21 செப்டம்பர் 2019

பத்து ஆராங் துப்பாக்கிச்சூடு - 21.09.2019

பத்து ஆராங் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஜனார்த்தனன் விஜயரத்தினம் பிரிட்டனில் இருந்து மலேசியா வந்ததற்கான ஆதாரங்களை அவரின் குடும்பத்தினர் நேற்று ஊடகங்களுக்கு வழங்கினார்கள்.

கடந்த ஆண்டு 27-ஆம் தேதி அவர் மலேசியா நாட்டில் வந்து தரை இறங்கியதற்கான விமான டிக்கெட்டுகள்; அவரின் பயணப் பெட்டியில் இருந்த அடையாளச் சிட்டைகள்; அவர்கள் பெயரைத் தாங்கிய விவரங்களை வெளியிட்டார்கள்.
தமிழ் மலர் - 21.09.2019

ஜனார்த்தனன் விஜயரத்தினம் நாட்டுக்குள் வந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று ஏற்கனவே சிலாங்கூர் காவல் படைத் தலைவர் அறிவித்து இருப்பதை அவரின் குடும்பத்தினர் நிராகரித்தனர்.

தவசீலன் கோவிந்தசாமி, மகேந்திரன் சந்திரசேகரன் ஆகியோரோடு சுட்டுக் கொல்லப்பட்ட ஜனார்த்தனன் விஜயரத்தினம், கடந்த 2018-ஆம் ஆண்டு செந்தூலில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொள்ளையில் தொடர்பு உடையவர் என்று காவல் துறை தொடர்ந்து கூறி வருகிறது.

ஆனால் அந்த நேரத்தில் அவர் பிரிட்டனில் இருந்தார் என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். கடந்த ஆகஸ்டு 27-ஆம் தேதி ஜனார்த்தனன், அவரின் மனைவி மோகனம்பாள், அவர்களின் பிள்ளைகள் மலேசியா வந்தனர்.

கடந்த 6 ஆண்டுகளாக அவர்கள் பிரிட்டனில் இருந்தார்கள். 2013-ஆம் ஆண்டிற்குப் பின்னர் அவர்கள் வருவது இதுவே முதன் முறை.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜனார்த்தனனின் மகன் லோகிதரன் (வயது 17) இந்த ஆதாரங்களை எல்லாம் செய்தியாளர்களிடம் எடுத்து விளக்கினார்.

என் தந்தை நாட்டுக்கு வந்ததற்கான ஆதாரம் இல்லை என்று எப்படி மலேசிய போலீஸ் கூறுகிறது. கடந்த 2013-இல் கடைசியாக மலேசியா வந்தோம். அடுத்து இப்போது 2019 ஆகஸ்டில் வந்தோம்.

2013-ஆம் ஆண்டு நடந்த கொள்ளையில் எப்படி என் தந்தை சம்பந்தப்பட்டு இருக்க முடியும். கடந்த 6 ஆண்டுகளாக, பிரிட்டனின் போட்ஸ் மௌத் என்ற இடத்தில் என் தந்தை இருந்தார் என்று கூறிய லோகிதரன், போட்ஸ் மௌத் நகராட்சியின் வரி கட்டணங்களைச் செலுத்தியதற்கான ஆதாரங்களையும் காட்டினார்.

என் தந்தையைக் குற்றச் செயல்களோடு இவ்வளவு அவசரமாகச் சம்பந்தப் படுத்திய காவல் துறை, என் தாயார் மோகனம்பாள் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கத் தவறி உள்ளது.

என் தந்தை, தாயார், எங்கள் மாமா மற்றும் அவரின் நண்பரோடு சென்றார்கள். அவர்களை நோக்கித் தான் காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறது. அப்படி என்றால் என் தாயார் எங்கே என்று அவர் வினவினார்.

இதனிடையே ஜனார்த்தனனின் மாமனார் பேசுகையில், ஜனார்த்தனன் கடந்த மாதம் தான் மலேசியா வந்தார். அதிக நாட்கள் விசாவை மீறி அவர் இருந்தார் என்பது மிகத் தவறானது என்றும் கூறி இருக்கிறார். ஜனார்த்தனனின் மாமனாரின் இந்தத் தகவல் வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக