21 ஜூன் 2020

கோலா சிலாங்கூர் ராமதாஸ்

தமிழ் மலர் - 21.06.2020

எந்தத் தொழிலைச் செய்தாலும் அதை நேசிக்கத் தெரிய வேண்டும். நீங்கள் செய்யும் தொழிலை நேசித்துப் பாருங்கள். உலகம் உங்களை நேசிக்கத் தொடங்கும்.  





பாட்டாளிகளின் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிச் சென்ற பார்புகழ் பாடல். செய்யும் தொழிலே தெய்வம். அந்தத் திறமைதான் நமது செல்வம். கையும் காலும்தான் உதவி; கொண்ட கடமை தான் நமக்குப் பதவி.

அதுதான் கோலா சிலாங்கூர் ராமதாஸ் அவர்களின் தாரக மந்திரம். அந்த மந்திரத்தில் உழைப்பு... உழைப்பு... உழைப்பு என்பதே அவரின் ஜீவநாடி. அதுவே அவரின் ஜீவ சரித்திரம்.

உழைப்பின் உச்சத்தில் ஓர் உன்னதத்தைக் காண்கிறார் ராமதாஸ்  வெங்கடாசலம். இவருக்குத் துணையாக அவருடைய மனைவி பாலம்மாள். இவர்களுக்குத் துணையாக மகன் வேலவர் ராமதாஸ். கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்வதற்கு மருமகள் சங்கீதா. 



ஒரு குடும்பமே மண்கலன்கள் செய்யும் தொழிலில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழர் இனத்திற்குப் பெருமையும் சேர்த்து வருகிறார்கள். வாழ்த்துகிறோம்.

உழைப்பு என்பது பிழைப்பிற்கு மட்டும் அல்ல. உலகில் நிலைத்து நிற்கவும் அதுதான் சிறந்த வழி. உழைப்பின் விளைவில் தான் பெயர் புகழ் செல்வாக்கு எல்லாமே மேன்மை காண்கின்றன. இந்தத் தத்துவத்திற்கு ராமதாஸ் குடும்பத்தினர் முன்னோடிகள் என்று தாராளமாகச் சொல்லலாம்.

உழைப்பை நீ மதித்தால் அது உன்னை மதிக்கும். வாழ்க்கையில் உயர வழி காட்டும். உழைத்து உயர்ந்தவர்களை உத்தமர்கள் என உலகம் பாராட்டிப் போற்றும் என்கிறார் ராமதாஸ்.



எட்டு பேர் கோண்ட ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் ராமதாஸ். ஒரு வெள்ளைக்காரத் துரை ராமதாஸின் தந்தையாரிடம் ஆங்கிலத்தில் பேசிய வார்த்தைகள் அவரை வெகுவாகப் பாதித்து விட்டன.
என்னதான் வந்தாலும் சரி; தன் மகனை ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைப்பதே சரி என்று ராமதாஸை ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தார்.

பின்னர் கோலா சிலாங்கூர் சுல்தான் அப்துல் அஜீஸ் இடைநிலைப் பள்ளியில் ஐந்தாரம் பாரம் வரை ராமதாஸ் படித்தார். குடும்பச் சூழ்நிலையின் காரணமாகத் தொடர்ந்து படிக்க முடியவில்லை. தகப்பனாருக்கு உதவியாக மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டார்.

’யேஸ், நோ, நான்சென்ஸ் இந்த மூன்று சொற்கள் மட்டுமே என் தந்தையாருக்குத் தெரிந்த ஆங்கிலச் சொற்கள். இருந்தாலும் என்னை ஆங்கில மொழியில் புலமை பெறச் செய்து விட்டார்’ என்று ராமதாஸ் சொல்கிறார்.


ராமதாஸ் குடும்பத்தினர்
1970-களில் அவர் படித்த சீனியர் கேம்ப்ரிட்ஜ் படிப்பிற்குப் பொருத்தமான வேலைகள் எதுவும் ராமதாஸைத் தேடி வரவில்லை. இந்தக் கட்டத்தில் தன் தந்தையாரின் குடும்பத் தொழிலே பிடித்துப் போனது. தந்தையார் கொடுத்த ஊக்கம் உற்சாகம் அவரை அந்தத் தொழிலின் உயர்வுக்கும் வழி காட்டியது. 

1976-ஆம் ஆண்டு ராமதாஸ் சுயமாகவே மண்சட்டிகளைச் செய்யத் தொடங்கினார். மோட்டார் சைக்கிளில் தோட்டம் தோட்டமாகச் சென்று வியாபாரம் செய்து வந்தார். மழை வெயில் என்று பார்க்காமல் கடுமையாக உழைத்தார்.

படிப்பு முடிந்து பொருத்தமான ஒரு வேலை கிடைக்கவில்லை. அப்போது இயோ ஜின் லெங் (Yeo Jin Leng) எனும் பேராசிரியரின் பார்வை இவர் பக்கம் திரும்பியது. அந்தப் பேராசிரியர் ஓர் ஆராய்ச்சியாளர். கோலாலம்பூர் அம்பாங்கைச் சேர்ந்தவர். தமிழர் மண்பாத்திரங்களைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருந்தார். 


உழைப்பின் சிகரங்களில் தலைமகன்
அவர் ராமதாஸிற்கு மேலும் ஆர்வம் கொடுத்து உற்சாகம் தந்தார். இன்று வரையில் வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறார். அவருக்கு என்றென்றும் நன்றி சொல்வேன் என்று ராமதாஸ் சொல்கிறார்.

அதன் பின்னர் ஈராண்டுகள் கழித்து 1978-ஆம் ஆண்டில் ஒன்றரை டன் எடை லாரி ஒன்றை ராமதாஸ் வாங்கினார். அவர் செய்த சட்டிகள், பானைகள், மண் விளக்குகள், மண் பாண்டங்கள் போன்றவற்றைத் தொலை தூர இடங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யத் தொடங்கினார்.

வியாபாரத்தில் வெட்கப்படக் கூடாது. வெட்கப் பட்டால் எந்தத் தொழிலிலும் முன்னுக்கு வர முடியாது. நிரந்தரமாகப் பேர் போட முடியாது என்பது அவரின் தீர்க்கமான முடிவு. 



எவருக்கும் மனதளவில் கூட தீங்கு நினைக்காமல் நம் தொழிலைச் செய்ய வேண்டும். நாம் செய்யும் தொழில் இந்த உலகத்திற்கு உதவுகிறது என்கிற நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கையோடு செயலாற்ற வேண்டும்.

செய்யும் தொழிலில் புதுமைகள் செய்ய வேண்டும். அரைத்த மாவையே அரைக்கக் கூடாது. அரைத்த மாவிலும் புதுமைகள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வியாபாரத்தில் நிலைத்து நிற்க முடியும் என்று அசத்தலாகச் சொல்கிறார் ராமதாஸ்.

இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் தான் அவருக்குச் சிலாங்கூர் அரசாங்கத்தின் ஆதரவும் கிடைத்தது. 



1990-ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக டான்ஸ்ரீ முகமட் தாயிப் இருந்தார். ஒரு முறை ராமதாஸின் வி.என். ராமதாஸ் டிரேடிங் (V. N. Ramadas Trading) தொழில்கூடத்திற்கு வருகை தந்தார்.

ராமதாஸ் செய்த மண்பாண்டங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார். டான்ஸ்ரீ முகமட் தாயிப் தன் சொந்தப் பணத்தில் அந்தக் கணமே இரண்டாயிரம் ரிங்கிட் எடுத்துக் கொடுத்து உதவி செய்தார்.

அந்த உதவி ராமதாஸிற்கு மேலும் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது. அதன் பிறகு பல்வேறு கண்காட்சிகளில் பங்கெடுத்துக் கொள்ளும் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. 



1990-ஆம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து சுற்றுப் பயணிகள் இவருடைய தொழில்கூடத்திற்கு வருகை தரத் தொடங்கினார்கள். அவரின் மண்பாண்டத் தாயாரிப்புத் திறமையைக் கண்டு வியப்பு அடைந்தார்கள். அந்த வகையில் இப்போதும்கூட ஒவ்வொரு நாளும் சுற்றுப் பயணிகள் அவருடைய தொழில்கூடத்திற்கு வந்து போகின்றனர்.

சுற்றுலாக் குழுவினரும் அவருடைய தொழில்கூடத்திற்கு வருகை தருகின்றனர். பலர் நேரடியாக வந்து பொருட்களை வாங்கியும் செல்கின்றனர்.

அவருடைய கைத்திறனைப் பற்றி ஒரு வார்த்தை. மண்பாண்டங்கள் செய்வதில் மிக மிகத் திறமைசாலி என்றே சொல்ல வேண்டும். ஒரு மணி நேரத்தில் 60 நடுத்தர மண்பானைகளை வடித்து எடுத்து பார்ப்பவர்களைக் கிரங்கடித்து விடுகிறார். என்னே லாவகம். 



இவருக்குத் துணையாக அவருடைய மகன் வேலவரும் சுறுசுறுப்பாக இயங்குகிறார். உண்மையில் வேலவர்தான் இந்த நிறுவனத்தின் உரிமையாளர். சில ஆண்டுகளுக்கு முன்னர் தொழில்கூடத்தின் பொறுப்புகளை தன் மகன் வேலவரிடம் ராமதாஸ் ஒப்படைத்து விட்டார்.

வேலவர் ராமதாஸ் நாற்பது வயது இளைஞர். இவர் உயர்ப் படிப்பு படித்து இருந்தாலும் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.

உழைப்பில் ஒரு முடிவு கிடையாது. அது எந்த உழைப்பாகவும் இருக்கலாம். தொடர்ந்து உழைக்க வேண்டும். உழைக்க உழைக்கத் தான் உள்ளத்திற்குப் பெருமை. உடலுக்கு வலிமை. தொய்வு ஏற்பட்டால் தோல்வி நம்மைத் தொற்றிக் கொள்ளும். உழைப்பு நின்று விட்டால் பிழைப்பும் சென்று விடும் என்று சொல்கிறார் வேலவர் ராமதாஸ்.



அவர் நினைத்து இருந்தால் வீட்டில் காலை ஆட்டிக் கொண்டு சும்மா உட்கார்ந்து இருக்க முடியும். வேலைக்காரர்கள் இருக்கும் போது அவர் வேலை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

இருந்தாலும் இவர் காலையிலேயே தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுகிறார். பெரிய பெரிய தண்ணீர்ப் பானைகள் செய்வதில் திறமைசாலியாகவும் இருக்கிறார். இவருடைய சுறுசுறுப்பைக் கண்டு பலரும் வியந்து போகிறார்கள். இவருக்கு உதவியாக இரு பணியாளர்கள்.

இளைஞர்கள் என்றால் வேலவரைப் போல இருக்க வேண்டும். வேலவரைப் போல உழைக்க வேண்டும். என்ன வேலை கிடைக்கிறதோ அதைச் செய்ய வேண்டும்.

எதிர்ப்பார்க்கும் வேலை கிடைக்கவில்லையே என்று ஊரைச் சுற்றிக் கொண்டு இருக்கக் கூடாது. உற்றார்களுக்கும் உடன் பிறப்புகளுக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்று சொல்கிறார் வேலவர்.



இந்தக் காலத்து இளைஞர்களுக்கு அவர் கூறும் அறிவுரை இதுதான். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரை காத்து இருக்க வேண்டாம். இளைஞர்கள் தங்களின் சுய கௌரவத்தைப் பெரிதாகப் பார்க்கக் கூடாது.

எந்த வேலை கிடைத்தாலும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். அடுத்தவர் சோறு போடுவார் என்று எதிர்பார்க்கக் கூடாது. சோம்பேறியாய் வாழக் கூடாது. இதுதான் அவரின் கூற்று. சரி.

ராமதாஸ் தான் இந்த நிறுவனத்தைத் தோற்றுவித்தார். தொடக்கக் காலங்களில் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார். இவர் கற்றுக் கொடுத்த இருவர் இவருக்குப் போட்டியாக இவருடைய வியாபாரத்திற்கே முட்டுக்கட்டை ஆனார்கள். இருந்தாலும் அவர்களைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை.

’என்னிடம் பயின்றவர்கள் என் வியாபாரத்திற்கே தடைக் கல்லாக இருந்தார்கள். நான் வியாபாரம் செய்யும் கடைகளுக்கு இவர்களும் போய் பத்து இருபது காசிற்குக் குறைவாகப் பொருட்களைக் கொடுத்தார்கள். என் வியாபாரம் பாதிக்கப் பட்டது.’ 



’இத்தனைக்கும் இவர்கள் என்னிடம் பல மாதங்கள் இலவசமாகப் பயிற்சி பெற்றவர்கள். வேறு எங்கேயாவது இவர்கள் போய் வியாபாரம் செய்யட்டுமே. பரவாயில்லைங்க. விட்டுவிட்டேன். கோபப்படவில்லை. எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று அமைதியாகிப் போனேன்.’

ஒருமுறை இங்கிலாந்து ஸ்காட்லாந்தில் இருந்து யான் பிரி (Ian Pirie) எனும் பேராசிரியர் என்பவர் ராமதாஸைத் தேடி வந்தார். கைத்தொழில் மூலமாக உருவாகும் வடிவங்களைப் பார்க்க அவர் வந்து இருந்தார்.

ராமதாஸின் திறமையைப் பாராட்டினார். அந்தத் துறையில் மேலும் புதுமைகள் செய்ய ஆர்வம் கொடுத்தார். அந்த வகையில் மலேசியாவின் இன்ஸ்ட்டிடியூட் ஆப் ஆர்ட் (Institute of Art) எனும் நுண்கலைக் கல்லூரியில் ராமதாஸிற்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.



அதன் பின்னர் ராமதாஸின் வாழ்க்கையில் அனைத்தும் ஏறுமுகத்தின் உச்சங்கள். மேலும் ஒரு லாரியை வாங்கினார். சிலாங்கூர், ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களுக்குச் சென்றார்.

அங்கு உள்ள பெரிய கடைகளில் வி.என்.ஆர்.ஏ. (V.N.R.A) எனும் அடையாளம் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்களைச் சில்லறையாகவும் மொத்தமாவும் விநியோகிக்கத் தொடங்கினார்.

வயதும் ஓடுகிறது. அதன் காரணமாக தன் பொறுப்புகளைத் தன்னுடைய மகன் வேலவரிடம் ஒப்படைத்து இருக்கிறார். இருந்தாலும் தன்னுடைய உழைப்பிற்குப் பக்க பலமாக இருந்தவர் தன் மனைவி ஆர். பாலம்மாள் தான் என்று பெருமையாகச் சொல்கிறார்.

ராமதாஸின் துணைவியார் பாலம்மாள் சொல்கிறார். ‘எந்தப் பொருளைத் தயாரித்தாலும் அதை நாம் பயன்படுத்தப் போகிறோம் என்று நினைத்துத் தயாரிக்க வேண்டும். மண்னை எடுத்தோம். பிடித்தோம். வடித்தோம் எனும் நினைப்பில் எதையும் செய்யக் கூடாது.’

’இப்போது நாம் தயாரிக்கும் இந்தப் பொருளை நாம் தான் பயன்படுத்தப் போகிறோம் எனும் உணர்வுடன் தயாரிக்க வேண்டும். அப்போது தான் தெய்வமே இறங்கி வந்து நம்மை ஆசீர்வதிக்கும்’ என்கிறார்.

சிறப்பு நாட்களான பொங்கலுக்குப் பொங்கல் பானைகள்; கார்த்திகைக்கு அகல் விளக்குகள்; திருமணத்திற்கு அரசாணிப் பானைகள்; புரட்டாசி மாதத்திற்கு எள்ளுச் சட்டிகள்; ஆலயங்களுக்குக் கும்பக் கலசங்கள்; தண்ணீர்ப் பானைகள், துளசி மாடங்கள், நெய்விளக்குகள், குபேரக் கலசங்கள் மண் சட்டிகள் போன்றவை இவரின் தயாரிப்பு பொருட்கள்.

இந்த மண்பாண்டங்களில் மிக முக்கியமானது சமையல் சட்டி. மண் சட்டியில் சமைப்பதால் அது ஒரு வேறு மாதிரியான ருசி என்கிறார். 

இன்னும் ஒரு விசயம். சமையல் சட்டிக்கும் தண்ணீர்ப் பானைக்கும் சிரிம் (SIRIM) சான்றிதழ் தேவை. அந்த வகையில் நாங்கள் தயாரிக்கும் சமையல் சட்டிகளை அவர்கள் எடுத்துக் கொண்டு போய் ரசாயன ஆய்வுகள் செய்வார்கள். அதன் பின்னர் தான் தயாரிப்பிற்கான உத்தரவாதம் தருவார்கள் என்று வேலவர் ராமதாஸ் கூறுகிறார்.

அடுத்து ராமதாஸ் சொல்கிறார்: அப்போதைய காலத்தில் ஒரு சட்டியின் விலை 7 காசுதான். இன்றைக்கு 7 ரிங்கிட் கொடுத்தாலும் கிடைக்கவில்லை. உங்களிடம் காசு இருக்கிறது. எங்களிடம் பொருள் இல்லையே. அப்போது ஒரு கடைக்கு ஒரே தடவையில் 1000 மண்சட்டிகளை அனுப்பி வைப்போம். இப்போது ஒரு கடைக்கு 100 மண்சட்டிகளை அனுப்புவதே பெரிய விசயம் என்கிறார்.

எதிர்காலத்தில் நம்முடைய கலாசாரச் சின்னங்கள் மறைந்து போகக் கூடாது என்பதே இவரின் ஆதங்கம்.

இந்தக் கட்டத்தில் உலகப் புகழ் ஆபிரகாம் லிங்கன் நினைவுக்கு வருகிறார். அவர் சொன்னார்: என் தந்தை செருப்பு தைத்தவர். என்னை வாழ வைத்த தொழிலை நான் கடவுளுக்கும் மேலாக நேசிக்கிறேன். எப்பேர்ப்பட்ட தத்துவம். நாம் செய்யும் தொழிலே நமக்கு தெய்வம்.

ஒன்றை மட்டும் நாம் மறந்துவிடக் கூடாது. நாம் சாப்பிடும் சாப்பாட்டிலும் சரி; உடுத்தும் உடைகளிலும் சரி; பலரின் உழைப்பு கலந்து இருக்கிறது என்கிற உணர்வு நமக்குள் வர வேண்டும். அப்படி அந்த உணர்வுகள் வரும்போது தான் நம்முடைய தொழில் சம்பந்தமாக நமக்கும் அக்கறை வரும்.

மண்கலன் தொழிலில் ஆர்வம் கொண்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

V.N. RMADASS S/O VENGADASALAM, Lot 2269, Jalan Teluk Piah Kanan, 45000 Kuala Selangor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக