22 செப்டம்பர் 2019

கோலார் தங்கவயல் தமிழர்கள் - 2

புகைமூட்டம் நாட்டையே உலுக்கிக் கொண்டு இருக்கிறது. பள்ளிக்கூடங்களை இழுத்து மூடுகிறார்கள். ஆளாளுக்கு முகங்களை மூடிக் கொண்டு போகிறார்கள் வருகிறார்கள். முன்னுக்குப் போகிற வாகனம் முழுசாகத் தெரியாமல் முன்னுக்கும் பின்னுக்கும் இடித்துக் கொள்கிறார்கள். இப்படி இருக்கும் போது அதைப் பற்றி எழுதாமல் வேறு எதையோ எழுதுவதாகத் தவறாகக் கணிக்க வேண்டாம்.


இரு நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு நீயா நானா போட்டியில் களம் இறங்கி இருக்கின்றன. அதுதான் உண்மை. ஒரு பக்கம் பூனை சின்னதாய் குட்டி போடுகிறது. இன்னொரு பக்கம் யானை பெரிதாய்ச் சாணம் போடுகிறது.

இதில் ஒரு நாட்டைச் சேர்ந்த நான்கு நிறுவனங்களின் ஜிங்கு ஜிக்கான் நாடகங்களுக்கு சபாஷ் போடலாம். திருடனை வீட்டிலேயே வைத்துக் கொண்டு அடுத்த வீட்டில் நுழைந்த திருடனைப் பற்றி விமர்சனம் செய்வது சரியாக இல்லை. அதுவே என் கருத்து.


அதனால் தான் புகை மூட்டக் கோளாறு புகையோடு இருக்கட்டும் என்று கோலார் தங்க வயலுக்குப் போய் இருக்கிறேன். ஏன் என்றால் கோலார் தங்க வயலில் கோளாறுகள் இல்லை. சரிங்களா.

தங்க வயல், தங்கச் சுரங்கம், தங்கச் சுரங்கப் பாதை, தங்கச் சுரங்க வெடிப்பு, தங்கச் சுரங்க இடிபாடு. இவை எல்லாம் தங்கம் தொடர்பான தங்கமான சொற்கள். இதில் தங்கம் எனும் சொல் மட்டும் சாமானிய வாழ்க்கையிலும் மிக மிகச் சாதாரணமாகி விட்ட சொல். 



நகைக் கடைக்குப் போகிறார்கள். நகைகளைப் பார்க்கிறார்கள். விருப்பப்படும் நகைகளை வாங்கிக் கொள்கிறார்கள். தங்கத்திற்கு தங்கமே என்கிறார்கள். இருக்கிற நகைகளை எல்லாம் அள்ளிப் போட்டு கல்யாணம் காட்சிக்குப் போகிறார்கள். என்னையும் பார் என் நகைகளையும் பார் என்று அழகு காட்டுகிறார்கள். சந்தோஷம்.

ஆனால் அந்த நகைகளின் பின் அணியில் எப்பேர்ப்பட்ட கனமான துயரங்கள் தேங்கி நிற்கின்றன. எப்பேர்ப்பட்ட இறுக்கமான வேதனைகள் தொக்கி நிற்கின்றன. எப்பேர்ப்பட்ட  ஆபத்தான விஷயங்கள் மலிந்து கிடக்கின்றன. எத்தனைப் பேருக்குத் தெரியும். பலருக்கும் தெரியாத உண்மைகள்.

ஒரு கிராம் தங்கம் எடுப்பதற்குப் பற்பல சோதனைகள். பற்பல போராட்டங்கள். இதில் அமில திரவங்களின் பாதிப்புகள் (acidic mine water); கரிய மோனாக்சைடு (Carbon Monoxide) காற்றின் அழுத்தங்கள்; கொடும் விஷம் கொண்ட சுரங்கப் பாம்புகள் (Pseudelaphe flavirufa); வெளியே வந்தால் கேங்ஸ்டர் பிரச்னைகள். இவை எல்லாம் அங்கே அன்றாடம் நடந்த அந்தாதிகள். 




இரண்டு மைல் ஆழத்தில் இருக்கும் ஒரு சுரங்கப் பாதைக்குள் தொழிலாளர்கள் எப்படி இறங்குகிறார்கள். எப்படி எல்லாம் வேலை செய்கிறார்கள். என்னவெல்லாம் நடக்கும். அதைப் பற்றித் தான் இனி தெரிந்து கொள்ளப் போகிறோம். அதற்கு முன்னர் கோலார் தங்க வயலைப் பற்றி மேலும் சில முக்கியமான தகவல்கள்.

கோலார் தங்க வயல்களை கே.ஜி.எப். (கோலார் கோல்ட் பீல்ட்) என்று அழைக்கிறார்கள். இந்த வயல்கள் கர்நாடகா மாநிலத்தில், பெங்களுரு மாநகரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இந்தியாவின் மிகப் பழமையான; மிக ஆழமான தங்கச் சுரங்கம்.

கி.மு. 100-ஆம் ஆண்டில் இருந்து கி.பி 1000-ஆம் ஆண்டுகள் வரை சோழர்கள் அந்த வயல்களில் தங்கம் எடுத்தார்கள். 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்கள் தங்கம் எடுத்தார்கள். 1850-ஆம் ஆண்டுகளில் மைசூர் அரசர்களும் திப்பு சுல்தானும் தங்கம் எடுத்தார்கள். ரொம்ப ஆழத்திற்குப் போகவில்லை. மேலாகத் தோண்டி எடுத்தார்கள்.




ஆனால் 1980 - 1990-ஆம் ஆண்டுகளில் மிக ஆழத்டிற்குப் போய் விட்டார்கள்.  பூமியின் மேற்பரப்புக்கு கீழே 3 கி.மீ. ஆழத்தில் தங்கம் தோண்டி எடுக்கப் பட்டது. இந்தக் கோலார் தங்கவயல் தவிர, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தங்கச் சுரங்கங்கள் மட்டுமே உலகில் மிகவும் ஆழமானவை. அந்த வகையில் கோலார் தங்க வயல் உலகிலேயே இரண்டாவது ஆழமான தங்கச் சுரங்கம் ஆகும்.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜான் டெய்லர் எனும் பிரிட்டிஷ் சுரங்க நிறுவனம் சுரங்கத் தொழிலை ஏற்று நடத்தியது. பின்னர் 1920-ஆம் ஆண்டுகளில் சுரங்கத்திற்குள் மின்சக்தி கொண்டு வரப்பட்டது.

அந்தக் காலக் கட்டத்தில் தென் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் மின்சார வசதிகள் இல்லாமல் இருந்தன. நினைவில் கொள்வோம். 




மிக ஆழத்தில் சுரங்கங்களைத் தோண்டுவதற்குத் தனித்துவமான உபகரணங்கள் தேவைப் பட்டன. 1940-ஆம் ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய நொறுக்கும் பொறி பயன்படுத்தப் பட்டது.

இந்தச் சுரங்கத் தொழில் 1880-ஆம் ஆண்டு தொடங்கியது. 120 ஆண்டுகள் நீடித்தது. 2001-ஆம் ஆண்டு சுரங்கச் செயல்பாடுகள் நிறுத்தப் பட்டன. இருந்தாலும் கோலார் தங்க வயலின் ஆயுசு அப்படி ஒன்றும் எளிதாக முடிவு அடைந்து விடவில்லை. இன்னும் தொடர்கிறது.

2010-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அந்த வகையில் கோலார் சுரங்கங்கள் மீண்டும் தொடக்கலாம் எனும் தீர்ப்பு.




2016-ஆம் ஆண்டில் மேலும் ஓர் அறிவிப்பு. கோலார் வயல் ஏலம் விடப்படும் என்று நரேந்திர மோடி அரசாங்கம் அறிவித்தது. அதனால் நிச்சயமாக ஒரு பெரிய மாற்றம் ஏற்படலாம். ஒரு காலத்தில் பேய் நகரம் என்று அழைக்கப்பட்ட கோலார் தங்க வயலில் மீண்டும் மின்விளக்குகள் எரியலாம். மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. சரி.

சுரங்கத் தொழிலாளர்கள் எப்படி சுரங்கத்திற்குள் இறங்கிப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக ஊடகங்களின் நிருபர்கள் கோலார் தங்க வயலுக்குப் பயணம் போய் இருக்கிறார்கள். அங்கே நடக்கும் அவலங்களைப் பற்றி தெரிந்து கொண்டார்கள். அவற்றில் இருந்து சில தகவல்கள்ளை பகிர்ந்து கொள்கிறேன்.




பத்து அடி உயரத்திற்கு இரும்புக் கம்பிகளால் ஆன ஒரு மின்தூக்கி (Lift), பூமியின் அடிப் பாகத்தை நோக்கி மெதுவாகக் கீழே இறங்கிச் செல்கிறது. அதில் பத்து பதினைந்து பேர். அவர்களின் முகங்களில் கவலை தோய்ந்த இறுக்கம். உயிரற்ற முக பாவங்கள்.

அவர்களில் எத்தனை பேர் மீண்டும் உயிரோடு திரும்பி வருவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. இறங்கினால் பிணம். ஏறினால் பணம். இதுதான் அங்கே அப்போதைக்கு ஒரு சமன்பாடு.

துளைபோடுபவர் (Driller); வெடி வைத்து தகர்ப்பவர் (Blaster); பொது வேலையாள் (General Labor); மேற்பார்வையாளர், வழிகாட்டிகள் என்று பல பிரிவினர் இருக்கிறார்கள்.

மின்தூக்கி பூமிக்கு கீழே செல்லச் செல்ல ஒவ்வொரு 70 அடி ஆழத்திற்கும் ஒரு டிகிரி பாரன்ஹீட் அளவு வெப்பம் கூடுகிறது. இந்த வெப்பம் கூடிக் கொண்டே போகும். 




சுரங்கத்தின் உள்ளே 100 அடி ஆழத்தில் நேர்மட்டமாக ஒரு நீண்ட குழி. அதன் அகலம் 15 அடி. இதை ஷாப்ட் (shaft) என்பார்கள்.

அடுத்து ஒவ்வொரு 100 அடிக்கும் கிடைமட்டமாக எதிர் - எதிர் திசைகளில் வேர்கள் போல சில கிலோ மீட்டர்கள் தூரம் வரை குடைந்து கொண்டு செல்கிறார்கள். இதை டனல் (tunnel) என்கிறார்கள். அதாவது சுரங்கப் பாதைகள்.

சுரங்கப் பாதைகளின் உள்ளே உலோகச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட குட்டி குட்டி வண்டிகள். இவற்றை இழுத்துச் செல்ல இருப்புப் பாதைகள்.

வெட்டி எடுக்கப்பட வேண்டிய உலோகம் எந்தப் பகுதியில் இருக்கிறது. அங்கே எப்படிப் போக வேண்டும். போகும் பாதையில் எந்த எந்த இடங்களில் உலோகம் இருக்கும். அந்த உலோகப் பாறைகளைத் தகர்க்க எத்தனை இடங்களில் வெடி வைக்க வேண்டும். எவ்வளவு வெடிமருந்து பயன்படுத்த வேண்டும்.




இதை எல்லாம் ஏற்கனவே வரைபடங்களாக வரைந்து கொடுத்து இருப்பார்கள். கீழே சுரங்கத்திற்குள் இறங்குவதற்கு முன்னால் நில ஆய்வுகள் செய்து இருப்பார்கள். தொழிலாளர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கும்.

சுரங்கப் பாதை எங்கே முடிவு அடைந்து இருக்கிறதோ அங்கே இருந்துதான் புதிய வேலைகள் தொடங்கும். சில ஆயிரம் அடி ஆழத்தில் பூமியைக் கிடை மட்டமாக குடைந்து சில தொழிலாளர்கள் போய்க் கொண்டே இருப்பார்கள். ஏற்கனவே குடையப்பட்ட சுரங்கப் பாதைகளின் மேற்கூரைகளை மரச் சட்டங்கள் தாங்கி நிற்கும்.

சுரங்கப் பாதைகளின் கிளைகளுக்குள் நரம்புப் பின்னல் போல் காற்றுக் குழாய்கள் இருக்கும். காற்றுக் குழாய்களின் வழியாக குளிர் ஊட்டப்பட்ட காற்று அனுப்பப்படும். சுரங்கப் பாதைகளின் முன்பகுதிகளில் மின் விளக்குகளும், தண்ணீர்த் தொட்டியும் இருக்கும்.




நிலத்தின் மேற்பரப்பில் குளிரூட்டி இயந்திரங்களால் குளிர் காற்று உற்பத்தி செய்யப்படும். அந்தக் குளிர்க் காற்று தான் இரும்புக் குழாய்களின் வழியே  சில கிலோமீட்டர்கள் தூரம் வரை கீழே பயணம் செய்கிறது.

இங்கே வெப்ப அளவு சமயங்களில் 160 டிகிரி பாரன்ஹீட். மிக மிகக் கொடுமையான வெப்பம். காற்றுக் குழாய்களின் நெடும் பயணத்தில் காற்றின் வெப்பநிலை பலமடங்கு அதிகரித்துப் போகும். அப்படியே ஆவியாக மாறிப் போய் இருக்கும். ஓர் எடுத்துக்காட்டு.

சிங்கப்பூரில் இருந்து பினாங்கிற்கு ஒரு பேருந்து நிற்காமல் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் வெப்பக் காற்று வெளியேற்றியில் (radiator) இருந்து வெளியேறும் நீராவி எப்படி இருக்கும். அங்கே உங்கள் முகத்தைப் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு காட்டிப் பாருங்கள். எப்படி இருக்கும்.

அந்த மாதிரியான வெப்பத்தில் தான் சுரங்கக் குழாய்களின் காற்றின் வெப்பமும் இருக்கும். அந்த மாதிரியான வெப்பக் காற்றைத் தான் கீழே சுரங்கங்களில் சுவாசிக்க வேண்டும். புரியும் என்று நினைக்கிறேன்.




சுரங்கத்தின் உள்ளே இருக்கும் மின் விளக்குகள் எப்போதுமே மங்கிய வெளிச்சத்தில் சோக ராகங்களைப் பாடிக் கொண்டு இருக்கும். எப்போதுமே முகாரி ராகங்களின் ஜன்னிய அரோகணங்கள். வேறு எப்படி சொல்வதாம்.

இயற்கையின் அந்தகார வலிமைகளுக்கு முன்னால் அறிவியலின் அதிகாரச் செருக்கு ஒன்றும் செல்லாது. சமயங்களில் தோற்றுப் போகும். மனிதனின் அறிவியல் பெருமைகள் இயற்கையின் பேராண்மையுடன் போட்டிப் போடவே முடியாது.

கண்டிப்பாக அறிவியல் தோற்றுப் போகும். சுரங்கத்திற்குள் மின் தடைகள் ஏற்படலாம். அந்த மாதிரி சமயங்களில் இயற்கையை மிஞ்சி மனிதம் ஒன்றுமே செய்ய முடியாது.

சுரங்கத்திற்குள் சுதந்திரமான காற்று இருக்காது. சுத்தமான வெளிச்சம் இருக்காது. ஓர் அழுத்தமான இருட்டு எப்போதும் படர்ந்து இருக்கும். தலைக்கு மேலே பல இலட்சம் கோடி டன் பாறைகள். எந்த நேரத்திலும் அப்படியே இடிந்து விழலாம். 




வாய் பேச முடியாத பூமிக்கு ஓர் உக்கிரம். தன்னைச் சீண்டியவர்கள் மேல் ஆத்திரம். அதனால் வேறுவழி இல்லாமல் வெப்பமாகக் கொப்பளிக்கிறது.

சுரங்கத்தின் கடைசிக் கோடியில் பூமிக்கும் தொழிலாளர்களுக்கும் நேரடியாக ஒரு பயங்கரப் போர் நடந்து கொண்டே இருக்கும். இடுப்பில் ஒட்டி இருக்கும் ஒரு ஜட்டியைத் தவிர வேறு எதையும் உடலில் போட்டுக் கொள்ள முடியாது. ஏன் அப்படி? நீங்கள் கேட்கலாம். சின்ன ஒரு கற்பனை.

உங்களுடைய உடலின் மேல் தோலையைப் பிய்த்து எடுத்து விட்டு, அதன் மேல் ஓர் எஸ்கிமோ கம்பளியைப் போட்டுப் போர்த்தினால் எப்படி இருக்கும். அந்த நிலைமை தான் அங்கே. அதனால் சட்டை சிலுவார், உள்ளாடை மேலாடை என்று எதையும் போட மாட்டார்கள். அவ்வளவு வெப்பம்.




முகத்திற்குக் முகமூடிக் கவசம்; கால்களுக்குக் காலணிக் கவசம்; கைகளுக்குக் கையுறைகள்; தலைக்கு முக்காட்டு முக்கோணம் என்று எதையும் போட்டுக் கொண்டு வேலை பார்க்க முடியாது. அப்படித்தான் அங்கே கீழே நிலவும் ஓர் எதார்த்தமான உண்மை.

தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் இருக்கிறது. இருந்தும் என்ன செய்வது... பிரயோசனம் இல்லை. அந்தச் சட்டம் பூமிக்கு அடியில் இறங்கிப் போய் வேலை செய்யாது. அந்தச் சட்டம் அந்தச் சுரங்கத்திற்குள் ஒரு வாயில்லாத பூச்சி. அங்கே அதற்கு இரண்டு கண்களும் இல்லை. இரண்டு காதுகளும் இல்லை.

(தொடரும்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக