12 ஜூன் 2020

அவலோகிதேஸ்வரர் சிலை கி.பி.800-ஆம் ஆண்டு

1936-ஆம் ஆண்டு பேராக், பீடோர் பகுதியில் ஆங்கிலோ ஓரியண்டல் (Anglo Oriental) ஈயச் சுரங்கம் இயங்கி வந்தது. அங்கு ஈய மண் தோண்டும் போது 79 செண்டி மீட்டர் உயரம் கொண்ட ஒரு வெண்கலப் புத்தர் சிலை (Buddhist Avalokitesvara statue) கண்டு எடுக்கப்பட்டது. கி.பி.800-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சிலை.


அந்தச் சிலைக்கு அவலோகிதேஸ்வரர் சிலை என்று பெயர். இப்போது கோலாலம்பூர் தேசிய அரும்பொருள் காட்சியகத்தில் உள்ளது.

பேராக் மாநிலத்தின் பீடோர் மாவட்டம் முன்பு காலத்தில் கங்கா நகரத்தின் ஒரு துணைப் பகுதியாக விளங்கியது. கங்கா நகரம் (Gangga Negara) என்பது பேராக் மாநிலத்தின் புருவாஸ் (Beruas), டிண்டிங்ஸ் (Dinding), மாஞ்சோங் (Manjung) பகுதிகளில் இயங்கிய சிற்றரசு. 


இந்த இடங்களில் இருந்து கங்கா நகரத்தின் பழம் பெரும் கலைப் பொருட்கள் கிடைத்து இருக்கின்றன. சில பொருட்கள் ஈப்போ, சுங்கை சிப்புட் (Sungai Siput) பகுதியிலும்; மேலும் சில பொருட்கள் பீடோர் பகுதிகளிலும் கிடைத்து இருக்கின்றன.

1959-ஆம் ஆண்டில், ஈப்போ பெங்காலான் எனும் இடத்தில் கி.பி.600 ஆண்டுகளில் வடிக்கப்பட்ட ஒரு புத்தர் சிலை கண்டெடுக்கப் பட்டது. கிந்தா பள்ளத்தாக்கு, தஞ்சோங் ரம்புத்தான், பீடோர், சுங்கை சிப்புட் போன்ற இடங்களிலும் கங்கா நகரத்தின் ஆளுமை இருந்து உள்ளது. 


கி.பி. 700-ஆம் - 1000-ஆம் ஆண்டுகளில், கங்கா நகர அரசர்கள் கிந்தா சமவெளி, பீடோர், தெலுக் இந்தான் பகுதிகளை ஆட்சி செய்து இருக்கின்றனர். கங்கா நகரப் பேரரசின் தலநகரம் பேராக், புருவாஸ் சமவெளியில் இருந்தது. குறிப்பிட்டு ஓர் இடத்தை வரையறுத்துச் சொல்ல இயலவில்லை.

அந்தக் காலக் கட்டத்தில் கங்கா நகர அரசர்கள், புருவாஸ் பகுதியை மட்டும் ஆட்சி செய்யவில்லை. ஈப்போவில் இருந்து நான்கு மைல் தொலைவில் இருக்கும் பெங்காலான் (Pengkalan) எனும் இடத்தையும் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.


(It has been postulated that Pengkalan (Ipoh), Kinta Valley, Tanjung Rambutan, Bidor and Sungai Siput were part of the kingdom)

(Gangga Negara is believed to be a lost Hindu kingdom mentioned in Sejarah Melayu that covered present-day Beruas, Dinding and Manjung in the state of Perak, Malaysia.)

கி.பி. 1025-ஆம் ஆண்டில் நடந்த படையெடுப்பினால் கங்கா நகரம் அழிந்து போனது. சிதறிப் போன சிற்றரசில் காலப் போக்கில் சின்னச் சின்ன ஆளுமைகள் தோன்றின. அந்த நாட்டாமைகளில் புத்த மதம் வேரூன்றியது.


சிலை வடிவில் வடிவம் அமைக்கப்பட்டு உள்ள அவலோகிதேஸ்வரர் என்பவர் இந்திய ஆண் போதி சத்துவர். இவரைச் சீனப் புத்த சமயத்தினர் தங்களின் தெய்வங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டு வழிபட்டு வருகின்றனர்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா - சீனா புத்த மத பரிமாற்றம் ஏற்பட்டது. அப்போது, பட்டுப் பாதையின் வழியாக அவலோகிதேஸ்வரரின் வழிபாடு சீனாவிற்குள் கொண்டு வரப்பட்டது. 


இந்து புத்த மதங்கள் சார்ந்த பல கலைப் பொருட்கள் மலேசியாவில் மீட்டு எடுக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் இந்த அவலோகிதேஸ்வரர் சிலை தனிச் சிறப்பு பெறுகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.06.2020

சான்றுகள்:

1. R. C. Majumdar, Hindu Colonies in the Far East, Calcutta, 1944, ISBN 99910-0-001-1 Ancient Indian colonisation in South-East Asia.

2. Malayan Place Names, S. Durai Raja Singam, Liang Khoo Printing Company, 1962 - Malaya - 253 pages, C-186).

3. Peter Church, ed. (2012). A Short History of South-East Asia. John Wiley & Sons.

4. https://www.tsemrinpoche.com/tsem-tulku-rinpoche/malaysia/guan-yin-day-tamil.html





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக