29 மே 2019

பரமேஸ்வரா சிங்கப்பூரில் ஆட்சி

சிங்கப்பூரின் முதல் *ராஜா நீல உத்தமன்*. இவர் 1299-ஆம் ஆண்டில் இருந்து 1347-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார். 


இரண்டாவதாக வந்தவர் *ஸ்ரீ விக்கிரம வீரா*. இவர் 1347-ஆம் ஆண்டில் இருந்து 1362-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

மூன்றாவதாக வந்தவர் *ஸ்ரீ ராணா விக்கிரமா*. இவர் 1362-ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

நான்காவதாக வந்தவர் *ஸ்ரீ மகாராஜா*. இவர் 1375-ஆம் ஆண்டில் இருந்து 1389-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

ஐந்தாவதாக வந்தவர் *பரமேஸ்வரா*. இவர் 1389-ஆம் ஆண்டில் இருந்து 1398-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். 



பரமேஸ்வரா தான் சிங்கப்பூரை ஆட்சி செய்த ஐந்தாவது ராஜா. கடைசி ராஜா. இவர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்று அழைக்கப் பட்டார்.   

பரமேஸ்வரா சிங்கப்பூரின் ராஜாவாக இருந்த போது சுமத்திராவின் மஜாபாகித் அரசு சிங்கப்பூர் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியது. அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் சிங்கப்பூரில் இருந்து பரமேஸ்வரா வெளியேறினார்.

செஜாரா மலாயு (Sejarah Melayu) எனும் மலாய் வரலாற்றுக் குறிப்புகள் பரமேஸ்வரா எனும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. மாறாக ஸ்ரீ மகாராஜா எனும் பெயரையே பயன்படுத்தி இருக்கிறது.

மஜாபாகித் அரசு சிங்கப்பூரின் மீது தாக்குதல்கள் நடத்தியதற்கு வேறு ஒரு காரணமும் சொல்லப் படுகிறது. 



பரமேஸ்வராவின் அந்தர்ப்புரத்தில் நிறைய சேவகப் பெண்கள்; வேலைக்காரப் பெண்கள்; மனைவிமார்கள் இருந்தார்கள். சேவகப் பெண்களில் ஒருவருக்கும் வேறு ஓர் ஆடவருக்கும் நெருக்கமான  பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

பரமேஸ்வராவின் மூத்த அமைச்சர்களில் ஒருவர் அதைப் பற்றி பரமேஸ்வராவிடம் சொல்லி இருக்கிறார். அமைச்சரின் வார்த்தைகளைத் தெய்வ வாக்காக நினைப்பவர் பரமேஸ்வரா. அமைச்சர் சொன்னது உண்மையாகத் தான் இருக்கும் என்று நம்பினார். இருந்தாலும் முழுமையாக நம்பவில்லை.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்று சொல்வார்களே. உண்மை தான். அந்தப் பெண்ணைப் பற்றி அமைச்சர் தொடர்ந்து புகார் செய்து வந்தார்.

ஒருநாள் பரமேஸ்வராவிற்கு கோபம் எல்லை மீறிப் போனது. அந்தப் பெண்ணை வரவழைத்துக் கடும் தண்டனையை வழங்கி இருக்கிறார். என்ன தண்டனை தெரியுமா.

அரண்மனை வளாகப் பொதுச் சபையில் நிர்வாணக் கோலம் போடும் தண்டனை. அதாவது நிர்வாணமாக நின்று சபையோர் பார்க்கும் படியான தண்டனை. அது கடும் தண்டனை அல்ல. கொடும் தண்டனை. இப்படிப்பட்ட ஒரு தண்டனையைப் பரமேஸ்வரா வழங்கி இருக்கிறார். 



ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். தன்னுடைய மூத்த அமைச்சரின் ஆலோசனையின் பேரில் தான் பரமேஸ்வரா அந்தத் தண்டனையை வழங்கி இருக்கிறார்.

தண்டனை வழங்கப்படும் போது பரமேஸ்வரா அரண்மனை வளாகத்தில் இல்லை. வேறு எங்கோ இருந்து இருக்கிறார். சான்றுகள் உள்ளன.

அதனால் அந்தப் பெண்ணின் தகப்பனார் ராஜுனா தாப்பா (Rajuna Tapa) என்பவருக்கு பரமேஸ்வராவின் மீது அளவு கடந்த கோபம் ஏற்பட்டது.

பரமேஸ்வராவின் அமைச்சர்களில் ராஜுனா தாப்பாவும் ஒருவராக இருந்தவர். அமைச்சர்களில் இவர் நிதியமைச்சர்.

ஒரு மகளுக்கு இப்படி ஒரு தண்டனை கொடுக்கப் பட்டால் எந்தத் தகப்பனுக்குத் தான் கோபம் வராது. எப்படியாவது பரமேஸ்வராவைப் பழி வாங்க வேண்டும் என்று வஞ்சம் வளர்த்துக் கொண்டார். (F2)

அப்போது சுமத்திராவில் ஆட்சி புரிந்த மஜபாகித் பேரரசின் அரசராக விக்கிரமா வர்த்தனா (Wikramawardhana) என்பவர் இருந்தார். இந்த விக்கிரமா வர்த்தனாவிற்கு அந்தப் பெண்ணின் தகப்பனார் ரகசியமாக ஒரு செய்தி அனுப்பினார். 



சிங்கப்பூரின் மீது படை எடுக்க இதுதான் மிகச் சரியான நேரம். அப்படி நீங்கள் படை எடுத்து வந்தால் உங்களின் மஜபாகித் அரசிற்கு முழு ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருக்கிறேன். இதுதான் அமைச்சர் ராஜுனா தாப்பா அனுப்பிய அந்தச் செய்தி.

காலம் காலமாகக் காத்துக் கொண்டு இருந்த விக்கிரமா வர்த்தனா சும்மா இருப்பாரா. உடனடியாகக் களம் இறங்கினார். 300 போர்க் கப்பல்கள், பல நூறு சிறு கப்பல்கள் பலேம்பாங் துறைமுகத்திற்கு வரவழைக்கப் பட்டன.

அந்தக் கப்பல்களில் 200,000 மஜபாகித் போர் வீரர்கள் பயணித்தனர். சிங்கப்பூர் கடல் பகுதியைத் தாண்டிய மஜபாகித் வீரர்கள் சிங்கப்பூரைத் தாக்கினார்கள்.

இருந்தாலும் பரமேஸ்வராவின் கோட்டையைத் அவ்வளவு எளிதாகத் தாக்கிச் சிதைக்க முடியவில்லை. அத்துடன் கோட்டையின் உள்ளே செல்லவும் முடியவில்லை.

பரமேஸ்வராவின் கோட்டை பலம் வாய்ந்த கோட்டையாக இருந்து இருக்கிறது. கருங்கற்களால் கட்டப்பட்ட கோட்டை. இது 1398-ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி.

(1. Tsang, Susan; Perera, Audrey - 2011)

மஜபாகித் படையினர் கோட்டையின் வெளிப்புறத்தில் முற்றுகையிட்டு தாக்குதல்களை நடத்தி வந்தார்கள். அதனால் கோட்டையின் உள்ளே இருந்த போர் வீரர்களும் பொது மக்களும் வெளியே போக முடியவில்லை. 



அந்த வகையில் அவர்களுக்குச் சரியாக உணவும் குடிநீரும் கிடைக்கவில்லை. பசி பட்டினியால் வாட வேண்டிய ஓர் இக்கட்டான நிலைமை.

இந்தத் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் கோட்டையின் சேமிப்புக் கிடங்கில் நிறையவே உணவு தானியப் பொருட்களைச் சேகரித்து வைத்து இருந்தார்கள்.

வெளியே இருந்து உணவுப் பொருட்கள் வருவதற்குத் தடை ஏற்பட்டதும் பரமேஸ்வராவின் படை வீரர்களுக்குள் கலகம் மூண்டது. பரமேஸ்வராவிற்கு எதிராகவே வெறுப்பு உணர்வுகள் தோன்றின.

நிலைமை மோசமாகி வருவதைக் கண்ட பரமேஸ்வரா ஒரு கட்டளை பிறப்பித்தார். கோட்டையின் உள்ளே தற்காப்புப் போரில் ஈடுபட்டு இருக்கும் போர் வீரர்களுக்கு உணவுப் பொருட்களைச் வழங்கும்படி அரச கட்டளை.

(2. Sabrizain, Sejarah Melayu)

சமயம் காத்து இருந்த ராஜுனா தாப்பா உணவு எதுவும் இல்லை என்று சொல்லி கோட்டைக் கதவுகளைத் திறந்து விட்டார். மஜபாகித் படையினர் கோட்டைக்குள் நுழைந்தனர். தயவு தாட்சண்யம் இல்லாமல் எல்லோரையும் வெட்டிக் கொன்றார்கள். 



சிங்கப்பூர் ஆற்றில் இரத்தப் பிரளயமே கரை புரண்டு ஓடி இருக்கிறது. இனியும் அங்கே இருந்தால் உயிருக்கு ஆபத்து என்று எண்ணிய பரமேஸ்வரா அரண்மனையில் தப்பிச் சென்றார்.

(3. A. Samad, Ahmad, Sulalatus Salatin)

இந்த நிகழ்விற்குப் பின்னர் தான் *மலாக்கா* எனும் பெயரே மலாயா வரலாற்றில் இடம் பெறுகிறது.

-நூல்: பரமேஸ்வரா, பக்: 45 - 48
-நூலாசிரியர்: மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக