14 செப்டம்பர் 2019

மலேசிய இந்தியர்கள் தியாகிகளா?

மலேசிய இந்தியர்களின் மூதாதையர் தியாகிகளா? அல்லது கூலிக்கு மாரடித்தவர்களா? 

அண்மைய காலங்களில் சமூக ஊடகங்களில் பரவலாகி வரும் ஒரு கேள்வி.

இப்போதைய மலேசிய இந்தியர்களின் மூதாதையர் தியாகிகள் என்பதை ஒரு சாரார் ஆதரிக்கிறார்கள். மறு சாரார் மறுக்கிறார்கள். தியாகிகள் என்று சொல்பவர்கள் சிலரின் கருத்துகள் ரொம்பவுமே அழுத்தமானவை. உணர்வுகளைக் கொப்பளிக்க வைக்கும் பதிவுகள். அவற்றைப் பின்னர் பார்ப்போம்.




மலேசிய இந்தியர்களின் மூதாதையர் தியாகிகள் அல்ல. அவர்கள் கூலிக்கு மாரடித்தவர்கள் என்று சொல்பவர்கள் என்ன மாதிரியான காரணங்களைச் சொல்கிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம்.

மலேசிய இந்தியர்களின் மூதாதையர் கூலி வேலை செய்வதற்காக மலாயாவுக்கு அழைத்து வரப் பட்டவர்கள். செய்த வேலைக்கு அவர்கள் கூலி வாங்கினார்கள். அதாவது வாங்கிய கூலிக்கு வஞ்சகம் இல்லாமல் வேலை செய்தார்கள்.

ஆகவே செய்த வேலைக்கு கூலி வாங்கியவர்களைத் தியாகிகள் என்று எப்படிச் சொல்ல முடியும் என்று வாதிடுகிறார்கள்.

கூலிக்கு வேலை செய்தவர்களைத் தியாகி என்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது. மலேசிய இந்தியர்கள் இந்த நாட்டின் குடிமக்கள். அந்த அடிப்படையில் தான் அவர்களுடைய கோரிக்கைகளும் இருக்க வேண்டும்.

மலேசிய இந்தியர்களின் மூதாதையர் வந்தார்கள்; வாழ்ந்தார்கள்; வீழ்ந்தார்கள். அப்படி இருக்கும் போது அவர்களை எப்படி தியாகிகள் என்று சொல்ல முடியும் என்று திருப்பிக் கேட்கிறார்கள்.




காட்டை வெட்டினோம், ரோட்டைப் போட்டோம், இரயில் பாதை போட்டோம் என்று இன்னும் எத்தனை நாளைக்குத் தான் சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறோம். எத்தனை முறைகளுக்குத் தான் அதையே திரும்பத் திரும்ப இராமாயணம் பாடிக் கொண்டு இருக்கப் போகிறோம்.

அப்படிப் பார்த்தால் சீனர்கள் நம்மை விட இந்த நாட்டின் வளர்ச்சிக்குப் அதிகமாகப் பாடு பட்டு இருக்கிறார்கள். நாம் இந்த நாட்டின் குடி மக்கள். நம் அடிப்படை உரிமைகளுக்குப் போராடும் குணம் தான் நமக்கு இப்போதைக்குத் தேவை என்றும் சொல்கிறார்கள்.

அமெரிக்கா நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு காலத்தில் இங்கிலாந்து நாட்டின் காலனி நாடாக இருந்தது. இப்போது பாருங்கள். அமெரிக்கா ஒரு மாபெரும் வல்லரசு. ஆட்சி செய்த இங்கிலாந்து நாடே அடக்கி வாசிக்கிறது.




அமெரிக்கா என்பது உலகின் பல நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் பலரும் ஐக்கியமாகிப் போன நாடு. அப்படிப் புலம் பெயர்ந்தவர்கள் அனைவரும்  இப்போது அந்த நாட்டின் குடி மக்கள்.

அமெரிக்கர்கள் எனும் அந்த ஒரே இன அடையாளத்தை வைத்துக் கொண்டு தன் அவர்கள் முன்னேறி வருகிறார்கள். உலகப் பொருளாதாரத்தை இறுக்கிப் பிடித்து உலகத்தையே ஆட்டிப் படைக்கிறார்கள்.

உலகப் போலீஸ்காரர் என்று பேர் எடுத்தாலும் கட்டப் பஞ்சாயத்து செய்து உகாண்டா இடி அமினையே மிஞ்சிப் போகிறார்கள். இது ஒருவரின் கருத்து. சரி. அந்தப் பக்கம் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

மலேசிய இந்தியர்கள் கூலிக்கு மாரடித்தவர்களா? யார் சொன்னது. எந்த விளக்கெண்ணெய் சொன்னது. என்னிடம் வரச் சொல்லுங்கள். நன்றாகக் கேள்வி கேட்டு அனுப்புகிறேன் என்று ஆத்திரம் ஆவியாகி கண்களில் அனல் பறக்க கொப்பளிக்கிறார் ஓர் அன்பர். பெந்தோங்கைச் சேர்ந்த எழுத்தாளர் பெந்தோங் சத்தியா ராமன். 1980-களில் மலேசியாவில் புகழ்பெற்ற எழுத்தாளர்.

சோறு போட்ட கைக்கு சூடு போடுகிறவர்கள் மலேசிய இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ள கொஞ்சமும் லாயக்கு இல்லாதவர்கள் என்று குமுறுகிறார்.

அவரவர் கருத்துகளைச் சொல்ல அவரவருக்கு உரிமை உள்ளது. ஆனால் மலேசிய இந்தியர்கள் கூலிக்கு மாரடித்தவர்கள். அவர்கள் தியாகிகள் அல்ல என்று வம்சாவளி உணர்வு கொண்டவர்கள் எவரும் சொல்ல மாட்டார்கள். சொல்ல மனசும் வராது.




மலேசிய இந்தியர்கள் ஆயிரம் ஆயிரம் வேதனைச் சோதனைகளைக் கடந்து வந்தவர்கள். மலாயாத் தோட்டத் தமிழர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்கும் மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது. எப்படி மறக்க முடியும். எப்படிங்க மறைக்க முடியும்.

மலாயா தமிழர்கள் இந்த மண்ணில் எத்தனையோ நூறாண்டுகளுக்கு முன்னரே கால் பதித்து விட்டார்கள். இது ஒரு வரலாற்று உண்மை. அது மட்டும் அல்ல. உலக வரலாற்றில் தவிர்க்க முடியாத உண்மையுங்கூட.

மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய நிலைமை. என்ன தான் வரலாற்றுப் படிவங்களைச் சிதைத்துப் போட்டாலும்; மறைத்துப் போட்டாலும்; மலாயாத் தமிழர்களின் வரலாற்று உண்மைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். என்றைக்கும் அவை வரலாறு பேசும் வாய்மையான உண்மைகள்.

வரலாற்றை வரலாறாகப் பார்க்கும் பக்குவம் வேண்டும். வரலாற்றை வரலாறாகப் பார்க்கும் நல்ல எண்ணமும் வேண்டும். வரலாற்றை முறையாகப் படிக்காமல் அறியாமையில் சொல்வது மிகவும் தப்பு.




கடந்த 200 - 250 ஆண்டு காலமாக இந்த நாட்டிற்காக உழைத்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்களைத் தியாகிகள் என்று சொல்வதில் தப்பு இல்லை என்பதே என் கருத்து. கூலிக்கு மாரடித்தார்கள் என்று சொல்வது பெரிய தப்பு.

ஓர் அனைத்துலக விளையாட்டுப் போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கம் அல்லது ஒரு தங்கப் பதக்கம் பெற்றவருக்கு டத்தோ விருது... 2 இலட்சம், 5 இலட்சம் ரொக்கம். மாதாந்திரப் பென்சனாக 2000 லிருந்து 3000. இதில் வீரர் தீரர் எனும் புகழ் மாலைகள். இரண்டு மூன்று வருட விளையாட்டு அனுபவத்தில் இத்தனைச் சலுகைகள்.

ஆனால் 100 - 200 வருடங்களாக உழைத்தவர்களுக்கு வீரர் பட்டம் வேண்டாங்க... வீர விருதும் வேண்டாங்க... ரொக்கமாக இலட்சம் ஆயிரங்கள் வேண்டாங்க... அவர்களின் உழைப்பிற்கு ‘தியாகிகள்’ எனும் ஓர் அடைமொழியைக் கொடுத்து விட்டுப் போகலாமே. அந்த அடை மொழிக்கு இப்படி ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் வேண்டாமே. அதற்கு வேறு சப்போர்ட். அட… சப்போர்ட் செய்வதற்கும் ஒரு விவஸ்தை வேண்டாமா.




இதிலும் கூடவா இன ஒதுக்கல்கள்... இன ஓர வஞ்சனைகள். மூதாதைய மலேசிய இந்தியர்களுக்குத் தியாகிகள் அடைமொழி வழங்கி அவர்களை நினைத்துப் பார்ப்பதில் என்னங்க தப்பு.

விதை சத்தம் இல்லாமல் முளைக்கிறது... மரம் சத்தத்தோடு முறிகிறது... அம்புட்டு தான்.

இந்த நாட்டில் இந்தியர் இனம் சில நூற்றாண்டுகளுக்கும் மேலாக சத்தம் இல்லாத விதைகளாய்த் தான் இருந்தார்கள். ஆனால் இப்போது ஏற்பட்டு உள்ள அரசியல் குளறுபடிகளைச் சலவை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக் கோரிக்கைகளாக முன் வைக்கிறார்கள். அதில் என்ன தப்பு. இடையில் புகுந்து மலேசிய இந்தியர்கள் கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள் எனும் ஜிங்கு ஜிக்கான் நாடகம் தேவையே இல்லை.

மலேசிய இந்தியர்களுக்குத் தியாகிகள் பட்டத்திற்குத் தோள் கொடுக்க விருப்பம் இல்லை என்றால் வாயை மூடிக் கொண்டு இருப்பதே சிறப்பு. வெந்த புண்ணில் பிளேடு போட்டு வேடிக்கை பார்க்காமல் இருந்தால் பெரிய புண்ணியம். 




தமிழ் ஆர்வலரும் சிந்தனையாளருமான ஸ்ரீ காளி கருப்பர் உபசாகர் 16.08.2019-ஆம் தேதி பேஸ்புக் ஊடகத்தில் பதிவு செய்த கருத்து:

சில பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மலேசிய மண்ணில் தடம் பதித்து விட்ட உழைப்பாளிகள். இந்த நாட்டைப் பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டிய படைப்பாளிகள். அதை மறக்கலாமா? இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டுப் பல தியாகங்கள் செய்தவர்கள் மலேசிய இந்தியர்கள்.

எழுத்தாளர்  சத்தியா ராமன் மேலும் சொல்கிறார். முன்னுக்கு பின் முரணான சுய விளக்கம் ஒரு தெளிவு இல்லாத சிந்தனையைக் குறிக்கும். இந்த நாட்டு இந்தியர்கள் அவர்கள் செய்த வேலைக்கு மட்டும் கூலி பெற்று விட்டார்கள் என்று சொல்வது தப்பு. அவர்களைத் தியாகிகள் என்று முத்திரை குத்தக் கூடாது என்று சொன்னால் அது தப்பிலும் பெரிய தப்பு.




ஒருவர் ஆன்மீகவாதியாக இருக்கலாம். நாத்திகராக இருக்கலாம். பிரச்சினை இல்லை. ஆனால் இந்த நாட்டில் இந்தியர்கள் பட்ட அவலங்களின் மேல் அக்கறைக் காட்டாமல் இருப்பது பெரிய ஓர் அலட்சியப் போக்காகும்.

அதுவும் இல்லை என்றால் அரசியல் சார்பில் ஒரு பக்க வாதமாக இருக்கலாம். அப்படியும் இருக்கலாம். வேலைக்கு தகுந்த சம்பளம் கொடுக்கப் படுகிறது. இதில் என்ன தியாகி பட்டம் வேறு என்று வினா வைப்பது ரொம்பவும் தவறு.

காலை எட்டு மணிக்கு வேலைக்குப் போய் மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்புவர்களுக்கு வேண்டும் என்றால் மலேசிய இந்தியர்கள் கூலிக்கு மாரடித்தவர்கள் எனும் கூற்று பொருந்தி வரும்.

ஆனால் இந்தியாவில் இருந்து இங்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்களைக் கொத்தடிமைகளாகக் கொடுமைப் படுத்தினார்கள். 




அதிகாலை தொடங்கிச் சூரியன் மறையும் வரை துன்புறுத்தி வேலை வாங்கினார்கள்.  20, 30 காசு சம்பளத்திற்காக நாள் முழுதும் சிறைப் பட்டு சிதைக்கப் பட்டார்கள். அது தியாகம் இல்லையா?

எத்தனை இன்னல் வந்தாலும் பொறுமையோடும் சகிப்புத் தன்னையோடும் நாளும் செத்து செத்து வாழ்ந்தார்களே அது தியாகம் இல்லையா?

முதலில் அவர்களது அயராத உழைப்புக்கு தருந்த ஊதியம் கொடுக்கப் பட்டதா? அதற்கு எவராலும் பதில் சொல்ல முடியுமா? இன்று இந்த நாட்டில் மலிந்து கிடக்கும் மற்ற நாட்டுக்காரர்களுக்கு யாருங்க காரணம்.

திறமை இல்லா விட்டாலும் பெரிய சம்பளம் வேண்டும். உடல் உழைப்பு வேலைகள் வேண்டாம். படித்த படிப்புக்கு தகுந்த வேலையே வேண்டும் என்கிற பிடிவாதம் இங்கே பலருக்கும் உண்டு.. தகுந்த வேலை கிடைக்கும் வரை வேறு வேலைகளில் நாட்டம் இல்லாமல் போவது இப்போதைக்குப் பல பட்டதாரிகளின் நடப்பு விவகாரம். அது போன்ற காரணங்களைக் கூறி விரல் நீட்டலாம்.

ஆக உடலை வருத்தி உழைக்காமல் சொகுசாய் உள்ளவர்களே தியாகிகளாய் ஆக்கப்படும் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அன்று மலாயாவாக இருந்த நாட்டை மலேசியாவாக மாற்றி அமைக்க அரும்பாடு பட்டவர்கள் மலேசிய இந்தியர்கள். 




தனக்காக யோசிக்கத் தெரியாமல் நாட்டுக்காக நிறையவே ஆசா பாசங்களை இழந்த இந்தியர்களைத் தியாகிகள் என்று சொல்வதில் என்ன தவறு?

அதை விட்டு விட்டு "படிப்பது இராமாயணம்... இடிப்பது பெருமாள் கோவிலாக’ இருக்கக் கூடாது என்பது அந்த எழுத்தாளரின் கருத்து.

ஆக அவ்வப்போது சில அறைகுறை கூஜா தூக்கிகளும் வருவார்கள். போவார்கள். அவர்களின் சுய லாபத்திற்காக எதையாவது உளறி விட்டுச் செல்வார்கள். இவர்களுக்கு ஜால்ரா போடுவதற்காகவே சில வெங்காயச் சட்ணிகளும் இருக்கவே செய்வார்கள்.

மலேசிய இந்தியர்கள் நேற்று முந்தா நாள் மலாயாவுக்கு விருந்தாளிகளாக வந்தவர்கள் அல்ல. அவர் உண்மையிலேயே தியாகிகள். கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள் அல்ல.

மலேசிய இந்தியர்கள் இந்த மலையகத்தைத் தங்கள் உழைப்பால் உயர்த்தி உலகமே உற்றுப் பார்க்கும் அளவுக்கு கெளரவப் படுத்தியவர்கள்.

நம் மூதாதையர்கள் உழைச்சுப் போட்டுப் போன சுகத்தில் தான் இப்போது நாம் சொகுசாய்க் கால் மேல் கால் போட்டு சீரியல் பார்க்கிறோம். சொகுசாய்ச் சவடால் பேசிக் கொண்டு இருக்கிறோம். ரொம்பவும் வாசிக்க வேண்டாமே. அவர்கள் இல்லை என்றால் நீங்களும் இல்லை. நானும் இல்லை. அதை மறக்க வேண்டாமே.

நம்முடைய மூதாதையர்களை மறக்காமல் அவர்களை என்றைக்கும் நினைத்துப் பார்ப்போம். காலா காலத்திற்கும் அவர்களுக்கு நன்றி சொல்வோம். நம்முடைய மூதாதையர்களைக் கூலிக்கு மாரடித்தவர்கள் என்று வாய் கூசாமல் பேசுவதை நிறுத்திக் கொள்வோம்.

மலேசிய இந்தியர்கள் அன்றைக்கும் அஞ்சலிகள். இன்றைக்கும் அஞ்சலிகள். இனி என்றைக்கும் அஞ்சலிகள்… புஷ்பாஞ்சலிகள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக