட சொல்லலாம். 

பாவம் தாத்தாமார்கள். பாட்டிமார்களிடம் தாதா வேலைகள் ஒன்றும் எடுபடாது. எங்கேயாவது சுருண்டு போய்க் கிடப்பார்கள். அவர்களை யாரும் கண்டு கொள்வதே இல்லை. பாட்டிமார்களில் யாராவது ஒருவர் கதையை இப்படி ஆரம்பிப்பார்.

பாலன் பிறந்த மூன்றாம் மாசம் 
பதைச்சு விழுந்தானாம் கொங்கனே
குழந்தை பிறந்த ஏழாம் மாசம் 
குலுங்கி விழுந்தானாம் மாங்கனே

இப்படித்தான் ஒரு சின்னப் பாடலாக ராஜா தேசிங்கு கதை ஆரம்பமாகும். அப்புறம் அந்தக் கதை ஒரு மாதத்திற்கு இழுத்துக் கொண்டு போகும். 


தோட்டத்து மக்களும் அசர மாட்டார்கள். எத்தனையோ நாட்கள் நானும் வாயைப் பிளந்து கொண்டு தூங்கிப் போய் இருக்கிறேன். சமயங்களில் இராத்திரி பத்து மணிக்கு ஒரு பாகம் முடியும். அப்புறம் ’வாடா மாச்சாப்பு’ என்று என்னை இழுத்துக் கொண்டு போவார்கள். அப்போது எனக்கு வயது ஆறு. நினைத்துப் பார்க்கிறேன். 

*மாச்சாப்பு* என்பது என் பேர் தான். மாச்சாப் கோயிலில் வேண்டிக் கொண்டதால் நான் பிறந்தேனாம். அதனால் அந்தப் பெயரையே எனக்கும் வைத்து விட்டார்கள். இப்போதுகூட மலாக்கா பக்கம் போய் மாச்சாப்பு என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். 

அது எல்லாம் வெள்ளந்திகளாய் வாழ்ந்து மறைந்த ஒரு கனாக்காலம். அந்த மாதிரியான காலங்கள் மறுபடியும வருமா? மனசுக்குள் ஒரு நீண்ட பெருமூச்சு. லேசாக அடைக்கிற மாதிரியும் இருக்கிறது. இனிமேல் வராதுங்க. கற்பனை செய்தே காலத்தை ஓட்ட வேண்டியது தான். என்ன செய்வது. சரி. கதைக்கு வருவோம். நான் ரெடி. நீங்க ரெடியா.

யார் இந்த தேசிங்கு ராஜா. ஒரு பத்துப் பதினெட்டு வயதிலேயே பெரிய பெரிய சாதனைகளைச் செய்த பையன் தான் இந்த ராஜா தேசிங்கு. ஒரு சின்ன எடுத்துக்காட்டு. 


பல இலட்சம் படை வீரர்களையும் பல நூறு பீரங்கிகளையும் கொண்டது மொகலாயப் படை. பாபர், ஜஹாங்கிர், அக்பர், ஷா ஜகான், அவுரங்கசிப் போன்ற மகா மன்னர்கள் ஆட்சி செய்த அரசுதான் மொகலாய அரசு. இந்தியா பார்த்த மாபெரும் அரசு. உலகம் திரும்பிப் பார்த்த மகா பெரிய அரசு.

அவர்களின் படைதான் மொகலாயப் படை. அப்பேர்ப்பட்ட பெரிய படை. அந்தப் படையை வெறும் முன்னூறு வீரர்களைக் கொண்டு ஆர்ப்பாட்டம் இல்லாமல் தனிமனிதாக எதிர்த்து நின்று போர் செய்தவன் தான் இன்றைய நம்ப கதாநாயகன் தேசிங்கு ராஜா. 

ஆனாலும் சின்ன வயதிலேயே இறந்து போனான். கடல் போன்ற எதிரிகளின் படைகளைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாத வீரன் தேசிங்கு ராஜா. அவனுடைய அஞ்சாமைக்கு இன்றும் தமிழகம் தலை வணங்குகிறது. தமிழக மக்கள் நெஞ்சை நிமிர்த்தி வீர வசனம் பேச வைக்கின்றது.

தேசிங்கு என்பவர் சீக்கிய பரம்பரையைச் சேர்ந்தவர். என்றாலும் அவர் தமிழர்களின் வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்து போனவர். சீக்கியராகப் பிறந்தாலும் தமிழராக வாழ்ந்தவர். 


எப்படி மாவீரர் சிவாஜி மராத்திய பரம்பரையில் பிறந்து தமிழராகிப் போனாரோ… எப்படி வீர பாண்டிய கட்டபொம்மன் தெலுங்கராய்ப் பிறந்து தமிழராகிப் போனாரோ… அதே போலத் தான் தேசிங்கு ராஜாவும் சீக்கியராகப் பிறந்து தமிழராகிப் போனவர். 

தேசிங்கு ராஜாவைப் பற்றி ஒரு சின்ன சுருக்கம். கி.பி. 1713-இல் நடந்தது. ஆற்காட்டு நவாப்பின் அதிகாரத்தை ஏற்க மறுத்த தேசிங்கு ராஜா அவருக்குக் கப்பம் கட்ட மறுத்தான். அதனால் ஆற்காட்டு நவாப் ஒரு பெரும் படையுடன் தேசிங்கு ராஜாவைத் தாக்கினான். செஞ்சி நகருக்கு அருகில் ஒரு பெரிய போர் நடந்தது. 

தேசிங்கு ராஜா அவருடைய "நீலவேணி" எனும் குதிரையுடன் போரிட்டார். அவருக்கு மஹ்மூத் கான் என்ற ஒரு நண்பர் இருந்தார். அவர் தன்னுடைய "பஞ்ச கல்யாணி" என்ற குதிரையுடன் தேசிங்கு ராஜாவுடன் போர் புரிந்தார். 

ஆற்காட்டு நவாப்பிற்கு 85,000 குதிரை வீரர்களைக் கொண்ட பெரிய படை. தேசிங்கு ராஜாவிற்கு 350 குதிரை வீரர்களைக் கொண்ட ஒரு சின்ன படை. அப்போது தேசிங்கு ராஜாவிற்கு 22 வயது. 


அந்தப் போரில் தேசிங்கு ராஜா கொல்லப் பட்டார்.  அவருடைய குறுகிய கால ஆட்சியும் ஒரு முடிவுக்கு வந்தது. செஞ்சிக் கோட்டை ஆற்காட்டு நவாப்பிடம் தடம் மாறியது.

தேசிங்கு ராஜாவின் இளம் மனைவி ராணிபாய். கணவன் இறந்ததும் உடன் கட்டை ஏறினார். எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்கள். முடியவில்லை. ‘இந்த உடல் என் கணவனுக்குச் சொந்தமானது. மற்றவர் பயன்படுத்தக் கூடாது’ என்று சொல்லித் தீக்குளித்துக் கொண்டார். எதிரியின் மனைவியாக இருந்தாலும் அவளுடைய பத்தினி விரதம் ஆற்காட்டு நவாப்பை நெகிழ வைத்தது. 

அவளுடைய கர்ம வினையைப் போற்றிப் புகழ்ந்த ஆற்காட்டு நவாப்,  இராணிப்பேட்டை என்ற ஓர் ஊரையே தோற்றுவித்தார். 

இராணிப்பேட்டை எனும் ஊர் இன்னும் இருக்கிறது. அங்கே ராணிபாய்க்குப் பல கோயில்களையும் கட்டி இருக்கிறார்கள். இதுதான் இந்தக் கட்டுரையின் சுருக்கம். சரி. இனி கொஞ்சம் முழுசாய்ப் பார்ப்போம்.

முன்பு காலத்தில் மத்திய இந்தியாவில் புந்தேலர் எனும் ஓர் இனமக்கள் வாழ்ந்து வந்தார்கள். இப்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அந்த இனத்தின் தலைவராகச் சொரூப் சிங் என்பவர் இருந்தார். அவருடைய மகன்தான் தேஜ் சிங்.

Image result for desingu raja history

தேஜ் சிங் என்ற பெயரைத்தான் தேசிங்கு என்று எளிமையாக மாற்றி விட்டார்கள். தேசிங்கு என்பவர் சீக்கியப் பரம்பரையைச் சேர்ந்தவர். இருந்தாலும் அவர் தமிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றித்துப் போனவர். 

சீக்கியராகப் பிறந்தாலும் ஓரளவுக்குத் தமிழராகவே வாழ்ந்து விட்டவர். தேஜ் சிங் எப்படி செஞ்சியின் அரசன் ஆனார். அதற்கு புந்தேலர் இனத்தின் வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 

1530-களில் நடந்த நிகழ்ச்சி. புத்தேல்கன்ட் என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இருந்த ஒரு நிலப்பகுதி. ஒரு சிற்றரசு. அங்கு வாழ்ந்த ராஜ புத்திரர்களுக்கும், மொகலாயர்களுக்கும் நீண்ட காலமாக நல்ல சுமுகமான உறவு முறைகள். 

மொகலாய மன்னன் ஒளரங்கசீப் பல முறை தென் இந்தியாவின் மீது படை எடுத்து இருக்கிறார். தென் இந்தியாவைப் பிடிக்க வேண்டும் என்பது ஔரங்கசீப்பின் கனவு. அதனால் அடிக்கடி தாக்குதல்கள். அதன் விளைவாக மதுரை ஆட்சி வீழ்ந்தது. தஞ்சை ஆட்சியும் வீழ்ந்தது.

Image result for raja desingu

அந்தச் சமயங்களில் தேசிங்கு ராஜாவின் புத்தேலர் இனத்தைச் சேர்ந்தவர்கள், ஒளரங்கசீப் படைப் பிரிவுகளில் சேர்ந்து சேவை செய்து வந்தனர். ஒளரங்கசீப்பிற்கு விசுவாசமாகவும் இருந்து வந்தனர். 

இந்தச் சமயத்தில் மாவீரர் சத்ரபதி சிவாஜியின் தலைமையின் கீழ் இருந்த மராட்டியர்கள், ஔரங்கசீப்பிற்கு பல வகைகளில் குடைச்சல் கொடுத்து வந்தனர். 

மராட்டியர்கள் தனி ஒரு மராட்டிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்கு முயற்சி செய்து வந்தார்கள். அதனால் மராட்டியர்களை அடியோடு அழித்து ஒழிக்க வேண்டும் என்று ஔரங்கசீப் கங்கணம் கட்டினார். அவர்கள் போகிற இடங்களுக்கு எல்லாம் ஒளரங்கசீப் தன் படைகளையும் அனுப்பி வந்தார். தாக்குதல் நடத்தி வந்தார்.

இதற்கிடையில் சத்ரபதி சிவாஜி இறந்து போனார். அவருடைய மகன் சத்ரபதி ராஜாராம். இவர் தொடர்ந்து ஒளரங்கசீப் படைகளுடன் போரிட்டு வந்தார். இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவரால் சமாளிக்க முடியவில்லை. 

அதனால் தமிழகத்திற்குத் தப்பி ஓடி வந்து செஞ்சிக் கோட்டையில் தஞ்சம் அடைந்தார். சிவாஜியின் மகன் சத்ரபதி ராஜாராமைப் பிடிக்க ஔவுரங்கசீப் ஒரு பெரும் படையை அனுப்பினார்.

Related image

அந்தப் படையில் ஒரு குதிரைப் படையும் இருந்தது. அதற்குத் தலைவராக இருந்தவர்தான் சொரூப் சிங். அதாவது தேசிங்கு ராஜாவின் தந்தையார்.

செஞ்சிக் கோட்டையில் அப்படி இப்படி என்று பதினொரு மாத கால முற்றுகை. கடைசியில் 1698-ஆம் ஆண்டு செஞ்சி கோட்டை வீழ்ந்தது. 

ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டார். அதன் பிறகு சத்ரபதி ராஜாராம் எப்படி இறந்து போனார் என்பது வேறு கதை. 

அந்தப் போரில் வீர தீரத்துடன் செயல் பட்டதால் சொரூப் சிங்கிடமே செஞ்சிக் கோட்டை ஒப்படைக்கப் பட்டது. செஞ்சிக் கோட்டையை சொரூப் சிங்கிடம் வழங்கியது ஔரங்கசீப் என்பதை நாம் இங்கே மறந்துவிடக் கூடாது.  

இப்படித்தான் ராஜா தேசிங்கின் தந்தையார், தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தார். ஆக அந்தச் செஞ்சிக் கோட்டையின் மன்னன் சொரூப் சிங்கிற்கும் மனைவி ரமா பாய்க்கும் பிறந்தவர்தான் தேசிங்கு ராஜா.

செஞ்சிக் கோட்டை எங்கே இருக்கிறது என்று கேட்கலாம். செஞ்சிக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு அருகில் இருக்கிறது. கிழக்கே ராஜகிரி மலை. வடக்கே கிருஷ்ணகிரி மலை. தெற்கே சந்திரகிரி மலை. 

2006-ஆம் ஆண்டு இந்தக் கோட்டைக்குச் சென்று இருக்கிறேன். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. யானைகளைக் கட்டிப் போடுவதற்காக லயங்கள் கட்டி இருக்கிறார்கள். எல்லாமே கல் பாறைகள். இன்னும் அப்படியே இருக்கின்றன. படிகளில் ஏறிச் செல்வதுதான் சிரமமாக இருந்தது. சரி. விசயத்திற்கு வருவோம்.

Related image

செஞ்சிக் கோட்டையைச் சொரூப் சிங் நிர்வகித்து வரும் போது டில்லியில் ஔவுரங்கசீப் நோய்வாய்ப் பட்டு இறந்து போனார். அவருக்குப் பதிலாக ஷா ஆலம் என்பவர் டில்லி சுல்தான் ஆனார். 

அப்போது சுல்தான் ஷா ஆலம் புதிதாக ஒரு முரட்டுக் குதிரையை வாங்கி இருந்தார். அந்தக் குதிரையை யாராலும் அடக்க முடியவில்லை. அதனால் அந்தக் குதிரையை எந்த ஒரு சிற்றரசர் அடக்குகிறாரோ அவருக்கு அப்போது அவர் நிர்வாகம் செய்யும் சிற்றரசு அன்பளிப்பாக வழங்கப்படும் என்று ஓர் அறிவிப்பு செய்தார். 

இந்தக் கதை நாளை தொடரும்.

22 ஆகஸ்ட் 2018

நினைவில் நிற்கும் கனவுகள் - 1

மலாக்கா டுரியான் துங்கல் காடிங் தோட்டத்தில் 1960-களில் நான் வாழ்ந்த குடியிருப்பு. என் அப்பா அம்மா தோட்டத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்த ரப்பர் தோட்டம். என்னுடைய சீனியர் கேம்பிரிட்ஜ் படிப்பிற்குப் பின்னர் இதே தோட்டத்தில் தான் கிராணியாராக வேலையும் செய்தேன்,






2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்தத் தோட்டத்திற்குப் போய் இருந்தேன். பழைய நினைவுகளில் புதிய நனவுகள்.


23 ஜூலை 2018

மணிப்பூர் தமிழர்கள்

இந்தியாவின் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள். அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிப்புரா, மணிப்பூர். இவற்றை ஏழு சகோதரிகள் (செவன் சிஸ்டர்ஸ்) மாநிலங்கள் என்று அழைக்கிறார்கள். 


இந்த மாநிலங்களில் பர்மா எல்லையில் மிக ஒட்டி இருப்பது மணிப்பூர். இந்த மணிப்பூரில் தான் இப்போது 17,000 தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களைத் தான் மணிப்பூர் தமிழர்கள் என்று அழைக்கிறோம்.

இத்தனை ஆயிரம் தமிழர்கள் எப்படி அங்கே போனார்கள். ஏன் போனார்கள். எதற்குப் போனார்கள். ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. அது ஒரு சோகமான வரலாறு. தொடர்ந்து படியுங்கள்.

பர்மா தமிழர்கள் செல்வச் செழிப்பில் கொழித்தவர்கள். மற்ற மற்ற பர்மிய இனங்கள் மலைத்துப் போகும் அளவிற்கு மலை மலையாய்ச் சொத்துகளைக் குவித்தவர்கள். விருந்தோம்பலில் சிகரம் பார்த்தவர்கள். 


ஐம்பது அறுபது கோயில்களைக் கட்டிப் போட்டு அழகு பார்த்தவர்கள். அறுபது எழுபது தமிழ்ப்பள்ளிகளைக் கட்டிப் போட்டு தமிழுக்கு உச்சம் பார்த்தவர்கள். ஊரும் உலகமும் வியக்கும் வண்ணம் வாழ்ந்தவர்கள்.

ஆனால் ஒரே ஒரு நாளில் நடுத்தெருவிற்குத் தள்ளப் பட்டவர்கள்.

அறுபது வருடங்களுக்கு முன்பு நடந்தது. பர்மாவில் இராணுவ ஆட்சி. ஆயிரக் கணக்கான தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு நாடு கடத்தப் பட்டார்கள். தெரிந்த விசயம்.

தாய் மண்ணில் பிச்சைக்காரர்களாகப் போய் நின்றார்கள். அவர்கள் தான் பராசக்தி படக் கதையின் நிஜமான நிழல் பிம்பங்கள். வேதனை விளிம்புகளில் வேர் அறுக்கப்பட்ட விழுதுகள். விரக்தியின் உச்சத்தில் தற்கொலை செய்து கொண்டவர்கள் பலர். வேறு மாநிலங்களுக்கு ஓடிப் போனவர்கள் பலர்.


அவர்களில் சிலருக்குச் சென்னை வாழ்க்கை பிடிக்கவில்லை. செத்தாலும் நாங்கள் பர்மாவிலேயே செத்துப் போகிறோம் என்று சொல்லி பர்மாவிற்கே திரும்பிப் போனார்கள். வங்காள தேசம் வழியாகப் போனவர்கள் காடு மேடுகளையும் ஆறு மலைகளையும் கடந்து மணிப்பூர் - பர்மா எல்லை வரை சென்றார்கள்.

அதற்கு மேல் அவர்களால் போக முடியவில்லை. பர்மிய குடி நுழைவுத் துறையினர் அவர்களை எல்லையிலேயே தடுத்து நிறுத்தி விட்டார்கள். பர்மாவிற்குள் விடவில்லை.

மணிப்பூர் - பர்மா எல்லைக் கிராமம் மோரே. அந்த இடத்தில் அப்படியே தங்கி விட்டார்கள். அவர்கள் தான் மணிப்பூர் தமிழர்கள். அங்கே தங்கிய தமிழர்களின் சந்ததிகள் தான் மணிப்பூரில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு மினி தமிழகத்தையே உருவாக்கி இருக்கிறார்கள். 



மணிப்பூர் பகுதிகளுக்கு  நிறைய பேர் வருவது இல்லை. ஏதோ அந்த மாநிலம் அண்டை நாடான சீனாவில் இருப்பது போல பலருக்கும் ஒரு பயம். சரி.

இந்த மணிப்பூர் தமிழர்களின் வரலாற்றைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். மணிப்பூருக்குத் தமிழர்கள் வந்த கதை சோகம் கலந்த வியப்பான கதை.

நவீன வசதிகள் வந்துவிட்ட இன்றைய நாளில்கூட மோரே கிராமத்தைச் சென்று அடைவது அப்படி ஒன்றும் சாதாரண விசயம் அல்ல. ஆனால் 1960 - 1970-களில் எப்படி எல்லாம் தமிழர்கள் சிரமப்பட்டு மோரேவை சென்று அடைந்து இருப்பார்கள். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

பிரிட்டனைச் சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று வெள்ளைக்காரர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். கொடிகட்டி பறந்த நாடு. இப்போது கொஞ்சம் மங்கி விட்டது. 



ஒரு காலக் கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மலாயா, சிங்கப்பூர், பிஜி, மொரிஷியஸ், ரீ-யூனியன் தீவுகள், பர்மா போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள்.

அந்த நாடுகளில் இருந்த கரும்பு, தேயிலை, ரப்பர் தோட்டங்களில் பலர் வேலை செய்தனர். சிலர் வியாபாரம் செய்தனர். சிறு சிறு குழுக்களாக; குடும்பம் குடும்பங்களாகத் தமிழர்கள் பல ஆண்டுகள் அங்கேயே தங்கினார்கள். சிறுகச் சிறுகப் பணம் சேர்த்தார்கள். சொத்துக்களை வாங்கிப் போட்டார்கள்.



ஒரு கட்டத்தில் இந்த நாடுகள் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுச் சுதந்திரம் பெற்றன. இரண்டு மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வந்த தமிழர்களுக்குப் பல நாடுகள் குடியுரிமை வழங்கி சிறப்பு செய்தன.

ஆனால் சில வக்கிரப்புத்தி பிடித்த நாடுகளும் இருக்கவே செய்தன. தமிழர்களை அந்நியராக நினைத்தன. தங்கள் வாய்ப்புகளைப் பறிக்க வந்த சண்டாளர்களாகக் கருதின. அவர்களைத் துன்புறுத்தி நாடு கடத்தின. அதில் ஸ்ரீலங்கா, பர்மா போன்றவை தனித்துவம் பெற்ற அரக்க புத்திகள்.

பர்மாவில் 1962-ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி. அதிகாரத்திற்கு வந்தவர்கள் தமிழர்களை நசுக்கிப் போட்டு விரட்டத் தொடங்கினார்கள். உழைத்துச் சம்பாதித்த தமிழர்களின் கோடிக் கோடியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டன.  



தமிழர்கள் வலுக்கட்டாயமாக கப்பலில் ஏற்றப் பட்டனர். இந்தியாவிற்கு மறு ஏற்றுமதி செய்யப் பட்டனர். மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களுக்கு மன உளைச்சல்கள்; அலைக்கழிப்புகள்; அங்கலாய்ப்புகள்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் நிறைய பர்மா தமிழர் காலனிகள் தோற்றுவிக்கப் பட்டன. அவற்றில் ஒன்று தான் இன்றைய பர்மா பஜார். தாய்நாட்டிற்குத் திரும்பி வந்தவர்களில் சிலருக்குத் தங்களின் பழைய வாழ்விடம், சொத்துக்களை மறக்க முடியவில்லை.

மீண்டும் பர்மா செல்லும் முயற்சிகளில் இறங்கினார்கள். கால்நடையாகவும் போகிற வழியில் கிடைக்கிற போக்குவரத்துகளையும் பயன்படுத்திப் பர்மாவிற்குச் செல்வது என்று முடிவு செய்த்தார்கள்.

மூன்று மாதம் நடையாய் நடந்து இந்தியாவின் வடகிழக்கே இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் எல்லையை அடைந்தார்கள். அங்கு இருந்து பர்மாவின் தலைநகரம் ரங்கூனுடன் இணைக்கும் பாலத்தின் வழியாக பர்மாவுக்குள் செல்ல முயற்சி செய்தார்கள். 



ஆனால் பர்மிய இராணுவம் அவர்களைப் பர்மாவிற்குள் விடவில்லை. எல்லையில் இருந்த இராணுவத்தினரும் குடிநுழைவுத் துறையினரும் அவர்களை விரட்டி அடித்தனர்.

அங்கு இருந்து திரும்பி மறுபடியும் தமிழ்நாட்டிற்குப் போக பலருக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் ஒரு சிலர் தமிழ் நாட்டிற்கே திரும்பிச் சென்றார்கள். ஒரு சிலர் அந்த நுழைவு பாலத்தை ஒட்டிய மோரே என்கிற பழங்குடியினர் கிராமத்திலேயே தங்கினார்கள். அப்படியே  அவர்களின் பிழைப்பு ஓடியது. இந்த மோரே கிராமத்தின் பரப்புளவு 7.38 சதுர கி.மீ. ஒரு செருகல்.

இரண்டாம் உலகப் போர் நடந்த போது நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் இந்த மோரே கிராமப்புற நகரில் தான் தங்கியது. இந்திய தேசிய இராணுவத்தில் மணிப்பூர் தமிழர்களும் இணைந்து இந்திய விடுதலைக்கு போராடினார்கள். அதை இங்குள்ள  பாட்டிகள் இன்றும் கதை கதையாய்ச் சொல்கிறார்கள்.

மோரே நகருக்கு அருகில் சூரஜ்சந்த்பூர் எனும் சிறுநகரம். இந்த இரு இடங்களிலும் இந்திய தேசியப்படை வீரர்கள் முகாம் போட்டார்கள். அப்படியே பிரிட்டிஷ் படைகளை எதிர்த்தார்கள். நாகலாந்து வரை போனார்கள். ஐ.என்.ஏ. கொடிகளை நட்டு விட்டு வந்தார்கள்.

மோரே என்பது ஒரு சிறு கிராமப்புற நகரம். அங்கே தங்கிய தமிழர்கள் காலப் போக்கில் தங்களின் உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்துக் கொண்டார்கள். அப்போது அந்தக் கிராமத்தில் குக்கீஸ் என்கிற பழங்குடி இனத்தவர் வாழ்ந்து வந்தார்கள்.



தொடக்கத்தில் தமிழர்களுக்கும் குக்கீஸ் பழங்குடிகளுக்கும் சலசலப்புகள். 1990-களில் மணிப்பூர் பூர்வீக இனக் குழுக்களின் ஆயுதப் போராட்டங்கள். இடையில் சிக்கிய தமிழர்கள் பலர் கொலை செய்யப் பட்டனர். மீண்டும் தமிழ்நாட்டுக்கே பலர் அகதிகளாகப் போய்ச் சேர்ந்தனர்.

இருந்தாலும் காலப் போக்கில் சமரசமானது. இரு தரப்பினரும் இப்போது இணைந்து வாழ்கின்றனர். இவர்களுடன் நேபாளிகளும், பஞ்சாபிகளும் சேர்ந்து கொண்டனர். இவர்களின் எண்ணிக்கை 200-க்கும் மேல் போகாது.

தமிழகத்தில் இருந்து வந்த தமிழர்களுக்கு ஷொலிம் பெயிட் என்பவர் உதவிக் கரமாக இருந்தார். அதற்கு அங்குள்ள தமிழர்கள் செலுத்திய மண்  வரிதான் காரணம். இந்த வரியில் குறிப்பிட்ட பங்கை அவர் எடுத்துக் கொண்டு மீதியைப் பிரிட்டிஷ் அரசுக்கு செலுத்தி வந்தார்.

இப்போதைக்கு மோரே கிராமத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 35,000. இதில் தமிழர் மட்டும் 17,5000 பேர். அனைவரும் சர்வ சாதாரணமாகத் தமிழிலும் பர்மிய மொழியிலும் பேசிக் கொள்கின்றனர்.



பிரிட்டிஷ் ஆட்சியின் போது பர்மா நாடு இந்தியாவின் ஒரு மாநிலமாகத் தான் இருந்தது. 1948-க்கு முன்னால் நடந்ததைச் சொல்கிறேன். அந்தக் காலக் கட்டத்திலும் தமிழர்கள் அங்கே வாழ்ந்து இருக்கிறார்கள்.

பர்மாவின் தலைநகர் ரங்கூன் வரை போய் வியாபாரம் செய்து வந்து இருக்கிறார்கள். தடைகள் ஏதும் இல்லை. மோரே  நகரம் இந்தியா பர்மா நாடுகளுக்கு ஒரு முக்கிய நுழைவாயிலாகவும் செயல்பட்டது.

இப்போது மணிப்பூர் வழியாக பர்மாவிற்கு நூற்றுக் கணக்கான வாகனங்கள், சரக்கு லாரிகள் அன்றாடம் போய் வருகின்றன. அதே மாதிரி பர்மாவில் இருந்தும் தரைவழியாக இந்தியாவிற்கு வருகிறார்கள் போகிறார்கள். அங்கே இருந்து வருகிறவர்களின் தேவைகளை மோரே மக்கள் கவனித்துக் கொள்கிறார்கள். மோரேவில் நிறைய உணவகங்கள் இருக்கின்றன. சின்னச் சின்ன மளிகை கடைகளும் இருக்கின்றன.

1960-களில் தமிழர்கள் இங்கு குடியேறிய காலக் கட்டத்தில் மோரேவிற்கு அருகில் நாம்ப்லாங் என்று ஒரு சந்தை இருந்தது. அந்தச் சந்தையில் சிறிய அளவில் பண்டமாற்று வியாபாரம். சந்தையில் தமிழர்கள் தொழிலாளர்களாக வேலை செய்தனர். தமிழர்களின் புத்திசாலித்தனம்; கடும் உழைப்பு; இந்த இரண்டும் அவர்களுக்குப் புதிய கதவுகளைத் திறந்து விட்டன.



திருமண விசயத்தில் மணிப்பூர் தமிழர்களிடம் படு சுதந்திரம். பெண் வீட்டார்களுக்கு வரதட்சணை பிரச்சினையே இல்லை. மாப்பிள்ளை வீட்டார்தான் பெண்வீட்டாருக்குத் திருமண சீர் செய்ய வேண்டும். இன்னும் ஒரு விசயம். ரொம்பவும் முக்கியம்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து இருந்தால் மட்டுமே திருமணம். பெண் பார்க்கும் படலத்தில் ஒரு பெண்ணுக்கு ஓர் ஆணைப் பிடிக்கவில்லை என்றால் அப்போதே நறுக்கென்று பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவார். அதோடு அடுத்த பேச்சு இல்லை.

வந்தவர்கள் வந்தவழியைப் பார்த்துத் திரும்பிப் போக வேண்டியது தான். மணப்பெண்ணின் மனசிற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உலகத் தமிழர்களிடம் காணப்படும் ஒரு வித்தியாசமான அணுகுமுறை. மணிப்பூரில் வாழும் குக்கீஸ் பூர்வீகக் குடிமக்களிடம் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் பழக்கம் தொன்று தொட்டு இருக்கிறது. ஒருக்கால் அதையே மணிப்பூர் தமிழர்கள் பின்பற்றி வரலாம். சொல்ல முடியாது.

அப்புறம் இன்னும் ஒரு நல்ல விசயம். காதலர்கள் வீட்டை விட்டு  ஓடிவிட்டால் பிரச்சினை ஒன்றும் பெரிதாக வரப்போவது இல்லை. நிறைய குடும்பங்களில் நடந்து இருக்கிறது. இரு தரப்பும் ஒன்றாகச் சேர்ந்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள். 



பின்னர் காதலர்கள் இருவரையும் அழைத்து வந்து திருமணத்தை நடத்தி வைப்பார்கள். ஆனால் ஒரே ஒரு கன்டிசன். புருசன்காரனிடம் சண்டை போட்டுக் கொண்டால் திரும்பி அப்பா அம்மா விட்டிற்குப் போக முடியாது. கதவைச் சாத்தி விடுவார்கள். நல்ல பழக்கம்.

முடிந்தால் நீங்களும் போய்ப் பாருங்களேன். போன வாக்கில் ஒரு பெண்ணைக் காதல் பண்ணி அப்படியே கொஞ்ச நாளைக்குத் தலைமறைவாக இருந்து விடுங்கள். பெண்ணின் அப்பா அம்மா தேடி வருவார்கள். நல்லபடியாக அழைத்து வந்து கல்யாணம் செய்து வைப்பார்கள்.

22 ஜூலை 2018

தமிழகப் பெண்களின் போராட்டம் - 1

*தமிழர்களைப் பார்ப்பதும் தீட்டு. பழகுவதும் தீட்டு. அவர்களைத் தொடுவதும் தீட்டு. இப்படி ஒரு தீண்டாமைக் கொடுமை முன்பு காலத்தில் இருந்தது. எங்கே? உலகத்திற்கு உத்தமம் பேசிய நம்ப இந்தியாவில் தான். இப்போது அந்தக் கொடுமை இல்லை.* 



இருந்தாலும் அங்கே இங்கே என்று சில பல இடங்களில் அரசல் புரசலாகத் தேய்த்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதையும் பார்த்து ஊரும் உலகமும் புன்னகை பூத்துக் கொண்டுதான் போகிறது.

அந்தச் செயல்களுக்கு அரச மரியாதை அளித்த மன்னர்கள் இருந்தார்கள். அரசு முத்திரை குத்திய ஜமீன்தாரர்கள் இருந்தார்கள். பட்டுப் பீதாம்பரம் வீசிய பசப்புச் செம்மல்கள் இருந்தார்கள். சாமியின் பெயரைச் சொல்லி தமிழ்ப் பெண்களைக் கெடுத்து வந்த பெரிய மனிதர்களும் இருந்தார்கள். மன்னிக்கவும்… இருந்தன. சின்ன ஒரு மரியாதை கொடுப்போம்.




அந்த மாதிரி வக்கிரம் படைத்தவர்களைப் பற்றி இங்கே எழுதுவதற்கு மனசு வரவில்லை. என்ன செய்வது. தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லீங்களா. ஆக எழுதியே ஆக வேண்டும். ஒரு கட்டாய நிலை. அதனால் எழுத வேண்டி இருக்கிறது.

ஒரு காலத்தில் தமிழ் மண்ணில் வாழ்ந்து மறைந்த ஒவ்வொரு தமிழர்ப் பிரிவினர் மீதும் ஒரு வகையான அடக்கு முறை திணிக்கப் பட்டது. உயர்ச் சாதி என்று சொல்லிக் கொண்டவர்கள் போட்ட அத்துமீறிய சடங்குச் சம்பிரதாயங்கள். ஏராளம் ஏராளம்.

அந்த உயர்ச் சாதியினரிடம் தமிழர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எந்த மாதிரியான ஆடைகளை உடுத்த வேண்டும். அவர்களுக்கு எப்படி மரியாதைகள் செய்ய வேண்டும். எவ்வளவு தூரம் தள்ளி நிற்க வேண்டும். இவை எல்லாம் தமிழர்கள் மீது சொல்லாமல் எழுதி வைத்த ஒடுக்கு முறைத் திணிப்புகள். 



ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வரையில் தமிழர்களைச் சாதி சாதியாகப் பிரித்து வைத்து இருந்தார்கள். அவன் அந்த சாதி. இவன் இந்த சாதி. நான் பெரியவன். நீ சின்னவன் என்று சூடம் கொழுத்தி சாம்பிராணி வேறு போட்டுக் காட்டினார்கள்.

’சாதி என்பதைச் சாக்கடையில் வீசு’ என்று சொன்னவர்களுக்குச் சவுக்கடி கொடுத்தார்கள். சவர்க்காரத் தொட்டிகளில் போட்டு அமுக்கிக் குளம் குட்டைகளில் தூக்கி வீசியும் இருக்கிறார்கள்.

சரி. இந்தச் சாதிச் சடங்குகள் எப்படி வந்தன. அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆரியர்கள் இந்தியாவிற்குள் காலடி வைத்த காலக் கட்டத்தில் இருந்து அந்தச் சடங்குச் சம்பிரதாயங்கள் தொடங்குகின்றன.

ஆரியர்கள் யார்? அவர்கள் எங்கு இருந்து வந்தார்கள். தொடர்ந்து படியுங்கள். சுருக்கமாகச் சொல்கிறேன்.



ஆரியர் எனும் சொல் ஈரானிய மொழிச் சொல். ஆர்ய (Arya) எனும் அடிச் சொல்லில் இருந்து மருவி வந்தது.

(சான்று: https://ta.wikipedia.org/s/o2d)

இந்தச் சொல்லை ரிக் வேத நூலிலும் பார்க்க முடியும். 3500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஆர்யா எனும் சொல் பயன்பாட்டில் இருந்து வந்து இருக்கிறது.

தவிர இந்த ஆர்ய எனும் சொல் அய்ரிய (Ayrya) எனும் ஈரானிய மொழிச் சொல்லுடன் இணைந்த சொல்லாகும். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி நாசிகளின் இனவாதக் கொள்கையில் ஒரு வெறுப்புக்குரிய சொல்லாகவும் மாறியது.

(Gershevitch, Ilya (1968). "Old Iranian Literature". Handbuch der Orientalistik, Literatur I. Leiden: Brill. பக். 1–31) 



ஆரியர்கள் என்பவர்கள் துருக்கி, ஈராக், ஈரான் நாடுகளில் இருந்து பஞ்சம் பிழைக்க இந்தியாவிற்குள் நாடோடிகளாகப் புலம் பெயர்ந்தவர்கள். இவர்களின் பூர்வீகம் ரஷ்யா. அங்கு இருந்த சைபீரியா பனிப் பிரதேசங்களில் நாடோடிகளாக வாழ்ந்து வந்தார்கள். சைபீரியா பூர்வீக மக்களினால் விரட்டப் பட்டவர்கள்.

(Aryans originated in the southwestern steppes of present-day Russia or Scandinavia, or at least that in those countries the original Aryan ethnicity had been preserved.)

ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்து அப்படியே ஐரோப்பாவில் வலது காலை எடுத்து வைத்து ஈரானில் இடது காலை வைத்தார்கள். கடைசியில் இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து இந்தியாவிற்குள் குதித்துத் தஞ்சம் அடைந்தார்கள்.

(சான்று: https://en.wikipedia.org/wiki/Aryan_race#19th-century_physical_anthropology

இந்தியாவிற்குள் நுழைந்து ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்தார்கள். கடைசியில் சிந்து சமவெளியின் சிந்து பைரவிகள் பாடிய அப்பாவித் திராவிட மக்களையும் கடித்துக் குதறிப் போட்டார்கள். சங்கீத அரகோணத்தில் காம்போதிகளாக மாற்றிக் காட்டினார்கள் என்று கூட சொல்லலாம். தப்பில்லை.

அங்கு வாழ்ந்த வெள்ளந்திகளைத் தொழிலுக்கு ஏற்றவாறு பிரித்தும் வைத்தார்கள். அந்தப் பிரிவினைக் கோலம் தமிழ்நாட்டில் இருந்து கப்பலேறி இப்போது இங்கேயும்கூட ஒலித்துக் கொண்டு இருக்கிறது. 



இங்கே கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும் சமயங்களில் சில சங்கங்கள் சாதிக்குச் சுண்ணாம்பு அடித்து அழகு பார்க்கிறார்கள். மலேசியாவில் அது ஒரு மௌனராகம். விடுங்கள்.

ஒரு காலக் கட்டத்தில் தமிழர்கள் மீது எண்ணற்ற அடக்கு முறைகள். எல்லாம் தமிழகத்தில் நடந்தவைதான். அந்த மாதிரியான சாதியக் கொடுமைத் தடங்களில் ஒன்றுதான் 18-19-ஆம் நூற்றாண்டுகளில் நடந்த தோள் சீலைப் போராட்டம்.

தமிழ்ப் பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது. திறந்த மார்புடன் நடக்க வேண்டும். சுத்தமான முகாரிகள் வாசித்த ஓர் அடக்குமுறை.

அன்றைய கேரளப் பகுதியான தென் திருவிதாங்கூர், தமிழக எல்லைப் புறங்கள், கன்னியாகுமரி பகுதிகளில் அந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. அங்கு வாழ்ந்த தமிழர்கள் ஆதிக்க வர்க்கத்தினரின் கடுமையான ஒடுக்கு முறையில் தனித்துப் பிரித்து வைக்கப் பட்டனர்.

சாமான்யத் தமிழர்கள் எத்தனை அடி தூரத்தில் நின்று பேச வேண்டும் என்று கணக்கு வேறு போட்டு வைத்து இருந்தார்கள். பாருங்கள். தீண்டாமை தீச்சுவாலையை எப்படி எல்லாம் போற்றி போற்றி வளர்த்து இருக்கிறார்கள்.

தமிழர்களில் ஒரு பிரிவினர் கண்ணில்படக் கூடாத சாதி மக்கள் என்றும் தூற்றப் பட்டு இருக்கிறார்கள். நாம் பிறந்து வளர்ந்த இந்தப் பூமியில் எங்கேயும் இப்படி ஒரு கொடுமை நடந்து இருக்குமா. சொல்லுங்கள்.

ஆனால், இந்தியத் தாய் மண்ணில் அப்படி நடந்து இருக்கிறது. ஆக, நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தீட்டுத் தூரத்தை எவரேனும் மீறினால் அவர்களுக்குக் கடுமையான தண்டனையும் கொடுக்கப் பட்டது. 



அப்பேர்ப்பட்ட ஹிட்லர்கூட வேண்டாதவர்களை விசம் கொடுத்துதான் கொலை செய்தான். ஆனால் இத்தனை அடி தூரத்தில் நின்றுதான் பேச வேண்டும் என்று சட்டம் போட்டது இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் நடந்து இருக்கிறது.

ஒரு காலக் கட்டத்தில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தானத்து ஆட்சியின் கீழ் இருந்தன. அங்கு சாணார் எனும் ஒரு தமிழ்ப் பிரிவினர் இருந்தனர். அந்தப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப் பட்டது.

இவர்கள் மார்பகத்தைத் திறந்து போடுவதுதான் உத்தமம், உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று திருவாங்கூர் நாடு ஒரு சட்டத்தையும் போட்டது.

சாணார், பள்ளவர், ஈழவர், முக்குவர், புலையர் போன்ற பிரிவினர் தமிழர்ச் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப் பட்டார்கள். அந்த வகையில் 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டது.

அணியக் கூடாது என்று சொன்னால்தான் சரியாக இருக்கும். மேலாடை அணிவது பெரும் குற்றம். திறந்த மேனியோடுதான் நடமாட முடியும். மனுதர்மம் அப்படிச் சொல்வதாக ஒரு சாணக்கியச் சட்டத்தை எடுத்துக்காட்டி அதைச் சம்பிரதாயச் சட்டமாக மாற்றிகயும் காட்டினார்கள்.

தமிழர்ச் சமூகத்துப் பெண்கள் தங்கள் மார்பகத்தை எப்பொழுதும் திறந்து காட்டி மரியாதை செய்ய வேண்டும் என்று உயர்ச் சாதியினர் பிடிவாதமாக இருந்தனர். அந்த வகையில் குழந்தையில் இருந்து இறக்கும் கட்டத்தில் இருக்கும் பாட்டிமார்கள் வரை அந்த மரியாதைக்கு கட்டுப்பட்டாக வேண்டும்.

ஒரு பெண் எவனுடைய மனைவியாகவும் இருக்கலாம். எவனுடைய மகளாகவும் இருக்கலாம். எவனுடைய சகோதரியாகவும் இருக்கலாம். எவனுடைய அம்மாவாகவும் இருக்கலாம். இல்லை பாட்டியாககூட இருக்கலாம். பிரச்சினை இல்லை… 



ஆனால் மார்பகத்தைக் காட்டிக் கொண்டு தான் போக வேண்டும்… வர வேண்டும். மார்பகத்தை மூடி வைக்கக் கூடாது. என்னே ஒரு மனுதர்மச் சட்டம்.

இந்த அசிங்கத்தை இந்த அவமானத்தை இந்த அவலத்தை இந்த அடக்குமுறையை எதிர்த்தப் பல தமிழ்ப் பெண்கள் கிருத்துவ மதத்திற்கு மதம் மாறினார்கள். தங்களின் மார்பகத்தை அடுத்தவரின் பார்வையில் இருந்து மறைக்கப் பெரிதும் போராடி வந்தார்கள்.

பாவம் அந்தப் பெண்கள். மேலாடை அணியாமல் கூனிக் குறுகி வாழ்ந்து வந்தார்கள். அந்த அடக்கு முறையை எதிர்த்துப் போராட்டம் செய்தார்கள்.

அந்தப் போராட்டம் தான் தோள் சீலைப் போராட்டம். பல பத்து ஆண்டுகள் போராட்டம் செய்தார்கள். கடைசியில் வெற்றியும் பெற்றார்கள்.

இந்தத் தோள் சீலைப் போராட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். இப்படி எல்லாம் நடந்து இருக்கின்றது இப்படி எல்லாம் தமிழர்கள் அவதிப்பட்டு இருக்கின்றார்கள் என்பதை நம் பிள்ளைகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி அறிந்து தெரிந்து கொள்வது தான் பாதிக்கப்பட்ட நம் தமிழ்ப் பெண்களுக்கு நாம் செய்யும் ஒரு கைமாறு ஆகும்.

18-19-ஆம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் நாட்டில் தீண்டாமை, காணாமை, நடவாமை போன்ற கோட்பாடுகள் ஆழமாகப் பதிந்து இருந்தன. சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் ஓர் ஆரியனிடம் இருந்து 36 அடி தொலைவில் நிற்க வேண்டும்.

புலையர் இனத்தைச் சார்ந்த ஒருவன் ஓர் ஆரியனிடம் இருந்து 96 அடி தள்ளி நிற்க வேண்டும். புலையன் ஒருவன் நாயர் இனத்தைச் சேர்ந்தவனிடம் இருந்து 60 அடி அப்பால் நிற்க வேண்டும்.

புலையன் இனத்தைச் சேர்ந்த ஒருவனை அப்படியே அந்த மேல்சாதிக்காரனைப் பார்க்க நேர்ந்தால் அந்த மேல்சாதிக்காரன் தீட்டுப் பட்டவனாகக் கருதப் படுவான். அப்படித் தீட்டுப் பட்டவன் ஆற்றில் அல்லது குளத்தில் மூழ்கி நீராட வேண்டும். தன்னைச் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வேதனையான செய்தி. திருவிதாங்கூர்ப் பகுதிகளில் வாழ்ந்த சாணார் சமூக மக்களின் உழைப்பு அதிகார வர்க்கத்தினரால் மிகக் கொடுமையாகச் சுரண்டப் பட்டது. அவர்களுக்குக் கூலி மறுக்கப்பட்டது. அடிமைகளை விடக் கேவலமாக நடத்தப் பட்டனர். அரசுக்கும் ஆதிக்கச் சாதிகளுக்கும் அடங்க மறுத்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள்.

அது மட்டும் இல்லை. உழைக்கின்ற சாணார் சமூக மக்கள் குடை பிடிக்கக் கூடாது. செருப்பு அணியக் கூடாது. மாடி வீடு கட்டக் கூடாது. தங்க நகைகள் அணியக் கூடாது. பெண்கள் தங்களுடைய மார்புகளை மேலாடைகளால் மறைக்கக் கூடாது. முழங்காலுக்குக் கீழே உடை உடுத்தி மறைக்கக் கூடாது. பசு மாடுகளை வளர்க்கக் கூடாது. இப்படி ஏகப்பட்ட கூடாதுகள். இந்தக் கூடாதுகளைப் பற்றி நாளைய கட்டுரையில் கூடுதலாகத் தெரிந்து கொள்வோம்.

(பாகம் 2-இல் தொடரும்)