31 மார்ச் 2020

கொரோனா வைரஸ்: மலேசியாவில் ரெம்டெசிவிர் பரிசோதனைகள்

தமிழ் மலர் - 31.03.2020

கொரோனா கோவிட் -19 நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் (Remdesivir) எனும் மருந்து பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அந்த மருந்தின் செயல் திறன் குறித்துச் சோதனைகளை நடத்தும் நாடுகளில் ஒன்றாக மலேசியாவும் தேர்வு செய்யபட்டு உள்ளது. 



மலேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்

ரெம்டெசிவிர் மருந்தைப் பரிசோதனை செய்வதற்கான உலகளாவிய மையங்களில் ஒன்றாக மலேசியா தேர்வு செய்யப் படுவதாக உலகச் சுகாதார நிறுவனம் (World Health Organization) சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. பெருமைக்குரிய செய்தி.

பொதுவாகவே உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கைக்கு உரிய நாடுகளைத் தான் தேர்வு செய்யும். மலேசியாவின் சுகாதாரக் கட்டமைப்பில், மலேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (Institute for Medical Research) உலகத் தரம் வாய்ந்தது. 120 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது.

மலேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (IMR) 1900-ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது. அந்தக் காலக் கட்டத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள், அதாவது பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேய ஏகாதிபத்தியங்கள் புதிய ஆராய்ச்சிக் கழகங்களை உருவாக்குவதற்கு காலனித்துவ நாடுகளைத் தேர்வு செய்தன. 



மலேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்
100-ஆம் ஆண்டு நிறைவு விழா

அப்போது உருவானது தான் மலேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம். பழைய பெயர் மலாயா மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்.

அதற்கும் காரணங்கள் உள்ளன. பெரும்பாலான பிரிட்டிஷ், டச்சு, பிரெஞ்சுக் காலனிகள் ஆசியா, ஆப்பிரிக்கா தொலைதூரக் கண்டங்களில் இருந்தன. டச்சுக்காரர்களுக்கு இந்தோனேசியா. பிரெஞ்சுக்காரர்களுக்கு இந்தோசீனா. பிரிட்டிஷ்காரர்களுக்கு இந்தியா. ஒரு செருகல்.

இந்தோனேசியா, இந்தோசீனா எனும் சொற்கள் இந்தியா எனும் சொல்லின் அடிப்படைச் சொற்கள். இந்தியா எனும் சொல் இண்டஸ் எனும் சொல்லில் இருந்து உருவானது. சிந்து நதியின் பெயரில் இந்தியா எனும் பெயர் உருவானது.  உண்மைதான். ஆனால் மகா அலெக்ஸாண்டர் காலத்திற்கு முன்பே லத்தீன் மொழியில் (Classical Latin) இந்தியா எனும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சரி.



இளம் ஆய்வாளர்கள்
பிரிட்டிஷ் மலாயாவில் முதன்முதலில் உருவானது மலாயா நோயியல் கழகம் (Pathological Institute). அதன் பின்னர் தான் மலாயா மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் உருவானது.

அன்றைய மலாயா தீபகற்பத்தில் கோலாலம்பூர் நகரம் ஒரு மையமான இடத்தில் இருந்தது. அதனால் மலாயாவில் ஒரு நோயியல் கழகம் அமைப்பதற்குப் பொருத்தமாக இருந்தது.

அப்போதைய காலக் கட்டத்தில் பெரி-பெரி (beri-beri) எனும் விட்டமின் பி-1 குறைவு நோய்; மலேரியா போன்ற நோய்கள் பரவலாக இருந்தன. அத்தகைய   வெப்ப மண்டல நோய்களால் பிரிட்டிஷ் மலாயாவுக்குப் பெரும் பாதிப்புகள். அது மட்டும் அல்ல. 



தமிழ் மலர் - 30.03.2020

வயிற்றுப் போக்கு (dysentery), பெரியம்மை, காலரா, பிளேக் (plague), வெறிநாய்க்கடி நோய் (rabies) போன்றவையும் பரவலான தொற்று நோய்கள்.

அந்த நேரத்தில் மலாயா நோயியல் கழகத்தின் முதல் இயக்குநராக, இலண்டன் நோயியல் நிபுணர் டாக்டர் ஹாமில்டன் ரைட் (Dr. Hamilton Wright) என்பவர் இருந்தார். அவர் பதவி ஏற்ற முதல் ஆண்டில் நோயியல் கழகத்தின் திட்டமிடல்; புதிய கட்டிடங்கள் கட்டுவதிலுமே அவருடைய காலம் கழிந்தது.

1901-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மலாயா நோயியல் கழகத்தின் திறப்பு விழா நடைபெற்றது, அதே ஆண்டு 1901-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மலாயா நோயியல் நிறுவனம் (Malaya Pathological Institute) என்பது மலாயா மருத்துவ ஆராய்ச்சி கழகம் (Institute for Medical Research) என பெயர் மாற்றம் கண்டது.

மலேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்
75-ஆம் ஆண்டு நிறைவு விழா

மலாயா மருத்துவ ஆராய்ச்சி கழகம் இப்போது மலேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகம் என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது. உலகளாவிய நிலையில் உயர்தரமான ஆய்வுகளைச் செய்து உள்ளது. அந்தக் கழகத்தின் பின்னணியில் 120 ஆண்டு மருத்துவ வரலாறு உள்ளது.

1901 – 1905-ஆம் ஆண்டுகளில் ரவாங்கில் ஏற்பட்ட காலரா தொற்று; கோலாகுபு பாருவில் ஏற்பட்ட பிளேக் கொள்ளை நோய்; நெகிரி செம்பிலானில் வெறிநாய்க்கடி தொற்று போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதில் அந்தக் கழகம் பெரும் பங்காற்றி உள்ளது.

1918 ஆம் ஆண்டில் பெரி-பெரி நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப் பட்டது. அதிகப் படியாக அரைக்கப் பட்ட அரிசியைச் சமைத்துச் சாப்பிடுவதால் விட்டமின் பி-1 ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.

அதனால் பெரி பெரி நோய் ஏற்படுகிறது. அந்த உண்மையை மலேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கண்டுபிடித்து உலகத்திற்குச் சொன்னது. உலக மக்களும் சுதாரித்துக் கொண்டார்கள்.




ஜப்பானியர் காலத்தில் மலாயா வாழ் மக்கள் காலரா, டைபாயிட் நோய்களினால் ரொம்பவுமே அவதிப் பட்டார்கள். அந்த இக்கட்டான காலத்தில் மலாயா மருத்துவக் கழகத்தில் பணிபுரிந்த உள்ளூர் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றுகூடி அந்த நோய்களுக்குச் சொந்தமாகவே தடுப்பூசி மருந்துகளைத் தயாரித்தார்கள்.

இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்கள் நேதாஜியின் இந்திய விடுதலைப் படை வீரர்கள். அதில் ஜான்சி ராணி பெண்கள் படையினரின் விடுதலை உணர்வுகளை எவராலும் மறகக இயலாது.

அந்த ஜான்சி ராணி பிரிவிற்கு கேப்டன் லட்சுமி என்பவர் தலைவியாக இருந்தார். இவர் ஒரு மருத்துவர். இவர் மலாயா மருத்துவக் கழகத்தில் காலரா, டைபாயிட் தடுப்பூசி மருந்துகள் தயாரிப்பதில் தன் பங்கைச் செலுத்தி இருக்கிறார். 




இந்திய விடுதலைப் படை வீரர்கள் பர்மாவின் இம்பால் எல்லைப் பகுதிக்குச் சென்ற போது, மலாயா மருத்துவக் கழகத்தில் தயாரிக்கப்பட்ட காலரா, டைபாயிட் தடுப்பூசி மருந்துகள் கொண்டு செல்லப் பட்டதாகவும் சான்றுகள் உள்ளன.

உலகச் சுகாதார நிறுவனத்தில் World Health Organization (WHO) மலேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வகிக்கும் பதவிகள்.

1. மலேரியா, யானைக்கால் நோய், டெங்கி நோய்களின் சூழலியல், கட்டுப்பாடு மையம் (Collaborating Centre for Ecology, Taxonomy and Control of Vectors of Malaria, Filariasis and Dengue)

2. வெப்ப மண்டல நோய்கள், ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையம் Regional Centre for Research and Training in Tropical Diseases and Nutrition)

3. தேசிய காய்ச்சல் ஆய்வு மையம் (National Influenzae Centre)

4. இளம்பிள்ளை வாத ஆய்வு மையம் (Poliomyelitis Reference Laboratory)

5. மேற்கு பசிபிக் பிராந்திய குறியீட்டு மருந்து மையம் (Western Pacific Region Index Medicus)

 

மலேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தைச் சாதாரணமாக எடை போட்டுவிட வேண்டாம். உலகத் தரம் வாய்ந்தது. சரி. மலேசியாவின் கொரோனா கோவிட் தொற்று நோய்க்கு மீண்டும் வருகிறோம்.

COVID-19 நோய்த் தொற்றுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க, ஐந்து வகையான மருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன என்று மலேசியச் சுகாதார அமைச்சு அறிவித்து உள்ளது.

அந்த ஐந்து வகையான மருந்துகள்:

1. குளோரோ குயின் (Chloroquine),

2. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (Hydroxychloroquine),

3. பாவிபிராவிர் (Favipravir),

4. ரெம்டெசிவிர் (Remdesivir)

5. கலெத்ரா (Kaletra)
எனப்படும் லோபினாவிர் (Lopinavir),  ரிடோனாவிர் (Ritonavir) மருந்துகளின் கலவை.




இந்த மருந்துகள் ஏற்கனவே மற்ற மற்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இப்போது கொரோனா கோவிட் 19-க்கும் பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.

கொரோனா கோவிட்-19 வைரஸுக்கு எதிராக ரெம்டெசிவிர் மருந்தைப் பரிசோதனை செய்ய உலகில் பல நாடுகள் தேர்வு செய்யப் படுகின்றன.

மலேசியாவின் தரம் வாய்ந்த மருத்துவக் கட்டமைப்பு முதன்மைப் படுத்தப் பட்டது. இவ்வாறு உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்து உள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் சில நாட்களுக்கு முன்பு இருந்தே ரெம்டெசிவிர் மருந்தைப் பரிசோதனை செய்து வருகின்றன.

ரெம்டெசிவிர் மருந்து பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வைரஸ் தடுப்பு மருந்தாகத் தயாரிக்கப் பட்டது. எபோலா (Ebola) மற்றும் மார்பர்க் (Marburg) தொற்று நோய்களைத் தடுத்து நிறுத்தும் மருந்தாக அறிமுகம் செய்யப் பட்டது. 




அமெரிக்காவைச் சேர்ந்த கிலியாட் (Gilead Sciences) எனும் நிறுவனம் 2013-ஆம் ஆண்டில் இந்த மருந்தை உருவாக்கியது. கீழ்க்காணும் நோய்களுக்காகவும் ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப் படுகிறது.

1. சுவாச ஒத்திசைவு வைரஸ் (respiratory syncytial virus);

2. ஜூனின் வைரஸ் (Junin virus);

3. லாசா காய்ச்சல் வைரஸ் (Lassa fever virus);

4. நிபா வைரஸ் (Nipah virus);

5. ஹெந்திரா வைரஸ் (Hendra virus);

6. மெர்ஸ் (MERS);

7. சார்ஸ் (SARS)


இந்த ரெம்டெசிவிர் மருந்து மேலே காணும் வைரஸ்களை எதிர்க்கும் ஆற்றலைக் காண்பித்து உள்ளது. அதனால் இப்போது கொரோனா கோவிட் 19-க்கும் பயன்படுத்திப் பார்க்கிறார்கள்.



மலேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்
75-ஆம் ஆண்டு நிறைவு விழா

அமெரிக்கா வாஷிங்டனில் கொரோனா கோவிட் நோயாளிக்கு இந்த ரெம்டெசிவிர் மருந்தைச் செலுத்திப் பார்த்தார்கள். நம்பிக்கை அளிக்கும் முடிவு.

இப்போது சீனாவும் பெரிய அளவில் அந்த மருந்தைப் பரிசோதிக்கத் தொடங்கி விட்டது. ரெம்டெசிவிர் மருந்திற்கு GS-5734 எனும் அனைத்துலக ஆய்வுக் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

பல வகையான வைரஸ்களுக்கு எதிராக ரெம்டெசிவிர் பயன் உள்ளதாக இருக்கும் என்று ஆய்வகச் சோதனைகள் தெரிவிக்கின்றன. நம்பிக்கை அளிக்கும் சோதனைகள்.

2013 – 2016ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் தாக்கிய போது தான் இந்த ரெம்டெசிவிர் மருந்து பயன்பாட்டிற்கு வந்தது.

கொரோனா கோவிட் உலக மக்களை ஆட்டிப் படைக்கின்றது. மனுக் குலத்திற்குப் பெரிய ஒரு பேரழிவை ஏற்படுத்தி விட்டது. இந்தக் கொரோனா வைரஸை நம்முடைய பூமியில் இருந்து முற்றாக அழிக்க வேண்டும். அதற்கு எப்படியும் இரண்டு ஆண்டுகள் பிடிக்கும்.

அதுவரையில் என்ன செய்யலாம். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மருந்துகள், அதாவது வீரியம் குறைவாக இருக்கும் மருந்துகளைப் பயன்படுத்தி, நம் மனுக்குலத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம்.

அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தாலே இந்த நோயை ஓரளவிற்குக் கட்டுப் படுத்தலாம்.

கொரோனா கோவிட் வைரஸ், பணம் புகழ், செல்வாக்கு, இனம், மதம், மொழி எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டது.

கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்மி. சொந்தமாக எதையும் செய்ய முடியாத ஒரு கிருமி. மனித மரபணுக்களுள் புகுந்து; அந்த அணுக்களை அடிமையாக்கி; சுவாசப் பைகளில் உள்ள மரபணுக்களைச் சிதைத்து; மூச்சுவிட முடியாமல் செய்து; ஒருவழி பண்ணிவிட்டுப் போகிறது.

ரெம்டெசிவிர் மருந்தினால் நல்ல ஒரு நம்பிக்கையான முடிவு கிடைக்க வேண்டும். வேண்டிக் கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக