29 ஆகஸ்ட் 2020

பரமேஸ்வரா கட்டிய முதல் கோட்டை கோத்தா பூரோக்

பரமேஸ்வரா வரலாற்றில் கோத்தா பூரோக் (Kota Buruk) எனும் கிராமம் தனிச் சிறப்பு பெற்ற ஒரு வரலாற்றுத் தளமாகும். இந்த இடத்தில் இருந்து தான் மலாக்காவின் வரலாறும் தொடங்குகிறது.

கோத்தா பூரோக் என்பதைத் தமிழில் ’பாழ் கோட்டை’ என்று அழைக்கலாம். ஆங்கிலத்தில் ’Fort of Ruins’. கரையான் அரித்து சேதம் விளைவித்ததால் அந்தக் கோட்டைக்கு ’கோத்தா பூரோக்’ என்று பெயர் வந்தது.

கி.பி. 1398 அல்லது கி.பி. 1399-ஆம் ஆண்டு பரமேஸ்வரா சிங்கப்பூரின் கடைசி ராஜாவாக இருந்தார். அப்போது மஜபாகித் பேரரசு தாக்குதல் நடத்தியது. சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய பரமேஸ்வரா மலாக்காவிற்குப் பயணம் மேற்கொண்டார்.

அந்தப் பயணத்தின் போது மூவார் பகுதியில் இரு இடங்களில் தங்கினார். முதலில் பியாவாக் பூசுக் (Kota Biawak Busuk) எனும் இடம். இங்கே தான் தன்னுடைய புதிய அரசாங்கத்தை அமைக்கலாம் என்று முதல் திட்டம் வகுத்தார்.

இந்த பியாவாக் பூசுக் எனும் இடம்; கோத்தா பூரோக் கிராமத்திற்கு அருகில் இருந்தது. இன்றும் இருக்கிறது. பியாவாக் பூசுக் இடத்திற்கு ஆங்கிலத்தில் Fort of Smelly Monitor Lizard என்று பெயர்.

(Forts no defence against moniitor lizards, By Sim Bak Heng, Johor Streets. New Straits Times Press. 17 August 2009)

ஜொகூர் (Johor), மூவார் (Muar), பாகோ (Pagoh), புக்கிட் பாசிர் (Bukit Pasir), சுங்கை தெராப் (Sungai Terap), ஜொராக் (Jorak), கம்போங் தஞ்சோங் செலாபு (Kampung Tanjung Selabu) எனும் இடத்தில் பியாவாக் பூசுக் அமைந்து உள்ளது. கோத்தா பூரோக் கிராமமும் இங்கேதான் உள்ளது.

பியாவாக் பூசுக் எனும் இடத்தில் நிறைய உடும்புகள் (Monitor Lizard). பரமேஸ்வரா முதன்முதலாக அங்கு வந்து தங்கிய போது உடும்புகளின் தொல்லைகள். அவற்றை அப்புறப் படுத்தினாலும் அவற்றின் துர்நாற்றம் அதிகமாய் இருந்தது. அதனால் இடத்தை மாற்றம் செய்ய வேண்டி வந்தது.

மூவார் ஆற்றின் வழியாக மேலே ஏறிச் சென்றார். அங்கே கோத்தா பூரோக். அந்த இடத்திற்குத் தம் இருப்பிடத்தை மாற்றினார். அங்கே ஒரு சிறிய கோட்டையைக் கட்டினார். ஆக கோத்தா பூரோக் எனும் இடம் பரமேஸ்வரா தேர்வு செய்த இரண்டாவது இடம்.

அங்கேயும் தொல்லைகள். இந்த முறை கரையான்களின் தொல்லைகள். கோட்டையின் மரத் தூண்களையும் கற்களையும் கரையான்கள் அரிக்கத் தொடங்கின. அதனால் அதற்கு கோத்தா பூரோக் என்று பெயர் வந்தது.

இப்போதைய கம்போங் தஞ்சோங் செலாபு (Kampung Tanjung Selabu) கிராமம் தான் அப்போதைய கோத்தா பூரோக் இடம் ஆகும்.

இந்தக் கோத்தா பூரோக் வரலாற்று இடம் இப்போது பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவிடப்பட்டு உள்ளது. ஜொகூர் மநில அரசாங்கத்தால் ஒரு வரலாற்று இடமாகவும் பாதுகாக்கப் படுகிறது.

(This fort and Biawak Busuk are two historical sites in ancient Malacca's history which Parameswara opened during his stop over and stay in Pagoh, Muar when exiled from Temasik, before his move to Malacca and open the Malacca sultanate empire.)

இந்த நிகழ்வுகள் தொடர்பான வரலாற்றுச் சான்றுகள்.

முதலாவது ஜோவா டி பாரோஸ் எழுதிய Decadas da Asia வரலாற்று நூல் சான்று:

1. ஜோவா டி பாரோஸ் (Joao de Barros) எனும் போர்த்துகீசிய வரலாற்று ஆசிரியர் 1533-ஆம் ஆண்டு ‘ஆசியா பற்பல பத்தாண்டுகள்’ (2nd Decadas da Asia "Decades of Asia") எனும் நூலை எழுதினார். அந்த நூலில் பரமேஸ்வராவை Paramicura என்று குறிப்பிடுகிறார். அந்த நூலில் ஜோவா டி பாரோஸ் சொல்கிறார்: பரமேஸ்வரா தன் பயணத்தின் போது மூவார் (Muar) எனும் இடத்திலும்; பாகோ (Pagoh) எனும் இடத்திலும் தங்கி கிராமப் புறங்களை உருவாக்கினார்.

1. Joao de Barros wrote in 1553 in his 2nd Decadas da Asia ("Decades of Asia"), a history of the Portuguese in India and Asia that Parameswara (Paramicura) had escaped in exile and stopped in Muar and built in rural areas of Muar called Pagoh.

இரண்டாவது துன் ஸ்ரீ லானாங் (Tun Sri Lanang) எழுதிய செஜாரா மெலாயு (Sejarah Melayu) வரலாற்று நூல் சான்று. வில்லியம் ஷெல்லாபியர் (William Shellabear 1862 – 1948) என்பவர் மலாயா வரலாற்று ஆசிரியர். அவரின் செஜாரா மெலாயு மொழிபெயர்ப்பு.

2. பரமேஸ்வராவும் அவரது குடும்பத்தினரும் பாகோ, மூவார் பகுதிக்கு தப்பிச் சென்று மூவார் ஆற்றின் கரையில் இரண்டு பகுதிகளைத் திறந்தார்கள். ஒரு பகுதி பியாவாக் பூசுக். மற்றோர் இடம் கோத்தா பூரோக். அங்கே ஒரு கோட்டையை உருவாக்கினார்கள். மலாக்காவிற்குப் போவதற்கு முன்னர் இந்த இடங்கள் திறக்கப் பட்டன. 1488-ஆம் ஆண்டில், மலாக்கா சுல்தான் அலாவுதீன் ரியாத் ஷா (1477–1488) இறந்ததும்; அவருடைய உடல் இந்த உலு மூவார் பாகோவில் தான் அடக்கம் செய்யப் பட்டது.

2. Tun Sri Lanang: William Shellabear version: In the Sejarah Melayu or Malay Annals states that Temasik during the reign of Parameswara (Sultan Iskandar Shah) was defeated by Majapahit Kingdom. But he and his family including his followers had fled to Pagoh, Muar and opened two areas on the banks of the Muar River; Biawak Busuk and build a fort called Kota Buruk before moved to and opened up Melaka. In 1488, Malacca Sultan Alauddin Riayat Shah (1477–1488) has died and buried in Pagoh, Ulu Muar.

மூன்றாவது டோம் பைர்ஸ் - சுமா ஓரியண்டல். (Tomé Pires - Suma Oriental) சான்று:

3. டோம் பைர்ஸ் (சுமா ஓரியண்டல்): இந்த ஆதாரம் பரமேஸ்வராவின் தோற்றத்தை எடுத்துக் காட்டுகிறது. அவர் தன் 1,000 விசுவாசிகளுடன் பாகோ, மூவாருக்கு தப்பிச் சென்றார். ஆறு வருடங்கள் அங்கு வாழ்ந்தார். இருந்தாலும் சிங்கப்பூர் செலேத்தார் பகுதியில் இருந்து வந்த பரமேஸ்வராவின் மக்கள் மலாக்காவில் இருந்தார்கள்.

3. Tomé Pires (Suma Oriental): This source highlighted the emergence of Parameswara. he fled to Pagoh, Muar with his 1,000 followers and lived there for six years when the Seletar peoples were still occupying Malacca.

இப்படி மூன்று வெவேறான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. பரமேஸ்வரா மூவார் கோத்தா பூரோக் பகுதியில் தங்கி ஒரு கோட்டையைக் கட்டி இருக்கிறார். அந்தச் செய்தி மஜபாகித் அரசாங்கத்திற்குத் தெரிந்து விட்டது.

மஜபாகித் எந்த நேரத்தில் தாக்குதல் செய்யலாம் என்பதினால் இடத்தை மாற்றுவதற்கு பரமேஸ்வரா திட்டம் வகுத்தார். அப்படி இடம் மாறிச் செல்லும் போது தான் சருகு மான் மாட்டிக் கொண்டது. மலாக்கா மரம் சிக்கிக் கொண்டது. மலாக்கா எனும் வரலாறும் உருவானது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.08.2020

References:

1. SEJARAH AWAL MUAR - https://www.oocities.org/tengku_mahkota_muar/sejarah_awal_muar.htm

2. https://www.bharian.com.my/bhplus-old/2016/11/208137/misteri-kota-buruk-dan-kota-biawak-busuk-di-muar

3. https://alchetron.com/Kota-Buruk

4. William Shellabear version: Sejarah Melayu

5. Tomé Pires: Suma Oriental

6. Joao de Barros: Decadas da Asia

7. https://en.wikipedia.org/wiki/Kota_Buruk


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக